Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Restaurants’ Category

The art of throwing a party and a feast for guests – Devi Krishnan (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2008

விருந்து: பாபர் தோட்டத்து அழகி!

தேவி கிருஷ்ணன்

எச்சிலூறாமல் நாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டு கீழ் வருபவற்றைப் படியுங்கள்:

ராஜ விருந்துகளுக்கு உங்களை அழைத்துப் போகப் போகிறோம். எவ்வளவு ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இந்த விருந்து உபசரிப்புகளை நீங்கள் எங்கேயும் பெறவும் முடியாது. விருந்துணவுகளை ருசிக்கவும் முடியாது.

காலம் : பல நூற்றாண்டுகளுக்கு முன்

இடம் : ரோம் தேசம்:

அழகிய வேலைப்பாடுகளுடன் விளங்கும் ஒரு தனவந்தரின் பிரமாண்டமான அரண்மனை. அதன் சமையலறைக்குள் நேராக நுழையலாம். பெரியபெரிய நிலைக்கண்ணாடிகளும் ஆள் உயர ஓவியங்களும் சுவர்களை அலங்கரித்து இருக்கும். வாசனை மரத்தில் இழைத்த மிக நீண்ட மேஜை போடப்பட்டிருக்கும். வாசனை மரம் என்பது மட்டுமே மேஜையில் பிரதானம் இல்லை. அதில் உள்ள வேலைப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. தோகை விரித்தாடும் அழகு மயில்போல சின்னச்சின்ன வாசனைக் குச்சிகளால் அந்த மேஜையை அலங்கரித்து இருப்பார்கள். சின்னச்சின்ன கத்திகள், அழகிய முள் கரண்டி மேஜையில் இருக்கும். பல விதமான ஒயின்களைச் சாப்பிட வெள்ளியிலும், தங்கத்திலும் நவரத்தினம் பதித்த கோப்பைகள் தயாராக இருக்கும்.

விருந்துக்கு வருவோம். மஸ்லின் டோகர், ட்யூனிக் துணி ஆடை அணிந்து வருவார்கள் தனவந்தர்கள். அவர்களுடன் வரும் அழகிகளோ, உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் அழகிகளையே தோற்கடிக்கும் தோற்றத்துடன் காணப்படுவார்கள். முத்தும், தங்க ரேக்கும் கொண்ட வேலைப்பாட்டுடன் திகழும் கணுக்கால் வரை தொங்கும் கவுன்களும், அதிசய தலையலங்காரங்களுடன் கையில் ஓர் அழகிய பட்டு விசிறியை ஏந்தி அவர்கள் ஒய்யார நடைபோட்டு வருவதே பலரைச் சொக்கி விழ வைக்கும் காட்சியாக இருக்கும்.

இதற்கே விழுந்துவிட்டால் எப்படி? விருந்து வகைகளைக் கேளுங்கள்: கோழி, மாமிசம், மீன் முதலியவற்றால் செய்த பலவிதமான பதார்த்தங்கள் ஏராளமாகச் செய்யப்பட்டு வெள்ளி, தங்கப் பாத்திரத்தில் குவித்து வைத்திருப்பார்கள். அதிலும் விருந்துக்கு ரோமன் எம்பரர் வருவதென்றால் பக்கத்து சமுத்திரத்தில் உள்ள எல்லாவித மீன்களும் பக்கத்துக் காட்டில் உள்ள பலவித மிருகங்கள், பறவைகள் சமையலாகி விருந்தில் இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் வாய்க்குள் அடங்கி நன்றாக மென்று சாப்பிடக்கூடிய வகையில் மிக மிருதுவாகவும், வாசனையாகவும் மொறமொறப்பாகவும் இருக்கும். இதை அவர்கள் பரிமாறும் முறை மிகவும் நேர்த்தியாகவும் மிகுந்த மரியாதையுடன் இருக்கும்.

ருசியைப் பற்றி சொல்லவே இல்லையா? ஏற்கனவே நாக்கில் எச்சிலூறப் படித்துக் கொண்டிருப்பீர்கள். அதில் இதை வேறு சொன்னால், உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ருசி என்றால் அப்படி ஒரு ருசியாக இருக்குமாம். மூக்கு முட்ட சாப்பிட வைக்குமாம். அப்படிச் ருசிக்கக் கொடுக்கக்கூடிய மசாலா பொருட்களை எங்கிருந்து வரவழைத்தார்கள் தெரியுமா? வேறெங்கிருந்தும் இல்லை. நம்முடைய கேரளாவிலிருந்துதான். கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு வந்த வாஸ்கோடகாமாதான் மிளகு, மிளகாய் போன்றவற்றை ஏற்றுமதி செய்திருக்கிறார். அப்படி அவர் செய்யாமலிருந்தால் ராஜ விருந்துகளே ருசித்திருக்காது!

ரோம் விருந்துக்கு எந்தவகையிலும் குறைந்ததில்லை முகலாய சக்கரவர்த்திகள் கொடுக்கும் ராஜ விருந்துகள். பாரசீக நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றியே அவர்கள் ராஜ விருந்து படைத்தார்கள். அழகாகச் செதுக்கப்பட்ட தூய தங்கம், வெள்ளியினால் செய்து எனாமல் பூசிய தட்டுக்களையே சாப்பாட்டுக்கு உபயோகித்தார்கள்.

முகலாய சக்கரவர்த்திகள் விருந்தின் ஸ்பெஷல்- புலாவ் சாதம். இதில் வாசனை பொருட்களைக் கூட்டி அதில் மாமிசத்தையும் அரிசியையும் சேர்த்து வெகு பதமாக இருக்கும் அளவுக்கு சமைத்து “ஏப்ரிகாட்’ என்னும் பழம், குங்குமப்பூ, மாதுளை ஹிமாலய காட்டில் வளர்ந்த ரோஜாப்பூவின் இதழ்கள், மேலும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழவகைகளையும் சேர்த்து தயாரிக்கும் உணவு செம ருசியாக இருக்குமாம். சக்கரவர்த்தி பாபருக்குப் பிடித்த பழம் மாம்பழம்தானாம். “தோட்டத்தின் அழகி’ என்று மாம்பழத்தைப் புகழ்ந்து அவர் டயரியில் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

பாபரைப் போன்று பல மகா ராஜாக்கள் மற்றும் நவாப்களின் சமையல் அறைகள் உலகப் பிரசித்திப் பெற்ற பல சமையல் கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. அந்த மேதைகளால் பல புதிய புதிய சமையல் நுணுக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாகியவற்றில் ஒன்றுதான் கபாப்.

அவுத் மாகாணம் கபாப்-க்குப் பேர் போனது. இப்பொழுது அந்த இடம் லக்னோ என்று அழைக்கப்படுகிறது. அவுத் நவாப் அரண்மனை சமையல் கலைஞர்கள் உருவாக்கியதுதான் கபாப்.

நூறுக்கு மேற்பட்ட மசாலாக்களை வாசனை பொருளான ஏலம், ஜாதி, குங்குமப்பூ முதலியவற்றையும் சேர்த்து தயாரிக்கப்பட்ட கபாப், மிருதுவானது. தேகத்திற்கு வலுவையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது.

ராஜபுத்திர மகாராஜாக்களும் இந்த கபாப்பை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். சூலி என்று கூறப்படும் கபாப் ராஜபுத்திர அரசர்களின் மிகவும் பிடித்த உணவு. வேட்டையாடுவதில் பிரியம் கொண்ட இந்த அரசர்கள், வேட்டையில் கிடைத்த பிராணிகள் மாமிசத்தை, தீயிலிட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு தூவி வாட்டி சாப்பிடுவார்களாம்.

சில மகாராஜாக்கள், சமையல்களிலும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். சைலானா மகாராஜா ஒரு தேர்ந்த சமையல் கலைஞரும் ஆவார். அவர் கண்டுபிடித்த அனேகவிதமான உணவுகளைப் பற்றி புத்தகமே எழுதியிருக்கிறார்.

