Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Refugee’ Category

Parambikulam Wildlife Sanctuary – Parks & Forests – Tourism development without Intrusions

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

முன் மாதிரி: காடர்… மலசர்… நேச்சுரலிஸ்ட்!

வி. கிருஷ்ணமூர்த்தி

எங்கு, என்ன புதிய திட்டம் என்றாலும், முதன் முதலில் அடிபடுவது அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் மண்ணின் மைந்தர்கள்தாம். அங்கு வசிப்பவர்களை வெளியேற்றுவது நமது நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால் இதிலிருந்து மாறுபட்டு செயல்பட்டிருக்கிறது பரம்பிக்குளம் விலங்குகள் சரணாலயம்.

இந்த மாற்றத்தின் பின்னணி என்ன?

வன விலங்கு சரணாலயங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் அவர்களுக்கு அந்தப் பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சொல்ல வழிகாட்டிகள் இருப்பார்கள். ஆனால், தமிழக எல்லையில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியில் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட அப்படி தனிப்பட்ட “கைடுகள்’ கிடையவே கிடையாது.

இங்குவரும் பார்வையாளர்களுக்கு வன வளம், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் பற்றியெல்லாம் சொல்ல இந்தப் பகுதியின் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின இளைஞர்களை “நேச்சுரலிஸ்ட்’ என்ற பெயரில் வனத்துறையினர் பணியமர்த்தி உள்ளனர் என்பதுதான் இங்கே சிறப்பு. அவர்கள்தான் அங்கு கெய்டு, வழிகாட்டி எல்லாம்.

இந்தச் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நண்பர்களாய், வழிகாட்டியாய், தகவல் களஞ்சியமாய் இந்த “நேச்சுரலிஸ்ட்’கள் ஆற்றிவரும் பணிகள் அடடா…உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் பெயர்களை வேறுமொழி கலப்பில்லாமல், துல்லியமாக உச்சரித்து விளக்கும் இவர்களில் பலர் மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளதுதான் இந்தப் பரம்பிக்குளம் வனப்பகுதி. இங்கு காடர், மலசர், மடுவர், மலமலசர் ஆகிய 4 பழங்குடி பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைகள் எல்லாம் இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இவர்கள் தவிர, தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 1950-ம் ஆண்டுகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் அணை கட்டும் பணிகளுக்காகத் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வேலைக்காக வந்த குறிப்பிட்ட பிரிவு மக்களும் இங்கு குடியேறினர்.

பரம்பிக்குளம் ஆழியாறு அணைத் திட்டம், இங்கு தண்ணீரின் போக்கை மனிதனின் வசதிகளுக்காகத் தடம் மாற்றியது. அதுமட்டுமா, இந்தப் பகுதி பழங்குடியினரின் வாழ்க்கைப் பாதையையும் வேறு நாகரிகமான முறையில் மாற்றியமைத்து விட்டதே.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் பாதுகாப்புக்கு உடன் செல்லும் உதவியாளர்களாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களை வனத்துறையினர் நியமித்தனர். இது இங்கு நிகழ்ந்த ஒரு திருப்பம்.

அங்கு வனத்துறை அதிகாரியாகப் பணி புரிந்த நெல்சன் என்பவர் பறவையியல் அறிஞர் சலிம் அலி எழுதிய புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பெயர்களைத் துல்லியமாக உச்சரிக்க இவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இதனால் பறவைகள், விலங்குகளின் அத்தனை ஆங்கிலப் பெயர்களும் இவர்கள் நாவில் துள்ளி விளையாடுகின்றன.

இந்நிலையில் இங்கு வனப்பாதுகாவலராக வந்த சஞ்சயன் குமார் என்பவர் இவர்களுக்கு முறையான ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இங்கு வரும் பார்வையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒரு தொகுப்பு நிதியாக உருவாக்கியுள்ளார்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் சூழலியல் மேம்பாட்டு கவுன்சில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழங்குடியினரும் உறுப்பினர்கள்.

இங்கு பள்ளியும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்குடியினர் அனைவருக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் கல்வி கற்பிக்கப்படுவதோ மலையாளத்தில். அது ஒன்றுதான் வேதனை!

இவர்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள பழக்கங்களின்படி சில கிலோ மீட்டர்கள் தொலைவில் வரும் விலங்குகளைக் கூட வாசனை மூலம் அறிந்து கொள்கிறார்கள். பறவைகளை பார்க்காமலேயே அதன் குரல் ஓசையை வைத்தே இன்ன பறவையென்று இவர்களால் சொல்ல முடியும்.

“”வன வளப் பாதுகாப்பில் இவர்களுக்கு இணை இவர்களேதான்” என்கிறார் “நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பின் திருநாரணன்.

