Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rise’ Category

Economic Survey: Central Pay Commission Report – Indiscriminate salary raises?

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

ஊதிய உயர்வும் நிதிச் சுமையும்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து 2008-ல், இந்தியா முழுவதும் மாநில அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களும் அதிகரிக்கும். வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பரிசைப் போல அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படவிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

1997 வாக்கில் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான 5-வது ஊதியக் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, அப் பணியில் நானும் ஈடுபட்டிருந்தேன். அந்த ஊதிய உயர்வுப் பரிந்துரைகளை அமல்படுத்தியதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை அவை சரிக்கட்டுவதற்கு நான்கைந்து ஆண்டுகளுக்குமேல் ஆனது. வரும் ஆண்டுகளில் அதே நிலைமை மீண்டும் ஏற்படும்.

இன்றைய சூழலில், புதிய ஊதியக் குழு பரிந்துரையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. தனியார் துறையில் உள்ள அதிகாரிகளின் ஊதியங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. எனவே தனியார் துறைக்கு இணையாக அரசு அதிகாரிகளுக்கும் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

இதில் முக்கியமான பிரச்னை என்னவென்றால், அரசுத் துறைகளைப் பொருத்தவரை, பெருந்தொகையை ஊதியமாகவும் கொடுத்துக்கொண்டு, பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களையும் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என்பதுதான். ஏனென்றால், அரசுத் துறைகளில் இப்போது பல லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதில் 90 சதவிகிதமாக இருக்கும் சி மற்றும் டி பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க முடியும். அரசுத் துறைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பதுடன், ஒரே வேலையையே வேறு ஊழியர்கள் திரும்பவும் செய்வதையும் தவிர்த்துவிட்டால், பணித் திறனும் வேகமும் அதிகரிக்கும்.

நவீன தகவல் தொடர்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு வேலைத்திறனைப் பெருமளவில் அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முன்வராமல், தனியார் துறைக்கு இணையாக அரசு அலுவலர்களின் ஊதிய விகிதங்கள் மட்டும் உயர வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. ஏற்கெனவே, பல மாநில அரசுகளின் நிர்வாகச் செலவினங்கள் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, அரசு ஊழியர்களின் ஊதியம் இன்னும் அதிகரித்தால் கூடுதல் நிதிச் சுமையை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியாது. அதற்காக, அரசு ஊழியர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வை வழங்கக் கூடாது என்று இங்கு வாதிடவில்லை; மாறாக, சி மற்றும் டி பிரிவு ஊழியர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

“உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதியம்’ குறித்து அவ்வப்போது பேசப்பட்டுவருகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகளில் நடைபெற்றுவரும் பல்வேறு விதமான பணிகளைக் கருத்தில் கொண்டால், அவற்றை வகைப்படுத்தி, அந்த ஊழியர்களின் உற்பத்தித் திறனை வரையறுக்க ஒரு திட்டவட்டவமான உத்தியை வகுப்பதென்பது அனேகமாக இயலாத காரியமென்றே தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக, காவல் துறை ஆய்வாளரின் உற்பத்தித் திறனை வரையறுப்பது எப்படி? அவர் எத்தனை குற்ற வழக்குகளில் புலனாய்வை முடித்திருக்கிறார் என்பதைக் கொண்டு அவருக்கு ஊதியத்தை வழங்குவதாக வைத்துக்கொள்வோம். அவர் புலனாய்வு செய்த வழக்குகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வருவதற்குள் 10 ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கும்; வழக்குகளைச் சரியாகப் புலனாய்வு செய்யாததால், நீதிபதியின் விமர்சனத்துக்கும் அவர் உள்ளாகியிருக்கக்கூடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே “புலனாய்வுத் திறமை’க்காக அந்த ஆய்வாளர் ஊக்கத்தொகையையும் பெற்று, அதன் காரணமாகவே பதவி உயர்வும் பெற்றுச் சென்றுவிட்டிருப்பார்.

ஒரு மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித் திறனை எவ்வாறு வரையறுக்க முடியும்? அந்த மாவட்டத்தில் சில விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்கள்; எனவே அந்த மாவட்ட ஆட்சியரின் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது என்ற முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் அவர் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும்.

தனியார் துறையில் லாபமே நோக்கம். எனவே, அதே அளவுகோலைப் பயன்படுத்தி அரசுத் துறை ஊழியரின் பணியை வரையறுக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் பெட்ரோலியத் துறைச் செயலரை எடுத்துக்கொள்வோம். அவர் செய்யும் அதே பணியை தனியார் துறையில் அவர் செய்துகொண்டு இருந்தால், அவரது ஆண்டு ஊதியம் ரூ.5 கோடியாகவோ அல்லது ரூ.10 கோடியாகவோ இருக்கக்கூடும். ஆனால் அரசுத் துறையில் அந்த ஊதியத்தை வழங்குவது குறித்து யோசிக்க முடியுமா?

இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய’ முறையை அமல்படுத்தி இருக்கிறார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற வாதம். ஏனென்றால், அத்தகைய வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியவைப் போன்று, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையே வேறு வகையான உறவு நிலவும் நாடுகள் முற்றிலும் மாறுபட்டவை.

நம் நாட்டில், “ஆண்டுதோறும் பணியை மதிப்பிடும் முறை’ ஒன்று ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அது இப்போது செயலற்றுப் போய்விட்டதற்கு இன்றைய பணி நிலைமைகளும், அரசுப் பணிகளில் நிலவும் அரசியல் செல்வாக்கும் தலையீடுகளுமே முக்கிய காரணங்கள். எனவே, “உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊதிய முறை’யால், இப்போதைய குறைபாடுகளைப் போக்கிவிட முடியாது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்பது கேடு விளைவிக்கும் யோசனையாகும். 1997-ல் ஓய்வுபெறும் வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிய பொழுதே அதை நான் எதிர்த்தேன். ஆனால், அதன் பிறகு புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, ஊழியர் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திவிட்டது.

ஊழியர்கள் 2 ஆண்டுகள் தாமதமாக ஓய்வுபெறுவர் என்பதால், அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை (கிராஜுட்டி) போன்றவற்றை இரு ஆண்டுகள் கழித்துக் கொடுத்தால் போதும். எனவே புதிய அரசின் முதல் ஆண்டு பட்ஜெட்டில் நிதிச் சுமை குறைவாக இருக்கும். அது புதிய அரசுக்கு உதவியாக இருக்கும் என்று காரணம் கூறப்பட்டது. இந்த வகையான குறுகியகாலப் பயனைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்துவது மிகத் தவறானது.

ஓய்வுபெறும் வயது வரம்பு உயர்த்தப்படுவதால், ஏராளமான இளைய வயதினருக்கு பதவி உயர்வுகள் தள்ளிப்போகின்றன. அது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும். திறமை குறைந்த ஏராளமான பணியாளர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்குப் பணியில் தொடரும் நிலை ஏற்படும். அடுத்த நிலையில் இருப்போருக்கு அவர்கள் தடைக்கற்களாகவும் மாறிவிடுவார்கள். எனவே, ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கூடாது.

நிர்வாகச் சீர்திருத்தம் குறித்தும் கூறப்படுகிறது. ஆனால், ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் நிர்வாகச் சீர்திருத்தம் இடம்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் நிர்வாகச் சீர்திருத்தம் என்று கூறும்பொழுது, பெரும்பாலும் அது தொழில்நுட்பம் சார்ந்ததாகவே இருக்கிறதே தவிர, நடைமுறைச் செயல்பாடுகளின் தரத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவவில்லை. அரசியல்வாதிகள் ~ அதிகாரவர்க்கத்துக்கு இடையிலான உறவுகள்தான் நிர்வாகச் சீர்கேட்டுக்குக் காரணமாகும். அதைக் களையாமல் சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் விளையாது.

உற்சாக மிகுதியில், மாநில அரசுகளால் தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு அபரிமிதமான ஊதிய உயர்வை ஊதியக் குழு பரிந்துரைக்காது என எதிர்பார்ப்போம். அதேபோல, அதை தேர்தலுக்கு முன் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, அரசியல் நோக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளை மத்திய அரசும் வாரி வழங்கிவிடாது என்று நம்புகிறோம்; இல்லையெனில், அவை மாநில அரசுகளின் நிதி நிலைமைமீது பெருத்த அடியாக அமைந்துவிடும்.

