Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Province’ Category

Formation of Tamil Nadu – History of Madras Presidency: Potti Sreeramulu

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

மக்கள் விரும்பிய மாநிலம்

உதயை மு. வீரையன்

இன்று தமிழ் மாநிலம் அமைந்த 51ஆம் ஆண்டு தினம். கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் இதன் “பொன்விழா’ கொண்டாடப்பட்டது. இதுவரை சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற ஏனைய மாநிலங்கள் மட்டுமே மாநில உதயதினத்தை விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தபோது, மாநிலங்களின் பிரிவினைக்கான குரல்களும் எழுந்தன. நாடு விடுதலைபெற்றதும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்கான கிளர்ச்சிகளும் வெடித்தன. முதல் பிரதமர் பண்டித நேரு இப்பிரச்னைக்குத் தீர்வாக இந்தியா முழுவதையும் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.

அவை தட்சிணப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என்பனவாகும். இவற்றுள் “தட்சிணப் பிரதேசம்’ என்பது தமிழ்நாடு, கன்னடம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கியதாகும்.

இதை ராஜாஜி மட்டுமே வரவேற்றார்; பெரியார் கடுமையாக எதிர்த்தார்; அண்ணாவும் கண்டனம் தெரிவித்தார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யின் பெருமுயற்சியால் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு போராடின. நேருவும் வேறுவழியில்லாமல் இத்திட்டத்தை கைவிட நேர்ந்தது.

1953ஆம் ஆண்டுவரை தமிழ்நாடும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாகவே விளங்கியது. இந்தப் பலமொழிக்கூட்டில் சிக்கிக்கிடந்தவர்கள், தனியாக “விசால ஆந்திரம்’ வேண்டுமெனவும், “ஐக்கிய கேரளம்’ வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பினர். இதற்காக ஆந்திர மகாசபை, கேரள சமாஜம் என்ற அமைப்புகளை உருவாக்கி கட்சிசார்பின்றி ஒன்றுபட்டுக் குரல்கொடுத்தனர்.

இதன் பிறகுதான், காங்கிரஸ் கட்சியிலிருந்த ம.பொ. சிவஞானம், முதன்முதலாக “தமிழ் அரசு’ அடைய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும்போது “வடவேங்கடம் முதல் குமரிவரையுள்ள தமிழகம்’ அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் புதிய தமிழகம் அமைக்கப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும்வகையில் தை மாதம் முதல்நாளை தமிழர் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என விரும்பிய ம.பொ.சி., தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று அறிக்கையும் வெளியிட்டார்.

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாகாண சட்டப்பேரவையில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட “தார் குழு’ 1948 செப்டம்பர் 13-ல் சென்னைக்கு வந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

“தமிழக எல்லை மாநாட்டை’ தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. 1949-ல் சென்னையில் நடத்தினார். மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்து, பதவியைத்துறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமையில் சென்னை மாகாண முதலமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். “வடவேங்கடம் முதல் தென்குமரிவரையுள்ள தமிழகத்தை அமைக்க வேண்டும்’ என்ற தீர்மானம் இம்மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1953-ல் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். இதன்பிறகு நேருவின் மனம் மாறியது. நாடாளுமன்றத்தில் 1953 அக்டோபர் 2-ல் “ஆந்திர மாநிலம்’ அமைவதற்கான வாக்குறுதியை அவர் அளித்தார்.

இருப்பினும் “சென்னை யாருக்கு?’ என்ற பிரச்னை எழுந்தது. “தமிழகத்துக்கே உரியது’ என்பதை முடிவு செய்ய அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி, காங்கிரஸ் தலைவர் காமராஜர், சென்னை மேயர் செங்கல்வராயன், முன்னாள் மேயர் எம். ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. முதலியோர் கடுமையாகப் பாடுபட்டனர். அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியையும், பிரதமர் நேருவையும் சம்மதிக்கவைப்பதற்குப் பெரும்பாடுபட்டனர்.

1953 மார்ச் 25-ல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு, ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை வெளியிட்டார். இதில் ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார். அதன் பிறகே சென்னை பற்றிய கவலை நீங்கியது.

மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தமிழகத்தைப் பொருத்தவரை தென்எல்லை மீட்புப் போராட்டமும், வடஎல்லை மீட்புப் போராட்டமும் வரலாற்றில் இடம்பெற்றவை. தென்எல்லைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாகவே தெற்கு எல்லை “கன்னியாகுமரி’யாகவே நீடிக்கிறது.

வடஎல்லைப் பாதுகாப்புக் குழு ம.பொ.சி. தலைமையில் அமைக்கப்பட்டது. அதற்கு கே. விநாயகம் செயலாளர். மக்களை அணிதிரட்ட உதவியவர் மங்கலங்கிழார். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மத்திய சட்டத்துறை அமைச்சர் ஹெச்.வி. படாஸ்கரை இந்திய அரசு நியமித்தது.

படாஸ்கர் பரிந்துரைப்படி, திருத்தணி தாலுகா முழுவதும் (ஒரே ஒருகிராமம் நீங்கலாக), சித்தூர் தாலுகாவில் 20 கிராமங்கள், புத்தூர் தாலுகாவில் ஒரு கிராமம் உள்பட 322 கிராமங்கள் ஆந்திரத்தில் இருந்து பிரித்து, தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன. அதேபோல, தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர், பொன்னேரி தாலுகாக்களிலிருந்து சில கிராமங்கள் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டன.

இந்தப் பெரும் போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் பலர். ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி போராடி, 1953-ல் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்ததையும், “தமிழ்நாடு’ பெயர் கோரி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடார் 1956 அக்டோபர் 13-ல் உயிர்துறந்ததையும் தவிர்த்திருக்க வேண்டும்.

எனினும் மாநில முதல்வர் பொறுப்பிலிருந்த ராஜாஜி, காமராஜரின் பங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை என்பது ஆந்திரத்தின் பிடிவாதமான கோரிக்கையாக இருந்தபோது ராஜாஜி பத்திரிகையாளர்களிடம் கூறினார். “”சென்னைப் பட்டணத்தை ஆந்திரத்துக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை அமல்படுத்தும் சக்தி எனக்கு இல்லை; இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரதமரிடம் கூறிவிட்டேன்…” என்றார். பிரதமர் மனம்மாற இதுவும் ஒரு காரணம்.

அத்துடன், அவரது “தட்சிணப் பிரதேச’ அறிவிப்பின்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பினை எடுத்துக்கூறி, அதைக் கைவிடச் செய்த பெருமை அப்போதைய முதலமைச்சர் காமராஜரையே சேரும். இதற்கெல்லாம் மேலாக ம.பொ.சி.யின் பணியையும் மறக்க முடியாது.

மாநிலப் பிரிவினை குறித்து, எல்லா மாநிலங்களுக்கும் மனக்குறைகள் இருக்கின்றன. வட எல்லையான வேங்கடத்தை இழந்தது தமிழகத்திற்கு ஓர் குறையாகவே கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டியப் பகுதியான பெல்காம் மாவட்டத்தைத் திரும்பப்பெற “மராட்டிய சமிதி’ தொடர்ந்து போராடி வருகிறது.

இச் சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியவைதான்; ஆனால் தீர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் சில அரசியல்வாதிகள் கவனமாக இருக்கின்றனர்.

மொழிவாரிப் பிரிவினை மாநிலங்களுக்கான பிரிவினையே தவிர, மக்களுக்கானது அல்ல. மொழி என்பது பிரச்னைகளுக்கு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தொடக்கமாக இருக்கக்கூடாது.

Posted in Andhra, Anna, AP, authority, Chennai, Congress, Dakshin, Democracy, Divide, EVR, Federal, Freedom, Independence, Kamaraj, kamarajar, Kamraj, Kamrajar, Language, Madras, MaPoSi, MPs, Nehru, North, Periyar, Power, Presidency, Province, Rajaji, Region, Republic, Rule, Shree ramulu, Shreeramulu, Shri ramulu, South, Sree ramulu, Sreeramulu, Sri ramulu, Sriramulu, State, Tamil, Tamil Nadu, TamilNadu, Telugu, TN, Zone | Leave a Comment »

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

Posted in 50, 60+, 75, Andhra, AP, Bengal, Budget, Caste, Center, Centre, China, Commerce, Common, Communication, Community, Consruction, Country, Courts, Culture, Democracy, Development, Districts, Division, DMK, Economy, Electricity, Federal, Finance, Freedom, GDP, Govt, Growth, Heritage, Hinduism, Independence, India, infrastructure, Justice, Language, Law, Linguistics, National, North East, Northeast, Order, Pakistan, Patel, Planning, Power, Private, Province, Provinces, Public, Railways, Region, Religion, Resources, River, Roads, Sardar, Security, Sharing, Speak, Speech, States, TamilNadu, Telecom, Terrorism, Terrorists, TN, Tradition, Transport, Transportation, Water | Leave a Comment »

Sri Lanka – New separate flags for North and East provinces

Posted by Snapjudge மேல் மே 22, 2007

புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி
புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குத் தனித்தனியான கொடிகள்

இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன.

இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன.

வட மாகாணக் கொடி
வட மாகாணக் கொடி

முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன.

ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன் சின்னமும், மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான கொடியில் கழுகு, மீன் மற்றும் சிங்கம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணக் கொடி
கிழக்கு மாகாணக் கொடி

வடக்கு கிழக்கு இணைப்பை உடைத்து அதனை நிரந்தமாக்கும் நோக்கிலேயே இந்தக் கொடிகள் அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் இலங்கையில் 13வது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவான ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதல்வருக்கு செயலராக பணியாற்றியவரும், அப்போது உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாண கொடியை வடிவமைத்ததாகக் கூறுபவருமான, டாக்டர் விக்னேஸ்வரன்.


sri lanka eezham map ltte bbc details

Posted in Conflict, East, Eelam, Eezam, Eezham, Federal, flags, Governor, Govt, LTTE, Nationalism, North, Northeast, Province, Separatists, Sri lanka, Srilanka, State, Thirukonamalai, Tirukkonamalai, Triconamalee, triconmalee, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

B Kanagaraj: Border dispute between Karnataka & Maharashtra – Belgaum: Analysis, History, Backgrounder

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

சிக்கலாகும் எல்லைப் பிரச்சினை

பி. கனகராஜ்

கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையே பெல்காம் எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வருகிறது.

பெல்காம் மட்டுமல்ல; நமது நாட்டின் பல மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன.

வரலாற்றிலேயே முதன்முறையாக கர்நாடக சட்டமன்றத்தின் கூட்டம் தலைநகரான பெங்களூரை விட்டு பெல்காமில் கூட்டப்பட்டது. கர்நாடக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பெல்காமை கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் சட்டமன்றக் கூட்டத்தை இங்கு கூட்டவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் அமைப்பான “மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ ஒரு எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தியது. மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இவ்வாறு பெல்காம் எல்லைப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிடையே அரசியல் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் முக்கோணமாக பெல்காம் மாவட்டம் உள்ளது. “மூங்கில் கிராமம்’ என்ற பொருள்படும் சமஸ்கிருதப் பெயரைப் பெற்றிருக்கும் பெல்காம் 1956ஆம் ஆண்டு வரை மராட்டியர்கள் அதிகம் வாழ்ந்த பம்பாய் மாநிலத்தில்தான் இருந்தது.

பஸல் அலி கமிஷன் பரிந்துரையால் ஏழாவது அரசியல்சாசன திருத்தச் சட்டம் மொழிவாரி மாநில சீரமைப்பை அமல்படுத்தியதால் பெல்காம் மாவட்டம் அண்டை மாநிலமான மைசூருக்கு வழங்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை “மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ பெல்காம் மீட்பு போராட்டத்தை மராட்டியர்களுக்காக நடத்தி வருகிறது. மராட்டியர்களின் “சம்யுக்த மஹாராஷ்டிரம்’ என்ற நீண்டகால கனவின் முக்கிய துருவமாக பெல்காம் உள்ளது.

“மகாராஷ்டிர ஏகிகரண் அமைப்பு’ இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இம்மாவட்டத்தின் உள்ளாட்சி அமைப்புகளிலும் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. பெல்காம் மாநகராட்சி மன்றம் சென்ற ஆண்டு மகாராஷ்டிரத்துடன் இணைய தீர்மானம் இயற்றியது. எரிச்சலுற்ற கர்நாடக மாநில அரசு மாநகராட்சி மன்றத்தையே கலைத்து விட்டது.

இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே இப் பிரச்சினை வெடிப்பதற்கு மொழி, பொருளாதார, மற்றும் கலாசார காரணங்கள் உள்ளன. மராட்டியர்கள் தற்போது தங்களது கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவதற்கு கர்நாடக மாநில அரசின் மொழிக் கொள்கை முக்கியக் காரணமாகும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கன்னட மொழியில் கட்டாயமாக பாடம் போதிக்கப்பட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பெல்காமில் பெரும்பான்மையாக உள்ள மராட்டியர்கள் கன்னட மொழித் திணிப்பை எதிர்க்கின்றனர்.

