Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Singh’ Category

Kudos to Manmohan Singh’s Nuclear-Energy U-Turn: India – US Accord

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

சபாஷ், சரியான முடிவு!

பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.

ஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.

இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.

காலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.

அமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.

அணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்து தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.

பிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி!

————————————————————————————————-

ஏனிந்தத் தடுமாற்றம்?
October 18, Thursday

ஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே? இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல் நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.

இப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.

இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.

அமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.

இந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்! அதுதான் நமது வேண்டுகோள்.

——————————————————————————————————————————–

குளறுபடியான செயல்பாடே மேல்!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.

அதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.

பிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள்? அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.

அதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

முதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.

மறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.

மன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.

கடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.

இது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.

அமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.

நமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Accord, Agreement, Alliance, America, Atomic, BJP, Bush, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, deal, Electricity, energy, GWB, India, Kudos, Left, Manifesto, Manmohan, minority, NDA, Nuclear, Op-Ed, Party, PM, Politics, Power, Principles, Singh, Sonia, UDA, US, USA | Leave a Comment »

RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

நியாயமில்லை, நியாயமேயில்லை…!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing).  இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.

இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.

Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »

Sikhs seek apology from dera chief: Punjab tense after clashes

Posted by Snapjudge மேல் மே 17, 2007

டேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்

ஜம்முவில் “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராமை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்.

புது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட “”டேரா சச்சா செüதா” என்ற அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

சீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். இதனால் சீக்கியர்கள் வெகுண்டு அதை ஆட்சேபித்தனர். அப்போது தலையிட்ட போலீஸôருக்கும் பாபாவின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பும் மோதலும் நடைபெற்றது. பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். பாபாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

“இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது’ என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.

“பாபா இப்போது ஹரியாணாவில் வசிக்கிறார். ஹரியாணாவில் ஆட்சி செய்யும் அரசு ஒத்துழைப்பு அளித்தால்தான் அவரைக் கைது செய்ய முடியும்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

(பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன).

“ஹரியாணா அரசிடம் இதுகுறித்துப் பேசிவிட்டேன், யார் யாரிடம் என்னென்ன கூற வேண்டுமோ அவை கூறப்பட்டுவிட்டன, எல்லாவித உதவிகளையும் வழங்க அரசு தயாராக இருக்கிறது’ என்று சிவராஜ் பாட்டீல் அதற்குப் பதில் அளித்தார்.

“நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் செயல் இது; இது நாட்டை முன்னேற்றப் பாதையில் செல்லவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டை போன்றது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது’ என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

“சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்’ என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.

“கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).

அரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாடு) எச்சரித்தார்.


பஞ்சாபில் வேலை நிறுத்தம்

சீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
சீக்கியர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சௌதா என்னும் மதப்பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் நடந்த வன்செயல்களை அடுத்து, இன்று அங்கு ஒரு பொது வேலை நிறுத்தம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களால் போற்றப்படும் ஒரு சீக்கிய புனிதரின் உடையை அணிந்து, இந்த சௌதா மதப்பிரிவின் தலைவர் விளம்பரங்களில் தோன்றியதால், சீக்கியர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதை அடுத்தே இந்த பிரச்சினைகள் ஆரம்பமாகின.

இந்தக் குழுவின் இடங்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட வேண்டும் என்று சீக்கியத் தலைவர்கள் கேட்டனர்.

தம்மை மத சார்பற்ற ஒரு குழுவாக இவர்கள் வர்ணிப்பதாகக் கூறுகிறார் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு செய்தியாளரான அசிட் ஜொலி.

அந்தக் குழு சீக்கிய மதம், இந்து மதம் ஆகியவற்றின் பெரும்பாலும் தலித்துகள், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்களை தன்னுள் ஈர்த்துள்ளது. ஹரியானாவுடனான, பஞ்சாபின் எல்லையில் இதன் முக்கிய தளம் அமைந்துள்ளது.

பல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்
பல்வேறு மதங்களில் இருந்து வந்தவர்களே இந்த தெரா சச்சா சௌதா பிரிவில் உள்ளனர்

இந்த அமைப்பின் சர்ச்சைக்குரிய தலைவரின் பெயர் பாபா குர்மீட் ராம் ரஹீம் சிங் என்பதாகும். அனைத்து மத பெயர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் அவர்.

குர்மீட் ராம் ரஹீம் சிங் மீது அவருக்கு நெருக்கமான சகாக்கள் மீது சிபிஐ பல புகார்கள் குறித்து விசாரித்து வருகிறது. இவற்றில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளும் அடங்கும். ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றச்சாட்டும் அதில் அடங்கும். ஆனால் இவை அனைத்தும் இன்னமும் நீதிமன்றத்தில்தான் இருக்கின்றன. சீக்கிய மத சின்னங்களை இவர் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தினார் என்ற காரணமே அண்மைய வன்செயல்களுக்கு வழி செய்தன. இது சீக்கியர்களின் மன உணர்வுகளைத் தூண்டிவிட்டது. ஆனால், இது தொடர்பாக முழுமையான மன்னிப்புக் கோரவும் அந்தக் குழு மறுத்துவிட்டது.

Posted in Akal Takht, Akali, Akali dal, Akalidal, Amritsar, Arya Samaj, Baba, Badal, Baluchistan, Ban, Bandh, BJP, clash, clergy, Community, Damdami Taksal, Defamation, dera, Dera Sacha Sauda, Divya Jyoti Jagran Sansthan, DSS, Gobind Singh, Gurdwara, Gurmeet, Gurmit, Gurmit Ram Rahim, Guru, Haryana, Hindu, Hindutva, Impersonation, J&K, Jammu, Jammu and Kashmir, Kashmir, Law, Ludhiana, Order, Panch Pyaara, Panch Pyara, Patiala, Police, Politics, priests, Protest, Punjab, Rajasthan, Religion, Sacrilege, SAD, SGPC, Shah Mastana, Shrine, Sikh, Singh, Temple, Tension | Leave a Comment »