Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Protect’ Category

Jharkhand govt & Maoists – Naxals, Power, Center: Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2007

ஜார்க்கண்டில் ஒரு கேலிக்கூத்து

நீரஜா சௌத்ரி

நாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.

எனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.

அண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

மத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.

ஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப்படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.

கனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.

ஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுறம் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.

நக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.

சட்டம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.

ஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.

இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.

எந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.

கட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.

ஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.

வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.

1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.

ராஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.

Posted in Admin, Administration, Bribes, Citizen, Corruption, Government, Govt, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, kickbacks, Law, Maoists, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Neeraja, Order, Police, Power, Protect, Protection, Ranchi | Leave a Comment »

Protect the Hindu Temples and cherish the Heritage – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

திருக்கோயில்களைக் காப்போம்!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.

சிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:

  • குமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;
  • களக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;
  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;
  • ராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;
  • 1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;
  • தஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;
  • தஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;
  • வறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;
  • சமயபுரம் உண்டியலில் தங்கக் காசுகள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;
  • காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நகைத் திருட்டு;
  • மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;
  • கோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;
  • விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.

கோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.

கோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.

தஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:

அறங்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.

உண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.

சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.

1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.

கோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்தும் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.

கோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.

ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in CE, Culture, Devasthanam, Devaswom, Heritage, Hindu, Hinduism, HR, Hundi, Income, Money, priests, Protect, Protection, Radhakrishnan, Religion, Security, Temples | Leave a Comment »

Institutions averse to parting with information under RTI: Report

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தகவல் பெறும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க பல துறைகள் கோரிக்கை

‘அரசு நிர்வாகத்தில் வெளிப்படையான போக்கு இருக்க வேண்டும், ஊழல் குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தகவல் பெறும் உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், பல அரசு துறைகள் இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன’ என்று மத்திய தகவல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய தகவல் கமிஷனின் ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கோரி வருகிறது.

தகவல் கொடுப்பதால், நீதித்துறையின் தனித்தன்மை, நீதித்துறையின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பது உச்சநீதிமன்றத்தின் வாதமாக உள்ளது.

இதே போல சி.பி.ஐ., மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.,) ஆகியவையும் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளன.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை: தகவல் பெறும் உரிமை சட்டத்தின் இரண்டாவது அட்டவணை உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கிறது. ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தவிர பிற தகவல்களை இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள துறைகள் அளிக்க வேண்டாம். இந்த இரண்டாவது அட்டவணையில் தங்கள் துறையையும் சேர்க்க வேண்டும் என்பது சி.பி.ஐ.,யின் கோரிக்கையாக உள்ளது.

தேர்வு மற்றும் பணி நியமன தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கோரி வருகிறது. டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருவதால், எவ்வித தகவலும் அளிக்க டி.எம்.ஆர்.சி., முன்வர மறுக்கிறது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் செயல்பட்டால், கூடுதல் சுமை ஏற்படும் என்பது அந்த அமைப்பின் கருத்தாக உள்ளது.

கட்டணம் உயர்வு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நுகர்வோர் விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், சுரங்கம் ஆகிய அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல் நீண்ட காலத்துக்கு உரியதாக இருந்தால், முறையான அமைப்பில் இடம் பெறாத தகவல்களாக இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அந்த அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதை பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல்., தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் தகவலை அளிக்க போதிய கட்டமைப்பு வசதி இல்லை என சில துறைகள் தெரிவித்துள்ளன.

மத்திய நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய கட்டடங்கள் கட்டுமான கார்ப்பரேஷன், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் துறையையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிடில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு துறைகளை சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகின்றனர். குறைந்த கட்டணத்துக்கு அதிக தகவல்களை தெரிவிப்பதா என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுகிறது. இது போன்ற எண்ணம் கொண்ட அதிகாரிகளின் கருத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Affairs, Afraid, Architecture, authority, Avoid, BHEL, Buildings, CBI, Central Information Commission, CIC, Construction, Consumer, Corruption, Courts, CPSC, Customer, Delays, Delhi, Disclosure, DMRC, Economy, Exempt, Express, family, Fast, Government, Govt, HC, Health, Hide, HR, immunity, Info, Information, Intelligence, Judges, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Metro, mines, NBCC, Order, OSA, parliament, Protect, Protection, PSU, PSUs, Rails, Railways, Recommendation, rights, RTI, SC, Scared, Secrets, Security, Trains, Transparency, Transport, Violation, Welfare | Leave a Comment »

Rare Chozha Grain Jacket found near Wallajah

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

வாலாஜா அருகே சோழர்கால அரிய தானிய உறை

வேலூர், ஆக. 8: வேலூர் மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள அவரைக்கரை-நவ்லாக் அருகில் எழுத்துகளுடன் அரிய சோழர்கால தானிய உறை கிடைத்துள்ளது.

நவ்லாக் அரசு தோட்டப் பண்ணை அருகே செங்கல் சூளைக்காக மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த உறை 10 அடி ஆழத்தில் காணப்பட்டது.

உறையின் மேல்பகுதி நாலரை அடி சுற்றளவும், கீழ்ப்பகுதி 11 அடி சுற்றளவும், உயரம் 3 அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டதாகும்.

உறையின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் அலைவரிகளும், சிறிய மணி வரிகளும் காணப்படுகின்றன. உறையின் விளிம்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. விளிம்புக்கு கீழே புடைப்புச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தற்போது உறையின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பகுதி பூமியில் புதைந்துள்ளது.

உறையின் 8 செ.மீ விளிம்பைச் சுற்றி சோழர்கால பாணியில் “ஸ்வஸ்திஸ்ரீ கடக்கங் கொண்டான் அகமுடையான் துக்கையாண்டி தன்மம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

உறையில் காணப்படும் பெயருடையவர் ஊர்ப் பொதுமக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ இந்த தானிய சேமிப்பு உறையை தானமாக அளித்திருக்கக் கூடும். “அகமுடையான் துக்கையாண்டி’ என்பவர் சோழர் காலத்தில் அப்பகுதி படைத் தலைவராக விளங்கியதும் கல்வெட்டில் இருந்து தெரிகிறது.

உறையில் உள்ள புடைப்பு சிற்பங்கள் 5 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் விநாயகரும், வலப்புறத்தில் மூஞ்சூரும், இடப்புறத்தில் பக்தரின் உருவமும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது தொகுதியில் குதிரை வீரனும், மூன்றாவது தொகுதியில் தோளுடன்தோள் சேர்ந்த மங்கையர் மூவரும். அவர்களில் நடுவில் உள்ள மங்கையை கர்ப்பிணியாகவும் புடைப்பு சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்கையருக்கு வலப்புறம் நின்ற நிலையில் மாருதி ஒன்று காணப்படுகிறது.

நான்காவது தொகுதியில் வலப்புறமாக திரும்பி நிற்கும் யானை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-வது தொகுதியில் மத்தளம் கொட்டும் ஆடவன், நடனமாடும் மங்கை, தாளம் போடும் பெண் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்துள்ள முதல் தானிய உறை இதுவே என்கிறார் தொல்லியல் துறை, ஆர்க்காடு அகழ்வைப்பக காப்பாட்சியர் மா. கலைவாணன்.

Posted in Agriculture, Ancient, Anthropology, antiquarian, antique, antiques, archaeologist, Archaeology, Archive, Arts, Avaraikkarai, Brick, Cabinet, Chola, Choza, Chozha, Citizen, Cover, cultures, Dukkaiaandi, Dukkaiandi, dynasty, Elephant, evidence, Farmer, Farming, Ganapathy, Ganesha, Gods, Governor, Grain, Granary, History, Hold, inscriptions, Jacket, Kiln, Kings, Minister, Museum, Navlak, Navlaq, peasant, pottery, Protect, Rare, Recovery, Reside, rice, Rulers, Sand, Stone, Temple, Tools, Vallaja, Vallajah, Vellore, Vellur, Velore, Vinayak, Wallaja, Wallajah, Wheat | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

A tourist in Himalayas – Urbanization, Environment protection, Traveler

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

இமயமலைப் பகுதி மாநிலங்கள் வளமானவையா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில், இமயமலைப் பகுதியில் உள்ள சிறு நகரான சக்ரதா என்ற இடத்தில் சமீபத்தில் சில நாள்கள் தங்கினேன். அது ராணுவ கன்டோன்மென்ட் பகுதி.

கடல் மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் இருக்கிறது. டேராடூன் நகரிலிருந்து ஜீப்பில் போக மூன்றரை மணி நேரம்.

தில்லியின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க சக்ரதாவுக்குச் சென்றேன். வனத்துறையின் ஓய்வில்லத்திலிருந்து அந்த மலையைப் பார்க்க பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.

டோன்ஸ் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான அங்கு மரங்கள் அடர்ந்த காடு நேர்த்தியாக இருந்தது. பருவநிலை மிக அற்புதமாக, ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருந்தது. சொர்க்கத்துக்கு அருகிலேயே வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன்.

உத்தரப் பிரதேசத்தின் மலைப்பகுதி வளர்ச்சியில் அக்கறை செலுத்தப்படவில்லை என்பதால் தனியாகப் பிரிக்கப்பட்ட மலை மாநிலம் இது. இமாசலத்தை ஒட்டியிருக்கிறது. இம் மாநிலம் உதயமாகி 8 ஆண்டுகள் இருக்கும். அதற்குள் அதன் வளர்ச்சி அல்லது நிர்வாகம் குறித்துக் குறை கூறுவது சரியல்ல. ஆனாலும் மாநிலத்தின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பது தவறல்ல.

ராணுவத்தின் தரைப்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் சக்ரதா இருக்கிறது. இங்கு வெளிநாட்டவர் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியின் தலைவாயிலான கல்சி என்ற இடத்திலிருந்து சக்ரதா வரையுள்ள பகுதிக்குச் செல்வதாக இருந்தால் ராணுவத்தின் அனுமதியோடுதான் செல்ல முடியும்.

கல்சி என்ற இடத்தில்தான் டோன்ஸ் நதி, யமுனையில் சேர்கிறது. இந்த இடத்தில் மாமன்னர் அசோகர் பற்றிய பாறைக் கல்வெட்டு இருக்கிறது. இதை இந்தியத் தொல்லியல் துறை பராமரிக்கிறது. 19-வது நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேயர்தான் இதைக் கண்டுபிடித்தார். இந்தியாவின் இதுபோன்ற தொல்லியல் சின்னங்களையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரர்கள்தான் ஆர்வமுடன் கண்டுபிடித்துள்ளனர், நம்மவர்கள் அந்த அளவுக்குக் கண்டுபிடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்பகுதியின் பாதி வனப்பகுதியை வனத்துறை நேரடியாகவும் மற்றதை சிவிலியன்களும் நிர்வகிக்கின்றனர். இந்த பாகுபாட்டை அங்கு வளர்ந்துள்ள மரங்களிலிருந்தே அறியலாம். வனத்துறையினர் பராமரிக்கும் பகுதியில் காடு நன்றாக செழித்து வளர்ந்திருக்கிறது.

இந்தப் பிராந்தியம் முழுவதிலும் வன விலங்குகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காட்டு மான் அல்லது பன்றி மட்டுமே எப்போதாவது கண்ணில்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குஜ்ஜர்கள் வளர்க்கும் காட்டெருமைகளும் பசுக்களும்தான் கண்ணில்பட்டன. சில ஒப்பந்ததாரர்கள் மட்ட குதிரைகளை சரக்கு எடுத்துச் செல்வதற்காக வைத்துள்ளனர்.

இப்பகுதியில் ஜெüன்சார்-பப்பார் பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பஞ்ச பாண்டவர்களின் வழித் தோன்றல்கள். ஹிந்து பண்டிகைகளை இவர்கள் தங்களுக்கென்றுள்ள தனி பஞ்சாங்கப்படி கொண்டாடுகின்றனர். மிகவும் அமைதியானவர்கள். இப்பகுதியில் கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நிகழ்வதில்லை. மாடு மேய்வது தொடர்பான சிறு புகார்கள் அதிகம்.

வனப்பகுதியில் சில ஓய்வில்லங்கள் உள்ளன. சில மிகவும் வசதியாக, அழகாக உள்ளன. சில பராமரிப்பின்றி மோசமாக இருக்கின்றன. ஆனால் அற்புதமான வனத்துக்கு நடுவே இவை உள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் ரசனையே அலாதி. இங்குள்ள ஒரு ஓய்வில்லத்தில் லேடி எட்வர்ட்ஸ் என்ற பெண்மணி 3 நாள்கள் தொடர்ந்து தங்கியிருந்திருக்கிறார். தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து 7 ஆயிரம் மைல்கள் தள்ளி வந்த நாட்டில், ஆளரவமே இல்லாத மலைப்பகுதி காட்டில் இயற்கையை ரசிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல!

காட்டிலே ஒரு கிளையைக்கூட வெட்டக்கூடாது என்று 1996-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வன வளத்தைக் காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் காடுகளை அறிவியல்ரீதியாக பராமரிப்பதென்றால், அவ்வப்போது மரங்களை வெட்டி அல்லது கிளைகளைக் களைத்து சீர்படுத்த வேண்டும். பழைய மரங்களை வெட்டிவிட்டு புதிய கன்றுகளை நட வேண்டும். “”காடுகளைப் பாதுகாக்க வேண்டியவர்கள்” அதில் அக்கறை காட்டாததால்தான் நீதித்துறை தலையிட நேர்ந்தது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

உத்தரகண்ட் மலைப்பகுதிக்கு கடந்த 40 ஆண்டுகளாகப் பலமுறை சென்று வந்துள்ளேன். குமான், கர்வால் என்ற இருவகை மலைப் பகுதிகளிலும் அதிகம் பயணம் செய்துள்ளேன்.

அப்பகுதியில் கிராமங்களும் சிற்றூர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. சாலை வசதி மட்டும் ஓரளவுக்கு மேம்பட்டிருக்கிறது. கிராமங்களில் செல்போன், ஜீன்ஸ் பேண்ட், கோக-கோலா மட்டுமே புதிய நாகரிகச் சின்னங்களாகக் கண்ணில்படுகின்றன. பெரும்பாலான மக்கள் பட்டினி இல்லாமல் ஏதோ ஒரு வேளையோ இரு வேளையோ சாப்பிடுகிறார்கள் என்பதைத் தவிர எந்தப் பொருளாதார முன்னேற்றமும் இல்லை.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. கிராமங்களிலிருந்து ஒரு மைல் சுற்றளவுக்குள் ஆரம்பப்பள்ளிக்கூடம் இருக்கிறது. ஆனால் கல்வியின் தரம் உயர்வாக இல்லை. பல குடும்பங்களில் சிறுவர்களை அதிகம் படிக்க வைப்பதில்லை.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் மூன்று.

1. கல்வி பயில போய் வரும் போக்குவரத்துச் செலவு கட்டுப்படியாவதில்லை.

2. படிக்கப் போய்விட்டால் குடும்பச்செலவுக்கு வருவாய் குறைகிறது.

3. படித்து முடித்ததும் வேலையா கிடைக்கப்போகிறது?

ஓரளவு படித்த இளைஞர்கள் வேலைதேடி சமவெளியில் உள்ள நகரங்களுக்குச் செல்கின்றனர். அங்கு வீட்டு வேலை செய்கின்றனர் அல்லது ராணுவத்தில் சேர்கின்றனர்.

வனப்பகுதியில் காண்ட்ராக்டர் வேலையைச் செய்கிறவர் மட்டும் வியாபாரி போல, கொஞ்சம் காசு பார்க்கிறார். ஆனால் அதற்கு பொறுமையும், புத்திசாலித்தனமும் அவசியம்.

குடி தண்ணீர் இல்லாமல் மக்கள்படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நல்ல தண்ணீருக்காக பெண்களும் குழந்தைகளும் குடங்களைத் தூக்கிக்கொண்டு 3 அல்லது 4 மைல்தூரம் கூட செல்கின்றனர். எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் தரும் திட்டம் 1980-களில் வெகு ஆடம்பரமாக தொடங்கப்பட்டது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இன்னும் இக் கிராமங்களை அத்திட்டம் எட்டவில்லை.

தொழில் வளர்ச்சியும் அதிகம் இல்லை. காடுகளில் கிடைக்கும் பழம், இலை, பூ, மூலிகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆலை எதுவும் ஏற்படவில்லை. டேராடூன் நகர்ப் பகுதியில் மட்டும் பெயருக்கு சில தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகள் மலையின் அழகை ரசித்தபடியே சிலநாள்கள் தங்கிவிட்டுச் செல்ல கூடாரங்களை நிறுவலாம்; அங்கு சாலை, குடிநீர், கழிப்பிடம் போன்ற குறைந்தபட்ச வசதிகளை மட்டும் செய்துதரலாம் என்று இப்போது யோசனை கூறப்பட்டிருக்கிறது.

மலையேறும் சாகசத்தை நிகழ்த்த நினைப்பவர்களை ஈர்க்க இந்த சுற்றுலாத் திட்டம் பயன்படும். ஆனால் இதனால் நிரந்தர வருவாய் கிடைக்காது.

நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆனபிறகும், விவசாயியோ, கிராமவாசியோ தான் பிறந்த மண்ணிலிருந்துகொண்டே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கும் சூழலை ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

முன்னேற வேண்டும் என்றால் சொந்த ஊரிலிருந்து வெளியேறி நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைமையை நாடு முழுவதும் ஏற்படுத்திவிட்டோம்.

தேசியக் கொள்கைகளை வகுப்பதில் நாம் அடைந்துள்ள தோல்விக்கு இது நல்ல உதாரணம்.

மாநிலத்தின் அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் திறமையானவர்கள், நல்லவர்கள். மாநில முதல்வர் நாராயண் தத் திவாரி நல்ல அனுபவம் பெற்ற தேர்ந்த நிர்வாகி. அப்படியும் மாநிலத்தின் வளர்ச்சி சமச்சீரானதாகவோ, மெச்சத்தகுந்ததாகவோ இல்லை.

இந்த மாநிலத்தில் 70 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், ஆனால் 80 வளர்ச்சிக் கோட்டங்கள் உள்ளன. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோட்டங்களின் தலைவர்களுக்கும் இடையே, வருவாயைப் பகிர்ந்துகொள்ள போட்டி ஏற்படும். இது இப்பகுதி வளர்ச்சிக்கு உகந்ததல்ல. வளர்ச்சி கோட்டங்களையும் பேரவைத் தொகுதிகளுக்குச் சம எண்ணிக்கையில் இருக்குமாறு முதலிலேயே பிரித்திருக்க வேண்டும்.

மக்களின் வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான ரூபாய்களை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கினாலும் அவற்றைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தும் போக்கு எங்குமே இல்லை. மக்கள் இன்னமும் விழிப்படையாமலேயே இருக்கின்றனர் என்பது உண்மையே.

எனவே ஆட்சியாளர்கள் இந்த நிலைமையை மாற்ற நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். எல்லாம் வழக்கம்போலவே நடப்பதால் முன்னேற்றம் வந்துவிடாது. முன்னேற்றம் இல்லாவிட்டால் மோசமாகப் போய்விடும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

———————————————————————————————————

வன வளம் காப்போம்!

ஆர்.எஸ். நாராயணன்

கடந்த இரு நூற்றாண்டுகளில் வன வளம் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. தாவரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்களும் கணிசமாக அழிந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் மனிதர்களே காரணம்!