நமது அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மொழியினருக்கு அவர்களது தாய்மொழியிலேயே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று மாநிலங்களை அறிவுறுத்துகிறது. கர்நாடக அரசின் மொழிக்கொள்கை அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பிரிவை மீறுவதாக பெல்காம் மாவட்ட மராட்டியர்கள் எதிர்க்கின்றனர். மராட்டிய மொழியைப் பாதுகாக்க போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

பொருளாதாரக் காரணமும் இப்பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் பெல்காம் மாவட்டம் இதமான தட்பவெப்ப நிலையில் அமைந்துள்ளது. விவசாய வளத்தைப் பெற்றுள்ள இம்மாவட்டம் கரும்பு உற்பத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவேதான் விவசாய ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்க மராட்டியர்கள் விரும்புகின்றனர்.

இரண்டு மாநிலங்களும் பெல்காமின் மேல் விருப்பம் காட்டுவதற்கு பெல்காமின் கல்வி வளர்ச்சியும் ராணுவ முக்கியத்துவமும் காரணமாக உள்ளன. பெங்களூருக்கு அடுத்தபடியாக கல்வி வளர்ச்சி பெற்ற நகரம் பெல்காமாகும். மேலும் இந்திய ராணுவத்தின் பல பயிற்சி மையங்கள் இங்கு உள்ளன. இதனை “தரைப்படையின் தொட்டில்’ என்றே பலர் வர்ணிக்கின்றனர்.

ஆகவே மகாராஷ்டிரம் இம்மாவட்டத்தைப் பெறுவதற்கு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகிறது. 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநில சீரமைப்புச் சட்டம் அமலானபோது உருவான குழுவின் முன் தனது கோரிக்கையை வைத்தது. மேலும் 1966ம் ஆண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாஜன் தலைமையில் நடுவர் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. ஆனால் மகாஜன் குழு தனது பரிந்துரையில் பெல்காம் மாவட்டம் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என கூறிவிட்டது.

இம்மாவட்டத்தில் மகாராஷ்டிரம் கோரும் 864 கிராமங்களில் 264 கிராமங்களை அதற்கு வழங்க இக்குழு பரிந்துரை செய்தது. மேலும் மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகம் கோரும் 516 கிராமங்களில் 247 கிராமங்களை அதற்கு வழங்கவும் இக்கமிஷன் அறிவுறுத்தியது. இக்கமிஷனின் பரிந்துரைகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டாலும் மகாராஷ்டிரம் நிராகரித்து விட்டது.

இல கார்புசர் என்ற கட்டட வல்லுநரால் நிர்மாணிக்கப்பட்ட, சண்டி என்ற கிராம காவல் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் சண்டீகர் ஒரு நீண்ட கால எல்லைப் பிரச்சினை ஆகும். 1966ம் ஆண்டு முதல் ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு இடையே, சண்டீகர் யாருக்குச் சொந்தம் என்பதில் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. சீக்கிய தீவிரவாதிகள் காலிஸ்தான் என்ற தனி நாடு கோரியபோது சண்டீகர் நகரம் அரசியல் சச்சரவின் மையமாக இருந்தது. தற்போது தீவிரவாதம் தணிந்து போனாலும் பஞ்சாபியர்களின் நீண்ட கால ஏக்கமாகவே உள்ளது சண்டீகர் நகரம்.

கர்நாடகத்தில் உள்ள மங்களூரை கேரளம் கோரி வருகிறது. கேரளத்தில் உள்ள காசர்கோடு பகுதியை கர்நாடகம் கோருகிறது.

அண்மையில்கூட அசாம் மற்றும் அதனுடைய அண்டை மாநிலங்களில் இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க ஒரு கமிஷனை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற எல்லைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பரஸ்பர பேச்சுவார்த்தைதான் சரியான வழிமுறைகளாகும். விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இப்பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும். விடவும் மாட்டேன், கொடுக்கவும் மாட்டேன் என்ற குறுகிய மனப்பான்மையுடன் மாநிலங்கள் செயல்படக் கூடாது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

“கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற உயரிய கொள்கையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்குகிறது. தேசிய வலிமைக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் அமைதிக்கும் இக் கொள்கை அவசியமானதாகும்.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், அரசியல் அறிவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோவை).

Posted in Analysis, Backgrounder, Belgaum, Bombay, Border, British, Chandigarh, Civic body, Climate, Commerce, Conflict, Coop, Cooperative, Defense, Dispute, Economy, Education, Facts, Goa, Growth, Haryana, History, India, Industry, Issues, Kannada, Karnataka, Kasargode, Kerala, Khalisthan, Language, Mahajan, maharashtra, Mangalore, Marathi, Military, Mumbai, Municipality, Op-Ed, Province, Punjab, Race, Region, Research, Rural, Society, State, Unity, Village | Leave a Comment »

More States or no more Splits? – India regions along Languages

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 8, 2006

தேவையில்லை புதிய மாநிலங்கள்

கே.வீ. ராமராஜ்

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தேசிய அரசியலில் முக்கிய விவாதமாகத் தோன்றியுள்ளது. இந்நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உருவான சரித்திரத்தைப் பற்றியும் மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்குவது அவசியம்தானா என்பது குறித்தும் அலசி ஆராய வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய போதே 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைய வேண்டுமென கோரிக்கை எழுந்தது. 1920ஆம் ஆண்டு முதலே காங்கிரஸ் கட்சி அதன் மாநில அமைப்புகளை மொழிவாரி அடிப்படையில் கொண்டிருந்தது. 1938ஆம் ஆண்டிலேயே தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சென்னை நகரமும் இம்மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமெனவும் கோரி ஆந்திரர்கள் “”மதராஸ் மனதே” என்ற இயக்கத்தைத் தொடங்கினர். 1947ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றமும் மொழிவாரி மாநில அமைப்பை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனித் தமிழ் மாநிலக் கோரிக்கையும் வலுவடைந்தது.

1948 ஜூன் 17 அன்று உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.தர் தலைமையில் மொழிவாரி மாநிலக் குழு அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநிலம் முக்கியமான பிரச்சினை அல்ல என்றும் மாநிலங்களை நிர்வாக வசதிக்காகவே பிரிக்க வேண்டுமென்றும் அப்படியிருப்பினும் சென்னை, மும்பை போன்ற நகரங்களைச் சிறப்பு மாநிலங்களாக அறிவிக்க வேண்டுமென்றும் இக்குழு பரிந்துரைத்தது. எஸ்.கே.தர் குழுவின் பரிந்துரைகளினால் ஆந்திரத்தில் கோப அலைகள் எழுந்ததைக் கண்டு நேரு, படேல், சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட குழுவை இந்தியத் தேசிய காங்கிரஸ் நியமித்தது. மொழிவாரி ஆந்திர மாநிலம் ஏற்படுமாயின் சென்னை ஆந்திரத்துடனும் தமிழகத்துடனும் சேர்க்கப்படாமல் தனித் தகுதி மாநிலமாக இருக்குமென இக்குழுவும் அறிவித்தது. இதனால் புது ஆந்திரத் தலைநகர் உருவாக்க வேண்டும் அல்லது சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்க வேண்டுமென இக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாகாண அரசால் பி.எஸ். குமாரசாமி ராஜா தலைமையில் நிறுவப்பட்ட பகுப்பாய்வுக் குழு சென்னையை ஆந்திரத்தின் தாற்காலிகத் தலைநகராக வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை.

இந்நிலையில் தெலுங்கு மாநிலத்தை உடனே அமைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடங்கின. 1951 ஆகஸ்டில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயலாளர் சுவாமி சீதாராம் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இதனைக் கண்டித்த நேரு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவை எல்லைப் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வதாயின் மொழிவாரி கொள்கையைப் பரிசீலிப்பதாக 1951 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மொழிவாரிக் கோரிக்கைக்கு நேரு அதிக ஆதரவளிக்காததால் 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆந்திரத்தில் காங்கிரஸ் அதிக வெற்றி பெறவில்லை. ஆந்திரத்தை உடனடியாக உருவாக்க பொட்டி ஸ்ரீராமுலு 1952-ல் 67 நாள்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையைத் தவிர தெலுங்கு பேசும் பகுதிகளைக் கொண்டு தனி ஆந்திரம் உருவாக்கப்படும் என 1952 டிசம்பர் 19-ல் அறிவித்து வாஞ்சு குழுவை நேரு நியமித்தார்.

