Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Solar’ Category

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

TN faces power crisis – Unannounced Electricity cuts to end by capacity addition & private participation

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

இதர மாநிலங்களிலிருந்து மின்சாரம்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க அசாம், ஹரியாணா மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெறப்படும் என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார். நிருபர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 7,500 மெகாவாட். தி.மு.க. அரசு ஏற்பட்ட பிறகு, தொழில் வளம் பெருக, புதிய தொழில்நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால், மின் தேவை கடந்த காலத்தை விட அதிகரித்து தற்போது 8,800 மெகாவாட்டை எட்டிவிட்டது.

தொழில் வளம் காரணமாக, மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். பின்னர் சீராகும்.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க பல்வேறு மாநிலங்களுடன் தமிழகம் பேசி வருகிறது. இது குறித்து மாநில மின் வாரியத் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கான உடன்பாடு இம்மாத இறுதிக்குள் பூர்த்தியாகிவிடும். இந்த மாநிலங்களிலிருந்து மொத்தம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் பற்றாக்குறையின் விளைவாக கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற யோசனையை தமிழக முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.

ரூ.32 ஆயிரம் கோடியில் மின்நிலையம்: தமிழகத்தில் மொத்தம் ரூ.32 ஆயிரம் கோடியில் இரு புதிய மின் உற்பத்தி நிலையங்களை மத்திய அரசு தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்காணம், கடலூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசே முழு அளவு முதலீட்டையும் செலுத்தும்.

இந்த இரு மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 8 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதில் 50 சதவீதத்தைத் தமிழகத்துக்கு அளிக்கும்படி கோரப்படும்.

ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையத்தை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியில் 90 சதவீதம் பூர்த்தியாகிவிட்டது. மீதியும் விரைவில் முடிந்துவிடும். தற்போது, சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் அளிக்கப்படுகிறது. அது போல் நெசவாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன், 10 லட்சம் குடிசைகளுக்கும் இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த ஆண்டுதான் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மின் உற்பத்தியை விரைவுபடுத்துமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த மின் நிலையம் ஜனவரியில் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரியில் சீராகும்

தொழில் வளம் காரணமாக மின் தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை நேர்ந்துள்ளது. மத்திய அரசின் மின் விநியோகமும் குறைந்துள்ளது. இந்நிலை டிசம்பர் வரையில் நீடிக்கும். நிலைமை சரியானதும் ஜனவரியில் சீராகும்.

இருந்தாலும் மின்சாரப் பகிர்மானத்தின்போது இழப்பு நேர்வது இதர மாநிலங்களை விட பெரிய அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————-

வணிக மின் உற்பத்தித் திட்டங்களுக்கு அனுமதி: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, நவ. 26: தமிழகத்தில் முதல் முறையாக வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இதன்படி 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து தொழிலதிபர்களுடன் அவர் திங்கள்கிழமை காலையில் விவாதித்தார்.

அதையடுத்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

வணிக ரீதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் உருவான கருத்தை ஆராய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

வணிக அடிப்படையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எந்தெந்த தொழில் நிறுவனங்கள் முன் வருகின்றனவோ, அவை தமிழ்நாடு மின்வாரியத் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களை வாரியம் பரிசீலிக்கும். அதன் அறிக்கை அரசு நியமிக்கும் குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு விண்ணப்பித்துள்ள நிறுவனம் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும் என்று ஆராய்ந்து தலைமைச் செயலரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். பிறகு, முதல்வரின் ஒப்புதலை அடுத்து ஆணை பிறப்பிக்கப்படும்.

இதுவரை வணிக ரீதியில் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பம் குறித்து குழு ஆராய்ந்து வருகிறது. இது இம்மாத இறுதிக்குள் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

மின் பற்றாக்குறை:

தமிழகத்தில் இந்த ஆண்டு காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 1,500 மெகாவாட் மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துவிட்டது.

இருந்த போதும், மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தொழிலதிபர்களுடன் விவாதிக்கப்பட்டது.

சில தொழிலதிபர்கள் தங்களது ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தும் எரி எண்ணெய் (ஃபர்னஸ் ஆயில்) மீதான மதிப்புக் கூட்டு வரியில் (வாட்) சலுகை அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அது குறித்து முதல்வர், நிதியமைச்சர், நிதிச் செயலருடன் கலந்து பேசப்பட்டது. அதையடுத்து வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அந்நிறுவனங்களின் மீதான வாட் வரியை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

தொழிலதிபர்களுடன் நடைபெற்ற கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர், உறுப்பினர் (விநியோகம்) ஆகியோர் பங்கேற்றனர். எதிர்காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க இக்கூட்டம் பெரிதும் உதவியது. இதன் மூலம் மின்வெட்டு ஏற்படாமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு உறுதி அளித்தது. தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டால், ஒரு சில பகுதிகளில் அதிகபட்சமாக அரை மணி நேரம் மின்சாரத் தடையை ஏற்படுத்தும் நிலை வரலாம். அதையும் தவிர்க்க மின்வாரியம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார் ஆர்க்காடு வீராசாமி.