அரசு தரும் ஒரு புள்ளிவிவரப்படி 1875-லிருந்து 1925 வரை 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 50 ஆயிரம் சிறுத்தைகள், 2 லட்சம் ஓநாய்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. 1925-க்குப் பின் இன்றுவரை கொல்லப்பட்டவை எவ்வளவு?~வனங்கள் சுத்தமாகிவிட்டன. பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த வேட்டையை விட இன்றைய ஆட்சியில் வேட்டையின் விளைவால் காடுகளில் சிங்கம், புலி, நரி போன்ற விலங்குகளின் எண்ணிக்கை, கவலை தரும் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஐம்பதாண்டு முதிர்ந்த தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், கருங்காலி, ரோஸ்வுட் எதுவும் இல்லை. ஒருகாலத்தில் காட்டில் ஒரு வீரப்பன் இருந்தான். இப்போது நாட்டில் இருந்து கொண்டே பல வீரப்பர்கள் வனத்தை அழித்து வருகிறார்கள். வனக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் மரவியாபாரிகளுக்கு வைரம் பாய்ந்த மரம் கிடைக்கும். பன்மடங்கு வனச் செல்வங்கள் கொள்ளை போகும்போது, ஒருபக்கம் பழியை வனத்தில் வாழ்வுரிமை கேட்கும் பழங்குடிகள் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இப்போது ஒரு புதிய பசி வந்துள்ளது. அதன் பெயர் “வளர்ச்சி’. வளர்ச்சி என்ற போர்வையில் வனத்தைச் சுரண்ட புதிய வரையறையைப் பெரும் பொருள்செலவில் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் வனம் மற்றும் சூழலியல் அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு “”வனம் என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஒரு வரையறை விளக்கத்தை வழங்கும்படியும், இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட நெளிவுசுளிவுகளிலிருந்து தப்பும் ஆலோசனைகளை வழங்கும்படியும், அதற்குரிய கட்டணத்தையும் கேட்டு பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கைவிட்டிருந்தது. பதில் அனுப்பியிருந்த பல ஆய்வு நிறுவனங்களில் மிகக் குறைந்த கட்டணத்திற்கு அசோகா அறக்கட்டளை முன்வந்தது. அப்பணி முடிவுற்று அது தொடர்பான முடிவுக்கூட்டம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது. அதில் “வனத்தின் வரையறை’ முன்வைக்கப்பட்டது.

வனம் என்றால் என்ன? இதற்கு ஐ.நா. அமைப்புகள் வழங்கும் அறிக்கைகள் உள்ளன. வனம் பற்றிய வரையறை வகைகள், பணிகள், நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை அறிக்கைகள் வனம் – மற்றும் சூழலியல் அமைச்சக நூலகத்தில் நிறையவே உள்ளன. இவ்வளவு இருந்தும் புதிய வரையறை இப்போது தேவைப்படுகிறது. ஓட்டைகள் பல போட்டு ஒழுகும் பானையில் மேலும் ஓர் ஓட்டை போட ஆலோசகர்களும் அலுவலர்களும் முயல்வது ஏன்? அவர்கள் அப்படி என்ன வரையறுத்தார்கள்?

“”வனம் என்பது அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி. உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பாதுகாப்பு அடிப்படையில் சட்டரீதியாக வனம் என்று பதிவு செய்யப்பட்ட நிலம். இப்படிப்பட்ட நிலப்பிரிவு எல்லைகளுக்குட்பட்ட ஏரி, குளம், நதி போன்ற நீர்நிலைகள், மரங்கள், புல்வெளிகள், நன்செய், புன்செய் நிலங்கள், பாலைவனம், மண்ணியல் ஆய்விடம், பனி மண்டலங்கள்…..”

இந்தியாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக – நீர் மின்திட்ட அணைகள், ராணுவக் கட்டுமானம், சுரங்கம், குடியிருப்பு மாற்றம், நெடுஞ்சாலை.. போன்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக – பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 1300 வழக்குகள் – வளர்ச்சிக்கு வனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாமல் உள்ளனவாம். இப்போது புரிகிறதா? நாட்டில் உள்ள நரிகள் ரொம்பவும் பொல்லாதவை. வளர்ச்சி என்ற போர்வையில் வனங்களைச் சுரண்ட பெரு முதலாளிகளுக்குப் பல புதிய வாய்ப்புகள் வழங்கவும், காலம்காலமாக வனமே வாழ்வு என்று வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளுக்குப் பச்சைத் துரோகமும் செய்ய இப் புதிய வரையறை உதவும்.