ஆந்திரத்திற்கு புதுத் தலைநகர் ஏற்படும் வரை சென்னை தலைநகராக இருக்குமென வாஞ்சு குழு அறிவித்ததால் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது; 1953ஆம் ஆண்டு தெலுங்கு பேசும் மக்களுக்காக சென்னை மாநிலத்தைப் பிரித்து கர்நூலைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரம் உருவானது. ஆந்திரம் மொழி அடிப்படையில் அமைக்கப்பட்டதும் மற்ற மாநிலங்களும் மொழிவாரி அமைப்பைக் கோரின. 1952ஆம் ஆண்டு பஷல் அலி தலைமையில் சர்தார் கே.எம். பணிக்கர், எச்.என். குன்ஷ்ரு ஆகியோர் அடங்கிய மாநிலச் சீர்திருத்தக் குழுவை மத்திய அரசு நியமித்தது. மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்படுதலை இக் குழு ஆதரித்துக் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து 1956 ஜூலையில் மாநில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1970களில் எழுப்பப்பட்டது. இதைப் போன்றே மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று இதுவரை 29 கோரிக்கைகள் ஏற்கெனவே எழுந்துள்ள நிலையில் அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆந்திரத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அதைப் போலவே ஆந்திரத்தில் சித்தூர், கர்நூல், கடப்பா, ஆனந்த்பூர் மற்றும் கர்நாடகத்தில் பெல்லாரி மாவட்டங்களை இணைத்து ராயலசீமா மாநிலம் உருவாக்க வேண்டும் என சிலர் ஏற்கெனவே கோரி வருகின்றனர். இதைப் போலவே கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களைக் கொண்டு குடகு மாநிலம் அமைக்க வேண்டுமென அவ்வப்போது பேச்சு எழுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமான ஒன்றாக உள்ளது. தமிழகத்திலும் மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகமும் சென்னையைத் தலைநகராகக் கொண்டு வட தமிழகமும் இரண்டு மாநிலங்களாக உருவாக்கப்பட வேண்டும் என ஓரிரு முறை பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா மாநிலக் கோரிக்கையும் மேற்கு வங்காளத்தில் போடோ மாநிலக் கோரிக்கையும் உத்தரப்பிரதேசத்தில் ஹரித் பிரதேச மாநிலக் கோரிக்கையும் அவ்வப்போது எழுகின்றன. ஏற்கெனவே உள்ள மாநில எல்லைகளை மாற்றி புதிய மாநிலங்களை உருவாக்குவது என்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படக் கூடும்.

நம் நாட்டின் அடிப்படை அம்சமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு இப் பிரச்சினை ஊறு விளைவிக்கும் எனலாம். தனி மாநிலம் அமைவதால் மட்டும் ஒரு பகுதி வளர்ச்சி பெற்று விட முடியாது. ஏற்கெனவே பிரிக்கப்பட்டு உருவான ஜார்க்கண்ட், உத்ராஞ்சல் மற்றும் சத்தீஷ்கர் போன்றவை வளர்ச்சிக் குறியீடுகளில் இன்னும் பின்தங்கியே நிற்கின்றன.

மாநிலங்கள் குறைந்த பரப்பளவில் ஏற்படுத்தப்படும்போது தொழில், வேளாண்மை, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சில சமயங்களில் வலுவிழக்க நேரிடும். உதாரணமாக தற்போதைய தென்னக மாநிலங்களில் ஒரு பகுதியில் மழை பொய்த்துப் போனாலும் இன்னொரு பகுதியில் உள்ள நீர் வளத்தை வைத்து மாநில அரசுகள் குடிநீர், விவசாயம் போன்ற பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம்.

மொழிவாரி மாநிலங்கள் நீடிப்பதே தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையானது. தேசியத்தையும் மாநில ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ஏற்ற வகையில் பாடத் திட்டங்களை அரசாங்கங்கள் உருவாக்கி இதற்கான பணிகளில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தென்னகத்திலும் நான்கு மொழிகளுக்கும் நான்கு மாநிலங்கள் என்ற நிலை தொடர அரசியல் கட்சிகள் பாடுபட வேண்டும். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாரபட்சமற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதுடன் மாநில அரசுகள் மாநிலம் முழுவதும் சமமான பார்வையோடு ஆட்சி நடத்துவது அவசியமாகும். மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிட்டு விரைவில் சமரசத்தை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசுகள் மாநில அளவில் மக்கள் ஒற்றுமைக் குழுக்களையும் அண்டை மாநிலங்களுடன் இணைந்து அண்டை மாநில நல்லுறவுக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும். தேசிய அளவில் இக்குழுக்களைக் கண்காணித்து, சிறப்பாகச் செயல்பட நெறிப்படுத்தும் அமைப்பு ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தேச ஒற்றுமைக் குழுக்களை நாடு முழுவதும் வலைப்பின்னல் போல உருவாக்கிட வேண்டும்.

Posted in 1947, Andhra, AP, Independence, India, Karnataka, Kerala, Language, Madras Manathey, Mahrashtra, National Congress, Potti Sriramulu, Province, Rayalaseema, Regional, Republic, State, Tamil, Telengana, Telugu, Vidhrabha, Zone | Leave a Comment »