Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rupee’ Category

Indian coins converted into razor bladed – Monetary value

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

பிளேடாகும் ரூபாய் நாணயங்கள்

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், டிச. 4: தமிழகம் முழுவதும் ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம், இந்த நாணயங்களை உருக்கி பிளேடுகள் தயாரித்து விற்பனை செய்து சிலர் அதிக லாபம் ஈட்டி வருவதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வெளியிடும் சில்லறை நாணயங்கள் பிளேடுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகள் போன்று சில சமூக விரோதிகள் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர். இந் நிலையில் சில்லறை நாணயங்களைக் கொண்டு பிளேடு தயாரித்து லாபம் ஈட்டும் தொழில் தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வருகிறது.

இதனால் மொத்தமாக சில்லறை நாணயங்கள் கூடுதல் விலைக்கு சேகரிக்கப்பட்டு மூட்டை, மூட்டையாக வாங்கிச் செல்லப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி, நாணயங்களில் வெள்ளி கலந்து வெளியிட்டது. வெள்ளிக்கு நல்ல விலை கிடைப்பதால் அதை அறிந்த கும்பல், நாணயங்களை உருக்கி வெள்ளியைப் பிரித்து ஆபரணங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரிசர்வ் வங்கி, துருப்பிடிக்காத சில்வர் (ஸ்டெயின்லஸ் ஸ்டீல்) மூலம் நாணயங்களைத் தயாரித்தது.

இந்த சில்வர் நாணயங்களை உருக்கி குறிப்பாக தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட நகரங்களில் கொலுசு மற்றும் வெள்ளி ஆபரணங்கள் தயாரிக்கும் சில கும்பல்கள் பிளேடு தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறது.

ரூ.1 நாணயத்திலிருந்து 8 பிளேடுகளும், ரூ.2 மற்றும் ரூ.5 நாணயங்களிலிருந்து 10 பிளேடுகளும் தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பிளேடுகளை சில்லறை விலையில் ஒரு பிளேடு ரூ.1 முதல் ரூ.1.50 வரை பெரிய மற்றும் சிறிய நகரங்களில் சலூன்களில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1 நாணயத்திலிருந்து குறைந்தது ரூ.8 லாபம் கிடைக்கிறது.

இதனால் இந்த வியாபாரிகள் ரூ.100-க்கான சில்லறை நாணயங்களை ரூ.110 கொடுத்து வாங்கிச் சேகரித்து மூட்டை மூட்டையாக கொண்டு செல்கின்றனர்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள சில்லறை நாணயங்களை போலீஸôர் பிடித்தனர்.

விசாரணையில் அந்த நாணயங்கள் திருச்சியைச் சேர்ந்த தனியார் ஜுவல்லரி மற்றும் பாத்திரக்கடை உரிமையாளர் கொண்டு சென்றார் என்று கூறப்பட்டது. அந்த உரிமையாளர் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி கிளையில் சில்லறை நாணயங்களை வாங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே மத்திய ரிசர்வ் வங்கி, சில்லறை நாணயங்களை மொத்தமாக வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாணயங்களை உருக்கி பிளேடு தயாரிப்பதை மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Posted in babrers, blades, Coins, Consumer, Conversion, Criminals, Customer, Finance, markets, Metal, Metallurgy, Monetary, Money, Paisa, razor, RBI, retail, Rupee, Rupees, Rupya, Salon, Saloon, Shave, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, tonsure | 1 Comment »

Don’t rush to cut policy rates: Monetary, fiscal recipe for overheating India

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

வங்கிகளில் அரசு தலையீடு?

எஸ். கோபாலகிருஷ்ணன்

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மோட்டார் வாகனத் தொழில் சார்ந்த மூத்த நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், வங்கிக் கடன்களுக்கான வட்டிவீதத்தைக் குறைக்க வேண்டும் என்று யோசனை கூறினார். இது வெறும் யோசனை அல்ல, அரசின் ஆணை என்றே பலர் கருதினர்.

அதற்கேற்ப, ஓரிரு தினங்களில், சில வங்கிகளின் உயர்நிலை நிர்வாகிகள் வட்டி குறைக்கப்பட வேண்டியதுதான் என்று வழிமொழிந்தனர். அக்டோபர் 10, பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக் கடன், மோட்டார் வாகனக் கடன், டிரக் கடன் ஆகியவற்றுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்தது. இதர வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வட்டியைக் குறைத்தன.

வங்கிகள் தங்கள் கடனுக்கான வட்டிவீதத்தை அரை சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், இந்த நிகழ்வு, வேறு சில கருத்துகளுக்கும் இடம் அளித்துவிட்டது. பொதுமக்களிடமிருந்து டெபாசிட் திரட்டுவதும், திரட்டிய பணத்தை வாடிக்கையாளர்களுக்குக் கடனாக வழங்குவதும் வங்கிகளின் தலையாய தொழில். அதேபோல், பொதுமக்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வளவு வட்டி கொடுப்பது மற்றும் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிப்பது என்பதை நிர்ணயிப்பதும் வங்கிகளின் பணியே.