வழக்கில் சிக்கியுள்ள பகுதி 6 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர்தான். இன்று மரம்வெட்டுவதற்காக வனம் என்று ஒதுக்கப்பட்ட காடுகளின் பரப்பு 3.1 கோடி ஹெக்டேர், காப்பிடம் என்று பதிவான நிலப்பரப்பு 1.5 கோடி ஹெக்டேர். ஆக மொத்தம் 4.6 கோடி ஹெக்டேர் நிலத்தின் சொந்தக்காரர், ஒரு மகாநிலப்பிரபுவாகத் திகழ்ந்துவரும் அரசு, 8 கோடி வனவாசிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்குக் கட்டுப்பட்ட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அனுபவப் பாத்தியதைக் கொண்டாடி சொந்தமாக்கிக் கொள்ளும் தந்திரம் நாட்டு நரிகளுக்கு உண்டு. அந்த உரிமை காட்டு நரிகளுக்கு இல்லை. டன் டன்னாக மரம் வெட்டிக் கொள்ளை அடிக்கப்படுவது ஒருபுறம். பாவப்பட்ட வனவாசிகள் தங்கள் ஆடு, மாடுகளை வனங்களுக்கு ஓட்டிச் சென்று மேய்க்க அவர்களுக்கு உரிமை இருந்தும் உரிமை மறுக்கப்படுகிறது. வனவாசிகள்தான் வனத்தை அழிப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. காடுகளில் உலர்ந்து விழும் விறகைப் பொறுக்குவதும், விதை, பழம் பொறுக்குவதும் மரங்களை வெட்டுவதும் ஒன்றாகிவிடுமா?

1970-களில்தான் காடுகளில் வனவிலங்குகள் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார்கள். மரக்களவுபற்றி கண்டுகொள்ளவில்லை. 1972-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் காரணமாக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் உருப்பெற்றுக் காட்டு விலங்குகளை அவற்றின் இயல்பான சூழலில் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இப்படி வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டதைப்போல் வனவாசிகளின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. இந்தக் காலகட்டத்தில்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் தாசோலியில் வனவாசிகள் ஒன்றுகூடி சிப்கோ இயக்கத்தை உருவாக்கினர். இதை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சாந்தி பிரசாத் பட் தொடங்கிவைத்து தலைமையேற்று நடத்தினார்.

இமயமலைக் காடுகளில் சட்டபூர்வமாக மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரர்களை மரங்களை வெட்ட முடியாதபடி மரத்தை இரு கரங்களால் அணைத்துக் கொண்டு, “”முதலில் எங்களை வெட்டிவிட்டு மரங்களை வெட்டுங்கள்” என்று வனவாசிகள் கூறினர். மலைக்காடுகளில் மரங்களை வெட்டும்போது நிலச்சரிவும் வெள்ளமும் உருவாகும் என்ற உண்மை வனவாசிகளுக்கு நன்கு தெரியும். 1972, 73 ஆண்டுகளில் “சிப்கோ’ இயக்கம் தீவிரமானபோது சுற்றுச்சூழல் காப்பு இயக்கத் தலைவர்கள் சுந்தர்லால் பகுகுணா, வந்தனா சிவா ஆகியோர் அதில் பங்கேற்றனர். அதுபோன்ற இயக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருப்பெறவில்லை. குறிப்பாக கொடைக்கானல் அமைந்துள்ள பழனிமலைக்காடுகளில் வன அழிவு காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாகும்போது ஆண்டுதோறும் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படுகிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது எவ்வளவோ குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் கொண்டுவந்த நெருக்கடிகால ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் பொற்காலம் எனலாம். 1980-ல் நெருக்கடிகால வனப்பாதுகாப்புச் சட்டம் வந்தது. மாநில அரசுகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு வனத்துறை ஊழல்கள் – மரம் கடத்தல் – மலிந்திருந்த காலகட்டத்தில், மத்திய அரசு அனுமதி இல்லாமல் வனங்களில் மாநிலங்கள் கைவைக்க இயலவில்லை. பின்னர் ராஜீவ்காந்தி காலத்திலும் பழனிமலைப் பாதுகாப்பு உள்பட வனப்புனர் வாழ்வுக்கு நிறைய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. வனவாசிகளின் வாழ்வுரிமை மேலும் மேலும் மறுக்கப்பட்டே வந்துள்ளது. வனத்தை வரையறை செய்யும்போது, வனவாழ் மக்களின் உரிமை அன்று சற்று கவனம் பெற்றது. இன்று முற்றிலும் மறுக்கப்படுகிறது. வனவிஷயத்தில் மட்டுமாவது வருவாய் நோக்கை மறந்துவிட்டு, உயிர்ச்சூழல் – சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதல் மரியாதை வழங்க வேண்டும். வனத்திலே பிறந்து, வனத்திலே வளர்ந்து, வனத்திலே வாழ்ந்து மடியும் வனவாசிகளை வெளியேற்றும் ஒரு பாவச்செயலை இனியும் தொடர வேண்டாம்.

“”இந்தப் பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் அவற்றின் நலன்களுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது. எந்த உயிரினமும் அடுத்த உயிரின உரிமைகளைப் பறிப்பது பெரும்பாவம்” என்று ஈசோபநிஷதம் கூறுகிறது. காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க. அதைக் காப்பாற்றுங்க!

——————————————————————————————————————————-
முசௌரி உணர்த்திய பாடம்!

