Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Satellite City’ Category

‘Coimbatore Technology Park & SEZ will affect Agricultural lands’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம்: ஜெ. எச்சரிக்கை

சென்னை, ஜன. 12: விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தினால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம் காட்டியதும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில் இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.

இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்கப் போவதாக கருணாநிதி கூறுவது யதேச்சதிகாரமானது.

பயன்பாட்டில் உள்ள இந்த விவசாய நிலங்களையும் தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று அப் பகுதி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடச் சென்றால் அவர் மக்கள் முன் வர மறுக்கிறார். ஆத்திரம் கொண்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மைனாரிட்டி திமுக ஆட்சி வந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அபாயகரமானது. தொழில்நுட்பப் பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி எப்போதும் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களைப் பிற காரணங்களுக்காகக் கையகப்படுத்தும் திட்டத்தை எந்த நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

============================================

வர்த்தக நோக்கங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 12: சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொங்கன் ரயில்வேயில் ரோஹா-மங்களூர் இடையே அகல ரயில்பாதைகளை அமைப்பதற்காக 11 ஆயிரத்து 875 சதுர மீட்டர் நிலம் கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.4 வழங்குவது என மாநில அரசு நிர்ணயித்தது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சதுர மீட்டருக்கு ரூ.192 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இத் தொகையை ரூ.38 என குறைத்தது.

இதற்கு எதிராக, நிலத்தின் உரிமையாளர் நெல்சன் ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த ஏ.ஆர்.லட்சுமணன், அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு: உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொகையைக் குறைக்கும்போது பொத்தாம்பொதுவாக முடிவுசெய்துள்ளதாக கருதுகிறோம். சட்டப்படி இது ஏற்கக்கூடியது அல்ல.

முறையீடு செய்தவர்களுக்கு, நிவாரணம், அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருக்கும் மரங்களுக்காக ரூ.59,192 அளிக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.250 வீதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், வர்த்தக நோக்கங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயரிய அளவில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான காரணத்துடன், அப்போதைய மார்க்கெட் மதிப்பு, நிலம் அமைந்துள்ள இடம், நிலத்தின் உரிமையாளர் அடையும் இழப்பு உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

======================================================

கையகப்படுத்திய நிலம் அரசின் சொத்து ஆகும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மார்ச்.19-

ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசின் தனிப்பட்ட சொத்து ஆகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1978-ம் ஆண்டு சென்னையை அடுத்த பாடியில் 43 பேரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 21 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அடுக்குமாடி திட்டம் வரவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 43 பேரும் தமிழக அரசிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் இந்த மனுக்களை நிராகரித்து விட்டது.

உடனே 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் கருத்தை கேட்காமல், பொது நோக்கத்துடன் கையகப்படுத்திய நிலங்களை மனுதாரர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த 2 அப்பீல் மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எங்கள் கருத்தை சொல்ல சென்னை ஐகோர்ட்டு வாய்ப்பு தரவில்லை. குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு நேற்று விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகளின் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அந்த நிலத்தை மார்க்கெட் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் அரசு வழங்கலாம்.

இவ்வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்யும் முன், அதற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். இதுதவிர மறு ஆய்வு மூலம் தன்னுடைய தவறை சரி செய்து கொள்ள டிவிஷன் பெஞ்சுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மிகவும் அவசியமானது. அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று வீட்டு வசதி வாரியம் கூறியதை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டது. இதன்மூலம் இந்த வழக்கின் விசாரணையில் ஐகோர்ட்டு தவறு செய்து உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

———————————————————————————————–

தேவை புதிய விமானநிலையம்

Dinamani op-ed

July 14, 2007

விமானக் கட்டணக் குறைப்பு, அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்கள், பெருகி வரும் விமானப் போக்குவரத்து என்று ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா சமீபகாலங்களில் காண நேரிட்டு வருகிறது. சாதாரண மனிதர்கள்கூட விமானத்தில் பறக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

ஒரு கோடியே இருபத்தெட்டு லட்சம் பயணிகள் மட்டுமே 2003-ல் விமானப்பயணம் மேற்கொண்ட நிலைமை மாறி, சுமார் இரண்டரைக் கோடி பேர் விமானப் பயணம் செய்யும் நிலைமை 2006-ல் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 20 சதவிகிதம் அதிகரிப்பு. மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்று விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும்போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்களில் விமானங்களுக்கு இடவசதி செய்து தரவும், கூடுதலான பயணிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விமான நிலையங்களின் வசதிகளைப் பெருக்கவும் அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் அதிகரிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப விமானநிலைய விரிவாக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

சிறு சிறு நகரங்களில்கூட விமானநிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பூணே, கோவா போன்ற சிறு நகரங்களில் விமானநிலையம் அமைப்பதைப் பற்றி அந்தந்த மாநில அரசுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ராணுவ விமானநிலையங்களின் மூலமாக விமான சேவை நடைபெறுகிறது என்றாலும், பொதுமக்களின் தேவைக்காகப் புதிய விமானநிலையம் தேவை என்று கோரிக்கைகள் எழுகின்றன.

இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India) இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. பெருகிவரும் தேவைக்கு எப்படி ஈடுகொடுப்பது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமானநிலைய ஆணையமும் மூளையைக் கசக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசின் திட்டம் செயல்படுமேயானால், இந்திய விமானநிலைய ஆணையமும் தனியார் விமானநிலையங்களுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமானநிலையங்களை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் 36,000 கோடி ரூபாய் செலவிட இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கையில், தமிழகத்தைப் பொருத்தவரை, விமான நிலையங்கள் அமைக்க இன்னமும் இடங்கள் கையகப்படுத்தியாகவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், அதேநேரத்தில் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமையாமல் விமானநிலையத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் ஏற்பட வேண்டும் என்று புரியவில்லை.

நாம் முந்திக் கொள்ளாவிட்டால், விமானநிலைய வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவப்படுவது மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள விமானநிலையங்களைப் புதுப்பித்து அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்தை எதிர்நோக்கும் அளவுக்கு நவீனப்படுத்தியாக வேண்டும்.

பொதுமக்களும், அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத விமானநிலைய விரிவாக்கப்பணி அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி – எல்லா கட்சியினரையும் அழைத்துப் பேசி, விரைவிலேயே புதிய விமானநிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குவதுதான்!

——————————————————————————————————————————–

விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: மணப்பாக்கம், தரப்பாக்கம் மக்கள் நிலை என்ன?

சென்னை, ஜூலை 22: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கி உள்ளனர்.

இந்த கிராமங்களில புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கான இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது குறித்து அரசு தெளிவாக அறிவிக்காதது இந்த பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 1069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2005 ஏப்ரலில் அறிவித்தபடி மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இங்கு புதிய விமான ஓடுதளம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழப்பம்:

நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அரசு நிர்வாகம், இவர்களுக்கான மாற்று இடம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

2005 ஏப்ரலில் அறிவித்ததுக்கு மாறாக 2005 டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையை காரணமாகக் காட்டி மணப்பாக்கம், தரப்பாக்கத்தில் பெருமளவு நில விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு கிடைத்த குறைந்த நேரத்தை பயன்படுத்தி இங்கு விமான நிலையம் வராது என்று கூறி புதிய குடியிருப்புகளை 2 பெரிய நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

இவ்வாறு இங்கு விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தும் குடியிருப்புகளை விற்பனை செய்தவர்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி அளித்தது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நிவாரணம் எப்போது?

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1991-ல் கவுல்பஜார் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இவர்களுக்கான இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு கிடைக்குமா என்பதே இந்த மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

———————————————————————————————————————–
சென்னை விமான நிலைய விரிவாக்க பணி: ஜனவரியில் தொடக்கம்

சென்னை, செப். 3:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று இந்திய விமானத் துறை செயலர் கே.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்தார்.

ரூ. 2,700 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு தொடங்கும். விமான ஓடுபாதை (ரன்வே) மற்றும் டாக்ஸி வே மற்றும் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் ஆகியன புதிதாக கட்டப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் பெருகி வரும் விமானப் பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களைக் கையாளும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டப் பணிகள் 2010-ம் ஆண்டு முடிவடையும். புதிதாக அமையும் விமான ஓடுபாதை ரூ. 1,700 கோடியில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டடங்கள் ரூ. 1,000 கோடியில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலையம் (கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட்) அமைப்பது குறித்த அனைத்து பூர்வாங்க பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விவரம் ஒரு மாதத்திற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் புதிய விமான நிலையம் அமையும் என்றார் ஸ்ரீவாத்ஸவா.

Posted in acquisition, ADMK, Agriculture, AIADMK, Airport, Asset, Coimbatore, Commerce, Compensation, DMK, encroachment, Farmer, Farming, J Jayalalitha, Kongu Nadu, Kovai, Land, Loss, M Karunanidhi, Mangalore, Market, Pammal, PMK, Polichaloor, Polichalur, Pozhichaloor, Pozhichalur, Prices, Property, Protest, Railways, Refugee, Satellite City, SEZ, Technology Park | 2 Comments »

Save Pozhichaloor Houses from Airport Extension Project

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

பொழிச்சலூர் பொதுக் கூட்டத்தில் மேதா பட்கர் இன்று பங்கேற்கிறார்

சென்னை, அக். 9: சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையால் பாதிக்கப்படும் பகுதியான பொழிச்சலூரில் திங்கள்கிழமை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத் தலைவி மேதாபட்கர் பங்கேற்கிறார்.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக இங்குள்ள பொழிச்சலூர், கவுல்பஜார், அனகாபுத்தூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி மக்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, இங்குள்ள விமான நிலைய விரிவாக்கத்தால் பாதிக்கப்படும் மக்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் பலரையும் சந்தித்து மனு அளித்தனர்.

இதேபோல சென்னையிலும், மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

போராட்டத்துக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் வாழ்வுரிமை தன்னார்வ அமைப்புகளிடம் ஆதரவு கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று நர்மதா அனை திட்ட எதிர்ப்பு குழுத்தலைவி மேதா பட்கர் பொழிச்சலூருக்கு திங்கள்கிழமை வருகிறார்.

பொழிச்சலூர் பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் இக்கூட்டத்தை நடத்துகின்றனர்.

=========================================================

 சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதி நிலங்களை அரசு கையகப்படுத்தாது: முதல்வர்

சென்னை, மார்ச் 12: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி பேசிய பிறகுதான் இறுதி முடிவு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைப் பற்றி விவாதித்து எந்த முடிவுக்கும் தமிழக அரசு இன்னும் வரவில்லை. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும், விமான நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அதிக அளவில் குடிசைவாசிகள் வாழக்கூடிய இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தாது.

எந்த ஒரு விரிவாக்கத் திட்டமானாலும், மேம்பாட்டுத் திட்டமானாலும் அதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்காத வகையில்தான் இடங்கள் தேர்வு செய்யப்படும்.

விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை: விதிகளை மீறி செல்வந்தர்கள் கட்டிய கட்டடமாயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது. அதேபோல ஏழைகள் வாழும் வீடுகளை அகற்ற இந்த அரசு முன்வராது. இதில் யாருக்கும் எந்தவிதமான அச்சமும் தேவையில்லை.

Posted in Airport, Anagaputhoor, Anagaputhur, Anakaputhoor, Anakaputhur, Angaputhoor, Chennai, Communist, CPI, DMK, Extension, Houses, Madras, Medha Patkar, Meenambakkam, Narmada Bachavo Andolan, Pammal, PMK, Policahaloor, Policahalur, Pozhichaloor, Project, Protest, Satellite City, Suburban, Trisoolam | Leave a Comment »

Rajini & PMK’s Interests in Kelambakkam – Dropping of Satellite City

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

சேர்த்து வைத்த துணைநகரம்  :: கைகொடுத்த பா.ம.க… கண்சிமிட்டும் ரஜினி! 

– எஸ்.சரவணகுமார்    
பத்து நாட்களாகப் பரபரப்பைக் கிளப்பிய ‘துணைநகர’த் திட்டம் எதிர்பாராத வகையில் வாபஸ் ஆகிவிட்டது. அதுபோலவே, கடந்த ஐந்து ஆண்டுகளாக முறைத்துக் கொண்டிருந்த இரண்டு பெரும் சக்திகளையும் இந்தப் பிரச்னை எதிர்பாராத வகையில் நேசப் பார்வை பார்க்க வைத்திருக்கிறது.