இந்த நியதி, அரசு உள்பட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால், பொருளாதார சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டபின்னர், மத்திய அரசு இந்த நியதியைப் பெரும்பாலும் கடைப்பிடிக்கவும் செய்தது.

விவசாயக் கடன், சிறுதொழில் கடன், மாணவர்களுக்குக் கல்விக் கடன் உள்ளிட்ட முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் தொடர்பான விதிமுறைகள் தவிர பிறகடன்களுக்கான வட்டிவீதத்தை வங்கிகளே வணிகரீதியில் நிர்ணயிக்கின்றன.

வைப்புத்தொகைகளுக்கான வட்டிவீதத்தையும் ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது தனது தேவைகளுக்குத் தகுந்தபடி கூட்டியோ குறைத்தோ வழங்குகிறது. எல்லா வங்கிகளுக்கும் ஒரே சீரான வட்டிவீதத்தை நிர்ணயிக்கும் வழக்கத்தை ரிசர்வ் வங்கி கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விதிவிலக்காக, சேமிப்பு கணக்குக்கான வட்டிவீதம் மட்டுமே அனைத்து வங்கிகளுக்கும் ஒரே சீராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் வட்டிவீதத்தைக் குறைக்கும்படி யோசனை கூறியதும், அதை வங்கிகள் விரைந்து செயல்படுத்தியதும், ஒரு பொது விவாதத்திற்கு இடமளித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

பொதுத்துறை வங்கிகளின் பெரும்பான்மைப் பங்குதாரர் மத்திய அரசுதான். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கியின் பெரும்பான்மைப் பங்குகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்தன. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டது.

நாட்டின் 80 சதவிகித வங்கிப் பணிகளை பொதுத்துறை வங்கிகள்தான் மேற்கொள்கின்றன. புதிய தலைமுறை தனியார் வங்கிகளான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி போன்றவை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தபோதிலும், நாட்டின் ஒட்டமொத்த வங்கிச்சேவையில் தனியார்துறை வங்கிகளின் பங்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளின் கடன்களுக்கான வட்டிவீதம் உயர்ந்ததால் மோட்டார் வாகன உற்பத்தியும் விற்பனையும் சரிந்துள்ளன. புதிய வீடு வாங்குவதற்கு வங்கிக் கடனை நம்பியிருந்தவர்கள் மனம் தளர்ந்து போனார்கள். காரணம், வட்டிவீதம் அதிகரித்ததால் மோட்டார் வாகனங்கள் மற்றும் வீடுகளின் அடக்கவிலைகளும் அதிகரித்துவிட்டன. இது பொருளாதார மந்தநிலைக்கு வழி வகுக்கக்கூடும் என்ற கவலை மேலீட்டால் மத்திய நிதி அமைச்சர் தமது யோசனையை வெளியிட்டிருக்கக்கூடும். ஆகவே, இதை அரசியல் தலையீடாகக் கருதக்கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

இது ஒருபுறமிருக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கும், இயக்குநர் குழுக்களுக்கும் சமுதாயக் கடமை உண்டு. வணிக ரீதியில் வெறும் லாபநோக்கோடு மட்டுமல்லாமல், பொருளாதார மந்தநிலை ஏற்படும் நிலைமை தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய பொறுப்பு பொதுத்துறை வங்கிகளுக்கு இருக்கிறது.

அண்மையில் நிகழ்ந்த கடன்களுக்கான வட்டி உயர்வுக்கு காரணம், வங்கிகள் அல்ல; ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கையே என்பது புலனாகும்.

ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகளில் ஒன்று, நிதி மற்றும் கடன் கொள்கையை முடிவு செய்து 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிவிப்பதாகும். இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்க வீதத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டாவது, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடனைத் தங்குதடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

முன்னதாக, அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த பணவீக்கவீதத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வங்கிகளின் உபரிப் பணத்தை உறிஞ்சுவதற்காக, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பை மேலும் அரை சதவிகிதம் அதிகரித்தது. அதற்கு முன்பு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தையும் (ரெப்போ ரேட்) உயர்த்தியது.

இந்த நடவடிக்கைகளால் பணவீக்கவீதம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், வங்கிகளின் கடனுக்கான வட்டிவீதம் உயர்வதற்கும் அது வழிவகுத்துவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கிகளில் வைப்புத்தொகை அதிகரித்ததைவிட, வங்கிக்கடன் தொகையே அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு வங்கிக்கடன் அதிகரித்து வந்துள்ளது. வட்டி உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற சமிக்ஞை ரிசர்வ் வங்கியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமே அல்லாமல், அரசுத் தரப்பிலிருந்து அல்ல என்பது தெளிவு.