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

கடந்த வாரம் முசௌரி சென்றிருந்தேன். பிரிட்டிஷ்காரர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது, அவர்கள் விரும்பிக் குடியேறிய மலைவாசஸ்தலத்தில் முசௌரியும் ஒன்று. தில்லிக்கு வடக்கே 350 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊருக்கு டேராடூனிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான தேசிய பயிற்சி மையம் இங்குதான் இருக்கிறது. இதர மத்திய அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் அடிப்படைப் பயிற்சி அளிக்கும் நிலையமும் இங்கு இருக்கிறது. இதை மலைகளின் ராணி என்றும் அழைக்கின்றனர்.

1998-ல் ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்ற அதிகாரிகளுக்கு, நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து உரை நிகழ்த்த சென்றிருந்தேன். 160 அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்களில் பாதிப்பேர் நேரடியாக ஐ.ஏ.எஸ். ஆனவர்கள். மற்றவர்கள் வெவ்வேறு மாநில அரசுகளால் ஐ.ஏ.எஸ். பயிற்சி பெறத் தேர்வு செய்து அனுப்பப்பட்ட அனுபவம் வாய்ந்த அதிகாரிகள். அமெரிக்காவைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒருவராக நான் அங்கு சென்றிருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பயிற்சி தர டியூக் பல்கலைக்கழகத்தின் உதவியை இந்திய அரசு நாடியிருந்தது.

டேராடூனிலிருந்து காரில் சென்றேன். “”அடடா, சுற்றுச்சூழல் எவ்வளவு பச்சைப் பசேல் என்று பார்க்க ரம்மியமாக இருக்கிறது” என்று அகாதெமியின் காரை ஓட்டிவந்த டிரைவரைப் பார்த்துக் கூறினேன். அவர் சொன்ன பதில் மிகவும் சுவாரசியமாக இருந்தது. 1980-களில் லக்னெüவில் உயர் பதவியில் இருந்த ஓர் அதிகாரி, முசௌரியில் மரங்களை வெட்டவோ, நகராட்சிக்குள் புதிய கட்டடங்களைக் கட்டவோ அனுமதிக்கவே முடியாது என்று கண்டிப்பாகக் கூறி அமல்படுத்தியதால் இந்தப் பிரதேசம் பிழைத்தது என்றார். அவர் சொன்ன அந்த அதிகாரி நான்தான்.

நைனிதாலிலும் முசௌரியிலும் மரங்களை வெட்டுவதிலும் கட்டடங்களைக் கட்டுவதிலும் கண்மூடித்தனமான வேகத்தில் சிலர் இறங்கிவிட்டனர் என்று எனக்குத் தகவல் வந்தது. உடனே அந்த தடை உத்தரவைப் பிறப்பித்தேன். நைனிதால், முசௌரியில் யாரும் மரங்களை வெட்டக்கூடாது, முசௌரி மலையில் யாரும் பாறைகளை வெட்டவோ, இதர கனிமங்களைச் சேகரிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டேன்.

“”மலைப்பகுதியின் வளர்ச்சியைத் தடுக்கிறேன், மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் தடையாக இருக்கிறேன்” என்றெல்லாம் என்னைப்பற்றி குற்றம்சாட்டி எனக்கு எதிராக பலத்த எதிர்ப்பு எழுந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைப் பலர் மிரட்டினார்கள். அதில் கொலை மிரட்டலும் உண்டு. முதலமைச்சரைக்கூட தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் உறுதியாக என்னை ஆதரித்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு நான் போட்ட உத்தரவினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நானே பார்த்து பூரித்துப் போனேன்.

காலாகாலத்துக்கும் மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தற்பெருமையாக இதை நான் கூறவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் நல்ல முடிவில் அதிகாரிகள் உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். ஊழல் அரசியல்வாதியும் முதுகெலும்பில்லாத அதிகாரிகளும்தான், மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நல்ல முடிவுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதை மேலும் ஒரு நல்ல உதாரணம் கொண்டு விளக்க விரும்புகிறேன்.

1960-களில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 1970-களின் பிற்பகுதியில் அதுவே சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்குத் தமிழகம்தான் முன்னோடி. தரக்குறைவான அரிசி, தானியங்களைப் பயன்படுத்துவார்கள், கணக்கில் தில்லுமுல்லு செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்வார்கள் என்றெல்லாம் இத் திட்டங்களை எதிர்த்தவர்கள் கூறினார்கள். ஆனால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உறுதியாக இருந்ததால் இத்திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் பலனை மாநிலம் அனுபவித்து வருகிறது. சத்துணவு காரணமாக தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் உடலும் – அறிவும் திடமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது.

தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்தால் எத்தனையோ நன்மைகள் மாநிலத்துக்குக் கிடைத்தாலும் சத்துணவுத் திட்ட பலன் அவற்றில் முதன்மை பெறுகிறது. ஒரு கொள்கை முடிவால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடிய நல்ல பலன்களை ஊகித்து மதிப்பிட முடியாது; ஆனாலும் சில நல்ல நிர்வாகத்துக்கு சில கடுமையான, உறுதியான முடிவுகள் மிகமிக அவசியம்.

ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தின் காரை ஓட்டிய அந்த டிரைவர், அந்த அகாதெமி மாணவர்களிடையே மிகவும் பிரபலமான குதிரைப் பயிற்றுனர் நவல் கிஷோர் என்பவரின் உறவினர். அதை அவர் சொன்னபோது என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்ததால் சிரிப்பும் பொத்துக்கொண்டு வந்தது. “என்னப்பா, இப்போதும் பயிற்சி மாணவர்கள் குதிரையை ஓட்ட ஆரம்பித்து கீழே விழுகிறார்களா?’ என்று கேட்டேன். ஆமாம் சார், ஆனால் ஒரு வித்தியாசம், பழைய மாணவர்களைப் போல இப்போதுள்ள இளைஞர்களுக்கு எலும்பு உறுதியாக இல்லை, அதிக நாள்கள் மருத்துவமனையில் படுத்துவிடுகிறார்கள் என்றார் அதே உற்சாகத்துடன்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் பழைய சாதம் சாப்பிட்டுவிட்டு தொலைவில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்தோ, சைக்கிளிலோ போனார்கள். வீட்டு வேலைகளையும் தோட்ட வேலைகளையும் செய்தார்கள். கிணற்றிலிருந்து நீர் இறைத்துத் தந்தார்கள். இப்போது நொறுக்குத் தீனி தின்றுவிட்டு பஸ்ஸிலோ, மோட்டார் சைக்கிள்களிலோ பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். எனவே உடலில் வலு இல்லை. பள்ளிக்கூடத்தில் சத்துணவைப் போட்டு ஊருக்கே உரம் ஊட்டிய அந்த நாள் எங்கே, வீட்டிலேயே சாப்பிட்டு வலுவில்லாமல் இருக்கும் இந்த நாள் எங்கே?

எல்லோருக்கும் வரும் சந்தேகம் எனக்கும் வந்ததால் பயிற்சி அகாதெமியின் இயக்குநர் ருத்ர கங்காதரனிடம், “”இப்போதைய மாணவர்களின் தரம் எப்படி?” என்று கேட்டேன். “நான் கடந்த ஆறு ஆண்டுகளாக இயக்குநராக இருக்கிறேன்; இப்போது பயிற்சிக்கு வருகிறவர்கள், பழைய மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாது உலக ஞானத்திலும் அவர்களுடைய பாடத்திலும் சிறந்து விளங்குகின்றனர். கடுமையான பயிற்சிகளைக்கூட எளிதாக முடிக்கின்றனர். நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார்.

நான் ஏற்கெனவே கூறியபடி, டியூக் பல்கலைக்கழகம் சார்பில் சென்றிருந்தேன். என்னுடன் வந்த இதர பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. இந்த பல்கலைக்கழகம் ஹார்வர்ட், ஸ்டேன்ஃபோர்டு, யேல் பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. இங்கு மட்டும் அல்ல, உலகின் முன்னணி பல்கலைக் கழகங்கள் பலவற்றில் இந்தியர்கள்தான் இப்போது பேராசிரியர்களாகவும் மாணவர்களாகவும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த அளவுக்கு அறிவில் சிறந்தவர்கள் இந்த நாட்டில் இருந்தும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் உழல்வதும், அரசியல்வாதிகள் அப்பட்டமான சுயநலத்தில் மிதப்பதும், அதிகாரவர்க்கம் அவர்களுக்கு அடிபணிவதும் தாளமுடியாத வருத்தத்தைத் தருகிறது. நிர்வாகச் சீர்திருத்தம் எந்த அளவுக்கு அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.

முசௌரியில் பார்த்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் மத்தியதர வகுப்பைச் சேர்ந்தவர்கள். சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். முன்பைவிட கடைகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகமாகியிருக்கிறது. ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு தென்னிந்தியச் சிற்றுண்டியகமும் உடுப்பி ஓட்டலும் கண்ணில்பட்டன. தென்னாட்டு இட்லி, வடை, சாம்பார், மசாலா தோசை வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

(கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சரவைச் செயலர்)

Posted in Adventure, Analysis, Animals, Archeology, Ashoka, Ashokar, ASI, Asoka, Asokar, Backgrounder, Cantonement, City, dead, Deforestation, Dehradoon, Dehradun, Delhi, Economy, Education, Environment, Finances, Forests, Fox, Ganga, Ganges, Govt, Growth, guns, Haridwar, Hiking, Hills, Himachal, HP, Hunt, Hunting, Industry, infrastructure, Jobs, Kill, Kulu, Lives, Manali, Metro, Military, Mountains, Mussoori, Mussouri, Nature, Pollution, Protect, Protection, Rafting, Rishikesh, River, Rural, Sandalwood, Shot, Sports, State, Statistics, Stats, Tour, Tourism, Tourist, Transport, Traveler, Tree, Trees, Trekking, Tribals, UP, Urbanization, Uthar Pradesh, Utharakand, Utharakhand, Utharanchal, Utharkhand, Uttar Pradesh, Uttarakand, Uttarakhand, Uttaranchal, Uttarkand, Uttarkhand, UttarPradesh, Uttrakand, Veerappan, Village, Water, Welfare, Wild, Wolf, Wolves | Leave a Comment »