    (Rs. in crores)

 

Year

Gross Revenue

Interest payment per year
Crore

Net
Receipt Pay

Pay
Allowances

% of net
revenue

 


  Pay Bill Pension Bill

Posted in AG, Allowance, Appraisal, Attorney, Budget, Cabinet, Collector, Commission, Compensation, Economy, employee, Expenditure, Expenses, Finance, Govt, Growth, Increase, Inflation, Jobs, Merit, Pandian, Pay, Performance, Price, PSU, PWD, Raise, Rathnavel, Rathnawel, Ratnavel, Recession, recommendations, responsibility, Rise, Roles, Salary, Tariff, Tax | Leave a Comment »

‘Bus fare increased indirectly in Chennai’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுக பஸ் கட்டண உயர்வு: ஜெ. குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 7: எல்லோ லைன், ப்ளூ லைன், “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அறிவிக்கப்படாத பஸ் கட்டணத்தை திமுக அரசு மறைமுகமாகச் செயல்படுத்தி வருகிறது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

தற்போது சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் “எல்லோ லைன் ப்ளூ லைன்’ என்கிற பஸ்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது திணித்து வருகிறது திமுக அரசு. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சாதாரண பஸ்களில் இருக்கும் நடைமுறைக் கட்டணமான குறைந்த அளவு 2 ரூபாய் என்று இருந்ததை 3 ரூபாய் என உயர்த்தி இருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மக்களுக்காக மக்களின் நலனுக்காகதான் ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர மக்களை ஏமாற்றும் அரசு மக்களுக்குத் தேவையில்லை. சாதாரண பஸ்களில் உதாரணமாக 48ஏ என்று இருந்தால் அவற்றுக்கு முன்பாக “எம்’ என்று சேர்த்துவிட்டால் கட்டணம் கூடிவிடுகிறது. எம் என்ற எழுத்தைத் தான் கூடுதலாக சேர்த்து இருக்கிறார்கள் தவிர எந்த விதத்திலும் பஸ்களில் உள்ள வசதிகளை கூட்டவில்லை. பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்று முறையாக அறிவிக்காமல் – அப்படி அறிவித்தால் கடும் கண்டனத்தை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற அச்சத்தால் மக்களை ஏமாற்றும் நோக்கில் கூடுதல் கட்டண உயர்வை அமல்படுத்தி இருக்கிறது. இச் செயல் திமுக அரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது. இக் கூடுதல் கட்டணம் சம்பந்தமாக பொதுமக்களிடமோ எதிர்க்கட்சிகளிடமோ தொழிற்சங்கங்களிடமோ எவ்வித கருத்தும் கோரப்படவில்லை. ஆலோசனையும் செய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை. இருந்த போதிலும் கூடுதல் கட்டணத்தை திமுக அரசு மக்களிடம் இருந்து வசூலித்து வருகிறது.

எனது ஆட்சிகாலத்தில் இருந்த எல்.எஸ்.எஸ். சேவையை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவற்றை “எல்லோ’ லைன், ப்ளூ லைன் என்று பெயர் மாற்றி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். எல்.எஸ்.எஸ். சேவையில் குறைந்த கட்டணம் ரூ. 2.50 என்றிருந்தது, தற்போது ரூ. 5 என்று உயர்த்தி உள்ளனர். எல்லோ லைன் பஸ் நிற்கும் இடத்தில் ப்ளூ லைன் பஸ் நிற்காதவாறு செய்து இந்த சிறப்பு பஸ்களில்தான் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறது திமுக அரசு.

அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பஸ்களில் எவ்வித சிறப்பு வசதிகளும் இல்லை. “எம்’ சர்வீஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் எல்லோ லைன், ப்ளூ லைன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதும் மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்த மறைமுக கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

==========================================

மாநகர பஸ்களில் எளிதில் செல்ல சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட் விநியோகம்

சென்னை, மார்ச் 14: மாநகர பஸ்களில் எளிதில் செல்லும் வகையில் மார்ச் 21-ம் தேதி முதல் சென்னையில் 25 இடங்களில் “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மாநகர பஸ்களில் டிக்கெட் பெறுவதில் பயணிகளுக்கு பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், “ஆஃப் லைன்’ டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கான கட்டணத்தைக் கொடுத்து மூன்கூட்டியே “ஆஃப் லைன்’ டிக்கெட்டைப் பெற்று, அவ் வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் செல்லலாம்.

முதற்கட்டமாக

  • தாம்பரம்,
  • குரோம்பேட்டை,
  • பல்லாவரம்,
  • திருவான்மியூர்,
  • சைதாப்பேட்டை,
  • தியாகராயநகர்,
  • மந்தைவெளி,
  • திருவல்லிக்கேணி,
  • சென்ட்ரல்,
  • பிராட்வே,
  • கோயம்பேடு,
  • அம்பத்தூர்,
  • வில்லிவாக்கம் உள்ளிட்ட 25 இடங்களில் ஆஃப்லைன் டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படும்.

பணிமனைகளிலேயே (டெப்போக்கள்) இந்த டிக்கெட்டுகளைப் பயணிகள் பெறலாம். இது தொடர்பான மேலும் விவரங்களை அலுவலர்களிடம் கேட்டு அறியவும் விசாரணை வசதி செய்யப்படும்.

புறநகர் பகுதிகளுக்கு 150 பஸ்கள்: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எல்கை வரம்பு 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவடைந்துள்ளது. இதனால், ஸ்ரீபெரும்புதூர், பாலவாக்கம், மகாபலிபுரம், புழல் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளுக்கும் கூடுதல் பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 75 புதிய பஸ்கள் மார்ச் 21-ம் தேதிக்குப் பின் ஓரிரு நாள்களில் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்துக்குள் மேலும் 75 பஸ்கள் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக தற்போது நடத்துனர்களிடேமே சீசன் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரைபடம் வெளியீடு: சென்னைக்கு வரும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் புதிய வரைபடம் விரைவில் வெளியிடப்படும்.

இதில் மாநகர பஸ்களின் எண்கள், இயக்கப்படும் வழித்தடங்கள், முக்கிய இடங்கள் மற்றும் இதர விவரங்கள் இடம் பெறும். இந்த வரைபடம் ரூ. 5-க்கு விற்கப்படும். சென்னை எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களுக்கு விரைவில் நேரடி பஸ் வசதி செய்யப்படும்.

இதே போல கோடை விடுமுறையில் வண்டலூர் விலங்குகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார் பாலசுப்பிரமணியன்.
==========================================
மாநகர பஸ்களின் வருவாய் 13% அதிகரிப்பு

மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) பஸ்களின் தினசரி வருவாய் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 2,554 பஸ்கள் உள்ளன. இதில் 2,290 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் தினமும் இயக்கப்படுகின்றன.

பஸ்கள் மூலம் கடந்த ஆண்டு தினமும் சராசரியாக ரூ. 95 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து தற்போது இந்த பஸ்களின் தினசரி வருவாய் ரூ.1.10 கோடியாக அதிகரித்துள்ளது.

விபத்துக்கான இழப்பீடு, கடன் சுமை ஆகியவற்றால் நிதி நெருக்கடி முன்பு இருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சிப் பாதையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் செல்லத் தொடங்கியுள்ளது.

கடந்த 2006-07-ம் ஆண்டில் மட்டும் ரூ. 120 கோடி இழப்பு ஏற்பட்டது. வரும் 2008-க்குள் இழப்பை ஈடுகட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
==========================================
மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள்: சென்னையில் 21-ல் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச் 14: சென்னையில் முதன்முறையாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 100 புதிய “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த பஸ்களை மார்ச் 21-ல் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

மாநகர போக்குவரத்துக் கழகம் கடந்த 6 மாதங்களில் 400 புதிய பஸ்களை அறிமுகப்படுத்தியது.