அந்த இரு சக்திகளில் ஒன்று பா.ம.க., மற்றொன்று ரஜினி!

‘பாபா’ படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர் ஸ்டாருக்கும், பா.ம.க&வுக்கும் முதன்முதலாக முட்டல்மோதல் ஏற்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இரு தரப்பினருமே நேரடியாகவே மோதிக் கொண்டார்கள். இப்படி கீரியும் பாம்பும் போல இவர்களுக்குள் இருந்த பகை, இப்போது கேளம்பாக்கம் துணைநகர விவகாரத்தால் இளகத் தொடங்கிவிட்டதாக, ரஜினிக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது ரஜினிக்கும், பா.ம.க&வுக்கும் பாலமாக செயல்பட நினைத்துத் தோற்றுப்போன சில சினிமா வி.ஐ.பி&க்கள் இதுபற்றி நம்மிடம் பேசியபோது,

‘‘வண்டலூர், கேளம்பாக்கம் சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள நிலங்களைத் துணைநகரம் அமைக்க அரசு தேர்வு செய்தது. இதில் ரஜினிக்குச் சொந்தமாக இருக்கும் கேளம்பாக்கம் பண்ணையும் ஆபத்துக்குள்ளானது. இந்தப் பண்ணையின் மொத்த பரப்பளவு, சுமார் நாற்பது ஏக்கர். சென்னையில் கட்டிய வீட்டுக்குப் பிறகு அவர் வாங்கிய முதல் சொத்து இந்தப் பண்ணைதான். ஆன்மிக மையம் ஒன்றை நிறுவத்தான் இந்தத் தோட்டத்தை வாங்கிப்போட்டார். அதற்குப் பிறகு விவசாயத்தில் நாட்டம் பிறக்க, தென்னந்தோப்பு அமைத்தார். பிறகு சிறிய வீடொன்றைக் கட்டியதுடன் அந்தத் தோப்பின் ஓர் ஓரத்தில் அழகான தியான மண்டபத்தைக் கட்டினார். ஓர் உடற்பயிற்சிக் கூடத்தையும் அமைத்தார்.

1996&ம் ஆண்டு அந்த நிலத்தில் ஒரு ஏக்கரை தலா ஒரு கிரவுண்ட் வீதம் பிரித்துத் தன்னிடம் பலகாலமாக வேலைபார்த்து வரும் சுமார் முப்பது பேருக்கு எழுதிக் கொடுத்தார் ரஜினி. துணைநகரத் திட்டம் அறிவிக்கப்பட்டதும், தான் பண்ணையாட்களுக்குக் கொடுத்த நிலங்களுக்கு ஆபத்து வருமே என அவர் கவலைப்பட்டார்.

இந்நிலையில் ‘சிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் கோயில் முன்பும், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் பையனூருக்கு அருகிலும் நடந்தது. இந்த சமயத்தில் தனது பண்ணை ஊழியர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவரிடம், ‘நிலத்தை அரசு எடுக்கக் கூடாதுன்னு பா.ம.க. போராடிக்கிட்டிருக்கு. அநேகமா அவங்க துணைநகரத்தை வர விடமாட்டாங்க போலிருக்கு. அதுவே எங்களுக்கு ஆறுதலா இருக்கு சார்’ என்று சொன்ன ஊழியர்கள் தொடர்ந்து, ‘ஊரப்பாக்கத்துல ஒரு கல்யாண மண்ட பத்துல டாக்டர் ராமதாஸ் இந்தப்பகுதி மக்களைசந்திச்சு துணை நகரம் அமைப் பதில் என்னவெல்லாம் சிக்கல் இருக்குன்னும், விவசாயம் எப்படியெல்லாம் பாதிக்கும்னும் கேட்டுத் தெரிஞ்சுக்கப் போறாராம். அந்தக் கூட்டத்துக்குப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘தாராளமா கலந்துக்கங்க. இந்தத் தடவை அவங்க நல்ல விஷயத்துக்காகப் போராடறாங்க. நீங்க கண்டிப்பா அந்தக் கூட்டத்துக்குப் போங்க’ என்று பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் ரஜினி. இதனையடுத்து அந்த ஊழியர்கள், பா.ம.க. ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். ஆனால், ரஜினி தங்கள் போராட்டத்துக்குத் துணையாக இருக்கப்போகிறார் என்ற விவரம் எதுவும் பா.ம.க&வுக்குத் தெரியாது. ஒருசிலர் செங்கல்பட்டு எம்.பி&யான மூர்த்தியிடம் ‘நாம் போராடறதுல ரஜினியோட நிலமும் சேர்ந்திருக்கு. நம்மால அவரு நிலம் தப்பிச்சிடும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நல்ல விஷயத்துக்காகப் போராடறோம். இதுல எல்லோரும் பலனடைஞ்சா நல்லதுதானே’ என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கருத்தரங்கில் ராமதாஸ் பேசியதையும், துணைநகரம் விஷயத்தில் பொதுமக்கள் பா.ம.க. மீது கொண் டிருக்கும் நம்பிக்கை யையும், ரஜினியின் ஊழியர்கள் அப்படியே ரஜினியிடம் சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு ரஜினிக்குப் பா.ம.க. மீது இன்னும் கூடுதலான மரியாதை ஏற்பட்டு விட்டது’’ என விஷயத்தை முடித்தார்கள், அந்த வி.ஐ.பி&க்கள்.

