Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sanskrit’ Category

Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? – S Ramachandran

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2008

சித்திரையில்தான் புத்தாண்டு

எஸ். ராமச்சந்திரன்

இக் கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் “தைந்நீராடல்’ எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் – சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் – அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும் தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் Spring எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட “ஏரீஸ்’ வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தௌஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி – சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது “”மீன மேஷம் பார்த்தல்” என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். (“”நாஞ்சிற்பனைக் கொடியோன்” – புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை “புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு’ குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

பூம்புகாரில் இந்திர விழாவின்போது “”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து” மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 – 69களில் குறிப்பிடப்படுகிறது.

பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா? இவை இரண்டிற்குமே தெளிவான விடை “”அல்ல” என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை – 360 பாகைகளை – 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் “”இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்” என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி – பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

“”திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 – 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட “ஏரீஸ்’ என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 – 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் – முதுவேனில், கார் – கூதிர், முன்பனி – பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் – ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 – 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, “”தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்” என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் “”பிரபவ” தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை “”வியாழ வட்டம்” (Jovian Circle) எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், “இனம் புரிந்த’, இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா “”தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற” காலகட்டத்தில், “”நேரங் கெட்ட நேரத்தில்” மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் “”தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு” என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் “சுதந்திர’மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: “”சித்திரையில்தான் புத்தாண்டு”.

(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)
—————————————————————————————————————————-
தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டு

தமிழண்ணல்

இன்றும் சோதிடம் பார்ப்பவரிடம் சென்று, பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கின்றனர். கணி, கணியம் – வானநூல். கணியின் – வான நூல் வல்லவன்.

கணியர் – சோதிடம் பார்த்துக் குறி சொல்பவர். இதனைப் ஓர் அறிவியலடிப்படையில் தமிழர்கள் பின்பற்றி வந்ததற்கான சான்றுகள் மிகப் பலவுள. கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே எனத் தொடங்கும் பாடல், அவரது வானநூல் அறிவின் வழிப்பட்டதே யாகும். பக்குடுக்கை நன்கணியார் என்பவர் ஒரு புறநானூற்றுப் புலவர். இவரைப் பற்றி உ.வே.சா. அவர்கள், நன்கணியார் என்பது இவரது இயற்பெயர்; கணி – சோதிடம் வல்லவன் என் வரலாற்றுக் குறிப்பு எழுதியுள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கில் திணைமாலை நூற்றைம்பது, ஏலாதி எனும் இரு நூல்களை எழுதியவர் கணி மேதாவியார் அல்லது கணிமேதையார் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டு வெற்றி முடித்து, கங்கைக் கரையில் இருந்தபோது, தன்னுடன் இருந்த கணியிடம், வஞ்சி நீங்கி எவ்வளவு காலம் ஆயிற்று என்று அறிய விரும்புகின்றான். அக் காலத்தில் பிறைச் சந்திரனின் வளர்ச்சியையும் தேய்வையும் வைத்துத் தான் நாட்களைக் கணக்கிட்டனர்.

சேரன் வானத்தே யுள்ள பிறையை நோக்கினானாம். அவனது குறிப்பை அறிந்த கணி நாம் வஞ்சி நகரை நீங்கி வந்த முப்பத்திரண்டு மாதங்கள் ஆயின என்றான். பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க; இறையோன் செவ்வியில் கணி எழுந்து உரைப்போன், எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது (காதை 27: 146-149) என்பது காண்க. மதியமே பிறகு மாதம் ஆனது. திங்கள் என்பதும் அதுவே. அற்றைத் திங்கள் எனத் தொடங்கும் பாரி மகளிர் பாட்டும் காணலாம் (புறம்-112) சிலப்பதிகாரத்தில் ஆசான் பெருங்கணி அமைச்சருக்கு நிகராகவும் கருதப்படுகிறான். அவன் அரசனின் அருகில் இருக்கும் தகுதி பெற்றுள்ளான் (சிலம்பு: 22-8, 26-3).

குறுந்தொகையில், கோப்பெருஞ்சோழன் என்ற மன்னன் பாடிய பாடலொன்றுளது. அதில் கூந்தல் தவழும் தலைவியின் நெற்றி எட்டாம் நாள் பிறைமதி போல அழகாக அளவாக இருந்தது என்ற குறிப்புக் காணப்படுகிறது.

மாக்கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றியாங்குக் கதுப்பயல் விளங்கும் சிறுநுதல் . . . (குற.129). தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதற்கு எட்டாவது திதி, அட்டம் என்று விளக்கம் எழுதுகிறார். எண் நாள் பக்கம் – இன்று பக்கம் என்பதையே – பக்ஷம் என வடமொழியாக்கி வழங்குகின்றனர்.

இவ்வளவும் எழுதக் காரணம் தமிழர்கள் வானில் தோன்றிய மதியத்தை, நாட்காட்டியாகக் கொண்டிருந்தனர் என்பதை விளக்குவதற்கேயாம். உவாப் பதினான்கு என்பது பிங்கல நிகண்டு. பதினான்கு நாள் வளர்பிறை, பதினைந்தாம் நாள் முழுமதி (பௌர்ணமி). அடுத்த பதினான்கு நாள் தேய்பிறை. பதினைந்தாம் நாள் மறைமதி (அமாவாசை). ஆக முப்பது நாட்களைக் கொண்டு மதியம் (மாதம்), திங்கள் கணக்கிடப்பட்டது.

நாள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்பதே முன்னைய பொருள். கோள்-கிரகம். நாளும் கோளும் என்பது உலக வழக்கு. 27 நாள்கள் (நட்சத்திரங்கள்) என்பதாலும் இரண்டையும் சேர்த்துக் கணக்கிட்டதாலும் மாத நாட்களில் ஒன்றிரண்டு கூடுதல், குறைவானது.

கோள்களை (கிரகங்கள்) வைத்து, ஒரு வாரம் -ஞாயிறு முதலாகக் கணக்கிடப்பட்டது. இராகு கேது நீங்கலாக ஏழு கோள்களுக்கு (கிரகங்களுக்கு) ஏழு நாட்களாயின.

ஆகவே கோள்களை வைத்து ஒரு வாரம் என்பதையும், நாள்களை வைத்தும் மதியத்தை வைத்தும் மாதத்தையும், சூரியனை வைத்து ஆண்டினையும் தமிழர்கள் கணக்கிட்டனர். இதற்கு மேலும் நூறு சான்றுகள் உள.

சித்திரைத் திங்கள் இளவேனிற் காலத்தின் தொடக்கம். இதனை வசந்த காலம் என்பதுண்டு. பனிக் காலம் முடிந்து, இளவேனில் (வசந்தம்) வந்ததும் மக்கள் அதை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினர். அதனை ஆண்டின் தொடக்கம் என்பதற்காகக் கொண்டாடவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் ளுயீசபே எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டு தொடக்கமாகக் கருதினர்; வசந்த காலம் தொடங்குவதற்கு அறிகுரியாகக் கொண்டாடினர் என்று கட்டுரையாளர் (தினமணி 24-1-2008) குறிப்பிடுகிறார். தமிழர்களும் இவ் வசந்த காலத்தைக் கொண்டாடிய செய்தி, நிரம்பக் குறிக்கப் பெற்றுள்ளது.

காதலர்கள் ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடியும், பூங்காக்களில் விளையாடியும் இன்பம் நுகர்ந்ததோடு, மதுரையில் இலக்கிய விழாக்களும் நடை பெற்றனவாம். புதிய நூல்கள் அரங்கேற்றப் பெற்றனவாம்.
மகிழ்துணைப் புணர்ந்தவர் (காதலர்) வில்லவன் விழவினுள் விளையாடும்பொழுது; நிலன் நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார், புலன் நாவில் பிறந்த சொல் புதிதுண்ணும் பொழுது என்று இது பலவாறு குறிக்கப்படுகிறது (கலி. 35). இவ்விழா – காலப் போக்கில் சமய விழாவாக மாறி, நாயக்க மன்னர் காலத்தில் இன்றைய சித்திரைத் திருவிழா ஆனது.

அதற்காக கிரேக்க, உரோமானியரோ, தமிழரோ இதை ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டனர் என்பது முறையாகாது.

இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் – தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது – ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு – முன்பு யாடு என்றே வழங்கியது.

இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர்.

அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு – மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்; மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும் என்று தெளிவாக எழுதுகின்றவர், சித்திரை மாதத்தைக் குறிப்பிடுவது தடுமாற்றமாகவுளது.

மேஷம் என்பதற்கு – முற்பட்ட யாடு, ஆடு எனும் சொல் மேட இராசியைக் குறிக்க, அதனடிப்படையில் சூரியனின் சுழற்சியை வைத்து, தமிழர் ஆண்டினைக் கணக்கிட்டதால், தமிழர்களின் வானநூல் முறைப்படி – யாட்டு, யாட்டை, ஆண்டு என மாறி வழங்கிய இதனைச் சான்றாகக் கொண்டு, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கமெனக் கொள்வதே தக்கதாகும். சித்திரை முதல்நாள் – இளவேனிலின் (வசந்தத்தின்) தொடக்கமாகும். ஆண்டுத் தொடக்கமாகாது. அது இன்று கோடை காலம் ஆனது, பருவ மாற்றங்களின் கொடுமையாகும்.

தமிழறிஞர்கள் சிலர் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி, தமிழ்ப் புத்தாண்டை வகுத்துவிட்டனர் எனக் குறிப்பிடுவது, மிகைப்பட்ட நகையாடலாகவுளது. செம்மொழி என அறிவிக்கப்பட்டு, அதன்பின் அச் செம்மொழி பயின்ற தமிழறிஞர்களை அறவே புறக்கணித்துவிட்டுத் தமிழை வளர்ப்பதும், அவர்களைக் குறைவாக மதிப்பிடுவதும் கூடி வரும் இந் நாளில், தமிழறிஞர்கள் நகையாடப்படுவது இயல்பேயாகும்.

——————————————————————————————-

அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம்

பழ. நெடுமாறன்



தமிழர் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் என்பதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க ஒரேமனதாக நிறைவேற்றுவதற்கு வழிசெய்த முதல்வர் கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

தொன்மை வாய்ந்த மொழியான தமிழுக்கும், மூத்த குடியினரான தமிழர்களுக்கும் தனியாகப் புத்தாண்டு என்பது இல்லையா? காலப்பாகுபாடு பற்றிய கருத்தோட்டம் தமிழர்களிடம் கிடையாதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சங்ககாலத் தமிழர் ஓர் ஆண்டை ஆறு பருவங்களாகப் பகுத்தனர். ஒவ்வொரு பருவமும் இரண்டு மாதங்களைக் கொண்டிருந்தன. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என வழங்கப்பட்ட இந்த ஆறு பருவங்கள் தமிழுக்கே உரிய அகத்தினை மரபின் அடிப்படையாகும்.

குமரிக் கண்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் தென்திசையில் நின்ற கதிரவன் வடதிசைக்குச் செல்லத் தொடங்கும் (உத்தராயணம்) நாளையும் இணைத்துக் கொண்டாடினர். இதன் மூலம் தைத்திங்கள் முதல்நாள் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றது.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள இலக்கிய, கல்வெட்டு சான்றுகளின்படி ஞாயிற்றை அடிப்படையாகக் கொண்டதும் சித்திரையில் தொடங்கப் பெறுவதுமான ஞாயிற்று ஆண்டுக் கணக்கு ஒன்றும், கல்வெட்டுச் சான்றுகளின்படி வியாழனை அடிப்படையாகக் கொண்ட வியாழ ஆண்டுக் கணக்கு ஒன்றும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஞாயிற்று ஆண்டை சோழ மன்னர்களும், வியாழ ஆண்டை பாண்டியர்களும், சேரர்களும் பின்பற்றியுள்ளனர் என முனைவர் க. நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிக மக்களால் பின்பற்றப்பட்ட ஆண்டு வியாழ ஆண்டே என்பதை ருசிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர். 1985ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மகாநாட்டில் ஆய்வுரை வழங்கிய அறிஞர்கள் இந்த உண்மையை வெளியிட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துசமவெளியில் பரவியிருந்த நாகரிகம் எகிப்திய மெசபடோமிய நாகரிகங்களைவிட மிக முந்தியது. அதிகமான பரப்பில் பரவியிருந்தது என்பதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 14-10-85ம் நாளிட்ட தினமணி இதழ் இச்செய்தியை விரிவாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 60 ஆண்டு கணக்குமுறை வியாழ ஆண்டிற்கு உரியதாக இருந்தது. பின்னர் ஞாயிற்றாண்டோடு இது கலந்துவிட்டது. இந்த முறை கி.பி. 312ஆம் ஆண்டில் தொடங்கியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்களால் இம்முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது.

ஞாயிற்று ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கு 365 நாள்கள் என வகுத்ததும் தமிழர்களே என்பதை கிரேக்க நாட்டுப் பயணியான மெகஸ்தனிஸ் எழுதிய குறிப்புகளின் மூலம் அறிகிறோம்.

சாலிவாகன சகம் என்ற ஆண்டுமுறை சித்திரை மாதத்தை முதல் நாளாகக் கொண்டிருந்தது. இதுதவிர பசலி, கொல்லம் என்னும் தொடர் ஆண்டுகளும் தமிழகத்தில் வழக்கில் இருந்தன.

பண்டைத் தமிழ் மக்கள் ஒரு தலைநகரின் தோற்றம் அல்லது பேரரசன் பிறப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடராண்டு கணித்து வந்தனர் என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்த குறிப்புகளால் அறிய கிடக்கிறது என புலவர் இறைக்குருவனார் கருதுகிறார்.

அரசர்கள் முடிசூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்வரசர் பெயரோடு ஆட்சி ஆண்டு என்று குறிப்பிடும் மரபு பிற்காலச் சோழர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக்கூறுகின்றன.

தமிழ்நாட்டிற்கு ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு கிரிகேரியன் ஆண்டு என அழைக்கப்படும் கிறித்துவ ஆண்டுமுறை பழக்கத்திற்கு வந்தது.

கிசிரி முகமதிய ஆண்டுமுறை நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினாவுக்குப் புறப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட ஒன்றாகும். புத்த மதத்தவர் புத்தர் முக்திபெற்ற நாளின் அடிப்படையில் ஆண்டுமுறையை வகுத்துக் கொண்டுள்ளனர். அதைப்போல மகாவீரர் முக்தி பெற்ற நாளினை அடிப்படையாகக் கொண்டு மகாவீரர் நிர்வாண ஆண்டு சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

எனவே தமிழர்களுக்கு தொடர் ஆண்டு இல்லாத குறைபாட்டினை போக்குவதற்காக கி.பி. 1921ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவராண்டு முறையை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

திருவள்ளுவர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு என கொண்டு கி.மு. 31ஆம் ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும் பிற்காலத்தில் கிடைத்துள்ள பல்வேறு புதிய சான்றுகளின் மூலம் திருவள்ளுவரின் காலம் இன்னும் பழமையானது எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர்.

6-12-2001 அன்று மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாட்டில் தை முதல் நாளே தமிழ் ஆண்டின் தொடக்க நாள் என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும் இறுதியான முடிவு தெரியும்வரை மறைமலையடிகள் தலைமையில் வகுக்கப்பட்ட திருவள்ளுவராண்டு கணக்கினை தமிழர்கள் பின்பற்றி வருகின்றனர்.

1972ஆம் ஆண்டில் முதல்வராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்தபோது திருவள்ளுவராண்டு முறையினை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றது. அரசிதழிலும் அரசு வெளியிட்ட நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவற்றிலும் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1983ஆம் ஆண்டில் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, தமிழக அரசின் அனைத்து அலுவல்களிலும் திருவள்ளுவராண்டினை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தமிழர் ஆண்டு என்ற பெயரில் வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுப்பெயர்கள் கடைப்பிடிக்கப்பட்டன. சித்திரை முதல் நாள் தமிழாண்டு பிறப்பு என்பதும் தொடர்ந்தது. இதன் விளைவாக திருவள்ளுவராண்டு வகுக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அதனை அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் அது செயலுக்கு வரவில்லை.

எனவே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் சித்திரை முதல்நாளா, தை முதல்நாளா என்ற குழப்பம் நிலவியது.