இதற்கிடையே, டெபாசிட்களுக்கான வட்டியும் குறையத் தொடங்கியுள்ளது என்பது கவலை தரும் விஷயம். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கக்கூடிய வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கைநடத்தும், பணி ஓய்வுபெற்றவர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யார்?

நடுத்தர மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும்விதத்தில் அவர்களுடைய வைப்புத்தொகைக்கான வட்டிவீதத்தைக் குறைக்காமல் பார்த்துக்கொள்வதற்கு ரிசர்வ் வங்கி ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்த உயிர்நாடிப் பிரச்னையை வெறும் வணிகரீதியில் அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய இழப்பை ஒரு சுமையாக ரிசர்வ் வங்கி கருதலாகாது. ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் உதவுவதை ஒரு சமுதாயக் கடமையாகக் கருத வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in Agriculture, Assets, Auto, Automotive, Banking, Banks, BOB, Bonds, BSE, Cars, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chit Funds, Chitfunds, Chithambaram, Commerce, Cooperative, Credit, CRR, Deflation, Deposits, Dollar, Economy, Enforcement, Exchange, Farmers, FD, Finance, Financing, fiscal, Govt, HDFC, ICICI, Index, Indices, Inflation, Insurance, Interest, investments, IOB, KVB, Land, liquidity, Loans, markets, Micro-financing, Microloans, Minister, Monetary, Motor, NIFTY, NSE, Overnight, Overnite, Parts, Policy, Property, Rates, RBI, reserves, ROI, Rupee, Rupees, Rupya, SBI, Schemes, Shares, Spare, Stocks, Student, Treasury | Leave a Comment »

Textile Industry: Current Trends, analysis – S Gopalakrishnan (Garment Exports)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள்

எஸ். கோபாலகிருஷ்ணன்

ஜவுளித்துறையில் “கோட்டா’ முறை முடிவுக்கு வந்து சுமார் 3 ஆண்டுகளாகப் போகிறது. ஜவுளித்துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு முன் என்ன நிலைமை இருந்தது?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்களுக்குத் தேவையான ஆயத்த ஆடைகளை ஒரே நாட்டிலிருந்து வாங்குவதில்லை. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட ஒரு விகித அடிப்படையில் இறக்குமதி செய்து வந்தன. இதனால், இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இந்த கோட்டா முறை 2005 ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திய ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. “”இனி தேவையெல்லாம், வணிகத்திறன் மட்டுமே. அதாவது, சர்வதேசச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தகுந்த சிறப்பான தரம், நியாயமான விலை, குறிப்பிட்ட தேதியில் ஏற்றுமதி செய்தல் ஆகியவையே. இனி எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றுமதி செய்யலாம்” என்று ஜவுளித்துறையில் பேசப்பட்டது.

2005-ல் வெளியான முக்கிய ஆய்வறிக்கைகள், 2003 – 04-ல் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி 2010-ல் 50 பில்லியன் டாலராக உயரும் என்று தெரிவித்தன. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). அதேபோல், 2012-ம் ஆண்டில் 55 பில்லியன் டாலராகவும் 2014-ம் ஆண்டில் 70 பில்லியன் டாலராகவும் ஜவுளி ஏற்றுமதி உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இணையாக ஜவுளித்துறை உத்வேகம் அடையும் என்றும் பேசப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 23 பில்லியன் டாலராகவே இருக்கும் என்று தெரிகிறது. அதாவது நிர்ணயிக்கப்பட்டிருந்த 25 பில்லியன் டாலர் இலக்கைவிட குறைவாகவே இருக்கும். கடந்த ஆண்டும் இலக்கைவிட 2 பில்லியன் டாலர் குறைவாகவே ஏற்றுமதி இருந்தது.

எனினும், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெறும் 12 பில்லியன் டாலராக இருந்த ஜவுளி ஏற்றுமதி இந்த ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ள அளவு, ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை.

சீனா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டு கோட்டா முறை ரத்தான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 3 சதவிகிதம்தான்; ஆனால் சீனாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஜவுளித்துறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. மூன்றரை கோடி மக்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இந்தியாவின் மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒன்பது சதவிகிதத்தினருக்கு ஏற்கெனவே வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஒரு துறை.

மத்திய அரசு அண்மைக்காலமாக சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஜவுளித்துறையில் புதிதாக முதலீடுகள் வரவேண்டும் என்ற நோக்கில், 1999-ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையில் தொழிலியல் மேம்பாடு நிதித் திட்டத்தை (பங்ஷ்ற்ண்ப்ங் மல்ஞ்ழ்ஹக்ஹற்ண்ர்ய் ஊன்ய்க் நஸ்ரீட்ங்ம்ங்) உருவாக்கி தொழிலியல் ரீதியான மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்காக நிதி உதவி செய்து வருகிறது. இத்திட்டம் நடப்பாண்டில் முடிவடையும் நிலையில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாட் (யஹப்ன்ங் அக்க்ங்க் பஹஷ்) உள்ளிட்ட வரிச்சலுகைகள், நவீன இயந்திரங்கள் இறக்குமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், சிறுதொழில்துறையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பின்னலாடை போன்ற சில பிரிவுகளை பிற தொழிற்கூடங்களுக்கு அனுமதித்தல், வெளிநாட்டு முதலீட்டுக்கான உச்ச வரம்பை 100 சதவிகிதமாக உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

எனினும் ஜவுளித்துறை குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. தொழிலியல் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் பயனாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவில் புதிய முதலீடுகளை ஜவுளித் துறையில் செய்து வருகின்றனர்.

அதேநேரம், ஜவுளி ஏற்றுமதியில் அனுபவமும், ஆற்றலும் பெற்றுள்ள சில தொழில் முனைவோர் வங்கதேசம் சென்று, ஏற்றுமதி செய்ய முற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த நாட்டில் தொழிலாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் குறைவு என்பதே இதற்கு காரணம்.

இது ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. மற்ற ஏற்றுமதியாளர்களைப்போலவே, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இந்த டாலர் வீழ்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ. 1,400 கோடியில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், இது போதுமானது அல்ல என்பது ஏற்றுமதியாளர்களின் கருத்து.

இந்நிலையில், டாலர் மதிப்பு வீழ்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை மட்டும் நம்பியிராமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கதுதான். எனினும், அமெரிக்கச் சந்தையின் தேவையைவிட ஐரோப்பிய நாடுகளின் தேவை மிகக் குறைவு என்பதால், இது ஒரு தாற்காலிக நிவாரணமாகவே அமையும்.

அதேபோல், அமெரிக்காவின் புதிய ஆர்டர்களுக்கு 3 சதவிகித அளவுக்கு விலையை உயர்த்தி வருகிறார்கள் என்று திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்படும் ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஜவுளித்துறையில் நீண்டகாலத்துக்கு உத்வேகம் ஏற்பட வேண்டுமானால், தொழிலியல் ரீதியாக நவீனமயமாக்கல், கட்டமைப்பு மேம்பாடு, காலமாற்றத்துக்கேற்ற புதிய புதிய வணிக உத்திகள் ஆகியவை உடனடித் தேவை. அத்துடன், நெசவு முதல் ஆடைகளைத் தைத்து முடிப்பதுவரை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த உற்பத்திக் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு, சர்வதேசத் தரத்துக்கு ஜவுளி ஆலைகளை நிறுவுவதற்காக ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்களை மத்திய அரசு அமைக்கிறது. இத்திட்டத்தில் 30 ஜவுளி பூங்காக்களை அமைக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 897 கோடியில் அமையும் இத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகை ரூ. 1,055 கோடி என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்திருப்பது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்).

Posted in America, Bangladesh, Budget, Capital, Cash, China, Commerce, Conversion, Dollar, Dress, Dresses, Economy, Employment, EU, Europe, Exchange, Exports, Factory, Fashion, Garments, GDP, Govt, Honduras, Imbalance, Incentives, Income, Indonesia, Industry, Inflation, Jobs, Knit, Loss, Monetary, Money, Nicaragua, Profit, revenue, Rupee, Srilanka, Tariffs, Tax, Textiles, Thirupoor, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tiruppoor, Tiruppur, Tirupur, Trade, US, USA | Leave a Comment »

Manmohan Singh’s Rural job guarantee scheme: S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

தேவை, வேலைவாய்ப்புடன் கூடிய வளர்ச்சி

எஸ். கோபாலகிருஷ்ணன்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம் விளைவாக கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது.

பொதுவாக, தொலைத்தொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், இரும்பு, சிமென்ட், உருக்கு, மருந்து உற்பத்தி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் உற்பத்தியில், சேவைத்துறைகளில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை, பெரிய நிறுவனங்கள் பெங்களூர், ஹைதராபாத், நொய்டா (தில்லி) என்று தங்கள் செயல்பாட்டை வரையறுத்துக் கொண்டிருந்த நிலைமை மாறி, தமிழகத்தின் மீதும், குறிப்பாக சென்னையின் மீது, தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் நிகழும் வளர்ச்சி மற்ற துறைகளின் வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகிறது என்பது வெளிப்படை. பெருநகரங்களில் மட்டுமல்லாமல் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. இது அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவும்.

தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் கண்டுவரும் அபரிமிதமான வளர்ச்சியால் – விவசாய வளர்ச்சி வீதம் சுணக்கமாக இருந்தும்கூட – நடப்பாண்டின் முதல் 3 மாதங்களில் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 9.3 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை கருணை புரிந்துள்ளதால் விவசாய வளர்ச்சியும் சற்றே மேம்படலாம். எது, எப்படி இருந்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5 ஆக இருக்கும் என்பது பாரத ரிசர்வ் வங்கி மற்றும் ஐ.நா. சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் கணிப்பு ஆகும். அதேசமயம், உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 2006-ல் 4 ஆக இருந்தது; ஆனால் 2007-ல் இது 3.4 ஆகக் குறையும் என்று ஐ.நா. அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபக்கம், கடந்த பல மாதங்களாக பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த பணவீக்க வீதம் 4-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது ஆறுதல் அளிக்கத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து உள்ளது.

பங்குச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த ஏற்ற இறக்கத்திலிருந்து இந்தியா துரிதமாக மீட்சி அடைந்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவே இதற்கு உதவியது.

இத்தகைய வளர்ச்சி இருந்தும், நாட்டில் உள்ள 110 கோடி மக்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் உழலுவது ஏன்?

ரூ. 4 ஆயிரம் கோடி ஆஸ்தி உடையவர்களை உலக அளவில், “”டாலர் பில்லியனர்கள்” என்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் “”டாலர் பில்லியனர்”களாக உருவாகி உள்ளனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில், இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் “”டாலர் பில்லியனர்”கள் அதிகமாக உள்ளனர்.

அதேநேரம், இந்தியாவில் மட்டும்தான், எட்டு கோடிப் பேர், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக ரூ. 20-க்கும் குறைவான தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

இந்தியா மகத்தான வளர்ச்சி கண்ட கடந்த 10 ஆண்டுகளில், ஒரு லட்சம் ஏழை விவசாயத் தொழிலாளிகள் வறுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். வேலையின்மையும் வறுமையும் கிராமப்புற விவசாயிகளை நிழலாகத் தொடர்கின்றன.

ஆசிய மேம்பாட்டு வங்கி அண்மையில் மேற்கொண்ட முக்கிய ஆய்வு ஒன்று, ஒரு விஷயத்தை உறுதி செய்கிறது. இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியின் பயன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டவில்லை என்பதே அது. ஜப்பான், தென்கொரியா தவிர, சீனா, வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில், 1990 முதல் 2005 வரையிலான ஆண்டுகளில் ஏழை – பணக்காரர்களிடையேயான வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது.

வருமான இடைவெளி அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னிலை வகிக்கவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்!

தற்போதைய பொருளாதார வளர்ச்சி, ஏற்கெனவே பணவசதி படைத்தவர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதற்கும் படித்த, நகர்ப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்வதற்குமே பெரிதும் உதவுகிறது. ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

1970-களிலும் 1980-களிலும் ஒரு தொழில் முனைவர் வங்கியில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒரு சிறுதொழில் தொடங்கினால், அதன் மூலம் குறைந்தது 10 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை இருந்தது. வங்கிகள் 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், அடுத்த 20 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் சிறு தொழிலுக்கும் விவசாயத்துக்கும் முன்னுரிமை அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சிறு தொழில்கள், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில் 40 சதவிகித வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தன. குறைந்த முதலீட்டில், நிறைந்த வேலைவாய்ப்பு கிடைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில், மிகப்பெரிய அளவில் முதல் போட்டு, தொழில் நிறுவனங்கள் துவக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கோடி முதலீட்டில் ஒரு நபருக்குத்தான் வேலைவாய்ப்பு சாத்தியம்.

இதற்குச் சான்றாக, அண்மையில் மத்திய அரசு வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அளித்த தகவல் அமைந்துள்ளது. இது தவிர 75 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.

இவற்றில், ரூ. 43,125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு 35,000 பேருக்கு மட்டுமே.

இந்த நிலைமை சீராக, சிறுதொழில்களுக்கு முன்னுரிமை அளித்து குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கி புதிய வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வங்கிக் கிளைகள் தொடங்கி, விவசாயக் கடன்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுவே வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய சமுதாயக் கடமை.

கிராமப்பகுதிகளில் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வகை செய்யும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தமது சுதந்திர தின உரையில் அறிவித்தார். அது வெறும் அறிவிப்பாக நின்றுவிடாமல், முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். இதில், ஊழல்களுக்கு சற்றும் இடம் தரலாகாது. அப்போதுதான் வறுமை ஒழிப்பை நோக்கி நாடு உறுதியாக முன்னேற முடியும்.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா).

