Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sriperumputhur’ Category

Tamil Nadu signs MoUs with Caparo, Fenner – SIPCOT pact with two industries

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலை: ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, செப். 13:தமிழகத்தில் 2 புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை கையெழுத்தானது.

ஃபென்னர் இந்தியா நிறுவனம் மற்றும் கெப்பாரோ இன்ஜினீயரிங் இந்தியா (பி) நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

இவ்விரு நிறுவனங்களும் சிப்காட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வது, கட்டுமான வசதி மற்றும் திட்ட வசதிகள் குறித்து எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சிப்காட் மேலாண் இயக்குநர் கோவிந்தன் மற்றும் ஃபென்னர் இந்தியா நிறுவனம் சார்பில் எல். ராம்குமார் ஆகியோரும் கெப்பாரோ என்ஜினீயரிங் சார்பில் சுனில் ஹிலாஜனி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

ஃபென்னர் இந்தியா நிறுவனம் டயர் பேப்பர், சிமென்ட், பால் பண்ணை, அக்ரோ ஜெனிடிக்ஸ் மற்றும் பிற பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இந்நிறுவனத்தின் முதலீடு ரூ. 200 கோடியாகும்.

தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழில் பூங்காவில் ஆயில் சீல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க முன்வந்துள்ளது. அத்துடன் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய பெல்ட் தயாரிப்புக்கான தொழிற்சாலை ஒன்றை, பின்தங்கிய பகுதியான நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ. 35 கோடி முதலீட்டிலான இத்தொழிற்சாலை மூலம் நேரடியாக 150 பேருக்கும் மறைமுகமாக 150 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிறுவனம் ஓராண்டில் உற்பத்தியைத் தொடங்கும்.

லண்டனில் வாழும் இந்தியத் தொழிலதிபர் ஸ்வராஜ்பாலின் குழும நிறுவனம் கெப்பாரோ இன்ஜினீயரிங். இந்நிறுவனம் சென்னையை அடுத்த ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை தொடங்க உத்தேசித்துள்ளது. அத்துடன் இயந்திர வில்லைகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிலக்கோட்டையில் தொடங்கவும் இந்நிறுவனம் முன்வந்துள்ளது. ரூ. 40 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். 2009-ம் ஆண்டு அக்டோபரில் இத்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கும் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Belts, Caparo, Commerce, Conveyor, DMK, Economy, Employment, Factory, Farming, Fenner, Genetics, Industry, Jobs, milk, MoU, Nilakkottai, Nilakottai, oil, Seal, Seals, SIPCOT, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Stalin, Tamil Nadu, Work | Leave a Comment »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Actor Mansoor Ali Khan and public lock horns over land

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

நில பிரச்சினை கிராம மக்களுடன் மோதல் இல்லை: மன்சூர் லிகான் விளக்கம்

சென்னை, பிப்.8-

நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் குன்றத்தூர் அருகே நல்லூர் என்ற இடத்தில் 5 வருடங்களுக்கு முன் 2 1/2 ஏக்கர் நிலம், முன்னாள், தி.மு.க. குன்றத்தூர் தலைவர் குப்புச்சாமி என்பவர் மூலமும், நல்லூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரகாஷ் மூலமும், என்தம்பி பெயருக்கு வாங்கி ஸ்ரீபெரும்புதூர் பதிவாளர் அலுவலகத்தில் முறையே பத்திரம் எண் 1174/92, 405/மிக்ஷி/03 பதிவாகி இருக்கிறது.