இதைப்போல சமையல் கலையில் புகழ்பெற்றவர்கள் ஹைதராபாத் நிஜாம்கள். மாமிசப் பிரியர்களான இவர்கள், ஆந்திர மாநிலத்தின் காரம், உப்பு, புளிப்பு முதலிய ருசிகளைக் கூட்டிச் செய்யும் சமையல் வகைகளில் சிறந்து விளங்கினார்கள். இப்போதும் ஹைதராபாத் மாமிச உணவு எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவதற்கு இவர்கள் தொடங்கி வைத்த தொடக்கம்தான் காரணம். மிளகாயின் காரம், மாங்காய் இவற்றோடு புளிப்பு, உப்பு சேர்த்து தயிரில் ஊற வைத்து இவர்கள் செய்யும் மாமிச வகைகள் ருசிக்குப் பேர் போனது.

காஷ்மீர், பாட்டியாலா அரசர்களும் கபாப் விருந்துக்குப் பெயர் போனவர்கள். முழுக்க முழுக்க இளம் ஆட்டை வெட்டி, அதன் மாமிசத்தை எடுத்துதான் கபாப் செய்வார்கள். அரச விருந்தின் ஸ்பெஷலே கபாப்தான். இதைப் போல “காஷ்மீர் தாபக்மாஸ்’ என்கிற பதார்த்தமும் இந்த விருந்தில் முக்கிய இடம் வகிக்கும். இதற்கும் இளம் ஆட்டையே பயன்படுத்துவார்கள். ஆட்டின் விலா எலும்புகளை மையாக அரைத்து பலவித மூலிகைளைச் சேர்த்து இதைச் செய்வார்கள்.

தமிழ்நாட்டிற்கு வருவோமா?

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கொடுக்கும் விருந்துகளும் பிரமாதமாக இருக்கும். தலைவாழை இலையிட்டு, அதில் 21 விதமான காய், கனி, அரிசி, பருப்பு, நெய், பால், தயிர் வாசனை பொருட்களைச் சேர்த்து இலை நிரம்ப பரிமாறுவார்கள். இதைப்போல கேரள நாட்டு மகாராஜாக்கள் கொடுக்கும் விருந்துகளும் சிறப்பாக இருக்கும். கேரள மகாராஜக்கள் விருந்துகள் பெரும்பாலும் சைவமாகத்தான் இருக்கும். முதல் அயிட்டம் பால்பிரதமன், சக்கை பிரதமன், அன்னம் (சாதம்), எரிசேரி, புளிசேரி, மோர்குழம்பு, அப்பளம், பப்படம் என அவியல் 31 வகை பதார்த்தங்கள் பரிமாறப்படும். இவற்றைச் செரிமானம் செய்ய சுக்குவெள்ளமும் சுக்கில் தயாரித்த குடிநீரையும் கொடுப்பார்கள்.

இதைப் போன்று ராஜ விருந்துகளில் இடம்பெற்ற எல்லா உணவு வகைகளும் இப்போது கிடைத்தாலும் அதே ருசியோடு கிடைக்குமா? என்பது சந்தேகமே…

சில ஊறுகாய் செய்திகள்:

கிளியோபாத்திரா தன் அழகுக்குக் காரணம் ஊறுகாய்தான் என்றாளாம்.

மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படையில் உள்ளவர்கள் எல்லாம் ஊறுகாய் சாப்பிடவேண்டும்; அப்போதுதான் ஆரோக்கியத்தைப் பேண முடியும் என்றானாம்.

Posted in Cuisine, Diet, Dishes, Drinks, Eat, Feast, Food, Fun, guests, Health, Hotels, Ideas, Marriages, Masala, Meat, Mogul, Party, Recipes, Restaurants, Vegetarian, Weddings | Leave a Comment »

Child and juvenile labour force in Tamil Nadu – Dinamani Op-ed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

இது நியாயமா?

