Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Singapore’ Category

External Affairs – Indians held in Foreign Prisons: N Sureshkumar

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்

என். சுரேஷ்குமார்

ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்

  • சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
  • துபாயில் 825,
  • சிங்கப்பூரில் 791,
  • பாகிஸ்தானில் 655,
  • மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.

இதேபோல

  • லண்டனில் 239 பேர்,
  • அமெரிக்காவில் 218,
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
  • ஆப்பிரிக்காவில் 29 பேர்,
  • பெல்ஜியம்,
  • டென்மார்க்,
  • பிரான்ஸ்,
  • ஹாங்காங்,
  • லிபேரியா,
  • நெதர்லாந்து,
  • சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
  • இத்தாலி,
  • ஸ்பெயின்,
  • கிரீஸ்,
  • போர்ச்சுகலில் 103 பேர்,
  • செக் குடியரசு,
  • போலந்து,
  • பெலாரஸ்,
  • மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.

இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.

இரண்டாவது நமது இந்திய அரசு.

புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.

வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.

இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.

வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.

குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?

Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »

Raj TV To Export Content To Singapore’s TV12 For Rs. 3 Cr.

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007

சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ராஜ் டி.வி. புதிய ஒப்பந்தம்

சென்னை, ஏப். 8: ராஜ் டி.வி. நிறுவனம் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ராஜ் டி.வி. சிங்கப்பூர் அரசின் தொலைக்காட்சியான டி.வி.12 நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனது பல்வேறு நிகழ்ச்சிகளை டி.வி.12 நிறுவனத்தின் பிரபல தமிழ்ச் சேனலான வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் தங்களது செய்திகள், திரைப்படங்கள், தொடர்கள், கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. வசந்தம் சென்ட்ரலுடன் பகிர்ந்துகொள்ளும். இதுகுறித்து ராஜ் டி.வி.யின் செயல் இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: சிங்கப்பூரின் பிரபல சேனலான வசந்தம் சென்ட்ரலுக்கு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல இந்திய நிகழ்ச்சிகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பாகி வருகின்றன.

கட்டணம் இல்லாமல் தெரியும் வசந்தம் சென்ட்ரல் சேனலை சுமார் 10 லட்சம் நேயர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ராஜ் டி.வி. ஏற்கெனவே இலங்கையின் ரூபவாஹினி, இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ்ச் சேனல்கள், தீபம் டி.வி. மற்றும் சி.ஐ.இ.இ. சேனல்களுக்கு தனது நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

இந்த ஒப்பந்தம் மூலம் நேயர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவோம். 1500 மணி நேர டி.வி. நிகழ்ச்சிகளை வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புவதன் மூலம் வருடத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் வருவாயை ராஜ் டி.வி. பெறும் என்றார்.

Posted in channel, CIEE, CIEE TV, Commerce, Company, Deepam, Deepam TV, Economy, Industry, Programmes, Raj, Raj TV, Roobavahini, Roopavahini, Rubavahini, Rupavaahini, Rupavahini, Shares, Singapore, Sri lanka, Srilanka, Stocks, Sun, Tamil channels, Television, TV, TV12, Vasantham, Vasantham Central | 3 Comments »

“Sify gives wrong details on Rajni & Shankar with AR Rehman’s ‘Sivaji’ The Boss” – AVM

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்

சென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.

இதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.

ஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.

எங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.

ஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Abroad, Aingaran, Andhra, Andhra Pradesh, AP, ARR, Audio, AVM, AVM Sarvanan, Ayngaran, Aynkaran, Canada, Distributor, DVD, Europe, Iyngaran, Iynkaran, Karunamoorthy, Karunamurthy, Kerala, Kolywood, Market, NRI, Overseas, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rehman, Rumour, Sale, Sarvanan, Shankar, Shivaji, Shivaji the boss, Sify, Singapore, Sivaji, Sivaji Story, Sivaji the Boss, Sri lanka, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Pictures, Tamil Stars, Telugu, Tollywood, VCD, video | Leave a Comment »

6000 Indians are imprisoned all over the World

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

உலகம் முழுவதும் 6 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு சிறைகளில் அடைப்பு

புது தில்லி, மார்ச் 9: உலகம் முழுவதும் 6,277 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான் சிறைகளைவிட வங்கதேச சிறைகளில்தான் அதிக இந்தியர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். பாகிஸ்தான் சிறைகளில் 655 இந்தியர்கள் உள்ளனர். வங்கதேசத்தில் 893 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சவூதி அரேபியாவில்தான் அதிகபட்சமாக 1,116 இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் (791), மலேசியா (545), பிரிட்டன் (239), அமெரிக்கா (194), குவைத் (106), பஹ்ரைன் (101), செக்கோஸ்லோவேகியா (37), ஸ்லோவேகியா (100) ஆகிய நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காக தண்டனை பெற்று இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சிறைகளில் உள்ள இந்தியர்களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசாரணையை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு அந்தந்த நாடுகளை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கைதிகளுக்கு சட்ட உதவிகளை வழங்குவது, கைதிகள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்வது, கைதிகளை மனிதாபிமான முறையில் நடத்துவது, சட்டப்பூர்வமாக அவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுத்தருவது, விடுதலையாகும் கைதிகளை இந்தியாவுக்கு கொண்டுவருவது ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் ஊழியர்களின் உரிமைக்காக வளைகுடா நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அரசு யோசனை செய்துவருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Ambassador, Bahrain, Bangladesh, Britain, Conuslate, Correctional, Courts, Czech, employee, Employment, England, extradition, Free, Government, Gulf, Immigration, Imprison, India, Indians, Jail, Jobs, Law, London, Malaysia, Order, Pakistan, Police, Prison, Saudi Arabia, Singapore, Slovakia, Statistics, Treaty, UK, US, USA, World | Leave a Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »