Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Raayarkaapiklub’ Category

London Diary – Era Murugan: London Fire & Memorial

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

லண்டன் டைரி: நெருப்பின் சின்னம்!

இரா. முருகன்

நினைவுச் சின்னத் தெருவும் மீன் தெருவும் சந்திக்கிற தெருவில் இடத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். எதிரே நீட்டி நிமிர்ந்து நிற்கிறது 1666-ம் வருடத்து லண்டன் தீவிபத்தின் நினைவாக எழுப்பப்பட்ட கோபுரம். அறுபத்தொன்று மீட்டர் உயரம். அருகே, துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், கோபுரத்திலிருந்து அதே அறுபத்தொன்று மீட்டர் தொலைவில் தீ தொடங்கிய இடமான புட்டுச்சந்து ரொட்டிக்கடை இருந்த இடம் சிமென்ட் கோபுரத்தின் உச்சியில் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. நிஜ நெருப்பு இல்லை. கோபுரக் கலசத்தில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சிற்பம்.

“”மேலே போகமுடியுமா?” வாசலில் காவலரை விசாரிக்கிறேன். “”ரெண்டு பவுண்ட் டிக்கெட் எடுத்து, முன்னூத்துப் பதினோரு படி ஏறினா, உங்க மாமா பேரு பாப்” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார் அவர். அத்தனை படி ஏறி மேலே போனால் என் மாமா பெயர் ஏன் திடீர் என்று மாறவேண்டும் என்று குழப்பத்தோடு அவரைப் பார்க்கிறேன். “”Bob’s your uncle” என்ற பிரிட்டீஷ் சொலவடைக்கு, “அம்புட்டுத்தான், ரொம்ப ஈஸி’ என்ற அர்த்தம் என்று அப்புறம்தான் நினைவு வருகிறது.

மூச்சு வாங்க, அந்தக் குறுகிய படிகளில் ஏற ஆரம்பிக்கிறேன். மனம் இன்னும் பற்றி எரிந்துகொண்டிருக்கும் லண்டன் மாநகர நெருப்பிலேயே பிடிவாதமாகப் படிந்து கிடக்கிறது. நான்கு நாள் தொடர்ந்து எரிந்த பெருந்தீ அது.

பிரெஞ்சுக்காரர்கள்தான் தீவைத்ததாக வதந்தி பரவ, எதிர்ப்பட்ட பிரெஞ்சுக்காரர்களை எல்லாம் அடித்து உதைத்துச் சிறையில் வைத்தார்கள். கடியாரத் தயாரிப்பாளரான ஒரு பிரெஞ்சுக்காரரைச் சித்தரவதை செய்து அவர்தான் புட்டுச் சந்தில் தீவைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவைத்து, பகிரங்கமாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றினார்கள். அந்த அப்பாவி மனிதர் தீவிபத்து தொடங்கி இரண்டு நாள் கழித்துதான் லண்டன் நகருக்குள் நுழைந்தார் என்ற விஷயம் அப்புறம்தான் தெரியவந்தது.

தீ பிடித்த மூன்றாம்நாள் லண்டன் பங்கு சந்தை, பக்கத்து சீப்சைட் பகுதியில் பெரிய கடைகள் இருந்த அங்காடி. நாடு முழுக்க தபால் போக்குவரத்தை நடத்தும் ஊசி நூல் தெரு தபால் ஆபீஸ் என்று வரிசையாகத் தீக்கிரையாகிக் கொண்டிருந்தன. பிரம்மாண்டமான செயிண்ட் பால் தேவாலயத்திலும் தீ நுழைந்தது. வீடு இழந்து ஓடி வந்த குடிமக்கள் பலரும் எரியும் நெருப்பிலிருந்து காப்பாற்றி எடுத்து வந்த மூட்டை முடிச்சுகளோடு அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். முக்கியமாக, தேவாலயப் பக்கத்துத் தெருக்களில் இருந்த புத்தக விற்பனையாளர்கள் ஸ்டாக்கில் இருந்த புத்தகம் முழுவதையும் மாதா கோவிலுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள். காகிதம், துணி என்று இருந்த இந்தக் குவியலில் தீ பரவி, ஒரு மணி நேரத்தில் கோவிலின் உலோகக் கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. ஜனக்கூட்டம் தேம்ஸ் நதிக்கரைக்கு ஓட, கோவில் கூரையிலிருந்து ஈயம் உருகித் தெருமுழுக்க உலோக ஆறு. தேவாலயத்துக் கருங்கல் பாளங்களும் வெடித்துச் சிதறி நாலு திசையிலும் விழ, உக்கிரமான உஷ்ணத்தோடு நெருப்பு முன்னேறிக் கொண்டிருந்தது.