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், நாளைய தலைமுறை கல்வியறிவும் ஆரோக்கியமும் உடைய சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமான, கிராமப்புற வளர்ச்சி பெரிய அளவில் ஏற்படாத நாடுகளில் தவிர்க்க முடியாத களங்கம் ஒன்று இருக்குமேயானால், அது கல்வி கற்க வேண்டிய வயதில் எடுபிடி வேலைகளைச் செய்யும் நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுவதுதான்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தங்களது மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய குற்றத்திற்காக 28 நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து 68 வழக்குகளும் பதிவு செய்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகவே அமைக்கப்பட்ட 32 கல்விச்சாலைகளில், மீட்கப்பட்ட 1,198 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கப்படுவதாக அந்த மாவட்டச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதேபோல, மற்ற மாவட்டங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் மாவட்ட ஆட்சியாளர்கள் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக முனைப்பாகச் செயல்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இது ஏதோ தமிழகமோ, இந்தியாவோ மட்டுமே எதிர்நோக்கும் பிரச்னை என்று கருதிவிட வேண்டாம். வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் – அதாவது, பின்தங்கிய நாடுகளில் – ஐந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள 25 கோடிக் குழந்தைகள், கல்வி கற்க முடியாமல் ஏதாவது வேலையில் ஈடுபட்டு வருவதாக 1998-ல் வெளியான ஐ.நா. செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிவரப்படி உலகில், எட்டு குழந்தைகளில் ஒரு குழந்தை தனது வருங்காலத்தை வளமாக்க முடியாத, கல்வி கற்க முடியாத நிலைமை.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியறிவு பெற வழியில்லாமல், குடும்பத் தொழிலிலோ அல்லது வேறு ஏதாவது வேலையிலோ ஈடுபடுத்தப்படுவதாகவும், தமிழகத்தில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இன்னும் கல்விச்சாலைகளுக்குச் செல்லாமல் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவ வேண்டிய நிலையில் இருப்பதாகவும், மத்திய அரசின் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக, இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பல சட்டங்களை இயற்றி வந்திருக்கிறோம். குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்குக் கல்வியறிவு அளிப்பதற்கு நிதிநிலை அறிக்கைகளில் தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்காக 228 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பும் நல்கி வருகின்றன என்பதுதான் உண்மை. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு இன்று வரை செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டமும் சரி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மிகப்பெரிய முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை செய்தும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஏன் கட்டுப்படுத்தவோ, முற்றிலும் அகற்றவோ முடியவில்லை? குழந்தைகள் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் ஏன் பெற்றோர் மத்தியில் ஏற்படவில்லை?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்.

முதலாவது காரணம், கிராமப்புற வறுமை. விவசாயம் வெற்றிகரமாக நடக்காத வரையில் கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியாது. வறுமை இருக்கும்போது குழந்தைகளைக் கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதைவிட, குடும்ப வருமானத்தை அதிகரிக்கப் பயன்படுத்துவதற்குத்தான் பெற்றோர்கள் முயல்வார்கள் என்பது இயல்பு. இந்த விஷயத்தில் நமது ஆட்சியாளர்கள்தான் நல்ல தீர்வைத் தர முடியும்.

இரண்டாவது காரணம், இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வும் அக்கறையும் படித்தவர்கள் மத்தியில் இல்லாதது. குழந்தைத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்கிற மனப்போக்கிலேயே தவறு இருக்கிறது. குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர்களைச் சமுதாயம் புறக்கணிக்க முற்படுமேயானால், இந்த சமூகக்கேடு பெரிய அளவில் தடுக்கப்படும். நாமே மறைமுகமாக இந்தக் கொடுமையை அங்கீகரிக்கிறோமே, இது நியாயமா?

Posted in Center, Centre, Child, Children, City, Dharmapuri, Education, Employment, Exploit, Exploitation, Females, Food, girls, Govt, Hotels, Hunger, Hungry, Illiteracy, Income, juvenile, Kids, Labor, Labour, Literacy, Metro, Needy, Policy, Poor, Read, Restaurants, Rich, Rural, She, State, Student, Suburban, Tharmapuri, Village, Wealthy, Women, Work, Worker | Leave a Comment »

The importance of Sanitary Inspections on Food joints – Health Hazards of Restaurants

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

தேவை விழிப்புணர்வு!

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.

மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.

ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.

உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?

எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?

Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »