Archive for the ‘Publishers’ Category
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்
தஞ்சாவூர்க்கவிராயர்
புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று குழந்தைகளிடம் சொல்லுகிறோம்.
புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்கிறார் ஒரு புதுக்கவிஞர்.
குழந்தைகள் படிக்கிற புத்தகங்களைப் பார்க்கும்போது அவை எங்கே குழந்தைகளைக் கிழித்து விடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன.
குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்கு மேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம். இது தவறு. குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள்.
குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. இன்னும் களங்கப்படாத மனசு அல்லவா குழந்தைகள் மனசு?
குழந்தைகள் பார்வையில் தென்படும் உலகம் குற்றமற்றது. அழகு நிரம்பியது. அதனால்தான் குழந்தை எதைப் பார்த்தாலும் சிரிக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும். “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு; அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி…’ அப்படியே ஒரு குழந்தை எழுதிய மாதிரியே அல்லவா இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழதாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள் மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விட வேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றும் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் மேசைமீது ஒரு காமிக்ஸ் புத்தகம் இருந்தது. “பையனுக்கா?’ என்றேன்.
“எனக்குத்தான்’ என்றார் சிரித்தபடி.
“அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட நான் காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிப்பேன்’ என்றார்.
குழந்தை வளர வளர குழந்தமை தொலைந்து போகிறது. “இன்னும் என்ன குழந்தையா நீ?’ என்று கேட்டு கொஞ்சநஞ்சம் பாக்கியிருக்கும் குழந்தை மனத்தையும் கருகச் செய்து விடுகிறோம்.
குழந்தையின் கேள்விகள் அற்புதமானவை. அவற்றுக்குப் பதில் சொல்லும்போது நாமும் குழந்தையாகி விடுகிறோம்.
புகைவண்டிப் பயணத்தின்போது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தன் குழந்தையை “சும்மா இரு, சும்மா இரு’ என்று அதட்டிக் கொண்டே வந்தார்.
“குழந்தை பாவம். என்ன வேண்டுமாம்?’ என்று கேட்டேன்.
“என்னவோ அசட்டுத்தனமாக தொணதொணக்கிறான். எரிச்சலாக வருகிறது’ என்றார்.
அவனை என் அருகே அழைத்து, “சொல்லு, என்ன வேணும்?’ என்று கேட்டேன்.
“மாமா, ரயில் என்ன சாப்பிடும்?’ என்று கேட்டான்.
இதுவா அசட்டுத்தனமான கேள்வி? அழகான கவிதை அல்லவா இது? ரயிலுக்கு உயிர் உண்டு. அதுவும் மனிதர்களைப் போலவே நகர்கிறது. மூச்சு விடுகிறது. கத்துகிறது என்பதால்தானே இந்தக் கேள்வியை குழந்தை கேட்கிறது?
நாம்தான் குழந்தைகளை உதாசீனப்படுத்துகிறோம். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பெரிய மனிதர்களாகவே நடத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி:
லண்டனில் ஒரு குழந்தைகள் பூங்கா. அங்கே வாத்துகளோடு ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அதன் விரலை ஒரு வாத்து கடித்துவிட்டது. காயம் ஒன்றும் பலமில்லை. பூங்கா நிர்வாகமே குழந்தையின் விரலுக்கு மருந்து போட்டுவிட்டது. அங்கே ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது. அங்கே இருந்த வாத்துகள் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மகாராணியாரின் பெயரில் உள்ள கருணை நிதியிலிருந்து பராமரிக்கப்படுவதாக ஒரு குறிப்பு இருந்தது.
குழந்தை உடனே இங்கிலாந்து மகாராணியாருக்கு ஒரு கடிதம் எழுதியது: “நீங்கள் வளர்க்கிற வாத்து என்னைக் கடித்துவிட்டது. விரலில் காயம்’ என்று எழுதியது.
கடிதம் மகாராணியாரின் பார்வைக்குப் போயிற்று. அவர் உடனே பதில் எழுதினார்:
“குழந்தாய்! உன் கடிதம் கிடைத்தது!
நான் வளர்க்கும் வாத்து உன்னை விரலில் கடித்து விட்டதற்காக வருந்துகிறேன். அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். காயம் ஆறியிருக்கும் என்று நம்புகிறேன்.
உன் பிரிமுள்ள,
விக்டோரியா.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கடிதம் எங்கே போயிருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை அல்லவா?
குழந்தைகளை மதிக்கிற, குழந்தைகளைப் புரிந்துகொள்கிற, குழந்தமையைப் பாதுகாக்கிற பொறுப்புணர்ச்சி சமுதாயம் முழுவதும் உண்டாக வேண்டும். அப்போதுதான் அசலான குழந்தை இலக்கியம் இங்கே சாத்தியப்படும். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் கூட குழந்தை இலக்கியத்தின்பால் அக்கறை காட்டுவதில்லை.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லாத சமூகம் என்பது தண்ணீரில்லாத நாற்றங்காலுக்குச் சமம்.
பள்ளிக்கூடங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக மாற்றும் வேலை அங்கே மும்முரமாக நடக்கிறது. குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன.
குழந்தைகளை நூலகங்களில் பார்க்கவே முடிவதில்லை. வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது. தொலைக்காட்சியும் கணினி விளையாட்டும் குழந்தைகளை கூடத்தை விட்டு வெளியேறாதபடி கட்டிப் போட்டுவிட்டன.
அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான புத்தக அரங்குகளில் கூட்டம் மொய்த்தது. புத்தக வாசிப்புக்காக குழந்தைகள் ஏங்குவதையும், தொலைக்காட்சி தோற்றுப் போய்விட்டதையும் காண முடிந்தது.
தஞ்சாவூரில் அனன்யா பதிப்பக அதிபர் அருள் என்பவரும் இரா. சேதுராமனும் சேர்ந்து ஓசைப்படாமல் ஒரு மாபெரும் குழந்தைகள் கதைக் களஞ்சியத்தை உருவாக்கி வருகிறார்கள்~விழுதுகள் என்ற பெயரில்.
குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது இக் களஞ்சியம் என்பது தான் இதன் சிறப்பு. பாட்டி வடை சுட்ட கதையை ஒரு குழந்தை எப்படிச் சொல்கிறது பாருங்கள்.
“ஒரு ஊரில் காக்கா இருந்தது. அப்போது காக்கா வடை சுட்டது. அந்தக் காக்கா வடை சுட்டு முடித்ததும் காக்காக்கள் பறவைகள் காக்காகிட்ட வந்தது. காக்காவும் பறவையும் சேர்ந்து சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் சேர்ந்து விளையாடின. பிறகு எல்லோரும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்தனர். முகம் கழுவினர். எல்லோரும் சாப்பிட்டன. பறவைகளும் காக்காக்களும் வீட்டுக்குச் சென்றார்கள்.’
இது மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு சிறுமி எழுதிய கதை. மற்றொரு கதையில் கரடியும் யானையும் ஒரே வீட்டில் வசிக்கின்றன. அங்கு விருந்தாளியாக சிங்கம் வருகிறது. ஒரு கதையில் பால் வேண்டும் என்று பூனையிடம் எலி கெஞ்சுகிறது. குழந்தைகளின் மனங்களிலிருந்து புறப்பட்டு வரும் புதிய காற்று அப்பப்பா என்ன ஒரு வாசம். எப்பேர்ப்பட்ட கற்பனை.
உலகம் பூராவும் ஹாரிபாட்டரின் கதைப் புத்தகங்கள் பரபரப்பாக விற்கப்பட்டதன் காரணம் என்ன? குழந்தைகளின் மனசைப் புரிந்துகொண்டு எழுதியதுதான் காரணம்!
தமிழ்நாட்டில் வசதி படைத்த குழந்தைகள் மட்டும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கிப் படித்து மகிழ்ந்தார்கள். “ஏழைக் குழந்தைகள் பாவம் என்ன செய்வார்கள்?’
இப்போதுதானே அவர்களை ஓட்டல்களிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் கல்குவாரிகளிடமிருந்தும் மீட்டிருக்கிறோம்? அவர்களின் கைகளிலிருந்து மேசை துடைக்கும் துணியையும், ஸ்பானரையும், பெட்ரோல் பிடிக்கும் குழாய்களையும் அப்புறப்படுத்தி நல்ல புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.
அழகான ஆச்சரியமான புத்தகங்கள்.
குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்!
(இன்று உலகக் குழந்தைகள் புத்தக தினம்)
Posted in Books, Children, Comics, Entertainment, family, Fiction, Habits, Intelligence, Kids, Knowledge, Library, Listen, Literature, publications, Publishers, Read, Story | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!
அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.
அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…
“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.
அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.
ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.
புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.
நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.
அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.
சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.
இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.
மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.
மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.
பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.
எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.
நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?
நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.
அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.
“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.
விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.
சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.
இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.
Posted in Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008
ராமானுஜரும், முத்துசாமி தீட்சிதரும்
ராமானுஜர் மதப்புரட்சி செய்த மகான். சாதிப் பாகுபாடுகளைத் தாண்டி எல்லோரையும் சமமாகப் பார்த்த சன்னியாசி.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ராமானுஜர் தமிழ் நாடகத்தின் ஆங்கில வடிவத்தை, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை மாணாக்கர் சிலர், பேராசிரியர் ரஜானியின் இயக்கத்தில் நடித்தார்கள். ஆனால் ராமானுஜர் வேடத்தில் நடித்தவர் அம்ருதா கரயில் என்கிற இளம்பெண். குற்றவியல்துறை மாணவி. ஓர் ஆண் கூடவா ராமானுஜர் வேடத்தை ஏற்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ராமானுஜர் வேடமேற்ற பெண் திருப்திகரமாக நடித்தார் என்பது மட்டும் நமக்குப் போதும்.
நாடக வடிவின் நூலைப் பெற்றுக்கொண்ட திருக்காட்டுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், இந்திரா பார்த்தசாரதியின் இருபது வருட நண்பராம். அவர் பேச்சு நவீன இலக்கியவாதியின் உரைபோல இருந்ததே தவிர, அரசியல்வாதியின் “நடை’யாக இருக்கவில்லை.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அவர் அந்தணர் அல்லாதவர் என்பதற்காக மனைவி அவரைத் திண்ணையில் அமரச் செய்து அமுது படைத்ததற்காக, ராமானுஜர் அவளுடன் தன் வாழ்க்கையையே முறித்துக்கொண்டு விடுகிற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.
தனக்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பலரையும் மனம் மாறச் செய்து வெல்ல முடிந்த ராமானுஜரால், மனைவியின் மனத்தை மாற்ற முடிந்திருக்காதா? அவர் அப்படிச் செய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை, நூலை வெளியிட்ட “ஹிந்து’ ஆசிரியர் ரவியும், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் எழுப்பினர். தம் உரையில் இந்திரா பார்த்தசாரதி இதற்கு பதில் ஏதும் தரவில்லை. “நாடகத்தைப் படைத்தேன்’ அத்தோடு என் பணி முடிந்தது என்றார்.
மொழிபெயர்ப்பில், குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகானின் வரலாறு பற்றிச் சொல்லும்போது, ஆங்கிலத்தில் எத்தகைய சொற்-சங்கடங்கள் எழுகின்றன என விவரித்தார் பேராசிரியர் ஸ்ரீமான். இவர் ஆங்கில மற்றும் அயல்நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். (ஆனால் மொழியாக்கம் தமக்குத் திருப்தி அளித்ததாகவே இந்திரா பார்த்தசாரதி அங்கீகரித்துவிட்டார்.)
ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸின் இந்திய படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டிருக்கும் மினி கிருஷ்ணன் உரை “மினி உரை’ என்றால், நூலுக்கு நீண்ட முன்னுரை வழங்கியிருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் சி.டி.இந்திரா, இந்த நூல் வெளிவர, தாம் தில்லி வரை சண்டை போட்டுவிட்டு வந்த சரித்திரத்தை சாங்கோபாங்கமாக “மாக்ஸி உரை’யாக நிகழ்த்தினார். (நமக்குப் பொறுமையைச் சோதித்த பேச்சுதான். ஆனால் அவருடைய ஆதங்கத்தை இந்த இடத்தில் வெளியிடாமல் வேறு எங்கே, எப்போது வெளியிடுவார், பாவம்!)
“நந்தன் கதை’ போலவே “ராமானுஜரு’ம் இந்திரா பார்த்தசாரதியின் மனித சாதியிடையே பிரிவு காணலாகாது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் படைப்பு. தமிழில் இந்த நாடகத்தை விரைவில் மேடையில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கர்நாடக இசையின் சரித்திரத்தில், மூன்று கிறிஸ்துவர்களுக்கு முக்கிய இடம் உண்டு. ஒருவர் ஆபிரகாம் பண்டிதர். இன்னொருவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. மூன்றாமவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்தான் ஏ.எம்.சின்னசாமி முதலியார் என்கிற கத்தோலிக்க கிறிஸ்தவர். “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ என்ற தெலுங்கு நூலை வெளிச்சத்துக்கு கொண்டு வர தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்த அந்நாளைய அரசு ஊழியர். ஆங்கிலேய ஆட்சியில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பணிபுரிந்த இந்த அபூர்வ மனிதரைப் பற்றிய காலை நேரச் சொற்பொழிவு ஒன்றில், இணையற்ற ஆங்கிலப் பேச்சாளர் வி.ஸ்ரீராம் தொகுத்து அளித்த விவரங்கள் இதுவரை யாரும் அறியாதவை.
“சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ நூல் இசை மாணாக்கர்களுக்கு தேவையான ராக லட்சணங்களையும், ஸ்வரங்களையும், கமகங்களையும் அறிமுகப்படுத்தும் நூல். இவருக்குத் துணை நின்றவர் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் பாலுசாமி தீட்சிதரின் மகன் சுப்பராம தீட்சிதர். ஒருசமயத்தில் எட்டயபுர சமஸ்தான வித்துவானாக இருந்தவர். (இவரைக் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கூட ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.)
மின்சாரம் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, நவீன அச்சுக்கோக்கும் எந்திரம் கிடையாது. இத்தனை “கிடையாது’-களுக்கும் இடையே, மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, சென்னையை விட்டுப் புறநகர் போய் வசிக்கும் சூழ்நிலையிலும், சின்னசாமி முதலியார் மனம் தளர்ந்துவிடவில்லை. பென்ஷன் தொகை எல்லாம்கூட நூலுக்காகச் செலவிடுகிறார். கடன் ரூ.28000-த்தைத் தாண்டி விடுகிறது. மனைவியின் நகைகளை எல்லாம் விற்றுவிடுகிறார். ஆனால் அவர் குறிக்கோள் எல்லாம் எப்படியாவது நூல் வெளியாக வேண்டும் என்பதே.
கர்நாடக இசையின் பங்களிப்பில் பங்கு கொண்ட அத்தனை வாக்யேக்காரர்களின் பாடல்களையும் திரட்டி, அவற்றை ஆங்கில இலைக்கலைஞர்களும் பாடும் அல்லது வாசிக்கும் வகையில் ஸ்டாஃப் நொட்டேஷன் செய்து பரப்ப இவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவ்வளவு, அவ்வளவு அல்ல. “”ஜெயதேவர், புரந்தரதாசர், நாராயண தீர்த்தர், அருணாசலக் கவி ஆகியோரின் பாடல்களைவிட, நவீன ஓரியண்டல் இசை என்று எடுத்துக் கொண்டால், தியாகராஜ சுவாமிகளின் பாடல்களுக்குத்தான் முதல் இடம்’ என்று தன் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐரோப்பிய வயலின் இசைக் கலைஞர்களைக் கொண்டு, நொட்டேஷன்-களின்படியே இசைக்கச் செய்து வெற்றி கண்டவர் இவர்.
முத்துசாமி தீட்சிதரின் கிருதிகளை வெளியே கொண்டு வர, சின்னசாமி முதலியார் பட்டபாடு இருக்கிறதே, அது “சங்கீத சம்பிரதாய பிரதர்சினி’ அச்சில் கொண்டு வர அவர் பட்ட பாட்டைப் போலவே உருக்கமானது.
இறுதியில் சுப்பராம தீட்சிதர் பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான மன்னரின் உதவியோடு, அங்கேயே அச்சகம் நிறுவச் செய்து, 1906-ல் சுப்பராம தீட்சிதரே அந்த நூலை வெளியிடும் சமயம், சின்னசாமி முதலியார் காலமாகிவிடுகிறார். ஆனால் அதற்காகப் பாடுபட்ட தன் நண்பரின் நினைவுக்கு அந்த நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் சுப்பராம தீட்சிதர்.
முத்துசாமி தீட்சிதரின் பாடல்களை, அவர் தமது பிரதம சீடர்களான தஞ்சை நால்வர்களுக்கும், தேவதாசிகளுக்கும், நாதஸ்வர வித்துவான்களுக்கும் கற்றுக்கொடுத்தார். அதனால் ராமானுஜர் போலவே, முத்துசாமி தீட்சிதரும் சாதியுணர்வு தாண்டி நின்ற மேதை எனலாம்.
சாருகேசி
Posted in Authors, Books, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Dikshithar, Dinamani, Drama, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, IPaa, Literature, music, Muthusami, Muthusamy, Oxford, publications, Publishers, Ramanujam, Ramanujan, Ramanujar, Reviews, Saarukesi, Sarukesi, Shows, Stage, Tamil, Theater, Theatre, Translations, Works, Writers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007
அக்கரை சந்தை:உலக மொழிகளில் தமிழ் நாவல்கள்!
ஃப்ராங்பர்ட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் கிழக்குப் பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் பத்ரி.
உலகமெங்கும் உள்ள பல் மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கூடும் இடமாக இருக்கிறது இக் கண்காட்சி. ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் இக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இக் கண்காட்சி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பத்ரி.
“”இது புத்தகப் பதிப்பாளர்களுக்கான கண்காட்சி என்பதுதான் சரியாக இருக்கும். புதன் கிழமை ஆரம்பிக்கும் இச் சந்தை ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறது. இதன் முதல் மூன்று நாட்கள் பதிப்பாளர், அச்சிடுவோர், விநியோகஸ்தர் ஆகியோருக்கானது. சனி, ஞாயிறு தினங்களில் பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
புத்தக உரிமை, மொழி பெயர்ப்பு உரிமை, ஒப்பந்தங்கள் சம்பந்தமான வர்த்தக பரிவர்த்தனைகள்தான் இக் கண்காட்சியின் நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு “கெஸ்ட் ஆஃப் ஹானர்’ என்று கெüரவிக்கப்படும். கடந்த ஆண்டு நான் முதல் முறையாகக் கலந்து கொண்ட போது இந்தியாவுக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு இருந்தது கூடுதல் மகிழ்ச்சி. இந்த ஆண்டு செடலோனியா (ஸ்பெயின்) நகருக்கு அந்த கெüரவம் வழங்கப்பட்டது.
ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக சுரா பதிப்பகத்தினர் கலந்து கொண்டு வருவதை அறிந்தேன். மற்ற தமிழ்பதிப்பகங்கள் எதுவும் இதில் ஆர்வம் காட்டாததற்குக் காரணம், இது புத்தக விற்பனைக்கான சந்தையாக இல்லாமல் பதிப்பாளர்களுக்கான ஒரு தளமாக இருக்கலாம். ஒரு முறை இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுத் திரும்புவதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் எந்த விதத்திலும் நம் புத்தகங்கள் விற்பனை அந்த அளவுக்கு நடைபெற வாய்ப்பில்லை. ஆனால் இதனால் வேறு மாதிரியான வர்த்தக விரிவாக்கங்களுக்கு முயற்சி செய்ய முடியும் என்பதுதான் என் கருத்து.
