அவர்கள்: கருணாநிதி காட்டம்
Friday, 23 November , 2007, 12:49
உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இளைஞர் எழுச்சி குறித்தும் – இளைஞர்கள் புரிந்துள்ள இமாலய சாதனைகள் பற்றியும் – இன்றுடன் நான் எழுதிய பதினைந்து கடிதங்களை, வரலாற்றுக் கருவூலமெனப் போற்றிப் பாராட்டி, புகழ்ந்துரைத்து, உன் போன்றோர் பொழிந்துள்ள வாழ்த்துகளை முத்தமிட்டுப் பையில் திணித்துக்கொள்வதில் பெருமையுறுகிறேன். அதற்குள் சில ஆத்திரக்காரர்களுக்கு; அவசரக்காரர்களுக்கு ஏற்கெனவே அவர்தம் நெஞ்சில் நிரம்பியுள்ள அசூயை, கொதிப்பேறிப் பொங்கி வழிந்து; அத்துடன் நஞ்சும் கலந்து ஏதேதோ “திருவாய்ச் சிந்து” பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன; நேற்றைய நாளில் அரசு தலைமைச் செயலகத்தில் பதினெட்டுப் பச்சிளம் குழந்தைகளின் இருதய சிகிச்சைக்காக அரசு சார்பில் சிகிச்சை கட்டணத்தில் பெரும்பகுதியை அதாவது 90 சதவிகித அளவிற்கு அரசே செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்து, நல் மனம் படைத்த மருத்துவமனை உரிமையாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒப்பந்தம் செய்து; அந்தக் குழந்தைகளுக்கு அதற்கான பதிவு அட்டைகள் வழங்கினேனே; அதைப் பற்றி நினைத்தார்களா?
நேற்றைய தினமே, 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும், பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கே.எம். செரியரின் பிரான்டியர் லைப்லைன் நிறுவனமும் இணைந்து மருத்துவ கிராமம் ஒன்றினைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதே, அதைப் பற்றி இந்த அசூயையாளர்கள் அறிவார்களா?
அது மாத்திரமல்ல, தமிழக அரசின் சார்பில் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அந்தத் திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்ற நேரத்தில், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “போர்டு” தொழிற்சாலையின் ஆசியா பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கான செயல் துணைத் தலைவர் ஜான் பார்க்கர் என்னைச் சந்தித்தபோது, மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்திலே திட்டம் தொடங்கிட இருப்பதாகவும் அறிவித்துச் சென்றிருக்கிறார். அன்றாடம் அறிக்கை விட்டுக்கொண்டிருப்போர் அறியமாட்டார்களா இதனை?
தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து; வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்து, அதற்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் கோரி, சட்டமன்றக் கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு எனது தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு; 18.11.2007 வரை 23 லட்சத்து, 79 ஆயிரத்து, 721 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டு, அவற்றில் 21 லட்சத்து 32 ஆயிரத்து 956 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளனவே.
மேலும் 750 கோடி ரூபாய்ச் செலவில் 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்து வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டு, வருகிற 27ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பங்கேற்று, அவைகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளோமே, அதைப் பற்றிப் பாராட்டுரை பகரப் போகிறார்களா?
இது போலவே, ஏழை – எளிய தாய்மார்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கிடுவோம் என்று அறிவித்து, 16.11.2007 வரை 3 லட்சத்து ஓர் ஆயிரத்து 560 எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகள் வழங்கப்பட்டு, தொடர்ந்து 27.11.2007 முதல் மேலும் எட்டு லட்சம் எரிவாயு அடுப்புகள் வழங்கப்படவுள்ளனவே; இதனைப் பற்றி எரிச்சல்காரர்கள் புகழப் போகிறார்களா?
ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 508 நிலமற்ற ஏழை விவசாயி – விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 688 ஏக்கர் நிலம் இலவசமாக அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதே, இது குறித்து பாராட்டு வழங்கப் போகிறார்களா?
2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவர்களுக்குச் சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகிறதே, அதைப் பற்றி கருத்து தெரிவிக்கப் போகிறார்களா?.
1 கோடியே 78 லட்சத்து 240 குடும்பங்களுக்கு கிலோ அரிசி 2 ரூபாய் வீதம் மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறதே, எரிச்சல்காரர்கள் அதுபற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?
22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் 7000 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோமே, இன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்வோர் அதற்காக வரவேற்பு தெரிவித்ததுண்டா?
10.11.2007 வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 287 வீட்டு மனைப் பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டிருப்பதோடு, கடந்த 14ஆம் தேதியன்று அதுபற்றி ஆய்வு நடைபெற்று, இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிட எந்தவிதமான வருமான உச்ச வரம்பும் கிடையாதென்று அறிவித்திருக்கிறோமே, எது எதற்கோ வக்கணை பேசுவோர் அதைப் பற்றிப் பாராட்டு கூறியிருக்க வேண்டாமா?.
1 இலட்சத்து 60 ஆயிரத்து 531 விவசாயக் குடும்பங்களுக்கு விவசாயி – விவசாயத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நல உதவித் திட்டத்தின்கீழ் 69 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 719 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி ஒரு வார்த்தை உண்டா?
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 73 ஆயிரத்து 665 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்காக 110 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்காக – 4 லட்சத்து 72 ஆயிரத்து 20 கர்ப்பிணி பெண்களுக்காக 206 கோடியே 14 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளதே, கேலி பேசுவோர் இதைப் பற்றி எல்லாம் கனவிலாவது நினைத்தது உண்டா? மக்களின் தேவைகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி அவர்களுக்கென்ன கவலை? இப்போது அவர்களது கவலையெல்லாம் திருநெல்வேலியில் விரைவில் நடைபெறவிருக்கும் மாநில இளைஞர் அணி மாநாட்டைப் பற்றித்தான்! அதற்காகத்தான் அந்த நண்பர்கள் பேசுகிறார்கள். கண்டனம் – கேலியென முழங்குகிறார்கள்.
உலகின் வரலாற்று நாயகர்களைப் பற்றி – தியாக சீலர்களைப் பற்றி – தீரர்கள், வீரர்கள் பற்றி எழுதினால்; இப்போதுதானே இதெல்லாம் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க எழுதுகிறார் – என்று தங்களுக்கே உரிய நாராச நடையில் பொய், புளுகு, புரட்டுகளை அறிக்கைகளாக்கி என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பித்து வெளியிட்டு மகிழ்கிறார்கள்.
இளைஞர்கள், இன உணர்வு பெற வேண்டுமென்றும் – இயக்கத்தின் இலட்சியங்களை உணர்ந்து இடையறாப் பணி ஆற்ற வேண்டும் என்றும் – என் உள்ளத்தில் என் இளம் பிராயத்திலேயே (1937-1938) 13 வயதிருக்கும் போதே “செல்வ சந்திரா” எனும் புதினம் எழுதி; அதன் முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிடும் அளவுக்கு லட்சிய தாகம் இருந்துள்ளது. மேலே வெளியிடப்பட்டுள்ள என் கையெழுத்து ஆதாரம் “கலைஞரின் கவிதை மழை” என்ற பெரிய நூலில் வெளியிடப்பட்டுள்ளதை எப்போது வேண்டுமானாலும் எரிச்சல்கார நண்பர்கள் பார்த்துத் தெளிவு பெறலாம்.
அதைத் தொடர்ந்து 1942இல் அண்ணாவின் “திராவிட நாடு” இதழில், “இளமைப் பலி” என்ற எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 1945இல் நான் எழுதிய “கிழவன் கனவு” என்ற குறுங்கதைப் புத்தகம் வெளிவந்ததில் – “எங்கு பார்க்கினும் விடுதலை விருத்தம்! எங்கும் சமதர்ம சங்க நாதம்! தமிழொளியை அரசியலில் இணைத்து திராவிடர் உரிமையோடு உடைமையோடு உண்மையோடு உள்ள எழுச்சியோடு உவகை உந்த வாழ்ந்திடும் வரலாறு! ஒரு தமிழன் தன்மானமின்றி அய்யரைச் சாமி என்றழைத்ததற்காக ஆறு மாதக் கடுங்காவல்! சாது எனக் கூறி, சூது செய்த ஒருவன் சாகும் வரையில் சிறைப்பட்டான்!.