தமிழறிஞர் கா. சுப்பிரமணியபிள்ளை போன்றவர்கள் ஆவணி மாதமே பண்டைத் தமிழ்நாட்டில் ஆண்டுத் தொடக்க மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டது என கருதினார்கள்.

இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை சட்டப்பூர்வமாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் உலகத் தமிழர்களைக் கணக்கிலோ கவனத்திலோ எடுத்துக்கொள்ளப்படாமல் தமிழக சட்டமன்றத்தில் மட்டும் இத்தகைய சட்டமுன்வடிவு ஏற்கப்படுவது முறையானது அல்ல.

தமிழர் பண்பாட்டுத் தளத்தில் மிக முக்கியமான முடிவு இதுவாகும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு தலைமுறைதலைமுறையாகத் தமிழர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதுமாகும்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பழமையான அமைப்புகளான மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச்சங்கம், தமிழகப் புலவர் குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர்கள், தமிழ் வரலாற்று அறிஞர்கள், தமிழ் கல்வெட்டு அறிஞர்கள் மற்றும் இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை தமிழக முதலமைச்சர் கூட்டி தை திங்கள் முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்பதை நன்கு ஆராய்ந்து ஏற்கச் செய்து அதன்பிறகு இதனை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியிருந்தால் அவரது பெருமையும் உயர்ந்திருக்கும். உலகத் தமிழர்களும் இதை மகிழ்ச்சியுடன் பின்பற்றத் தொடங்கியிருப்பார்கள்.

1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மறைந்த பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் உரையாற்றிய கூட்டத்தின் முடிவில் மாணவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்ட நேரம் அது. அந்த மாணவர் அது குறித்து கேள்வி கேட்டார்.

“”தமிழ்நாட்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்திருக்கிறீர்களே ஏன் எங்களைக் கேட்கவில்லை. தமிழ் உங்களுக்கு மட்டுமே சொந்தமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பியபோது நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். ஆனால் மறுகணமே அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தை, தவிப்பை உணர்ந்தேன்.

“தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை அறிவிப்பதற்கு முன்னால் ஈழத்தமிழ் அறிஞர்களையும், பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களையும் அழைத்துக் கலந்துபேசி முடிவெடுத்திருக்க வேண்டும் என்பதை அந்த மாணவரின் கேள்வி எனக்கு உணர்த்திற்று. தமிழகத்திற்கு நான் திரும்பி வந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் இது குறித்துப் பேசினேன். பேரவையில் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசி முழு விவரத்தையும் கேட்டறிந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பிரச்னையில் மட்டுமல்ல. தமிழில் கலைச்சொற்கள், அறிவியல் சொற்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும் உலகத் தமிழறிஞர்கள் பங்கேற்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்தினேன். இல்லையென்றால் வெவ்வேறு விதமான கலை, அறிவியல் சொற்கள் உருவாகிவிடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்டினேன். எனது கோரிக்கையின் நியாயத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உணர்ந்தார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கூறினார்.

திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாள் எது என்பதை முடிவு செய்யும் உரிமையும் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல. உலகத்தமிழர்களுக்கும் சொந்தமானது. அவர்களையும் கலந்துகொண்டு செய்திருந்தால் மட்டுமே அந்த முடிவு நிரந்தரமாக நிலைத்து நிற்கும்.

Posted in 60+, Ambedkar, Ancient, Anniversary, Aries, Arya, Aryan, Astronomy, Beeshma, Beeshmar, Belief, Bheeshma, Bheeshmar, Bhishma, Bhishmar, Bishma, Bishmar, Brahminism, Calendar, Celebrations, Cheran, Chithirai, Cholan, Cholas, Chozan, Chozhan, Chozhas, Culture, Customs, Days, Devas, DMK, Dravida, Dravidian, Dravidianism, Events, EVR, Festivals, first, Functions, Greece, Greek, Hindu, Hinduism, Hindutva, History, Holiday, Horoscope, Indhira, Indhiran, Indhra, Indhran, India, Indiran, Indra, Indran, Inthiran, Issues, January, Jovian Circle, Kural, Leave, Literature, months, Moon, New, Paappaan, Pandian, Pandias, Pandiyan, Pandiyas, Pappaan, Parsian, Periyaar, Periyar, Persia, Persian, Pisces, Pongal, Poombugar, Poombuhar, Poombukar, Poompugar, Poompuhar, Poompukar, Religion, Roman, Sangam, Sangamam, Sanskrit, Seasons, Signs, Sithirai, Spring, Summer, Sun, Temples, Thai, Thamil, Thirukkural, Thirukural, Thiruvalluvar, TN, Tradition, Valluvar, Winter, Year, Years | 3 Comments »

Srinivasa Sasthri – Faces: Biosketch by V Sundaram

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்

வி. சுந்தரம்

“வெள்ளி நாக்கு படைத்த பேச்சாளர்’ (Silver tongued orator) என பிரசித்தி பெற்ற ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாஸ சாஸ்திரி பார்க்காத உயர்ந்த பதவியில்லை – சிறந்த ஆசிரியர், சிறந்த “பார்லிமெண்டேரியன்’, சிறந்த ராஜதந்திரி, சிறந்த தூதுவர்..

1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள வலங்கைமான் கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சங்கரநாராயண சாஸ்திரியின் மூத்த குமாரரான இவர் குடும்பத்தின் வறுமையை சிறு வயதிலேயே கண்டார். சட்டையை வெளுக்க சவுக்காரம் கூட வாங்க முடியாத வறுமை, இலவசமாகக் கிடைத்த மாங்காய்களை ஊறுகாய்போட தேவையான உப்பைக்கூட வாங்க முடியாத ஏழ்மை.

கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பு பின்னர் கல்லூரியில் படிக்கும்போது இரவில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பாடங்களைப் படிக்கும்படி செய்த பணமின்மை! இப்பேர்ப்பட்ட குடும்ப நிலையிலிருந்து ஒரு பெரிய பேச்சுவன்மை நிறைந்த உலகம் போற்றும் ராஜதந்திரியாக மலர்ந்தது ஒரு சுவையான கதை.

பி.ஏ. தேர்வில் மாகாணத்தில் முதலிடம் பெற்று, சட்டக் கல்வி பயில பணமின்மையால் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பிறகு பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபின் சென்னை ஹிந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் போதிப்பதில் சிறந்த ஆசிரியராகப் புகழ்பெற்றதுடன் மற்ற இரு தொண்டுகளிலும் புகழ் பெற்றார். ஒன்று ஆசிரியர்களின் நன்மைக்காக முதன்முறையாக ஒரு சங்கம் நிறுவியது (Madras Teacher’s Guild) மற்றொரு தொண்டு – இன்று பல கிளைகளுடன் கொழிக்கும் திருவல்லிக்கேணி அர்பன் கோவாப்பரேடிவ் சொûஸட்டி (Triplicane urban Co-operative Society)

கல்விப் பணியில் ஈடுபட்ட சாஸ்திரியாருக்கு தேசப்பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. தேசத் தொண்டில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சியளிக்க தேச பக்தர் கோபாலகிருஷ்ண கோகலே இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society) என்ற ஒரு ஸ்தாபனத்தை நிறுவியிருந்தார். கோகலேயின் நோக்கத்தால் கவரப்பட்ட சாஸ்திரியார், தன் நல்ல சம்பளத்தையும் பெரிய குடும்ப நிர்வாகப் பொறுப்பையும் விட்டுவிட்டு, நாட்டுப்பணியில் கோகலே அளித்த உதவித் தொகையை ஏற்றுக்கொண்டது மிக வியப்புக்குரிய செய்கையாகும்.

இச்சங்கத்தில்தான் பயிற்சிக்கு வந்த காந்திஜியை முதன்முதலில் சந்தித்தார். சாஸ்திரியின் ஆங்கில அறிவு காந்திஜியைக் கவர்ந்தது. பிற்காலத்தில் தான் தொடங்கிய “யங் இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் பிரதியை சாஸ்திரியாரின் அபிப்ராயத்தை அறிய அனுப்பினார். அதில் 17 நுண்ணிய இலக்கணத் தவறுகளைச் சுட்டிக்காட்டினார். காந்திஜிக்கு சாஸ்திரியாரிடம் இருந்த மதிப்பு அதிகமாயிற்று.

மற்றொரு சமயம் தான் தொடங்க இருந்த சட்ட மறுப்பு போராட்டத்தைப் பற்றிக் கூறி சாஸ்திரியாரின் கருத்தைக் கேட்டார். இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த சாஸ்திரியார், நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் சட்டத்தை மீறிப் போராடுவது எதிர்காலத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்தார். அந்த எச்சரிக்கை எவ்வளவு தீர்க்கதரிசனமுள்ளது என்பதை இப்பொழுது காண்கிறோமல்லவா!

சாஸ்திரியார் தன் சொற்பொழிவாற்றும் திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார். உலக அரங்கில் இந்தியாவுக்கு சுய ஆட்சி அளிக்க வேண்டுமென்று முதன்முதலில் பேசியவர் அவரே.

உலகில் எங்கெங்கெல்லாம் தீமைகள் நடந்தனவோ அவைகளுக்குப் பொறுப்பான நாடுகளை சாடினார்.

பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளுக்கு பிரயாணம் செய்து அங்கு லட்சக்கணக்கில் வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை கிடைக்குமாறு செய்தார். இந்தியாவின் பெருமைகளை உலகம் அறியுமாறு செய்த முதல் இந்தியர் இவரே.

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி பிடித்த முன்னாள் பிரதமர் ஸ்மட்ஸ் அங்கு லட்சக்கணக்காக வசிக்கும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரிப் படிப்புக்கு எவ்வித வசதியும் செய்து தரவில்லை. சாஸ்திரியார் அங்குள்ள நகரங்களுக்குச் சென்று தன்னுடைய சொற்பொழிவுத் திறமையால் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு கல்லூரியை நிறுவினார். அக்கல்லூரி டர்பன் நகரில் “சாஸ்திரி காலேஜ்’ என்ற பெயரில் சிறந்த பணி செய்து வருகிறது.

பிரிட்டிஷ் அரசு அவர் பணியைப் பாராட்டி “ரைட் ஆனரபிள்’ என்று அழைக்கப்படும் மன்னரின் “பிரிவிகவுன்சில்’ என்ற ஆலோசனை சபையின் அங்கத்தினராக்கியது.

மேலும் அவருடைய இனிய குரலில் அழகான ஆங்கிலத்தில் மயங்கிய பிரிட்டிஷ் மக்கள் “வெள்ளி நாக்கு படைத்த சொற்பொழிவாளர்’ என்று அழைத்தனர். சாஸ்திரியாரின் சொற்பொழிவு தங்குதடையற்ற பிரவாகமாகவும், பொதுவாகவும், தெளிவாகவும், வெள்ளி மணிகளின் ஓசைபோலவும் இனிய குரலில் அமைந்திருக்கும்.

அவர் பேச்சை முதன்முறையாக ஜெனிவாவில் கேட்ட பால்ப்ளோர் பிரபு (Lord Balflour) “எங்கள் இங்கிலீஷ் பாஷை மேன்மை எவ்வளவு உயரம் செல்லும் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று கூறுகிறார்.