இந்தக் களேபரத்துக்கு நடுவிலும் ஊசிநூல் தெரு அரசாங்க அச்சகத்தில் மும்முரமாக அச்சுக்கோர்த்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கம் வெளியிடும் வாராந்திர செய்தித்தாளான “லண்டன் கெசட்’ பத்திரிகை அந்த வாரம் அச்சுக்குப் போகவேண்டிய தினம். துரைகள் மற்றும் சீமாட்டிகளின் போக்குவரத்து, வீட்டு விசேஷங்களை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்ல நடத்தப்பட்ட பத்திரிகை லண்டன் கெசட். எந்தத் துரை எந்தச் சீமாட்டியை எப்போது கல்யாணம் செய்துகொள்ளப் போகிறார். கல்யாணமான சீமாட்டிக்குக் குழந்தை பிறந்த விவரம், காலமானார் பட்டியலில் புதிதாகச் சேர்ந்த மேட்டுக்குடிப் பிரமுகர்கள் பற்றிய தகவல் என்று தலைபோகிற செய்திகளைப் போட்டு நிரப்பி, கடைசிப் பக்கத்தில் ஓரமாக “லண்டன் மாநகரத்தில் தீவிபத்து. ஊர் முழுக்க எரிந்து கொண்டிருக்கிறது’ என்று சம்பிரதாயமாக இரண்டு வரி சேர்த்து அச்சடித்து இறக்கி எடுத்துக்கொண்டு பத்திரிகையின் ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் வெளியே ஓடும்போது, பத்திரிகை ஆபீஸ் வாசலில் தீ பரவிக்கொண்டிருந்தது. சுடச்சுட செய்திகளைத் தருவது 1666-லேயே தொடங்கிவிட்டது என்பது நினைவில் வைக்கவேண்டிய சங்கதி…

மாநகரத் தீயணைப்புப்படை தீயணைப்பு முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி அடைய, சார்லஸ் மன்னன் ராணுவத்தை மாநகராட்சிக்கு ஒத்தாசையாக அனுப்புவதாகச் சொன்னபோது நகரப் பிரமுகர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். அரசவை இருந்த வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இருந்த வொய்ட்ஹால் பகுதிகளுக்கும் தீ பரவும் அபாயம். இனியும் தாமதித்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று அதிரடி நடவடிக்கை எடுத்தான் அரசன். ராணுவம் நகருக்குள் நுழைந்து, தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சார்லஸ் மன்னன், “வாய்யா ஜேம்ஸ்’ என்று அவன் சகோதரன் ஜேம்ûஸயும் கூட அழைத்துக்கொண்டு போய் நேரடியாக மேற்பார்வை செய்ய ஆரம்பித்தான். அவன் கட்டளைப்படி, லண்டன் டவரில் ஏகப்பட்ட வெடிமருந்தைக் கொளுத்தித் தீயைத் தீயால் அணைக்க எடுத்த நடவடிக்கை பெருவெற்றியில் முடிந்தது.

பதிமூன்றாயிரம் வீடுகள், எண்பது தேவாலயங்கள், கடைவீதிகள், அரசாங்க அலுவலகங்கள் என்று கிட்டத்தட்ட எண்பது சதவிகிதம் லண்டன் நகரை அழித்துவிட்டுத் தீ அடங்கியபோது வெஸ்ட்மின்ஸ்டர், அரண்மனை இவற்றோடு நகரை ஒட்டி இருந்த கீழ்த்தட்டு மக்களின் இருப்பிடங்கள் மட்டும் மிச்சம் இருந்தன. அடுத்த எட்டு ஆண்டுகளில் அந்த அரசன் குடிமக்களின் ஒத்துழைப்போடு நகரத்தை திரும்ப உருவாக்கினான். பழைய அமைப்பிலேயே தெருக்கள், மாதாகோவில்கள் இவற்றோடு செயிண்ட் பால் தேவாலயமும் திரும்பக் கம்பீரமாக எழுந்து நின்றது. இந்தத் தேவாலயமும் தீவிபத்தை நினைவுகூர எழுப்பிய நினைவுச் சின்னமும் கிறிஸ்டோஃபர் ரென் என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் கட்டப்பட்டவை.

நினைவுச் சின்னத்தின் கடைசிப்படி ஏறிக் கோபுர உச்சிக்குப் போய் மூச்சுமுட்ட நிற்கிறேன். கிழக்கே லண்டன் டவர், டவர் பாலம், நங்கூரம் பாய்ச்சி நிற்கும் எச்.எம்.எஸ் பெஸ்பாஸ்ட் கப்பல் எல்லாம் பொம்மை மாதிரி தெரிகின்றன. மேற்கே செயிண்ட் பால் தேவாலயம் வெயிலில் பிரகாசிக்கிறது. என் பக்கத்தில் பைனாகுலரை வைத்துச் சுற்றிலும் உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்த முதியவர் என்னைப் பார்த்து, “”இந்தியாவா?” என்று கேட்கிறார். பாகிஸ்தான்காரர் அவர். கணிதப் பேராசிரியர். அடுத்த வருடம் ரிடையர் ஆகிச் சொந்த ஊர் லாகூரில் செட்டில் ஆக உத்தேசமாம். “”எப்படி இருக்கு நம்ம பக்கமெல்லாம்?” என்று அந்நியோன்னியத்தோடு கேட்கிறார். சென்னைக்கு வெகு அருகில் லாகூர் இல்லை என்பதை அவருக்கு அன்போடு நினைவூட்டுகிறேன். “”யார் சொன்னது? ஒரு காலத்துலே, அதாவது 1929-ல் லாகூருக்கும் மேட்டுப்பாளையத்துக்கும் நடுவிலே ரயில் ஓடினது தெரியுமா? இப்ப உங்க சென்னைக்கும் தில்லிக்கும் இடையே ஓடுற கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்தான் அது”. பாகிஸ்தானியப் பேராசிரியர் சொல்கிறதை நம்ப முடியாத ஆச்சரியத்தோடு கேட்கிறேன். லாகூரில் இருந்த பிரிட்டீஷ் துரைகள் மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஊட்டிக்குப் போக ஏற்படுத்தியதாம் அந்த ரயில் பாதை.

சென்னையிலிருந்து லாகூருக்கு ரயிலில் போவதாகக் கற்பனை செய்துகொண்டு மெல்லப் படி இறங்குகிறேன் நான்.

Posted in Dinamani, Era Murugan, Era Murukan, Fire, Guide, Ira Murugan, Ira Murukan, Iraa Murugan, Kathir, London Diary, Memorial, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, Tourist, Travelogue, UK | Leave a Comment »

London Diary – London Eye: Eraa Murugan

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

லண்டன் டைரி: “லண்டன் ஐ!’

இரா. முருகன்

தேம்ஸ் நதிக்கரை எம்பாங்க்மெண்ட் படித்துறையில் படகு காத்திருக்கிறது. உள்ளே நுழைந்தபோது, கீழ்த்தட்டில் ஒரு கூட்டம் முந்திய நாள் வெஸ்ட்ஹாம் மைதானத்தில் நடந்த கால்பந்து விளையாட்டைப் பற்றி உரக்க விவாதிக்கும் இரைச்சல். மத்திய வயசு ஆண்கள். எல்லோர் கையிலும் பியர் குவளை. எனக்கு முன்னால் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு கையில் ஜபமாலையோடு நடந்து கொண்டிருந்த கன்னியாஸ்திரிகள் ஒரு வினாடி தயங்கி, கப்பலின் மேல்தட்டுக்குப் படியேறுகிறார்கள். நானும்தான். பெரிய பறவைபோல் இரண்டு தடவை ஒலியெழுப்பிவிட்டுப் படகு நதியில் மெல்ல நகர்கிறது.