Posted in Aarkadu, addition, Alternate, Arcadu, Arcaud, Arcot, Arcot N Veerasamy, Assam, Atomic, Bills, Capacity, Center, Centre, Climate, Coal, Construction, Consumers, Crisis, Cuddalore, Dabhol, Demand, Disruption, Electricity, energy, Enron, Govt, Haryana, households, Industry, infrastructure, investments, mega power, megapower, Megawatts, Monsoon, MW, Natural, NLC, Nuclear, Power, Powercut, Powercuts, Prices, Private, Rains, Rathnagiri, Ratnagiri, Resources, Shortage, Solar, State, Supply, Veerasami, Veerasamy, veeraswami, veeraswamy, Windmills | Leave a Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

Hike in petro prices: Work out strategy that will not burden common man & nature

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

குன்றிவரும் எண்ணெய் வளம்

என். ரமேஷ்

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா அண்மையில் தெரிவித்தார். ஆனால், விலைஉயர்வை நீண்ட காலத்துக்குத் தள்ளிப்போட வாய்ப்பில்லை.

கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் இதுவரை கண்டிராத அளவுக்கு – ஒரு பீப்பாய் (159 லிட்டர்) 92 அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது.

1978 ஆம் ஆண்டு 13 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, 2007 அக்டோபரில் 92 டாலரை எட்டியுள்ளது. இது விரைவில் 100 டாலரை எட்டக்கூடும். இந்த விலைஉயர்வுக்கு ஈரான்மீது அமெரிக்கா அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாகக் கூறப்பட்டாலும், எண்ணெய் நிறுவனங்கள், அரசுகள் வெளிப்படையாக கூறத்தயங்கும் உண்மை ஒன்று உள்ளது.

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட “எரிசக்தி கண்காணிப்புக் குழு’ என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை, உலகின் உச்சபட்ச பெட்ரோலியப் பொருள்களின் உற்பத்தி அளவு 2006 ஆம் ஆண்டிலேயே எட்டப்பட்டுவிட்டது; இனி ஆண்டுதோறும் சரிவைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கிறது.

தற்போதைய உற்பத்தி அளவான நாளொன்றுக்கு 8.10 கோடி பீப்பாய்கள் என்பது 2030 ஆம் ஆண்டில் 3.9 கோடி பீப்பாய்களாகக் குறையும் என அந்த அறிக்கை கூறுகிறது. இது ஏறத்தாழ 1980 ஆம் ஆண்டு உற்பத்திக்குச் சமம். ஆனால், அப்போதைய மக்கள்தொகையைக் காட்டிலும் 2030-ல் உலக மக்கள்தொகை இரு மடங்காகியிருக்கும்.

நிலம், கடல், ஆர்க்டிக் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 1,25,500 கோடி பீப்பாய் அளவு எண்ணெய் இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தாலும் இந்த அளவு 85,400 கோடி பீப்பாய்களாக மட்டுமே இருக்கும் என இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தியின் சரிவு காரணமாக விலைஉயர்வு இனி தொடரும். மிக மோசமான பொருளாதார, அரசியல், சமூக விளைவுகள் உண்டாகும் எனப் பல வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் இராக் போருக்குக் காரணம் பெட்ரோலியம்தான் என்பதை அந்த நாட்டு மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன் உள்ளிட்டோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். (தினமும் 2.06 கோடி பீப்பாய்களை நுகரும் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி, 83.67 லட்சம் பீப்பாய்கள்தான்).

பெட்ரோலியப் பொருள்களின் விலைஉயர்வால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி, டீசல் என்ஜின் ரயில்களின் போக்குவரத்து குறைவது மட்டுமல்ல; மிகப் பெரும் உணவுப் பஞ்சம், அதைத் தொடர்ந்து சமூகச் சீர்குலைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது உற்பத்தியைக் குறைக்க நேரிட்டால், பற்றாக்குறை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் தொழில்துறையில் பாதிப்புகளும் வேலையிழப்புகளும் ஏற்படலாம்.

உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, தனது உள்நாட்டுத் தேவை காரணமாக, 2025-ல் உணவு ஏற்றுமதியை நிறுத்திவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், தற்போது பெட்ரோலியப் பொருள்களின் உதவியால், ஒருவருக்குத் தேவையான உணவை 20 நிமிஷ உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்ய முடிகிறது. பெட்ரோலியம் இல்லையெனில் மூன்று வாரம் பாடுபட்டுத்தான் ஒரு நாள் உணவை உற்பத்தி செய்ய முடியும். மற்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதேபோலத்தான்.

எனவே, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகளால் அனுபவித்து வரும் நெருக்கடிபோக, கடும் உணவு நெருக்கடியையும் சந்திக்க உள்ளன.

இந்த நிலைமையைச் சமாளிக்க அரசிடம் திட்டங்கள் இல்லை. தங்களது லாபம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், உருவாகி வரும் நெருக்கடியை மறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முயலுகின்றன.

இவையாவும் சில “சுற்றுச்சூழல் ஆர்வலர்களின்’ அதீத கற்பனை என யாரும் கூற முடியாத அளவுக்கு காரணிச் சான்றுகள் பெருகி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களால் பெரிய அனுகூலங்களைப் பெற்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பண்ணை வீடு, நாட்டின் மின்சாரத் தொகுப்புடன் இணைக்கப்படவில்லை; முழுக்க முழுக்க காற்றாலைகள், சூரிய ஒளித் தகடுகள் போன்ற மரபுசாரா வளங்களிலிருந்து எரிசக்தி பெறுகிறது! துணை அதிபர் டிக் செனியோ, எண்ணெய் நிறுவனங்களிலிருந்த தமது முதலீடுகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றிவிட்டார்.

