Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘profile’ Category

Writer Tha Naa Kumarasamy – Biosketch, Profile: Charukesi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 24, 2008

தொடர்கட்டுரை  – எழுதுங்கள் ஒரு கடிதம்!

சாருகேசி

தமிழ் எழுத்தாளர் த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைச் சென்ற வாரம் பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில், சுமார் நூறு பேரே கலந்துகொண்ட மிக எளிமையான நிகழ்ச்சியாக, அவர் குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அவருடைய உறவினர்கள் சிலருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

த.நா. குமாரசுவாமியின் மகன் அசுவினிகுமார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், த.நா.கு.வுடன் நெருங்கிப் பழகிய சா. கந்தசாமி பேசும்போது, அவருடைய எளிமையையும் நட்புணர்வையும் நினைவுகூர்ந்தார். ஒருமுறை ஆனந்தகுமாரசாமியின் “த டான்ஸ் ஆஃப் சிவா’ என்ற நூல் தமக்குத் தேவைப்படுகிறது என்றாராம் கந்தசாமி. பரணில் இருந்த பெட்டியில் இருந்து புத்தகத்தைத் தேடி எடுத்துக்கொண்டு இரண்டு மாடி ஏறி வந்து கொடுத்தாராம் குமாரசுவாமி.

“”த.நா. குமாரசுவாமியின் நூல்கள் இப்போது அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டன. நான் க.நா.சு.வின் நூல்களும், த.நா. குமாரசுவாமியின் நூல்களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் நூல்களும் அரசுடைமை ஆக்கப்படவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வரும். அப்படியும், என் கடிதம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடத்தில் சேர்ந்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. நான் செலவழித்தது என்னவோ ஏழே ரூபாய்தான். அதேபோல, சாகித்திய அகடமிக்கு நீங்களும் ஒரு கடிதம் எழுதுங்கள். “த.நா. குமாரசுவாமியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதைக் கவனிப்பார்கள். அவருடைய நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். நாம் சோம்பல்பட்டு, கடிதம் அனுப்பாமல் மட்டும் இருக்கக் கூடாது!” என்றார் சா. கந்தசாமி.

இன்றைய தலைமுறைக்கு த.நா. குமாரசுவாமி என்ற ஓர் எழுத்தாளர் பற்றி அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா முதலிய நாவல்களையும், சந்திர கிரகணம், கன்யாகுமரி, இக்கரையும் அக்கரையும், நீலாம்பரி ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் படித்தவர்கள், அவர் கையாண்ட தமிழ் நடையில் சொக்கிப் போய் விடுவார்கள். “அரசு’ பதில்களில் ஒரு முறை எஸ்.ஏ.பி. த.நா. குமாரசுவாமியின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, த.நா.கு. மட்டும் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல், தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து எழுதுவார்’ என்று கூறியிருக்கிறார்.

வங்க நாவலாசிரியர் பங்க்கிம் சந்திரரின் “விஷ விருட்சம்’, “ஆனந்த மடம்’, “கபால குண்டலா’, “கிருஷ்ணகாந்தன்’, “உயில்’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்தவர். தாகூரின் நாவல்கள், சிறுகதைகளையும், பின்னர் தாரா சங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதன்’ முதலிய நாவல்களையும் த.நா.கு. மொழி பெயர்த்திருக்கிறார்.

ஏ.கே.செட்டியார் காந்திஜி பற்றிய டாகுமென்டரி படத்தைத் தயாரித்தபோது, விளக்க உரையை எழுதிக் கொடுத்தவர் த.நா.கு.

நேதாஜியின் “புது வழி’, “இளைஞன் கனவு’ ஆகிய நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். காந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட அமைக்கப்பட்ட குழுவில் அவரும் பணியாற்றியிருக்கிறார். அவருடைய நூல்கள் மட்டுமல்லாது, வாழ்க்கை வரலாற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். (கருத்து வேறுபாடு காரணமாக, பிறகு அந்தப் பணியிலிருந்து விலகி வந்துவிட்டாராம்.)

அவருடைய சிறிய நாவல் “ஒட்டுச் செடி’ கிராமப்புறத்துக் காதல் காவியம். பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்படும்போது வீட்டையும் கிராமத்தையும் இழந்து வரும் விவசாயியின் பின்புலம் கொண்ட கதை. முடிவு புரட்சிகரமான முடிவு. இன்றைய நவீன எழுத்தாளர் எவரும் கூட நினைத்துப் பார்கக முடியாதபடி அமைந்திருந்தது. (திரைக்கதை தேடி ஓடுபவர்கள் “ஒட்டுச் செடி’ நாவலை ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்!)

காந்திஜியின் கொள்கைகளில் இயற்கையாகவே ஈடுபாடு கொண்டவர் த.நா.கு.

“”சென்னையை அடுத்த பாடி கிராமத்தில், தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஓர் ஏக்கரை ஜாதிக் கலவரத்தால் வீடுகளை இழந்த ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக வழங்கி, அகிம்சை முறையில் தங்களுடைய உரிமைகளை நிலை நாட்டத் தூண்டினார் த.நா.கு. ஊர் மக்கள் அவரை “காந்தி ஐயர்’ என்று அழைத்தனர்.

“”சிவன் கோயில் பல்லக்கில் காந்திஜியின் படத்தை வைத்து ஊர்வலமாக ஊர் வீதிகளில் வலம் வந்த பிறகு, சேரிப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய போது, சாதிக் கட்டுப்பாட்டை மீறி நாங்கள் வர முடியாது என்று மேட்டுக் குடியினர் மறுத்தனர். நானும் என்னுடைய இரு சகோதரர்களும் மற்றும் ஓர் உறவினரும் பல்லக்கைத் தூக்கி, ஆதி திராவிடர் வசித்த தெருவில் கொண்டு நிறுத்தினோம். அப்போது அந்த மக்களின் உள்ளத்தில் ஏற்பட்ட மட்டற்ற மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது” என்று த.நா.கு. கூறியதாக, அவருடைய டைரி குறிப்புகளிலிருந்து “சக்தி’ சீனிவாசன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

“”சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஆகியோர் பாடல்களில் அவருக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. சங்கக் கவிதைகள் பலவற்றை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்கிறார் சா. கந்தசாமி. அப்படியானால் ஏ.கே. ராமானுஜன் மொழிபெயர்ப்புக்கு முன்னேயே த.நா.கு.வின் கவிதைகள் வெளியாகி இருக்க வேண்டுமே? “”பிரசுரம் பற்றி அவர் அதிகம் கவலைப்பட்டதே இல்லை!” என்கிறார் கந்தசாமி, தன் கட்டுரையில்.

காஞ்சிப் பெரியவர் பக்தர்கள் சிலருடன் பாடியில் வசித்த த.நா.குமாரசுவாமியின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். அவருடைய எதிர்பாராத வருகை த.நா.கு. குடும்பத்தினரை மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியதாம். “த ஏஜ் ஆஃப் சங்கரா’ என்ற நூலை த.நா.கு.வின் தகப்பனார் எழுதியிருந்தார். அதில் பல புதிய தகவல்களைச் சேர்த்து முழுமையான ஆய்வு நூலாக த.நா.கு. உருவாக்கினார் என்று கூறுகிறார் “சக்தி’ சீனிவாசன்.

சுமார் 25 மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர் த.நா.கு. அவருடைய குமாரர் அசுவினிகுமார் தம் தந்தை பற்றி எழுதிய நூல் ஒன்றை சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கிறது. தவிர, மறைந்த எழுத்தாளர் “முகுந்தன்’ இலக்கியச் சிந்தனைக்காக எழுதிய “குடத்திலிட்ட விளக்கு’ என்ற வானதி பதிப்பக வெளியீடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாயிற்று.

தேவனின் இனிய நண்பர் த.நா.குமாரசுவாமி. விகடன் தீபாவளி மலர் தயாரிக்கும் சமயம் த.நா.கு.வுடன் கலந்து ஆலோசனை செய்ய, வீடு தேடி வருவாராம்.

தாகூரை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார் த.நா.குமாரசுவாமி. ஆனால் சாந்திநிகேதனில் தங்கி, வங்காள மொழி கற்க முயன்றும், அங்கே போதிய ஆதரவு கிடைக்காததால், தாமே பிறகு அம்மொழியைக் கற்றவர்.

இத்தனை தகுதிகள் இருக்கிற ஓர் எழுத்தாளரின் நூற்றாண்டு விழாவை விரிவாக, கருத்தரங்கம், ஆய்வுரைகள், சொற்பொழிவுகள் என்று குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் கொண்டாடலாம். சாகித்திய அகாதெமி கொண்டாடுகிறதோ இல்லையோ, தமிழ் எழுத்தாளர் சங்கம் கொண்டாடலாம். தமிழ் அன்பர்கள் கொண்டாடலாம். த.நா.கு.வின் படைப்புகளை ரசித்த நண்பர்கள் கொண்டாடலாம். தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் இவரைக் கண்டுகொள்ளாததுதான் வருத்தம் தரும் செய்தி.

“கல்கி’, உ.வே.சா., மஞ்சேரி ஈசுவரன், பி.எஸ். ராமையா, க.நா.சு., கி.வா.ஜ. தவிர தம் சகோதரர் த.நா. சேனாபதி ஆகியோரைப் பற்றி நிறையப் பேசுவாராம். ஆனால் அவர் நெருங்கிப் பழகி, அதிகம் குறிப்பிடுவது “தேவன்’ பற்றியும், “மர்ரே’ ராஜம் பற்றியும்தான் என்கிறார் சா. கந்தசாமி.
———————————————————————————————————————————————-

சாரா ஆப்ரகாம் எண்பது வயதுப் பெண்மணி. பெங்களூரில் பெரிய ஆர்ட் காலரி நடத்தி வந்தார். அந்த காலரியிலேயே நடன நிகழ்ச்சிகளும் கூட நடத்தியிருக்கிறார். அவருடைய 80-வது வயதைக் கொண்டாடுகிற வகையில், அவர் ஐம்பது ஆண்டுகளாகச் சேர்த்திருந்த ஓவியங்களை சென்னையில் செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள “கேலரி சுமுகா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.பிப்ரவரி மாதம் 23ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் கண்காட்சியைக் காணலாம்.

லட்சுமண் கெüட், கே.ஜி.சுப்பிரமணியன், எம்.எஃப். ஹூசைன், பி.வி. ஜானகிராமன், கிருஷேன் கன்னா, ராம்குமார் என்று வெவ்வேறு பிரபல ஓவியர்களின் ஓவியங்களில், தனித்துத் தெரிகிற மூன்று ஓவியங்கள் இருக்கின்றன.

ஒன்று ரவிவர்மாவின் ஓவியம். ஒரு பெண் உல்லாசமாக அமர்ந்திருக்கிறாள். ஆனால் என்ன ஒய்யாரம்!

இரண்டாவது ஷ்யாமல் தத்தா ரே வரைந்தது. ஒரு பெரிய, சிதைந்த பாத்திரம். ஆளுயர தடிகளைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் காப்பது போல் நிற்கும் மனிதர்கள்.

மூன்றாவது, மிகப்பெரிய குடும்பச் சித்திரம். சாரா ஆபிரகாம் கணவர், குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் இந்த ஓவியத்தின் தத்ரூபம் நம்மை அசத்துகிறது. ஓவியர் பிகாஷ் பட்டாசார்ஜி.

புரியாத ஓவியங்கள் என்று ஒன்றிரண்டு இருக்கின்றன. (நமக்குப் புரியவில்லை என்பதற்காக அவை ஓவியங்களாக இல்லாமல் போய்விடுமா என்ன?)

ஐம்பது வருடங்களாகத் தொடர்ந்து ஓவியங்களைச் சேகரித்து வைத்திருக்கும் சாராவை, எம்.எஃப். ஹூசைன் ஓர் ஓவியமாக வரைந்திருக்கிறார்!

Posted in artists, Arts, Author, Biosketch, Chaarukesi, Charukesi, Coomarasaami, Coomarasaamy, Coomarasami, Coomarasamy, Devan, Display, Exhibitions, Faces, Famous, Gallery, Gandhi, Kumarasaami, Kumarasaamy, Kumarasami, Kumarasamy, Kumaraswami, Kumaraswamy, Mahatma, names, Painters, Paintings, people, profile, Translations, Translator, Works, Writer | Leave a Comment »

Gauri Narayan chat – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

மேடை: எல்லோருக்குள்ளும் காட்டுத் தீ!

பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், இயக்குனர், மொழிபெயர்ப்பாளர் என கெüரி ராம்நாராயணுக்குப் பல முகங்கள். விஜய் டென்டுல்கர் மராட்டிய மொழியில் எழுதிய கன்யாதான், மித்ராட்சிகோஷ்ட் ஆகிய நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். கல்கியின் பன்னிரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுதவிர சிறுவர்களுக்கான எண்ணற்ற சிறுகதைகள் எழுதியிருக்கிறார். “ஜஸ்ட் அஸ்’ ( JustUs) என்னும் பெயரில் நமது கலை, பண்பாட்டு வடிவங்களை மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில நாடகமாக அரங்கேற்றி வருகிறார். இவரின் இயக்கத்தில் உருவான கருப்பு குதிரை என்னும் ஆங்கில நாடகம், இந்தாண்டுக்கான தில்லி, மகேந்திரா தியேட்டர் எக்ஸசலன்சி அவார்டைப் பெற்றிருக்கிறது. இம்மாதம் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய மூன்று நாட்களும் சென்னை, மியூசியம் தியேட்டரில் அரங்கேற இருக்கிறது. (தன்னைப் பற்றி இவர் சொள்லிக் கொள்ளாத 3 சுவாரஸ்யமான தகவல்கள்.

1. இவர் கல்கியின் பேத்தி,

2. இசை மேதை எம்.எஸ்.ஸின் சிஷ்யை,

3. முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் தாரகை ராமநாராயணனின் மனைவி.)

இவரின் மூன்றாவது நாடகமான “காட்டுத் தீ’ (). இதற்கு முந்தைய நாடகங்களைப் பற்றியும், தற்போதைய காட்டுத் தீ குறித்தும் கெüரி ராம்நாராயன் நம்மிடம் பேசியதிலிருந்து…

“”ஜஸ்ட் அஸ் நாடகக் கம்பெனியை 2005-ல் ஆரம்பித்தோம். எங்களுடையது மிகச் சிறிய குழுதான். மனித நேயத்தை, நமது பாரம்பரியமான கலை வடிவங்களை நாடகத்தின் மூலம் வெகுஜன மக்களுக்குக் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம். என்னைப் பொறுத்தவரை தமிழர், மராட்டியர், வங்காளியர் என்ற பேதமெல்லாம் கிடையாது. எங்களின் முதல் நாடகமே புகழ்பெற்ற மராட்டியக் கவிஞரான அருண் கோலெட்கர் பற்றியதுதான். அவருக்கு விளம்பர வெளிச்சமே பிடிக்காது. அதை அவர் வாழ்நாளில் விரும்பியதே இல்லை. அவரை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும்? இந்த சுவாரஸ்யமான கற்பனையின் நாடக வடிவம்தான் எங்கள் “கருப்புக் குதிரை’. நிறையப் பேர் என்னிடம், “ஏன் மகாகவி பாரதியை நீங்கள் கோலெட்கருக்குப் பதிலாக நினைத்துப் பார்க்கவில்லை என்று கேட்டார்கள்?’

“”பாரதியும் நமக்குச் சொந்தம்தான். கோலெட்கரும் நமக்குச் சொந்தம்தான்.” என்று என்னிடம் கேட்டவர்களுக்கு நான் விளக்கமளித்தேன். கருப்புக் குதிரை சிறந்த இசையமைப்புக்கான விருதையும், சிறந்த நாடகத்துக்கான விருதையும் சமீபத்தில் வென்றிருக்கிறது.

கல்கியின் “கணையாழியின் கனவு’ என்னும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு “ரூரல் ஃபேன்டசி’ என்னும் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றினோம். சுதந்திரப் போர் நாடெங்கும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் அக்கறையில்லாமல் வாழ்ந்தவர்களும் அந்தக் காலத்தில் இருந்திருப்பார்கள். தஞ்சாவூரிலிருக்கும் ஒரு கிராமத்தில் அப்படிப்பட்ட மக்களுக்கு, சாந்திநிகேதனிலிருந்து வரும் ஒரு பெண் சுதந்திர உணர்வை ஊட்டுவதுதான் கதை. சுதந்திர உணர்வை ஊட்டும் பாரதியார் பாடல்களையும், கல்கியின் பாடல்களையும் டி.எம். கிருஷ்ணாவும், சங்கீதாவும் பாடினர்.

நாங்கள் தற்போது மூன்றாவதாக அரங்கேற்றப் போகும் நாடகம்தான் “காட்டுத் தீ’. கல்கியின் “சிவகாமியின் சபதம்’ நாவலின் தாக்கம்தான் இந்த நாடகத்திற்கான கரு.

தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பூமியை கலைக்கோயிலாக்க வேண்டும் என்று நினைத்த மகேந்திரபல்லவன், அதன் விளைவாகவே மாமல்லபுரத்தை நிர்மாணிக்கிறான். சிறந்த நாடக ஆசிரியரான மகேந்திரவர்மன் தன்னுடைய சமஸ்கிருத நாடகமான மத்தவிலாஸத்தில், “”மதச் சண்டை போடுபவர்களை விட பைத்தியக்காரன் உயர்ந்தவன்” என்று கமென்ட் அடித்திருப்பார். இன்றைக்கும் “சிவகாமியின் சபதம்’ நாவலைப் படிப்பவர்களுக்கு நிறைய விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கும்.

வாழ்நாள் முழுவதும் கலைத் தொடர்பான விஷயங்களுக்காகவே நேரம் செலவழித்த மகேந்திரவர்மன் இறக்கும் தறுவாயில் தன்னுடைய தளபதியான பரஞ்சோதியிடம் வாதாபியை தீக்கிரையாக்கும்படி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். சாத்வீகமான அவரின் மனதில் பொங்கிய அந்தக் காட்டுத் தீக்கான பொறி எங்கிருந்து வந்தது. யார் வைத்தது?

மாமல்லனுக்கு தோள் கொடுத்து வாதாபியை தீக்கிரையாக்கி மன்னனுக்கு தான் செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்றிய பரஞ்சோதி, அதோடு தன் போர்த் தொழிலுக்கே விடை கொடுத்து, ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்கி விடுகிறான். பரஞ்சோதியின் மனத்தில் அதுவரை கொழுந்து விட்டு எரிந்த பகைத் தீயை சட்டென்று அணைத்தது எது?

ஒரு வேகத்தில் சபதம் செய்துவிட்ட சிவகாமி நாளடைவில் இறைப் பணிக்காக தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். சிவகாமியின் இந்த மாற்றத்துக்கு எது காரணம்?

நம்மிடையே பிரிவினை என்ற காட்டுத் தீயை மூட்டித்தான் ஆங்கிலேயர்கள் நமது நாட்டையே பிடித்தனர். ஒற்றுமையாக நாம் வளர்த்த வேள்வித் தீயினால் அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இப்போதும் நம்மிடையே காட்டுத் தீயாய் பல பிரிவினைகள். இவை எப்போது அணையும்?