கரையில் பிக்பென் கடியாரக் கோபுரத்தைக் கழுத்து வலிக்கப் பார்க்கும் சகபயணிகளைக் கவனிக்கிறேன். ஜெர்மானிய டூரிஸ்ட்டுகள். அவர்கள் மொழியில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வழிகாட்டி. ரொம்பக் கடுமையாகக் காதில் விழுகிற மொழி அது. “”உன்னைக் காதலிக்கிறேன்” என்று காதலியிடம் அன்போடு சொல்வது கூட ஜெர்மன் பாஷையில்,

“”நமூனாவை மூணு காப்பி எடுத்து ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, தாசில்தாரிடம் அட்டஸ்டேஷன் வாங்கி ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்காவிட்டால், அபராதம் செலுத்தவேண்டிவரும்”

என்று அரசாங்க அறிவிப்பைக் கேட்கிறமாதிரி இருக்கும். முன்வரிசை ஜெர்மன் யுவதி காதலன் காதில் ஏதோ சொல்ல அவன் ஆற்றில் குதிப்பதுபோல் போக்குக்காட்டுகிறான். ரெவின்யூ ஸ்டாம்ப் வாங்கிவரச் சொல்லியிருப்பாள்.

கன்னியாஸ்திரீகளின் கைகள் ஜபமாலையை நிதானமாக உருட்டிக் கொண்டிருக்க, நதிக்கரையில் வலதுபுறம் இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடம் கடந்துபோகிறது. பக்கத்தில்தான் அந்தக்கால லண்டன் கார்ப்பரேஷன் என்ற கவுண்டி ஹால் இருந்ததாம். கவுன்சிலர்களின் சத்தம் தாங்காமலோ என்னமோ, அதை இடித்துவிட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பையும், கீழ்த்தளத்தில் மீன் காட்சி சாலையையும் கட்டிவிட்டார்கள். மீன்கள் சத்தம் எழுப்பாமல் வாயைத் திறந்துகொண்டிருக்க, கவுன்சிலர்கள் வேறு இடத்தில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அடுத்து வருவது லண்டன் ஐ. இது “மெட்ராஸ் ஐ’ போல கண் சிவந்து ரெண்டு நாள் காஷுவல் லீவு போட்டுவிட்டு கறுப்புக் கண்ணாடியோடு வீட்டில் உட்கார்ந்து கேபிள் டிவி பார்க்கிற சமாச்சாரமில்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ஆண்டு 2000 பிறந்து, இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கியதைக் கொண்டாட எழுப்பப்பட்டது “லண்டன் ஐ’. பொருட்காட்சி ஜயண்ட் வீலுக்குச் சத்துணவு கொடுத்து இன்னும் முப்பது மடங்கு பெரிதாக்கப்பட்டதுபோல சுழலும் இந்த “லண்டன் கண்’ சக்கரத்தில் ஏறி நின்றால் முழு லண்டனையும் சுற்றுப்புறத்தையும் தெளிவாகப் பார்க்கலாம். எனக்கென்னமோ, இந்தச் சக்கரம் லண்டனின் பாரம்பரியம் மிக்க சரித்திரத்தோடு ஒட்டாமல் தனியாக நிற்பதுபோல் தோன்றுகிறது. யார் கண்டது? இன்னும் இருநூறு வருடத்தில், இதுவும் புராதனப் பெருமையோடு சுழலலாம்.

“”கிளியோபாத்ரா மூக்கு”. ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த ஒரு கன்னியாஸ்திரி சொல்கிறார். உலகப் பேரழகி கிளியோபாத்ராவும் அவளுடைய மூக்கும் திடீரென்று இவருக்கு நினைவுவரக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆச்சரியப்பட்டுப் பார்க்கிறேன். அவர் கரையில் நீட்டி நிமிர்ந்து நிற்கும் ஒரு கருங்கல் தூணை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார். மூவாயிரத்து ஐந்நூறு வருடம் முன்னால் எகிப்தில் உருவாக்கிய இந்த நீளமூக்குத் தூணை, வெறும் இருநூறு வருடம் முன்னால் எகிப்திய மக்கள் இங்கிலாந்துக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். ஈராக் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று அந்தக் காலத்திலேயே பிரிட்டனிடம் சூசகமாகச் சொல்லியிருப்பார்களோ என்னமோ.

சொல்லிவைத்தாற்போல் ஒரே நேரத்தில் கன்னியாஸ்திரிகள் நெஞ்சில் சிலுவை வரைந்துகொள்கிறார்கள். நதிக்கரையை ஒட்டி கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது செயின்ட் பால் தேவாலயம். 1666-ம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பழைய ஆலயம் சேதமடைய, இரண்டாம் சார்லஸ் மன்னன் கட்டுவித்தது. பக்கத்திலேயே ஆங்கில நாடக இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளை அரங்கேற்றிய க்ளோப் தியேட்டர். அதுவும் பழைய வனப்பு சேதமடையாமல் புத்தம் புதியதாக எழுந்து நிற்கிறது. வெகு அருகில் டேட் ஓவிய, சிற்பக் கூடம். நவீனப் படைப்புகளுக்கான அரங்கம் இது. புதுமையில் எனக்கு விருப்பம் உண்டுதான். ஆனாலும் இந்த டேட் காலரியில் ரொம்பவே புதுமையாக சில மாதங்கள் முன்னால் இடம் பெற்ற படைப்பு -அழுக்கான அசல் கழிப்பறைப் பீங்கான் , உபயோகித்த சுவட்டோடு சிறுநீர் கழிக்கும் கோப்பை, தகர டப்பாவில் மனிதக் கழிவு, கூடவே, வாடை எல்லாம் போக, எதிரே ஒரு பெரிய மின்விசிறியின் ஓவியம்.

உலகின் பழைய மதுக்கடையைக் கடந்து படகு முன்னே போய்க்கொண்டிருக்கிறது. நங்கூர மது அரங்கம் என்ற இந்த ஆங்கர் டேவர்னில் நங்கூரமிட்டு சுதி ஏற்றிக்கொண்டுதான் ஷேக்ஸ்பியர் சாகாவரம் பெற்ற நாடகங்களை எழுதியிருக்கிறார். இங்கே கோப்பையும் கையுமாகக் குடியிருந்துதான் இலக்கிய மேதை சாம்யுவெல் ஜான்சன் ஆங்கிலப் பேரகராதியைத் தொகுத்திருக்கிறார். கொஞ்சம் படகை நிறுத்தினால் நானும் இறங்கிப்போய் ஒரு காப்பியம் எழுத முயற்சி செய்யலாம் என்று தோன்றுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் படகு நிற்காமல் விரைகிறது.

டவர் பாலம் பக்கம் பெரிய கப்பல் ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டு நிற்கிறது. எச்.எம்.எஸ். பெல்ஃபாஸ்ட் என்ற போர்க் கப்பல் அது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து கடற்படையில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, ஜெர்மனியை முறியடித்த 1944 ஜூன் மாத இறுதிக்கட்டப் போரில் இந்தக் கப்பலுக்கும் பெரும் பங்கு உண்டு. தற்போது ரிடையராகி தேம்ஸ் நதியில் நங்கூரம் பாய்ச்சி நின்றாலும், இங்கிலாந்து அரசுக்கு இந்தக் கப்பலால் அதிக வருமானமே தவிர ஒரு காசு பென்ஷன் செலவு கிடையாது. கிட்டத்தட்ட ஆயிரம் போர் வீரர்கள் தங்கிப் போரிட்ட கப்பல் தற்போது யுத்தகால அருங்காட்சி சாலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. “இரண்டாம் உலக யுத்தம் முடிந்தது -இங்கிலாந்து வெற்றி’ என்று இன்றைக்குக் காலையில்தான் பத்திரிகையில் படித்த பரபரப்போடு ஒரு பெரிய கூட்டம் கப்பலுக்குள் விரைந்து ஏறிப் போய்க்கொண்டிருப்பது கண்ணில் படுகிறது. “”நெசம்தான்” என்று ஆமோதித்தபடி இன்னொரு கூட்டம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. இந்த வருடம் மட்டும் மூன்று லட்சம் பேர் இப்படிக் காசு கொடுத்து கப்பலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளே ஓட்டலில் சூடாக ஒரு காப்பி குடித்துவிட்டு இறங்கியதாகத் தகவல்.

“”இது கக்கோல்ட் முனை”. ஏதோ உலக ரெக்கார்டை ஏற்படுத்தப் போவதுபோல் தொடர்ந்து பியர் குடித்தபடி கீழ்த்தளத்திலிருந்து மேலே வந்த கூட்டத்திலிருந்து ஒரு குரல். “”சொல்பேச்சு கேட்காத பெண்டாட்டியை வில்லியம் கக்கோல்ட் இங்கேயிருந்துதான் பிடிச்சுத் தள்ளிவிட்டானாம். திரும்பிப் பார்த்தால், பெரிய கும்பல். என் வீட்டுக்காரியையும் தள்ளி விட்டுடுய்யான்னு அவனவன் க்யூவிலே நின்னு கெஞ்சறான். நோ ப்ராப்ளம்னு ஒருத்தருக்கு ஒரு பென்ஸ் காசு கூலி வாங்கிப் போட்டுக்கிட்டு அப்புறம் அவன் முழுநேரம் இதே உத்தியோகம்தான் பார்த்தானாம்”.

“”தனியாளாக ரொம்பக் கஷ்டப்பட்டு உழைச்சிருப்பான் பாவம்”. கையில் பிடித்த பியர் தரையில் சிந்த, சிரிப்புச் சத்தம் உயர்கிறது. இவர்களைப் பிடித்துத் தேம்ஸ் நதியில் தள்ளிவிட்டால் என்ன என்று யோசித்தபடி டவர் பிரிட்ஜ் படித்துறையில் இறங்குகிறேன்.

Posted in Cruise, England, Era Murugan, Era Murukan, Experiences, German Language, Ira Murugan, Ira Murukan, London Diary, Raayar kaapi klub, Raayarkaapiklub, Rayar kapi klub, Rayarkaapiklub, RKK, St Paul Church, Thames, Tour, Tourists, UK | Leave a Comment »

Ira Murukan – Kensington Gardens, Indian Kidnappers, Sangitha Kalanidhy

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

லண்டன் டைரி: லண்டன் இசைவிழா!

இரா. முருகன்

ஒரு பத்து வருடம் முன்னால், நம் ஊரில் பரபரப்பான பகுதியில் ஒரு கிரவுண்ட் இடம் சும்மா கிடந்தால் என்ன நடந்திருக்கும்? சடசடவென்று ஒரு நாலு மாடிக் கட்டடம் உயரும். கேபிள் டிவியின் விளம்பர நச்சரிப்புத் தாங்காமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பந்து மித்திரர்களோடு அங்கே படையெடுப்போம். இருபது சதவிகித வட்டிக்கு பிக்செட் டெபாசிட். மாதம் ரெண்டாயிரம் ரூபாய்க்கு நகைச்சீட்டு என்று ஆரம்பித்துவிட்டு வெள்ளி முலாம் பூசிய வெங்கடாஜலபதி டாலர், காமாட்சி விளக்கு என்று எதையாவது பரிசாகப் பெற்று பெருமையோடு தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருவோம். அப்புறம் மூன்று வருடம் கழித்து பனகல் பார்க் பெஞ்சில் கூட்டம் போட்டு, போட்ட பணத்தில் முப்பத்திரண்டு சதவீதமாவது கிடைக்க என்ன செய்யலாம் என்று ஆலோசிப்போம். ஒரு கிரவுண்ட் இல்லாமல் இருநூற்றெழுபத்தைந்து ஏக்கர் இப்படிச் சும்மா கிடந்திருந்தால்? அந்த மீட்டிங்கை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடத்த வேண்டியிருக்கும் என்பதைத் தவிர வேறே வித்தியாசம் இருந்திருக்காது.

லண்டனில் ஓர் இருநூற்றெழுப்பத்தைந்து ஏக்கர் செல்வச் செழிப்பு மிகுந்த கென்சிங்டன் பகுதியில் இருநூறு வருடத்துக்கு முன்னால் சும்மா கிடந்தது. அப்போது டிவியும் அதில் விளம்பரமும் இல்லாததாலும், பிரிட்டீஷ் அரச வம்சத்துக்கு இலவச காமாட்சி விளக்கு ஆசை இல்லாத காரணத்தாலும், கென்சிங்டனில் அந்தப் பெரிய நிலப்பரப்பை கொப்பும் குழையும் புல்தரையும் பூச்செடியுமாக மாற்றி, கென்சிங்டன் தோட்டம் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். ஒரு காலத்தில் இந்தியாவையும் சேர்த்த சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தை ஆண்ட விக்டோரியா மகாராணி இந்தத் தோட்டத்தை அடுத்த கென்சிங்டன் அரண்மனையில்தான் பிறந்து வளர்ந்ததாக அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