இத்தனை வருடமும் அந்த இடத்தை பராமரித்து வந்தோம். சமீபத்தில் ரெட்டை ஏரி குடியிருப்பு மக்களுக்கு நல்லூர் அருகே அரசாங்கம் இடம் ஒதுக்கியது. அங்கு ஒரு வயோதிகர் மரணமடையவே, நல்லூர் மக்கள் அங்கே புதைக்க அனுமதி மறுத்ததால், அங்குமிங்கும் அலைந்து கடைசியில் எனது இடத்தில் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

எனக்கு இந்த விஷயம் இரண்டு நாள் முன்புதான் தெரியும். எனவே எனது இடத்திற்கு சென்று, அந்த ஊரில் வேலைக்கு வந்த மக்களை வைத்தே, எல்லையை சீர் செய்தேன். ஊர்மக்களுடன் எந்த பிரச்சனையும் இல்லை. நீர், மோர் கொடுத்து, ஊர்மக்கள் அன்போடு உபசரித்தார்கள்.

விசாரணைக்கு வந்த அதிகாரிகளும் டாகுமென்டை வைத்து நிலத்தை அளந்து சரிபார்த்து சென்று விட்டார்கள். நானும் அதிகாரிகளிடம், புதிய குடியிருப்பு மக்களுக்கு வேறு இடத்தில் சுடுகாடு ஒதுக்குமாறு கேட்டு கொண்டேன்.

நேற்று முழுவதும், எனது புதிய படத்தின் பாடல் பதிவில் இருந்தேன். இன்றுதான் சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருமக்களை சந்தித்து புதிய குடியிருப்பு மக்களுக்கு சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்க இருந்தேன். அதற்குள் வேறுமாதிரி செய்திகள் வந்திருப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Posted in burial, Controversy, Court, DMK, Issue, KANCHEEPURAM, Kunrathoor, Kunrathur, Land, Law, Mansoor Ali Khan, Mansur Ali Khan, Nalloor, Nallur, Occupy, Order, Police, Porur lake, Property, Ramkumar, revenue officials, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, tahsildar, Tamil Actor, Thasildar, Usurp, Villain | Leave a Comment »

Tamil nadu Government moves in a Clandestine manner against High Court Orders

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டம் தயார்?

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மத்திய அமைச்சரவையும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது.

இத்திட்டத்துக்கு தேவையான 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக அளிக்க தமிழக அரசு முன்வந்தது.

இதற்கான நிலத்தை கையகப்படுத்த முதலில் உருவாக்கிய திட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு மாற்றியது.

இதன்படி பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்பிரச்சினையில் குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிலங்களை கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்நிலையில் தேவையான நிலத்தை தமிழக அரசு அளித்தால் தான் விமான நிலைய விரிவாக்கத்திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விமான நிலைய விரிவாக்கத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த பிரதமர் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காண பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை மீறி, இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதிகளை விரைந்து கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இது தொடர்பான விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய விரிவாக்கப்பணிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கும் வகையில் செயல்படுவதாக தமிழக அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளதாக விமான நிலையங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசின் இத்தகைய செயலால் பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழக்கும் நிலை ஏற்படும் என இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.

==========================================================================
பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

சென்னை, மார்ச் 19: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் ஏரியில் 23 ஏக்கர் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன.

இது தொடர்பாக இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் அளித்த 3-வது நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ளது தாங்கல் ஏரி. சுமார் 40 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவுள்ள இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

அனகாபுத்தூர் வழியாக 200 அடி சாலை அமைக்கும் பணிகளுக்காக நிலம் அளித்தவர்களை இந்த தாங்கல் ஏரியின் ஒரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் குடியமர்த்தியது.

இந்நிலையில், இந்த புதிய குடியேற்றத்துக்கு அருகில் உள்ள 23 ஏக்கர் நிலத்தை இப்பகுதியை சேர்ந்த சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

பொழிச்சலூர் ஊராட்சி தலைவராக இருந்த அரசியல் பிரமுகர் தலைமையில் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெற்றதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கல் ஏரியில் உள்ள நிலத்தை ஒரு சென்ட் ரூ.50 ஆயிரம் வீதம் விற்பனை செய்யப்பட்டது என்றும், இவ்வாறு விற்பனை செய்த நிலங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக வீட்டுவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டன என பொழிச்சலூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி குடியிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் அண்மையில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் யாதவ் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதன்படி இங்கு நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 50-க்கும் அதிகமான குடிசைகள், கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இடிக்கப்பட்டன.