இப்போது நம் தமிழ்ப் புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறோம். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன், நீல.பத்மநாபன், யூமா வாசுகி போன்றோரது 20 நாவல்களை இப்போது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறோம். இவற்றை அக் கண்காட்சியில் இடம் பெற்ற இங்கிலாந்து பதிப்பகத்தார் மூலம் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். “இந்தியன் ரைட்டிங்ஸ்’ என்ற பிரிவின் கீழ் எங்கள் பதிப்பகத்தில் இவற்றை வெளியிடுகிறோம். அதே போல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நம் எழுத்தாளர்களின் இந்த நாவல்களை மற்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவும் முயற்சி செய்கிறோம். இது இக் கண்காட்சியில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட திருப்பம். நாம் இங்கிருந்து போனில் பேசுவதன் மூலம் இதை நிறைவேற்ற முடியாது. நேரில் பேச வேண்டும்; நம் புத்தகங்களின் சாம்பிள்களைக் கொடுக்க வேண்டும். இப் பயணத்தின் மூலம் உலக நூல்களை, இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான முயற்சிகளையும் செய்ய முடியும். முஷாரப்பின் “தி லைன் ஆஃப் ஃபயர்’ நூலை வெளியிட்டது அத்தகைய முயற்சிதான்.
நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா பல முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை இந்திய மொழிகளில் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. ஆயினும் இத்தகைய அமைப்புகளும் இதைச் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை” என்ற வருத்தக் கேள்வியோடு சொன்னார் அவர்.
“”தமிழ்நூல்களுக்கு நூலக ஆணை மட்டுமே பிரதான வரவாக இருக்கும் சூழ்நிலையில் இப்படியான முயற்சிகளில் இறங்குவது எப்படி?” என்றோம்.
“”நூலகங்களில் புத்தகம் வாங்குவது வருமானத்தின் ஒரு பகுதி மட்டுமே. பொது மக்கள்தான் எங்கள் நிலையான வாங்கும் சக்திகள். நாம் பதிப்பிக்கும் நூல்கள் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களும் சென்று சேருவதற்காக 30 மாவட்டங்களிலும் விற்பனைக் கூடங்கள் வைத்திருக்கிறோம். அதுமட்டுமன்றி நூல்விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி பல சிறிய கடைகளிலும் எங்கள் புத்தகங்களை விற்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆயிரம் பிரதிகள் விற்பதற்கே அல்லல் படும் நிலையிருந்தும் சோம வள்ளியப்பனின் “அள்ள அள்ள பணம்’ என்ற நூலை இந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனை செய்திருக்கிறோம். பதிப்பு முறையிலும் விற்பனை விஷயத்திலும் கவனம் செலுத்தினால் புத்தக விற்பனை வெற்றிகரமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்கிறார் நம்பிக்கையுடன்.
தமிழ்மகன்.
Posted in Agents, Annual, audiobooks, Authors, Books, Business, Catalan, Catalonia, Channels, classics, Deals, Deutsch, Deutschland, Distribution, English, EU, Events, Exhibition, exhibitors, Faces, Fair, Fiction, forum, Frankfurt, German, Germany, India, Industry, Interview, Kilakku, Kizakku, Kizhakku, Language, Literary, Literature, Marketing, Media, Meet, Multilingual, NBT, network, Networking, New Horizon, Novels, Outlets, people, publications, Publishers, Reach, Read, Reader, Readers, Reports, sales, Sell, Spain, Story, Sura, Tamil, Trade, Translations, Translator, wholesalers, Works, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 30, 2007
புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்
கே. வாசுதேவன்
திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.
கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.
இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.
10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.
படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.
மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.
இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.
அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.
மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.
புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.
Posted in Audio, Biography, Books, Chokkan, Commerce, Digital, Disabled, Download, Hear, Internet, Introduction, Kilakku, Kizakku, Kizhakku, Media, MP3, padhippagam, padhippakam, pathippagam, pathippakam, Publishers, Read, Readers, Tamil Book, Venture, Voice | 5 Comments »
Posted by Snapjudge மேல் மே 2, 2007
நூலகரில்லா நூலகங்கள்!
எம். முத்துச்சாமி
“”நூலகரில்லா நூலகங்கள் பூசாரியில்லாத கோயில்கள்”.
ஒரு துப்புரவுப் பணியாளரால் எப்படி ஒரு கோயிலைச் சிறப்பாக முறைப்படி பூசைகள் செய்து பராமரிக்க முடியாதோ, அதேபோல நூலகர்கள் இல்லாமல், ஒரு நூலகத்தை, தாற்காலிகமாகத் தினக்கூலிப் பணியாளர்கள் மூலம் செம்மையாக நிர்வகித்து நடத்த முடியாது.
இன்று நூல்களுக்குத் தரப்படும் முன்னுரிமை நூலகர்களுக்குத் தரப்படுவதில்லை. ஆனால், இன்று தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஐந்து பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும், தொலைதூரக்கல்வி முறை மூலம் ஆயிரக்கணக்கான நூலகப் பட்டதாரிகளை (பி.எல்.ஐ.எஸ்; எம்.எல்.ஐ.எஸ்; எம்.பில்;) போட்டி போட்டுக் கொண்டு உருவாக்கி வேலை வாய்ப்பில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. கல்வியில் சிறந்த நமது தமிழ்நாட்டில் எட்டு பல்கலைக்கழகங்களில், “பல்கலைக்கழக நூலகர்’ பதவி பல்லாண்டுகளாகவே நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகள் புகழ்பெற்ற “”அன்னைப் பல்கலைக்கழகமாம்” சென்னைப் பல்கலைக்கழகத்தில், 12 பல்கலைக்கழக உதவி நூலகர்கள் பதவி பல்லாண்டுகளாகவே காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.
50-க்கும் மேற்பட்ட நமது அரசு கலைக்கல்லூரிகளில் பல்லாண்டுகளாகவே “நூலகர் பதவி’ காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றி புதுதில்லியிலுள்ள பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவிடம் (யு.ஜி.சி.) கேட்டால் – நாங்கள் விதிகளைத் தருவோம், நிதியினைத் தருவோம் – ஆனால் காலியாக வைக்கப்பட்டிருக்கும் நூலகர்கள் பதவி பற்றி கேட்கும் உரிமை எங்களுக்கு இல்லை என்று கூறுகிறார்களாம். ஆனால் யு.ஜி.சி.யின் கீழ் இயங்கும் “பல்கலை, கல்லூரி தர நிர்ணயக்குழு’ (நாக்) அவ்வப்போது வந்து, நூலகர் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நூலகங்கள் இருந்தால்கூட நமது பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் “நட்சத்திரங்களை’ வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னாட்சி உரிமையையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? இந்த நிலை மாற யாரிடம் முறையிட வேண்டும்?
நமது தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் உண்டு. ஆனால் நூலகர் நியமனம் இல்லை. நமது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவற்றில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நமது மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் மட்டும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நூலகவியல் துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமான நமது தமிழ்நாடு, நூலகர் நியமனத்தில் மட்டும் ஏன் மிகவும் பின்தங்கி இருக்கிறது?
பொது நூலகத்துறை கிளை நூலகங்களிலும் – முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் பெரும்பாலும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நூலகங்களில் மிகக்குறைந்த தினக்கூலி முறையில் தாற்காலிகப் பணியாளர்கள்தான் கிளை நூலகங்களை நிர்வகித்து வருகின்றனர். சுற்றுப்புறச்சூழல் சரியாக அமையாத, போதிய காற்று, வெளிச்சம், இருக்கைகள் இல்லாத நிலையிலேயே பெரும்பாலான கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன் பெருமுயற்சியால், நிறைவேற்றப்பட்ட 1948-ம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் வீட்டுவரி செலுத்தும் அனைவரும் 10 விழுக்காடு நூலக வரி செலுத்துகிறோம். நம்மிடம் நூலக வரி வசூலிக்கும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆண்டுதோறும் வசூலிக்கும் தொகையை அந்த ஆண்டே பொது நூலகத்துறைக்குத் தாமதமின்றி செலுத்துகிறார்களா? அப்படி ஒழுங்காகச் செலுத்தாதவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அதற்கு அரசு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளது?
சென்னை மாநகராட்சி மேயர் தெரிவித்தபடி சென்ற ஆண்டு சொத்துவரி வசூல் ரூ. 238 கோடியாகும். இதில் 10 விழுக்காடு நூலக வரி என்றால், கிடைத்திருக்கும் தொகை ரூ. 24 கோடியாகும். இந்தத் தொகையைக் கொண்டு, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிளை நூலகங்களுக்குத் தேவையான நூலகர்களை நியமனம் செய்வதோடு, வேண்டிய கட்டட வசதிகள், இருக்கை வசதிகள் செய்து தர இயலாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இன்றைய உடனடித் தேவை, நல்ல திட்டங்களும், சிறந்த நிர்வாகமுமேயாகும்!
சென்னை நகரில், உலகத்தரம் வாய்ந்த ஒரு நூலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, உள்ளூர் கிளை நூலகங்கள், கல்லூரி நூலகங்களைச் செம்மைப்படுத்த நாம் என்ன செய்யப் போகிறோம்?
(கட்டுரையாளர்: செயலாளர், தமிழ்நாடு நூலகச் சங்கம்).
Posted in Analysis, Author, Backgrounder, Books, Buyers, Consumers, Customers, Employment, job, Librarian, Library, Publishers, Writer | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007
விளம்பரங்களில் நிர்வாணத்திற்கு இலங்கை அரசு தடை
 |
 |
மாடல் அழகி ஒருவர் |
இலங்கையில் விளம்பரங்களின் போது ஆபாசமாக, அதாவது நிர்வாண, அரைநிர்வாண பெண்ணையோ அல்லது ஆண்களையோ பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச விளம்பரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கலாச்சார அமைச்சு பொது விளம்பரங்களின் போது நிர்வாண அல்லது அரைநிர்வாணக் கோலத்தில் மாடல் அழகிகள்/இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Posted in 1984, Ad, Ads, Advertisement, Agency, Ban, Billboards, Cloth, Clothes, Clothless, Culture, Female, Force, Immoral, Judgmental, Law, male, Model, Moral, Nude, Order, Policing, Pose, Publishers, Seminude, Sexy, Sri lanka, Srilanka, Values | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007
14 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடமை
சென்னை, பிப். 12: மாயூரம் வேதநாயகம் பிள்ளை உள்பட தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் நூல்களை நாட்டுடமையாக்கி முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
தமிழ்ச் சான்றோர்கள் 14 பேரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும், அவர்களது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.
அவர்தம் வாரிசுகளுக்கு பரிவுத் தொகைகளை அரசு அளித்து வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் விவரம்:
1. மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
2. சக்தி வை.கோவிந்தன்.
3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
4. த.நா.குமாரசாமி.
5. கா.சு.பிள்ளை.
6. புலவர் குலாம் காதிறு நாவலர்.
7. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார்.
8. டாக்டர் சி.இலக்குவனார்.
9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.
10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.).
11. நாரண துரைக்கண்ணன்.
12. டாக்டர் மா.ராசமாணிக்கனார்.
13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.
14. புலவர் கா.கோவிந்தன்.
தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம்: முதல்வர் வழங்கினார்
சென்னை, மார்ச். 22:தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
சிறந்த தமிழறிஞர்களின் படைப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கில், அவர்களது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, தமிழறிஞர்களின் மரபுரிமையர்க்கு பரிவுத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வருகிறார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும் 17 தமிழறிஞர்களின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அவர்களது மரபுரிமையர்க்கு ரூ. 1.29 கோடி பரிவுத் தொகை வழங்குவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
தற்போது 14 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 84 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் 11 தமிழறிஞர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ. 6 லட்சம் வீதம் ரூ. 66 லட்சத்துக்கான சான்றாவணத்தை முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வழங்கினார்.
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
- சக்தி வை. கோவிந்தன்,
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்,
- த.நா. குமாரசாமி,
- கா.சு. பிள்ளை,
- புலவர் குலாம் காதிறு நாவலர்,
- டாக்டர் சி. இலக்குவனார்,
- தி.வை. பண்டாரத்தார்,
- மகாவித்வான் தண்டபானி தேசிகர்,
- தி.ஜ. ரங்கநாதன் (திஜர),
- நாரண. துரைக்கண்ணன்,
- மா. ராஜமாணிக்கனார்,
- டாக்டர் வா.சுப. மாணிக்கம்,
- புலவர் கா. கோவிந்தன் ஆகியோரது மரபுரிமையர் முதல்வரிடமிருந்து பரிவுத் தொகைக்கான சான்றாவணத்தை பெற்றுக் கொண்டனர்.
நாட்டுடைமையாகும் நூல்களும் பரிவுத்தொகையும்
எஸ்.கே. அரவிந்தன்
முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடைமையாக்கப்பட்டு, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூ. 6 லட்சம் பரிவுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சான்றோர் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர்களின் வாரிசு உரிமையுள்ளவர்களுக்குக் கணிசமாக ஒரு தொகையினை அளிப்பது முன்பெல்லாம் மிகவும் அரிது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்தாம் முதன்முதலில் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.
அன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட சென்னை ராஜதானியில் நூல்கள் நாட்டுடைமையாகப் பெறும் இலக்கியப் படைப்பாளி என்கிற கௌரவம் பாரதியாருக்கு அவர் மறைந்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டியது.
இந்த இருபத்தேழு ஆண்டுகளில் அவர் விட்டுச் சென்ற துணைவியார் செல்லம்மா தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் படாத பாடுகள் எல்லாம் பட்டு முடித்துவிட்டிருந்தார்! இருப்பினும் வாழ்க்கையின் இறுதிக்காலத்திலேனும் விடியலைக் காணும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது ஆறுதலான விஷயந்தான். செல்லம்மாவைச் செல்வம் மிக்க அம்மாவாகச் செய்தது, பாரதி நூல்கள் நாட்டுடைமை.
பின்னர், 1971ல் மு. கருணாநிதியின் தலைமையில் தொடர்ந்த தி.மு.க. ஆட்சியிலிருந்துதான் இலக்கியப் படைப்பாளிகளின் நூல்களை நாட்டுடைமையாக்கும் நடைமுறை தொடரலாயிற்று. வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நடைமுறை வழக்கத்திற்கு வரவில்லை.
நாட்டுடைமையாக்குவதால் சான்றோரின் நூல்கள் எளிதாகவும் பல பதிப்பகங்கள் மூலமாகவும் வாசகர்களுக்குப் பரவலாகக் கிடைப்பது ஒரு நன்மை என்றால் சான்றோரின் வாரிசுதாரர்களுக்குக் கணிசமான ஒரு தொகை பரிவுத் தொகையாக அரசிடமிருந்து கிடைத்துவிடும். பதிப்பகத்தாரிடமிருந்து தவணை, தவணையாகக் கிடைக்கக்கூடிய தொகையைக் காட்டிலும் அது மிகவும் கூடுதலாகவும் இருக்கும்.
ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களுக்கும் பரிவுத் தொகை ரூபாய் ஆறு லட்சம் என்னும்போது அது ஒரு கணிசமான தொகையாகத் தெரிந்தாலும் ஒரு சான்றோருக்கு அதிக எண்ணிக்கையில் வாரிசுதாரர்கள் இருக்கும்பட்சத்தில் அது பலவாறாகப் பகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் கிடைக்கும் தொகை மிகவும் அற்பமாகப் போய்விடும் சாத்தியக்கூறும் உள்ளது.
ஒவ்வொரு முறையும் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாவதையொட்டி அறிவிக்கப்படும் பரிவுத்தொகையின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் பரிவுத்தொகை வெவ்வேறாக இருப்பது தெரிய வரும்.
இவ்வாறு சான்றோர்களிடையே பேதம் ஏற்படுவதற்கு இடமளிக்காமல் சான்றோர் அனைவர் நூல்களுக்கும் உரிய பரிவுத்தொகை ரூபாய் பத்து லட்சம் என நிரந்தரமாக நிர்ணயம் செய்து விடுவது பொருத்தமாக இருக்கும்.
ஓர் ஆண்டில் இருபது சான்றோரின் நூல்களை நாட்டுடைமையாக்கினாலும் அதனால் அரசுக்கு ஏற்படக்கூடிய மொத்தச் செலவு இரண்டு கோடி ரூபாய்தானே!
மேலும், ஒரு சான்றோரின் வாரிசுதாரர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் சரிசமமாக இருப்பார்கள் எனக் கருதுவதற்கில்லை. ஒரே குடும்பத்தில் ஒருவர் கூடுதலான வருவாய் பெற்று வசதியாக வாழ்க்கையில் இன்னொருவர் வறிய நிலையில் திண்டாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
சான்றோரின் வாரிசுதாரர்களில் ஒருவருக்கு நாட்டுடைமையின் பயனாகக் கிடைக்கும் தொகை அவரது சேமிப்பை மேலும் கூடுதலாக்கும் அதிர்ஷ்டப் பரிசாக அமைந்துவிடுகையில் அதே சான்றோரின் மற்றொரு வாரிசுதாரருக்கு அந்தத் தொகை பற்றாக்குறையாக இருக்கக்கூடும்.
குடும்ப நபர்களின் எண்ணிக்கை, மருத்துவச் செலவு, கல்வி எனப் பல காரணிகளால் ஒரு வாரிசுதாரருக்குப் பரிவுத்தொகை கிடைத்தாலும் அது போதிய பயன் தராது போய்விடக்கூடும்.
எனவே நாட்டுடைமையினையொட்டி ஒரு சான்றோரின் வாரிசுகளான மரபுரிமையர் அனைவருக்கும் பரிவுத்தொகையைச் சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதைவிட, வாரிசுதாரர் ஒவ்வொருவரின் செல்வ நிலை, வருமானம் ஆகியவற்றை விசாரித்தறிந்து, தேவை மிகுதியாக உள்ள வாரிசுதாரர்களுக்குக் கூடுதலாகவும், தேவையே இல்லாத அளவுக்கு செல்வந்தர்களாக இருப்பவர்களுக்கு ஓரளவுக்குமேல் மிகாமலும் பரிவுத்தொகையினைப் பகிர்ந்தளிப்பது பொருள்மிக்கதாக இருக்கும்.
வாரிசுதாரர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு பரிவுத்தொகையினை விகிதாசார முறையில் பங்கிட்டு அளிப்பது அவர்களிடையே பிற்காலத்தில் பூசல்கள் எழ வாய்ப்பில்லாமலும் செய்துவிடும் அல்லவா?
மிகச்சிறந்த படைப்புகளை படைத்தவர்களின் இலக்கியங்களே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்கிறார் வல்லுநர்
 |
 |
தமிழக அரசின் தலைமைச் செயலகம் |
தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே இலக்கியவாதிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டு அதற்குண்டான தொகை அந்தப் படைபாளியின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தை ஆளும் திமுக அரசால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 36 படைப்பாளிகளின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக அரசு
- குன்றக்குடி அடிகளார்,
- கி.ஆ.பெ,
- கி.வா.ஜ ஆகியோரின் படைப்புகள் உட்பட பலரது படைப்புகள் நாட்டுடையாக்கப்படுவதாக அறிவித்தது.
ஆனால் உலக அளவிலும் சரி, இந்தியாவின் வேறு மாநிலத்திலும், இவ்வாறாக இலக்கியத்தை நாட்டுடமையாக்கும் வழக்கும் இல்லை என்றும், காந்தி, தாகூர் போன்றவர்களின் படைப்புகள் கூட நாட்டுடமையாக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த வரலாற்று ஆய்வாளரும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான ஆ. இரா. வெங்கடாஜலபதி.
பல்வேறு தமிழக அரசுகள், தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக காட்ட வேண்டிய அரசியல் நெருக்கடிகளின் போது, பல்வேறு எழுத்தாளர்களுடைய படைப்புகளை நாட்டுடமையாக்குவதாக தொடர்ந்து அறிவித்து வருகிறது எனக் கருத்து கூறும் அவர், மறைந்த எழுத்தாளர்களுடைய குடும்பத்திற்கு உதவுவதற்காக இவ்வாறாக செய்வதைவிட அரசு வேறு வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் கடமையாற்ற வேண்டும் என்றும் கூறினார். மிகச்சிறந்த படைப்புகளே நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.
Posted in Analysis, Authors, Backgrounder, Culture, Dr C Lakkuvanaar, Dr Ma Rasamanickanaar, Essays, Fiction, Heritage, Insights, Kaa Govindhan, Kaa Su Pillai, Karunanidhi, Literature, Mahavidhwan Thandapani Desikar, Mayooram Vedhanayagam Pillai, Nationalisation, Nationalization, Non-fiction, Op-Ed, Publishers, Pulavar Kulam Kaathiru Navalar, Sakthi vai Govindhan, Solution, Story, Tamil Nadu, Tamil Works, Tha Naa Kumarasamy, The Po Meenakshi Sundharanaar, The Po Meenakshisundaranaar, Thi Ja Ranganathan, Thi Vai Sadasiva Pandarathaar, Va Subha Manickam, Works, Writers | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007
புத்தக திருவிழாவில் புதிய முயற்சி
சென்னை, ஜன. 11:சென்னையில் துவங்கியுள்ள புத்தக திருவிழாவில் வியாழக்கிழமை முதல் நிறைவு நாள்வரை தினம் ஒரு தலைப்பில் புத்தகம் பேசுது இதழை பாரதி புத்தகாலயம் வெளியிடுகிறது.
இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தின் பொது மேலாளர் நாகராஜன் கூறியது:
குழந்தைகளுக்கான நூல்கள் தமிழில் அதிகமாக இல்லை என்ற குறை இருந்தது. இதைப் போக்கும் வகையில் 2006 ம் ஆண்டு குழந்தைகளுக்கான 60 நூல்களை பாரதி புத்தகாலயம் சார்பில் வெளியிட்டோம்.
புதன்கிழமை துவங்கும் சென்னை புத்தக திருவிழாவில் முதல் நாளில் இருந்து நிறைவுநாள் வரை தினம் ஒரு புத்தகம் பேசுது இதழ் வெளியிடுகிறோம். இந்திய இலக்கிய வரலாறு, கலை பண்பாடு, கவிதைகள் என பத்து தலைப்புகளில் பத்து ஆசிரியர்கள் இந்த இதழ்களை தயாரித்துள்ளனர். புத்தக ஆர்வலர்களுக்கு இந்த இதழ்கள் உதவியாக இருக்கும் என்றார்.
Posted in Bharathi Puthakaalayam, Bharathi Puthakalayam, Bharathy Puthakalayam, Book Exhibition, Book Fair, Chennai Book Exhibition, Chennai Book Fair, Children Books, Madras Book Exhibition, Madras Book Fair, Nagarajan, Publishers, Puthagam, Puthagam Pesuthu, Tamil Nool, Thamizh Nool, Thamiznool | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007
5 கோடி புத்தகங்கள் இடம்பெறும் கண்காட்சி: சென்னையில் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்
30th Book Exhibition – Chennai Book Fair : Idly Vadai
IdlyVadai – இட்லிவடை: 30வது புத்தக கண்காட்சி
30th Chennai Book Fair – Badri : First Day Announcements & Karunanidhi Visit
பத்ரியின் வலைப்பதிவுகள்
Official Website
வலைத்தள: http://www.bapasi.org/
வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 – பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – தமிழில்
செய்திகள்:
More space, more books, some films: fair from today – The Hindu
Chennai Book Fair has new venue – The Hindu
Chief Minister’s largesse to book publishing industry – The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி
சென்னை,ஜன.9-
தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 30-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் துரை முருகன், நல்லி குப்புசாமி உள்படபலர் கலந்து கொள்கிறார்கள்.
கண்காட்சியில் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் சர்வ தேச அளவிளான அனைத்து தரப்பு புத்தகங்களும் கிடைக்கும். தினமும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
தினமும் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கண்காட்சியில் நடைபெற உள்ளது. புத்தகங்கள் வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடி உண்டு.
சிறந்த எழுத்தாளருக்கான மணிவாசகம் பதிப்பகம் ச.மெய்யப்பன் விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும்,
சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகசெம்மல் க.கணபதி விருது பிரேமா பிரசுரத்திற்கும் வழங்கப்படுகிறது.
குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது ஹரிஹரன் என்ற ரேவதிக்கும்,
சிறந்த புத்தக விற்பனையாளர் விருது திருச்சி அகத்தியர் புத்தக சாலைக்கும் வழங்கப்பட உள்ளது.
கண்காட்சி நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். 12-வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.
கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. அதற்கு கட்டணமும் உண்டு. மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சி 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தகவலை தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேட்டியின் போது தெரிவித்தார். அருகில் செயலாளர் சண்முகம் இருந்தார்.
சொந்தப் பணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி: கருணாநிதி அறிவிப்பு
சென்னை, ஜன. 11: தனது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடி நிதியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு (பபாசி) வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை மாலை அவர் தொடங்கி வைத்தார்.
“பபாசி’ தேர்வு செய்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன், குழந்தை எழுத்தாளர் ஹரிஹரன் என்கிற ரேவதி, சிறந்த பதிப்பகத்தாரான பிரேமா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளர் திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
பின்னர் முதல்வர் பேசியது:
சிறந்த எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் சால்வை உள்ளிட்டவற்றை வழங்குமாறு சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறினார்.
இதைத் தொடர்ந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொற்கிழி வழங்கச் சொல்வார் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் காந்தி கண்ணதாசன் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.
இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக் கூடாது என்று கருதி, இச்சங்கத்துக்கு ரூ. 1 கோடி தொகையை எனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குகிறேன்.
ரொக்கத் தொகையை வங்கியில் நிரந்தரக் கணக்கில் போடுவதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் என ஆண்டுதோறும் 5 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதற்கு இத்தொகை பயன்படட்டும்.
ஏற்கெனவே சன் டி.வி. நிறுவனம் மூலம் எனது மனைவியின் பங்குத் தொகையாக கிடைத்த பணம் வங்கியில் போடப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஏழை எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி போன்றவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து,
- திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையத்தை சார்ந்த எஸ். கோபாலகிருஷ்ணன் (சிறந்த புத்தக விற்பனையாளர்),
- பிரேமா பிரசுரத்தை சார்ந்த ஆர்.எம்.ரவி (சிறந்த பதிப்பகத்தார்),
- ஹரிஹரன் என்கிற ரேவதி (சிறந்த குழந்தை எழுத்தாளர்),
- எழுத்தாளர் பிரபஞ்சன் (சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்
- முதலமைச்சர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
- தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
- சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன்.
சென்னை, ஜன. 11: புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கூறினால் அதை அளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 30-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகிலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலும் இடம் இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் பணியைத்தான் எனக்கு விட்டு வைத்திருக்கிறார்.
சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டு இதில் எது வசதியான இடம் என்று முடிவு செய்து கூறினால், அதை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.
இதற்கான கட்டடத்தை அரசு கட்டுவதா அல்லது பதிப்பகத்தாரே கட்டிக் கொள்வதா என்று அடுத்த கட்டமாக பேசப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டாக கட்டுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
மாலை, சால்வைக்குப் பதில் புத்தகம்: அரசு விழாக்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதில் புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டது. அரசு விழாக்களில் இது நிச்சயம் பின்பற்றப்படும் என்றார் கருணாநிதி.
முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திரளான புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.
Posted in 30th Book Fair, Agathiyar Book Depot, Authors, Azha Valliappa Prize, BAPASI, Best Publisher, Book Fair, Book Updates, Books, Booksellers, Chetput, Durai Murugan, Ethiraj College, Function Pictures, Gandhi Kannadasan, Hariharan, Ka Ganapathy Award, Kizhakku Pathippagam, M Karunanidhi, Madras, Manivaasagam Pathippagam, Nalli Kuppusamy, Official News, Pachaiappa College, Pachaiappaa College, Pachaiyappa College, Permanent Exhibition, Permanent Place, Photos, Prabanjan, Prema Prasuram, Prizes, Public Works Department, Publishers, PWD, Revathy, RM Ravi, S Gopalakrishnan, Sa Meyyappan Award, Saidapet, School Grounds, Shares, St. George Anglo Indian HSS, St. George Anglo-Indian Higher Secondary, Sun Network, Sun TV, Tamil, Thadandar Nagar, Thamizh, Virudhugal, Viruthu, Writers, XXX Book Exhibition | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006
படிப்போர் இருந்தும் பயன்படா நிலையில் 10 லட்சம் புத்தகங்கள்: தமிழகத்தில் காணாமல் போன 12,700 நூலகங்கள்!
வீர.ஜீவா பிரபாகரன்
மதுரை, செப்.1: தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட 12,700 நூலகங்களைத் தற்போது காணவில்லை.
புத்தகம் படிக்கும் ஆர்வத்தைக் கிராமப்புற மக்களிடம் வளர்க்க 2000-ம் ஆண்டில் திருவள்ளுவர் தினமான ஜனவரி 16-ம் தேதி 12,787 கிராமங்களில் அய்யன் திருவள்ளுவர் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இவ்வாறு, ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான நூலகங்களைத் திறந்த தமிழக அரசின் சாதனையைப் புத்தக விரும்பிகள் அனைவரும் உலக சாதனையாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.
இந்த நூல் நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 75 நூல்கள் வீதம் 10 லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையங்கள் ஊராட்சி அலுவலங்களின் ஒரு பகுதியில் செயல்படும் என அரசு அறிவித்தது. மேலும் இங்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படித்து செல்ல மேஜை, நாற்காலிகளும் வழங்கப்பட்டன. பல ஊராட்சிகளில் புத்தகங்களை வைக்க போதிய கட்டடம் இல்லை.
தொடக்க காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் பொதுமக்கள் நேரில் வந்து புத்தகங்கள் படிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும் உரிய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
பின்னர் ஊராட்சித் தலைவர்கள் எப்போது வருவார்களோ அப்போது மட்டும் இந்த நூலகங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டது. இதனால், நூலகத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.
இதையடுத்து, நூலகத்திற்கு வழங்கப்பட்ட மேஜை, நாற்காலிகள் ஊராட்சி நிர்வாகப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
நூல்கள் அனைத்தையும் சாக்கில் கட்டிவைத்துவிட்டு, புத்தகங்கள் வைக்கும் “ரேக்’கை, அலுவலக கோப்புகள் வைப்பதற்கே பெரும்பாலான ஊராட்சிகள் பயன்படுத்தி வருகின்றன.
தற்போது மாவட்டத்திற்கு ஒரு சில ஊராட்சிகளில் மட்டும் அறிவொளி இயக்கத்தினர், தன்னார்வ அமைப்பினர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மூலம் இந்த நூல் நிலையங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் இந்த நூல் நிலையங்கள் காணாமல் போய்விட்டன.
ஊராட்சித் தலைவர்கள் சிலரிடம் இது குறித்து கேட்டபோது:
“அய்யன் திருவள்ளுவர் நூல் நிலையத்தை நிர்வகிக்க ஊராட்சியில் தனியாக ஆள் இல்லை. மேலும், ஒரு முறை நூல்கள் கொடுத்ததுடன் சரி, அதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. ஆண்டுக்கு 50 நூல்கள் வீதம் அளித்திருந்தால்கூட, இந்த நூல்நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டிருக்கும்’ என குறிப்பிட்டனர்.
கிராமப்புற இளைஞர்கள் பலரிடம் பேசியபோது,” நல்ல புத்தகங்களைப் பேசும் தெய்வம் என்று வாசகர்கள் கருதுவது உண்டு. அவ்வாறு, நற்சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும், பொது அறிவு புத்தகங்களையும் அய்யன் திருவள்ளுவர் நூல்நிலையங்களுக்குத் தொடர்ந்து அளிக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று நூலகம் இல்லா கிராமம் தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கும்’ என்றனர்.
குறைபாடுகள் இருப்பினும் இந்தக் கிராமப்புற நூல் நிலையங்கள் முழுமையாக மலரத் துடிக்கும் வாச மலர்களாகவே உள்ளன. இவை மலருமா ? என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
Posted in Books, Library, MLC, Publishers, Readers, Rural, Suburban, Tamil, Tamil Nadu, Thiruvalluvar, TN | Leave a Comment »