பா.ம.க. மீதான ரஜினி யின் இந்தக் கனிவு பற்றி அக்கட்சியின் செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.மூர்த்தியிடம் பேசினோம். ‘‘நீங்க சொல்றது எனக்குப் புதுசா இருக்கு. துணைநகரம் அமைக்க ரகசியமான சில திட்டங்களை அரசாங்கம் தீட்டுதுனு முதல்ல எனக்குச் சொன்னது, அந்தப் பகுதி பொதுமக்கள்தான். ஒருநாள் ராத்திரி ஒரு மணியிருக்கும்… என் செல்போன் அடிச்சுது. எடுத்துப் பேசினேன். ‘என்னண்ணே, தூங்கறீங்களா?’னு தொகுதிவாசி ஒருத்தர் கேட்டார். ‘ஆமாம்பா, இந்த நேரத்துல எல்லோருமே தூங்கு வாங்க’னு நானும் சாதாரணமா சிரிச்சேன். அதுக்கு, ‘சரிண்ணே, உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். நீங்களும் ஜெயிச்சீங்க. நீங்க தூங்கலாம். ஆனா, நாங்க தூங்க முடியாதுண்ணே. ஒரேயடியா இப்போ குடும்பத்தோட தூங்கிடப் போறோம். காலையில நீங்க வந்து மாலை போட்டுட்டுப் போயிடுங்கண்ணே’னு மறுமுனையில் பதில் வந்ததும் ஒன்றும் புரியாமல், ‘என்ன விஷயம்!’ என்று கேட்டேன். அப்போதுதான் அவர், அரசு துணைநகரம் அமைக்கப்போகும் விஷயத்தையும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்பையும் சொல்லிவிட்டு போனை வெச்சுட்டார். அப்புறம்தான் பதறிப்போய் நானும், எங்க ஐயாவும் இந்த விஷயத்துல தீவிரம் காட்டுனோம். எங்க போராட்டத்துல ரஜினியோட ஆளுங்களும் பயன்பெற்றிருந்தா சந்தோஷம்தான். நாங்க யாரையும் பிரிச்சுப் பார்க்கறது கிடையாது’’ என்றார். அஜீத் நிலமும் தப்பியது!

துணைநகரம் கைவிடப்பட்டதில் ரஜினியைப் போல நடிகர் அஜீத்குமாரும், நடிகர் விஜயகுமாரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ‘சிட்டிசன்’ படம் நடித்துக் கொண்டிருந்தபோது இந்த ஏரியாவுக்கு வந்த அஜீத்குமார், விவசாயம் செய்யும் திட்டத்துடன் சில ஏக்கர்களை இங்கே வாங்கிப் போட்டிருக்கிறார். அதேபோல் விஜயகுமாருக்கும் இங்கு நிலம் உள்ளதாம். இவர்கள் தவிர பரபரப்புப் பிரமுகரான சிவசங்கர்பாபா பல ஏக்கர் பரப்பளவில் பள்ளி, அநாத ஆஸ்ரமம், ஆன்மிக மையம், முதியோர் விடுதி என தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். ரஜினியின் பண்ணைக்கு அடுத்திருக்கும் சிவசங்கர் பாபாவின் ஆஸ்ரமத்துக்கு அவ்வப்போது ரஜினி போவாராம். ‘நீங்கள் நினைத்தால் முதல்வரிடம் பேசி ஒரு தீர்வை ஏற்படுத்தலாம்’ என்று பாபாவும் ரஜினியிடம் போனில் பேசியதாகச் சொல்கிறார்கள்.

& எஸ்.சரவணகுமார்   

Posted in Ajithkumar, Kelambakkam, PMK, Rajini, Rajniganth, Ramadoss, Satellite City, Sivaji the Boss, Superstar, Tamil, Tamil Nadu, Vandaloor, Vijaykumar | Leave a Comment »

Alternate Suggestions to Satellite City – Madras City Decongestion

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, செப். 8: சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு அமைப்புகள் யோசனை கூறியுள்ளன.

துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை அடுத்து, இப் பிரச்சினைக்கு புதிய மாநகராட்சிகளை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகரைவிட, “சென்னை பெருநகர்’ (சி.எம்.ஏ.) என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரையறுத்துள்ள பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

சென்னையில் தற்போது உள்ள மக்கள்தொகையைவிட சென்னை பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 3 மடங்காக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர்ப் பகுதியில் (சி.எம்.ஏ.) தற்போது 16 நகராட்சிகள், 20 சிறப்பு நிலை ஊராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான நகர்ப்புறத் தன்மையுடன் இருந்தாலும் மக்கள்தொகை அடிப்படையில் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் இப் பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுவரும் நெரிசலுக்கும், புறநகர்ப் பகுதிப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும்.

அதற்காக விவசாய நிலங்களையும், கிராமப்புறப் பகுதிகளையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தி துணை நகரம் அமைப்பதை விட புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நகரமாக அறிவிக்கலாம் என்கின்றனர் நகர்ப்புற வளர்ச்சி ஆய்வாளர்கள்.

புதிய மாநகராட்சிகள் சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர திருப்பூர் 7-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மேலும், ஈரோடு,
  2. தஞ்சாவூர்,
  3. வேலூர்,
  4. தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உள்ளாட்சித் துறையில் இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைக் கருதி சென்னைக்கு அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தினாலே போதும்: சென்னை மாநகரில் உள்ள அளவுக்கு, புறநகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம், கழிவுநீர்-குப்பைகள் அகற்றுதல், சாலைகள், துரிதமான போக்குவரத்து ஆகிய வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்தினால் துணை நகரங்கள் தானாகவே உருவாகிவிடும்.

சென்னை புறநகரில் ஒரே மாதிரியான பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், சில பகுதிகளுக்கு மட்டுமே புதிய திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன.

இவ்வாறு பயன் பெறாமல் பின்தங்கியுள்ள பகுதிகள், மற்ற பகுதிகளுக்கு பிற்காலத்தில் இடையூறாக மாறிவிடும் என சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. விஸ்வநாதன் கூறுகிறார்.

தீர்வு என்ன?

சென்னை பெருநகர்ப் பகுதியில் தாம்பரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள், அம்பத்தூர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

இவற்றின் வளர்ச்சி வேகம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கிண்டி முதல் மறைமலை நகர் வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும், மதுரவாயல் முதல் மணலி வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Posted in Ambattur, Chennai, Corporation, Government, Guindy, Ideas, Madras, Maduravayal, Manali, Maraimalai Nagar, Satellite City, Suggestions, Tambaram, Tamil, Thoughts | Leave a Comment »

Satellite City near Chennai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

 சென்னை அருகே துணை நகரம் அமைய உள்ள உத்தேச பகுதி

Posted in Chennai, CM, Karunanidhi, Kelambakkam, Madras, Mamallapuram, proposal, Ramadoss, Satellite City, Tamil, Tamil Nadu, TN, Vandalur | Leave a Comment »