Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘RKK’ Category

London Diary – Ira Murugan: Maiden Lane Visitor

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

லண்டன் டைரி: புரட்சியாளர் வாழ்ந்த மெய்டன் தெரு!

இரா. முருகன்

மூக்கு வழியே மூளையிலும் மனதிலும் புகுந்து கிறங்கடிக்கிற வாடையைச் சுற்றிலும் கிளப்பிக்கொண்டு பொன்னிறமாக வறுத்து, கையால் சுற்றும் இயந்திரத்தில் கரகரவென்று அரைத்து, கொதிக்கக் கொதிக்க வென்னீர் சேர்த்து “திக்’கான டீக்காஷனை ஃபில்ட்டரில் இறக்கி, பத்து நிமிஷத்துக்கு முன்னால் கறந்த பசும்பால் காய்ச்சிச் சேர்த்து, வில்லை வளைக்கிறதுபோல வீசி ஆற்றி, நுரைக்க நுரைக்க டம்ளரில் ஊற்றி நீட்டுகிற அற்புதமான காப்பிக் கடைகள் லண்டனில் திறந்தது கிட்டத்தட்ட இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கதி. விக்டோரியா மகாராணி இங்கிலாந்தை ஆண்டபோது நாடு முச்சூடும் மும்முரமாக காப்பி குடித்துக் கொண்டிருந்தது. அல்லது மதுபானம் பருகிக் கொண்டிருந்தது. பல குடிமக்கள் பகல், இரவு என்று நேரத்தைப் பிரித்துக்கொண்டு இரண்டு கட்சியிலும் அரும்பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

கோவண்ட் தோட்டச் சுற்றுவட்டாரத்தில் அப்போது காப்பிக் கடை இல்லாத சந்து பொந்து ஒன்று கூடக் கிடையாது. பரபரப்பான போட்டிக்கு நடுவே காப்பிப் பிரியர்களைக் கடைக்கு வரவழைக்கப் புதுமையான சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

“எங்க கடையில் காப்பி குடித்தால், ஒரு சுருட்டு இலவசம்’ என்று விளம்பரம் செய்கிற கடைக்கு நேர் எதிரே, “காப்பி குடித்தபடியே இலவசமாக தினசரிப் பத்திரிகை படியுங்கள்’ போர்ட் வைத்த கடை. “பெரிய சைஸ் டம்ளர் காப்பி ரெண்டு சல்லி, சின்ன சைஸ் டம்ளர் ஒரே ஒரு சல்லி’ என்று மினி மார்க்கெட்டிங்கில் காசை அள்ளிய கடை இப்படிப் பல. பால் பவுடர் என்ற சமாச்சாரத்தைக் கண்டுபிடித்ததும் அந்தச் சமயத்தில்தான். “”என்னத்துக்கு மெனக்கெடணும்? லண்டன் பால்காரங்களைக் கேட்டா சொல்லுவாங்களே, சுண்ணாம்புக் கட்டியைக் கரைச்சுத் தண்ணியை ஊத்திக் கொஞ்சம் பாலைச் சேர்த்தாப் போதுமே” என்று அந்தக்கால நகைச்சுவை பத்திரிகை “பஞ்ச்’ நையாண்டிக் கட்டுரை எழுதியதும் அப்போதுதான்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு வசமாகத் திரும்பி, ஒரு காலத்தில் காப்பிக் கடைகள் செழித்தோங்கிய மெய்டன் சந்தில் நடக்கிறேன். முட்டுச் சந்தாக முடிந்த இந்த மெய்டன் சந்து இரண்டு பக்கத்திலும் திறந்து, பக்கத்து சவுத்ஹாம்ப்டன் வீதியில் முடிய வழிவகுத்தவர் விக்டோரியா மகாராணி. நாடக ரசிகையான அவர் கோவண்ட் தோட்டப் பக்கத்து நாடகக் கொட்டகைக்கு சாரட் வண்டியில் வந்துவிட்டுத் திரும்பப் போக வசதியாக இப்படி மெய்டன் சந்துக்கு ராஜபாட்டை அந்தஸ்து ஏற்பட்டதோடு அந்தத் தெரு கூடுதல் பரபரப்புக்கு இடமானது.

நான் இப்போது நிற்கும் மெய்டன் சந்து முழுக்க சாப்பாட்டுக் கடைகள். அங்கங்கே வக்கீல் ஆபிஸ்கள். மெக்சிகோ, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ் என்று எல்லாத் தேசத்து உணவுக்கும் இந்தத் தெருவுக்கு வந்தால் போதும். பழைய காலக் காப்பிக் கடை ஏதும் மிச்சமிருக்கிறதா என்று ஒவ்வொரு வாசலிலும் ஆர்வத்தோடு நோக்கினால் ஏமாற்றம்தான். காப்பிக் கடைகள் எல்லாம் நம்மூருக்குக் குடிபெயர்ந்து ஏழெட்டு மாமாங்கமாவது ஆகியிருக்கும்.

எதிர்வசத்து ரூல்ஸ் ஓட்டல் போர்ட் கவனத்தை ஈர்க்கிறது -“லண்டனிலேயே பழைய ஓட்டல்’. 1798-ல் தொடங்கியதாம். அப்போது தயாரித்த மைசூர்பாகு எதுவும் ஷோகேஸில் தட்டுப்படவில்லை என்றாலும் இது உண்மையாக இருக்குமென்று நம்பலாம். சார்லஸ் டிக்கன்ஸ், கிரகாம் கிரீன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் வந்து இருந்து சாப்பிட்டுவிட்டுப் போன கடை என்று எழுதி வைத்திருக்கிறது. டிக்கன்ஸ் நாவல் எழுதியதோடு நிற்கவில்லை. மேடை போட்டு, தான் எழுதிய கதைகளை அதன் பாத்திரங்களாக மாறி வாசித்துக் காட்டவும் செய்தார். வாசகர்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுத்துக் குழுமி, அரங்கு நிறைந்து நடந்த இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கான பழைய நோட்டீசுகளை ரூல்ஸ் ஓட்டலில் காட்சியாக வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட சுவாரசியமான விஷயம், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட ஏழாம் எட்வர்ட் மன்னன் தன் காதலியான நாடக நடிகை லில்லி லாங்ட்ரீயை பிரதிதினமும் அந்தி சாய்ந்த பின்னர் இந்த ஓட்டலில் வைத்துத்தான் சந்திப்பானாம்.

“”நாலாவது டேபிள் தாடிக்காரப் பெரிசுக்கு மட்டன் சாப்ஸ், ரெண்டாவது டேபிள் இங்கிலாந்து ராஜாவுக்கும் அவருடைய ஜோடிக்கும் சிக்கன் ரோஸ்ட், எட்டாவது டேபிளுக்கு தக்காளி சூப்.” என்று அந்தக்கால ஓட்டல் வெயிட்டர்கள் மேற்படி ராஜரகசியத்தை சகஜமாக எடுத்துக்கொண்டு நடமாடியிருப்பார்கள் என்ற நினைவோடு நடையை எட்டிப் போடுகிறேன்.

மெய்டன் சந்து பத்தாம் எண் வீட்டு வாசலில் ஒரு வினாடி நிற்கிறேன். வால்ட்டேர் இருந்த வீடு என்று வெளியே பலகை அறிவிக்கிறது. பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்ட்டேர் அது வெடிப்பதற்கு முன்னால் அகதியாகத் தஞ்சம் புகுந்தது லண்டனில்தான். அதுவும் இந்த கோவண்ட் கார்ட்டன் பகுதியும், மெய்டன் சந்து சூழ்நிலையும் ரொம்பப் பிடித்துப் போகவே இந்த வீட்டில் ஒரு வருடம் குடக்கூலி கொடுத்து வசித்து லண்டன் வாழ்க்கையை அனுபவித்தபடி சொந்த நாட்டில் புரட்சிக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார். ஒரு தேசத்தின் தலைவிதியையே மாற்றப்போகிற மனுஷர் நம்மிடையே இருக்கிறார் என்று தெரியாத அந்தக்கால மெய்டன் சந்துவாசிகள் அவரை அடிக்க ஒருதடவை படை பட்டாளமாகக் கிளம்பியிருக்கிறார்கள். பிரஞ்சுக்காரர்கள் தொடங்கி அன்னிய தேசத்துக்காரர்கள் யாரையும் கூடியிருக்கச் சம்மதிக்காத மனநிலையே இதற்குக் காரணம். இந்தச் சகிப்பின்மை இப்போதும் அவ்வப்போது ஷில்பா ஷெட்டி விவகாரம் போல் தலைகாட்டிக் கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

