Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Street’ Category

Nadigavel MR Radha, Pralayan street theater performances & EVR Periyar – Ki Veeramani on Chennai Sangamam

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

எம்.ஆர். ராதா ஒருவர்தான், மக்களை தன் பின்னாலே அழைத்துச் சென்றவர்
மற்ற நடிகர்கள் எல்லாம் மக்கள் பின்னாலே சென்றவர்கள்

எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் உரை

பிரளயன் அவர்கள் மிக அழகாக எதையுமே சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.

அதற்கு முன்னாலே ஜாதியைப்பற்றி அவர்கள் நடத்திய நாடகம் மிக ஆழமான கருத்துகளைத் தொட்ட ஒன்றாகும். அவரைப்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னாலே பார்த்து எங்களுடைய ஏடுகளிலே கூட எழுதியிருக்கின்றேன்.

அரைமணி நேரத்தில் நல்ல நாடகம்

அதைக்கூட பெரியார் திடலிலே அழைத்து செய்யவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையிலே பார்க்கும்பொழுது ஒரு 30 மணித்துளி களிலே குடும்பச் சூழல்கள் என்ன என்பதை அவர்கள் நாடக வாயிலாகக் காட்டினார்கள்.

அந்த நாடகத்தில் நடித்தத் தோழியரிடம் நான் ஒரே ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கின்ற பொழுது ஒரு எண்ணம்தான் என்னு டைய மனதிலே ஓடிற்று.

பெரியாருடைய சிந்தனைகளுக்கு அப்படியே உருவம் கொடுத்ததைப் போல இருந்தது – உங்களுடைய சம உரிமை மாற்றம் என்பது.

இருவருக்கும் சம உரிமை

சமஉரிமை என்று சொல்லுகின்ற நேரத்திலே கூட இப்பொழுது எப்படித் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நீங்கள் இரண்டு காட்சிகளாகக் காட்டினீர்கள்.

உரிமை என்பது அடிமையாக இருக்கக் கூடாது என்பது இரு பாலாருக்கும் உரியது. அந்த அடிமைத் தனம் ஒரு சாராருக்குத்தான் உரியது என்று நினைப்பதோ அல்லது உரிமை என்ற பெயராலே எல்லையற்ற நிலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் செல்வது அதன்மூலமாக மற்றவர்கள் வெறுப்பது என்பது போன்ற ஒரு நிலையோ இல்லை.

பெரியாரின் பெண்ணுரிமை கருத்து

இருவரும் ஒத்துப் போதல். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் என்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் சிந்திந்து கருத்துக்களை சொன்னார்கள். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் பல நேரங்களிலே நாடகத்தின் மூலமாகச் சொன்ன கருத்துகள் புரட்சிகரமான சிந்தனைகளாக இருந்தாலும் அந்த புரட்சிகரமான சிந்தனைகளுக்கு ஒரு மூலம் எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது, கரு எங்கிருந்து பெற்றார்கள் என்று சொல்லும்பொழுது அது ஆழமான – தந்தை பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமை தத்துவ கருத்துகள்.

படிக்காதவர்தான் கலைவாணர்

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நகைச்சுவைகள் எல்லாம் அறிவார்ந்த நகைச் சுவைகள் – சமுதாய மாற்றத்தை மய்யப்படுத்துகின்ற நகைச்சுவையாக இருந்தது.

அதிகம் படிக்காத கலைவாணர் அவர்கள் எப்படி ஆழமான சமூக விஞ்ஞானி போல இருந்து நகைச்சுவைச் கருத்துகளை அவருடைய குழுவின் மூலமாகப் பரப்பினார், திரைப்படங்கள் மூலமாகவும் பரப்பினார். உங்களுக்கு ஆசிரியர் யார்? என்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடத்திலே கேட்டபொழுது, அவர் ஒரு ஆசிரியரைக் காண்பித்தார்.

பச்சை அட்டைக் குடிஅரசு என் ஆசிரியர்

யார் அந்த ஆசிரியர் என்று சொல்லும்பொழுது ஒரு பச்சை அட்டை குடிஅரசை எடுத்துக்காட்டி அந்தக் காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய அந்தப் புரட்சிக்கரமான ஏட்டைக் காட்டி இவர்தான் எனக்கு ஆசிரியர். இதை நாங்கள் வாராவாரம் படித்துவிட்டுத்தான், இதிலே இருக்கின்ற கருத்துகளை எங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறோம். மற்றவர்களைத் திருத்துவதற்காக, சமுதாய மாற்றத்திற்காக செய்து கொண்டு வருகின்றோம் என்று சொன்னார்கள்.

சுயசிந்தனையாளர் எம்.ஆர். ராதா

அதுபோல ராதா அவர்களைப் பொறுத்தவரையிலே, கற்றலினும் கேட்டலே நன்று என்று சொல்லக்கூடிய அளவிலே ஆழமாக ஒரு கருத்தைக் கேட்பார். உடனே அதை எப்படி உருவகப்படுத்தி செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு, ரொம்ப சுய சிந்தனையாளராக தன்னை ஆக்கிக் கொள்வார்.

தந்தை பெரியார் அவர்கள் – எப்படி ஒப்பற்ற ஒரு சுய சிந்தனையாளரோ, அந்த ஒப்பற்ற சிந்தனையாளருக்கு, ஒரு நல்ல சுயமாக சிந்திக்கக் கூடிய ஒரு நல்ல ஆற்றல் வாய்ந்த கலைஞராக நடிகவேள் ராதா அவர்கள் கிடைத்தார்கள்.
ராதா அவர்களப்பற்றி எனக்கு முன்னாலே பேசிய கவிஞர் நந்தலாலா அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் மிக அருமையான கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

நடிகவேள் ராதா அவர்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஆழமான சிந்தனையுள்ளவர்.

சினிமா துறையை கடுமையாகச் சாடக்கூடியவர்

சினிமாத்துறையை மிகக் கடுமையாகச் சாடக்கூடிய தந்தை பெரியார், பெரியார் திடலில் நடிகவேள் ராதா அவர்களுடைய பெயராலே ஒரு மன்றத்தையே அமைத்தார். அந்த மன்றத்தை தந்தை பெரியார் அவர்களே திறந்தார்கள்.
அவர் எப்படி அங்கீகரித்தார் என்பதை அந்த மன்ற அடிக்கல் நாட்டு விழாவின் பொழுதும் சரி, ராதா மன்றத்தைத் திறந்த போதும் தெளிவாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

ராதா வர மறுத்தார்

ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தை பெரியார் அமைத்தார். நடிகவேள் ராதா மறுத்தார். . எனது பெயரால் மன்றம் வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். ராதா மன்றம் திறப்பு விழா நிகழ்ச்சிக்குக் கூட வர மறுத்தார். பெரியார் திடலில் ராதா மன்றத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.

ராதா ஏன் வரவில்லை என்று அய்யா அவர்கள் கேட்டு, பிறகு கடுமையாகச் சொல்லி, ஏன் ராதா இங்கு வர கூச்சப்படுகிறார்? அவரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னார். நிகழ்ச்சி பாதி நடந்துகொண்டிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய வீடு அப்பொழுது தேனாம்பேட்டையில் இருந்தது.

`நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும்!`

என்னுடைய வண்டியை அனுப்பி அவரை அழைத்துவரச் செய்து மேடையில் உட்கார வைத்தோம்.

அவரும் தனக்கு இதற்குத் தகுதி உண்டா? என்று கேட்டு தன்னடக்கத்தோடு, கூச்சப்பட்டு மேடையில் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்திலே தந்தை பெரியார் சொன்னார் – நடிகவேள் ராதா அவர்களுக்காக நான் எதையும் செய்யவில்லை. நான் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டி விடுபவன் அல்ல.

நான் ராதா அவர்களுடைய பெயராலே மன்றத்தைத் திறக்கிறேன் என்று சொன்னால், இது நடிகவேள் ராதா அவர்களுக்காக அமைக்கவில்லை. நடிகர்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காக நான் இதைச் செய்திருக்கிறேன். இப்படி செய்வதன் மூலமாக – ஒரு கொள்கையோடு இருந்தால், அவர்களைப் பாராட்டுவதற்கு நாட்டிலே ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக இதைச் செய்திருக்கிறேன்.

மற்ற நடிகர்கள் மக்களுக்கு ஏற்றாற்போல

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை ஏன் பாராட்டுகிறேன்? நடிகவேள் ராதா அவர்களை ஏன் பாராட்டுகிறேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் ரசிகர்கள், பார்வையாளர்கள். பார்ப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சொல்லி கைதட்டல் வாங்கிக் கொண்டு அவர்கள் பின்னாலே போகக் கூடியவர்களாகத்தான் நாடகக் கலைஞராக இருந்தவர்கள், நடிகர்கள் எல்லாம்.

