Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Scheduled Tribe’ Category

‘Arundhathi caste needs separate reservation quota’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் . உடன் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகோபால், பொதுச் செயலாளர் பாபு நாயுடு, மாநிலத் தலைவர் முத்துவேல்ராஜ் மற்றும் புரவலர் சி.எம்.கே. ரெட்டி.

சென்னை, பிப். 5: அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியது:

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து அருந்ததியினர் இனத்துக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அருந்ததியினர் இனத்துக்கு தனி ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தாழ்வு மனப்பாண்மையால் ஒரு மொழி அழிந்துவிடக் கூடாது. இதற்காகவே தமிழைப் பாதுகாப்பதில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் பங்கெடுத்து வருகிறது.

இதனால் மற்ற மொழிகளுக்கு இந்த இயக்கம் எதிரிகள் கிடையாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதே விடுதலை சிறுத்தைகளின் முதல் குறிக்கோளாகும். ஆதிக்கம், அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதனடிப்படையில்தான் தற்போது மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மொழியின் வழியில் மக்களை ஒருங்கிணைத்து வளம் பெறச் செய்யும் உயர்ந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டுள்ள இந்தப் பேரவைக்கு விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார் திருமாவளவன்.

விழாவில்

  • அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் சி.எம்.கே. ரெட்டி,
  • ஹைதராபாத் ஹனுமந்தராயா கல்வி அறக்கட்டளை செயலாளர் பி. பாலாஜி,
  • தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் சி. வெங்கடசுப்பு,
  • பி. முத்துராஜ்,
  • எஸ். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொழிச் சிறுபான்மையினர் நலத்துக்கென தனி வாரியம் ஒன்றை அரசு அமைத்திடவேண்டும்.

விடுதலைக்கு முழக்கமிட்டு உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை மீண்டும் அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சௌராஷ்டிரம் உள்ளிட்ட தமிழல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான பாதுகாப்புப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மொழி சிறுபான்மையோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தப் பேரவையின் புரவலராக சி.எம்.கே. ரெட்டி, மாநிலத் தலைவர் பி. முத்துவேல்ராஜ், பொதுச் செயலராக பாபு நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

—————————————————————————————————————————-
அருந்ததியர் உள் ஒதுக்கீடு: நியாயமும் அவசியமும்

பிரபஞ்சன்


தலித்துகளில் ஒரு பெரும் பிரிவான அருந்ததியர்கள், தலித்துகளுக்கான 18 சதம் இட ஒதுக்கீட்டில், தமக்கு ஆறு சதம் உள் ஒதுக்கீடு வேண்டுகிற இயக்கம் மேலெழுந்திருக்கிறது. அறம், மற்றும் நியாயம் சார்ந்ததுமான கோரிக்கை இது. தமிழக அரசும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனையைத் தொடங்கி இருக்கிறது. பரிசீலனையின் முடிவு அருந்ததியர்களுக்கு நியாயம் வழங்குவதாகவே இருக்கும். இருக்க வேண்டும்.

மிகுந்த கொந்தளிப்புகள் நிறைந்த சூழ்நிலையில், அருந்ததியர் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லும் ஆவணங்கள் போல, வரலாற்றுச் செறிவோடு இரண்டு அறிவார்ந்த வெளியீடுகள் வந்திருக்கின்றன. ஒன்று, சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ம. மதிவண்ணன் எழுதிய உள் ஒதுக்கீடு சில பார்வைகள் எனும் புத்தகம். மற்றது, “சுவடு -ஐனவரி 2008′ மாத இதழில் வெளிவந்திருக்கும், தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவரும் சிறந்த சிந்தனையாளருமான அரங்க.குணசேகரனின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ஆழம் கொண்ட மிகச் சிறந்த நேர்காணல்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பெரும் கவனம் பெற்றுள்ள அருந்ததியர் எழுச்சி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1920-ம் ஆண்டு எல்.சி. குருசாமியால் அருந்ததிய மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. 1942-ல் அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-ல் அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சி இயக்கமாக அது இருக்கிறது.

1993 முதல் உள் ஒதுக்கீடுப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1996-ல் ஆதித் தமிழர் பேரவை உள் ஒதுக்கீடுக் கோரிக்கையை முன் எடுத்து, எழில் இளங்கோவன் எழுதிய “அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூக நீதி’ என்ற முக்கியமான நூலை வெளியிடுகிறது. 4.8.1995-ல் தினமணியில் வெளியான பெருமாள் ராஜின், “கடையனுக்குக் கடையன் கதி என்ன?’ என்னும் கட்டுரை பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தது.