மெய்டன் சந்தில் மணக்க மணக்க செண்ட் விற்கிற பென்னலிஹன் கடை கண்ணில் படுகிறது. இதுவும் நூற்றுச் சில்லறை வருடம் முற்பட்டதுதான். உள்ளே வாக்கிங் ஸ்டிக்கை அப்படியும் இப்படியும் வீசியபடி அலமாரிகளில் அடைத்து வைத்திருந்த செண்ட் போத்தல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த கனவான் கூடக் கடை திறந்த நாள் முதல் வாடிக்கையாளராக இருப்பவர் என்று தோன்றுகிறது. கடைக்குள்ளே நுழைந்து ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இரண்டாம் உலக மகாயுத்த காலத்துச் சூழல் கனமாகச் சூழ்ந்து நிற்கிற பிரமை. தஞ்சாவூர் அத்தர்க் கடை, கோபுலு வரைந்த தில்லானா மோகனாம்பாள் ஓவியம், வாசனைப் புகையிலை, சர்ச்சிலின் சுருட்டு வாடை, ராத்திரி முழுக்க நடக்கிற நாதஸ்வரக் கச்சேரி என்று நான் பிறப்பதற்கு முந்திய 1940-கள் மாயமாகக் கிளர்ந்தெழுந்து புலன்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மெய்டன் சந்தில் காலம் உறைந்து கிடக்கிறது.

மெல்ல நடந்து சவுத்ஹாம்ப்டன் தெருவில் திரும்புகிறேன். எதிரே நிற்கிற பழைய கட்டடம் ஒரு பத்திரிகை அலுவலமாக இருந்தது. ஆமாம், நூறு வருடம் முன்னால்தான். ஆர்தர் கானன்டாயில் உருவாக்கிய பிரபலமான துப்பறியும் நிபுணரான ஷெர்லாக் ஹோம்ஸ் கதாநாயகனாக இடம்பெற்ற கதைகள் வெளியான “தி ஸ்ட்ராண்ட்’ பத்திரிகை இந்தக் கட்டடத்திலிருந்துதான் பிரசுரமானது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை வாசிக்க ஆர்வமான ரசிகர்கள் இங்கிலாந்திலும், கடல் கடந்து அமெரிக்காவிலும் அதிகம் என்பதால், கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் விற்ற பத்திரிகை அது. ஸ்ட்ராண்ட் பத்திரிகை அடித்து ஓய்ந்த நேரத்தில் அச்சு யந்திரத்தை சும்மா வைத்திருக்க வேண்டாமே, இன்னும் நாலு காசு பார்க்கலாமே என்ற நல்லெண்ணத்தோடு அங்கேயிருந்து ஒரு கிசுகிசு பத்திரிகையும் வெளியாகிக் கொண்டிருந்ததாம். அதை ஆரம்பித்தபோது முதல் நாள் கிசுகிசுவாக, “ஏழாம் எட்வர்ட் மன்னருக்குப் பிரபல நடிகையோடு தொடர்பு’தான் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

லண்டன் டைரி: பிசாசு பாடும் ராயல் ஓபரா ஹவுஸ்!