-இதுபோன்ற கேள்விகளுக்கு இந்த நாடகத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். “நிறையப் பேர் என்னிடம் நாடகத்தை ஏன் நீங்கள் தமிழில் அரங்கேற்றுவதில்லை’ என்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்: நல்ல தமிழில் பேசி நடிக்கும் நடிகர்களை எனக்குத் தெரியவில்லை. அப்படியொரு பத்து பேர் ரிகர்சலுக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்றால் நான் தமிழிலும் நாடகம் எழுதுவதற்குத் தயார்.

இன்னொரு விஷயம், நான் ஆங்கிலத்தில் நாடகம் போட்டாலும் தென்னிந்தியாவின் கலை வடிவங்களை, அது பாடலாக இருக்கட்டும், இசை, நடனமாகட்டும் அதை அப்படியேதான் பயன்படுத்துகிறேன். உடையில்கூட நான் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. இந்த நாடகத்தில் கூட சிறந்த நடனமணிகளான மைதிலி பிரகாஷ், பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர்தான் இளவயது, நடுவயது சிவகாமியாக நடிக்கிறார்கள். இந்தியா முழுமைக்குமான பொது மொழியாக இன்றைக்கு ஆங்கிலம் தானே இருக்கின்றது. ஆங்கிலத்தில் நாடகத்தைப் போட்டால், அது மராட்டிய கவியைப் பற்றியதாக இருந்தாலும் சென்னை ரசிகனால் அதில் ஈடுபட முடியும். மகேந்திரவர்ம பல்லவனைப் பற்றியதாக இருந்தாலும் மராட்டிய ரசிகரால் அதில் ஈடுபட முடியும். கருத்துதானே முக்கியம்!

ரவிக்குமார்

Posted in Author, Children, Faces, Flame of the forest, Hindu, Kalki, Kids, Literature, MS, people, profile, Tamil, Translator, Women, Works, Writer | Leave a Comment »

Sindhu Suresh Profile – Decorative arts & handicraft Giftmaking

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

கலை: பிரெட்டின் விலை ரூ.500!

இட்லி வகையாக இருக்க விரும்புகிறீர்களா? பிரெட் துண்டு வகையாக இருக்க விரும்புகிறீர்களா?

மீந்துபோன இட்லியை உதிர்த்து அம்புஜம் பாட்டி உப்புமா கிண்டுவது -இட்லி வகை!

மீந்துபோன பிரெட் துண்டுகளை உதிர்த்து சென்னை ஆழ்வார்பேட்டை சிந்துசுரேஷ் பல்வேறு அலங்காரப் பொருட்கள் செய்வது -பிரெட் வகை!

மேற்சொன்ன பிரெட் வகையைச் சேர்ந்த சிந்துசுரேஷ் பிரெட்டில் மட்டுமல்ல காகிதம் உட்பட பல பொருட்கள் பயன்படுத்தி ஏ டு இசட் கலைப்பொருட்களைச் செய்யக்கூடியவர். செராமிக் ஒர்க், கிளாஸ் பெயின்டிங், மட்பாண்டங்களில் அலங்காரம், எம்ப்ராய்டரி என எல்லாவற்றிலும் கலைத்தேர்ந்தவர். தமக்குத் தெரிந்த கலையைப் பிறருக்குச் சொல்லியும் கொடுக்கக் கூடியவர். வீட்டையே தம் கைவண்ணத்தில் கலைக்கோயிலாக மாற்றியுள்ள அவரின் கலைப்பேச்சு:

“”பி.எஸ்ஸி மேக்ஸ் படித்து முடித்துள்ளேன். எனக்கு ஏனோ படித்து முடித்து வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலிருந்தே இருந்தது இல்லை. பெற்றோர்கள் படிக்க வைத்தார்கள் என்பதற்காகப் படித்தேன். ஆனால், எனக்கு ஓவியம் வரைவது என்றால் சிறு வயதிலிருந்தே கொள்ளை ப்ரியம். சிறிது நேரம் கிடைத்தால்கூட ஏதாவது படங்கள் வரைந்துகொண்டு இருப்பேன். இது திருமணம் முடிந்த பிறகும் தொடர்ந்தது. என்னுடைய கணவர் பிசினஸ்மேன். அவர் இல்லாத நேரங்களில் வரைவதோடு புதியபுதிய பொருட்களைச் செய்து பார்க்கத் தொடங்கினேன். எளிதாக வந்தது. அப்படி நான் செய்த பல பொருட்கள்தான் இப்போது எனது வீட்டை அலங்கரிக்கிறது.

கலைப்பொருட்கள் செய்வதற்கு நான் எங்கும் சென்று பிரத்யேகப் பயிற்சி எதுவும் பெறவில்லை. துணிகளில் செய்யக்கூடிய பெயின்டிங் மட்டும் ஒருவரிடம் கற்றுக்கொண்டேன். மற்றபடி எந்தவகையான கலைப்பொருட்கள் செய்யவும் நான் பயிற்சி பெறவில்லை. ஒரு பொருளைப் பார்த்தே அந்த வகையான முறையில் வெவ்வேறு வடிவங்களில் புதுப்புதுப்பொருட்களைச் செய்யக்கூடிய திறன் எனக்கு இயல்பாக இருக்கிறது. இதற்காக நான் செய்வது ஒன்றே ஒன்றுதான்.

கைவினைப்பொருட்கள் கண்காட்சி எங்கு நடந்தாலும் சென்று பார்ப்பேன். அங்கு என்னென்ன பொருட்கள் வந்திருக்கின்றன. அதன் புதிய வேலைப்பாடுகள் என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு அப்படியே நான் செய்துவிடுவேன். இப்படித்தான் எல்லாவகையான கலைப்பொருட்களையும் செய்யத் தொடங்கினேன். நான் கற்ற கலையை கடந்த பத்துவருடமாக பலருக்குச் சொல்லியும் தருகிறேன்.

கிளாஸ் பெயின்டிங், ரிவர்ஸ் கிளாஸ் பெயின்டிங், மதுபானி கிளாஸ் பெயின்டிங், செராமிக் வேலைப்பாடுகள், போன்ஸôய் செயற்கை மரங்கள் தயாரிப்பு போன்றவை சொல்லிக் கொடுத்தாலும் கிளாஸ் பெயின்டிங் கற்றுக்கொள்வதற்குதான் அதிகமானோர் வருகிறார்கள். இதோடு சீனா நாட்டைச் சேர்ந்த மேக்ரேம் வகையிலான அலங்காரப் பொருட்களையும் செய்கிறேன். கற்றும் கொடுக்கிறேன்.

மேக்ரேம் வகையான பொருட்கள் செய்வதற்கு அதிகச் செலவினங்கள் ஆகாது. சணல், நைலான், என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆரம்பத்தில் அரைஞாண்கயிறு கொண்டுதான் செய்துகொண்டிருந்தேன். விதவிதமான பைகள், பாத்திரங்களுக்குக் கீழே வைக்கக்கூடிய மேட்கள், விநாயகர் போன்ற கடவுளின் உருவங்கள் என எதையும் இதில் செய்யலாம். மிகவும் அழகாக இருக்கும். இந்தவகையான கலைப்பொருட்களுக்கு அதிக வரவேற்பு இப்போது மக்கள் மத்தியில் இருக்கிறது.

ஒரு கலைப்பொருளை செய்வதற்குக் கற்றுக் கொள்ளக்கூடிய காலகட்டம் அவரவர்களின் திறமையைப் பொறுத்திருக்கிறது. சிலர் மூன்று வகுப்புகளிலேயே ஒரு பொருளைக் கற்றுகொடுத்துவிடுகிறார்கள். நான் ஐந்து வகுப்பு முதல் எட்டு வகுப்புவரை கூட எடுக்கிறேன். நான் ஒரு கலைப்பொருளைச் செய்வதற்குக் கற்றுகொடுத்தால், கற்றவர்கள் அவர்களே பல புதிய பொருட்களைச் செய்யக்கூடிய திறனைப் பெறுவார்கள். அதைப்போல என்னிடம் பயிற்சி பெற்ற பிறகு எந்தப் பொருளையும் அவர்கள் தூக்கிப் போடமாட்டார்கள். பழைய காகிதங்களாக இருந்தால் அதை ஒரு கலைப்பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். என் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களில் பெரும்பாலானவை பழைய பொருட்களிலிலிருந்து செய்யப்பட்டவை. பார்ப்பவர்களுக்கு அவை ஒருபோதும் தெரியவே தெரியாது. பழைய காகிதங்கங்களை எல்லாம் சேர்த்து பூக்கூடை ஒன்றும், பேனா, பென்சில் போட்டு வைக்கிற ஸ்டாண்ட் ஒன்றும் செய்துள்ளேன். இதைப்போலவே சாப்பிடுகிற பிரெட்டைக் கொண்டும் ஒரு புதுவித ஒர்க் செய்கிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இரண்டு மூன்று நாட்களான பிரெட்டுகளைத் தூளாக்கிக் கொள்ளவேண்டும். பிரெட் என்றால் எறும்பு வரும் இல்லையோ? எறும்போ பூச்சிகளோ வராமல் இருக்க சிங் ஆக்ûஸடு ஒரு சொட்டு மற்றும் ஃபெவிகால் கலந்து சாப்பாத்திக்கு மாவு பிசைவதுபோல நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். இதன்பிறகு நமக்கு தேவையான உருவங்களில் எதைவேண்டுமானாலும் வடித்துக்கொள்ளலாம். இதன் பிறகு காய வைத்து பெயின்டு மற்றும் வார்னிஷ் அடித்துவைத்துக்கொள்ளலாம். இது எத்தனை ஆண்டுகளானாலும் கெடாமல் இருக்கும். செய்வதும் சுலபம். பார்த்தவுடனேயே எல்லோரையும் கவரும். 10 ரூபாய்க்கு பிரெட் வாங்கி 500 ரூபாய் வரையிலான பொருட்கள் செய்து விற்கலாம்!

என்னிடம் எல்லாவகையான கலைகளையும் கற்றுக் கொள்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறேன். ஒரு பொருளை மற்றும் கற்றுக்கொள்வதற்கு 450 ரூபாய் வரை வசூலிக்கிறேன். 450 ரூபாய் கட்டிப் பயிற்சி பெறுகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கான பொருட்களையும் அவர்களே வாங்கி வரவேண்டும்.

என்னிடம் பயிற்சிபெற்ற பலபேர் அவர்களும் பலருக்குப் பயிற்சி அளித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பெற்றவர்கள் சாதாரணமாகவே அறுபதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.” என்கிறார் சிந்துசுரேஷ்.

-சாப்பிடுவது ஒருவகை. சாப்பிடுகிற பொருட்களைக்கொண்டே புதுப்புது பொருட்களைச் செய்து சாதிப்பது புதுவகை!

Posted in Arts, Bread, Ceramic, chemicals, Crafts, Decorations, Earn, Exhibition, Exports, Gift, Handicrafts, job, Learn, Opportunity, Paintings, profile, Sale, Sculptures, Sindhu, Sindhu suresh, Sindhusuresh, Sindu, Skill, Suresh, Teach | Leave a Comment »

Interview with Narthaki Nataraj – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

நர்த்தகி நடராஜ் உடனான சென்ற வார சந்திப்பின் தொடர்ச்சி…

‘‘லண்டன் பி.பி.ஸி.யில், ஒரு பரதக் கலைஞர் என்கிற முறையில், என்னைப் பேட்டி காண அழைத்தார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் சமாளித்துப் பதில் சொன்னேன். கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் அந்த நிருபர் : ‘நீங்கள் பரத நாட்டியக் கலைஞராகியிராவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?’

பேட்டி காணப்படும் பலரிடம் கேட்கப்படக் கூடிய சராசரிக் கேள்விதான் இது. ஆனால் என் பதில் மட்டும் சராசரியானதல்ல…

‘பரதக் கலைஞராக உயர்ந்திராவிட்டால் மும்பை அல்லது கொல்கத்தாவில் விலைமாதாக இருந்திருப்பேன்’ என்று சொன்னேன். உண்மையும் அதுதான்!’’

பால் திரிபுக்குள்ளாகும் அனேகம் குழந்தைகளைப் போல் நர்த்தகியும் பெற்ற தாயால் வீட்டை விட்டு விரப்பட்டு வெளியேறியவர்தான். சிறிய வயதிலேயே சக்தி துணையாக வாய்த்ததால் இருவரும் சேர்ந்தே குடும்பம் ஏற்படுத்திய காயங்களையும் பள்ளிச் சூழல் இழைத்த அநீதிகளையும் தாங்கி வளர்ந்திருக்கிறார்கள். தங்களுக்குள் நிகழ்வது என்ன என்று புரிவதற்குள் இரக்கமற்ற, உயிர் உறிஞ்சும் வெளி உலகில் வந்து விழுந்து, திருநங்கைக் கூட்டத்தில் இணைந்து, அந்த வாழ்க்கை முறை தவறு என்ற விவேகம் இயல்பிலேயே இருந்ததால் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். கலை ஆர்வம் இவர்களை தஞ்சையில் கிட்டப்பா பிள்ளையிடம் அழைத்துச் சென்றிருக்கிறது. கடுமையான சோதனைக்குப் பிறகே அவரும் இவர்களை சிஷ்யைகளாக ஏற்றிருக் கிறார். வெளியே தங்குவது நித்திய சோதனையாக இருக்கவே, வீட்டிலேயே அடைக்கலம் கேட்டு இந்த மாணவிகள் இறைஞ்ச, அவரும் ஏற்றுப் பாதுகாப்புத் தர, அதுவே அவர்களுடைய குருகுலவாச மாக இன்று அறியப்படுகிறது.

கிட்டப்பா பிள்ளை வஞ்சனையில்லாமல் வழங்கிய கலைக் கொடையும் நர்த்தகி, சக்தியிடம் இயல்பாகவே அமைந்திருந்த பக்தியும் அவர்களைச் சமூகத்தின் களைகளாக மாறாமல் காப்பாற்றியதுடன் மிக உயர்ந்த கலைஞர்கள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. நர்த்தகி மட்டுமே நடனக் கலைஞராக அங்கீகாரம் பெற்றாலும் சக்தி அவரது ஒப்பனை, அலங்காரம் வழிகாட்டல், விமர்சனம் அனைத்திலும் கலந்து நிற்கும் துணையாக விளங்குகிறார். மீடியா இன்று நர்த்தகியைக் கலைஞர் என்ற முறையிலேயே வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால்…

‘’இன்னமும் எங்களுக்கு வாடகைக்கு ஒரு வீடு தர யாருமே யோசிக்கிறார்கள். கற்பகாம்பாள் அருகே, கலை மையங்கள் சூழ மயிலாப்பூரில் வசிக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் நன்கு தெரிந்தவர்கள்கூட வீடு தர நாசூக்காக மறுக்கிறார்கள்- பொய்க் காரணங்கள் சொல்கிறார்கள். சமுதாய அங்கீகாரமும் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் பெற்ற எங்களுக்கே இந்த கதி என்றால் திருநங்கைக் கூட்டத்தின் இதர சகோதரிகளுடைய கதி என்ன…?

பசியின் கொடுமைதான் அவர்களை அலங்கோலத்தில் தள்ளுகிறது என்பதை சமுதாயம் மறந்துவிடுகிறது. சிறு வயதில் உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாப்புக் கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படிப்பட்டக் கூட்டத்தில் போய் விழப்போகிறார்கள்? புறக்கணிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டவர்கள் ஒன்று திரண்டால் நிகழக்கூடிய விபரீதம்தான் திருநங்கைக் கூட்டத்தினருக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்தையை நான் நியாயப்படுத்த முற்படவில்லை. ஆனால் இனியேனும் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கேட்கிறேன்.

தீராநோயின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி மட்டும் திருநங்கைகள் மீது அரசும் என்.ஜி.ஓ.க் களும் கவனம் செலுத்தினால் போதாது. இந்தக் கவனம், வளர்ந்து விபசார வலைக்குள் சிக்கிவிட்டவர்கள் மீது மட்டுமே விழும்.

விவரம் புரியாத வயதில் தனக்குள் நடக்கும் வினோதத்தையும், புரிந்துகொள்ள முடியாமல், பெற்ற தாய் உள்பட அனைவரின் புறக்கணிப்பையும் சமாளிக்க முடியாமல் உடைந்து சிதறும் இளம் திருநங்கைகளுக்கு என்ன செய்யப் போகிறோம்..?

முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஊட்டுங்கள். இந்தக் குழந்தைகளும் இறைவனின், இயற்கையின் சிருஷ்டி என்கிற உணர்வு பலத்தைக் கொடுங்கள். பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளைப் பெரும்பாலும் அவர்கள்தான் முதலில் அடையாளம் காண்பார்கள். பெற்ற தாய் கூட ஆண் பிள்ளை என்பதாகவே கொண்டு, பெண்குழந்தைக்குத் தரக்கூடிய கவனத்தைத் தரமாட்டாள். ஆனால், அந்தப் பருவத்தில் திருநங்கைகளுக்குப் பெண்மையின் அரவணைப்பும் பாதுகாப்புமே ரொம்ப தேவைப்படுகின்றன. ஆண் உலகம் அவர்களை அச்சுறுத்தி சீண்டுகிறது.

இதெல்லாம் எப்போது, எப்படி மாறும் என்று யோசித்து மலைத்துப் போய் விடக்கூடாது. அரசு ஜி.ஓ.க்களும் விதிகளும் வெறும் புள்ளிகள்தான். அவற்றைப் பயன்படுத்தித் தப்பில்லாமல் கோலம் போட வேண்டியது சமுதாயம்தான். பொதுவாக எந்த மாற்றமும் அடிமட்ட மனிதர்களிடையே நிகழவேண்டும் என்பார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் மனமாற்றம் மேல்தட்டு மக்களிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். செல்வச் சீமான்கள் வீட்டுத் திருநங்கைகளுக்குக்கூட இன்று ஏழைகளின் குடிசைகளில்தான் இடமும் அங்கீகாரமும் கிடைக்கின்றன. அந்த அங்கீகாரம் ஆரோக்கியமானதாக எப்போதும் இருப்பதில்லை என்பதுதான் கொடுமை. ஆனால் அருவருப்போடு அடித்துவிரட்டாத இடத்தில் தானே திருநங்கைகள் அடைக்கலம் தேட முடியும்… இதை மாற்றுவதும் திருநங்கைகளை உயர்த்துவதும் சமுதாயத்தின் கையில்தான் இருக்கிறது.’’

திருத்தமாகப் பேசி முடிகிறார் நர்த்தகி. அவர் நாட்டியத்தின் அசைவுகளிலும் கை முத்திரைகளிலும் காணக்கூடிய திருத்தம் அவர் சிந்தனையில் பளிச்சிடுகிறது. நடனத்தின்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் சத்திய ஒளி அவர் சொற்களிலும் வீசுகிறது.

– சீதா ரவி, சுகந்தி ஜி.பாரதி
படங்கள் : ஸ்ரீஹரி

– சஞ்சயன்

————————————————————————————–

From Thozhi.com


திருநங்கையர் நர்த்தகி நடராஜன், சக்தி பாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்வு திருநங்கையரின் உலகை அறிமுகப்படுத்தியது

– ந. கவிதா

கோவையில் மாதந்தோறும் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திவந்த ‘அற்றைத்திங்கள்’ நிகழ்ச்சி இந்த மாதத்திலிருந்து சென்னையில் நடைபெறுகிறது. 29.04.07 அன்று இந்நிகழ்வின் முதல் கூட்டம் புக்பாயிண்டில் தொடங்கியது. இதில் திருநங்கையர் நர்த்தகி நடராஜும் சக்தி பாஸ்கரும் கலந்துகொண்டு உரையாடினர்.

தமக்குள் உணர்ந்த பெண்மையை உன்னதமெனக் கொண்டாடி, அந்தப் பெண்மையை வெளிப்படுத்தும் வடிகாலாக நடனத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட திருநங்கையர் இவர்கள்.

பால்திரிபு நிலை, சமூகத்தின் ஏளனத்தையும் குடும்பத்தின் புறக்கணிப்பையும் தந்த நிலையிலும் துயரங்களைக் கடந்து லட்சியப் பயணத்தை மேற்கொண்ட இத்திருநங்கையரின் உரையாடல் அவர்களது வேதனைகளைவிட அவர்கள் அடைந்துவிட்ட இலக்கின் மனநிறைவை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆளற்ற மைதானமும் மரங்கள் சூழ்ந்த கண்மாய்க் கரையும், பழைய கோயில் மண்டபங்களும் இவர்களின் நடனத்தையும் அற்புதமான கனவுலகத்தையும் கண்டுகொள்ளும் அரங்குகளாக இருந்தன. கீற்றுக் கொட்டகையில் கடைசி ஆட்டம் சினிமா பார்த்துவிட்டுத் திண்ணையில் உறங்கிப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர்களின் ஆதர்ச நாட்டியக்காரர்களாக பத்மினியும் வைஜெயந்தி மாலாவும் இருந்தனர்.

விளையாட்டிலும் வீட்டிலும் புறக்கணிக்கப்பட்ட நர்த்தகிக்கு, அவரைப் போலவே புறக்கணிப்பிற்குள்ளான சக்தி தோழியாகக் கிடைத்தார். இவர்கள் இருவரும் சஞ்சரிக்கும் தனி உலகில், பாகுபாடு காட்டாத மனிதர்களும் பசித்தவர்களு்கு எப்போதும் உணவு கொடுத்துக்கொண்டே இருந்த இவர்களது வளமிக்க வீடும் இருந்தன.

முகபாவத்திலும் ஒப்பனை செய்யும் ஆர்வத்திலும் நடனத்திலும் இவர்களுக்கு இருந்த அளவில்லாக் காதல், குடும்பத்தினரின் வெறுப்பிற்கு இவர்களை ஆளாக்கியது. இது நர்த்தகியை வீட்டைவிட்டு வெளியேறச் செய்தபோது, வசதியான வீட்டில் வாழ்ந்த சக்தியும் அவருக்காக ஊரைவிட்டு வெளியேறினார். பல விதமான துயரங்களுக்குப் பிறகு, வைஜெயந்தி மாலாவிற்கு நடனம் கற்றுக்கொடுத்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது.

பால்திரிபையும் வறுமையையும் பொருட்படுத்தாமல், வைரங்களைக் கொட்டித் தரும் மாணவிகளைப் போலவே இவர்களையும் பயிற்றுவித்த தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளை, தஞ்சை நால்வரின் மார்க்கங்களைக் கற்றுத் தந்தார். நர்த்தகி ஒரே ஆண்டில் ஆறு வருடங்களில் முடிக்க வேண்டிய நடன மார்க்கங்களைக் கற்று, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் தனது முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.

‘எல்லா வேதனைகளின்போதும் ஏமாற்றங்களின்போதும் தாயாக, தோழியாக என்னை வழிநடத்திக்கொண்டிருக்கும் சக்தி பாஸ்கர்தான் காதலிலும் காமத்திலும் நான் சிக்கிவிடாதபடி வழிகாட்டி இன்றைய என் சாதனையை எட்டச் செய்தவள்’ என்றார் நர்த்தகி. சக்திதான் தனக்கு எல்லா சக்தியும் என்று தன் தோழியைப் பற்றிப் பெருமிதப்படுகிறார் அவர்.

நர்த்தகி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் நான்கு ஆண்டுகள் விரிவுரையாளர், மத்திய அரசின் மானியத்தை இருமுறை பெற்றவர். தற்போது இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாட்டியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.

சக்தி பாஸ்கர் இந்த உரையாடலில் மிகக் குறைவாகவே பேசினார். இருந்தாலும் சில வார்த்தைகளில் அரவாணிகளின் வாழ்வியல் துயரைப் புரியவைத்தார். அரவாணிகளைப் பொறுத்தவரை காதல் ஏமாற்றம் தரும் விஷயம் என்றார் அவர். பிச்சையெடுப்பதும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும்தான் பெரும்பான்மையினரின் வாழ்க்கையாக இருக்கும் சூழலில், லட்சியங்களை அடைய, அளவற்ற சுதந்திரமுள்ள அரவாணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலுக்கு முன்பாக, பீஷ்மரைக் கொல்ல சிகண்டியாக உருவெடுத்த அம்பையின் கதையை நடன வடிவமைத்திருந்த நர்த்தகியின் அந்த நடனக் காட்சிகள் திரையிடப்பட்டன. அவரது நடனத்தில் எழுச்சியும் உணர்வுகளும் மிக்க முகபாவங்கள் அழகுற அமைந்திருந்தன.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடும் நடன வகைகளுள் ‘வீழ்ந்தாடல்’ எனும் வகை ‘பேடியாட’லைக் குறிப்பதுதான் என்று சொன்ன நர்த்தகியின் பேச்சு மிகுந்த புலமையோடு வெளிப்பட்டது. இறப்பதற்குள் ஒரு அரவாணியைத் தனக்குப் பின் உருவாக்குவதே தன் ஆசை என்றார் நர்த்தகி. நிகழ்விற்கு நூறு பேர்தான் வந்திருப்பார்கள் என்றாலும் அரங்கம் அவரது உரையில் கட்டுண்டிருந்தது என்று சொல்லலாம்.

பிறகு நர்த்தகி, பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாகப் பதிலளித்தார். இறுதியாக எழுத்தாளர் தேவிபாரதி நன்றி கூறினார்.

Posted in Ali, Aravaani, Aravani, Artist, Arts, Biosketch, Classic, Classical, dancer, Faces, Interview, Kaalachuvadu, Kalachuvadu, Kalki, Narthaki, Nataraj, people, profile, Sakthi Baskar, Sakthi Bhaskar, Shakthi Baskar, Shakthi Bhaskar, Sigandi, Sikandi, Transgender | 1 Comment »

Ralph Nader – Profile & Biosketch: Raman Raja

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

நெட்டில் சுட்டதடா…கலக்கப் புறப்பட்ட கன்ஸ்யூமர் புயல்!

ராமன் ராஜா

உள்ளூர் செய்திகளில் டிராஃபிக் ராமசாமி என்று ஒரு பெயர் அடிக்கடி அடிபடுகிறதே, யார் இவர் என்று கவனித்தேன்; மிகப் பெரிய தலைகளுடன் மோதுவதையே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்ட ஒரு கெட்டித் தலை என்று தெரிகிறது. பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி, பல பேருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். இதன் அமெரிக்கப் பதிப்புதான் ரால்ப் நாடர். (அமெரிக்காவில் ரால்ப் நோடர் என்றும் அழைப்பர்) கன்ஸ்யூமர் இயக்கத்தின் பிதாமகர். நாடருக்கு மெகா கம்பெனிகள் என்றாலே மகா அலர்ஜி. வால் மார்ட், மைக்ரோ சாஃப்டில் ஆரம்பித்து ஊரில் உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களுடனும் ஓயாத சண்டை!

1934-ல் பிறந்தவர் நாடர். லெபனானிலிருந்து அமெரிக்காவில் சென்று குடியேறிய குடும்பம். படித்தது வக்கீலுக்கு; ஆனால் உருப்படியாக ப்ராக்டீஸ் செய்வதை விட்டுவிட்டு, ஊர்ப் பிரச்சினைகளுக்காகப் பொது நல வழக்குத் தொடர்ந்து போராடுவதே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்டார். தன்னுடைய தாக்குதலுக்கு நாடர் முதலில் நாடியது கார் தயாரிக்கும் கம்பெனிகளை. அந்தக் காலத்து கார்களில் இருந்த சஸ்பென்ஷன் எனப்படும் முக்கியமான தொட்டில் அமைப்பு, எட்டணா கூடப் பெறாது. ஒரு மூலையில் வேகமாகத் திரும்பினால் கார் சட்டென்று பாலன்ஸ் இழந்து பல்டி அடித்து விடும். அதுதவிர ஒவ்வொரு காரிலும், ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு விதமான அமைப்புகளில் கியர் இருந்தது. சிலவற்றில் நியூட்ரல் கியர் முதலில் இருக்கும்; வேறு சில கார்களில் நடு மத்தியில் இருக்கும். பழக்கமில்லாத புதிய காரை ஓட்டுபவர்கள் திணறிப் போவார்கள். சிக்னலில் நின்றுவிட்டுக் கிளம்ப முற்படும்போது பழைய ஞாபகத்தில் முதல் கியரைப் போட்டால், ரிவர்ஸில் சீறிப் புறப்பட்டுப் பின்னால் வரும் வண்டியில் டமாலென்று இடிக்கும். கார் தயாரிப்பு கம்பெனிகள் லாபம் ஒன்றே குறியாக, மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று பொருமினார் நாடர். எல்லாத் தயாரிப்பாளர்களின் கார்களிலும் ஒரே மாதிரியான கியர் இருக்க வேண்டுமென்று வாதாடினார். கார் கம்பெனிகள் “பெப்பே’ என்றன.

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் சாதாரணமாகவே கார்கள் நூற்று நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் ஒரு விபத்து என்றால் ஸ்டியரிங் வீலில் மோதி ஓட்டுபவரின் நெஞ்சு எலும்பு உடைந்துவிடும். இதயம் நேரடியாக அடி வாங்குவதால், ஆஸ்பத்திரி போகும் வரை ஆத்மா தாங்காது! இதைத் தடுக்க இப்போது எல்லாக் காரிலும் சீட் பெல்ட், ஸ்டியரிங்கின் நடுவே காற்று அடைத்த குஷன் பை என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்துவிட்டன. சீட் பெல்ட் அணிவதால் மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினோராயிரம் பேர் உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தேவை என்று நாடர் முதலில் போராடியபோது, “”இந்த மாதிரி அநாவசிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்காக எங்கள் கார் தயாரிப்புச் செலவை ஏற்றிவிட முடியாது” என்று கார் கம்பெனிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு! நாடர் நேராக மக்களிடம் போய்விட்டார். அதிலும் குறிப்பாக அவருடைய அதிரடித் தாக்குதலுக்கு ஆளானது, புகழ் பெற்ற செவர்லே கார். கம்பெனிக்கு உள்ளிருந்தே ஒத்துழைத்த சிலரின் உதவியுடன் நிறைய டெக்னிக்கல் தகவல் திரட்டினார். அவற்றை வைத்து “எந்த வேகத்திலும் தொந்தரவு’ என்று ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படித்ததும் அதிர்ந்து போனார்கள் மக்கள். அரசாங்கம் என்ன செய்கிறது என்று அதட்ட ஆரம்பித்தார்கள். பொதுக் கருத்து பொங்கி எழுந்தவுடன் சர்க்கார் அவசர அவசரமாகச் சட்டம் போட்டு கார்களின் பாதுகாப்பை முறைப்படுத்தியது. கியர்கள், சஸ்பென்ஷன் என்று கார்களின் எல்லாப் பாகங்களும் திரும்ப வடிவமைக்கப்பட்டன. தனி மனிதரான நாடர் ஒருவரின் முயற்சியால்தான் இன்று அமெரிக்க சாலைகள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன.

ரால்ப் நாடர் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். “உங்கள் டாக்டருடன் போராடுவது எப்படி?’ “விமானத்தில் போகிறீர்களா? ஜாக்கிரதை!’, “உங்கள் குழந்தைகளை மெகா கம்பெனிகள் மூளைச் சலவை செய்கிறார்கள்!’, “ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?’, “உங்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டுங்கள்’ என்பவை அவருடைய பிரபலமான புத்தகங்களில் சில. இன்னும் அரசியல், தேர்தல் பற்றித் தெளிவாக நிறைய அலசியிருக்கிறார். அவருடைய வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், மனிதர் அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேரிடம் சண்டை போட்டு முடித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஓயாமல் தொல்லை கொடுக்கிறாரே என்று ஜெனரல் மோட்டார் போன்ற கார் தயாரிப்பு கம்பெனிகளுக்கெல்லாம் ஏகக் கடுப்பு. அதற்குள் நாடறிந்த மனிதராகிவிட்டிருந்த நாடரின் நல்ல பெயரை நாசம் செய்வது எப்படி என்று மில்லியன் டாலர் செலவில் தீவிரமாக யோசித்தார்கள். அவர் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க ரகசிய ஏஜெண்டுகள் ராப்பகலாகச் சுற்றி அலைந்தார்கள். ஏதாவது தப்புப் பண்ண மாட்டாரா, கப்பென்று பிடித்துக் கொள்ளலாமே என்று நப்பாசை அவர்களுக்கு. ஒன்றும் சிக்காமல் போகவே ஈனச் சதிகளில் இறங்கினார்கள். விலை மாதர்களை ஏற்பாடு பண்ணி விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை போல் அனுப்பி, ஆசாமி செக்ஸ் விவகாரங்களிலாவது சிக்குவாரா என்று பார்த்துவிட்டார்கள். (நாடர் கட்டைப் பிரம்மச்சாரி). வலிய வந்த பெண்ணைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார் நாடர். பிறகு தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளைப் புரிந்துகொண்ட அவர், நேராகக் கோர்ட்டுக்குப் போய், தன்னுடைய பிரைவஸியைக் கெடுத்து நிழல் போலத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடும் வாங்கிவிட்டார். ஜெனரல் மோட்டார், பப்ளிக்காக நாடரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ரிவர்ஸ் கியரைப் போட்டுக் கொண்டு ஓட நேர்ந்தது. நஷ்ட ஈடாக வந்த பணத்தில் இளைஞர்களைத் திரட்டி ஒரு பறக்கும் படை அமைத்தார். எங்கெல்லாம் நுகர்வோர் உரிமைகள் பறி போகிறதோ, அங்கெல்லாம் இவர்கள் புகுந்து புறப்பட்டு விலாவரியாகத் தகவல் சேகரித்துக் கொண்டு வருவார்கள். உடனே கோர்ட்தான், கேஸ்தான், புத்தகம்தான், போராட்டம்தான்! நாடர் ஆரம்பித்த நுகர்வோர் இயக்கத்தைப் பற்றியே எவ்வளவோ எழுதலாம். அதுபற்றி மற்றொரு சமயம்.

இப்போது அமெரிக்க ஜனநாயகத்தில் சர்வ சாதாரணமாகப் போய்விட்ட பல உரிமைகள், நாடர் ஆரம்பித்து வைத்தவைதான். சுற்றுச் சூழல் பாதுகாப்பு எஜென்ஸி என்ற அரசாங்க அமைப்பு தோன்றக் காரணமே நாடரின் போராட்டங்கள்தான். இப்போது நம்ம ஊரில் கூடப் பிரபலமாக இருக்கும் தகவல் அறியும் உரிமையை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, அதற்கென்று சட்டம் போட வைத்தவர் -நாடர். அமெரிக்கர்களும் ரொம்பக் காலம் வரை நம்மைப் போல முனிசிபாலிட்டி குழாயில் கால்ரா தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாடரின் முயற்சியால் 1974-ல் பாதுகாப்பான குடிநீர் சட்டம் வந்தது. குடிக்கிற தண்ணீரில் எத்தனை அளவுக்கு மேல் உப்பு, உலோகங்கள், பாக்டீரியா இருந்தால் ஆபத்து என்று விஞ்ஞானிகளை வைத்துக் கொண்டு விளக்கி, குழம்பின குட்டையைத் தெளியவைத்தவர்- நாடர். அதேபோல் அப்போது கசாப்புக் கடைகளிலெல்லாம் ஒரே ஊழல் மயம். சீக்கு மாடு, சொறி ஆடு எல்லாவற்றையும் வெட்டிக் கலந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை உள்ளே எட்டிப் பார்த்தவர்கள் சைவத்துக்கு மாறிவிடுவார்கள். மாநில சுகாதார இன்ஸ்பெக்டர் வந்து மாமிசக் கூடங்களைச் சோதனை போட்டு சர்டிபிகேட் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வைத்தது- நாடர்.

அரசியலிலும் இறங்கி, எலெக்ஷனிலும் நின்று தன்னந்தனியாக விஜயகாந்த் மாதிரி கலக்கினார் நாடர். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தவற மாட்டார். 2000-வது வருடத் தேர்தலில் எதிரே ஜார்ஜ் புஷ், அல் கோர் என்று இரண்டு மாபெரும் அரசியல் மலைகள். நாடர் தயங்கவில்லை. “”விற்பனைக்கு அல்ல” (ய்ர்ற் ச்ர்ழ் ள்ஹப்ங்) என்று பொருள் பொதிந்த போர்டு போட்டுக் கொண்டு அரசியல் கடையைத் திறந்தார். ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பேருமே நாடருக்கு ஓட்டுப் போட்டார்கள். “”இவனும் திருடன், அவனும் திருடன்தானே; ஆகவே நான் ஓட்டெல்லாம் போடும் வழக்கமே இல்லை” என்று வீட்டில் சப்பையாகக் குந்திக் கொண்டு பேப்பர் படித்து விமரிசன மழை பொழிந்து கொண்டிருந்த அறிவு ஜீவிக் கும்பலைக் கூட வெளியே இழுத்துத் தனக்கு ஓட்டுப் போட வைத்தவர் நாடர். இதுவே பெரிய சாதனைதான். மொத்தம் விழுந்த ஓட்டுக்களில் சுமார் மூன்று சதவிகிதம் வாங்கிவிட்டார். அவர் மட்டும் ஓட்டைப் பிளக்கவில்லையென்றால் நிச்சயம் புஷ் வெற்றியடைந்திருக்க முடியாது. பல இடங்களில் புஷ் ஜெயித்த ஓட்டு வித்தியாசத்தை விட நாடருக்கு அதிகம் விழுந்திருந்தது.

டைம் பத்திரிகை செல்வாக்கு மிகுந்த நூறு அமெரிக்கர்களைப் பட்டியலிட்டு அதில் நாடருக்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தது. அவரை மையமாக வைத்து நிறைய கார்டூன்கள், டி.வி. காமெடி ஷோக்கள் எல்லாம் உண்டு. ஒரு முறை நாடருக்கு எதிர்க் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியுடன் டி.வி.யில் நேருக்கு நேராக விவாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு எப்படி இருந்தது என்று கெர்ரியிடம் கேட்டார்களாம். “”சே…! தப்பிச்சுட்டான். கடைசி நேரத்தில் என்னுடைய துப்பாக்கி வெடிக்காமல் மக்கர் செய்துவிட்டது!” என்று புகைந்தாராம் கெர்ரி.

Posted in activism, America, Analysis, Attorney, Biography, Biosketch, Bush, Capitalism, Consumer Activism, Elections, General Motors, GM, Green Party, John Kerry, Law, Lawsuits, Lawyer, Lebanon, Massachusetts, Order, people, Persons, profile, Ralph Nader | Leave a Comment »

Two rupees as Fees – 60 year Doctor practice & service by VS Jayaraman in Vellore

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

60 ஆண்டு மருத்துவ சேவையில் “2 ரூபாய் டாக்டர்’

வேலூர், டிச.21: வேலூர் அடுத்த காந்தி நகரில் வசிக்கும் டாக்டர் வி.எஸ். ஜெயராமன் (85) ரூ.2 என்ற குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

காந்தி நகரில் 2 ரூபாய் டாக்டர் என்றால் ஜெயராமனை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு இவர் பிரபலம்.

1946-ல் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து தனது சேவையைத் தொடங்கிய இவர் இன்று வரை மாலை நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதித்து மருந்துகளை வழங்குகிறார்.

சாதாரண ஜுரம், சளி, இருமல் உள்ளிட்ட வியாதிகளுக்கு இவரே மாத்திரை, மருந்துகளை வழங்குகிறார். இதற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கும் அவர் பரிசோதனைக்கு பணம் பெறுவதில்லை. மஞ்சள் காமாலை, டைஃபாய்டு உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கு மருந்தளித்து ரூ.3 கட்டணம் பெறுகிறார்.

தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே மருந்துக் கடைகளில் சற்று கூடுதலான விலையில் கிடைக்கும் மருந்துகளை எழுதித் தருகிறார். அவையும் ரூ.10-க்கு மிகாமல் கிடைத்து விடும். இவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சில மருந்துக் கடைக்காரர்கள் தனியாக வரவழைத்து விற்பனை செய்வதும் உண்டு.

“மருந்துக் கடைகளில் மிகக் குறைந்த விலையில் பல வீரியமாக செயல்படக்கூடிய மருந்துகள் கிடைக்கின்றன. அதனால் நான் குறிப்பிட்டு எழுதிக் கொடுக்கும் மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகளை தருவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் தயங்குவதுண்டு’ என்கிறார் ஜெயராமன்.

மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் மருந்துகளை மருந்து நிறுவனங்கள் அளிப்பதுண்டு. அந்த முறையில் அவற்றை வாங்கி நோயாளிகளுக்கு தருவதால் ரூ.2 கட்டணம் எனக்கு கட்டுப்படியாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in +2, 60+, Aashish Vithiyaarthi, Aashish Vithyarthi, Cool, Doctor, E, Good, Health, medical, Medicine, Noble, PCP, people, profile, Quote, Read, service, Tamil, Theomen, Unknown, Vellore, VS Jayaraman | Leave a Comment »

Padma Subramaniyam – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஒரு படத்தின் படப்பிடிப்பு… ஒரு குழந்தை படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்து அழுகிற மாதிரி காட்சி. குழந்தை பயந்து, தயங்கியது. அந்தக் குழந்தையின் தந்தையே படத்தின் இயக்குநர்.

அவரே தைரியம் கொடுத்து குழந்தையை மாடிப் படிகளில் தள்ளிவிடுகிறார். குழந்தை படிகளில் உருண்டு விழும் காட்சி மிக இயல்பாக அமைந்து பலராலும் பாராட்டப்பட்டது.

அந்த இயக்குநர் கே. சுப்ரமணியம். குழந்தை நட்சத்திரம் பத்மா சுப்ரமணியம். அவருக்கு அப்போது வயது நான்கு. எதையும் பர்ஃபெக்டாகச் செய்ய வேண்டும் என்பது அந்தச் சிறுவயதிலேயே தனது தந்தையிடமிருந்து பத்மா கற்றுக் கொண்டது.

இயக்குநர் கே. சுப்பிரமணியம் _ மீனாட்சி, இவர்களது ஒன்பது வாரிசுகளில் நான்கு பேர் பெண்கள். அவர்களில் கடைக்குட்டிதான் பத்மா.

பத்மா பிறப்பதற்கு முன்பே மைலாப்பூரில் பிரமாண்டமான தனது வீட்டின் ஒரு போர்ஷனில் நிருத்யோதயா என்ற பெயரில் நாட்டியப்பள்ளி நடத்திவந்தார் சுப்பிரமணியம். இங்கு பரதம் உட்பட பல்வேறுவிதமான நடனங்களும் சொல்லித் தரப்பட்டன.

கருவிலிருந்த போது, தாயின் கருப்பையில் இருந்து கொண்டே அபிமன்யு சக்கர வியூகத்தைக் கற்றதுபோல், பத்மாவும் நிருத்யோதயா மாணவிகளின் ஜதி ஒலிகேட்டு, கருவறையிலேயே பிஞ்சு மலர்ப்பாதம் உதைந்து நடனம் கற்றிருப்பாரோ? அதனால்தானோ என்னவோ, சிறுவயதிலேயே நாட்டியத்தின் மீது பத்மாவுக்கு அலாதிப் பிரியம்.

அம்மா மீனாட்சி ஓர் இசைக் கலைஞர். வீணை, வயலின் வாசிப்பார். நல்ல குரல் வளம் கொண்ட பாடகியும் கூட. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நிறைய பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கணவர் எடுத்த சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார்.

வழுவூர் ராமையாப்பிள்ளை

பத்மா சிறு வயதிலிருந்தே சூட்டிகை. அழகான வட்ட நிலா முகம். நிலவின் நடுவே இரண்டு நட்சத்திரங்கள் போல் மின்னும் அகன்ற கண்கள். எதையும் ஒருமுறை பார்த்தால் உடனே பற்றிக் கொள்வார். எதிலும் தீவிர ஆர்வம். அவரது நடன ஆர்வம் கண்டு தந்தை சுப்பிரமணியம் பரதம் கற்க ஒப்புதல் அளித்தார். மைலாப்பூரில் வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார்கள். அப்போது அவரது வயது ஆறு.

அந்த நேரத்தில், பரதத்தில் பிரபலமாயிருந்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரிடம் பரதம் பயின்ற முத்திரை மாணவிகள். பத்மா நடனம் கற்றுக்கொண்டபோது, உடனிருந்து உதவியவர் நடிகை ஈ.வி. சரோஜா. நடனத்தில் நடைமுறை இலக்கணங்களை மீறி ஜதிகளின் புதிய விதிகளைக் காற்று வெளியில் எழுதத் தொடங்கியது பத்மாவின் தங்க மலர்ப் பாதங்கள்.

அரங்கேற்றம்!

வழுவூர்ப் பாணி நாட்டியத்தில் அழகுச்சுவை அதிகம். லயசுத்தம், அங்க சுத்தம் ஆகியவற்றில்தான் அதிகப்படி கவனம் இருக்கும். அழகுப் பெண்ணான இவருக்கு அவை மிக எளிதாகக் கைவந்தன.

பதினொரு வயதிலேயே அரங்கேற்றம்_மைலாப்பூர் ஆர்.ஆர். சபாவில். எப்போதும், அரங்கேற்றத்தின்போது புதிதாக சலங்கை கட்டிக் கொள்ளமாட்டார்கள். ராசியான ஒருவரின் சலங்கையைக் கட்டிக் கொண்டு மேடையேறுவதுதான் அன்றைய மரபு. இவர் அணிந்து ஆடியது நாட்டியப் பேரொளி பத்மினியின் காற்சலங்கைகளை.

மேடையின் முன் வரிசையில் நடிகர் திலகம், ராஜரத்னம் பிள்ளை, எஸ்.வி. சகஸ்ரநாமம் என்று ஜாம்பவான்களின் ஜமா. அனைவரின் பார்வைகளும் பத்மாவின் மீதே. ஆடத் தொடங்கினார் பத்மா. நடனம் கண்டு மெய் சிலிர்த்தனர் பார்வையாளர்கள். பாராட்டு மழை குவிந்தது.

பி.யூசி. படித்து முடித்ததும் பத்மாவுக்கு டாக்டருக்குப் படிக்க ஆசை. ஆனால், அப்பாவுக்கோ மகள் பெரிய நடனக் கலைஞராக வேண்டும் என்று விருப்பம். அப்போது, கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் பத்மாவிடம், ‘டாக்டர்கள் பலபேர் கிடைக்கலாம். ஆனால், உன்னை மாதிரி டான்ஸர் கிடைக்க மாட்டா. டாக்டர் படிப்பு வேணாம்..’ என்று கூற, அவரது பதிலில் நியாயம் இருந்ததால், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பு. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பிரபல நடனக் கலைஞராகப் புகழ் பெற்றிருந்தார் பத்மா.

ரசவாதம்!

கல்லூரியில் படிப்பு; வீட்டில் நடனம். இரண்டிலுமே பத்மா சிறந்தார். நாட்டிய உடையணிந்து பத்மா மேடையேறினால், ஆண்டாள் மீண்டும் பிறந்து வந்தாளா என்று வியக்க வைக்கும். நவரச முத்திரைகள் ஒரு ரசவாதம் போல், அவரது முகங்களில் மாறி மாறி உணர்வுகள் ஆட்டம் போடும். ஜதிக்கு இவர் ஆட்டமா? அல்லது இவரது ஆட்டத்துக்கு ஜதியா என்று தீர்மானிக்க முடியாத நுணுக்கப் பிறழ்வுகள் இல்லாத இயைந்த நடனம் இவருடையது.

பத்மா கல்லூரி படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய எல்லை லடாக்கில் போர்வீரர்களுக்காக ஒரு நாட்டிய நிகழ்ச்சி. அங்கு பனி அதிகம். ஆக்ஸிஜன் அளவு 40 சதவிகிதம் இங்கிருப்பதைவிட குறைவு. அங்கு போய் சூழ்நிலையைப் பழகிக் கொள்ளவே ஐந்து நாட்கள் ஆனது. கொஞ்சநேரம் ஆடினாலே மூச்சு வாங்கியது. ஒரு வழியாக வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்திவிட்டுத் திரும்பினார் பத்மா.

‘எவ்வளவோ தடவை வெளிநாடுகளுக்குப் போய் ஆடியிருக்கேன். ஆனால், தாய்நாட்டு எல்லையில் ஆடியது மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார் பத்மா.

அண்ணன்!