23.4.2000-ம் நாள் சென்னையில் பெருமாள் ராஜை முதன்மை ஆலோசகராகவும், வழக்கறிஞர் சேகரை அமைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்ட “அருந்ததியர் தனி இட ஒதுக்கீடு போராட்டக் குழு’ , அக்காலத்து முதல் அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் இச்சமயத்தில் முக்கியமாகக் கருதத்தக்கவை. சாத்தியமான கோரிக்கையும் அதுவே.

முதல் கோரிக்கை: அருந்ததியர்க்கு ஆறு சதவீத தனி இடஒதுக்கீடு.

இரண்டாம் கோரிக்கை: தமிழ்நாடு ஷெட்யூல்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 78 சாதிப் பெயர்களில் உள்ளவற்றில், குலத் தொழில் மற்றும் செய் தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்காணும் பிரிவுகளாகப் (குரூப்) பிரிக்கலாம்:

குரூப் (அ)

  • அருந்ததியர்,
  • சக்கிலியர்,
  • மாதாரி,
  • மாதிகா,
  • பகடை,
  • செம்மான் முதலானவர்கள்.

குரூப் (ஆ)

  • பறையர்,
  • சாம்பவார்,
  • மாலா,
  • சம்பன்,
  • தோட்டி,
  • வெட்டியார்,
  • வள்ளுவர் முதலானவர்கள்.

குரூப் (இ)

  • தேவேந்திர குலத்தார்,
  • பள்ளர்,
  • காலாடி,
  • பண்ணாடி.

குரூப் (ஈ)

  • குரவன்,
  • தொம்பர்,
  • சித்தனார்,
  • நாயாடி,
  • புத்திரி,
  • வண்ணார்,
  • மற்ற பட்டியல் சாதிகளில் மேலே சொல்லப்படாதவர்கள்.

இந்த “குரூப்’ வகை அடிப்படையில் விகிதாச்சார அளவுப் பிரிப்பு சாத்தியமான யோசனையாக அமைந்தது. இதுபோன்ற ஒரு பிரிப்பு, ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள், இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாதிகாக்கள் என்கிற அருந்ததியர் வேகமான வளர்ச்சி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும், அடித்தள மக்களிலேயே அடித்தள மக்களாக வைக்கப்பட்டவர்களாகவும், கண்ணியமற்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டவர்களாகவும், முன்னேற்ற வெளிச்சம் என்பதையே இதுவரை காணாத மக்களாகவும், மிகச் சாதாரண வாழ்க்கைக்கும் கூட போராட வேண்டியவர்களாகவும் வாழ்கின்ற அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஈரமற்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை. முக்கியமான அடித்தள மக்கள் அரசியல் தலைவர்கள் எல்லோருமே, உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்படப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், அருந்ததியர் தொகை கணிசமாக இருப்பதால், ஆந்திராவில் உள்ளதுபோல இம்மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் (2006) அறிக்கையில் தாழ்த்தப்பட்டோரில் சாதி வாரி இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் தரப்பட்ட வாக்குறுதி:

அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். தமிழக மனித உரிமைக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன், எப்போதுமே அருந்ததியர்களை ஆதரித்தும், உள் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டும் வந்திருக்கிறார்.

ஆக, அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பெருந்தடை ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

என்றாலும், உள் இட ஒதுக்கீட்டுக்கு மிகச் சிலரால், ஐயம் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ எதிரான ஓரிரண்டு கருத்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இவை:

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோருவதால் தலித்துகளின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாதா?

அரங்க குணசேகரன், “சுவடு’ இதழில் முன்வைத்த பதிலில் இருந்து சில பகுதிகள், அக்கேள்விக்குச் சிறந்த தெளிவைத் தரும்.

“”1931-ல் வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதிகள் கேட்டு டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடம் கோரியபோது, அதை மறுத்த காந்தி, இது இந்துக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றார்.