இருப்பினும், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான ஆளும் கட்சி பிரமுகர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

——————————————————————————-

அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு: சென்னை விமான நிலையம் விரிவாக்கம் – ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம்

சென்னை விமான நிலைய விரிவாக்கம் பற்றி சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உடன் தலைமைச் செயலர் எல்.கே.திரிபாதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பாமக தலைவர் ஜி.கே.மணி.

சென்னை, மே 23: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் 1,069 ஏக்கரில் விரிவு படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமையே தொடங்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை 1,069 ஏக்கரில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யும் பணிகளால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்று கூறி அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுக தவிர, மற்ற கட்சியினர் விரிவாக்கப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கத்தை விரிவுபடுத்துவதற்காக மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 1,069.99 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அங்கு பாதிப்புக்குள்ளாகும் குடிசைகள், மாடி வீடுகள், ஓட்டு வீடுகள் மொத்தம் 947. இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மறுவாழ்வுக்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். விரிவாக்கப் பணியின் முதல் கட்டமாக இத்தகைய மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் விரிவாக்கப் பணிகளை இந்திய வானூர்திக் குழுமம் (ஏஏஐ) ஏற்று நடத்திட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும்போது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தப் புதிய விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படும். இதற்கென 4,820.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். புதிய விமான நிலையம் அமைக்கும் பணியையும் இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

இந்த பணிகள் முதல் கட்டமாக ரூ. 1,000 கோடியிலும் அடுத்தகட்டமாக ரூ. 1,000 கோடியிலும் மொத்தம் ரூ. 2,000 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநிதி.

விரிவாக்கப் பணி மற்றும் புதிய விமானம் அமைக்கும் பணியை இந்திய வானூர்திக் குழுமமே ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. தமிழக அரசு இதுவரை, தனியார் மூலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, தற்போது ஏஏஐ மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்

  • நிதியமைச்சர் அன்பழகன் (திமுக),
  • டி.சுதர்சனம்,
  • டி. யசோதா (காங்.),
  • டி. ஜெயக்குமார் (அதிமுக),
  • ஜி.கே. மணி,
  • இரா. மலையப்பசாமி (பாமக),
  • சி. கோவிந்தசாமி,
  • டி. நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூ.),
  • வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்),
  • வீர. இளவரசன் (மதிமுக),
  • பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்,
  • வி. பார்த்தசாரதி (தேமுதிக),
  • கலிலூர் ரஹ்மான் (டிஎன்ஐயுஎல்),
  • செல்வம்,
  • கே. பாலகிருஷ்ணன் (டிபிஐ),
  • பூவை ஜெகன்மூர்த்தி,
  • சிவஞானம் (புரட்சி பாரதம்) ஆகியோர் பங்கேற்றனர்.

———————————————————————————————————————————

பொழிச்சலூர் தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் எப்போது?

சென்னை பொழிச்சலூர் தாங்கல் ஏரியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள ஞானமணி நகர்.

சென்னை, ஜூலை 2: சென்னை பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள தாங்கல் பகுதியில் புறம்போக்கு நிலத்தை இப் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானமணி உள்ளிட்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து சுமார் 200-க்கும் அதிகமானோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் மூலம் இங்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக நில மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகார்களை ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து தாம்பரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தாங்கல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடிப்படையில் திமுக பிரமுகரும் பொழிச்சலூர் ஊராட்சி துணைத் தலைவருமான ஞானமணி அண்மையில் கைது செய்யப்பட்டார். பின்னர் தனது சொந்த ஜாமீனில் ஞானமணி விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும், பொழிச்சலூரில் தாங்கல் பகுதியில் ஞானமணி நகர், விநாயகா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துணையுடன் அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததாக ஞானமணி மீது இப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார்கள் தொடர்பான அவணங்களை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வருவாய்த்துறையினர் எடுத்து சென்று தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந் நிலையில் வருவாய்த் துறை நடவடிக்கையை எதிர்த்து ஞானமணி தரப்பில் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு வருவாய்த் துறை சார்பில் பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும் என தாம்பரம் வட்டாட்சியர் சுப்பையா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பின்னரே தாங்கல் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து மணப்பாக்கம் கிராமத்தினர் போர்க்கொடி – எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆட்சியரிடம் மனு