Posted in Agri, Agriculture, Assets, Auto, Automotive, Bangalore, Biz, Blr, Cement, Chennai, City, Commerce, computers, Currency, Deflation, Delhi, Economy, Employment, Exchange, Exports, Farmers, Farming, Fe, Finance, GDP, Globalization, Growth, hyd, Hyderabad, Imports, Industry, Inflation, Iron, IT, Jobs, Loans, Maa, Madras, Media, Medicine, Medicines, Metro, Motors, Naidu, Needy, Noida, Poor, Poverty, Rains, Recession, Rich, Rupee, Rural, Season, sectors, SEZ, Software, Spot, Stagflation, Steel, Suburban, Tech, Technology, Telecom, Television, TV, UP, Wealthy, Weather, Work, workers, Zones | Leave a Comment »

Rupee full convertibility – American sub-prime Mortgage Loan imbroglio: Economic Analysis

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

ரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்

எஸ். கோபாலகிருஷ்ணன்

நல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது!

அண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது! ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன? தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.

இப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.

ஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.

இன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.

ஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

கடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.

மூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).

Posted in America, Analysis, Assets, Banks, Cash, Commerce, Deflation, Economics, Economy, Inflation, Loan, Loans, Mortgage, Recession, Rupee, Rupees, Stagflation, USA | Leave a Comment »

Controlling Inflation & Avoiding Recession – RBI & Stagflation

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!

ரிசர்வ் வங்கிக்கு உள்ள பல கடமைகளில் தலையாய கடமை, பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதுதான் என்பது அதன் சமீபகால நடவடிக்கைகளைக் கவனிக்கும்போது எளிதில் புலனாகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வீதம் 8.5%-க்கும் மேல் இருக்கிறது, பணவீக்க விகிதம் 5%-க்கும் குறைவாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீபகாலத்தில் அதிகரித்து சராசரியாக 40 ரூபாயாக இருக்கிறது. வங்கிகளிடம் டெபாசிட் பணம் அபரிமிதமாக இருக்கிறது. இத்தனை இருந்தும் மக்களிடம் நிம்மதியோ, வாங்கும் சக்தியோ குறிப்பிடும்படி இல்லை.

“”மக்கள்” என்று இங்கே நாம் குறிப்பிடுவது பெரும்பாலானவர்களான நடுத்தர, ஏழை மக்களைத்தான். நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கே சவால் விடுவதைப் போல தங்கத்தின் விலையும், நிலத்தின் விலையும் (வீட்டுமனை) உயர்ந்துகொண்டே வருகின்றன. இந்நிலையில் அவர்களுடைய சேமிப்பைப் பாதுகாக்கவும், அதற்கு சுமாரான வருமானத்தையும் தருவது வங்கிகள் தரும் வட்டிவீதம்தான். ஆனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்த வட்டிவீதத்துக்குத்தான் ரிசர்வ் வங்கி குறிவைக்கிறது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்.

உலக அரங்கில், இந்தியப் பொருளாதாரத்தின் வலிமைக்கான காரணங்களாக உள்ள அம்சங்களை ஆராய்ந்த வல்லுநர்கள், வருவாயில் ஒரு பகுதியைப் பிற்காலத்துக்காகச் சேமித்துவைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவின் ஏழைகளிடம்கூட இருப்பதையும், அதைச் செயல்படுத்துவதையும் சுட்டிக்காட்டி, பாராட்டியுள்ளனர். ரிசர்வ் வங்கி இந்த சேமிப்புப் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்க முயல வேண்டுமே தவிர, மக்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டக் கூடாது.

நஷ்டம் வரக்கூடாது என்று மத்திய அரசே முனைப்புக் காட்டி வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைப்பதும், வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அந்த நடவடிக்கைகளை நடுத்தர, ஏழை மக்களின் சேமிப்பு மீதான “”மறைமுக வரி” என்றே கூற வேண்டும்.

வங்கிகளிடம் மிதமிஞ்சி சேர்ந்துவிட்ட டெபாசிட்டுகளால் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உபரிப் பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. அதை உறிஞ்சுவதற்காக, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பை மேலும் 0.5% அதிகரித்து, 7% ஆக்கியிருக்கிறது. இப்படி ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்திய பிறகும்கூட அதிகபட்சம் 16 ஆயிரம் கோடி ரூபாயைத்தான் புழக்கத்திலிருந்து உறிஞ்ச முடியும். வங்கிகளிடம் உள்ள மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.4,90,000 கோடியாகும்.

வீடுகட்ட கடன் வாங்கியவர்களும், இனி வாங்க நினைப்பவர்களும் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் மனம் தளர்ந்து போய்விட்டார்கள். வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து, வீடமைப்புத் திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்வேகத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துவிட்டது. இனி வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்ந்தாலும் வியப்பதற்கு ஏதும் இல்லை.

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பண அச்சடிப்பைக் கட்டுப்படுத்துவது ஒரு வழி என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால் உற்பத்தியைப் பெருக்குவதும், பொது விநியோக முறையை வலுப்படுத்துவதும்தான் உற்ற வழிகள்.

இடைத்தரகர்கள், ஊகபேர வியாபாரிகள், கள்ளச்சந்தைக்காரர்கள், முன்பேர வர்த்தகர்கள் ஆகியோரை ஒடுக்காவிட்டாலும், எச்சரிக்கும் விதத்திலாவது ஓரிரு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் பெயர்பெற்ற இந்தியர்களைக் கடன் சுமையில் ஆழ்த்தவே பன்னாட்டு வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் 24 மணி நேரமும் தீவிரமாக உழைக்கின்றன. நம் மக்களின் சேமிப்பையும் உழைப்பையும் மதிக்கும் விதத்தில் ரிசர்வ் வங்கியாவது செயல்படலாம் இல்லையா? இதனால் சில நூறு கோடி ரூபாய்கள் வருமானம் குறைந்தாலும்கூட அதைப் பெரிய இழப்பாக மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கருதலாமா?

————————————————————————————————–
கவலைப்பட யாருமே இல்லையா?

Dinamani op-ed (August 7 2007)

வீட்டுக் கடன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என்று அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். பணவீக்க விகிதம் குறைந்தால் மட்டுமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் என்றும் கூறியிருக்கிறார்.

இருக்க இடம் என்பது, உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் இயற்கையான லட்சியம். ஆனால், சொந்த வீடு என்கிற இந்த கனவு நனவானதுடன் நிற்காமல், ஒரு நிரந்தர நரகமாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? வீட்டுக் கடன் வாங்கிக் கனவு நனவானவர்களின் நிலைமை அதுதான்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர், அத்தனை வங்கிகளும் போட்டிபோட்டுக் கொண்டு வீட்டுக் கடன் வழங்க முன்வந்தன. நகர்ப்புறங்களில் திரும்பிய இடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் காளான்கள்போல முளைத்தன.

வாடிக்கையாளர்களிடம் இரண்டு வகையான வீட்டுக் கடன் வசதி முன்வைக்கப்பட்டது. முதலாவது வகை வீட்டுக் கடனில் வட்டி விகிதம் அதிகம். ஆனால், கடன் அடைந்து முடியும்வரை இந்த வட்டி விகிதம் மாறாது என்பதால் திருப்பி அடைக்க வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையும் மாறாது. ஆனால், இரண்டாவது வகை வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், அவ்வப்போது வங்கியின் வட்டிவிகித ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றபடி மாறும் தன்மையது. இதற்கான வட்டி குறைவு என்பதால், பலரும் இந்த முறையிலான வீட்டுக் கடனையே விரும்பி ஏற்றனர்.

அப்போதிருந்த நிலையில், வங்கிகளின் வட்டி விகிதம் குறைந்து வந்த நேரம். அதனால், மேலும் வட்டி குறையும்போது அதன் பயன் கிடைக்குமே என்கிற நம்பிக்கையில் இந்த முறை வட்டிக் கடனைத் தேர்ந்தெடுத்தவர்களே அதிகம். ஆனால், இப்போது இந்த இரண்டாவது வகை வீட்டுக் கடன் முறையைத் தேர்ந்தெடுத்து வீடு வாங்கியவர்கள் நிலைமை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது.

வட்டி விகிதம் குறைவதற்குப் பதிலாக, வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி விட்டிருக்கின்றன. அதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள் உடனடியாக தங்களது கடனில் ஒரு பகுதியைத் திருப்பிக் கட்டினால் ஒழிய, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவே முடியாது. இந்தத் தவணைகள் வட்டிக்குத்தான் சரியாக இருக்குமே தவிர அசல் குறையாது. அதாவது, வாழ்நாள் முழுவதும் வட்டி மட்டும் கட்டிக் கொண்டிருக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வருகிறது. 6.5 சதவிகிதத்திலிருந்து இப்போது 11 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. ஆரம்பத்தில், அதிகரித்த வட்டி விகிதத்தை ஈடுகட்ட வங்கிகள் தவணைகளை அதிகப்படுத்தின. இன்றைய நிலையில், தவணைகள் 25 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டாலும் கடன் அடைந்து தீராது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

மாறும் வட்டி விகித முறையில், ஒரு லட்ச ரூபாய்க்கான 20 ஆண்டு வீட்டுக் கடனுக்கு 7.25% வட்டியானால் மாதாந்திரத் தவணை ரூ. 790. இப்போதைய 11.25% வட்டிப்படி கணக்கிட்டால், மாதாந்திரத் தவணைத்தொகை ரூ. 900. ஆரம்ப ஆண்டுகளில், சுமார் ஐந்து ஆண்டு வரை, ஒருவர் அடைக்கும் ரூ. 790 தவணைத்தொகையில் அசலுக்குப் போகும் பணம் வெறும் ரூ. 79 மட்டுமே. அதனால், இப்போது வட்டி விகிதம் அதிகரித்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடன் வாங்கிய பலருடைய அசல் தொகையில் பெரிய அளவு பணம் திருப்பி அடைக்கப்படாத நிலைமை.