Posted in Commerce, Deora, Diesel, Economy, energy, Environment, Food, Freight, Gas, GDP, Gulf, Hike, Inflation, Kerosene, LPG, Murali, Natural, Nature, oil, ONGC, Op-Ed, Petro, Petrol, Petroleum, Pollution, Products, Pumps, Resources, Shortage, Solar, Strategy | Leave a Comment »

Growing demand, challenge for The Tamil Nadu Electricity Board – Providing uninterrupted power

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

“ஷாக்’ அடிக்கிறதே, என்ன செய்ய?

தமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டு இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கோலாகல விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், மின்வாரிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். மேலும் 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கான திட்டங்களையும், ரூ.160 கோடி செலவில் 10,000 டிரான்ஸ்ஃபார்மர்களையும் அறிவித்து பொன்விழாவை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் வளர்ச்சியும், செயல்பாடுகளும் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்பாதுரை, பூர்ணலிங்கம், விஜயராகவன் போன்ற முன்னாள் மின்வாரியத் தலைவர்களின் பங்களிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப்போனால், மற்ற தென்னக மாநிலங்களைவிட மின்உற்பத்தியிலும் சரி, விநியோகத்திலும் சரி, தமிழ்நாடு மின்வாரியத்தின் செயல்பாடுகள் நிச்சயமாகச் சிறப்பானதாகவே இருந்துவருகிறது.

1957-லிருந்து தமிழ்நாடு மின்வாரியம் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளைத் திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும். மின்வாரியத்தில் பயனடையும் நுகர்வோர் எண்ணிக்கை சுமார் 4.30 லட்சத்திலிருந்து 1.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அப்போது மின் இணைப்பு இருந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெறும் 1,813. இப்போது 8,63,177. அப்போது பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை 33,440. இன்று 18,01,972 விவசாய பம்ப் செட்டுகள் மின் இணைப்பை பெற்றுள்ளன.

10,098 மெகாவாட் மின் உற்பத்தி, 1,148 துணை மின்நிலையங்கள், 1,73,053 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் என்று மின்வாரியம் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து, தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பதை நினைக்கும்போது வியப்பு அதிகரிக்கிறது.

ஆனால், இந்த சாதனைகளை மட்டும் நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தால் அதில் பயனில்லை. மின்உற்பத்தியைப் பொருத்தவரை நம்மை எதிர்நோக்கி இருப்பது மிகப்பெரிய சவால்கள் என்பதுதான் உண்மை. நாளும் அதிகரித்துவரும் மின் தேவையை எதிர்நோக்கும் சக்தி நமது மின்வாரியத்துக்கு இருக்கிறதா என்றால் சந்தேகம்தான்.

கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தின் மின்தேவை 7.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 11.5 சதவீதம் அதிக நுகர்வு ஏற்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு மின்வாரிய இணையதளம் தெரிவிக்கிறது. கூடுதலாக 2,500 மெகாவாட் மின்உற்பத்திக்கு மின்நிலையங்களை அமைக்க பச்சைக்கொடி காட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தமிழகத்தின் வருங்காலத் தேவைகளை இவை பூர்த்தி செய்யுமா என்பது கேள்விக்குறி.

புதிய அணைகளைக் கட்டுவது, நீர்மின் நிலையங்களை அமைப்பது என்பது இனிமேல் இயலாத காரியம். தமிழகத்தில் உற்பத்தியாகும் நதியே கிடையாது என்பது மட்டுமல்ல, அப்படியே அந்த நதிகளில் வரும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கே போதாத நிலைமை. அணுமின் நிலையங்களை அமைப்பது என்பது வருங்காலச் சந்ததியினருக்கு ஆபத்தானது என்பதால் அதை வரவேற்பதற்கில்லை. அனல்மின் நிலையங்கள் அமைக்கலாம். ஆனால் இதற்கு மின்உற்பத்தி செலவு பலமடங்கு அதிகம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ள, நமது மின்சார வாரியம் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்திருக்கிறதா, வகுத்து வருகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உடனடித் தேவைக்கான திட்டங்கள்தான் அறிவிக்கப்பட்டுள்ளன.

மரபுசாரா எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே நாளைய மின்தேவையை நாம் எதிர்கொள்ள முடியும் என்பது நன்றாகவே புரிகிறது. மத்திய மரபுசாரா எரிசக்தி அமைச்சகத்தின் முயற்சியால் மட்டுமே இந்த விஷயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. மின்வாரியமே முன்வந்து, சூரியஒளி மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க நுகர்வோரை ஊக்குவித்தால் மட்டும்தான், எதிர்வரும் இருண்ட சூழ்நிலையை ஒளிபெறச் செய்யமுடியும்.

இன்றைய நிலையில், தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள எல்லா மின்வாரியங்களுமே, மரபுசாரா எரிசக்திக்கு ஊக்கம் அளிப்பதால் தங்களது வருமான இழப்பு பற்றிக் கவலைப்படுகின்றனவே தவிர, தனிநபர் மின் பயன்பாட்டை மரபுசாரா எரிசக்தி மூலம் குறைத்து, மின்சாரத்தை தொழில் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு முழுமையாக விநியோகிக்க முன்வராதது ஏன் என்பது புரியவில்லை.

அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்; அடிக்கடி அதிகரிக்கப்படும் மின்கட்டணம் – இவை இரண்டையும் மின்வாரியம் தவிர்க்க முற்பட வேண்டும். அப்போதுதான் பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு மின்வாரியத்துக்குப் பொதுமக்களின் பாராட்டும் வாழ்த்தும் கிடைக்கும். என்ன செய்ய, “ஷாக்’ அடிக்கிறதே..?