இதில் “எல்லோ லைன்’ என்ற மஞ்சள் வண்ண பஸ்களும், “ப்ளூ லைன்’ என்ற நீல நிற பஸ்களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் இருக்கைகளுடன் கூடிய இந்த பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தற்போது இந்த வரிசையில், “ஆரஞ்ச் லைன்’ என்ற பெயரில் 100 புதிய பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.

“ஏர் சஸ்பென்ஷன்’ வசதியுடன் கூடிய இந்த பஸ்கள் நவீன முறையில் தலா ரூ.10 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தானியங்கிக் கதவுகள்

இதில் பெரும்பாலான பஸ்களில் “தானியங்கி கதவுகள்’ பொருத்தப்பட்டிருக்கும். இந்தக் கதவுகளை இயக்கும் விசை, பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

பஸ் விபத்துகளில் 80 சதவீதம் பேர் படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். தற்போது தானியங்கிக் கதவுகளை பஸ்களில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த பஸ்கள் இயங்கும். சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வகையில், “பாரத் 3′ திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டுள்ள இந்த பஸ்கள் அதிக இரைச்சலின்றி இயங்கும்.

பழைய பஸ்களுக்குப் பதிலாகவும், புதிய வழித்தடங்களிலும் இந்த “ஆரஞ்ச் லைன்’ பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இந்த ஆண்டு 150 பஸ்களை வாங்க அரசு ரூ.40 கோடி அனுமதித்துள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டும் பணிமனைகளில் உருவாக்கப்படும்.

இதில் முதற்கட்டமாக 100 ஆரஞ்ச் லைன் பஸ்கள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்களை அறிமுகம் செய்யும் விழா, சென்னை தரமணியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இந்த பஸ்களின் சாவிகளை, ஓட்டுநர்களுக்கு வழங்க உள்ளார்.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

ஓட்டுநர்களுக்கு புதிய பயிற்சி தடம்

இதுதவிர தரமணியில் சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் பயிற்சித் தடத்தையும் (டிரெய்னிங் டிராக்) முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு 50 சொகுசு பஸ் சேவை

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள், கார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் 50 சொகுசு பஸ்களை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, தரமணி, ஸ்ரீபெரும்புதூர், புழல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கிலோ மீட்டருக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கட்டணமாக வழங்க இந்நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

காலை, மாலை இருவேளைகளிலும் முக்கிய நேரத்தில் மட்டுமே இந்த பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும்.

இதன்பின் மற்ற நேரங்களில் இந்த பஸ்கள் சாதாரண கட்டணத்தில் பொதுமக்களின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த பஸ்களில் சொகுசு இருக்கைகள், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், தானியங்கிக் கதவுகளும் பொருத்தப்படும்.

=============================================

“சென்னையில் ஷேர் ஆட்டோக்களுக்கு இனி பர்மிட் கிடையாது’

சென்னை, மார்ச். 15: சென்னை நகரில் இனி ஷேர் ஆட்டோக்களுக்கு மேலும் பர்மிட் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

ஷேர் ஆட்டோக்களுக்கு புதிய பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவதால் மாநகர பஸ்களின் வருமானம் குறைகிறது. இதைத் தவிர்க்க ஷேர் ஆட்டோக்களுக்கு இனி புதிய வழித்தடங்களில் பர்மிட் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: திருத்திய ஆட்டோ மீட்டர் பொருத்தாத ஆட்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேசிய பிறகு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப திருத்திய மீட்டர் பொருத்துவதற்குத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கெடு முடிவடைந்துள்ளதால், இனி திருத்திய மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் காஸ் மூலம் ஆட்டோக்களை இயக்கும்போது, அவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தாழ்தள சொகுசு பேருந்து: சென்னை நகரில் இம்மாதம் 21-ம் தேதி முதல் தாழ்தள சொகுசு பேருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன் நெரிசல் நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கென 20 ஒப்பந்த ஊர்திகளை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கத் திட்டமிட்டுள்ளது.

பணி நியமனம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 2017 ஊழியர்களை முழுமையாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிபதி மொகோபாத்யாய குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் அவர்களை பணியில் நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் நேரு.

=======================================================

சென்னையில் இருந்து 18 வழித்தடங்களில் 44 புதிய பஸ்கள்: மு.க.ஸ்டாலின் 21-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, மார்ச்.19-

சென்னையில் மேலும் 100 பஸ்கள் புதிதாக விடப் படுகின்றன. வயதானவர்கள் எளிதாக ஏறும் வகையில் தாழ்தள சொகுசு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

உள்ளாட்சிதுறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் கலந்து கொள் கிறார்கள். புதிய பஸ் தொடக்க விழா ஐ.ஆர்.டி வளாகத்தில் 21-ந் தேதி மாலை 5-மணிக்கு நடைபெறுகிறது.

புதிதாக விடப்படும் பஸ்களில் பெரும்பாலானவை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. 18புதிய வழித்தடங்களில் 44 பஸ்கள் விடப்படுகின்றன. இது தவிர தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு 50 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புதிய பஸ்கள் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் நின்று செல்லும். நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் வேகமாக சென்றடையும் வகையில் பயணநடை வகுக்கப் பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு 5 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்படுகின்றன. சென்னை புறநகர் பஸ்நிலையம், ஆவடி, வள்ளலார் நகர் ஆகிய இடங்களில் இருந்து பெரிய பாளையத்துக்கு 12 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போல அடையாரில் இருந்து மாமல்லபுரத்துக்கு கிழக்கு கடற்சாலை வழியாக 4 பஸ்களும் பழைய மாமல்ல புரம் சாலை வழியாக 4 பஸ்களும் விடப்படுகின்றன. சைதாப்பேட்டையில் இருந்து வல்லக்கோட்டைக்கு கிண்டி, போரூர், பூந்தமல்லி, செம்பரபாக்கம், இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், வல்லம் வழியாக இயக்கப்பட உள்ளன.

பிராட்வேயில் இருந்து படப்பை, திருப்போரூருக்கு தலா 4 பஸ்களும், குன்றத் தூருக்கு 2பஸ்களும் விடப்படுகின்றன. அஸ்தினாபுரம்-ஆவடி, அடை யார்-கேளம்பாக்கம் இடையேயும் புதிய வழித்த டங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரத்தில் இருந்து சோமங்கலம், மாடம் பாக்கத் துக்கு தலா ஒருபஸ் களும், மின்ட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு 4பஸ்களும் விடப்படுகின்றன. மூலக்கடை, புழல், செங்குன்றம், காரனோடை, தச்சூர் கூட்டுச்சாலை, புதுவயல், கவரபேட்டை வழியாக கும்மிடிபூண்டிக்கு சென்று வரும். செம்மஞ்சேரியில் இருந்து பிராட்வேக்கு புதிய வழித்தடத்தில் பஸ் விடப் படுகிறது.

=================================================================================
மாநகர பஸ்ஸில் இயந்திரம் மூலம் டிக்கெட் தாம்பரம்}பிராட்வே வழித்தடத்தில் சோதனை முறையில் அறிமுகம்

சென்னை, மார்ச் 22: சென்னை மாநகர பஸ்களில் இயந்திரம் மூலம் பயணச்சீட்டு (டிக்கெட்) வழங்கும் முறை சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது.

தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் பஸ் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு, பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை நகர பஸ்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். அவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்குள் நடத்துனர்களுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

டிக்கெட் வழங்குவதற்காக, சில பஸ்கள் ஸ்டேஜ் வருவதற்கு முன்பு வெகு நேரம் சாலையோரம் நிறுத்தப்படுவதும் அப்போது அலுவலகம் செல்வோர் முணுமுணுப்பதும் பயணிகள்-நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று.

மேலும், டிக்கெட்டுகளை நடத்துனர்கள் எச்சில் தொட்டுத் தருவதாக பயணிகள் பலரும் புகார் கூறுவது வாடிக்கை.

