Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007
தவறான பாதை; தவறான பார்வை
பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.
மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.
9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.
இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.
இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.
அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!
இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.
Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
————————————————————————————–
சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி
ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.
“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.
புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.
நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Posted in Andhra, Andhra Pradesh, AP, Conflict, Court, Dam, Districts, Drought, Environment, Famine, Floods, Forests, Garbage, Godavari, Godavari Water Disputes Tribunal, GWDT, Irrigation, Issue, maharashtra, Mountains, Narmada, Narmadha, Pollution, Rain, River, SC, Scarcity, Sriram Sagar, Supreme Court, Telengana, Telungana, Tribunal, Waste, Water | 1 Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006
தேவையில்லை புதிய மாநிலங்கள்
கே.வீ. ராமராஜ்
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தேசிய அரசியலில் முக்கிய விவாதமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான சரித்திரத்தைப் பற்றியும் மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம்தானா என்பது குறித்தும் அலசி ஆராய வேண்டிய தருணம் இதுவாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய போதே 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 1920ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி அதன் மாநில அமைப்புகளை மொழிவாரி அடிப்படையில் கொண்டிருந்தது. 1938ஆம் ஆண்டிலேயே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சென்னை நகரமும் இம்மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆந்திரர்கள் “”மதராஸ் மனதே” என்ற இயக்கத்தைத் தொடங்கினர். 1947ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றமும் மொழிவாரி மாநில அமைப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனித் தமிழ் மாநிலக் கோரிக்கையும் வலுவடைந்தது.
1948 ஜூன் 17 அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாநிலக் குழு அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் முக்கியமான பிரச்சினை அல்ல என்றும் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே பிரிக்க வேண்டுமென்றும் அப்படியிருப்பினும் சென்னை, மும்பை போன்ற நகரங்களைச் சிறப்பு மாநிலங்களாக அறிவிக்க வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரைத்தது. எஸ்.கே.தர் குழுவின் பரிந்துரைகளினால் ஆந்திரத்தில் கோப அலைகள் எழுந்ததைக் கண்டு நேரு, படேல், சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட குழுவை இந்தியத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. மொழிவாரி ஆந்திர மாநிலம் ஏற்படுமாயின் சென்னை ஆந்திரத்துடனும் தமிழகத்துடனும் சேர்க்கப்படாமல் தனித் தகுதி மாநிலமாக இருக்குமென இக்குழுவும் அறிவித்தது. இதனால் புது ஆந்திரத் தலைநகர் உருவாக்க வேண்டும் அல்லது சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்க வேண்டுமென இக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசால் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் நிறுவப்பட்ட பகுப்பாய்வுக் குழு சென்னையை ஆந்திரத்தின் தாற்காலிகத் தலைநகராக வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை.
இந்நிலையில் தெலுங்கு மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடங்கின. 1951 ஆகஸ்டில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலாளர் சுவாமி சீதாராம் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனைக் கண்டித்த நேரு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை எல்லைப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதாயின் மொழிவாரி கொள்கையைப் பரிசீலிப்பதாக 1951 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மொழிவாரிக் கோரிக்கைக்கு நேரு அதிக ஆதரவளிக்காததால் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆந்திரத்தில் காங்கிரஸ் அதிக வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தை உடனடியாக உருவாக்க பொட்டி ஸ்ரீராமுலு 1952-ல் 67 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்டு தனி ஆந்திரம் உருவாக்கப்படும் என 1952 டிசம்பர் 19-ல் அறிவித்து வாஞ்சு குழுவை நேரு நியமித்தார்.
ஆந்திரத்திற்கு புதுத் தலைநகர் ஏற்படும் வரை சென்னை தலைநகராக இருக்குமென வாஞ்சு குழு அறிவித்ததால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; 1953ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக சென்னை மாநிலத்தைப் பிரித்து கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரம் உருவானது. ஆந்திரம் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மற்ற மாநிலங்களும் மொழிவாரி அமைப்பைக் கோரின. 1952ஆம் ஆண்டு பஷல் அலி தலைமையில் சர்தார் கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஷ்ரு ஆகியோர் அடங்கிய மாநிலச் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு நியமித்தது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்படுதலை இக் குழு ஆதரித்துக் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து 1956 ஜூலையில் மாநில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1970களில் எழுப்பப்பட்டது. இதைப் போன்றே மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று இதுவரை 29 கோரிக்கைகள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆந்திரத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அதைப் போலவே ஆந்திரத்தில் சித்தூர், கர்நூல், கடப்பா, ஆனந்த்பூர் மற்றும் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டங்களை இணைத்து ராயலசீமா மாநிலம் உருவாக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே கோரி வருகின்றனர். இதைப் போலவே கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு குடகு மாநிலம் அமைக்க வேண்டுமென அவ்வப்போது பேச்சு எழுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக உள்ளது. தமிழகத்திலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகமும் சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழகமும் இரண்டு மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என ஓரிரு முறை பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா மாநிலக் கோரிக்கையும் மேற்கு வங்காளத்தில் போடோ மாநிலக் கோரிக்கையும் உத்தரப்பிரதேசத்தில் ஹரித் பிரதேச மாநிலக் கோரிக்கையும் அவ்வப்போது எழுகின்றன. ஏற்கெனவே உள்ள மாநில எல்லைகளை மாற்றி புதிய மாநிலங்களை உருவாக்குவது என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.
நம் நாட்டின் அடிப்படை அம்சமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு இப் பிரச்சினை ஊறு விளைவிக்கும் எனலாம். தனி மாநிலம் அமைவதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி பெற்று விட முடியாது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டு உருவான ஜார்க்கண்ட், உத்ராஞ்சல் மற்றும் சத்தீஷ்கர் போன்றவை வளர்ச்சிக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே நிற்கின்றன.
மாநிலங்கள் குறைந்த பரப்பளவில் ஏற்படுத்தப்படும்போது தொழில், வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சில சமயங்களில் வலுவிழக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய தென்னக மாநிலங்களில் ஒரு பகுதியில் மழை பொய்த்துப் போனாலும் இன்னொரு பகுதியில் உள்ள நீர் வளத்தை வைத்து மாநில அரசுகள் குடிநீர், விவசாயம் போன்ற பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம்.
மொழிவாரி மாநிலங்கள் நீடிப்பதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையானது. தேசியத்தையும் மாநில ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கி இதற்கான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தென்னகத்திலும் நான்கு மொழிகளுக்கும் நான்கு மாநிலங்கள் என்ற நிலை தொடர அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரபட்சமற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் சமமான பார்வையோடு ஆட்சி நடத்துவது அவசியமாகும். மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகள் மாநில அளவில் மக்கள் ஒற்றுமைக் குழுக்களையும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அண்டை மாநில நல்லுறவுக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் இக்குழுக்களைக் கண்காணித்து, சிறப்பாகச் செயல்பட நெறிப்படுத்தும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தேச ஒற்றுமைக் குழுக்களை நாடு முழுவதும் வலைப்பின்னல் போல உருவாக்கிட வேண்டும்.
Posted in 1947, Andhra, AP, Independence, India, Karnataka, Kerala, Language, Madras Manathey, Mahrashtra, National Congress, Potti Sriramulu, Province, Rayalaseema, Regional, Republic, State, Tamil, Telengana, Telugu, Vidhrabha, Zone | Leave a Comment »