சென்னை, ஜூலை 12: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, எம்.எல்.ஏ. யசோதா துணையுடன், மணப்பாக்கம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மொத்தம் 1070 ஏக்கர் நிலப்பகுதியை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மணப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் பகுதிகளில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்த போதிலும், மணப்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாக்கம் மார்பிள் ரிவர்வியு விரிவு பகுதியைச் சேர்ந்த மக்கள் புதன்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் ஆட்சியர் பிரதீப் யாதவை சந்தித்தனர்.

“எங்கள் பகுதியில் 250 வீடுகள் உள்ளன. நாங்கள் இரண்டரை ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீடுகளை இடிக்கக் கூடாது. நாங்கள் அப்பகுதியை விட்டுச் செல்ல மாட்டோம். நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ எனக் கூறி மனு அளித்தனர்.

இதற்கு ஆட்சியர் யாதவ் பதில் கூறுகையில், “நிலம் கையகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். நிலத்தை இழப்போருக்கு உரிய இழப்பீடு தரப்படும்’ என்றார்.

பொதுமக்களுடன் வந்த யசோதா எம்.எல்.ஏ. கூறியது:

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக மொத்தம் 1500 வீடுகள் தான் பாதிக்கப்படும் என முதலில் கூறினர். தற்போது 300 வீடுகள் தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவர்.

சிலர் பாதிப்படையும் போது, அவர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும். எனது தொகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறேன் என்றார் யசோதா.

——————————————————————————————————————————————————-
விமான நிலைய விரிவாக்கத்துக்கு கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டம்: தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் புதிய நுழைவாயில்

சென்னை, நவ. 7: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு போரூரை அடுத்த கோவூரிலும் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்காக முதலில் 1,457 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

தற்போதுள்ள விமான நிலையத்தின் வடக்கில் உள்ள பகுதியில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலம் கையகப்படுத்துவதை கைவிட முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே முதலில் திட்டமிட்டபடி விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்தவும் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் சுமார் 4,820 ஏக்கர் நிலத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்படி, விமான நிலையத்துக்கு வடக்கில் உள்ள மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய ஊர்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த முதலில் அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

இந் நிலையில் விரிவாக்கத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்துக்கும் தற்போதைய விமான நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும் நடுவில் ஆறு (அடையாறு) குறுக்கிடுவதால் திட்ட செயலாக்கத்தில் நடைமுறைப் பிரச்னைகள் ஏற்படும் என இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மணப்பாக்கம் முதல் கோவூர் வரையுள்ள பகுதியில் 1,069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய அரசாணை அக்டோபர் 9-ல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மணப்பாக்கத்தில் 87.85 ஏக்கரும், கெருகம்பாக்கத்தில் 144.57 ஏக்கரும், கொளப்பாக்கத்தில் 145.69 ஏக்கரும், தரப்பாக்கத்தில் 32.56 ஏக்கரும், கோவூரில் 22.51 ஏக்கரும் என மொத்தம் 1,069 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

இதில் மணப்பாக்கம் முதல் தரப்பாக்கம் வரையுள்ள நிலங்களில் 3-வது ஓடுபாதையும், தரப்பாக்கம், கோவூரின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலத்தில் புதிய முனைய கட்டடங்களும் அமைய உள்ளன.