வீட்டுக் கடன் வாங்கிய லட்சக்கணக்கான மத்தியதர வகுப்பினர் மனநிம்மதி இழந்து, தூக்கம்கெட்டுத் தவிக்கும் நிலைமை. வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுபவர்கள் பலர். இதற்கெல்லாம் காரணம், சராசரி மனிதனின் உணர்வுகளையும் கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாத மத்திய நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் வங்கித் துறையும்தான்.

இந்த நிலைமையைப் பற்றிக் கவலைப்பட யாருமே இல்லையா?

Posted in Ahluwalia, APR, Balance, bank, Banking, Biz, Budget, Business, Center, Chidamabram, Chidambaram, Chidhambaram, Chithambaram, Commerce, Common, Consumer, Control, Currency, Customer, Deposits, Dinamani, Dollar, Economy, Exchanges, Expenses, Exports, Finance, fiscal, GDP, Governor, Govt, Growth, Homes, Houses, Imports, Industry, Inflation, Insurance, Interest, Land, Loans, Loss, Manmohan, Monetary, Money, Op-Ed, PPP, Profit, Property, Rates, RBI, Real Estate, Recession, Revenues, Rupee, Spot, Stagflation, USD | Leave a Comment »

Living with a strong rupee – Impact on Exports & Commerce

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.

அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.

கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.

டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.

இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.

பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.

விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.

இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.

எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)

Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »

Tips for Banking Customers – Safe Deposit

Posted by Snapjudge மேல் மே 1, 2007

வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு…

இரா. எத்திராஜன்.

*அனைத்து வங்கிகளும் கணினி முறையில் இயங்குவதால் காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது, காசோலையில் கண்டிப்பாக ஸ்டேப்லர் பின் போடக்கூடாது. அதற்குப் பதிலாக, காசோலையை, வங்கிப் படிவத்துடன் இணைத்து குண்டூசி போடலாம்.

*காசோலையை மற்றவர்களுக்கு வழங்க நேரிடும்போது, காசோலையில், நிறுவனம் அல்லது பெறுபவரின் பெயர், பணத்தின் மதிப்பை எண் மற்றும் எழுத்தாலும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.

*ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவது குற்றமாக ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் தங்களின் சொந்தக் குறிப்புகளை எழுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

*வங்கி பாஸ் புத்தகத் தகவல்களை நாள்தோறும் சரிபார்க்க கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.

*வங்கி பாஸ் புத்தகத்தை மடக்கி வைத்தல் கூடாது. ஏனெனில் பாஸ் புத்தகத் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நேரிடும்போது, மடக்கப்பட்ட புத்தகம் கம்ப்யூட்டரில் நுழைவது கடினமாக இருக்கும்.

*வங்கி வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நாளேடுகளில் வங்கிகளைப் பற்றி வெளிவரும் செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கித் துறையில் ஏற்படும் புதிய மாற்றங்களை வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.

*வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

*வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடங்கள் மாற்றத்தின்போது, கண்டிப்பாக கடிதம் மூலம் வங்கி கிளைக்குத் தெரிவிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.

Posted in Accounts, Banking, Banks, Cash, Checking, Checks, Consumer, Current, Customer, Customers, deposit, Money, Rupee, Safe, Savings, service, Tips | Leave a Comment »

Inflation, Deflation & Recession: Indian Monetary Policy – S Janakiraman

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

மீண்டும் பணவீக்கம்

எஸ். ஜானகிராமன்

மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

1960ல் தொடங்கி 2000 – 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.

தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.

தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.

அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை

  • பணக்கொள்கை,
  • நிதிக்கொள்கை,
  • வர்த்தக மற்றும்
  • செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.

பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.

நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.

பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.

அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.

ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.

இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.

அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.

மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.

பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.

இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், திருவள்ளூர்).

Posted in Analysis, APR, Background, Banks, BSE, Business, Commerce, Commerce Goals, Customs, Deflation, Economy, Exports, FDI, Finance, Finance Ministry, Financial Policy, Foreign Exchange, Imports, Index, India, Inflation, Interest Rates, Invsetments, Loans, Monetary Policy, NSE, Op-Ed, Opinion, Primer, RBI, Recession, Reserve Bank of India, Rupee, Shares, Stock market, Tax | Leave a Comment »