இரா.முருகன்

எட்டாம் ஹென்றி மன்னன் கொஞ்சம் அசடு. ஒன்றல்ல, நாலு முறை இந்தப் பேர்வழி கல்யாணம் செய்துகொண்டான் என்பதே போதும் இதை நிரூபிக்க. நாலு மாமியார்! இதிலும் உச்சகட்டக் கொடுமை அந்த நாலாவது மாமியார் அவ்வப்போது கனகுஷியாக ராகம் இழுத்துப் பாட வேறு செய்வார். பாட்டுப் பாடுவதில் ஆசை தீராமல், இறந்துபோன பின்பும் கூட, அதாவது இன்னமும் அவ்வப்போது நடுராத்திரி நேரத்தில் பிசாசாக அலைந்து மேடையேறிப் பாடிக்கொண்டிருக்கிறார். லண்டன் கோவண்ட் கார்டன் அருகே, ராயல் ஓபரா ஹவுஸ் என்ற பரந்து விரிந்த இசை நாடக அரங்கத்தில்தான் அந்தம்மா அவ்வப்போது நடுராத்திரிக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பதாக லண்டன் வாழ் பிசாசு ரசிகர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கோவண்ட் தோட்டத்திலிருந்து தெற்கு நோக்கிப் போகும்போது கண்ணிற்படுகின்ற கட்டடம் ராயல் ஓபரா ஹவுஸ். நாட்டு மக்களுக்கு இசை நாடகம்(ஓபரா) என்ற நுண்கலையில் தேர்ந்த ரசனை ஏற்படுத்தும் நல்லெண்ணத்தில் அரசு உதவிப் பணம் கொடுக்க, இங்கே இருநூறு வருடத்துக்கு மேலாக அரங்கு நிறைந்த காட்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றன. அப்படியான நிகழ்ச்சிகள் முடிந்து ராத்திரியில் ரசிகர்கள் ரயிலை, பஸ்ûஸப் பிடித்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததற்கு அப்புறம் ஆளில்லாத அரங்கத்தில் எட்டாம் ஹென்றியின் மாமியார் ஆவி ரூபமாக உலவியபடி பாடுகிறாராம். ஆனால் அதைக் கேட்க அதிர்ஷ்டம் இல்லாத ரசிகர்கள் கச்சேரி முடிவதற்கு முன்பே கிளம்பிவிடுகிறார்கள். “அந்தத் தாட்டியான அம்மா பாடினாத்தான் முடிஞ்சதுன்னு அர்த்தம்’ (  It’s not over until the fat lady sings) என்பது அவர்களுக்குத் தெரியாதோ என்னமோ.

ராயல் ஓபரா ஹவுஸ் வாசலில் நிற்கும்போது நினைவுக்கு வரும் ஆங்கிலச் சொலவடை இது. இரண்டு அணிகள் பொறி பறக்க மோதும் விளையாட்டுகளின் போது, வர்ணனையாளர்கள் தோற்கிற மாதிரித் தோன்றும் தரப்பை உற்சாகப்படுத்த உதிர்க்கும் வாக்கியம். “இன்னும் நம்பிக்கை இருக்கு’ என்று இதற்குப் பொருள். ஓபரா ஹவுஸ் வாசலில் டிக்கட் வாங்க நிற்கும் டூரிஸ்டுகளின் நீண்ட க்யூவை ஆயாசத்தோடு பார்க்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்கு டிக்கட் கிடைத்து, அது முடிந்து இங்கேயே தங்கியிருக்க சந்தர்ப்பமும் கிடைத்து, மாமியார்ப் பிசாசு பாடுவதைக் கேட்க வாய்ப்பும் எனக்குக் கிட்டும் என்ற நம்பிக்கை இல்லாததால் தெருவைக் கடக்கிறேன்.

ஓபரா ஹவுஸýக்கு எதிரே ஒரு பழைய அரசாங்கக் கட்டடம் அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறது. தூசியடைந்து கிடக்கும் இது ஒரு காவல் நிலையம். லண்டனில் ஏற்பட்ட முதல் அல்லது இரண்டாவது போலீஸ் ஸ்டேஷன் இந்த இடத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாகத் தகவல்.