மேலும், புதிய முனையங்களை பயன்படுத்த தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருந்து விமான நிலையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு? விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி விமான நிலையத்தின் 2 பெரிய ஓடுபாதைக்கு நடுவே அடையாறு செல்லும்.

இதனால், தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பு.

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் நிலை என்ன?

விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு அரசாணை (ஜி.ஓ. எம்எஸ். 108) வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கையகப்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களில் இருப்பவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதில் நிலத்தின் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், போரூர், நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமானோர் மணப்பாக்கம், கெருகம்பாக்கம், கோவூர் உள்ளிட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டால் இவர்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் என இப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசு இந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் இருப்பவர்களுக்கு விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கை.
——————————————————————————————————————————————————-

விமான நிலைய விரிவாக்கத்தால் 381 வீடுகள் இடிக்கப்படும்

சென்னை,நவ. 7: சென்னைக்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்டதால் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

விமான நிலையம் அருகேயுள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய இடங்களில் 1069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. புதிய திட்டத்தால் 381 வீடுகள் பாதிக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

விமான நிலைய விரிவாக்கம் செய்யப்படும் இடத்தில் பட்டா நிலத்தில் வீடுகள் கட்ட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் அரசு கூறியிருப்பதாவது:

சென்னை அருகே மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள விமான நிலையம் 1151 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு விமான ஓடுபாதைகள் இரண்டு உள்ளன. சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. எனவே, விமான நிலையத்தை உடனே விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக விமானங்கள், வானிலேயே வட்டமடித்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் வீணாகிறது. எனவே விமான நிலையம் அருகே 583 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த 2005-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும் அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல் பஜார், பல்லாவரம் கன்டோன்மெண்ட், பம்மல் போன்ற இடங்களில் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்தால் 5050 வீடுகளை இடிக்க வேண்டியிருந்தது.

எனவே, அந்த இடத்துக்கு பதிலாக மணப்பாக்கம், கொளப்பாக்கம், தரப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்த 2-5-2007 ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இப்புதிய திட்டத்தால் 381 வீடுகள் மட்டுமே பாதிக்கப்படும்.

இதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும். 2005-ம் ஆண்டில் அப்போதிருந்த நிலைமைக்கு ஏற்ப இப்பகுதிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பொது நோக்கத்துக்காக இப்போது இந்த இடத்தில் நிலம் தேவைப்படுகிறது. விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1069 ஏக்கர் நிலம் கையகப்படுத்த இந்திய விமான நிலையம் ஆணையம் 1-8-2007 ல் அனுமதி அளித்துள்ளது. இது தவிர திருவள்ளூர் தாலுகா ஸ்ரீபெரும்புதூரில் நவீன விமான நிலையம் அமைக்க 4,820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே இ.வி.பி. வீட்டு வசதி நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.குலசேகரன் இவ்வழக்கு விசாரணையை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

——————————————————————————————————————————————————-

Posted in AAI, abuse, ADMK, Agitation, AIADMK, Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Bribes, Chennai, Collector, Compensation, Corruption, Destruction, Dhaangal, Dharapakkam, Dharappakkam, DMK, DPI, encroachment, Expansion, Extension Project, Gaul Bazaar, High Court, Homeless, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjeepuram, Kanjeevaram, Karunanidhi, Kerugampakkam, Kerukampakkam, kickbacks, Kolapakkam, Kolappakkam, Lake, Law, Madras, Manapakkam, Manappaakkam, Manappakkam, Manmohan Singh, MK, Njaanamani, Njaanamani Nagar, Njamani Nagar, Njanamani, Njanamani Nagar, Order, Pallavaram, PMK, Polichaloor, Polichalur, Power, Pozhichaloor, Pradeep Yadav, Sriperumpudhoor, Sriperumpudhur, Sriperumpudoor, Sriperumpudur, Sriperumputhoor, Sriperumputhur, Tamil Nadu, Thaangal, Thaankal, Tharapakkam, Tharappakkam, TN | 1 Comment »