Posted in Alternate, Customer, Dams, Demand, Distribution, Electricity, energy, Grid, Hydroelectric, infrastructure, Megawatt, Power, Project, renewable, River, Solar, Statistics, Statz, Sun, Supply, TNEB, Water, Windmills | Leave a Comment »

Gliese 581c – A New Planet on the Horizon

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு

வானியல் அறிஞர்களால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புவியைப் போன்றபுதிய கோள் (இடது). இது சூரிய குடும்பத்துக்கு அருகில் அமைந்துள்ள கிளீஸ்-581 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த விளக்கப் படத்தை ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

நியூயார்க், ஏப். 26: உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் இந்தக் கோள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. வேறொரு விண்மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

புவியை போன்ற இந்த கோளில் தற்போது ஏதேனும் உயிரினங்கள் வசித்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

புவியைப் போல 5 மடங்கு நிறைகொண்ட இந்த புதிய கோள், சூரிய குடும்பத்தில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் (ஒளி 20 ஆண்டுகளில் பயணம் செய்யக் கூடிய தொலைவில்) அமைந்துள்ளது. “துலாம்’ என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ள “கிளீஸ் 581′ விண்மீனை சுற்றி வருகிறது.

சூரிய குடும்பத்துக்கு அருகாமையில் உள்ள இந்த கிளீஸ் 581 விண்மீன், “சிவப்புக் குள்ளன்’ என்ற வகையைச் சேர்ந்ததாகும். மங்கலான சிவப்பு நிற விண்மீன் இது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஸ்டிபான் உட்ரி குழுவினர் இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். கிளீஸ் விண்மீன் மீது இந்தக் கோள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளை வைத்து அதைக் கண்டுபிடித்துள்ளனர்.

நெருக்கமான கோள்: கிளீஸ் விண்மீனுக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது இப் புதிய கோள். அதாவது, இரண்டுக்கும் இடையில் உள்ள தூரம், சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தூரத்தில் 14-ல் ஒரு பங்குதான்.

கிளீஸ் “”சிவப்புக் குள்ளன்” வகையைச் சேர்ந்த விண்மீன் என்பதால் சூரியனைவிட குறைவான ஒளியையும், வெப்பத்தையுமே வெளியிடுகிறது. எனவே புதிய கோள் நெருக்கமாக அமைந்திருந்தாலும் கூட வாழத் தகுதியுள்ளதாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

கோளின் வெப்பநிலை: வேற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த புவிக்கோளின் வெப்ப நிலை 0 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். எனவே அங்கு நீர்ம வடிவில் நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், கோளின் வெப்பநிலை பற்றிய இந்தக் கணிப்புகள் துல்லியமானவை அல்ல என்கிறார் உட்ரியின் கூட்டாளியும், வானியல் அறிஞருமான மைக்கேல் மேயர்.

கூடுதல் விவரங்கள் இல்லாமல் நீர் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவ்வளவு விரைவாக முடிவுக்கு வரமுடியாது என புதிய கோளைக் கண்டுபிடித்த டாக்டர் உட்ரி குழுவினரும் கூறியுள்ளனர்.

வியாழன் கோளைவிட அதிக நிறைகொண்ட வளிமண்டலம் அமைந்திருந்தால், கோளின் பரப்பு மிக அதிக வெப்பநிலை கொண்டதாக இருக்கும். அந்த நிலையில் நீர்ம வடிவில் நீர் இருக்க முடியாது என்கிறார் மசாசூசெட் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த கோள் அறிஞர் சாரா சீகர்.

இரு நூற்றில் ஒன்று: இந்த பேரண்டத்தில் புவியைப் போலவே உயிரினங்கள் வசிக்கும், அல்லது உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற கோளை பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் தேடி வருகின்றனர். இப்புதிய கோள் அதுவாகக் கூட இருக்கலாம் என்கிறார் மசாசூசெட்ஸில் உள்ள ஹார்வர்டு-ஸ்மித்சோனியன் மையத்தைச் சேர்ந்த வானியல் அறிஞர் டேவிட் சார்போன்.

புதிய கோள், புவியைப் போலவே நிலத் தரை கொண்ட திண்மக்கோள் எனில் நீர்ம நிலையில் உள்ள நீரும், உயிரினங்களும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் கோள் வாயு உருண்டையாக இருந்தால் உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக இருக்கும். ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

இதைப் பற்றி மேற்கொண்டு முடிவுக்கு வர, கோளைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளதா என்பது போன்ற தகவல்கள் தேவை. அதுவரை வேறு எந்த முடிவுக்கும் வருவது கடினமே என்கிறார் டேவிட் சார்போன்.

சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சுமார் 200 கோள்களில் மிகச்சிறியது இப்புதிய கோள். ஆனால் புவிக்கு நெருக்கமான நிறை (ஙஹள்ள்) கொண்ட கோள் இது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கண்டுபிடிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கீளீஸ் 581-ஐ சுற்றி வரும் 2 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை புவியைப் போல 8 மற்றும் 11 மடங்கு நிறை கொண்டவை. இவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக, புவிக்கு நெருக்கமான நிறை கொண்ட இப்புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கோளைக் கண்டுபிடித்துள்ள உட்ரி குழுவினர், வானியல் தொடர்பான “ஜர்னல் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ பத்திரிகையில் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர்.

Posted in 581c, Astronomy, Discovery, dwarf, Earth, Gliese, Greenhouse, Human, Life, Liquid, Moon, Planet, Science, Solar, Star, Water | Leave a Comment »

Municipality power consumption – Self sufficiency, Water Distribution, Alternate Energy

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

கட்டிக் கொடுத்த சோறு

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை மீதான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு மேற்கொண்டுள்ள முடிவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிச் சுமையை ஓரளவு குறைப்பதாக அமையும்.