வில்லியம் அட்கின்ஸன் என்ற லண்டன் போலீஸ்காரர் காவல் துறையின் சரித்திரத்தில் மட்டுமில்லை, உலகச் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம்பெற வேண்டியவர். 1829-ல் இவரை அரசு காவலராக நியமித்தபோது வழங்கப்பட்ட எண் கான்ஸ்டபிள் நம்பர் ஒன். “”எய்ட் நாட் டூ, இந்த ஆளை லாக்-அப்பிலே தள்ளு, த்ரீ நாட் செவன் ஜீப்புலே ஏறு” என்று சினிமா கிளைமாக்சில் காக்கியுடை இன்ஸ்பெக்டர்கள் அவசர வசனம் பேசுகிறபோது, இப்படி ஒற்றைப்படையில் “கான்ஸ்டபிள் நம்பர் ஒன்’ என்று கூப்பிட்டால் சகிக்காதுதான். அது தெரிந்தோ என்னமோ, இந்த முதல் கான்ஸ்டபிள் நியமனமான கொஞ்ச காலத்தில் பதவி விலகிவிட்டார். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் அது. மிடுக்காகப் புத்தம்புது யூனிபாரம் அணிந்து, கோவண்ட் கார்டனைச் சுற்றி “பாரா உஷார்’ என்று ஜேப்படிக்காரர்களையும் இதரக் குற்றவாளிகளையும் தேடி மனுஷர் ரெண்டு மணி நேரம்தான் நடந்தார். கொஞ்சம் களைப்பு ஏற்படவே, எதிரே தெரிந்த கடையில் படியேறி குடிக்கத் தண்ணீர் கேட்டிருக்கிறார், பாவம். அவர் நுழைந்த இடம் மதுக்கடையானதால் பியர், விஸ்கி, பிராந்தி என்று பாட்டிலில் அடைத்துவரும் தண்ணீர்தான் கிடைத்தது. நிறுத்தி நிதானமாகத் தாகசாந்தி செய்துகொண்டு தள்ளாடியபடி நடந்து கடமையைத் தொடர்கிற நேரத்தில், அதிகாரிகள் கண்ணில் அவர் பட நேர்ந்தது துரதிர்ஷ்டம்தான். “நீ வேலைக்குச் சரிப்பட மாட்டே, வீட்டுக்குப் போய்யா..’ என்று முதல்நாள் வேலை முடிவதற்குள் சீட்டுக் கிழித்து அனுப்பப்பட்ட வில்லியம் அட்கின்ஸன் நினைவில் கண்கள் குளமாக, அடைத்துக் கிடக்கும் பழைய காவல் நிலையத்தைப் பார்க்கிறேன்.

“”இப்படி ஒரு புராதனமான கட்டடத்தைச் சும்மா அடைத்துப் பூட்டி வைத்திருக்காமல், மராமத்து செய்து இங்கே போலீஸ் மியூசியம் அமைக்கலாம். இல்லை இதை இடித்துவிட்டு, காவலர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டலாம். அரசு அலட்சியமாக இருப்பது ஏன்?” தொப்பியும் கம்பளிக் கோட்டும் தரித்த ஒரு நோஞ்சான் மனிதர் பூட்டிய காவல் நிலையப் படியில் நின்றபடி உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரவர் தன்பாட்டுக்குத் தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே நின்று இப்படி தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொள்ளாமல், பக்கிங்ஹாம் அரண்மனைப் பக்கம் ஹைட் பார்க் போய், அங்கே ஈசான மூலையில் பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா பெஞ்சில் ஏறிநின்று இவர் சொற்பொழிவாற்றினால் ஒரு பத்து பேராவது கூடிநின்று கேட்பார்களே என்ற யோசனையோடு மருந்துச் சந்தில் (ட்ரூயரி லேன்) நுழைகிறேன்.