ஒரு தடவை சாஸ்திரியாரின் சொற்பொழிவைக் கேட்க அழைக்கப்பட்டார் பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மெக்டொனால்ட். ஐந்து நிமிஷமே இருக்க முடியும் என்று சொன்ன அவர் சாஸ்திரியாரின் பேச்சு முடியும் வரை இருந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும்.

சாஸ்திரியார் கடைசியாக வகித்தது அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியாகும். அங்கு அப்பதவிக்குரிய சம்பளத்தைப் பெறாமல் இந்திய ஊழியர் சங்கத்தில் சேரும்போது தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கிணங்க ரூ. 500 மட்டுமே கௌரவப்படியாக பெற்றுக்கொண்டார். அந்தத் தொகையிலும் பாதியை ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காகவும் விடுதிச் செலவுக்காகவும் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுத்து விடுவார்.

கல்வி கற்பிப்பதில் விருப்பம் கொண்ட அவர் தன் தள்ளாத வயதில் ஆங்கில மொழிநடையைக் கற்பிப்பார். அந்த வகுப்புகளுக்கு முதல் வரிசையில் இடம் பிடிக்க மாணவர்களாகிய எங்களுடன் ஆசிரியர்களும் ஓடி வருவது வேடிக்கையாக இருக்கும்.

சாஸ்திரியாரின் கடைசித் தொண்டு மைலாப்பூரில் அவர் நிகழ்த்திய பிரசித்தி பெற்ற ராமாயண சொற்பொழிவுகளேயாகும். அவைகளும் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களாகும்.

லண்டன் மாநகரில் உள்ள “கில்ட் ஹால்’ என்ற பிரசங்க மண்டபத்தில் நாடுகளின் தலைவர்கள் மட்டுமே பேசலாம். அங்கு பேசியவர்களின் பட்டியலில் சாஸ்திரியாரின் பெயர் முதலிடம் வகிக்கிறது. அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அவருடைய பெரிய உருவப்படத்தின் கீழ் காணப்படும் வாக்கியம் “ஆங்கிலேயருக்கு ஆங்கிலம் கற்பித்த இந்தியர்’.

(சாஸ்திரியாருக்கு நினைவாலயம் பல இடங்களில் இருப்பினும் அவர் பிறந்த வலங்கைமானில் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும். மக்களின் விருப்பம் என்று நிறைவேறுமோ?)

Posted in AICC, Attorney, Biosketch, British, Commonwealth, Congress, Durban, Education, England, English, Faces, Gandhi, Gokale, Gokhale, Instructor, Law, Lawyer, Leaders, legal, Mahathma, Mahatma, Orator, parliament, Parliamentarian, people, Sanskrit, Sasthri, Sastri, Shasthri, Shastri, Speech, Srinivas, Srinivasa, Srinivasan, Sundaram, Teacher, Vice-chancellor | 1 Comment »

Why the pass percentage is better in the Higher Secondary – Plus Two exams

Posted by Snapjudge மேல் மே 15, 2007

“பாஸ் மார்க்’ நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

———————————————————————————–

தூக்கி நிறுத்தும் முயற்சி?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 81 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தேர்வு எழுதிய 5,55,965 மாணவ, மாணவியரில் 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மேலும் மகிழ்ச்சி தருகிறது.

ஆனால் இந்த தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்குக் காரணம் மாணவர்கள் சிறப்பாகக் கற்றுத் தேர்வு எழுதியதால் அல்ல; தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் மாற்றப்பட்டதுதான் என்ற உண்மை, இந்த மகிழ்ச்சியைக் குறையுடையதாகச் செய்துவிடுகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் செய்முறைக்கு 30 மதிப்பெண், கருத்தியல் தேர்வில் 40 மதிப்பெண் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற விதிமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டது. மாணவர் தேர்ச்சிக்குக் குறைந்தபட்சமாகக் கருத்தியல் தேர்வில் 30 மதிப்பெண், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை ஒரு வரமாக அமைந்துவிட்டது.

அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த புதிய முறையால் அதிகம் பயனடைந்துள்ளவை அரசுப் பள்ளிகள்தான் என்பதைக் காண முடிகிறது. அடுத்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றத்தைக் காண முடியவில்லை.

மாநிலத்தில் 21 ஆண்டுகளாகத் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 6.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், மிகவும் பின்தங்கிய கல்வி மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 47 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக (18 சதவீதம்) உயர்ந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 69 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆச்சரியம் தரும் மாற்றம்!

வழக்கமாகச் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் அந்தந்தப் பள்ளி அளவிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. கருத்தியல் தேர்வு விடைத்தாள்கள் மட்டுமே வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருத்தப்படுகின்றன. தேர்ச்சிக்குக் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் பெற்றால் போதும் என்பதாலும், ஒவ்வொரு வினாத்தாளிலும் ஒரு சொல் விடை அல்லது கோடிட்ட இடங்களை நிரப்புதல் போன்ற ஒரு மதிப்பெண் விடைக்கான 30 கேள்விகள் இருப்பதாலும் தேர்ச்சி பெறுவது என்பது மிகவும் எளிதானதாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கல்வித் தரம் சரிந்துவருவதாகக் கருத்து நிலவும் இன்றைய வேளையில், மாணவர்கள் எதையும் படிக்காமல் கடைசி நேரத்தில் அதிகபட்சம் 100 ஒரு மதிப்பெண் கேள்விகளை மட்டும் படித்துவிட்டுத் தேர்ச்சி பெற முடியுமெனில், அது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உதவலாம், ஆனால் அந்த மாணவனின் தனிப்பட்ட வாழ்க்கை நலனுக்கு உதவுமா என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் தற்போது தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. குறைந்தபட்சம் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குத்தான் இத்தகைய கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையை மாவட்டவாரியாகத் தமிழகக் கல்வித் துறை வெளியிடுமானால், இந்தத் தேர்ச்சி விகித உயர்வால் உண்மையான பயன் கிடைத்துள்ளதா என்பதை அலசிப் பார்க்க முடியும்.