ராதா மட்டும்தான் மக்களை தன் பின்னாலே அழைத்தவர்

ஆனால், ராதா ஒருவர்தான் மக்கள் பின்னாலே போகாமல்,. மக்களைத் தன் பின்னாலே அழைத்துக் கொண்டு வந்து ஒரு புரட்சிக்கரமான சிந்தனை உள்ள நடிகர் என்ற அந்தச் சிறப்புக்காகத்தான், ராதா பெயர், காலத்தை வென்று என்றைக்கும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே அவருக்கு மன்றம் வைக்கிறோம் என்று சொன்னார்கள்.

சிலபேர் சலசலப்பு காட்டிய நேரத்திலேகூட அவர்கள் அதைப் பொருட்படுத்தாமலே, சிறப்பாக அய்யா அவர்கள் அதை செய்தார்கள்.

பெரியார் அங்கீகாரம்

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால், இதைவிடப் பெரிய அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்? தந்தை பெரியார் அவர்களே அவரை அங்கீகரித்தார். எம்.ஆர். ராதா அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நினைவையே அவர்கள் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கு அந்த மன்றம் புதுப்பிக் கப்பட்டு, என்றைக்கும் அந்தப் பெயர், காலம் காலமாக நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு ஒரு அருமையான மன்றமாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினுடைய அங்கீகாரம்.

விருதுகளுக்கு மேலானது

அதுவும் பெரியாரிடம் கிடைத்த அங்கீகாரம் என்பது விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது, மேலானது. அதற்கு என்ன காரணம்? ராதா அவர்கள் ஆங்கில வார்த்தையை சரளமாகப் பேசுவார். ரொம்பப்பேருக்குத் தெரியாது, அவர் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் என்று. அவர் எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதே சிறைச்சாலைக்குப் போன பிற்பாடு, எம்.ஆர். ராதா என்று கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டார்.

சிறைச்சாலையிலே புத்தகங்களைக் கொண்டுவரச் சொல்லி ஆங்கிலத்தைப் படித்தார். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை எப்படிப் படிப்பார்களோ அது மாதிரி எல்லாம் ஆர்வத்தின் காரணமாக ஆங்கிலத்தை அவர்கள் படித்தார்கள்.

பொது அறிவு அதிகமுள்ளவர்

ஆனால், பொது அறிவு அதிகமுள்ளவர். நம்முடைய நாட்டிலே படிப்பிற்கும், பொது அறிவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்ட யாரையாவது உதாரணம் காட்ட வேண்டுமானால், எப்படித் தலைவர்களிலே தந்தை பெரியார் அவர்களைக் காட்டுகின்றார்களோ, அதுபோல நடிகர்களில் நடிகவேள்ராதா அவர்களைத்தான் காட்டவேண்டும்.
அந்த அளவிற்கு அவர்கள் தெளிவானவர். அவர் ஒரு நல்ல சுயமரியாதைக்காரர். நல்ல துணிச்சல்காரர். அவருக்குத் தெளிவான அறிவு இருந்தது என்பது மட்டும் முக்கியமல்ல. நல்ல பொது அறிவோடு இருக்கிறார்கள். நல்ல சுயமரியாதைக்காரராக அவர்கள் இருந்தார்கள். சமுதாயப் புரட்சியாளராக வாழ்ந்தார்கள்.

கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்

கலையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினார்கள். கலை ஒரு கருவியாகப் பயன்பட வேண்டுமே தவிர கலை ஒரு வியைட்டாகப் பயன்படக் கூடாது என்று கருதியவர். ஒரு திரைப்படத்தை ஒருவர் 3 மணிநேரம் பார்த்தால் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.

இங்கு பிரளயன் அவர்கள் நடத்திய அரைமணி நேர வீதி நாடகத்தைப் பார்த்தோம். உடனே அதிலிருந்து பாடத்தோடு வெளியே போகிறோம். அற்புதமான செய்தியை மனதிற்குள் வாங்கிக் கொள்கிறோம்.

கலைத்துறையில் எதிர்நீச்சல்

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுடைய நாடகத்தைப் பார்த்து மாறாவதர்களே கிடையாது. அஸ்திவாரத்தை ஆட்டி விடுவார். எதிர் நீச்சல் அடித்து கலைத்துறையிலே வாழ்ந்தவர்.

எப்படித் தந்தை பெரியார் அவர்கள் எதிர்நீச்சல் அடித்த வரோ, அதேபோல பெரியாருடைய கொள்கைகளை நாடகத் தில் நடித்து எதிர்நீச்சல் அடித்தவர். அதுமட்டுமல்ல, எல்லா வற்றிலும் அவர் வரலாறு படைத்தவர்.

நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் நாடகம்

அவருக்கு எதிர் துறையிலே யார் நாடகம் நடத்திக் கொண் டிருந்தார்கள் என்று சொன்னால் நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம். அவருடைய பெருமை எல்லாம் என்னவென்றால் ஏகப்பட்ட காட்சி ஜோடனைகள், சீன்கள் எல்லாம் மிகப் பெரிய அளவுக்கு இருக்கும். உடனே மக்கள் அதைப் பார்த்து பிரமிக்க வேண்டும். அசர வேண்டும் என்று கருதி அவர் புராண நாடகங்களைத்தான் போடுவார். அவர் மறந்தும் சமூக நாடகங்கள் போட மாட்டேன் என்று புராண நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்தவர். நடிகவேள் ராதா அவர்கள் நேர் மாறான கொள்கை உடையவர்.

சமூக நாடகம்தான் போடுவார்

நான் எதுவும் புராண நாடகம் போடமாட்டேன். சமூக நாடகம்தான் போடுவேன் என்று செயல்படுபவர் நடிகவேள் ராதா. இதுவரையில் நாடகத்தில் புரட்சி, நாடகத்தில் புரட்சி என்று சொல்லுகிறார்கள். வசனத்தில் மட்டும் அல்ல, நாடக அமைப்பிலும் புரட்சி செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள்.

இங்கே எப்படி, ஒரே ஒரு திரையைக் கட்டி ஒரு அரை மணிநேர நாடகத்தை மிகச் சிறப்பாக நடத்திக் காட்ட முடியும் என்ற ஒரு நிலையை இன்றைக்கு வீதி நாடகத்தில் பார்க் கின்றோம்.

எதிர்ப்புகள் – மறக்கமுடியாத ஒன்று

ராதா நாடகத்தில் இரண்டே இரண்டு திரை இருக்கும் அவ்வளவுதான். முதலில் ஒரு பச்சைக் கலர் படுதாவை எடுத்து விடுவார். அந்த ஸ்கிரினிலேயே காடு, அரண்மனை எல்லாம் இருக்கும். தனித்தனி சீன்கள் எல்லாம் அவருக்குத் தேவையில்லை.

விழுப்புரத்தில் பெரிய கலவரம்

ராதா அவர்கள் எதிர்ப்புகளை சந்தித்த விதம் இருக்கிறதே அது மறக்கமுடியாத ஒன்றாகும். எழுத்தாளர் பாமரன் அவர்கள் பேசும்பொழுது சொன்ன மாதிரி அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான் அதுவும் விழுப்புரத்திலே பெரிய கலவரம் எல்லாம் நடந்தது. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு அவர் நடத்துகின்ற நாடகத்திற்கு காங்கிரஸ்காரர்கள் தடை வாங்குவார்கள். அந்தத் தடை நீக்குவதற்கு அவர் உயர்நீதி மன்றம் போவார். அங்கே அவர் வழக்கறிஞரை வைத்திருப்பார். உடனே அந்தத் தடையை நீக்கி உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து ராதா அவர்கள் நாடகம் நடத்துவார்.

எம்.கே. நம்பியார்தான் வழக்கறிஞர்

காவல்துறை நடிகவேள் ராதா நாடகத்திற்குத் தடை போடும். இந்த ஊரில் தூக்குமேடை நாடகம் நடத்தத் தடை – அனுமதியில்லை என்று தடை போடுவார்கள்.

இன்றைக்கு டில்லி உச்சநீதிமன்றத்திலே பிரபலமாக இருக்கக் கூடிய வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களுடைய தந்தையார் எம்.கே. நம்பியார் என்பவர். சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரேயுள்ள சாலை ஓரத்தில் உள்ள வீட்டில் தான் குடியிருந்தார். அவர்தான் அந்த காலத்திலேயே பிரபலமான வழக்கறிஞர். ராதா அவர்கள் நம்பியாரிடத்திலே சொல்லுவார். அவர் இவருக்கு நிரந்தர வழக்கறிஞர் மாதிரியானவர். உடனே நாடகத்திற்குப் போடப்பட்ட தடையை நீக்கி ஒரு உத்தரவை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.

தூக்கு மேடைக்குத் தடையா? மலாயா கணபதி

அதுவரைக்கும் நாடகம் நடத்தாமல் இருக்கமாட்டார். தூக்குமேடை நாடகத்திற்கு இன்றைக்கு அனுமதி இல்லை என்று சொன்னவுடனே அன்று மாலையே மலாயா கணபதி என்ற நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார்.

அந்த நாடகத்தைப் பார்த்தால் தூக்குமேடை நாடகம் என்னவோ அதேதான் இருக்கும் ஆரம்பத்தில். சரி மலாயா கணபதி நாடகத்திற்குத் தடை என்று சொன்னால் இன்னொரு பெயரைச் சொல்லுவார்.

தந்தை பெரியார் தலைமையில் நாடகம்

ஒரு ஊரில் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே நாடகத்தைப் போட்டிருக்கிறார் ராதா அவர்கள். ராதா அவர்களுடைய சமயோசித சிந்தனை என்பது பட்டென்று வரும்.

அய்யா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். உங்களுக்குத் தெரியும். ஒரு நான்கைந்து சீன்கள் முடிந்தவுடனே பாராட்டிப் பேசுவார்கள். அல்லது நாடக இடைவேளையின் பொழுது பாராட்டிப் பேசுவார்கள்.

ஏ ராதா!

பாதி நாடகம் முடிந்தவுடனே இடைவேளை நேரத்தில், இப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பேசுவார் என்று ராதா அவர்கள் அறிவித்தார். நாடகம் பார்க்க வந்த காங்கிரஸ்காரர்கள் இரண்டுபேர்கள் திடீரென்று எழுந்திருந்து ஏ ராதா! ரொம்ப ஒருமையிலே – உன் நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே யாருடைய பேச்சையும் கேட்பதற்காக நாங்கள் வரவில்லை. நாடகத்தை தொடர்ந்து நடத்து என்று சொன்னார்கள்.

ஒரே பரபரப்பு

உடனே ஒரே பரபரப்பு. ராதா வருகிறார். ஒலிபெருக்கியை வாங்குகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். நேருக்கு நேர் பேசுவார் – துணிச்சலாக என்ன சொல்றீங்க என்று கேட்டார். இல்லை. உங்களுடைய நாடகத்தைப் பார்ப்பதற்குத்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கின்றோம். இங்கே இவருடைய பேச்சை கேட்பதற்காக நாங்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு வரவில்லை என்று சொன்னார்கள்.

நாடகம் முடிந்து போய்விட்டது

அப்படியா? நாடகம் முடிந்துபோய்விட்டது (சிரிப்பு – கைதட்டல்). போகிறவர்கள் போகலாம். இருக்கிறவர்கள் என்றால் அவருடைய பேச்சுக்களை கேட்கலாம். அவ்வளவுதான் என்று எம்.ஆர். ராதா அவர்கள் சொன்னார். டிக்கெட் வாங்கி னீர்கள் அல்லவா? நாடகத்தைப் பார்த்து முடித்து விட்டீர்கள். நாடகம் முடிந்து போய்விட்டது. நீங்கள் போகலாம் என்று ராதா சொன்னார். அப்புறம் மக்கள் என்ன செய்வார்கள்? எல்லோரும் உட்கார்ந்தார்கள். அய்யா அவர்கள் பேசிய பின்பு அதற்கு பிறகு நாடகம் தொடர்ந்து நடந்தது.

சமயோசித புத்தி

இது மாதிரி சமயோசிதமான அவருடைய துணிச்சல் இருக்கிறது பாருங்கள். அது பாராட்டுக்குரியது. அவருடைய நாடகங்களில் சில நேரங்களில் கடுமையான வசனத்தைக் கூட சொல்லுவார். ஒருமுறை நடிகவேள் ராதா அவர்களுடைய நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் அய்.சி.எஸ். உயர் நீதிமன்ற நீதிபதி. ராதா அவர்களுடைய நாடகங்களை நேரடியாக வந்து பல நேரங்களில் பாராட்டியவர்.

ராதா நாடகத்திற்கு ஏ.எஸ்.பி. அய்யர் தலைமை

ஏ.எஸ்.பி. அய்யர் நாடகத்திற்கு தலைமை தாங்கியிருக்கின் றார். இரத்தக் கண்ணீர் நாடகத்தில் ராதா அவர்கள் நிறைய நேரம் உட்கார்ந்து வசனம் பேசக்கூடிய வாய்ப்பு வரும். அப்படி பேசக் கூடிய நேரத்திலே கேள்வி கேட்டு பதில் சொல்லக்கூடிய நிலை வரும். ஒரு பேப்பரை கையில் வைத்துக் கொண்டு அன்றாட நிகழ்ச்சி கேள்விகளுக்குப் பதில் சொல்லுவார். தன்னுடைய கருத்துகளை சொல்லுவதற்கு வசதியாக வைத்துவிடுவார்.

ஒருவர் கேள்வி கேட்பார். ராதா பதில் சொல்லுவார். திரைப் படத்தைபற்றி ராதா சொல்லுவார். யாருடா? இவர்கள் என்று வேலைக்காரரைப் பார்த்து ராதா கேட்பார். புது டைரக்டர்கள் எல்லாம் இப்பொழுது படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்று வேலைக்காரர் சொல்லுவார். உடனே ராதா சொல்லுவார் நானும் ஒரு காலத்தில் படம் எடுத்தவன்தான்டா, நானும் ரொம்ப சிறப்பாக இருந்தவன்தான் என்று சொல்லுவார். நானும் நடிக்கிறவன்தான்டா, இப்பொழுதும் நடிக்கிறவன்தான்டா, நானும் படம் எடுப்பேன் என்று ராதா சொல்லுவார். அந்த வேலைக்காரர் சொல்லுவார். நீங்கள் நடித்தால் எவன் பார்ப்பான் என்று கேட்பார். அதற்கு ராதா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்.

பார்ப்பான் – பார்ப்பான்

எவன் பார்ப்பான்? என்று வேலைக்காரர் கேட்பார். பார்ப்பான் பார்ப்பான் என்று நடிகவேள் ராதா பதில் சொன்னார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு) . பார்ப்பான் பார்ப்பான் என்று சொன்னார். ஏ.எஸ்.பி. அய்யர் அந்த மேடையில் இருக்கின்றார். இது மாதிரி சமயோசிதமாக பதில் சொல்லக்கூடியவர் நடிகவேள் ராதா. (சிரிப்பு கைதட்டல்) ஜனவரி 31-ஆம் தேதி தி.மு.க. கலைக்கப் படுகிறது. எங்களையெல்லாம் கமிசனர் அலுவலகத்தில் கைது செய்து ஒவ்வொருவராகக் கொண்டு வருகின்றார்கள்.

நடிகவேள் ராதா அவர்களையும் நள்ளிரவைத் தாண்டி இரண்டு மணியளவில் கைது பண்ணிக் கொண்டு வந்தார்கள். இங்கே பேசிய பாமரன் அவர்கள்கூட அதை எடுத்துச் சொன்னார்.

யார் இந்த அய்.ஜி.?

எல்லோரையும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல அழைத்து வந்தார்கள் கமிசனர் அலுவலகத்திற்கு. போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் இருக்கின்ற படங்களை எல்லாம் பார்த் துக் கொண்டு வந்தார். இது யார்? என்று கேட்டுக் கொண்டே வந்தார். இவர் அந்த அய்.ஜி., இந்த அய்.ஜி. என்று சொன்னார்.

ஆமாம் தாடி வைத்திருக்கிறாரே இவர் எப்பொழுது அய்.ஜி ஆனார் என்று கேட்டார். திருவள்ளுவர் படம் மாட்டப்பட் டிருக்கின்றது. அதைத்தான் ராதா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். பிறகு எங்களையெல்லாம் சிறைச்சாலைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு அவரிடம் பேசிக் கொண்டி ருப்போம். பழைய சம்பவங்களை எல்லாம் சொல்லுவார்.

மிசா கைதிகளுக்கு
எங்களைப் பார்க்க நேர்காணல் என்ற முறையில் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். சிறையில் இருந்த சில பேரிடம் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் உங்களை விடுதலை செய்வது பற்றி யோசிப்போம் மிசாவில் கைதியாக வந்த நீங்கள் திரும்பவும் எப்பொழுது வெளியே போவீர்கள் என்று சொல்ல முடியாது. எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் உங்களை வைத்திருக்கலாம். இப்படியே உங்களுடைய வாழ்க்கை முடிந்து போனாலும் முடிந்து போய்விடும். ஆயுள் கைதிகள் கூட எப்பொழுது வெளியே போகப் போகிறார் என்ற ஒரு கால

நிர்ணயம் உண்டு.