இங்குள்ள பழங்குடியினரின் பாரம்பரிய இசையையும், நினைவு சின்னங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையும் பார்வையாளர்களுக்கு விளக்கும் வகையிலான திட்டங்களும் வனத்துறையினரால் உருவாக்கப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரை வெளியேற்றாமல் அவர்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பரம்பிக்குளம் வன விலங்கு சரணாலயத்தை மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் சிறப்பாக நிறைவேற்றலாம் என்பதற்கு இந்தத் திட்டமே ஒரு பெரிய சிறந்த உதாரணம்.

Posted in Anamalai, Caste, Community, Development, Displaced, Environment, Forests, Guides, Intrusions, Kerala, Naturalist, Nature, Palacad, Palacaud, Palacaut, Palacode, Palaghat, Palagode, Palakkad, Palakode, Parks, Protection, Refugee, reservoir, safari, Sanctuary, SC, ST, Tour, Tourism, Tourist, Travel, Traveler, tribal, Tribes, Visit, Visitor, Wild, Wildlife | Leave a Comment »

Taslima Nasreen Security – West Bengal & Calcutta – Islam & Bangladesh: The great Indian dilemma

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007

புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007 


புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு

தஸ்லிமா நஸ்ரின்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய
‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.

“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.

இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.

தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.


நானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா

கோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

தில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.

பேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும்? யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.

விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்?’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.

“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

கோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா? என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.

1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.

———————————————————————————————————————————————————————–

தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.

மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:

மத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.

இத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.

———————————————————————————————————————————————————————–

“விரும்பிதான் வெளியேறினார்’

கோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

கோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்தி, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

———————————————————————————————————————————————————————–
தஸ்லிமாவை கைகழுவியது மார்க்சிஸ்ட்

புது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.

மேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.

“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

தில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.

“இந்தியாவில் தஸ்லிமா தங்கியிருக்கலாமா? வேண்டாமா? அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா? கூடாதா? என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.

மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.

தஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.

“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.

நஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா? என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.

தஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.

தஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன? என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை? என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.

நந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.

———————————————————————————————————————————————————————–

Posted in Asylum, Bangladesh, Bengal, BJP, Books, Calcutta, Citizen, Communalism, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dilemma, expression, Faces, fanaticism, Fathva, Fathwa, Fatva, Fatwa, Females, Freedom, Fundamentalists, Govt, Gujarat, Hussain, Hussein, Immigrants, India, Islam, Kolkata, Lajja, Left, Life, Literature, MF Hussain, minority, Modi, Muslim, Narendra Modi, Nasreen, Nasrin, Outcast, people, Refugee, RSS, Rushdie, Salman, Secular, Security, Sensation, She, Taslima, Thoughts, UPA, Voices, WB, West Bengal, Women | Leave a Comment »

‘Coimbatore Technology Park & SEZ will affect Agricultural lands’ – J Jayalalitha

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் போராட்டம்: ஜெ. எச்சரிக்கை

சென்னை, ஜன. 12: விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தினால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திலும் பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த தீவிரம் காட்டியதும் பாதிக்கப்படப் போகும் மக்களுக்கு ஆதரவாக நான் துணை நிற்பேன் என்றதும் அந்த முடிவில் இருந்து கருணாநிதி பின் வாங்கினார்.

இப்போது கோவை அருகே ஒரு துணை நகரத்தை உருவாக்கப் போகிறேன் என்று வெள்ளலூர் மற்றும் செட்டிப்பாளையம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி அந்த இடத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் துணை நகரம் அமைக்கப் போவதாக கருணாநிதி கூறுவது யதேச்சதிகாரமானது.

பயன்பாட்டில் உள்ள இந்த விவசாய நிலங்களையும் தோட்டங்களையும் அரசு கையகப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் தங்களது உயிரே போனாலும் இந்தப் பகுதியை விட்டுத்தர மாட்டோம் என்று அப் பகுதி மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிடச் சென்றால் அவர் மக்கள் முன் வர மறுக்கிறார். ஆத்திரம் கொண்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மைனாரிட்டி திமுக ஆட்சி வந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அபாயகரமானது. தொழில்நுட்பப் பூங்கா என்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும் உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கட்டாயப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

நிலம் கையகப்படுத்தும் முயற்சி நீடித்தால் மக்களின் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி எப்போதும் விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ள விளை நிலங்களைப் பிற காரணங்களுக்காகக் கையகப்படுத்தும் திட்டத்தை எந்த நிலையிலும் மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

============================================

வர்த்தக நோக்கங்களுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி, மார்ச் 12: சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்தும்போது, அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொங்கன் ரயில்வேயில் ரோஹா-மங்களூர் இடையே அகல ரயில்பாதைகளை அமைப்பதற்காக 11 ஆயிரத்து 875 சதுர மீட்டர் நிலம் கடந்த 1994-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக சதுர மீட்டருக்கு ரூ.4 வழங்குவது என மாநில அரசு நிர்ணயித்தது. இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சதுர மீட்டருக்கு ரூ.192 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், இத் தொகையை ரூ.38 என குறைத்தது.