1980-ல் தொடங்கி 1990-ஐயும் தாண்டி முற்போக்குத் திசைவழியில் கருக்கொண்டு உருவான தலித் இயக்கங்கள் கிராமங்களில் சாதித் தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் என்பவர்கள் தலித்துகள் மீது தொடுக்கின்ற அடக்குமுறைகள் குறித்து, தமிழின, தமிழ்த்தேச அரங்குகளில் விவாதத்தைக் கிளப்பியபோது, இத்தகைய கேள்விகள் தமிழின ஒற்றுமைக்கு எதிரானது என்று சில தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

நிறைவாக உள் இட ஒதுக்கீடு பெறுவதால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமானால் கெட்டுவிட்டுப் போகட்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பெறமுடியாத அவல நிலை தொடர்வதால் தலித் ஒற்றுமை பாதுகாக்கப்படுமானால் அந்த ஒற்றுமையைத் தூக்கிக் கடலில்தான் போடவேண்டும்.”

உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, மற்றுமொரு முக்கியமான கேள்விக்கு அரங்க குணசேகரன் சொன்ன பதில் வருமாறு: “”மொத்தப் பரப்பான 18 விழுக்காட்டில் தங்கள் பங்கைப் பெற முடியாமல்தான் இவர்கள் ஆறு விழுக்காடு கேட்கிறார்கள். 18 விழுக்காட்டில் பறையர், பள்ளர்களுக்கு இணையாக அருந்ததியர் தங்கள் பங்கைப் பெற்றிருந்தால் உள் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே எழுந்திருக்காதே. போட்டித் தேர்வுகளில், பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் பறையர், பள்ளர் அளவுக்கு உரிய மதிப்பெண் குறியீட்டை எட்ட முடியாமல்தான் இவர்கள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து இன்று இசுலாமிய, கிருத்துவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”

அருந்ததியர், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஆறு சதம் உள் ஒதுக்கீடு கோருவதில் எந்தத் தவறும் இல்லை. சகல நியாயங்களும் அவர்கள் பக்கமே இருக்கின்றன.

தமிழக முதல்வரின் மேசை மேல் இருக்கும் இக் கோரிக்கை துரிதமாகச் செயல் உருப்பெற ஒருங்கிணைந்த பிரசாரம் மிக அவசியம். தலித்துகள் மட்டுமல்ல, தலித்துகள் அல்லாதோர்கள் அருந்ததியர் பக்கம் திரள வேண்டும். மனிதர்கள், தாங்கள் மனிதர்கள்தாம் என்று நிரூபித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. மனிதர்களாக இருந்து சிந்திப்போம். செயல்படுவோம்.

Posted in Arundhathi, Arunthathi, Babu Naidu, Caste, Chennai, CMK Reddy, Communities, Community, Dalit, Govindharaj, Govindhraj, Govindraj, Groups, Language, Languages, Madras, Muthuvelraj, Nandhagopal, Organizations, Reservation, SC, Scheduled Caste, Scheduled Tribe, ST, Telugu, Thiruma, Thirumavalavan, Thol Thiruma, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 6 Comments »

State of Scheduled Castes & Tribes – Unable to get the Community Certificates

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006

சாதியப் “பாம்பு’கள்-“கீரி’ப்பட்டிகள்!

முகில்வண்ணன்

“தலித்துகள் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நுழைவதைச் சாத்தியமாக்கிவிட்டது வாக்குரிமை; ஆனால், அந்த வாக்கு வங்கியால், அவர்களைத் தங்கள் ஊர்களில் உள்ள கோயில்களுக்குள் நுழைய வைக்க முடியவில்லையே; ஏன்? என்று கேட்டார் சத்யஜித் பட்கர்.

இன்னும் ஒரு கேள்வியும் சேர்த்துக் கேட்க வேண்டியுள்ளது;  “ந.ப. எனும் பட்டியல் பழங்குடியினருக்கு, உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவி உள்பட பல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பதவிகளால் அந்தந்த ஊரிலுள்ள பழங்குடியினருக்கு  “சாதிச் சான்றிதழ்கள்”கூட பெற்றுத் தர முடியவில்லையே! ஏன்?”

வெளிச்சத்துக்கு வராத கீரிப்பட்டிகளும், பாப்பாப்பட்டிகளும், நாட்டார்மங்கலங்களும், புற்றுக்குள் பாம்பாகத் தமிழகத்தில் இன்னமும் பல ஊர்களில் உள்ளன. இதோ ஓர் எடுத்துக்காட்டு:

விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கெல்லையில் மலை சூழ்ந்த ஒரு கிராமம்: (தண்டரை எனும் பெயர்கொண்ட பல ஊர்களில் அதுவும் ஒன்று) சுமார் 1000 பேர் உள்ள கிராமத்தில் 23 குடும்பங்களில் 60 வாக்காளர்கள் மட்டும் “இருளர்’ எனும் பட்டியல் பழங்குடியினர். இம்முறை இட ஒதுக்கீட்டுச் சுழற்சியில் தலைவர், ஓர் உறுப்பினர் என அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்க்கச் சென்ற எனக்குப் பல அதிர்ச்சிகள்! 59 ஆண்டுக்கால சுதந்திரத்தில், புறத்தோற்றத்தில் மட்டும் சற்றே மாறி, மனத்தளவில் சற்றும் மாறாத “பழங்கால மக்களை’ அங்கே அடையாளம் காண நேர்ந்தது.