கென்சிங்டன் பூங்காவில் இப்படி ஓர் அறிவிப்புப் பலகை கூட விடாமல் படித்துக்கொண்டு நடந்துகொண்டிருக்கிறேன். ஓர் அரை டஜன் மோட்டா சர்தார்ஜிகள் உற்சாகமாகப் பேசிக்கொண்டு, அவ்வப்போது புல்தரையில் குட்டிக்கரணம் அடித்து எழுந்து நின்று முன்னால் நகர்ந்தபடி இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் ஒரு பெரிய நாயுமாக வந்த வெள்ளைக்காரத் தம்பதி குழந்தைகளை ஓடக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடுகிறது. அவர்கள் சர்தார்ஜிகளையும் என்னையும் பார்க்கிற பார்வையில் நாங்கள் எல்லோரும் பிள்ளை பிடிக்கிறவர்கள் என்ற பலமான சந்தேகம் தெரிகிறது. குழந்தைகள் அடக்கமாக பூங்கா சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட ஆரம்பிக்க கட்டவிழ்த்து விட்ட அவர்களுடைய நாய் மண்ணில் புரண்டுவிட்டு எதிரில் கால்வாய்க்குள் புகுந்து ஒரு நிமிடம் நீந்தி, திரும்ப ஈரத்தோடு மண்ணில் புரள ஓடிவருகிறது. மேலே விழுந்து பிடுங்குவதுபோல் பாய்ந்த அந்த இங்கிலீஷ் நாயின் பரம்பரையை பஞ்சாப் பாஷையில் திட்டியபடி ஒரு சர்தார்ஜி, நாய்க்கார தம்பதியிடம் நல்ல இங்கிலீஷில் புகார் சொல்கிறார். “நீங்கதான் பாத்து நடக்கணும்’ அந்தம்மா சாண்ட்விச்சில் பாதியை விண்டு நாய்க்குக் கொடுத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக் கொள்கிறார்.

கென்சிங்டன் பூங்காவில் இருந்து வெளியே வரும்போது பிரம்மாண்டமாக முன்னால் நிற்கிறது ராயல் ஆல்பர்ட் அரங்கம். இறந்துபோன தன் கணவர் ஆல்பர்ட் இளவரசர் நினைவாக விக்டோரியா மகாராணி கட்டியது. இந்திரா காந்தி சர்க்கார் தில்லியில் கவிழ்ந்து அல்பாயுசாக ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து குஷியாக உள்குத்து நடத்திக் கொண்டிருந்த 1977-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த ராயல் ஆல்பர்ட் ஹாலில் மேற்கத்திய சாஸ்தீரிய சங்கீத நிகழ்ச்சியிலிருந்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட விழா, அரசியல்வாதிகள், அறிவியல் துறை அறிஞர்களின் சொற்பொழிவு என்று எத்தனையோ இந்த நூற்று முப்பது வருடத்தில் நடந்திருக்கிறது. தற்போது வருடா வருடம் பிரிட்டீஷ் ஒலி, ஒளிபரப்பு நிறுவனமான பி.பி.சி கோடைகால இசைவிழாவான ப்ராம் என்ற ப்ரொமனேட் விழா நடத்துகிறது இங்கேதான்.

ப்ரொமனேட் என்றால் நடந்துகொண்டே இசை கேட்கிறது என்று பொருளாம். ஆல்பர்ட் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடக்கமுடியாது. ஆனாலும் அரங்கத்தில் நின்றபடிக்கு இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம். ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் கண்டிப்பாக வழங்கப்படமாட்டாது.

நீண்ட க்யூவில் நின்று அன்றைய ப்ராம் நிகழச்சிக்கான நுழைவுச்சீட்டுக்காகக் காத்திருக்கிறேன். பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இசைக்குழு மேற்கத்திய இசைமேதை மோசர்ட்டின் இருநூற்றைம்பதாவது பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டி முழுக்க மோசர்ட் இசையமைத்த படைப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. நாலைந்து வெள்ளைக்காரர்கள் சுறுசுறுப்பாக பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீதத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்பதை முதன்முதலாக ஆச்சரியத்தோடு பார்க்கிறேன்.