இதற்கு எதிராக, நிலத்தின் உரிமையாளர் நெல்சன் ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த ஏ.ஆர்.லட்சுமணன், அல்தாமஸ் கபீர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பு: உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தொகையைக் குறைக்கும்போது பொத்தாம்பொதுவாக முடிவுசெய்துள்ளதாக கருதுகிறோம். சட்டப்படி இது ஏற்கக்கூடியது அல்ல.

முறையீடு செய்தவர்களுக்கு, நிவாரணம், அதற்கான வட்டி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருக்கும் மரங்களுக்காக ரூ.59,192 அளிக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.250 வீதம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் மூலம், வர்த்தக நோக்கங்களுக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உயரிய அளவில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், நிலத்தை கையகப்படுத்தும்போது அதற்கான காரணத்துடன், அப்போதைய மார்க்கெட் மதிப்பு, நிலம் அமைந்துள்ள இடம், நிலத்தின் உரிமையாளர் அடையும் இழப்பு உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

======================================================

கையகப்படுத்திய நிலம் அரசின் சொத்து ஆகும்: சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி, மார்ச்.19-

ஒரு நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசின் தனிப்பட்ட சொத்து ஆகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1978-ம் ஆண்டு சென்னையை அடுத்த பாடியில் 43 பேரிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தியது.

அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் 21 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அடுக்குமாடி திட்டம் வரவில்லை.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 43 பேரும் தமிழக அரசிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். அதில் கையகப்படுத்திய நிலங்களை தங்களுக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும்படி கோரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாங்கம் இந்த மனுக்களை நிராகரித்து விட்டது.

உடனே 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் கருத்தை கேட்காமல், பொது நோக்கத்துடன் கையகப்படுத்திய நிலங்களை மனுதாரர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும் இந்த உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் தாக்கல் செய்த 2 அப்பீல் மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எங்கள் கருத்தை சொல்ல சென்னை ஐகோர்ட்டு வாய்ப்பு தரவில்லை. குறிப்பிட்ட வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்சு நேற்று விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகளின் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், அரசு ஒரு நிலத்தை கையகப்படுத்தி விட்டால், பிறகு அது அரசாங்கத்தின் தனிப்பட்ட சொத்தாகி விடும். அதன்பிறகு நிலத்தை கையகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறாவிட்டாலும், அந்த நிலத்தை மார்க்கெட் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் அரசு வழங்கலாம்.

இவ்வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்யும் முன், அதற்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருக்க வேண்டும். இதுதவிர மறு ஆய்வு மூலம் தன்னுடைய தவறை சரி செய்து கொள்ள டிவிஷன் பெஞ்சுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லை.

குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிலம் மிகவும் அவசியமானது. அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்று வீட்டு வசதி வாரியம் கூறியதை ஐகோர்ட்டு கவனத்தில் கொள்ள தவறி விட்டது. இதன்மூலம் இந்த வழக்கின் விசாரணையில் ஐகோர்ட்டு தவறு செய்து உள்ளது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

———————————————————————————————–

தேவை புதிய விமானநிலையம்

Dinamani op-ed

July 14, 2007

விமானக் கட்டணக் குறைப்பு, அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்கள், பெருகி வரும் விமானப் போக்குவரத்து என்று ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா சமீபகாலங்களில் காண நேரிட்டு வருகிறது. சாதாரண மனிதர்கள்கூட விமானத்தில் பறக்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

ஒரு கோடியே இருபத்தெட்டு லட்சம் பயணிகள் மட்டுமே 2003-ல் விமானப்பயணம் மேற்கொண்ட நிலைமை மாறி, சுமார் இரண்டரைக் கோடி பேர் விமானப் பயணம் செய்யும் நிலைமை 2006-ல் ஏற்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஏறத்தாழ 20 சதவிகிதம் அதிகரிப்பு. மாணவர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் என்று விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வரும்போக்கு இந்தியா முழுவதும் காணப்படுகிறது.

அதிகரித்திருக்கும் விமான நிறுவனங்களில் விமானங்களுக்கு இடவசதி செய்து தரவும், கூடுதலான பயணிகளின் தேவைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு விமான நிலையங்களின் வசதிகளைப் பெருக்கவும் அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், ஏமாற்றம்தான் அதிகரிக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப விமானநிலைய விரிவாக்கம் ஈடுகொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

சிறு சிறு நகரங்களில்கூட விமானநிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. பூணே, கோவா போன்ற சிறு நகரங்களில் விமானநிலையம் அமைப்பதைப் பற்றி அந்தந்த மாநில அரசுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ராணுவ விமானநிலையங்களின் மூலமாக விமான சேவை நடைபெறுகிறது என்றாலும், பொதுமக்களின் தேவைக்காகப் புதிய விமானநிலையம் தேவை என்று கோரிக்கைகள் எழுகின்றன.

இந்திய விமானநிலைய ஆணையம் (Airports Authority of India) இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. பெருகிவரும் தேவைக்கு எப்படி ஈடுகொடுப்பது என்று விமானப் போக்குவரத்து அமைச்சகமும், இந்திய விமானநிலைய ஆணையமும் மூளையைக் கசக்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை. அரசின் திட்டம் செயல்படுமேயானால், இந்திய விமானநிலைய ஆணையமும் தனியார் விமானநிலையங்களுமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் விமானநிலையங்களை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் சுமார் 36,000 கோடி ரூபாய் செலவிட இருக்கின்றன.

நிலைமை இப்படி இருக்கையில், தமிழகத்தைப் பொருத்தவரை, விமான நிலையங்கள் அமைக்க இன்னமும் இடங்கள் கையகப்படுத்தியாகவில்லை. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவண்ணம், அதேநேரத்தில் சென்னையிலிருந்து அதிக தூரத்தில் அமையாமல் விமானநிலையத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு தாமதம் ஏன் ஏற்பட வேண்டும் என்று புரியவில்லை.

நாம் முந்திக் கொள்ளாவிட்டால், விமானநிலைய வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மற்ற மாநிலங்களுக்குப் போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் புதிய விமான நிலையம் நிறுவப்படுவது மட்டுமல்லாமல், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள விமானநிலையங்களைப் புதுப்பித்து அதிகரித்துவரும் விமானப் போக்குவரத்தை எதிர்நோக்கும் அளவுக்கு நவீனப்படுத்தியாக வேண்டும்.

பொதுமக்களும், அப்பாவி விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில், புதிய விமான நிலையம் அமைக்கும் பணி விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத விமானநிலைய விரிவாக்கப்பணி அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி – எல்லா கட்சியினரையும் அழைத்துப் பேசி, விரைவிலேயே புதிய விமானநிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குவதுதான்!

——————————————————————————————————————————–

விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: மணப்பாக்கம், தரப்பாக்கம் மக்கள் நிலை என்ன?

சென்னை, ஜூலை 22: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் தொடங்கி உள்ளனர்.

இந்த கிராமங்களில புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்களுக்கான இழப்பீடு மற்றும் மாற்று இடம் வழங்குவது குறித்து அரசு தெளிவாக அறிவிக்காதது இந்த பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், தரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 1069 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 2005 ஏப்ரலில் அறிவித்தபடி மணப்பாக்கம், தரப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விமான நிலைய விரிவாக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இங்கு புதிய விமான ஓடுதளம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

குழப்பம்:

நிலம் கையகப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அரசு நிர்வாகம், இவர்களுக்கான மாற்று இடம் குறித்து இதுவரை அறிவிக்கவில்லை.

2005 ஏப்ரலில் அறிவித்ததுக்கு மாறாக 2005 டிசம்பரில் வெளியிடப்பட்ட அரசாணையை காரணமாகக் காட்டி மணப்பாக்கம், தரப்பாக்கத்தில் பெருமளவு நில விற்பனை நடந்துள்ளது.

இவ்வாறு கிடைத்த குறைந்த நேரத்தை பயன்படுத்தி இங்கு விமான நிலையம் வராது என்று கூறி புதிய குடியிருப்புகளை 2 பெரிய நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

இவ்வாறு இங்கு விமான நிலையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தும் குடியிருப்புகளை விற்பனை செய்தவர்கள் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

இங்கு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) அனுமதி அளித்தது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நிவாரணம் எப்போது?

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1991-ல் கவுல்பஜார் பகுதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இவர்களுக்கான இழப்பீடு நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை இன்னமும் முடிவடையாத நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய முறையில் இழப்பீடு கிடைக்குமா என்பதே இந்த மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

———————————————————————————————————————–
சென்னை விமான நிலைய விரிவாக்க பணி: ஜனவரியில் தொடக்கம்

சென்னை, செப். 3:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று இந்திய விமானத் துறை செயலர் கே.என். ஸ்ரீவாத்ஸவா தெரிவித்தார்.