பட்டமும், பதவியும் நமது திட்டமென ஒரு பத்திரிகாசிரியன் எழுதியதற்காக மக்கள் மன்றத்திலே அவன் மண்டூகம் எனப்பட்டான். ஏழையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக ஏற்பட்டதாம் ஆநிரைகோ என்ற தமிழனுக்கு! சாதி, மதம், கடவுள்கள் என்ற கற்பனைப் பூச்சாண்டிகள் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உலவின என்று உரநெஞ்சன் என்ற சரித்திர ஆசிரியர் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தி எதிர்ப்பு! சிறைச்சாலை! தாளமுத்து நடராஜன் களப்பலி! தமிழைக் காக்கச் சிறை சென்ற பெண்மணிகளின் புறநானூறு! மானங்காக்க மாணவர் செய்த கிளர்ச்சி! ஓமான் கடல் மறைத்த சர்.ஏ. டி.பன்னீர்செல்வம்! – இதனை அந்தக் கிழவன் கனவாகக் கண்டான்” என்று குறிப்பிட்டிருப்பதை கருத்துக் குருடர் தவிர மற்றவர்கள் கண்டு மகிழ முடியும். அது என்ன; இப்போது எழுதியதா? 84 வயதில்? இல்லை; 1945இல் என் 21ஆவது வயதில் எழுதியது! நூலின் பெயர் “கிழவன் கனவு” – அப்போது விலை ரூ.1.25 – அதை அப்போது எழுதிய இந்த இளைஞனுக்கு வயது; 21 தான்! பொல்லாங்கு பேசுவோர் இதைப் புரிந்துகொள்வது நல்லது!
1942ஆம் ஆண்டு; 18 வயதிலேயே அண்ணாவின் “திராவிட நாடு” வார இதழில் “இளமைப் பலி” என்ற கட்டுரை எழுதியவன் நான். எனவே இலட்சியத்துக்காக இளமையைப் பலி கொடுக்கவும்; இதோ தயார்! என எழுந்த இளைஞர் கூட்டத்தில் ஒருவன்தான்; இன்று முதிர்ந்த வயதில் மாநில இளைஞர் அணி மாநாட்டுக்காக – வரலாற்று நாயகர்கள் பற்றி 15 கட்டுரைகள் தீட்டி; அவர்களின் நாட்டுப் பற்று – சமுதாயப் பற்று – போன்ற கொள்கை கோட்பாடுகளை, இலட்சிய வேட்கைகளை நினைவூட்டி – புதியதோர் இளைஞர் எழுச்சி பூத்துக் குலுங்கிட எழுதுகோல் எடுத்து இளைஞனே விழி; எழு! நல் – எண்ணங்களை எங்கணும் நடு! எனத் தீட்டிடுக! தீரர்களுக்கான அழைப்பு என்று வீர இளைஞர்காள்; உமை வேண்டுகிறேன்.
மாநாட்டுத் தலைவரும் மாநில இளைஞர் அணிச் செயலாளருமான தம்பி மு.க.ஸ்டாலின் காற்றினும் கடிய வேகத்தில் மாநாட்டுக்கான ஆக்கப் பணிகள் அருமையாக அமைந்திட – அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் சுற்றுப் பயணம் செய்கிறார். அவருடன் இளைஞர் அணியின் எழுச்சிப் படையும் அணிவகுத்திடக் கண்டு அக மகிழ்கிறேன்.
மாநாட்டுக்கான முதல் விளம்பர அழைப்பே; முத்துக் கோத்தது போல் நம்மை முறுவலித்திட வைக்கிறது! மேலும் அடுத்தடுத்த சிறப்புகளை டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நெல்லையில் காண்போம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.