Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rama’ Category

Jeyaraj Fernandopulle to take the place of Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama as interim in-charge of External Affairs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம்

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் வெளிநாட்டமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளைய தினமே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பவிருப்பதாகத் தெரியவருகிறது.

ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானிலிருந்து திரும்பும் வரையில் தன்னை தற்காலிகமாக வெளியுறவு அமைச்சராக இருக்கச்சொல்லி ஜனாதிபதி பணித்ததால் தான் இன்று இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சரும் துணையமைச்சரும் நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் சில முக்கியப் பணிகளுக்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் தான் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும் அதன் பின்னர் கனடாவுக்கான தூதரை இன்று தான் நியமித்ததாகவும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டபோது ஜெயராஜ் ஃபெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாடு திரும்பிய பின்னர் போகல்லகம வெளியுறவு அமைச்சராகத் தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபுடன் அமைச்சர் போகல்லகம

இதேவேளை, பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அங்கு ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப், பிரதமர் மற்றும் அரச உயர்பிரதிநிதிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார்.

இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைபாட்டிற்கும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜெனரல் முஷாரஃப், இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடந்தும் தனது ஆதரவினை வழங்கிவருமென்று உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.


சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார்

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், “துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது” என்றார்.

எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.

இலங்கைத் தாக்குதலில் 18 பேர் பலி

இலங்கை மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ள எனுமிடத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற பாரிய பஸ் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 50ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனுராதபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த பஸ் வண்டி தம்புள்ளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அதில் குண்டு வெடித்தது

கொல்லப்பட்டுள்ளவர்களில் 14 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தம்புள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். சுதர்ஷன் அரம்பேகெதர அவர்கள் காயப்பட்டவர்கள் மொத்தம் 93 பேர் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார்.

பஸ்ஸினுள் வைக்கப்பட்ட இந்தக் குண்டு தூர இயக்கியால் வெடிக்க வைக்கப்பட்டது என்ற பொலிஸ் விசாரணையின் ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய மாகாணத்துக்கான உயர் போலீஸ் அதிகாரியான கிங்ஸ்லி எக்கநாயக்க அவர்கள் இந்தக் குண்டு மாத்தளையில் பஸ்சுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்புள்ளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 பிப்ரவரி, 2008

கொழும்பு இரயில் நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் தலைநகர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினுள் இடம்பெற்ற பெண் தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

கொழும்பு நகரின் இதயப்பகுதியில், மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஞாயிறு பிற்பகல் மீரிகம பிரதேசத்திலிருந்து வந்த இரயில் வண்டியொன்று மூன்றாவது மேடையில் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக்குண்டுதாரியொருவரே இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பினை நடத்தியிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவல் வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரியொருவர், இந்தக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சுமார் 100 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் சுமார் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இரயில் நிலையத்தில் தற்போது மேலதிக துருப்பினர் குவிக்கப்பட்டு, விசேட தேடுதல் மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

திங்கட்கிழமையன்று, இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாட்டின் சகல பாகங்களிலும் குறிப்பாகத் தலைநகர் கொழும்பையும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஞாயிறன்று இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணிகள் போக்குவரத்திற்கு தடை

வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்
வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன.

வவுனியாவில் இருந்து மதவாச்சி மற்றும் அனுராதபுரம் ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியாகிய ஏ9 வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக, வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்குப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் போக்குவரத்துக்கள் அனுராதரபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று காலை தம்புள்ள நகர பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்தே இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலதிக விபரங்களைக் கேட்கலாம்.


இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்: மக்கள் கருத்து

இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்
இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்

இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டு காலமாகின்றது என்றாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு உடன் எட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாக முடியும் என்று திருகோணமலைவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது உரிய கல்வித் தரத்தினை இன்னும் எட்டவில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய போர்ச் சூழலின் விளைவாக இந்த மாகாணத்தில் 32 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கிழக்கு மாகாண கல்வித் தரத்தை முன்னேற்ற முயன்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளை இயன்றவரை முன்னெடுத்துச் வருவதாகவும், பின் தங்கிய கிராமங்களிலும் இத்தகைய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றளவும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதுடன் அவர்கள் விரும்பிய தொழிலையும் மேற்கொள்ளும் நிலைதான் உண்மையான சுதந்திரம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமது ரஜீஸ் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 பிப்ரவரி, 2008

அனுராதபுரம் மாவட்டத்தில் பேருந்து மீது கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்; 13 பேர் பலி

