மகளிர் ஆணையத் தலைவராக ராமாத்தாள் நியமனம்
சென்னை, ஜன. 17: தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவராக கு.ம. ராமாத்தாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பதிவாளரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினருமான கு.ம. ராமாத்தாளை, மகளிர் ஆணையத் தலைவராக நியமிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமிக்கப்பட்டிருந்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்துக்கு நீதித் துறை அல்லது கல்வித் துறையில் பொறுப்பு வகித்தவர்களே தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாக பலர் நினைவூட்டி சுட்டிக் காட்டினர். இதை ஏற்று மகளிர் ஆணையக் குழு மாற்றியமைக்கப்படும் அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
தற்போது புதிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு உறுப்பினர்களாக சட்டப்பேரவை உறுப்பினர்கள்
- பி. கமலாம்பாள் (பாமக),
- கே. காயத்ரிதேவி (காங்),
- ஐஏஎஸ் அதிகாரி குத்சியா காந்தி,
- ஐபிஎஸ் அதிகாரி வி. வனிதா,
- ராணிமேரிக் கல்லூரி முதல்வர் இகுயின் பின்டோ,
- வழக்கறிஞர் சி. சங்கமித்ரா,
- ஆர். ஆலிஸ் மனோகரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலர் சார்ந்த உறுப்பினராக சமூக நலத்துறைச் செயலரும், உறுப்பினர் செயலராக சமூக நலத்துறை இயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு முன்னர் வெளியிட்ட பட்டியலில் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இந்திரகுமாரி மட்டும் மாற்றப்பட்டுள்ளார். அலுவலர் சாரா மற்றும் அலுவலர் சார்ந்த உறுப்பினர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.