Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Researchers’ Category

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

Thorium Power: Fuel & Energy – commercial nuclear reactors

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007

தோரிய வளம்-இந்திய பலம்!

எஸ். ராஜாராம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.

அணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.

தோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.

அணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.

உலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.

பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.

உலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.

“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.

தற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே தோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.

மேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.

வியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

ஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

அவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி!

Posted in Atom, Atomic, Chemical, Danger, dead, Death, Degradable, Development, Electricity, Element, emissions, energy, Environment, Exposure, Fuel, Minerals, Nuclear, Pollution, Power, Radiation, reactors, Research, Researchers, Risk, Science, Scientists, Thorium, Uranium | Leave a Comment »