Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Shows’ Category

Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

“சீசன்’ சிந்தனைகள்

சாருகேசி

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.

கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.

நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.

ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.

கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.

ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.

சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!

இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.

பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.

சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.

இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »

Fr Jegath Gasper Raj & Tamil Mayyam’s December Music Celebrations: Festival of Love

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

அன்பின் திருவிழா!

கிருஸ்து பிறந்த தினத்தையொட்டி டிச.20 முதல் 28 வரையான எட்டு தினங்களை “அன்பின் காலம்’ என்று கொண்டாடுகிறது தமிழ் மையம் அமைப்பு. இந்தத் திருநாளின் மைய அம்சம் கிருஸ்து பிறந்த நாளாக இருந்தாலும் இதை ஒரு தமிழ்த் திருவிழாவாக- எல்லோருக்குமான விழாவாகக் கொண்டாடுவதுதான் இதில் சிறப்பம்சம்.

அட என்று ஆச்சர்யப்படுகிறவர்களுக்கு இதோ மேலும் ஆச்சர்யங்கள்…

“”சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் பள்ளி மைதானத்தில் நடைபெறும் இந்த அன்பின் திருவிழாவில் முதல் நாள் விழாவில் இறைவாழ்த்தாக அங்கு இசைக்க இருப்பது திருவள்ளுவரின் “அகரமுதல எழுத்தெல்லாம்’.

இரண்டாவது, மண் வாழ்த்து. உலகுக்கே முதலில் ஒற்றுமையை வலியுறுத்திய “யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அடுத்தது உழைப்பவர் வாழ்த்து… கம்பர் எழுதிய ஏரெழுபது பாடல்.. மார்கழி மாதம் என்பதால் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் அரங்கேறுகிறது” என்கிறார் விழா ஒருங்கிணைப்பாளர் ஃபாதர் ஜெகத் காஸ்பர் ராஜ்.

பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக் பாடிய பிரத்யேக ஆடியோ சி.டி. ஒன்றும் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “ப்ரே ஃபார் மீ, பிரதர்’, 100 கிருஸ்துமஸ் தாத்தாக்கள் தமிழகம் முழக்கச் சென்று பரிசுப் பொருட்கள் வழங்குகிறார்கள். பதிலாக நாம் பரிசுப் பொருட்கள் வழங்கினாலும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று செய்தி வெளியாகியிருந்தது. அதை என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்டோம் காஸ்பர் ராஜிடம்.

“”அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்குகிறோம். இதைத் தவிர கட்டடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கான திட்டம் ஒன்றும் இந்த விழாவுடன் சேர்ந்து செயல்பட இருக்கிறது. கட்டடத் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இடம் மாறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது. அதனால் அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதைவிட அவர்கள் இருக்கும் இடத்துக்கு ஆசிரியரை அனுப்பிப் பாடம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அந்தந்த கட்ட உரிமையாளர்கள், பில்டர்களின் தயவு தேவை. அவர்கள் கட்டடம் கட்டும் இடத்திலேயே சற்று இடம் ஒதுக்கித் தந்தால் நாங்களே ஆசிரியர் அனுப்பி பாடம் நடத்தத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஓரளவுக்குக் கல்வி கிடைக்க வசதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.”

“”இது தவிர வேறு திட்டங்கள் உண்டா?” என்றோம்.

“”சென்னை நகரத்தில் வீடடற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புரத்தில் இருந்து வாழ்வாதாரம் இழந்து நாள்தோறும் சென்னைக்கு வந்த வண்ணமிருக்கிறார்கள். சாலையோரங்களில், நகரத்துச் சேரிகளில் வாழும் அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறும் காஸ்பர், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் இது சம்பந்தமாக என்ன செய்ய முடியும் என்று அரசாங்க ரீதியாக கோரிக்கை வைப்பது சமூக ரீதியாக ஆதரவு திரட்டுவது என செயல்படுவோம் என்கிறார்.

திருவிழா நடைபெறும் இந்த எட்டு தினங்களும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிவரை நாட்டுப்புற கலைகள் பயிற்சிப் பட்டறை ஒன்றும் நடத்தப்பட இருக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கம்புச் சண்டை, சிலம்பு ஆகியவை அங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாகவே பயிற்றுவிக்கப்படும் என்பதுதான் இதன் சுவாரஸ்ய அம்சம்.

இது தவிர 70 அடி உயர கிருஸ்துமஸ் மரம், 100 மீட்டர் நீளமுள்ள கேக், 100 கிருஸ்மஸ் தாத்தாக்கள் என்று விழாவைக் கலகலக்க வைக்கும் அம்சங்கள் ஏராளமிருக்கிறது இந்த நிகழ்ச்சியில்.

தமிழ்மகன்

Posted in Andaal, ARR, Arts, Birthday, Bombay Jayashree, Carnatic, Casper, Casperraj, Celebrations, Christ, Christian, Christianity, Christmas, Classical, Culture, December, Faith, Folk, Fr Jegath Gasper Raj, Gasper, Gasper Raj, Gasperraj, Heritage, Homeless, Jayashree, Jayashri, Jayasri, Jegath, Jegath Gasper Raj, Jesus, Jeyashree, Jeyashri, Kanimoli, Kanimozhi, Kanimozi, Labor, Labour, Labourers, music, Orphans, Performance, Rahman, Rehman, Religion, Sangam, Sangamam, Santa, Shows, Stage, Thiruppaavai, Thiruppavai, Thiruvembavai, Thiruvempavai, Trees, workers, Xmas | Leave a Comment »

Charukesi: Ramanujar & Muthusamy Dikshithar – Dinamani Theater Reviews

Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008

ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்

ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.

நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.

தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.

தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.

மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)

ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)

“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.

“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)

மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.

கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.

முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.

இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.

முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.

சாருகேசி

Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »

Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki)

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

பட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)

கர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸிகளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.

பள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார்! ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா?’

பட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.

அன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.

சங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன? அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.

நாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…

டி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…

புத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.

(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)

Posted in Biosketch, Books, Carnatic, Faces, Females, Kalki, Ladies, Legends, Margazhi, Margazi, music, Nithiyashree, Nithiyasri, Nithyashree, Nithyasri, Pattammaal, Pattammal, people, Performers, Reviews, Shows, Singers, Stage, TKP | 2 Comments »

‘TV Gopalakrishnan is my Guru’ – Ilaiyaraja

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி

“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.

சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.

கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.

Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

Thavil performer G Muthukumarasamy passes away – Carnatic Musician: Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

தவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்

கும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.

சிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

நாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.

பின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.

திருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.

Posted in Anjali, Artiste, Artistes, artists, Arts, Carnatic, G Muthukumarasami, G Muthukumarasamy, G Muthukumaraswami, G Muthukumaraswamy, Isai, music, Musician, Muthukumarasaami, Muthukumarasaamy, Muthukumarasami, Muthukumarasamy, Muthukumaraswami, Muthukumaraswamy, Performer, Performers, Shows, Stage, Thavil | 3 Comments »

Ki Parthibharaja’s Kaayatha Kaanagathey – Book Review in Unmai

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

நூல்: காயாத கானகத்தே
ஆசிரியர்: கி.பார்த்திபராஜா
வெளியீடு:ராகாஸ் அகமது வணிக வளாகம்,
12/293, இராயப்பேட்டை, நெடுஞ்சாலை,
சென்னை-14.

விலை:ரூ.100/-

தமிழ் நாடகத்தின் ஒரு கூறான இசை நாடகம் பற்றி பெரிய அளவில் ஆய்வுகளோ, பகுதிகளோ இல்லாத நிலையில் பார்த்திப ராஜாவின் காயாத கானகத்தே நூல் இசை நாடகம் பற்றிய ஒரு சிறந்த பதிவாகும்.

தென்மாவட்டங்களில் 20 பகுதி மக்களின் சமூக வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த இசை நாடகங்கள், காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் அந்த நாடகங்கள் பற்றி நூல்கள் மூலமே. இளைய தலைமுறையினர் அறியக்கூடிய நிலையில், இந்நூல் மிகவும் பயனுள்ள வரவாகும்.
மற்ற நாடகங்கள் போலன்றி இசை நாடக கலைஞர்களுக்கு கற்பனைத் திறனும், நாட்டு நடப்பில் தெளிந்த கண்ணோட்டமும், சமயோசித திறனும் இருந்தால் தான் காட்சிகளில் பரிணமிக்க முடியும்.

நாடக கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறன் அவர்களின் வாழ்வியல் நிலைகள் ஆகியவற்றை நடிகர் சங்க அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்ந்து நாடகத்தை பார்த்தும், அவர்களுடன் பழகியும் பல சுவையான தகவல்களை தொகுத்தளித்துள்ளார்.

கலைஞர்களின் திறனை வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட நடை சிறப்புடையது. அவற்றில் ஒரு சில துளிகள். வள்ளி நாடகத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நடிகை தன்னை தர்க்கத்தில் வென்றால் நடிப்புத் தொழிலையே விட்டுவிடுவேன் என்று சவால் விடுவார். அவருடன் நடிப்பதற்கு ராஜபார்ட்டுகளே அஞ்சுவார்கள்.

அவரை வேறு பகுதியைச் சேர்ந்த ஒரு நடிகர் சூழ்ச்சியால் தர்க்கத்தில் வென்றுவிட அதன் பின்னர் அந்த நடிகை அரிதாரம் பூசுவதைவிட்டு நடிப்புத் தொழிலையே விட்டுவிட்டார்.

அதேபோல் சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் குரலையும், ஆட்டத்தையும் பார்த்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கரு கலைந்து போனது. அதன்பிறகு அடுத்தடுத்த நாடகங்களில் அவர் எமன் வேடத்தில் வரும்போது கர்ப்பிணிகள் இருந்தால் சபையைவிட்டு வெளியே போய்விட்டு காட்சி முடிந்த பிறகு திரும்பிவரவும் என்ற அறிவிப்பு செய்துள்ளனர்.

அவர் நடித்த பிரகலாதன் நாடகத்தில், இரணியன் வேடம் கட்டி பிரகலாதனாக நடித்த சிறுவனை தூக்கி கீழே வீசியபடி கர்ஜனை செய்த காட்சியை பார்த்த பெண் மூர்ச்சையடைந்தார். அதிலிருந்து அவர் தொடர்ந்து நடிப்பை மேற்கொள்ள மறுத்துவிட்டார்.

அதன் பிறகு அவர் நடிக்கவேயில்லை.

இசை நாடக வரலாற்றில் பெண்களை புறந்தள்ளிவிட்டே தொடங்கியிருந்தது. அதனால் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, பாவலர் பாய்ஸ் கம்பெனி, தேசிகானந்தா பாய்ஸ் கம்பெனி என்ற பெயரிலேயே நாடக கம்பெனிகள் இருந்துள்ளன. பிறகு இசை நாடகங்களில் பெண்கள் பங்கேற்க ஆரம்பித்த பின், ஆண்கள் பெண் வேடமிடும் பழக்கம் குறைந்தது.

அப்படியும் நாடக நடிகைகளுக்கு சமூக அங்கீகாரம் பெரிய அளவில் கிடைத்துவிடவில்லை. சமூகம் தங்களை இழிவாக பார்க்கவில்லை என்றும் கூறும் நடிகைக்கள் கூட அதற்கு காரணம் பொருள் வசதியோடு இருப்பது தான் என்கின்றனர். இக்காலக் கட்டத்தில் தான் பழம்பெரும் நடிகை பாலாமணி அம்மாள் பெண்களைக்-கொண்டே நாடகக் குழுவை நடத்தி வந்துள்ளார்.

அவரது குழுவில் 50-க்கும் மேற்பபட்ட பெண்கள் இருந்துள்ளனர்.

கும்பகோணத்தில் அவர் நடத்திய தாரா சசாங்கம் என்ற நாடகத்தைப் பார்க்க, மாயவரத்திலிருந்து எட்டு மணிக்கு ஒரு ரயிலும், திருச்சியிலிருந்து எட்டரை மணிக்கு ஒரு ரயிலும் புறப்பட்டு கும்பகோணம் சென்று, நாடகம் முடிந்து நள்ளிரவு மூன்று மணிக்கு இருரயில்களும் திரும்பிச் செல்லும். நாடகம் பார்க்கும் ரசிகர்-களுக்காக விடப்பட்ட இந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்றே பெயரிட்டுள்ளனர்.

இன்றைய தமிழ் சினிமா ரசிகத் தன்மை, நடிகர், நடிகைகள் வழிபாடு, ரசிக வெறித்தனம் போன்றவை ஒன்றும் புதியதல்ல. அது ஏற்கனவே நாடக வரலாற்றில் காண முடிகிறது. முழுஇரவு நாடகங்கள் முற்றாக மறைந்துவிட்ட நிலையில், அவற்றை பற்றிய ஒரு தொகுப்பு நூல் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும். இந்த அளவுக்கு களப்பணி செய்து, ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு; சுவைபட எழுதப்பட்ட நூல் இது.

நூலாசிரியரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Posted in Actors, artists, Books, Cinema, Documents, Drama, Fieldwork, Films, History, Incidents, Literature, Movies, music, Paarthibharaja, Parthibharaja, Performance, Research, review, Shows, Stage, Theater, Theatre, Unmai | Leave a Comment »

Ndigar Sangam Collection Fund – Stars to perform

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

நடிகர் சங்க கட்டிட நிதிதிரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா

சென்னை,டிச.8- நடிகர் சங்கம் தொடங்கி 54 ஆண்டுகள் ஆகிறது. தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் இச் சங்கத்துக்கு சொந்தமான கட்டிடம் பழுதாகியுள்ளது அதை இடித்து தள்ளி 5மாடி யில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள

  • சரத்குமார்,
  • பொதுச் செயலாளர் ராதாரவி,
  • துணைத்தலைவர்கள் மனோரமா,
  • விஜயகுமார்,
  • பொருளாளர் காளை ஆகியோர் புதிய கட்டிடம் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சங்க கட்டிடத்தில் செயல் படும் கேண்டீன், டப்பிங் ஸ்டூடியோ, போன்றவற்றை காலி செய்யுமாறு சரத்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஓரிரு மாதங்களில் புது கட்டிடம் கட்டும்பணி தொடங்க உள்ளது. கலையரங்கம், மினி தியேட்டர், நூலகம், தங்கும் விடுதிகள் போன்றவை 5மாடி கட்டிடத்தில் அமைய் உள்ளன.

புதிய கட்டிடம் கட்ட பல கோடிகள் செலவாகும். நடி கர் சங்கத்தில் தற்போது 3062 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் சந்தாதொகை வசூலிக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தின் கடந்த வருட கணக் குப்படி 1கோடியே 64லட் சத்து 69 ஆயிரத்து 871 ரூபாய் இருப்பு இருந்தது. இவற்றில் சங்க உறுப்பினர்கள் குழந் தைகளுக்கு கல்வி உதவி தொகை, மருத்துவஉதவி தொகை போன்றவை வழங் கப்படுகின்றன.

எனவே புது கட்டிடத்திற்கு நிதிதேவை அதிகம் உள்ளது. ஏற்கனவே பாங்கியில் வாங்கி அதற்காக பெருந் தொகை வட்டியாக கொடுக் கப்பட்டதால் மீண்டும் கணிச மான தொகை கடனாக வாங்குவதில் மெஜாரிட்டி உறுப்பினர்களுக்கு உடன்பாடு இல்லை.

நடிகர், நடிகைகள் பங்கு பெறும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிடம் கட்ட நிதி திரட்டலாம் என்று அவர்கள் யோசனை தெரிவித்துள்ள னர். இது குறித்து சமீபத்தில் நடந்த நடிகர்,சங்க செயற்குழு வில் விவாதிக்கப்பட்டது. இந்த மாதம் இறுதியில் கூடும் செயற்குழுவில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை ஆகிய ஏதேனும் ஒரு நகரில் நட்சத்திரகலை, விழாவை நடத்தலாம் என்றும் சில உறுப்பினர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் கலை விழாவை நடத்தலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளன.

நடிகர்சங்கத்தில் மாளவிகா, டைரக்டர் டி.பி.கஜேந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

Posted in Collection, Construction, FEFSI, Festival, Fund, Improvements, Income, Malavika, manorama, Nadigar Sangam, Radha Ravi, Sarathkumar, Shows, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Pictures, Thamizh Movies, TP Gajendran, Vijayakumar | Leave a Comment »