Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sushilkumar Shinde’ Category

Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?

Posted by Snapjudge மேல் மே 14, 2007

மாயாவதியின் மகத்தான வெற்றியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்கும் இடதுசாரிகள்: பிரணப் முகர்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

புதுதில்லி, மே 14: உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்க இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில் எந்த ஒரு கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை திட்டவட்டமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் அறிவிக்கை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

உ.பி. தேர்தல் முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போது பொது வேட்பாளரை நிறுத்த முயன்றுவருகின்றன.

இடதுசாரிகளைப் பொருத்தவரையில் இரண்டாவது முறையாக கலாமை பதவியில் நீடிக்கச் செய்வதிலும், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தச் செய்வதற்கும் விருப்பமில்லை.

இந்நிலையில், அரசியலிலும் ஆட்சியிலும் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ள இடதுசாரிகளுக்கு நெருடல் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளுடனான பேச்சின்போது மத்திய அமைச்சர்கள்

  • பிரணப் முகர்ஜி,
  • சுஷில் குமார் ஷிண்டே,
  • முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரின் பெயர்களை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாயாவதி தற்போது மேல்சாதியினர் ஆதரவையும் பெறுவதில் குறியாக இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை மட்டும் தான் ஆதரிப்பார் என்று கூற முடியாது.

உ.பி. முதல்வர் மாயாவதியின் ஆதரவில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த முடியாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கடந்த ஆண்டு வெளிப்படையாக கூறி வந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்ப்பு காரணமாக மவுனமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýடன் பேரம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது எனவும், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு ஆதரவைப் பெறுவது எனவும் இடதுசாரிகள் திட்டமிடக்கூடும்.

—————————————————————————————————–

குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிட ஒரு மாதத்துக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இந்த நிலையில்கூட, அந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியாத அரசியல் குழப்ப நிலைமை காணப்படுவது நமது துரதிருஷ்டம்தான்!

“”கூட்டணி அரசுகள்தான் இனி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதால், நமது அரசியல் முறைமையிலேயே ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. எந்த முக்கிய முடிவென்றாலும் அதை முதலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஏற்க முதல் கட்டத்திலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிப்பதற்கு அடுத்த கட்டத்திலும் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -அப்பதவி முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -6 மாதங்களுக்கு முன்னதாகவும் தொடங்கிவிடும் என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.

1987 ஜூலையில் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனுக்கு அவர்தான் அடுத்து அந்தப் பதவிக்கான வேட்பாளர் என்பதை 1986 அக்டோபர் 4-ம் தேதியே தெரிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. பிரதமர் முதலில் எதிர்க்கட்சியினரையும் பிறகு தன் கட்சியினரையும் ஆலோசனை கலந்துவிட்டு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தெரிவித்து ஒப்புதல் வாங்கியது அந்தக் காலம்.

ஆந்திர முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தன்னுடைய அரசைக் கலைத்தவர்தான் சங்கர் தயாள் சர்மா என்ற வருத்தம் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அவர்தான் என்பதை குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்தார் நரசிம்ம ராவ்.

கே.ஆர். நாராயணன்தான் குடியரசு துணைத் தலைவராகப் போகிறார் என்பதும் அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான், “”பதவி கிடைக்கட்டும் அதுவரை எதுவும் நிச்சயம் இல்லை” என்று உள்ளூர அவநம்பிக்கையுடன் இருந்தார்; அதற்குக் காரணமும் உண்டு. 1991-ல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு கே.ஆர். நாராயணனைத்தான் நரசிம்ம ராவ் தேர்வு செய்திருந்தார். ஆனால் கே. கருணாகரன் அதை விடாப்பிடியாக தடுத்து நிறுத்தினார். கருணாகரன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் பார்த்து, குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணனைத் தேர்வு செய்துவிட்டார் நரசிம்ம ராவ்.

அப்போதெல்லாம் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது; தனது அரசியல் உதவியாளர்கள் தயாரித்த 4 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வது பிரதமருக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாதே?

இப்போதைய கூட்டணி அரசில் பிரதமரால் மட்டும் எதையும் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிகூட தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அடுத்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்கும் மன நிலையிலேயே மாயாவதி இருக்கிறார் என்பது நிம்மதி தரும் விஷயமாகும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பைரோன் சிங் ஷெகாவத் போட்டியிட்டால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள்கூட அணி மாறி வாக்களித்துவிடுவார்களே என்ற கவலை காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர் எல்லா கட்சியினராலும் விரும்பப்படுகிறவர் என்பது மட்டும் காரணம் அல்ல, அவர் நிறுத்தப்பட்டால் எல்லா கட்சிகளிலும் உள்ள தாக்குர்கள் அவருக்கே வாக்களித்துவிடுவார்கள்.

இதனால்தான்

  • அர்ஜுன் சிங்,
  • பிரணாப் முகர்ஜி,
  • சுசீல்குமார் ஷிண்டே,
  • நாராயண் தத் திவாரி,
  • சிவராஜ் பாட்டீல் என்று பல பேர்கள் அடிபடுகின்றன. இதில் இடம்பெறாத யாராவதுகூட கடைசி நேரத்தில் வேட்பாளராகிவிடலாம் என்றும் பேசப்படுகிறது.

ஷெகாவத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு படைத்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் ஆன பிறகு ஆளும் கூட்டணித்தலைமை விரும்புகிறபடிதான் எப்போதும் நடப்பார் என்று சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் ஆளும் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெறும் அளவுக்கு அவர் முக்கியமான நிர்வாகி. அவருடைய அனுபவமும் வழிகாட்டலும் ஆளும் கூட்டணிக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

ஷிண்டேவையோ சிவராஜ் பாட்டீலையோ நிறுத்த சோனியா காந்திக்கு விருப்பம் அதிகம். ஆனால் இவ்விருவருக்கும் மாற்றுக் கட்சிகள், அணிகளிலிருந்து வாக்குகள் கிடைப்பது அரிது.

தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதி, இன்னொரு தலித்தை (ஷிண்டே) தேசத்தலைமைப் பதவியில் அமர்த்துவதை எப்படி வரவேற்பார் என்ற சந்தேகம் இருந்தது. அவரோ காங்கிரஸ் தேர்வு செய்கிறவருக்கு என் ஆதரவு உண்டு என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை கலந்துவிட்டு முடிவைத் தெரிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் யாரை ஆதரிப்பார்கள் என்பது அடுத்து முக்கியமானது. எனவேதான் தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் திமுக விரும்பிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து தந்தனர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்.

கட்சிகளுக்குள் உள்ள போட்டிகள், கூட்டணிக்குள் காணப்படும் இழு-பறிகள், இருவேறு கூட்டணிகளின் பலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் உள்பட எந்த முக்கிய முடிவையும் எடுப்பது எளிதாக இல்லை. எனவே இந்த முயற்சிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்திய அனுபவத்திலிருந்துகூட பாடம் கற்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

தமிழில்: சாரி.

Posted in BJP, BSP, Byron Singh Shekawat, Chatterjee, Communist, Congress, CPI, CPI(M), Dalit, Elections, Kalam, Karan, Karan Singh, KR Naraian, KR Narayan, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Naraiyan, Narasimha Rao, Narasimma Rao, Narasmha Rao, Narayan, NDA, Polls, Pranab, Pranab Mukarjee, Pranab Mukerjee, Pranab Mukerji, Pranab Mukharjee, Pranab Mukherjee, Pranabh, President, PV Narasmha Rao, PVNR, Rajasthan, Rao, Sarma, SD Sharma, Shankar Dayal Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Somnath, Somnath Chatterjee, SP, Speaker, Sushil, Sushilkumar, Sushilkumar Shinde, Thakur, UP, UPA, vice-president, VP | 1 Comment »

Shall we name the next President of India – Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் மே 1, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே அப் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வேலையை பிரதமர் தொடங்கி விடுவார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு 9 – 10 மாதங்கள் முன்னதாகவே அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, அது ரகசியமாக வைக்கப்படும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் அந்தக் காலம் மலையேறி விட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ள நிலையில், ஜூலையில் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

கூட்டணி ஆட்சியின் யுகத்தில் முடிவெடுப்பது பிரதமர் மட்டுமல்ல. இன்னும் பலருக்கும் இதில் பங்குண்டு. காங்கிரஸ் கட்சியே கூட வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என உறுதியாகக் கூற முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் போன்ற கட்சிகளின் ஆதரவும் காங்கிரஸýக்கு தேவை. பஞ்சாப், உத்தரகண்ட்டில் தோல்வியைத் தழுவினாலும் கூட இப்போதைக்கு போட்டியில் முந்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான்.

குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெறும் 7-ல் ஒரு பங்கு வாக்காளர்களை முடிவு செய்வது உத்தரப் பிரதேசம்தான். எனவே உத்தரப் பிரதேச தேர்தல் நடைமுறைகள் முடிவடையும்வரை எல்லா விவகாரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொருத்தவரையில், கூட்டணியைச் சேர்ந்தவர்களே அணி மாறி வாக்களித்து விடலாம் என்ற பயம், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பான முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள பைரோன்சிங் ஷெகாவத்தை, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்தால் போட்டியிடுவதில் அவருக்குத் தயக்கம் இருக்காது என்பது தெரிந்ததுதான்.

ஆனால் கருத்தொருமித்த வேட்பாளராக அவர் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே உள்ளன.

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்கும் அளவுக்கு காங்கிரஸ் வளைந்து கொடுக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்களை அணி மாறி வாக்களிக்கச் செய்யும் அளவுக்கு ஷெகாவத்துக்கு தொடர்புகள் உள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி போன்றவை அவரை ஆதரிக்கக் கூடும் என்ற பேச்சும் அடிபடுகின்றன.

இந்தக் காரணங்களால்தான் அப்துல் கலாமுக்கு மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராக வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதில் கருத்தொற்றுமை எட்டப்படாவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் மானப் பிரச்சினை ஆகிவிடும். தன்னுடைய வேட்பாளர் தோற்கடிக்கப்படுவதை எந்த ஆளுங் கட்சியும் விரும்பாது. அத்தகைய ஆபத்தான முயற்சியில் இறங்கவும் துணியாது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதில் கருத்தொற்றுமை எட்டப்பட்டால் மீண்டும் பதவியில் தொடருவது பற்றிய தன்னுடைய விருப்பத்தை தனிப்பட்ட (அதிகாரபூர்வமற்ற) உரையாடல்களில் தெரிவித்துவிட்டார் அப்துல் கலாம். வாஜபேயி, எல்.கே.அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் தன்னைச் சந்தித்தபோது அதைத் தெளிவாகவே கூறிவிட்டார் கலாம்.

அப்துல் கலாமை பாஜக ஆதரிக்கும் என்பதை ராஜ்நாத் சிங் கோடிட்டுக் காட்டி விட்டார். 2002-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பெயரை முதன் முதலில் முன்மொழிந்த முலாயம் சிங்கும் அவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தொடருவதில் பிரதமருக்கும் கூட விருப்பம்தான் என கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரத்தில் அரசல் புரசலாக அடிபடுவதை நம்பலாம் என்றால், சோனியா காந்தியின் கருத்து வேறுவிதமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சோனியா காந்தியின் முதல் தேர்வு சுஷில்குமார் ஷிண்டே. ஷெகாவத்தைப் போல் அல்லாமல், ஷிண்டே தாகூர் சாதியினரின் வாக்குகளைக் கவரக் கூடியவர். ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து தலித் வாக்குகளை அவரால் கவர முடியாமல் போகலாம்.

கலாம் வேண்டாம் என நினைப்பவர்கள் மத்தியில் “”இன்னொரு கலாமை” கண்டறியும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி (ஏற்கெனவே இவரது பெயர் அடிபட்டது), எம்.எஸ். சுவாமிநாதன், நோபல் பரிசு பெற்ற அமர்த்திய சென் போன்றோர் “”இன்னொரு சாத்தியமான கலாம்”கள். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள அமர்த்திய சென்னுக்கு இடதுசாரிகள் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் பாஜக-வின் கருத்து வேறுவிதமாக இருக்கும்.

அரசியல் சார்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸில் கரண்சிங் இருக்கிறார். இவருக்கு பரவலாக தொடர்புகள் உள்ளதுடன், “இந்து-சார்பு’ முகம் கொண்டவரும் கூட. மக்களவைத் தலைவராக உள்ள சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தும்போது, முலாயம் போன்றவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பது கடினம். ஆனால் சட்டர்ஜியை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு இடதுசாரி மற்றும் காங்கிரஸýக்குள்ளேயே தடை இருக்கிறது. பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. இது போட்டிக்கு வழிவகுப்பதுடன் அணி மாறி வாக்களிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி விடும்.

இந்த நிலைமையை மேலும் சிக்கலாக்கக் கூடிய இரண்டு சூழ்நிலைகள் உண்டு. ஒன்று, பாஜக ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் சூழல். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 3 முக்கிய அணிகளை -பகுஜன் சமாஜ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி மற்றும் சமாஜவாதி கட்சி ஆகிய 3 கட்சிகளை -ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிர்வரிசையில் நிறுத்திவிடும். மற்றொன்று, உத்தரப் பிரதேசத்தில் எந்த 2 கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முடியாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் சூழ்நிலை.

2002-ல் நடந்ததுபோல், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காமலேயே பேரவைக்கு உயிர்கொடுப்பது ஒத்திவைக்கப்பட்டால், ஜூலையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியுமா? இது அவ்வளவாக தெளிவில்லாத “மங்கலான பகுதி’ எனக் கூறப்படுகிறது.

அரசியல் அவநம்பிக்கையாளர்கள் இத்தகைய சூழ்நிலையை முன்னிறுத்தி விளையாட நினைக்கலாம். ஆனால் அரசியல் நிர்பந்தங்கள் அப்படித் தூண்டினாலும் கூட நல்ல நோக்கம் வெற்றி பெறும் என நம்பலாம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராக பதவி வகிக்கப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பது உ.பி. தேர்தல் முடிவுகள்தான். இப்போதைக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் விருப்பத்துக்கு குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதை நோக்கியும் அரசியல் சூழ்நிலை சென்று கொண்டிருக்கிறது.

தமிழில்: ப.ரகுமான்.

Posted in Advani, Amartya, Amartya Sen, Assembly, BJP, BSP, Chatterjee, Communist, Congress, Dalit, Election, India, Infosys, Kalam, Karan Singh, Kashmir, Lok Saba, Lok Sabha, Manmohan, Marxist, Mayawathi, MS Swaminadhan, MS Swaminathan, Narayanamoorthy, Narayanamurthy, Neeraja, Neeraja Chowdhry, Party, Politics, President, Punjab, selection, Shinde, Somnath, Sonia, Sushilkumar Shinde, Swaminadhan, Swaminathan, UP, Vajpayee, Vote | 1 Comment »