ஆனால், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலைமைதான் அபராதம் செலுத்தும் நிலைமைக்குக் காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கட்டணத்தைச் செலுத்த முடியாத அதே நிலை நீடிக்குமானால், அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்தும் பயன் ஏற்படாது. கட்டிக் கொடுத்த சோறு ஓரிரு வேளைக்கு மட்டுமே உதவும்.

உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி) நிலுவை வைத்துள்ள ரூ.204 கோடியை அரசே இப்போதைக்கு செலுத்துவதும், இனிமேல் அவர்களது மின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும்தான் நிரந்தரத் தீர்வாக அமையும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் மின் செலவில் பெரும்பகுதி தெருவிளக்குகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் மூலமாக ஏற்படுகிறது.

தெருவிளக்குகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. வெறும் செலவு மட்டுமே. ஒவ்வொரு மின்கம்பத்துக்கும் மின்வாரியம் நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துகின்றன.

இரண்டாவதாக, குடிநீர் விநியோகத்தில் நீரேற்று நிலைய மின்செலவைத் தவிர்க்கவே முடியாது. நீரேற்றும் மின்செலவுக்கும் குடிநீர் கட்டணம், குழாய் வரி மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் பற்றாக்குறை இடைவெளி பெரிதாக உள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் விநியோகத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலவு போக, சிறிது வருவாய் கிடைத்திருக்கலாம். இப்போது நிலைமை தலைகீழ். விரிந்துவிட்ட நகரின் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்க பல்வேறு இடங்களில் ஆழ்துளை போட்டு தண்ணீர் எடுப்பதால் மின்செலவு மேலும் கூடிவிட்டது. ஆனால் அதற்கேற்ப குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியவில்லை. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சிகளுக்கான மின்கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.2-ஆகக் குறைக்க வேண்டும் என்பதுகூட, சுமையை இன்னொரு தலைமேல் ஏற்றிவிடுவதாகவே அமையும்.

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் புதிய வழிகளைக் காண்பதும் புதிதாக குடிநீர் கட்டண முறைகளை வகுத்துக்கொள்வதும்தான் தீர்வாக இருக்கும்.

குடிநீர் இணைப்புகளில் மீட்டர் இருந்தாலும் அவரவர் பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப (மின்சாரம் கணக்கிடுவதைப்போல) கணக்கிடப்படுவதில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் சுத்திகரித்து நீரேற்றம் செய்யும் குடிநீரில் 80 சதவீதம் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப, அடுக்குமுறையில் (ஸ்லாப் சிஸ்டம்) கட்டணமும் உயரும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டால், பயன்படுத்தப்படும் குடிநீர் அளவு தானாகக் குறையும். மின்கட்டணமும் மிச்சமாகும். உள்ளாட்சிக்கு வருவாயும் கிடைக்கும்.

சூரியஒளி அதிகமாகக் கிடைக்கும் தமிழகத்தில் தெரு மின்விளக்குகள் அனைத்தையும் சூரிய விளக்குகளாக மாற்றிவிட முடியும். நகரங்களில் முக்கிய வீதிகளில் உள்ள மின்விளக்குகளை சூரிய விளக்குகளாக மாற்றும்போது, குறிப்பிட்ட தொகையை அந்தந்தத் தெரு மக்களிடம் பங்கேற்புத் தொகையாகப் பெற்று, பராமரிப்புப் பணிகளை அந்தந்தத் தெருவின் மக்கள் குழுக்களிடமே ஒப்படைத்துவிடலாம்.

====================================================================
தமிழகத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ. 2547 கோடியில் நீர்வள – நிலவளத் திட்டம்: பொதுப்பணித் துறை அமைச்சர்

சென்னை, ஏப். 5: நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நீர்வள – நில வளத் திட்டம் ரூ. 2547 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை அறிவித்தார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைக்கான கொள்கை விளக்க குறிப்பை அவையில் தாக்கல் செய்து அமைச்சர் கூறியது:

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை நவீனப்படுத்தி கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றைப் புனரமைத்து, நீர் மேலாண்மையை மேம்படுத்துவது அவசியம். அதற்கேற்ப நீர் மற்றும் வேளாண்மையைச் சார்ந்த அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நீர்வள – நில வளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்படும் இத் திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 2547 கோடி. இதனை ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 63 உப வடிநிலங்களில் அணைகள், கால்வாய்கள், கிளைக் கால்வாய்கள் அவற்றின் கட்டுமானங்கள் ஆகியவை சீரமைத்து மேம்படுத்தப்படும்.

இத் திட்டத்தின் மூலம் 5763 ஏரிகளை புதுப்பித்து புனரமைத்து சீர்படுத்துவதற்காக ரூ. 1068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செலவில் 75 சதவிகிதம் தமிழக அரசும் 25 சதவிகிதம் மத்திய அரசும் ஏற்கும்.

ஒருங்கிணைந்த நீர்வள – நிலவளத் திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டு 12 உப வடிநிலங்கள் தேர்தெடுக்கப்பட்டு அவற்றில் 9 உப வடிநிலங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரூ. 399 கோடியில் 71 ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்த நிதியாண்டுக்கு ரூ. 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதர 3 உப வடிநிலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீடு அந்தந்த துறைகளுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 51 உப வடிநிலங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன.

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 6.17 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசன, நீர் உபயோகிப்போர் சங்கங்கள் 2600 அமைக்கப் பெற்று பாசன மேலாண்மையில் பாசனதாரர்களே பங்கேற்க வழிவகை செய்யப்படும்.
====================================================================
காவிரிப் படுகை மாவட்டங்களில் கால்வாய்களைச் சீரமைக்க ரூ. 40 கோடி: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 5: காவிரிப் படுகை மாவட்டங்களில் ரூ. 40 கோடியில் சிற்றாறு வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், கிருஷ்ணகுப்பம் கிராமத்தில் புதிய குட்டை ரூ. 16 லட்சத்தில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் ராசசிங்கமங்கலம் கிராமத்தில் உள்ள ஆர்.எஸ். மங்கலம் ஏரி ரூ. 5.5 கோடியில் புனரமைக்கப்படும்.

நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்து வருகிறது. செயற்கை முறையில் சிறிய குட்டைகளில் நீரைத் தேக்கி நீர் வளத்தை மேம்படுத்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 குட்டைகள் ரூ. 93 லட்சத்துக்கும், ஈரோடு மாவட்டத்தில் 3 குட்டைகள் ரூ. 63 லட்சத்துக்கும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குட்டை ரூ. 12 லட்சத்துக்கும், வேலூர் மாவட்டத்தில் 11 குட்டைகள் ரூ. 1 கோடிக்கும் ஆக மொத்தம் 20 குட்டைகள் ரூ. 2.72 கோடிக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் இந்த நிதியாண்டில் சீரமைக்கப்படும்.

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள சிற்றாறுகளையும் வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தூர்வாரவும் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காகவும் ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணாறு தொலைகல்லில் மட்ட சுவர் அமைத்து ரகுநாத காவிரி வாய்க்காலின் பாசன நிலங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கீழ்வளம் கிராமத்தின் அருகில் புக்கத்துறை ஓடையின் குறுக்கே ரூ. 45 லட்சத்தில் தடுப்பணை செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் உள்ள குமாரபாளையம் வரத்து கால்வாய்க்கு நீர் வழங்க முக்தா நதியின் குறுக்கே ரூ. 25 லட்சத்தில் தடுப்பணை அமைக்கப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம், கோமல் கிராமத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே தொலைகல் 118 கி.மீ. யில் தரை மட்டச்சுவர் கட்டும் திட்டம் ரூ. 40 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் மாவட்டம் சோழகம்பட்டி வாரி குறுக்கே தடுப்பணை ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், ரெட்டியாபட்டியில் இருந்து கரிகாலி உத்தன்டாம்பாடி வரையில் உள்ள வழங்கு கால்வாய் மற்றும் உத்திராட்ச கோம்பையில் உள்ள அணைக்கட்டுகளை சீரமைக்கும் திட்டம் ரூ. 1.98 கோடியில் செயல்படுத்தப்படும்.

========================================================================
இணைந்தால் வளர்ச்சி

ஒரு பக்கம் வறட்சி, மறு பக்கம் வெள்ளம். இவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண உதவிகள். இது, ஆண்டுதோறும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்கு முடிவு கட்ட முக்கிய நதிகளை இணைக்கலாம் என்று பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவரும் யோசனை இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்பதும், பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால் அவற்றுக்கிடையே கருத்தொற்றுமை காண்பதில் உள்ள சிக்கலுமே இதன் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஓடும் ஆறுகளில் உள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சில ஆறுகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆறுகளில் மட்டுமன்றி ஏரி, குளங்களில் தொடர்ந்து நீரின் அளவைப் பராமரிக்கவும், பெரும்பாலான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கவும் இத் திட்டம் உதவும்.

முதற்கட்டமாக கோரையாற்றில் இருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய், பெண்ணையாற்றை செய்யாற்றுடன் இணைப்பது, தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வரும் நீரை நம்பியாறு, கருமேனியாறு வரை எடுத்துச் செல்வது ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பலன் கிடைக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை நீர்வள ஆதாரத்தில் எப்போதும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இங்கு மேற்பரப்பு நீர் அனைத்தும் ஏறக்குறைய பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் நிலத்தடி நீரை முற்றிலும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் அதுவும் விவசாயம் மற்றும் பொது உபயோகங்களுக்குத் தொடர்ந்து உறிஞ்சப்படுவதால் காலப்போக்கில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மற்றும் ஆந்திரத்தில் கணிசமான நீர் ஆதாரங்கள் உள்ளன. எனவே பற்றாக்குறையைப் போக்க அந்த மாநிலங்களின் உபரி நீரை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இதற்குத் தீர்வு காண தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை ஒரு யோசனை தெரிவித்துள்ளது. உபரி மற்றும் பற்றாக்குறை படுகையைத் தேர்வு செய்து மகாநதியிலும், கோதாவரியிலும் கிடைக்கும் உபரிநீரை கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை மற்றும் குண்டாறு படுகைகளுக்குத் திருப்பிவிடலாம் என்பதே அந்த யோசனையாகும். இதன்படி மகாநதி, கோதாவரியின் உபரி நீர் கிருஷ்ணா மற்றும் பெண்ணாற்றுக்குத் திருப்பி விடப்படும். அங்கிருந்து கல்லணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். இத்தகைய இணைப்புகளை மேற்கொண்டால் அது அந்த நீர் வரும் வழியில் உள்ள மாநிலங்களில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அரசின் கருத்து. இத்தகைய திட்டத்தினால் நீர்வழிச் சாலையை உருவாக்கலாம் என்று ஒரு நிபுணர் தெரிவித்துள்ள கருத்தும் பரிசீலனைக்குரியது.

இது தவிர ஏரிகளைப் பாதுகாக்கச் சட்டம் கொண்டு வரவும் அரசு உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் விளைநிலங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் சாகுபடி நிலங்களின் அளவு படிப்படியாகக் குறைந்து ஒரு நேரத்தில் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதற்கு முடிவு கட்ட மேற்கண்ட திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
=====================================================================

————————————————————————————————-
தாகம் தணியும் நாள் எந்நாளோ?

உ.ரா. வரதராசன்

வெளிநாட்டுப் பயணம் ஒன்றின்போது, விமானத்தில் படிக்கக் கிடைத்த லண்டன் நாளேடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட விளம்பரம் ஒன்று, அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையைப் பளிச்சென்று பறைசாற்றியது.

“லண்டன் நகரின் ஆடம்பரக் குடியிருப்புகளில் வசிப்பவர்களை விட, குடிதண்ணீருக்கு அதிக விலை கொடுப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பிய அந்த விளம்பரம் அதற்கான பதிலையும் தந்தது: – அது – “”வளரும் நாடுகளின் வறுமைமிக்கக் குடிசைப்பகுதிகளில்தான்!” ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் – 2006-ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கை தண்ணீர்ப் பிரச்னையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.

“உணவு இல்லாமல் பட்டினி கிடக்க நேரிட்டால்கூட, 21 நாள்கள் வரை உடலில் உயிர் ஒட்டிக் கிடக்க முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் 10 நாள்களுக்கு மேல் உயிர் வாழ்வது அரிது; பிராணவாயு இல்லாமல் எட்டு நிமிடங்களுக்கு மேல் உயிர் தாங்காது’, என்பது ஒரு கருத்து. தண்ணீரும், பிராணவாயுவும் இன்றி மக்கள் உயிர் வாழ முடியாது என்பதால்தான், ஐ.நா. சபை 2002-ஆம் ஆண்டில் “தண்ணீர் – ஒரு மனித உரிமை, என்று அறிவித்தது. அந்த தண்ணீர் போதுமானதாகவும், பாதுகாப்பானதாகவும், ஏற்புடையதாகவும், எளிதில் எட்டக் கூடியதாகவும் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாகவும் – அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியது.

மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட 19-ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானி தாமஸ் மால்த்தூஸ், உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் உலக நாடுகளை மிரட்சியில் ஆழ்த்தும் பரிமாணத்தை எட்டிவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “மால்தூசின் தத்துவம்’ என்றே மக்கள்தொகை பற்றிய அவரது ஆய்வு சுட்டப்படுகிறது. இதே கோணத்தில்தான் தண்ணீர் பற்றிய சர்வதேச அரங்கிலான விவாதங்களில் கருத்துகள் இடம்பெற்று வந்துள்ளன. “மக்கள்தொகை பெருகப்பெருக, தண்ணீர் தேவையும் அதிகமாகிறது; விளைவு – எதிர்காலத்தில், தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது” என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மனித வளர்ச்சி அறிக்கை – 2006 இந்த வாதத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது. “ஒரு சில நாடுகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு கவலைதரும் பிரச்னையாக இருக்கலாம்; ஆனால் சர்வதேச ரீதியில், பற்றாக்குறையும், நெருக்கடியும் எழுவதாகச் சொல்ல முடியாது. வறுமையும், ஏற்றத்தாழ்வும், அரசியல் அதிகாரம் யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பவையே, உலக தண்ணீர் நெருக்கடியின் மையமான பிரச்னைகள்’ என்று ஆய்வின் அடிப்படையிலான ஏராளமான விவரங்களைக் கொண்டு நிலைநாட்ட முற்படுகிறது அந்த அறிக்கை.

உயிர் வாழ்வதற்கான தண்ணீர்ப் பிரச்னை மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. அவை ~

  1. சுத்தமான குடிநீர் வழங்குவது,
  2. கழிவு நீரை அகற்றுவது,
  3. உடற்கழிவுகளை (சிறுநீர், மலம்) வெளியேற்றுவதற்கான சுகாதாரமான ஏற்பாடு.

மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு இவை மூன்றும் இன்றியமையாதவை. ஆனால், உண்மையான நிலவரம் என்ன?
வளரும் நாடுகளில் 110 கோடிபேர் போதுமான தண்ணீருக்கு வழியில்லாமல் திண்டாடுபவர்கள்; 260 கோடிபேர் கழிப்பறை வசதிகள் இன்றி அவதிப்படுபவர்கள். இது வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல். இது தண்ணீர்ப் பற்றாக்குறையால் நேரிடும் கொடுமையா என்றால், இல்லை.

வீட்டு உபயோகத்திற்காக மட்டும் தேவைப்படுகிற தண்ணீரின் அளவு, உலகளாவிய நீர்வளத்தில் 5 சதவிகிதத்திற்கும் குறைவுதான். அடிப்படையான மனிதத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 20 லிட்டர் தண்ணீர் அவசியமானது. தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குக் காரணம் பற்றாக்குறை அல்ல; இன்றைய ஆட்சி அமைப்பும், அரசியல் அதிகாரத்தைச் செலுத்துவோரின் தலைகீழான முன்னுரிமைகளுமே.