ரூ. 2,700 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு தொடங்கும். விமான ஓடுபாதை (ரன்வே) மற்றும் டாக்ஸி வே மற்றும் ஒருங்கிணைந்த விமான நிலைய கட்டடம் ஆகியன புதிதாக கட்டப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு வரையில் பெருகி வரும் விமானப் பயணிகள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களைக் கையாளும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

இத்திட்டப் பணிகள் 2010-ம் ஆண்டு முடிவடையும். புதிதாக அமையும் விமான ஓடுபாதை ரூ. 1,700 கோடியில் அமைக்கப்படும். விமான நிலைய கட்டடங்கள் ரூ. 1,000 கோடியில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இரண்டாவது விமான நிலையம் (கிரீன்ஃபீல்ட் ஏர்போர்ட்) அமைப்பது குறித்த அனைத்து பூர்வாங்க பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் குறித்த விவரம் ஒரு மாதத்திற்கு முன்பே காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் புதிய விமான நிலையம் அமையும் என்றார் ஸ்ரீவாத்ஸவா.

Posted in acquisition, ADMK, Agriculture, AIADMK, Airport, Asset, Coimbatore, Commerce, Compensation, DMK, encroachment, Farmer, Farming, J Jayalalitha, Kongu Nadu, Kovai, Land, Loss, M Karunanidhi, Mangalore, Market, Pammal, PMK, Polichaloor, Polichalur, Pozhichaloor, Pozhichalur, Prices, Property, Protest, Railways, Refugee, Satellite City, SEZ, Technology Park | 2 Comments »

ULFA attacks force migrant labourers to flee Assam – Toll reaches 68

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

உல்ஃபா கொலைவெறித் தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்: பிகார் மாநில மக்கள்

குவாஹாட்டி, ஜன. 9: அசாமில் குடியிருந்துவரும் பிற மாநில மக்கள் மீது உல்ஃபா (ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதை அடுத்து பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் அசாமை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

“”எங்கள் மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அசாமை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டோம்” என்று கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பிகாரைச் சேர்ந்த மக்கள் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறினர்.

மேல் அசாமில் உள்ள திப்ரூகர், தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்து உல்ஃபா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் செங்கல்சூளையில் பணியாற்றும் பிகாரிகள், பால் வியாபாரம் செய்துவரும் அப்பாவிகள் உள்ளிட்ட 64 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையில் மத்தியக் குழுவினர் அசாம் வந்தனர். முதல்வர் தருண் கோகோய், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் வாழும் இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே மீண்டும் உல்ஃபா பயங்கரவாதிகள் திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசித்துவந்த 17 பிகாரிகளைக் கொன்று குவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் உறுதி அளித்த பிறகும் உல்ஃபாவின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்காததால் தின்சுகியா, திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பிகாரிகள் வீடு வாசல்களைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலத்தை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் சாரி சாரியாக ரயில் நிலையங்களை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அசாமில் செங்கல்சூளை வேலை, பால் விற்பனை, சிறு சிறு கூலிவேலைகள் போன்றவற்றைச் செய்துவந்தவர்கள் அவர்கள்.

“”தின்சுகியா மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் லாங்ஸ்வால் கிராமத்துக்குள் இரவில் புகுந்த முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் எங்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்ற சம்பவம் எனது நினைவில் வந்து அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், உறக்கம்கூட வரவில்லை” என்று அச்சத்துடன் கூறினாள் 12 வயதுச் சிறுமி ராதா.

“”எங்களது பாதுகாப்பு குறித்து எங்கள் சொந்த ஊரில் உள்ள முதியோர் கவலை அடைந்துள்ளனர். அசாமிலிருந்து பிகாருக்குத் திரும்பி வந்துவிடுமாறு அவர்கள் கூறினர்; அதனால்தான் புறப்பட்டுவிட்டோம்” என்று குவாஹாட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரி யாதவ் என்பவர் கூறினார். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் அச்சத்தில் அசாமைவிட்டு வெளியேறவில்லை என்று மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Posted in Assam, Bihar, Borali Bari, Chokolia, CM, Dhinsukia, Dibrugar, Dibrugarh, Dimow, Displacement, Mahmara, migrant labourers, minority, New Jalpaiguri, non-Assamese, Refugee, Shivsagar, Sri Prakash Jaiswal, Terrorism, Tharun Gogoi, Tinsukia, ULFA, United Liberation Front of Asom, workers | 1 Comment »