மிசாவில் அப்படி எல்லாம் கிடையாது. நாளைக்கே வெளியே விட்டாலும் விடுவார்கள். அல்லது எத்தனையோ ஆண்டுகள் கழித்து 40 ஆண்டுகள் கழித்து நீங்கள் போகக் கூடிய நிலை இருந் தாலும் இருக்கும். இதில் காலவரையறை எல்லாம் கிடையாது. சட்டப்படி அதற்கு இடம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ராதாவை அவருடைய துணைவியார் சந்தித்தார்

ஒன்றிரண்டு பேர் இப்படி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத் துப் போனவர்களும் உண்டு. ஏனென்றால் சிறைக்குள் பலகீன மாகக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அப்படியிருக்கும்பொழுது நேர்காணல் வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை குடும்பத்தினர் வந்து சந்திப்பார்கள். ராதா அவர்களை அவருடைய துணைவியார் வந்து சந்தித்தார்.

ராதா அவர்களுக்கு ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்திருப்பார்கள். பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு அவருடைய வீட்டாரை உட்கார வைத்திருந்தார்கள். இவர்களுக்குப் பக்கத்தில் ஒரு ஜெயில் அதிகாரி இருப்பார். இவர்கள் பேசுவதை குறிப்பெடுப்பதற்கு அங்கே சுருக்கெழுத்தாளர் ஒருவர் இருப்பார். அங்கே ஒன்றும் ரகசியமாக பேச முடியாது.

இவர்கள் இல்லாமல் மூன்றாவது ஒருவர் திரைக்கு பின்னாலே வந்து உட்கார்ந்திருப்பார். இதுதான் மிசாவில் நேர்காணலில் இருந்த முறை. அப்படி இருந்துகொண்டிருக்கின்ற பொழுது ராதா அவர்களுக்கு நேர்காணலின் அழைப்பு வந்தது. ராதா அவர்களும் வந்து உட்கார்ந்தார். ராதா அவர்களுடைய துணைவியார் தனலெட்சுமி அவர்கள் வந்தார்கள். அவர்கள் அருகில் அதிகாரிகள் இருந்தார்கள்.

வெகுளியாக கேள்விகேட்டார்

அவர்கள் அப்பாவி – வெகுளியாக இருக்கக் கூடியவர்கள். ஏங்க எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டார். நான் என்ன பண்றது? விட்டால் வரப்போகிறேன். நானாகவா வந்து இங்கு உட்கார்ந்திருக்கிறேன் என்றார். எப்பொழுது விடுகிறானோ அப்பொழுது வருவேன் என்று சொன்னார். உடனே ராதா அவர்களின் துணைவியார் சொன்னார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தபொழுது சொன்னார் கள். வெள்ளை பேப்பர் கொடுக்கிறார்களாம். அதை வாங்கி நீங்கள் அவர்கள் சொல்லுகிறபடி இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து வந்து விடலாமே என்று கேட்டாராம். எங்களுக்கு அந்தப் பக்கம் இண்டர்வியூ. ராதா கேட்டார் என்னான்னு எழுதி கொடுக்கச் சொல்லுகிறாய் என்று.

அதிகாரிக்குச் சிரிப்பு தாங்கமுடியவில்லை

அதிகாரிகள் இவர் சொல்லுவதை எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள். இனிமேல் அந்த மாதிரி செய்யமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வாருங்கள் என்று அந்த அம்மையார் வெகுளித்தனமாக சொன்னார்.
இதோபார் நான் என்ன பண்ணினேன் – இங்கு என்னை அழைத்துக் கொண்டு வருவதற்கு முன்பு – தூங்கி கொண்டிருந் தேன் (சிரிப்பு – கைதட்டல்). இனிமேல் நான் தூங்கமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வரச் சொல்லுகிறாயா என்று கேட்டவுடன் எழுதிக் கொண்டிருந்த சி.அய்.டி. இன்ஸ்பெக்டர் பேனாவை கீழே வைத்து விட்டு அவரும் சிரிக்கிறார். சிறை அதிகாரிகளும் சிரிக்கின்றார்கள்.

கூச்ச, நாச்சம்

அதாவது இயல்பாக கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் யோசனையே இல்லாமல் இயல்பாக பேசினார் ராதா. எதற்கு சிறைக்கு வந்தோம் என்பது எங்களுக்குத் தெரியாது. எதற்கு அழைத்து வந்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. கூட்டிவரச் சொன்னார்கள். இவர்கள் கூட்டி வந்து விட்டார்கள் என்று அவ்வளவு நகைச்சுவையாக ராதா அவர்கள் பதில் சொன்னார்.

இந்தியாவிலேயே ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது நடிகவேள் ராதாவுக்காகவே!

சென்னை சங்கமம் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, ஜன. 26- இந்தியாவிலே நடிகருக்காகவே ஒரு சட்டத்தை இயற்றியது. ஒரு நடிகரைக் கண்டு அரசாங்கம் பயந்தது ராதாவுக்காகத்தான் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை சங்கமம் சார்பில் 14-1-2008 அன்று சென்னை – அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இவ்வளவு நிலைகளிலும் எதிர் நீச்சல் அடித்து கலைத் துறையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்து, கொஞ்சம்கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ராதா அவர்களிடம் சிறந்த மனிதநேயம் இருந்தது.

நடிகவேள் ராதா மனித நேயக்காரர்

நடிகவேள் ராதா அவர்களிடத்திலே இருந்த மனிதநேயம் வேறு யாருக்கும் வராது. அவர் முரட்டுச் சுபாவம் உள்ளவ ராகவும், எதிர் நீச்சல் அடிப்பவராகவும், ரொம்பப் பிடிவாதக் கொள்கைக்காரராகவும் இருந்ததெல்லாம் ஒரு அம்சம்.

ஆனால் அவர் யார் யாருக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை விளம்பரமே படுத்திக் கொள்ளாத ஒரு மாமேதையாக, ஒரு வள்ளலாக ராதா அவர்கள் திகழ்ந்தார்கள் (கைதட்டல்). ராதா அவர்களிடம் உதவியைப் பெற்றவர்கள் பல துறையிலே இருக்கிறார்கள்.

கலைஞர்களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, நடிகர் களாக இருக்கக் கூடியவர்களில் இருந்து, மற்ற பொதுமக்கள் பொது ஸ்தாபனத்திலே இருந்து எல்லோருமே அவரிடம் உதவியைப் பெற்றிருக்கின்றார்கள்.

எனது கல்விக்கு உதவி செய்திருக்கின்றார்

என்னுடைய வாழ்க்கையிலே கூட, அவருடைய உதவி என்பது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு என்றைக்கும் நன்றியோடு நான் நினைக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது. நான் கல்லூரி வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என்பதற் காக என்னுடைய நண்பர்கள் முயற்சி செய்த பொழுது, கடலூ ருக்கே வந்து நாடகம் போட்டு அதன்மூலமாக எனக்கு உதவியை செய்தார்கள் (கைதட்டல்). எல்லோருக்கும் அத்தகைய உதவியை செய்வார்.

என்னுடைய மணவிழாவை தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னாலே திருச்சியிலே நடத்தினார்கள்.

அய்யா அவர்கள், அந்த நிகழ்ச்சியிலே பேசும்பொழுது சொன்னார். கவிஞர் நந்தலாலா அவர்கள் சொன்னமாதிரி, ராதா அவர்களுக்கு ஒரு தனித்த சிந்தனை இருக்கும்.

பொது அறிவிலே தனி முத்திரை

பொது அறிவு, பட்டறிவு அவருடைய முத்திரை அதிலே இருக்கும். என்னுடைய மணவிழாவிலே பேசும்பொழுது அய்யா அவர்கள் சொன்னார்கள்: வீரமணிக்கும் அவருடைய வாழ் விணையர் மோகனா அவர்களுக்கும் திருமணத்தை எல்லாம் நடத்தியிருக்கின்றோம். இங்கே தோழர்கள் ஏராளமாக வந்தி ருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மாநாடு மாதிரி நடைபெறுகிறது.
அய்யா பேசிய குறிப்புகள் இன்னமும் இருக்கின்றன. ஒலி நாடாவில் இருக்கிறது. நான் எப்பொழுதுமே சிக்கனக் காரன். ரொம்ப சுருக்கமாக, சிக்கனமாக நடக்கவேண்டும் என்று நினைக்கின்றவன்.

50 ஆண்டுகளுக்கு முன் என் மணவிழா

ஆனால், இங்கு ஏராளமான தோழர்கள் வந்துவிட்டார்கள். நிறையபேர் வந்துவிட்டர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னாலே சொல்லுகின்றார். நிறையபேர் வந்துவிட்டார்கள். அதனால் நான் ரொம்பத் தாராளமாகவே நடத்திவிட்டேன். நான் நினைத்ததற்கு மேலே இது பெரிதாக நடந்துவிட்டது என்று சொன்னார். வாழ்த்துரையில் ஒவ்வொருவராகப் பேசும்பொழுது நடிகவேள் ராதா அடுத்து பேசினார். இதுமாதிரி அய்யா அவர்கள் சொன்னார். இந்தத் திருமணத்தை ரொம்பத் தாராளமாக நடத்திவிட்டேன் என்று சொன்னார்.

நான்கூட யோசனை பண்ணினேன். என்ன இவ்வளவு தாராள மாக அய்யா அவர்கள் நடத்திவிட்டாரா? அல்லது பெரிய விருந்து போட்டு விட்டாரா? அல்லது தாராளமாக செலவு செய்து விட்டாரா? என்று பார்த்தேன். அதெல்லாம் ஒன்றுமில்லை.

அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது

ஆனால், அய்யா அவர்கள் தாராளம் என்று சொன்னது என்ன? என்று நினைத்துப் பார்த்தேன். அவர் தாராளம் என்று சொன்னதை ஏதோ ரூபாயைப் பற்றி அல்ல. இதற்கு முன்னாலே சுயமரியாதைத் திருமணம் என்று சொன்னால். அந்தத் திரு மணத்திற்குப் பெரியார் தலைமை தாங்கி நடத்துகிறார்கள் என்றால் பெண்ணைக் கொண்டுபோய் ஒளித்து வைத்து விடுவார்கள்.

அதே மாதிரி மாப்பிள்ளை இன்னொரு பக்கம் காணாமல் போவார். கடைசி நேரத்தில்தான் இரண்டு பேரையும் கொண்டு வந்து மேடையிலே நிறுத்தி திருமணம் நடத்தி வைப்பார்கள். இல்லையென்றால் பெண் காணாமல் போய்விடும். ஆள்கள் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

திருமணத்திலே கலவரம் வரும். அது எல்லாம் இல்லாமல் இன்றைக்கு இவ்வளவு பேரை அழைத்து இந்த மணவிழாவை நடத்தி வைத்திருப்பது இந்த கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது பாருங்கள். அதைத்தான் அவர் தாராளம் என்று சொல்லியி ருக்கின்றார்.

பெண், மாப்பிள்ளையை ரொம்பபேர் வந்து பாராட்டியி ருக்கிறீர்கள். மாநாடு போல பாராட்டியிருக்கிறீர்கள். அதைத் தான் அய்யா அவர்கள் தாராளம் என்று சொல்லியிருக்கின்றார் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னாலே ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள்.

தனித்த சிந்தனைவாதி

இதை எதற்காகச் சொல்லுகிறேன் என்று சொன்னால் அவருடைய சிந்தனை என்பது தனித்த சிந்தனை. அதோடு ஆழமான சிந்தனை உள்ளவர். மனித நேயத்தோடு கூடிய சிந்தனை. எல்லோருக்கும் உதவி செய்வார். அதைப் பெரிதாக விளம் பரப்படுத்தமாட்டார்.

சிங்கப்பூரில் ராதா சொன்னார்

ராதா அவர்கள் மலேசியாவில் பேசியிருக்கின்றார். சிங்கப் பூரில் பேசியிருக்கின்றார். சிங்கப்பூரில் ராதா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்.

நீங்கள் நிறையபேர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல நடிகர்களின் கருத்து என்ன என்று கேளுங்கள். கைதட்டுங்கள். பாராட்டுங்கள். அதோடு எழுந்திருந்து போங்கள். அதற்கு மேலே எங்களிடம் ஏதோ தனித்தன்மையான தன்மை இருக்கிறது என்று நினைத்து நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

நாங்களும் சாதாரண மனிதர்கள்

நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். நடிர்களும் சாதா ரணமான மனிதர்கள்தான் என்ற சிந்தனையோடு சென்றால் சரி. அதற்கு மாறாக நினைக்கும் பொழுது தான், கோளாறு வருகிறது. இவ்வளவு பச்சையாக நடிகர்களைப் பற்றி அல்லது நடிகர் களுடைய துறையைப்பற்றி சொன்னார்.
ஒரு எதார்த்தவாதியாக இருந்தார். அவர்கள் உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருந்தார்.

நாடகத்தில் அவர் கண்ட எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ராதா அவர்களுடைய நூற்றாண்டு விழாவைப் பல இடங்களில் இன்றைக்கு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
திரைப்படங்களிலே அவருடைய உரையாடல் அனைவ ருக்கும் தெரிந்தது. ஆனால் அவர் நாடகத் துறையில் கொள் கையைப் பரப்பிய துணிச்சல் அவர் எதிர்ப்புகளை சமாளித்த விதம் சாதாரணமானதல்ல.

யாராவது அவரை அவருடைய நாடகத்தை எதிர்த்து கூச்சல் போட்டால், அவர் எந்த வேசம் போட்டாலும் நேரடியாகப் பதில் சொல்லுவார்.

யாருடா அவன் – திரவுபதிக்கு பிறந்தவன்?

யாருடா அவன், திரவுபதிக்குப் பிறந்த பயல்? என்று கேள்வி கேட்பார் (பலத்த கைதட்டல் – சிரிப்பு). ராதா அகராதி என்கிற ஒரு தனி அகராதி போடலாம். இதுவரையிலே தமிழ் நாட்டிலே ஒரு நடிகருக்காக ஒரு தனிச் சட்டம் வந்ததே நடிகவேள் ராதா அவர்களுக்காகத்தான் வந்தது – நாடகத் தடை சட்டம் (கைதட்டல்). ராதா அவர்கள் ராமாயணம் நாடகம் போட்டார்.

இராமாயணத்தில் உள்ளபடி

அந்த நாடகம் ஆரம்பிக்கும் பொழுதே இந்த நாடகம் வால்மீகி ராமாயணத்தில் இன்னின்ன ஆதாரங்களை வைத்து எழுதப்பட்ட பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நிகழ்வுகள் ஆகும். எனவே இந்த நிகழ்வுகளைத்தான் இப்படிச் செய்கிறோம். ராமனை இப்படிக் காட்டுகிறோம் என்று சொன்னால், இது எங்களுடைய கற்பனை இல்லை என்றெல் லாம், தெளிவான அறிவிப்பைக் கொடுத்து, யாராவது மனம் புண்படுகிறது என்று நினைத்தால், என் நாடகத்தைப் பார்க்க வராதே. ஆகவே இது ஆதாரப்பூர்வமான செய்திகளே தவிர இது கற்பனை அல்ல. ஆதாரங்களை உள்ளபடியே காட்டுகின்றோம் என்று சொன்னார்.

நடிகருக்காகவே ஒரு சட்டம்

அப்பொழுதுதான் தமிழக சட்ட அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள் நாடக தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே ஒரு நடிகருக்காக ஒரு சட்டம் கொண்டு வந்ததே- நடிகவேளைக் கண்டு ஒரு அரசு பயந்ததே நடிகவேள் ராதா அவர்களைக் கண்டுதான் (பலத்த கைதட்டல்).
தந்தை பெரியார் அவர்களைக் கண்டு மற்றவர்கள் எப்படி அஞ்சினார்களோ அதுபோல பயந்தார்கள். எனவே நடிகவேள் நடிப்பால் உயர்ந்தவர். பண்பால் உயர்ந்தவர். மனித நேயத்தால் சிறந்தவர்.

பெரியாருக்கு அடங்கியவர்

எதிர்ப்பு என்று சொன்னால் அதற்கு இன்னும் ஒரு படி அதிகமாகச் செல்லக் கூடியவர். இவ்வளவு சிறப்பானவர். யாருக்குமே அடங்காதவர். அவர் தந்தை பெரியார் அவர் களுடைய கட்டுப்பாட்டிற்குள்ளே மிகவும் அடங்கியவர்கள். அய்யா அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ, அதற்கு உடனே கட்டுப்படுவார்.

திராவிடர் கழக உறுப்பினராக அவர் இல்லை

ஒருவர் ராதா அவர்களிடம் கேள்வி கேட்டார். நீங்கள் இவ்வளவு பெரிய பெரியார் பக்தனாக இருக்கின்றீர்களே நீங்கள் ஏன் திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவில்லை? என்று கேட்டார். நீங்கள் கருப்புச் சட்டை போடுகிறீர்கள். ஊர்வலத்தில் குதிரைமீது அமர்ந்து வருகின்றீர்கள். பெரியார் கொள்கையைத் தான் பிரச்சாரம் செய்கின்றீர்கள்.

ஆனால், திராவிடர் கழகத்தில் ஏன் உறுப்பினராக ஆக வில்லை? என்று கேள்வி கேட்டவுடனே, அதற்கு ராதா அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்.

கட்டுப்பாடுள்ள இயக்கம்

அவர் ரொம்ப நாணயமாகப் பதில் சொன்னார். நான் பெரியார் பக்தன். பெரியார் தொண்டன். பெரியார் கொள்கையை விரும்புகிறவன். பிரச்சாரம் செய்கின்றவன். திராவிடர் கழகத்தில் நானெல்லாம் உறுப்பினராக இருக்க முடியாது.. திராவிடர் கழகத்தில் சில கட்டுப்பாடுகள், சில நியதிகள் எல்லாம் உண்டு. சில கடும் பத்தியங்கள் எல்லாம் உண்டு. அவைகளை கடைப் பிடித்தால்தான் உறுப்பினராக இருக்கமுடியும்.

நான் அந்த மாதிரி இயக்கத்தில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்காகத்தான் பெரியார் பற்றாளனாக இருக்கின்றேன் என்று உண்மையை அப்பட்டமாகச் சொன்ன மிகப் பெரிய ஒரு இலட்சியவாதி.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார்

எனவே இலட்சியங்கள் அவருடைய சொத்துக்கள். அவருடைய ஆற்றல் என்பது வரலாற்றை உருவாக்கக் கூடியது. வரலாற்றில் இடம் பெறுவதல்ல. வரலாற்றையே உருவாக்கக் கூடியது.
அந்த வகையிலே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராதா வாழ்கிறார். காலத்தை வென்ற புரட்சியாளர் என்ற பெருமையோடு வாழ்ந்தார் என்று சொல்லி அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்த சென்னை சங்கமத்தையும் தமிழ் மய்யத்தையும், தமிழ் இயல் இசை நாடக மன்றத் துறையையும் அனைவரையும் பாராட்டி அமைகிறேன்.

Posted in 100, Chennai, Dramas, EVR, MR Radha, MRR, Nadigavel, Nadikavel, Performances, Periyar, Pralayan, Radha, Sangamam, Stage, Street, Theater, Veeramani, Viduthalai, Vituthalai | Leave a Comment »

Road Accidents & Traffic Deaths – Travel Safety issues

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

சவால்விடுக்கும் சாலை விபத்துகள்!

சா. ஜெயப்பிரகாஷ்

உலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.

2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.

முடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.

தமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.

அரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.

“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.

விபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.

“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.

சாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்!

Posted in Accidents, Auto, Automotive, Bus, car, Chennai, Construction, CoP, dead, deaths, deduction, Fast, Helmet, Highway, infrastructure, Injured, Injury, Insurance, Kill, Law, Limb, Madras, Metro, Obey, Order, passenger, Police, Policy, Premium, Reimbursement, Rikshaw, Road, rules, Safe, Safety, Speed, Street, Traffic, Travel | Leave a Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »

Statue Politics, idol Worship, Religious Followers: Op-ed

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

தமிழரின் சிலை மோகம்

க.ப. அறவாணன்

தமிழர்கள் பலவற்றில் மோகிகளாக உள்ளனர். திரைப்படப் பைத்தியம், கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்தல், வெற்றிலை போடுதல், சுவரொட்டி ஒட்டுதல், லாட்டரிச்சீட்டு வாங்குதல், அயல்நாட்டுப் பொருள்களில் ஆர்வம், திரை நடிகர், அரசியல் தலைவர்களைக் கிட்டத்தட்ட தெய்வமாக வணங்குதல், பல கட்சிக் கொடியேற்றுதல் இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மேற்கண்ட பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய இன்னொரு மோகம் சிலை வைக்கும் வேகம். சிலை வைத்தல் என்பதன் பன்முக விரிவாக்கமே கட் – அவுட் படம் வைத்தல், சுவர்ப்படம் வரைதல் முதலான இன்ன பிற. இவை காளான் போலத் தோன்றிக் காட்சி தந்து சில நாளில் அழிபவை. ஆனால் சிலை வைப்போ, குறைந்த அளவு அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரை கவனிக்கப்படுபவை.

எனவே, சிலை வைப்பின் நோக்கம், பயன், மோகத்திற்கு உரிய காரணங்கள் ஆகியவற்றை ஆராயத் தோன்றியது. சென்னை, புதுவை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களை மையமாக வைத்து ஆராயத் திட்டமிடப் பெற்றது.

இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு சிலையின் வைப்பிடத்திற்கும் சென்று – அரை மணி முதல் ஒரு மணி வரை அங்கே நின்று கூர்ந்து கவனித்து பின்கண்ட விவரங்கள் திரட்டப் பெற்றன:

அரசியல்வாதிகளின் சிலைகளே மிகுதி. சிலைக்கும், கட்சிகளுக்கும், சாதிகளுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன. எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அந்தக் கட்சி தத்தமக்குரிய அரசியல் தலைவர்களுக்குச் சிலை வைக்கிறது.

கொள்கைக்காக வாக்கு, கட்சிக்காக வாக்கு என்ற நிலை மாற்றப்பட்டுச் சாதிக்காக வாக்கு என்று நிலைமை வந்துவிட்டது. எனவே சாதியின் பங்கு முன்னிடம் வகிக்கிறது.

சிலை திறப்பாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியினரே.

அனைத்துச் சிலைகளும் காக்கைக் குருவிகளின் கழிப்பிடங்களாக இருந்து வருகின்றன. ஒரு சில சிலைகள் கவனிக்கப்படுவதற்குக் காரணம் சிலை இருக்கும் இடம் திறந்தவெளியா, கூரையா என்பதைப் பொருத்தும், பிறந்தநாள் வருவதைப் பொருத்தும் பராமரிப்பு அமையும். சிலையைப் பார்ப்போர், பீடத்தைப் படிப்போர் பொதுவாகக் குறைவு. நூற்றுக்கணக்கில் மக்கள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றாலும் சிலையால் மக்கள் பாதிப்புறுதல் பெரிய அளவில் இல்லை.

இன்றைய சூழலில் தமிழரிடையே சிலை வைப்பிற்குத் தலைமை மூலாதாரங்களாகத் தெரிவன:

அரசியல் / கட்சி காரணங்களுக்காக ஏற்படும் போட்டியும், பொறாமையும்.

கணிசமாக வாக்கு வங்கிகளை உடைய சாதிகள் காரணம். ஊரில், நகரில், சுற்றுப்புறங்களில் வட்ட மாவட்டங்களில் தத்தம் கட்சி, சாதி ஆகியவற்றை முன்னிறுத்திக் குழு சேர்த்துக் கொள்ளவும், எதிர்க்கட்சி / மாற்றுச் சாதியினரிடமிருந்து விலகி ஒன்றுபட்ட உணர்வைக் கூட்டிக் கொள்ளவும், தம்மை எதிர்க்கட்சி – சாதியினரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிலை வைப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கூட்டமாக, கூட்டத்துள் ஒருவராக – கூட்டுக்குள் ஒருவராக இருக்க விரும்புவது மக்கள் இயல்பு. எனவே, சாதிக் கூட்டும் முதன்மையானது, மதக்கூட்டு மேலும் விரிந்தது. கட்சிக்கூட்டு – ஒருவனை எளிதே பிணைத்துக் கொள்கிறது. இதில் எது எளிதோ அது முன்னிலை வகிக்கிறது. சாதியே கட்சி, கட்சியே சாதி என்ற நிலையும் தோன்றுவதுண்டு. இந்த நிலை மாற்றங்களைச் சிலை வைப்பதிலும் காணலாம்.

சிலை வைக்கும் மோகம், தமிழரை எப்படிப் பற்றிக் கொண்டது?

பொதுத் தொண்டுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், தன்னுயிரை இழக்கும் மறவனுக்கு நடுகல் எடுப்பதும் நடுகல்லில் மறவனின் பெயரையும் – அவன் செய்த அரிய செயலையும் பொறிப்பதும் வழக்கமாக இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்தம் வரவிற்குப் பிறகு பழைய தமிழர்தம் பழக்கம் புதுவேகம் பெற்றது.

உலகில் இஸ்லாம் மட்டுமே சிலை வைப்பையும், உருவ வணக்கத்தையும் ஏற்பதில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல், ஹாலந்து நாட்டினர் – இந்தியாவைப் பங்கிட்டுக் கொண்டபோது – தம் நாட்டவர் சிலையை இந்தியாவிலும் ஆங்காங்கே வைக்கத் தொடங்கினர். 1947இல் ஐரோப்பியர் வெளியேறிய பின், சுதந்திர இந்தியாவிலும் மேற்கண்ட பழக்கம் தொடர்ந்தது.

வெள்ளைக்காரர்களுக்குப் பதிலாக, உள்ளூர் அரசியல்வாதிகளின் சிலைகள் அதிகமாக வைக்கப்ப்பட்டன. காந்தி, நேரு சிலைகள் நாடெங்கும், மூலை முடுக்குகளில் வைக்கப்பட்டன. 1960 வாக்கில், இந்திய அரசியல், மாநிலங்களில் காங்கிரசிடமிருந்து கைமாறத் தொடங்கியது.

கேரளத்தில் தொடங்கிய இம்மாற்றம் 1967-இல் தமிழகத்தில் நிகழ்ந்தது. காந்தி, நேருவிற்கு மாற்றாக, அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலைகள் காணும் இடமெல்லாம் வைக்கப் பெற்றன. அடிப்படைக் காரணம்: அரசியலே என்பது தெளிவு.

அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சாதி வளர்க்கப்பட்ட சூழலில், சிலை வைப்பிற்குப் பின்னணிக் காரணங்களுள் ஒன்றாகச் சாதியும் முன்னிடம் பிடித்துக் கொண்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்).

Posted in Actors, Actress, Caste, Cinema, Community, Desecration, Disciples, Election, Faith, Famous, Films, Flag, Followers, Hate, Idol, Kerala, Leaders, Lunatics, Mad, Movies, narcissism, Neta, Netha, Op-Ed, Party, people, Politics, Recognition, Religion, Star, Statue, Street, Symbol, Vote | Leave a Comment »

Rich vs Poor – Forbes Wealthiest Indians list: Analysis

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

உலகச் செல்வமும், ஏழ்மையும்

ந. ராமசுப்ரமணியன்

உலகமயமாதல், திறந்துவிடப்பட்ட உலகச் சந்தை என்று வந்தபிறகு, உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகின் செல்வ வளமும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, உலகமயமாதல் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று எங்கும் பேசப்படுகிறது. அதேநேரத்தில், உலகமயமாதலால் பெருஞ்செல்வந்தர்கள் உருவாகிறார்கள். ஏழ்மை குறையவில்லை என்றும் பல அறிஞர்களால் கவலையுடன் பேசப்படுகின்றது.

“”உலகமயமாதலால், ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது; ஆகவே உலகமயமாதலே முடிவுக்கு வரக்கூடும்” என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் உலக வங்கித் தலைவரே கூறியது குறிப்பிடத்தக்கது.

வருடாவருடம் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை “போர்ப்ஸ்’ எனும் பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) தற்போதைய உலக பில்லியனர்கள் பட்டியல் 2007 பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வரை தயாரானது. இதன்படி உலகில் 946 பில்லியனர்கள் உள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 178 புதியவர்கள் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

அமெரிக்க “மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் உலகின் முதல் பணக்காரர் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 56 பில்லியன் டாலர் (ரூ. 2.52 லட்சம் கோடிகள்) அமெரிக்காவின் வாரன் பஃபெட் 52 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்தியாவின் லட்சுமி மிட்டல் 32 பில்லியன் (சுமார் ரூ. 1.44 லட்சம் கோடி) சொத்துகளுடன் உலகின் 5-வது பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

ஆசியக் கண்டத்திலேயே, இந்தியாவில்தான் அதிக பில்லியனர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு 22 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 36 பில்லியனர்கள் என்று இந்தியா சிறப்புப் பெற்று, முதல் நிலையிலிருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஜப்பானில் 24 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

இந்திய பில்லியனர்கள் யார் யார், உலக அளவில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.

  • லட்சுமி மிட்டல் 5-வது இடம் 32 பில்ல்லியன்.
  • முகேஷ் அம்பானி 14-வது இடம் 20.1 பில்லியன்.
  • அனில் அம்பானி 18-வது இடம் 18.2 பில்லியன்.
  • அஸிம் பிரேம்ஜி 21-வது இடம் 17.1 பில்லியன்.
  • குஷல்பால் சிங் 62-வது இடம் 10 பில்லியன்.
  • சுனில் மிட்டல் மற்றும் அவரது குடும்பம் 69-வது இடம் 9.5 பில்லியன்.
  • குமார் பிர்லா 86-வது இடம் 8 பில்லியன்.
  • சசி ரூயா & ரவி ரூயா 86-வது இடம் 8 பில்லியன்.
  • ரமேஷ் சந்திரா 114-வது இடம் 6.4 பில்லியன்.
  • பலோன்ஜி மிஸ்த்ரி 137-வது இடம் 5.6 பில்லியன்.
  • ஆதி கோத்ரஜ் குடும்பம் 210-வது இடம் 4.1 பில்லியன்.
  • சிவநாடார் 214-வது இடம் 4 பில்லியன்.
  • திலிப்சாங்வீ 279-வது இடம் 3.1 பில்லியன்.
  • சைரஸ்பூனாவாலா 287-வது இடம் 3 பில்லியன்.
  • இந்து ஜெயின் 287-வது இடம் 3 பில்லியன்.
  • கலாநிதிமாறன் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • கிராந்தி ராவ் 349-வது இடம் 2.6 பில்லியன்.
  • சாவித்திரி ஜிண்டால் மற்றும் அவர் குடும்பம் 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • துளசி தந்தி 390-வது இடம் 2.4 பில்லியன்.
  • சுபாஷ் சந்திரா 407-வது இடம் 2.3 பில்லியன்.
  • உதய் கோடக் 432-வது இடம் 2.2. பில்லியன்.
  • பாபா கல்யாணி 458-வது இடம் 2.1 பில்லியன்.
  • மல்வீந்தர் சிங் & ஷிவிந்தர்சிங் 488-வது இடம் 2 பில்லியன்.
  • நாராணமூர்த்தி 557-வது இடம் 1.8 பில்லியன்.
  • அனுராக் தீக்ஷித் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • வேணுகோபால் தூத் 618-வது இடம் 1.6 பில்லியன்.
  • விஜய் மல்லையா 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • ஜெயப்பிரகாஷ் கவுர் 664-வது இடம் 1.5 பில்லியன்.
  • விகாஸ் ஓபராய் 717-வது இடம் 1.4 பில்லியன்.
  • நந்தன் நிலகனி 754-வது இடம் 1.3 பில்லியன்.
  • எஸ். கோபாலகிருஷ்ணன் 799-வது இடம் 1.2 பில்லியன்.
  • பிரதீப் ஜெயின் 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • கேசுப் மகிந்தரா 840-வது இடம் 1.1 பில்லியன்.
  • ராகுல் பஜாஜ் 840-வது இடம் 1.1 பில்லியன்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சில விஷயங்கள்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பெரிய செல்வந்தர் வணிகக் குடும்பங்களில் குமார் பிர்லா மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ரத்தன் டாடா கூட இப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பரம ஏழையாக இருந்த லட்சுமி மிட்டல் மிகப்பெரிய செல்வந்தராக வந்துள்ளது இவருடைய கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு.

உலகத்தின் சொத்துகள் மதிப்பு சுமார் 125 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 5625 லட்சம் கோடிகள்) (1 டிரில்லியன் என்பது சுமார் ரூ. 45 லட்சம் கோடிகள் ஆகும்) அமெரிக்காவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 31 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ. 1400 லட்சம் கோடிகள்).

இந்தியாவின் தற்போதைய 857 பில்லியன் டாலர் மொத்த உற்பத்தி 2050-ம் ஆண்டு சுமார் 30 டிரில்லியன் டாலர் என உயர்ந்து உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறும் என உலகின் பிரபல நிதி நிறுவனம் “கோல்ட்மேன் சாச்’ கணித்துள்ளது.

இப்படி பல நல்ல விஷயங்கள் இருப்பினும் உலகின் ஏழ்மை நிலை மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகில் ஆறில் ஒருவர் பரம ஏழையாக உள்ளார். சுமார் 110 கோடி மக்கள். உலகின் மிகப்பெரும் பணக்கார நாடான

  • அமெரிக்காவில்கூட 13 சதவீத மக்கள் ஏழைகள்,
  • ஜப்பானில் 15.3 சதவீதம்,
  • இங்கிலாந்து 15 சதவீதம்,
  • பிரான்ஸ் 6 சதவீதம் என்று ஏழை மக்கள் உள்ளனர்.
  • பிரேசிலில் 23 சதவீதம்,
  • ரஷியாவில் 20 சதவீதம்,
  • இந்தியாவில் 22 சதவீதம்,
  • சீனாவில் 8 சதவீதம் என்று ஏழ்மை நிலை உள்ளது. மாத வருமானம் ரூ. 1,350 கூட இல்லாதவர்கள் ஏழைகள் எனக் கருதப்படுகின்றனர். அதாவது ஒரு நாளைக்கு ஒரு டாலர் (சுமார் ரூ. 45) கூட வருமானம் இல்லாதவர்கள்.

உலகின் 1 சதவீதம் மிகப்பெரிய பணக்காரர்கள் உலகின் 40 சதவீத சொத்துகளுக்கு அதிபதிகள். உலகின் 10 சதவீத மக்கள் உலகின் 85 சதவீத சொத்துகளுக்கு உடமையாளர்கள்.

உலகில் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உண்ண உணவின்றி இறந்து போகின்றார்கள் என்று பிரபல டைம் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலகில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் குழந்தைகள் பசிக் கொடுமையால் இறக்கின்றனர் என ஐ.நா. சபை அறிக்கை ஒன்று கூறுகின்றது. உலகில் 50 சதவீதம் மக்கள் மாதத்திற்கு ரூ. 2,700 வருமானம் கூட இல்லாதவர்கள். உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து, ஏழ்மையான 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைக் காட்டிலும் மேலாக உள்ளது.

21-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் 100 கோடி பேருக்கு மேல் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். உலகில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வேலை இல்லை அல்லது பெயருக்குத்தான் வேலை என்று சொல்லும் நிலை.

25 கோடி மக்கள் மாதத்திற்கு ரூ. 1,350 கூட வருமானமில்லாத ஏழைகளைக் கணக்கிட்டு உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளது. 81 சதவீத இந்தியர்களின் மாத வருமானம் ரூ. 2,700க்கும் குறைவே. 36 இந்திய பில்லியனர்கள் இந்தியாவின் 25 சதவீத பொருளாதாரத்தைக் கைக்குள் வைத்துள்ளனர்.

பணக்கார நாடுகள் வருடாவருடம் கூடி, தங்கள் பொருளாதாரத்தில் 0.7 சதவீதம், ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவதோடு சரி. செயலாக்கம்தான் இல்லை.

அதேசமயம் நல்ல காரியங்களுக்காக பெருந்தொகையை நன்கொடையாக வழங்கும் பல செல்வந்தர்களும் இருக்கின்றனர். உலகின் இரண்டாவது பெரும் பணக்கார அமெரிக்கர் வாரன் பட்ஜெட் சமீபத்தில் 43 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1.94 லட்சம் கோடியை) தனது குடும்பத்திற்குத் தராமல் பொது நற்காரியங்களுக்காக நன்கொடையாகத் தந்தது உலகத்தையே அதிசயப்பட வைத்தது. உலகமயமாதலால் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து வருகிறதோ என்ற ஐயப்பாடு வலுத்து வருகிறது.

“”ஏழ்மையே மிகக் கொடுமையான வன்முறையின் வடிவம்” என்ற மகாத்மா காந்தியின் கூற்று மிகவும் பொருத்தமானதே! தற்போதைய உலகில் இதைச் சரிசெய்ய உலகம் என்ன செய்யப் போகிறது?

(கட்டுரையாளர்: கௌரவத் தலைவர் மற்றும் தாளாளர், ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்னை).


மும்பையில் பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுகிறார் முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, மும்பை நகரத்தில் தனது குடும்பத்தினரும், தனது அறுநூறு வேலையாட்களும் தங்குவதற்காக பல மாடிகளை கொண்ட வீட்டினை கட்டுவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில் பல வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதி போன்றவை உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த கட்டிடத்தில் இருந்து அரபிக் கடலின் பரந்து விரிந்த காட்சி தெரியும்.

ஐம்பது வயதான முகேஷ் அம்பானி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டீரிஸின் தலைவராக இருக்கின்றார்.

இந்த வீடு கட்டும் திட்டம், தங்களிடம் இருக்கும் செல்வத்தை அப்பட்டமாக காட்டும் ஒரு செயல் என இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

மும்பாய் நகரத்தில் பாதிக்கும் மேற்ப்பட்டவர்கள் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.

———————————————————————————————

வக்ப் போர்டிடம் நிலம் வாங்கியதால் சிக்கல்: அம்பானியின் 27 மாடி சொகுசு வீட்டுக்கு ஆபத்து- சட்ட விரோதம் என அரசு அறிவிப்பு

மும்பை, ஜ×லை.5-

இந்தியாவில் உள்ள முன்னணி பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் குழுமம் தகவல் தொடர்பு, பெட்ரோ லியம் மற்றும் சில்லறை வணிகம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவித்து வருகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 14- வது இடத்தில் இருக்கிறார்.

மும்பையில் இவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் சொத்துக்கள் உள்ளது என்றாலும் அவர் மனதுக்கு பிடித்த இடம் மும்பையில் உள்ள மலபார் மலைப் பகுதிதான். அங்கு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக 4532 சதுர மீட்டர் பரப்பளவு இடம் உள்ளது.

கடந்த 2002 ம் ஆண்டு இந்த இடத்தை வக்ப் போர்டிடம் இருந்து ரூ. 21 கோடி கொடுத்து முகேஷ் அம்பானி வாங்கினார். பிறகு சில மாதம் கழித்து அந்த இடத்துக்கு வக்ப் போர்டு மறு விலை நிர்ணயித்தது. அதை ஏற்று கூடுதலாக ரூ. 14 கோடியை முகேஷ் அம்பானி கொடுத்தார்.

மொத்தம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட கனவு அடுக்கு மாடி சொகுசு மாளிகை உருவாக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டார். அவரது ஆசைப்படி அங்கு 27 மாடியில் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து 27 மாடி கட்டுமான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

மொத்தம் உள்ள 27மாடியில் தனி வீடு மற்றும் அலுவலகங்கள் அனைத்தை யும் ஒருங்கே அமைக்க அவர் திட்டமிட்டிருந்தார். கீழ்தளத்தில் இருந்து 7 மாடிகள் வரை கார் நிறுத்தும் இடத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7 மாடியிலும் 168 கார்களை நிறுத்த முடியும்.

8- வது மாடியில் சினிமா படம் பார்க்க மினி தியேட்டர் அமைக்கப்படுகிறது. 9,10- வது மாடிகளில் உடற்பயிற்சி கூடங்களும் நீச்சல் குளமும் வர உள்ளது. 11 வது மாடி முதல் 18- வது மாடி வரை 8 மாடிகள் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

19,20,21,22 ஆகிய 4 மாடிகளும் விருந்தினர்கள் வந்தால் தங்க வைக்கவும் ஹெல்த் சிறப்புக்கு எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. 23,24, 25,26,27 ஆகிய 5 மாடிகளில் முகேஷ் அம்பானி வசிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாடிகளில் ஒரு மாடி முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவிக்கும் ஆகும்.

மற்றொரு மாடி முகேஷ் அம்பானியின் தாய் கோகிலா பென்னுக்கு என கூறப்பட்டுள்ளது. மற்ற 3 மாடிகளிலும் முகேஷ் அம்பானியின் 3 குழந்தைகளுக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வது மாடி உச்சியில் 3 ஹெலிகாப்டர் உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஹெலி காப்டரில் வந்து வீட்டில் இறங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 170 மீட்டர் உயர இந்த நவீன மாளிகையின் கட்டுமான பணிகளை மும்பை மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மராட்டிய மாநில வருவாய் மற்றும் வரி இலாகா முகேஷ் அம்பானி நிறுவனத்துக்கும் வக்ப் போர்டுக்கும் ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளது. அதில் வக்ப் போர்டு நிலம் அம்பானிக்கு விற்கப்பட்டது சட்ட விரோதம். அதை வக்ப் போர்டு திரும்ப பெற வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. மலபார் நிலத்தை விற்க வக்ப் போர் டுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது.

மராட்டிய மாநில அரசின் இந்த திடீர் நடவடிக்கை முகேஷ் அம்பானிக்கும், வக்ப் போர்டு நிர்வாகிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வக்ப் போர்டு நிர்வாகிகள் கூறுகையில், மராட்டிய அரசு எங்களை பழிவாங்கும் நோக்கில் இப்படி நடந்து கொள்கிறது. இதுகுறித்து முன்பே ஏன் சொல்லவில்லை என்றனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து வக்ப் போர்டு கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

——————————————————————————————————————

இந்தியாவின் 2-வது பணக்காரர்: அனில் அம்பானி

பல்வேறு நிறுவனங்களின் செய்துள்ள முதலீடை அடுத்து இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற சிறப்பை அனில் அம்பானி பெற்றுள்ளார். முதல் இடத்தில் அவரின் சகோதரர் முகேஷ் அம்பானி உள்ளார்.

வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த மும்பையின் பங்கு வணிகத்தின் அடிப்படையில் அனில் அம்பானியின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடியே 334 ரூபாய் ஆகும்.

முகேஷ் அம்பானியின் பங்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாகும். ரிலையன்ஸ் தொலைதொடர்பு வர்த்தகத்தில், அனில் அம்பானியின் பங்கு 53 சதவீதமாகும்.

Posted in Ambani, Anil, Arrogance, Asia, Asset, Azim Premji, Bajaj, Bill Gates, Billion, Billionaire, Birla, Biz, Bombay, Brazil, Business, Capitalism, Children, China, Commerce, Dayanidhi, Dhinakaran, Dinagaran, Dinakaran, Display, Distribution, Economics, England, Finance, Forbes, France, Gates, Globalization, Godrej, HCL, Homeless, Homes, Housing, Industry, Infosys, Japan, Kalanidhi, Kid, Kungumam, Lakshmi Mittal, maharashtra, Manufacturing, Maran, Microsoft, Millionaire, Mittal, Money, Mugesh, Mukesh, Mumbai, Nadar, Narayana Murthy, Needy, Oberoi, Oceanview, Op-Ed, Poor, Pune, Rich, Right, Russia, Seaview, Services, Shiv Nader, Sooriyan FM, Soviet, Street, Sun TV, TATA, USA, USSR, Vakf, Wakf, Warren Buffet, Wealth, Wipro | 1 Comment »