பிரிட்டனில் ஒரு பேட்டை பாக்கியில்லாமல் சூப்பர் மார்க்கெட் நடத்தும் செயின்ஸ்பரி நிறுவனம் முதன்முதலாகக் கடை போட்டது இங்கேதான். அந்தக் காலத்தில் இந்த மருந்துச் சந்தில் அங்கங்கே மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்துவந்திருக்கிறார்கள். மாட்டுச் சாணமும், வைக்கோலும் நிறைந்த இங்கே 1829-ல் சுத்தமும் சுகாதாரமுமாகப் பால் விற்கக் கடைதிறந்த பால்காரர்தான் செயின்ஸ்பரி. நகர எல்லைக்கு வெளியே மாடு வளர்த்துக் கறந்து, இங்கே கொண்டுவந்து நேர்த்தியாகப் போத்தலில் அடைத்து விற்பதோடு, புதிதாகச் சுட்ட ரொட்டி, நயம் வெண்ணெய் என்று சாப்பாட்டுச் சமாச்சாரங்களையும் அவர் விற்க ஆரம்பிக்க, அது நூற்றுக்கணக்கான செயின்ஸ்பரி கடைகளும், கோடிக்கணக்கில் பிசினசுமாகப் பெருகி வளர அதிக நாள் பிடிக்கவில்லை.

மருந்துச் சந்தின் அருகே பெட்ஃபோர்ட் தெருவில் இன்னொரு போட்டி சூப்பர் மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவின் பரபரப்பான கடைவாசலில் நிற்கிறேன். என் கையில் இருக்கும் லண்டன் சரித்திரப் புத்தகத்தில் இந்த இடத்தைப் பற்றிக் குறித்திருக்கக் காரணம் டெஸ்கோ இல்லை. சூப்பர் மார்க்கெட் வருவதற்கு முன்னால் இங்கே வெற்றிகரமாக மோசஸ் சகோதரர்கள் நடத்தி வந்த தையல்கடையில் துணி தைத்துக் கிடைத்த வருமானத்தைவிட, சூட்டும் கோட்டும் வாடகைக்கு விட்டு அள்ளிய காசு கணிசமானதாம். கோவண்ட் தோட்டத்தைச் சுற்றியுள்ள நாடக, இசை அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும், நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்தப் பகுதி ஓட்டல்களில் ராத்திரிச் சாப்பாட்டுக்குப் போகும் மேட்டுக்குடி மக்கள் உயர்தரமான சாயந்திர உடை தரித்துத்தான் வருவது வழக்கம். கணிசமான பணம் செலவழித்து இப்படி உடுப்பு வாங்க வசதியில்லாத சாமானியர்கள் வருடத்தில் ஒருமுறை, இரண்டு முறை இப்படி ஓபரா போகிறபோது, ஓட்டலில் படியேறி ரசித்துச் சாப்பிடும்போது மேட்டுக்குடியாகத் தங்களைக் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள். வாடகைக்கு உடுப்பு கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்த நிறுவனம் மூடப்பட்டதோடு ஒருநாள் கூத்து பார்க்க கனவான் வேடம் போடச் சந்தர்ப்பம் கிடைக்காமல் சாமானிய ரசனை ஓபராவையும், பாலேயையும் விட்டுவிலகி, கால்பந்தாட்டத்தில் புகுந்தது. ஒருவேளை டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நினைத்தால் இங்கே திரும்ப வாடகை உடுப்பு வசதி வந்து, ராயல் ஓபரா ஹவுஸில் உள்ளூர்க் கூட்டம் திரும்பவர வாய்ப்பு கிடைக்கலாம். டோனி பிளேரைப் பார்க்கும்போது அவசியம் சொல்லவேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டு வெலிங்க்டன் தெருவில் திரும்புகிறேன்.

Posted in Britain, Dickens, England, Era Murugan, Era Murukan, Hotel, Ira Murugan, Ira Murukan, Literature, London, London Diary, Opera, Queen, Rayarkaapiklub, Rayarkapiklub, RKK, Royal, Tourist, Travel, Travelog, Travelogue, UK | Leave a Comment »

London Diary – Era Murugan: London Fire & Memorial

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!

இரா. முருகன்

நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.

“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.

மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.

பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.

தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…

மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.

பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.

நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.

சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Fire, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Memorial, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, Tourist, Travelogue, UK | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »