நகர்வலம்: பறக்கலாம்… காரிலேயும்!
அருவி
அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கமாண்டர் ரிக் ஸ்டிரக், பைலட் லீ அர்சாம்பால்ட், நிபுணர்கள் பாட்ரிக் பாரஸ்டர், ஜேம்ஸ் ரிலி, செவன் ஸ்வான்சன், ஜான் ஆலிவ்ஸ், விமானப் பொறியாளர் கிளைய்டன் ஆண்டர்சன் ஆகியோரும் பயணிக்கிறார்கள். இதில் விமானப் பொறியாளர் கிளைய்டன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸýக்குப் பதில் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடுவார். சுனிதா வில்லியம்ஸ் வருகிற 19-ந்தேதி அட்லாண்டிஸ் ஓடம் மூலம் பூமிக்குத் திரும்புகிறார். கொலம்பியா விண்வெளி ஓடம்போல விபத்தில் முடிந்துவிடக்கூடாதே என்பதற்காக அட்லாண்டிஸ் ஓடத்தை கண்ணும் கருத்துமாக நாசா விஞ்ஞானிகள் கவனித்து வருகிறார்கள். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியதும் ஆறுமாத காலம் விண்வெளியில் அவர் நடத்திய ஆய்வு முடிவுகளைத் தெரிவிப்பார்’
இந்தச் செய்தியைப் படிப்பவர்களுக்கு கீதா, சுமதி, அஞ்சலி தேவி, உஷாராணி ஆகியோரின் சாதனையைப் படிப்பது சாதாரணமாகத் தெரியலாம்.
“பஸ், விமானம் என எல்லாம்தான் லேடீஸ் ஓட்டுறாங்க. இதில் டாக்ஸி ஓட்டுவதில் என்ன பிரமாதம் இருக்கிறது?’ என்றுகூட கேட்கலாம்.
தனியாக ஒருபெண் சாலையில் போகையிலேயே சந்திக்கக்கூடிய சச்சரவுகள் அதிகம். இதில் முகவரி தெரியாத புதியபுதிய நபர்களை புதியபுதிய இடங்களுக்குத் தனியாக டாக்ஸியில் அழைத்துச் செல்வது என்றால் எவ்வளவு சிரமம்?
“”ஒரு சிரமமும் இல்லை. அதிகம்முறை ஏர்போர்ட்டுக்குத்தான் சென்றிருக்கிறேன் என்றாலும் மாமல்லபுரம் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களுக்குத் தனியாக டாக்ஸி ஓட்டிச் சென்றிருக்கிறேன். இதுவரை யாராலும் எவ்விதப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. விமர்சித்துக்கூட எங்களை யாரும் பேசியதில்லை.
முதல் முறையாக எங்கள் டாக்ஸியில் ஏறுகிற எல்லோருமே ஆச்சரியத்துடனே பார்ப்பார்கள். “லேடீஸô ஓட்டுறது… லேடீஸô ஓட்டுறது’ என்று இறங்கிறவரை பாராட்டிக் கொண்டே வருவார்கள். ஒருமுறை எங்கள் டாக்ஸியில் வந்தவர்கள் அடுத்தமுறை எங்கள் டாக்ஸியைத்தான் தேடி வருவார்கள்.
ஆரம்பத்தில் இருந்த ஒரு பிரச்சினை டாக்ஸி பஞ்சராகிவிட்டால் ரிப்பேராகிவிட்டால் ஸ்டெப்னி மாற்றவோ, ரிப்பேர் செய்யவோ தெரியாமல் தத்தளிக்க வேண்டியிருந்தது. இப்போது ஸ்டெப்னி மாற்றவும் ரிப்பேர் செய்யவும் கற்றுக்கொண்டோம். டாக்ஸி ஓட்டுவதற்கு முன்பு துணிக்கடை, மசாலாப்பொடிகள் தயாரிக்கிற கடை என பல கடைகளில் வேலை பார்த்திருக்கிறேன். பத்தாவது பெயிலான என்னால் இந்த வேலைகளைத்தான் செய்யமுடிந்தது. ஆனால் டாக்ஸி ஓட்டத் தொடங்கிய பிறகு ஏதோ சாதித்துவிட்ட சந்தோஷம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஓர் அங்கீகாரமும், புதிய தெம்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது. நம்மாலும் எதுவும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.” என்கிறார் சவேரா ஓட்டலுக்காக டாக்ஸி ஓட்டும் கீதா. இவரைப் போலவே சவேரா ஓட்டலுக்காக டாக்ஸி ஓட்டும் இன்னொருவர் சுமதி.
“”டாக்ஸியில் வந்தவர்கள் யாரும் என்னை விமர்சித்து பேசியது கிடையாது. ஆனால் ஆரம்பத்தில் ஆண் டாக்ஸி டிரைவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள். “டாக்ஸி ஓட்டுற ஆளைப் பாரேன்’ என்று என் காதுபடவே பேசியிருக்கிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்ட பிறகுத்தான் எனக்கு டாக்ஸி ஓட்டுவதை விட்டுவிடவே கூடாது என்ற எண்ணம் தீவிரமானது. டாக்ஸி ஓட்டுவதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என் அப்பா.
அரசாங்கப் பள்ளியின் டீச்சர் அவர். என்னையும் டீச்சராக்கிப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் நான் ப்ளஸ் டூவில் பெயிலாகிவிட்டேன். இதன்பிறகுதான் “அநியூ’ அமைப்பில் ஹோம்நர்சிங் சேர்ந்து படிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அப்போதுதான் அப்பா டாக்ஸி ஓட்ட கற்றுகொள் என்றார். டீச்சராக வேண்டும் என்ற ஆசையைத்தான் நிறைவேற்றமுடியவில்லை. அப்பாவின் இந்த ஆசையையாவது நிறைவேற்றுவோமோ என்று டாக்ஸி ஓட்டக்கற்றுக்கொண்டேன். இப்போது எல்லோரும் பாராட்டுகிறபோது பெருமையாக இருக்கிறது.
பெண்கள் கார் ஓட்டினால் ரொம்ப மெதுவாகத்தான் ஓட்டுவார்கள் என்று சொல்வது தவறு. இடத்திற்குத் தகுந்தாற்போல்தான் ஓட்டவேண்டும். சில நேரங்களில் அவசரம் கருதி நூறு கிலோ மீட்டர் வேகத்தில் எல்லாம் ஓட்டியிருக்கிறேன். போலீஸில் பைனும் கட்டியிருக்கிறேன். வேகத்தோடுகூடிய விவேகமே முக்கியம். டாக்ஸியில் வருகிறவர் நம்மை நம்பித்தான் வருகிறார்கள். அவர்களின் உயிருக்கு நாமும் ஒருவகையில் பொறுப்பு என்கிற நினைப்போடுதான் நான் டாக்ஸியை எடுக்கிறேன்” என்கிறார் சுமதி.
வாகனவெள்ளம் அடித்துச் செல்லும் சாலையில் டாக்ஸி ஓட்டும் அனுபவம் பெற்ற கீதா, சுமதியிடம் இருந்து வேறுபட்ட அனுபவம் உடையவர்கள் அஞ்சலிதேவி, உஷாராணி. சிக்னலில் இவர்கள் நிற்கிறார்கள் என்றால் விமானம் இறங்குகிறது, கடக்கிறது என்று அர்த்தம். ஏர்டெக்கான் நிறுவனத்திற்காக விமானநிலையத்தில் ஆம்னிவேன் ஓட்டுகிறார்கள்.
“”விமானநிலையத்தில் டாக்ஸி ஓட்டுவதே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் விமானநிலையத்தில் ஓட்டுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் விதிமுறைகள் இருக்கிறது. இங்கு ஓட்டுவதற்கு ஏர்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் தனியாகப் பெறவேண்டும். எங்களுடைய வேலை பைலட்களையும் விமானப்பணிப்பெண்களையும் விமானம் இறங்கு தளத்திலிருந்து விமானநிலையத்திற்கு அழைத்து வருவதுதான். வேறு மாநிலங்களுக்குச் செல்கிற விமானங்கள் இங்கு தரையிறங்கி அரைமணி நேரம் நிற்கிறது என்றால் அந்நேரத்தில் பைலட்டுகள் இறங்கி புகைப்பிடிப்பதற்கோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோ நிலையத்திற்கு வருவார்கள். அவர்களை அழைத்து வந்து, திரும்பவும் கொண்டுபோய் விடுவோம். பகலில்தான் எங்களுடைய வேலை. எட்டு மணி நேர டியூட்டி டயத்தில் மூன்று தடவை நாலுதடவை இதுபோல போய் வரவேண்டி இருக்கும். எப்போதாவது உடல்நிலை சரியில்லாமல்போகிற பயணிகளையும் அவசரமாக அழைத்து வரவேண்டி இருக்கும். பைலட்கள் பெரும்பாலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் நாங்கள் டாக்ஸி ஓட்டுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “எங்களைவிட நீதான் பெரிய ஆளு’ என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். விமானநிலையத்திற்கு வெளியில் டாக்ஸியை எடுத்துவர மாட்டோம். ஒருவேளை அப்படி வந்தோமானால் அது பெட்ரோல் போடுவதற்கும், ரிப்பேர் செய்வதற்குமாகத்தான் இருக்கும். சொந்தமாக கால் டாக்ஸி வைத்துகொண்டு வெளியில் ஓட்டவேண்டும் அல்லது பஸ் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது” என்கிறார் அஞ்சலிதேவி.
“”சின்னவயசில் விமானத்தைப் பார்த்தால் ஓடிப்போய் டாட்டா காட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். இப்போது விமானம் ஓட்டுகிற பைலட்டுக்கு கார் ஓட்டுறேன்.
டிராபிக் நிரம்பிய பகுதிகளில் ஓட்டுவதற்கு விருப்பம் என்றாலும் விமானநிலையத்தில் ஓட்டுவதற்கு தனிப் பொறுமை வேண்டும். முப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இங்கு போகக்கூடாது. விமானத்துக்கு அருகில் போகப்போக பதினைந்து, பத்துன்னு குறைத்துக்கொண்டே போக வேண்டும். அதுவும் நினைத்த நேரமெல்லாம் போகமுடியாது. மற்ற விமானங்கள் வருகிற நேரமா இது என்பதையெல்லாம் பார்த்துதான் போகவேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி இங்கு கவனம் தப்பினாலும் பிரச்சினைதான். விதியை மீறி தவறாக ஓட்டினால் அதற்கு ஃபைன் போடுவார்கள். நான் ஒருநாளும் தவறு செய்து ஃபைன் கட்டியதில்லை.
எட்டாவது வரைக்கும்தான் படித்து இருக்கிறேன். பைலட்டுகளோடு பேசுகிறளவுக்கு எனக்குப் போதிய ஆங்கில அறிவு இல்லாவிட்டாலும், அவர்கள் பேசுவதை வைத்து புரிந்துகொள்வேன். பைலட் எல்லோரும் எனக்கு நண்பர்கள் சகோதரர்கள் மாதிரி. அவர்கள் எங்களை அதிகம் ஊக்கப்படுத்துகிறார்கள். விமான நிலையத்திற்கு வந்துபோகிறது மட்டும் மனதுக்குள் ஒரே ஒரு எண்ணம் மட்டும் வந்து மனதை வருத்திப் போகிறது. நாமும் ஒழுங்காகப் படிக்க முடிந்திருந்தால் விமானத்தையே ஓட்டிக்கொண்டு வானத்திலேயே பறக்கலாமே என்பதுதான் அது” என்கிறார் உஷாராணி.
பறக்கலாம்… காரிலேயும்! வானம் தொட்டுவிடும் தூரம்தான்!