———————————————————————————————————————————————-

தமிழகத்தில் சீரான தேர்வுத்தாள் முறை வருகிறது?

சென்னை, நவ. 4: சமச்சீர் கல்வி முறைக்கான அறிக்கை அண்மையில் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கல்வி முறைக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து அரசு யோசித்து வருகிறது.

இதன்படி முதல் கட்டமாக மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் ஆகிய அனைத்து வகை தேர்வு முறைகளிலும் ஒரே சீரான மதிப்பெண் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தற்போது, தேர்வுத் தாள்களில் சீரான நடைமுறையைக் கொண்டு வரலாமா என்பது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மொழிப் பாடங்களுக்கு இரு தாள்கள், கணிதம், அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு ஒரு தாள் கொண்டு வரலாமா என்பது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சராசரியாக 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் மெட்ரிகுலேஷன் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேரும், ஆங்கிலோ இந்தியன் தேர்வை சுமார் 5 ஆயிரம் பேர், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,200 பேரும் எழுதுகிறார்கள்.

இவ்வாறு வெவ்வேறு வகையான பாடத் திட்டங்களுக்கு வெவ்வேறு வகையான தேர்வுத் தாள்கள், மதிப்பெண் முறை உள்ளன.

மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் மாணவர்கள் தமிழில் (அல்லது ஏதாவது மொழிப் பாடம்) இரு தாள்கள், ஆங்கிலத்தில் இரு தாள்கள், கணிதம், அறிவியல், சமூகவியல் என ஐந்து பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.

மாணவர்கள் மொத்தம் 7 நாள் தேர்வை எழுத வேண்டும்.

மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவோர் தமிழ் அல்லது ஏதாவது மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இரு தாள்கள் எழுத வேண்டும்.

அது போல் அறிவியலுக்கும் இரு தாள்கள் உண்டு. அறிவியல் முதல் தாள் என்று ஒரு தாளையும், தாவரவியல் – விலங்கியல் கொண்ட அறிவியல் இரண்டாம் தாளையும் எழுதவேண்டும்.

இது தவிர, புவியியல் – பொருளாதாரம் ஒரு தேர்வுத் தாளும், வரலாறு – குடிமையியல் (சிவிக்ஸ்) கொண்ட ஒரு தேர்வுத் தாளும் எழுத வேண்டும்.

மெட்ரிக் தேர்வு எழுதும் மாணவர்கள் 10 நாள்கள் தேர்வை எழுத வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வில் தமிழ் அல்லது ஏதாவது ஒரு மொழிப் பாடத்துக்கு ஒரே ஒரு தாள்தான் உண்டு. ஆங்கிலத்துக்கு இரு தாள்கள் உள்ளன.

மெட்ரிகுலேஷன் தேர்வைப் போல் கணிதத்துக்கும், அறிவியலுக்கும் தலா இரு தாள்கள் உண்டு. இவை தவிர புவியியல் ஒரு தாள், குடிமையியல் (சிவிக்ஸ்) ஒரு தாள் எழுத வேண்டும். இந்த மாணவர்கள் 9 நாள் தேர்வை எழுத வேண்டும்.

இத்துடன் ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவோர் கூடுதலாக சம்ஸ்கிருதம் அல்லது அரபு மொழிப் பாடத்துக்கான தேர்வை எழுத வேண்டும்.

இவை அனைத்தையும் சீராக்கி, ஆங்கிலத்துக்கு இரு தாள்கள், மொழிப் பாடத்துக்கு இரு தாள்கள், இதர பாடங்களுக்குத் தலா ஒரு தாள் என்று கொண்டு வருவது குறித்து யோசனை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலக் கல்வித் திட்ட மாணவர்களின் தேர்வுத் தாள்கள் அனைத்துக்கும் சேர்த்து அதிகபட்சமாக மொத்தம் 500 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர தேர்வுகளுக்கு அதிகபட்சமாக 700, 1000 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சீராக்கி ஒரே மாதிரியாக 500 மதிப்பெண்ணுக்கு என்று நிர்ணயிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

Posted in +2, Analysis, Anglo-Indian, City, Colleges, Education, Evaluation, fail, Govt, HSC, Marks, Marksheet, Matriculation, Metric, Metriculation, Oriental, OSLC, pass, Percentage, Plus Two, PlusTwo, Private, Public, Rural, Sanskrit, Schools, Students, Study, Suburban, Teachers, Urdu, Urudu, Village | 1 Comment »

Tamil as a classical language

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

உயர்தனிச் செம்மொழியின் இனிய வருங்காலம்

மலையமான்

உலகில் ஒரு சில மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. அவை பேச்சு நிலையில் மட்டுமே உள்ளன. பல மொழிகள் இலக்கிய வளத்துடன் திகழ்கின்றன. இவற்றுள் ஆறு மொழிகள் மட்டுமே உயர்தனிச் செம்மொழி என்று போற்றப்படுகின்றன. இதில் தமிழும் ஒன்று.

காலத்தொன்மை, இலக்கிய வளமை என்ற இரண்டும் செம்மொழியின் அடித்தளப் பண்புகள் ஆகும். இவற்றைத் தவிர, உயர்ந்த கருத்துடமை, மரபுடைமை, உலகப் பொதுமைத்தன்மை உடைமை, எளிமை உடைமை, தெளிவுடைமை, நிலைபேறான பண்புடைமை, ஆழ்ந்த பொருளுடைமை முதலிய இயல்புகளைக் கொண்ட இலக்கியங்களை அம்மொழி பெற்றிருக்கும்.

செம்மொழியின் இலக்கணம் என்பதற்குரிய தன்மைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனவே வல்லவர்கள் பல்வேறு தகுதிகளைக் கூறுகிறார்கள்.

செவ்வியல் மொழி என்றும் சொல்லப்படுகின்ற – உயர்தனிச் செம்மொழியான – தமிழின் இனிய வருங்காலம் பற்றி எண்ணித் திட்டமிடுவது சரியான முறையாகும். உலக அளவிலும் இந்திய நாட்டின் அளவிலும் தமிழ்நாட்டின் அளவிலும் இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயல்திட்டங்கள் உள்ளன.

பிரிட்டானியா, அமெரிக்கானா, காலியர் முதலிய கலைக் களஞ்சியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை கிரேக்கம், லத்தீன் என்ற இரண்டு மொழிகளை மட்டுமே உயர் தனிச் செம்மொழிகளாகக் கருதுகின்றன. இனி இத்தகைய உலகப் புகழ் கலைக் களஞ்சியங்களில் “தமிழ் – உயர் தனிச் செம்மொழி’ என்ற தலைப்பில் கட்டுரை இடம்பெறுமாறு செய்ய வேண்டும். தமிழ் ஆட்சிமொழியாக உள்ள இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தமிழர்கள் வாழும் மலேசியா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும் தமிழை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்கும்படி தூண்டப்பட வேண்டும். இதன் விளைவாக பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு மன்றம் (யுனெஸ்கோ) தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளும். அதன் வளர்ச்சிக்கு நிதி உதவி நல்கும்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள தகுதியான பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை புதிதாகத் திறக்கப்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். தமிழைக் கற்க விரும்பும் அயல்நாட்டு மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

இந்திய அரசு சமஸ்கிருதத்தைச் செம்மொழியாக ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது. அது தமிழைச் சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கருத வேண்டும். 2004-ல், இந்திய அரசு சமஸ்கிருதத்திற்கு நேரடியாக நாற்பது கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் நூறு கோடி ரூபாயும் ஒதுக்கி, அம் மொழியின் வளர்ச்சிக்கு உதவியது. இந்நிலை தமிழுக்கும் அமைய வேண்டும்.

தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், செம்மொழித் தமிழ் உள்ளது. இது கல்வித் துறையின் கீழிருக்கும் நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைவதற்கு உதவ முடியும்.

சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றன. இந்த இலக்கியங்கள் நம் நாட்டின் முக்கிய மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். (இவை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய உலக மொழிகளிலும் முழுமையாக மொழி பெயர்க்கப்பட வேண்டும்).

புனேயிலுள்ள முதுநிலைக் கல்வி ஆராய்ச்சிக் கல்லூரி, 60 தொகுதிகளைக் கொண்ட சமஸ்கிருத – ஆங்கில அகரமுதலி ஒன்றைத் தயாரிக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளது. இதேமுறையில் தமிழ்ப் பேரகராதி, பல துறைத் தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் போன்ற பார்வை நூல்கள் உருவாவதற்கும் இந்திய அரசு ஆதரவு புரிய வேண்டும்.

இந்தியப் பண்பாட்டுக்குத் தமிழ்ப் பண்பாடே அடித்தளம் என்பது அயல்நாட்டு அறிஞர்களின் கருத்து. இதுபற்றிய முறையான – முழுமையான – ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனலாம். காஞ்சிபுரத்திலும், பழைமை சான்ற மாமல்லபுரத்திலும், சங்ககாலத்திற்குரிய செங்கத்திலும், இத்தகைய பழைமை மிக்க ஊர்களிலும், அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அரிய கட்டடக் கலை – சிற்பக் கலை ஆகியவை பற்றியும் ஆராய்ச்சி நடைபெற வேண்டும்.

தமிழகத்தின் மையப் பகுதியில் மாபெரும் நூலகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இதுவரை வெளிவந்த அத்தனை நூல்களும் திரட்டப்பட்டு, குறுந்தகடு வடிவில், அங்கு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

கீழ்த்திசைச் சுவடி நூலகம், சரசுவதி மகால் நூலகம் முதலியவற்றிலுள்ள, அச்சு வடிவம் பெறாத தமிழ் நூல்களை அச்சிடல் வேண்டும். தமிழ்க் கலை, பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். (சிங்கப்பூரில் இத்தகைய அருங்காட்சியகம் இருக்கிறது).

தமிழுடன் தொடர்புடைய சித்த மருத்துவமும் தமிழிசையும் தழைத்தோங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்னவற்றை நிறைவேற்றப் பெருமளவு நிதி தேவைப்படும். ஆனால் முறைப்படி திட்டமிட்டு, சரியான வழியில் படிப்படியாக, இவற்றைச் செய்து முடிக்க முடியும். இதனால் செவ்வியல் தமிழ் வருங்காலத்தில் இனிதோங்கும். அதன் வாழ்வும் சிறக்கும்!

Posted in Antiquity, Culture, Dravidian, Europe, Heritage, History, Language, Op-Ed, Opinion, Sanskrit, Tamil | 2 Comments »