காயமடைந்தவர்களுக்கு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வெலிஓயா பகுதியில் எத்தாவெட்டுணுவௌ என்னுமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் அரசு பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 5 இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பராக்கிரமபுரவிலிருந்து ஜானகபுர என்னுமிடத்தை நோக்கிச் சென்ற பேருந்து வண்டி மீது கொப்பேகடுவ சந்திக்கு அருகில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காயமடைந்தவர்கள் பதவியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற 3 ஆவது பெரிய குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு குற்றம்சுமத்தியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலிகளுக்கு எதிரான போரை வென்று வருகிறோம்: வைரவிழா சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரை

முப்படை தளபதிகளுடன் இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது அரசு வெற்றிபெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் நாட்டின் 60 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளின்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசாரின் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் கண்கவர் இராணுவ அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

இராணுவ அணிவகுப்பு
இராணுவ அணிவகுப்பு

இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டுக்காகப் போராடி உயிர்நீர்த்த சகலரையும் நினைவு கூறும்வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியின் பின்னர், கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபரீதியாக ஏற்றிவைத்தார்.

பின்னர் இராணுவத்தினரின் பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இலங்கை கொடிய பயங்கரவாதத்தை முறியடிப்பது மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற இருபெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது என்றும், இந்தச் சவால்களை துணிவாக எதிர்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல தானும் தனது அரசும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சுதந்திர தினம்

வவுனியாவில் நடந்த சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச செயலகங்கள், பொலிஸ் மற்றம் இராணுவ தளங்களில் தேசிய கொடியேற்றலுடன் சுதந்திர தின வைபவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தினத்தையொட்டி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா அரச செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அரச வைபவத்தில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சமூக முக்கியஸ்தர்களோ பொதுமக்களோ கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் சி.சண்முகம் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி

தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


அறுபது வருடகால சுதந்திரத்தின் பின் இலங்கை: பெட்டகம்

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் தெற்காசியாவிலேயே உயர்ந்த அளவு என்று சொல்லக்கூடிய சுமார் 90 வீதமான படித்த ஜனத்தொகையையும், பல்வேறு இயற்கைவளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கை இன்னமும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது.

இது குறித்துக் பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் எமது கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Affairs, Bhaila, Bogollagama, defence, Defense, Deputy, Eelam, Eezham, External, External Affairs, Fernandopulle, Foreign, Hussein, Hussein Bhaila, interim, Jeyaraj, LTTE, Minister, Navy, Ram, Rama, Raman, Ramar, Rohitha, Sea, Sethu, Setu, Sri lanka, Srilanka | Leave a Comment »

TR Baalu, Ram Sethu Project and Subramaniam Swamy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007

டி.ஆர். பாலுவின் மகன் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்: சுப்பிரமணியன் சுவாமி திடீர் புகார்

சென்னை, டிச. 6: சேது சமுத்திரத் திட்டத்தில் மண் அள்ளும் பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகனால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படும்.

இந்த திட்டத்தில் கடலில் மண் எடுத்து ஆழப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் டி.ஆர்.பி. செல்வம் & கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சொந்தமானது. எனவே, தனது மகனின் நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதற்காக அரசின் ரூ. 2,500 கோடியை வீணாக்க அனுமதிக்க முடியாது.

சேது திட்டம் கைவிடப்பட வேண்டும் என மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு 1999-ல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால், 2005-ல் இதே அமைச்சகம் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த கருத்து மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை, நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இதேபோல 2002-ல் ராமர் பாலம் குறித்து மத்திய அரசின் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து பொய்யான விவரங்களை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்திருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சட்டம் ஒழுங்கு: தமிழகத்தில் கூலிப்படைகள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த பிரச்னையில் மத்திய அரசு இனியும் மெüனமாக இருக்காமல் விரைந்து செயல்பட வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

சேது சமுத்திர திட்டத்தினால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து இந்தியக் கடலோர காவல்படை ஆய்வு.

பாக் ஜலசந்தி
இந்தியா இலங்கையிடையேயான பாக் ஜலசந்தி

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது ஏற்படும்
பாதுகாப்பு ஆபத்து தொடர்பான விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர். எஃப். கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத் தகவலை வெளியிட்டார்.

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் வருமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்,

“பெரிய அளவில் இந்தத் திட்டம் உருவாகி வருவது உங்களுக்குத் தெரியும். இது, கடல்சார் பிரச்சினைகளைக் கொண்டதால், கடற்படை மற்றும் கடல்சார் அமைப்புக்களின் கருத்துக்களை அரசு கேட்டது. திட்டம் செயல்படுத்தப்படும்போது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கடலோரப் பகுதியில் தொடர்ந்து கப்பல்கள் செல்லும்போது, அங்கு ஏதாவது நடக்கலாம். அதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும். இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இதுபற்றி ஆய்வு செய்து வருகிறோம்” என்றார் வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்ட்ராக்டர்.

சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைக்கு வரும். பனாமா, மலாக்கா மற்றும் சூயஸ் கால்வாய்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்று கான்ட்ராக்டர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையை அடுத்து, இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலையை கவனத்தில் கொண்டிருப்பதாகவும் இந்தியக் கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் கான்ட்ராக்டர் தெரிவித்துள்ளார்.

Posted in Adams Bridge, Allegations, Allege, Baalu, Balu, Biz, Bribery, Bribes, Bridge, Business, Company, Corrupt, Corruption, Defamation, Defame, DMK, Economy, Environment, Finance, God, Hindu, Hinduism, Hindutva, kickbacks, Law, Lawsuit, Money, Nature, nexus, Ocean, Order, Pollution, Project, Ram, Ram Sethu, Rama, Raman, Ramar, Religion, Saami, Sami, Sea, Selvam, Selvan, Sethu, Setu, Shipping, Ships, Subramaniam, Subramaniam Swamy, Swami, Swamy, TR Baalu, TR Balu, Transportation, TRB, TRB Selvam | Leave a Comment »

Happy Navarathri: Dussehra Celebrations – Golu Special

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

Madhurai Meenakshi Golu Hinduism Navarathri Utsavar Decoration Raja Rajeswari
மங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
சென்னை, அக்.11-

“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

புண்ணியம் தரும் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.

நவராத்திரி

புரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.

சக்தி வழிபாடு

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.

இதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மைசூர் தசரா

வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுவாசினி, கன்யா பூஜை

நவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.

இதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.

எத்தனை படிக்கட்டுகள்

நவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.

இன்று கொலு வைக்க சிறந்த நாள்

இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.

கொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.

என்னென்ன பிரசாதம்?

நவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.

ஆயுத பூஜை

நவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விஜயதசமி

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.

விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.

இவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.

———————————————————————————————————————————

நவராத்திரி இரண்டாம் நாள்
வாராஹி :

விஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.

நைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்

———————————————————————————————————————————

நவராத்திரி மூன்றாம் நாள்

இந்திராணி :

பராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.

இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.

நைவேத்யம் : வெண்பொங்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்
———————————————————————————————————————————
———————————————————————————————————————————

Posted in Celebrations, Ceremony, Culture, Dolls, Durga, Dussehra, Dussera, Festival, Functions, Golu, greetings, Guide, Hindu, Hinduism, India, Lakshmi, Laxmi, Legends, Mahalakshmi, Mahalaxmi, Myth, Naragasura, Naragasuran, Narakasura, Narakasuran, Navarathri, Navaratri, Navrathri, Navratri, Pig, Pooja, Puja, Ram, Rama, Ramlila, Ravana, Ravanan, Religion, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Sita, Sitha, Steps, Story, Tamil Nadu, TamilNadu, Tips, TN, Varaahi, Varahi, Vijayadasami, Vijayadashami, Vijayadhasami, Vijayadhashami, Vijayathasami, Vijayathashami, Winter | Leave a Comment »

‘The Art Of Living’ Sri Sri Ravi Shankar wants Ramar Temple in Ayodhya’s disputed land

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஜபல்பூர்(ம.பி), பிப். 14: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும் என “வாழும் கலை’ நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:

அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும்.

இது குறித்து மதத் தலைவர்களிடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் அகற்றப்பட வேண்டும்.

உலக மக்களின் மேம்பாட்டுக்காக பல ஆன்மிகத் தலைவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் பகவான் ரஜனீஷ் மற்றும் மகேஷ் யோகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிருஷ்ணன்-ராதை, ராமர்-சீதை ஆகியோரின் கதைகள் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் காலம் காலமாக இடம்பிடித்துள்ளன. நாம் செய்யும் பணிகள் அனைத்தும் நமது நாட்டின் கலாசாரத்தை மீறாத வகையில் இருக்க வேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நோக்கிச் செல்வதைத் தவிர்த்து நம் நாட்டின் கலாசாரத்தை இந்திய மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.

Posted in Ayodhya, BJP, disputed land, Hinduism, Hindutva, Kashi, Mathur, Mosque, Muslims, Ram jenma boomi, Rama, Ramjenmabhoomi, RSS, Saffron, Sri Sri Ravi Shankar, Temple, Terrorism, The Art Of Living, Varanasi | Leave a Comment »