கொஞ்சம் ஆழ்ந்து பார்த்ததில், இங்கும் “கீரி’கள் கட்டப்பட்டு பட்டியில் அடைக்கப்பட்டு, (சாதிப்) பாம்புகள் சுதந்திரமாய்ப் படமெடுத்தாடி மிரட்டிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஊரிலுள்ள பிற்பட்ட வகுப்பினரில் உள்ள சில இளைஞர்களின் முயற்சியால், நப எனும் “இருளர்’ குடும்பங்கள் 23க்கும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அந்தக் குடியிருப்புகளும் “”ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம்” ரகம்தான்.

75% மானியத்தில் பசுக்கள், செம்மறியாடுகள் பெற்றுத் தரப்பட்டதாக அரசு ஆவணங்கள் கூறுகின்றன.

இதுபோன்ற “”மான்யம்” பெறும் விஷயங்களுக்கு, அதிகாரிகள் அவசர அவசரமாக “”இவர்கள் இருளர்கள்” எனும் நப பிரிவினர் எனத் தாற்காலிகச் சாதிச் சான்றிதழ்கள் தயார் செய்து (“”பங்கு போடும்”) திட்டத்தை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கின்றனர்.

ஆனால், கடந்த 10, 15 ஆண்டுகளாய், அந்த இனத்தில் சில மாணவர்கள் 10ஆம் வகுப்பும், ஓரிருவர் 12ஆம் வகுப்பும் படித்திருந்தும் “”சாதிச் சான்றிதழ்கள்” வழங்கப்படாததால், மேற்படிப்புக்கோ, வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கோ செல்ல முடியாத நிலை.

விவசாயக் கூலித் தொழிலாளிகளாக, முத்திரை குத்தப்படாத கொத்தடிமைகளாகவும் இன்றுவரை இருக்கும் அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் (VAO), முதல் கோட்ட வருவாய் அலுவலர் (RDO) வரைப் படியேற நேரமும் இல்லை; படியளக்கப் பணமும் இல்லை; எனவே, சாதிச் சான்றிதழ் பெற முடியவில்லை.

இருளர்களில் ஒரு பெற்றோர் மட்டும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவரமான ஒருவர் மூலம் புகார் மனு அனுப்பினார்.

மனு மீதான நேரடி விசாரணைக்கு ஓர் அதிகாரி வந்தார். மனுதாரரை எலி பிடித்துக் காட்டச் சொன்னார். அவரும் ஓர் எலி வளைக்கு அவரை அழைத்துச் சென்று, ஒரு பானையால் அதை மூடி, புகைபோட்டு, எலிகள் வெளியேறும்போது பிடித்துக் காட்டினார்.

“”எலி பிடிப்பது சுலபம்; பாம்பைப் பிடித்துக் காட்டு” என்றார். “”பாம்பு நிலையாக ஓரிடத்தில் தங்காது; அதைத் தேடிப்பிடிப்பது கடினம்” என்று கூறிவிட்டார் அந்தப் பழங்குடி.

“”கன்னிமார் சாமி கும்பிடுவீர்களாமே! சாமி ஆடிக்காட்டு” என்றார். அதற்கும் தலை குளித்துவிட்டு, கையில் கற்பூர தீபம் ஏற்றி அவர் “”ஆ.. ஊ..” என ஆடிக்காட்ட, அருகிலிருந்த பெண்கள் பேயாட்டம் ஆட, சாமி ஆடுபவர் அப் பெண்களைச் சாட்டையால் அடிக்க (அதிலும் ஒரு லாவகம் உண்டு) பதறிய அதிகாரி அவர்களை “இருளர்கள்’ (நப) என ஒப்புக்கொண்டு சென்றார்.

போனவர் கோப்பில் இப்படி எழுதி வைத்துள்ளாராம்:

“”இவர்கள் பழக்கவழக்கத்தால் இருளர்கள்தாம். ஆனால் போதிய ஆவணச் சான்றுகள் இல்லை (நில உரிமைப் பத்திரங்களில் சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்); ஆதாரங்கள் தந்தால், சாதிச் சான்றிதழ் வழங்கலாம்.”

அதன்பின் அவரது “”ஆண்டை” ஆயிரக்கணக்கில் “அன்பளிப்பு’ கொடுத்து ஓரிருவருக்கு மட்டும் “சாதிச் சான்றிதழ்’ பெற்றுத் தந்ததாகவோ, தர இருப்பதாகவோ கேள்வி.

சென்ற ஆண்டு 12ஆம் வகுப்புத் தேறிய ஒரு பழங்குடி மாணவன் உரிய காலத்தில் “சாதிச் சான்றிதழ்’ கிடைக்காததால் இடைநிலை ஆசிரியப் பயிற்சியில் இலவசமாக இடம் கிடைத்தும் சேர முடியவில்லையாம். இந்த ஆண்டாவது கிடைத்தால் ஒருவராவது அரசுப் பணிக்குத் தயாராகலாம்.

வீட்டுக்கும், மாட்டுக்கும் செம்மறி ஆட்டுக்கும் கடன் என்றால், “சாதிச் சான்றிதழ்’ தயாரித்து வரும் அதிகாரிகள் மனிதர்களுக்கு மட்டும் தர மறுக்கின்றனர் அல்லது தாமதப் படுத்துகின்றனர். ஏன்? இதில் “”எவருக்கும் லாபமில்லை – பயனாளிகளைத் தவிர!

விடுதலை என்பது ஒரு வேட்கை; அது அறிவுதாகத்தால்தான் வரும். “”விலங்கை உடைப்பதால் மட்டுமே விடுதலை கிட்டாது; விலங்கு, மனிதனானால் மட்டுமே அது கிட்டும்” என்பார் கேம்ஸ் ஓப்பன் ஹிம்.

மேற்படிப்புக்கான “சாதிச் சான்றிதழ்கள்’ தர மறுத்து, அவர்களது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டு, தலைவர் பதவி போன்ற அலங்காரங்களை மட்டும் அளிப்பது, இன்றைய முதல்வர் பாணியில் சொல்வதென்றால் “புண்ணுக்குப் புனுகு பூசும்’ வேலையல்லவா!

தேர்தலைப் புறக்கணித்தால், அவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் என முத்திரை குத்துகிறோம்.

தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பது, ஆள் கடத்துவது, ஊரைவிட்டுத் துரத்துவது, நின்று வென்ற பின்னும் “கைப்பாவையாய்’ ஆட்டுவிப்பது, ஆட மறுத்தால், “”வைத்தால்தான் பிள்ளையார்; வழித்தெறிந்தால் சாணி” என அவனை உடனே ராஜிநாமா செய்யச் செய்வது; மறுத்தால், மரணப் பரிசளிப்பது என வெறிக் கூத்தாடும் சாதிய நச்சரவங்களை என்ன சொல்லி அழைப்பது?

இக் கொடுமைகளைக் கண்டும், காணாமல் போகும் அதிகாரிகள், வாயிருந்தும் ஊமையாக இருக்கும் அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் – இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

இப்போது நடந்து கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப் புற்றுநோய் புரையோடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

“”சமாதான வாழ்வுக்கு எப்போதும் ஓர் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்; அந்த ஆபத்தின் பெயர்தான் சாதி!”என்று எச்சரித்தார் பெரியார்.

அந்தச் சாதி அடுக்குகள் இருக்கும்வரை அடித்தட்டில் உள்ளவர்கள் அழுத்தப்பட்டு, நசுக்கப்படுவது தொடரும்.

சாதிய நோயால் ஏற்பட்ட வீக்க மேடுபள்ளத்தை, மேனியைத் தடவி மந்திரிப்பதால் சமப்படுத்தவோ, சரிசெய்யவோ முடியாது. அதற்குத் தேவை அறுவைச்சிகிச்சை.

கேரளத்து தலித் போராளி “அய்யங்காளி’ ஒருமுறை சொன்னார்: “”எல்லோர் ரத்தமும் சிவப்பு என்பதை, ரத்தம் சிந்தாமல் எப்படி நிரூபிக்க முடியும்?”

சிந்தும் ரத்தம் நோய் வராமல் தடுக்க அல்லது நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கான ரத்தமாக இருக்கட்டும்!

Posted in Castes, Community Certificates, Corruption, Dalits, Irular, Keeripatti, Official, Pappapatti, Research, Scheduled Caste, Scheduled Tribe, Tamil Nadu | Leave a Comment »