உலக நாடுகள் பெரும்பாலானவற்றின் பெருவாரி மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுவதன் கோர விளைவுகள் சில வருமாறு:

வாந்திபேதியால் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது; அதாவது – நாளொன்றுக்கு 4900 சாவுகள். 1990-களில், ஆயுத மோதல்களில் இறந்தோரைவிட அசுத்தமான குடிநீர், சுகாதாரமின்மை காரணமான நோய்களில் இறந்த குழந்தைகள் எண்ணிக்கை ஆறு மடங்காக உயர்ந்தது.

தண்ணீர்ப் பிரச்னை தொடர்பான உடல்நலப் பாதிப்பு காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத பள்ளி நாள்கள் ஆண்டொன்றுக்கு 44 கோடிக்கு மேல்.

வளரும் நாடுகளின் மக்கள்தொகையில் பாதிக்குமேல் தண்ணீர் – சுகாதாரக் குறைபாடுகளால் ஏதாவதொரு வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுறுவது அன்றாட நிகழ்வு. ஒவ்வொரு நாளும், தண்ணீருக்காக லட்சக்கணக்கான பெண்கள் பல மணி நேரம் செலவிட நேரிடுகிறது.

இளமையில் தண்ணீர் – சுகாதாரமின்மை காரணமாக நோய்வாய்ப்பட்டும், கல்வி வாய்ப்பை இழந்தும் பாதிப்புறுகிற லட்சக்கணக்கான குழந்தைகள், வளர்ந்த நிலையில் வறுமையைத் தழுவ நேரிடுகிறது. இவ்வாறெல்லாம் பாதிப்புற்று இழக்கப்படுகிற மனித வள ஆதாரங்கள் காரணமாக, உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார இழப்புகள் அளவிட முடியாதவை.

இந்த நிலைமைகளுக்கு மாற்றமே இல்லையா?

20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டுக்கான மனித வளர்ச்சி இலக்குகளை வரையறை செய்தனர். 2015-ஆம் ஆண்டுக்குள் வறுமை, பட்டினி, குழந்தை இறப்புகள், கல்வியின்மை, பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை, சரிபாதியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. “பாதுகாப்பான குடிநீரும், அடிப்படை சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறாத உலக மக்களின் எண்ணிக்கையை 2015-க்குள் சரிபாதியாகக் குறைக்க வேண்டும்’ என்பது திட்டவட்டமான இலக்கு.

ஆனால், இந்த இலக்குகளை எட்ட நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு பத்தாண்டுகளுக்கும் குறைவாகவே உள்ள இன்றைய தருணத்தில், இதற்கான முயற்சிகள் காததூரத்திலேயே உள்ளன என்பதுதான் வேதனையான அம்சம்.

தாகத்தால் நா வறண்டு நிற்கும் மக்களின் தண்ணீர்த் தேவைகளை நிறைவேற்றுவதற்குக் குறுக்கே நிற்பது எது? நிதிப்பற்றாக்குறையா?

குடிதண்ணீர், சுகாதாரத் தேவைகளை மட்டுமல்ல, வளர்ச்சி இலக்குகள் அனைத்தையுமே 2015-க்குள் எட்டுவதற்குத் தேவையான நிதி ஆயிரம் கோடி டாலர்கள். (சுமார் ரூ. 40 ஆயிரம் கோடி)

“ஓ, இவ்வளவு பெரிய தொகையா? என்று மலைக்கத் தேவையில்லை. இது, உலகநாடுகள் ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையில், ஐந்தே நாள்களுக்கான செலவுக்கு மட்டுமே ஈடான தொகைதான்! பணக்கார நாடுகள் ஆண்டுதோறும் “மினரல் வாட்டருக்காக’ச் செலவிடும் தொகையில் சரிபாதிக்கும் குறைவே! எனவே, இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது, அவற்றை வரையறுத்த உலக நாடுகளின் தலைவர்களின் உறுதியான நிலைப்பாடு என்ற உரைகல்லைப் பொருத்த விஷயம்தான்.

2015-ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிர்வாகம் இன்னோர் இலக்கையும் நிர்ணயித்திருக்கிறது. வியாழன் கிரகத்தின் பனிநிலவுகள் பற்றிய ஆராய்ச்சிக்காக விண்கலத்தை அனுப்பி, அந்த சந்திர மண்டலங்களின் பனிப்படலங்களுக்கு அடியில் உள்ள உப்புநீர் ஏரிகளை ஆய்வு செய்து, அங்கு உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்று அறிவது அதன் நோக்கம். அதற்காகச் செலவிடப்படும் ஆயிரம்கோடி டாலர்கள் – அதற்குத் தேவைப்படும் தொழில் நுணுக்கம் – இவற்றோடு ஒப்பிடுகையில், மனித வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான செலவும், முயற்சியும், அற்பசொற்பமானவையே!

உலக மக்களின் தாகம் தணியும் நாள் எந்நாளோ?..

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

Posted in Alternate, Analysis, Aquafina, Arms, Backgrounder, Backgrounders, Bathroom, Bills, Bio, Bottled, Budget, Cauvery, Charges, Coke, Crap, Dasani, defecate, Developed, Developing, Diarrhea, Distribution, Drinking, Electricity, energy, Environment, Excrement, Expensive, Exploit, Fights, Finance, Fine, Gold, Govt, Ground, HR, Hunger, Income, Interlink, Interlinking, Kaviri, Local Body, Loss, Municipality, Nations, oil, Op-Ed, Options, Pee, Pepsi, Plans, Pollution, Poop, Power, Private, Privatization, PWD, Restroom, Revenues, River, Sand, Schemes, Shit, Soda, Solar, solutions, Tax, Toilets, Urine, Water, Weapons, World | 4 Comments »