இந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்படுவது போல, இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் ஒருபகுதியாக, இந்தத் திட்டம் தாம்பரம் – பிராட்வே (21 ஜி) வழித்தடத்தில் இயங்கும் 5 பஸ்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இயந்திரத்தில் என்ன வசதி: டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் 500 வழித்தடங்கள் வரை சேமித்து வைக்க வழி உண்டு. முதலில், இயந்திரத்தை இயக்கும் நடத்துனர், பயணிகள் குறிப்பிடும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். இதன் பின்பு, எந்த பஸ் ஸ்டாப் என்பதற்கான பொத்தானை அழுத்த வேண்டும். பின், “என்டர்’ பொத்தானை அழுத்தினால் டிக்கெட் அச்சாகி வெளியே வரும். கையடக்கக் கருவி என்பதால் நடத்துனர்கள் அதனை எளிதாக எடுத்துச் செல்லலாம். எந்த பஸ் ஸ்டாப்பில் பயணிகள் அதிகம் ஏறி, இறங்குகின்றனர் என்பது போன்ற தகவல்களை இந்த இயந்திரத்தின் மூலம் எளிதில் அறிய முடியும்.

ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் வழங்க முடியும் என்பது இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.

பிற வழித்தடங்களில் எப்போது?: சோதனை அடிப்படையில் தாம்பரம் – பிராட்வே வழித்தடத்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களுக்கும் இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை விரிவுபடுத்தப்படும் என்றார் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

=================================================================================

தமிழகத்தில் மேலும் 1,000 மினி பஸ்கள்: நாளை பட்ஜெட்டில் அறிவிப்பு

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 22: மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் மேலும் 1,000 தனியார் மினி பஸ்களை இயக்கும் திட்டம் மாநில அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த ஆயிரம் பஸ்களில் 500 பஸ்களை சென்னைப் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான அறிவிப்பும், மொத்தம் எத்தனை மினி பஸ்கள் இயக்கப்படும் என்கிற விவரமும் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கலாகும் அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

க்ஷமினி பஸ் வந்த பாதை:/க்ஷ போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி அளிப்பதற்காக 1998-ல் மினி பஸ்களை இயக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டது. 3,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க வாய்ப்பு உள்ளது என்பது அப்போது தெரிய வந்தது.

தமிழகத்தில் 1,100 மினி பஸ்களை இயக்குவது தொடர்பாக 1.6.2005-ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசின் ஆணைக்கு அப்போது தடை விதிக்கப்பட்டது. பின்னர் அத்தடையை நீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து, மினி பஸ்களை எந்தெந்த வழித் தடங்களில் இயக்குவது, அவற்றுக்கான கட்டண விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.

க்ஷஅரசின் நிலை:/க்ஷ இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, மினி பஸ்கள் தொடர்பான தனது நிலையை ஆளுநர் உரையில் அப்போதே தெளிவுபடுத்தியது. “இந்த அரசால் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்’ என அதில் தெரிவித்திருந்தது.

க்ஷசென்னையில்…:/க்ஷ சென்னையில் 3 வழித்தடங்களில் 500 மினி பஸ்களை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

(1) கோயம்பேடு -பூந்தமல்லி நெடுஞ்சாலை, (2) கிழக்குக் கடற்கரைச் சாலை -திருவான்மியூர் தெற்கு, (3) பழைய மாமல்லபுரம் சாலை -திருவான்மியூர் பஸ் நிலையம் என 3 முக்கிய வழித்தடங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மினி பஸ்கள் இயங்கும்.

க்ஷமாவட்டங்களில்…:/க்ஷ மினி பஸ் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக தலா 100 மினி பஸ்கள் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் கூடுதலாக மினி பஸ்கள் விட திட்டமிடப்பட்டுள்ளது.

இதர 19 மாவட்டங்களில் இயக்கப்படும் மினி பஸ்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்பது நிதிநிலை அறிக்கையில் தெரியும்.
=================================================================================

Posted in ADMK, Anbarasan, Automatic, Blue Line, Bus, Chennai, Depot, Diesel, DMK, Expenses, Express, fare, Fuel, Gas, Government, Inflation, InfoTech, IT, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, JJ, Karunanidhi, KN Nehru, Luxury, M Service, Madras, Map, Ministry, MK, MK Stalin, MTC, Nehru, Offline, Orange Line, Pallavan, Petrol, PP, Price, PTC, Rise, service, SEZ, Ticketing, Tickets, Training, Tranportation, Transport, Yellow Line | Leave a Comment »