விலைபோகும் கம்ப்யூட்டர் படிப்புகள்
சென்னை, மே 22: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் விற்பனையாகிக் கொண்டிருப்பது ஒரு புறம் இருக்க, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை போகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை.
“பிளஸ் 2′ தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளையே பெரும்பாலான மாணவர்கள் விரும்புகிறார்கள்.
காரணம், சாஃப்ட்வேர் தொழிலில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதே. அத்துடன், பொறியியல் கல்லூரிகளில் படிப்போருக்கு “கேம்பஸ் இன்டர்வியூ’ மூலம் வேலை கிடைக்க சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு செய்து வருகிறது.
பி.இ. படித்தால், நிறைய சம்பளத்துடன் நிச்சயம் நல்ல வேலை என்ற நிலை உருவாகியுள்ளதால், இப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும் ஆயிரம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதன் விளைவாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நிறைய பேர் போட்டியிடுகிறார்கள். எனவே, அதற்கு “விலை’ என்ற ரீதியில் நன்கொடைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சில முன்னணிக் கல்லூரிகளில் மேற்கண்ட படிப்புகளில் சேர கல்விக் கட்டணம் நீங்கலாக ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் வசூலிக்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே இக் கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் வரை கொடுத்து தங்களுடைய இடங்களை முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.
இவ்வாறு நிர்வாக இடங்களில் மாணவர்கள் சேர கட்டணம் வசூலிப்பது, பதிவு செய்து கொள்வது குறித்து தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “”அவ்வாறு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அவர்கள் எங்கள் கல்லூரிகளில் என்னென்ன படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று விசாரித்து வருகிறார்கள். அவ்வளவுதான் பதிவு செய்வில்லை” என்றனர்.
“பிளஸ் 2′ தேர்வு முடிவு வெளியாகும் முன்பு பல பொறியியல் கல்லூரிகளில் முன்பதிவு செய்வதற்காக ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம் எனப் பல பெற்றோர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு பதிவு செய்த மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படுவதாகச் சில பெற்றோர்கள் கூறினர்.
பிளஸ் 2 தேர்வு வெளியான பின், மிக நல்ல மதிப்பெண்ணைப் பெற்றவர்களையே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள் என்பது விசாரித்தபோது தெரியவந்தது.
இதனிடையில், நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் ஒற்றைச் சாளர முறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாகவே, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் வசூலித்த “முன்பதிவுக் கட்டணத்தை’ கல்லூரி நிர்வாகங்கள் திருப்பித் தருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வழக்கம்போல், சிவில், மெக்கானிக்கல் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு இத்தகைய கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காரணம், இப்படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் மிக மிகக் குறைவு.