பிளாக்கில் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒயிட்டிலேயே கிடைத்துவிடுகிறது டிக்கெட். ஐந்தே பவுண்ட்தான் செலவு. மூவாயிரம் பேர் நிற்கிற பெரிய அரங்கத்தில் புகுந்து நானும் நின்றபடி மேடையைக் கவனிக்கிறேன். பிபிசி டெலிவிஷன் காமிராக்கள் அவை பக்கம் திரும்பி அழகான வெள்ளைக்காரப் பெண்களைத் தேடிக்கொண்டிருக்க, நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. சாவு நிகழ்ந்தபோது வாசிக்க ஏதுவாக மோசர்ட் எழுதிய மேசானிக் ப்யூனரல் மற்றும் ரெக்யூம் என்ற இரண்டு படைப்புகள் மேடையேற்றப்படும் என்று அறிவிப்பு தொடர்கிறது.

இருபது வயலின், ஏழெட்டு புல்லாங்குழல், டிரம்பெட், வெள்ளைச் சீருடை அணிந்த பத்து பாடகர்கள், அக்கார்டியன், பியானோ என்று மேடை நிறைந்து சோகமயமான இழவு இசையைப் பொழிய இசைக்குழு நடத்துனர் ஆவேசமாகக் கையை இப்படியும் அப்படியும் அசைத்து இன்னும் உற்சாகமோ சோகமோ படுத்துகிறார். என் பக்கத்தில் ரெக்சின் பையைப் காலடியில் வைத்துவிட்டு ஒரு வெள்ளைக்கார முதியவர் இசைக்குறிப்பு எழுதிய புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு இசைக்குழு கூடவே மெல்ல வாய்க்குள் பாடியபடி சங்கீதத்தில் முழ்கியிருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, “”தனிப்பாடல் பாடகிகள்லே ரெண்டு பேர் ஸ்ருதி சேராமக் கஷ்டப்படுத்திட்டாங்க. பின்வரிசை ரொம்ப சுமார்தான்” என்றபடி பக்கத்தில் நடந்தவரிடம் சொன்னபடி வந்தவர் கூறியது அட்சரம் பிசகாமல் அடுத்த நாள் கார்டியன் பத்திரிகை இசை விமர்சனத்தில் வந்திருந்தது.

“”போன மாதம் ப்ராம் நிகழ்ச்சிக்கு லண்டனில் கச்சேரி செய்ய வந்திருந்த கர்னாடக சங்கீத வித்துவான் மணக்கால் ரங்கராஜனைக் கூட்டிப் போனேன்” என்று நண்பர் லண்டன் பத்மநாப ஐயர் சொல்கிறார். சென்னை சங்கீத சீசனில் சபா எதிலும் தட்டுப்படாத மணக்கால் லண்டனில் அண்மையில் அவை நிறைந்த இரண்டு கச்சேரி நடத்தி இருக்கிறார் என்பதை அறிந்து இன்னொரு தடவை ஆச்சரியப்படுகிறேன்.

அடுத்த ஆண்டு டிசம்பர் சங்கீத விழாவில் மேலும் ஆச்சரியகரமாக, லண்டன் ப்ராம் போல் பிரெஞ்சி இசைக்குழு சென்னை மியூசிக் அகாதமியில் மோசர்ட் இசை நிகழ்ச்சி நடத்தலாம். அல்லது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நித்யஸ்ரீ கச்சேரிக்கு வெள்ளைக்காரர்கள் ப்ளாக்கில் டிக்கெட் விற்கலாம். இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஆச்சரியமாக, அகாதமிக்காரர்கள் மணக்கால் ரங்கராஜனுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்க முடிவெடுக்கலாம்.

Posted in BBC, Era Murugan, Humor, Ira Murukan, Iraa Murugan, Kensington Gardens, London Diary, London Iyer, Mathalarayar, Mozart, music, Orchestra, Padmanabha Iyer, Performance, Raayarkaapiklub, Sangeetha Kalanithi, Sangitha Kalanidhi, Summer, Symphony, Tamil Literature, Travel Notes, UK | 1 Comment »