Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Surplus’ Category

Remove ban on milk powder exports

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 22, 2007

பால் பௌடர் ஏற்றுமதி தடை நீங்க வேண்டும்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பௌடர் ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நுகர்வோர் நலன் கருதி விதித்த இத் தடையை, பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி இப்போது விலக்க வேண்டும்.

குளிர், மழைக்காலங்களில் பால் உற்பத்தி அதிகம் இருக்கும். அப்போது அன்றாடம் 24.10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. கோடைக்காலத்தில் 21.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாகிறது.

தமிழ்நாட்டில் சராசரியாக அன்றாடம் 22.10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

எருமைப் பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.14 வீதமும் பசும்பாலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.12 வீதமும் கொள்முதல் விலை தரப்படுகிறது.

பாலைப் பொருத்தவரையில் உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால், பாலுக்குத் தரும் கொள்முதல் விலையில் மூன்றில் இரு மடங்கு நேரடியாக பால் உற்பத்தியாளருக்கே கிடைக்கிறது.

விவசாயிகள் அதிலும் குறிப்பாக சிறு விவசாயிகள் கறவை மாடு வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்ட முடிகிறது. கால்நடைத் தீவனங்களை அரசு சலுகை விலையில் அளித்தாலும் அதை வாங்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்.

ஒரு மாடு அல்லது இரு மாடுகளை வீட்டுத் தேவைக்காக வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பாலை விற்க வேண்டும் என்ற நோக்கில் மாடு வளர்ப்பவர்கள் மட்டும்தான் இப்போது மாடு வைத்துக் கொள்கிறார்கள்.

“மாடு’ என்றால் “செல்வம்’ என்பார்கள். ஆனால் நவீன காலத்தில் “மாடு’ என்றால் “பெரும்பாடு’ என்றாகிவிட்டது. மாடுகளுக்குத் தண்ணீரும், மேய்ச்சல் நிலமும் தேவை. மாடுகளை மேய்க்கவும், பராமரிக்கவும் இடம் இல்லை. மாநகராட்சி எல்லைக்குள் மாடுகளை வளர்க்கக்கூடாது என்று மாநகர நிர்வாகத்தினரிடமிருந்து கெடுபிடி வேறு.

இலவச கலர் டி.வி., சிறு விவசாயிகளுக்கு இலவச நிலம் போன்றவற்றைத் தருவதுடன் இலவசமாக மாட்டையும் ஏழைகளுக்குத் தரலாம்.

தொடக்க காலத்தில் மாட்டைப் பராமரிக்கச் சிறிது உதவித்தொகையைக் கடனாக அளித்து, பிறகு பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அசலை கழித்துக்கொள்ளத் தொடங்கினால் கடன் வசூலிப்பும் எளிதாக இருக்கும். தமிழ்நாடெங்கும் உழைப்பையும் நேர்மையையும் மூலதனமாக வைத்து பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை இதில் ஈடுபடுத்தினால், பிற மாநிலங்களுக்கு இதிலும் தமிழகம் நல்ல வழிகாட்டியாகத் திகழலாம்.

கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டுமே மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு ஏற்கெனவே நன்கு பணியாற்றி வருகின்றன. மாடு வாங்கக் கடன் தருவதில் தமிழ்நாட்டு அரசுடைமை வங்கிகளும் நல்ல அனுபவம் உள்ளவை. எனவே மாடு வளர்ப்பையும் பால் பெருக்கத்தையும் தீவிர இயக்கமாக்கி முனைப்போடு செயல்படுத்தினால் தமிழ்நாடு இந்தியாவின் “”டென்மார்க்” ஆகத் திகழும்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான கணக்கெடுப்பின்படி மொத்தம் 7,662 பால்கொள்முதல் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 21.93 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அன்றாடம் 26.10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. மாநிலம் முழுக்க 36 பால் குளிரூட்டும் மையங்கள் செயல்படுகின்றன. பாலைப் பௌடராக்கும் பிரிவுகள் மாநிலத்தில் 4 உள்ளன.

அமைப்புரீதியான துறையில் அன்றாடம் 46 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. தனியார் துறையில் 16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இத்தகைய செழிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பால் பௌடர் ஏற்றுமதியை அனுமதித்து கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Posted in Assets, Assistance, Commerce, Coop, Coops, Cows, dairy, Drink, Economy, Exports, Farming, Fees, Industry, Law, Liquid, Loans, Manufacturer, Manufacturing, Marketing, milk, Order, Powder, Price, quantity, retail, revenue, Skimmed, Surplus, Tariff, Tax | Leave a Comment »

Chennai Municipality Corporation Budget – No new Taxes

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

சென்னை மாநகராட்சி: வரி உயர்வு இல்லாத உபரி பட்ஜெட்

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த வரி விதிப்பு, நிதி நிலைக்குழு தலைவர் ராதா சம்பந்தம்.

சென்னை, மார்ச் 13: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட எந்த வரி உயர்வும் இல்லாத 2007-08ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை வரி விதிப்பு மற்றும் நிலைக்குழுத் தலைவர் ராதா சம்பந்தம் தாக்கல் செய்தார். இதன்படி புதிய வரிகள் இல்லை. பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு பட்ஜெட்டில் ரூ. 2.67 கோடி உபரி நிதியாக காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும், மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மேயர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் வரும் நிதி ஆண்டில் மேற்கொள்ள உள்ள புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசியது: வரும் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை, தற்போது நடைமுறையில் உள்ள சொத்து வரி உள்பட எந்த வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை.

2007-08ம் நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மொத்த வருவாய் 702.03 கோடியாக இருக்கும். செலவு 699.36 கோடியாக இருக்கும்.

புதிய திட்டங்கள்: சென்னை மாநகராட்சியில் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் உள்ள 296 கிலோ மீட்டர் சாலைகள் ரூ. 90 கோடியில் சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தப்படும். மக்கள் வசதிக்காக பஸ் நிறுத்தங்களில் உலகத் தரம் வாய்ந்த, அதிநவீன நிழற்குடைகள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 350 நிறுத்தங்களில் இத்தகைய நவீன நிழற்குடைகள் அமைக்கப்படும்.

எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள்: சென்னையில் பெருகிவரும் பாதசாரிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். முதல்கட்டமாக, 15 இடங்களில் இத்தகைய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதிநவீன நிழற்குடை, நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் (பி.ஓ.டி.) தனியார் மூலம் மேற்கொள்ளப்படும்.

சாலைகள் மேம்பாடு: மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பேருந்து சாலைகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் அடிக்கடி பழுதடைவதைத் தவிர்க்க ரூ. 4 கோடியில் மாஸ்டிக் ஆஸ்பால்ட் கான்கிரீட் அமைக்கப்படும்.

அனைத்து உட்புறச் சாலைகளும் ரூ. 73 கோடியில் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

புதிய மேம்பாலங்கள்: சென்னை எழும்பூர் ஆன்டர்சன் பாலம் அருகில் எத்திராஜ் சாலை- கிரீம்ஸ் சாலையையும் இணைக்கும் வகையில் கூவத்தின் குறுக்கே பாலம் கட்டப்படும்.

வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு அருகில் எல்.சி. 1 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும்.

வேளச்சேரி, அரும்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: 1,146 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள சமையலறைகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையம்: சென்னையில் தற்போது 115 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டில் மேலும் 40 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளிலேயே பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டம் நடத்த ஒவ்வொரு மண்டலத்திலும் தனியான கட்டடம் கட்டித்தரப்படும்.

மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களில் முதல் 25 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

கலை, அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அவர்களின் படிப்பு முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.

முதியோர், ஊனமுற்றோர் எளிதில் பயன்படுத்தும் வகையில் 15 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். மாநகராட்சி தாய்சேய் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதிகள் அமைக்கப்படும் என்றார் மேயர்.

Posted in Anganvadi, Anganwadi, Bonds, Budget, Chennai, Child, Children, Civic, Coporation, DMK, Economy, Education, Expenses, Finance, Flyovers, Healthcare, Income, IT, Kids, Loans, Local Body, Loss, Ma Subramanian, Maintenance, Mayor, MK Stalin, Municipality, Planning, Profit, Radha Sambandham, Revenues, Rippon, Rippon Building, Roads, Schemes, Schools, Stalin, Streets, Surplus, Tax, Taxes, TN, Welfare, Women | 1 Comment »