உலகின் பல்வேறு நாடுகளின் மேடைகளை பத்மாவின் சலங்கைகள் அதிர வைத்திருக்கின்றன. நடனத்தில் புதுமை விரும்பியான இவர், ரஷ்ய மியூசிக் கம்போஸர் ஒருவரின் இசைத்தொகுப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி, ராமாயண ஜடாயு மோட்சத்தை ரஷ்யாவில் நடத்திக் காட்டியபோது, நடனப் பிரியர்கள் ஆனந்த உச்சமெய்தினர். இது ஓர் உதாரணம்தான். பத்மாவின் சாதனைப் பேரேட்டில் இதுபோல் புதுமைகள் ஏராளம் … ஏராளம்!

ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் கால நீட்டம் கொண்டது பத்மாவின் சலங்கை ஒலி. நடனத்தையே உயிர் மூச்சாகவும், உணர்வாகவும் கொண்டதால், திருமணத்தைப் பற்றி நினைக்கவே அவருக்கு நேரமிருந்திருக்காது போலும். பத்மா இப்போது இருப்பது தனது அண்ணன் பாலகிருஷ்ணன் வீட்டில். இன்னொரு தாயாக இருந்து பத்மாவைக் கவனித்துக்கொண்டவர் அண்ணி சியாமளா. ‘இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா, நான் சாதிச்சிருக்க முடியாது’ என்று பெருமைப்படுகிறார் பத்மா. அண்ணி சியாமளா மறைந்தபோது, ஆறாத் துயரில் வீழ்ந்தார் பத்மா.

நடிப்பு!

எம்.ஜி.ஆர். உட்பட பல முன்னணி நடிகர்கள் இவரைக் கதாநாயகியாக நடிக்க அழைத்த போதும் மறுத்தார். அவரது முழுக் கவனமும் நடனக்கலையின் மீதே பதிந்திருந்தது. ஓயாத நடனம், அப்பா ஆரம்பித்த நிருத்யோதயா நடனப் பள்ளியை அண்ணன் பாலகிருஷ்ணனுடன் இருந்து கவனித்துக்கொள்ளுதல் என்று கடிகார முட்களைப்போல் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது பத்மாவின் வாழ்க்கை.

கண்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி பத்மாவுக்கு சலங்கை. நாட்டியத் தாரகை, பாடகி, இசையமைப்பாளர், ஆராய்ச்சியாளர், நடனகுரு என்று பன்முகத் தன்மை கொண்டது பத்மாவின் சாதனைச் சங்கிலி. பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாதமி விருது உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் இந்த நடனத் தாரகையால் பெருமை கொண்டன.

‘‘என்னோட அப்பா காலமானபோது, இந்தக் கலையை வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கணும்னார். அதைத்தான் நான் பண்ணிக்கிட்டிருக்கேன்’ என்று கூறுகிறார் பத்மா.

பரத முனிவர் இன்றிருந்தால் பத்மாவை நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்; ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்.

_பெ. கருணாகரன்

Posted in Biography, Biosketch, dancer, Kumudam, Padma Subramaniam, Padma Subramaniyam, people, profile, Tamil | Leave a Comment »

Aachi Manorama – Maanpumigu Manithargal

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பெ.கருணாகரன்

‘மாலையிட்ட மங்கை’யில் ஆரம்பித்து ஏகப்பட்ட வெற்றிமாலைகள் தோளில் விழ நில்லாத சினிமா சாதனைப் பயணம் மனோரமாவுடையது.

சொந்த ஊர் தஞ்சை மாவட்டம்_ ராஜமன்னார்குடி. இயற்பெயர் கோபிசாந்தா. பெற்றோர் காசி கிளாக்குடையார்_ராமாமிர்தம்.

தந்தை வெள்ளையர் ஆட்சியில் பெரிய காண்ட்ராக்டர். அதனால் வளமைக்குப் பஞ்சமில்லை. மனோரமாவின் தாயார், தனது தங்கையையே கணவருக்கு இரண்டாவது தாரமாக திருமணம் செய்து வைக்க, அவரது வாழ்வில் புயலடிக்க ஆரம்பித்தது.

விளைவு_ கணவரைப் பிரிய நேர்ந்தது. மகள் கோபிசாந்தாவை அழைத்துக்கொண்டு, காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூருக்குக் குடிவந்தார். உழைத்தால்தான் சாப்பாடு என்ற வறுமைநிலை. பலகாரம் சுட்டு விற்றார் ராமாமிர்தம். அப்போது, மனோரமாவுக்கு இரண்டு வயது. அந்த வயதிலேயே திருநீலகண்டர் படத்தில் பாகவதர் பாடிய ‘உன்னழகைக் காண இருகண்கள் போதாதே…’ பாடலை இனிய மழலையில் பாடுவார்.

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை இது கவர்ந்தது. எல்லோரும் அந்த இரண்டு வயது சிறுமியின் ரசிகர்களானார்கள்.

பள்ளிநாட்களிலும் இவரது பாட்டுக் கச்சேரி தொடர்ந்தது. பள்ளி விழாக்கள், தெரிந்தவர் வீட்டு விஷேசங்களில் இவரை அழைத்துச் சென்று தவறாமல் பாட வைத்தார்கள்.

பள்ளியில் படிப்பு; வீடு திரும்பியதும் தியேட்டர்களுக்குச் சென்று அம்மா சுட்டுத் தரும் பலகாரங்களை விற்பது என்று நாட்கள் நகர்ந்தன. தியேட்டர்களில் பலகாரம் விற்கும்போது, சினிமாப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு இவரது இசை ஞானம் விரிவடைந்தது.

ஒரு கட்டத்தில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட பலகாரம் சுடமுடியாத நிலை. எனவே பள்ளத்தூரில் வசதி படைத்த ஒருவரின் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணி மனோரமாவுக்கு.

இந்தக் காலகட்டத்தில்தான் கோட்டையூரில் ஏகாதசி விழா. அன்று இரவு ‘அந்தமான் காதலி’ என்று ஒரு நாடகம். இதில் பெண் வேடம் போட்டவருக்குப் பாடவும் ஆடவும் வராது. அவருக்காக பாடவும் நடு நடுவே ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு, மனோரமாவுக்குக் கிடைத்தது. இந்த நாடகத்தில்தான் இவருக்கு மனோரமா என்ற பெயர் சூட்டப்பட்டது.

‘அந்தமான் காதலி’க்குப் பிறகு, மனோரமாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கின.

விவாகரத்து!

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக் கொண்டிருந்தபோது, அதில் முக்கியப் பொறுப்பிலிருந்த எஸ்.எம். ராமநாதன் மனோரமாவைக் காதலித்தார். அந்தக் காதலுக்கு மனோரமாவும் நாணத்துடன் பச்சைக்கொடி காட்ட, இவர்கள் திருமணம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்தது.

திருமணத்தைத் தொடர்ந்து கர்ப்பமான மனோரமா, ஒன்பதாவது மாதத்தில் பிரசவத்துக்காக தாய் வீடு சென்றார். அதன்பிறகு, கணவர் அவரை வந்து பார்க்கவே இல்லை.

குழந்தை பிறந்த பதினைந்தாவது நாளிலேயே மனோரமாவின் வீட்டுக்கு வந்த ராமநாதன், மனோரமாவை நடிக்க அழைத்தார். ‘குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தானே ஆகிறது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்’ என்றார் மனோரமா. இதனால் கோபம் கொண்ட ராமநாதன் திரும்பிச் சென்றார். அவரிடமிருந்து வந்தது விவாகரத்து நோட்டீஸ். அதிர்ந்தார் மனோரமா.

இல்லற வாழ்வில் இடி விழுந்தாலும் அதற்காக தளர்ந்துவிடாமல் மனோரமா நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார்.

  • கலைமணி நாடக சபா,
  • வைரம் நாடக சபா,
  • எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடகமன்றம்,
  • கே.ஆர்.ராமசாமி நாடக மன்றம் என்று பெரிய பேனர் நாடகங்களில் தொடர்ந்து நடித்தார்.

சினிமாப் பிரவேசம்!

சினிமாவில் மனோரமா முதலில் புக் செய்யப்பட்ட படம் ‘இன்ப வாழ்வு.’ வாங்கிய முன் பணம் நூறு ரூபாய். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்று போனது.

1958_ம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரித்த போது, காமெடி வேடத்தில் நடிக்க மனோரமாவை ஒப்பந்தம் செய்தார்! ‘காமெடி வேடமா?’ என்று மனோரமா மலைத்தபோது, தைரியம் தந்து நடிக்க வைத்தார் கண்ணதாசன். அந்தப் படத்தில் மனோரமாவுக்கு நல்ல பேர். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதிலும் நாடகங்களில் நடிப்பதை மனோரமா நிறுத்திவிடவில்லை. அறிஞர் அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்தில் காகபட்டராக அண்ணா நடித்தார். இதில் கதாநாயகி இந்துமதியாக அண்ணாவின் தெள்ளு தமிழ் வசனங்களைப் பேசி நடித்தார் மனோரமா.

கதாநாயகன் கருணாநிதி!

கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதய சூரியன்’ நாடகத்தில் கதாநாயகியாக ஐம்பது தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார் மனோரமா. நாடகத்தின் கதாநாயகன் கலைஞர் கருணாநிதி!

1963_ல் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கொஞ்சும் குமரி’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு. தொடர்ந்து, அலங்காரி, அதிசயப்பெண், பெரியமனிதன் ஆகிய படங்களிலும் கதாநாயகி! நடுவில் சில இந்திப் படங்களிலும் வாய்ப்பு. என்றாலும், தனது உயிர்நாடியான குணசித்திர, காமெடி வேடங்களை மனோரமா மறந்துவிடவில்லை. அவைதான் மனோரமாவின் சினிமா வாழ்க்கையில் அழியாத சித்திரங்களாய் நிலைத்து நிற்கின்றன.

ஜில்ஜில் ரமாமணி!

1968_ல் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ மனோரமா வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் இவர் ஏற்று நடித்த ‘ஜில்ஜில் ரமாமணி’ பாத்திரம் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. 1971_ல் ‘கண்காட்சி’ என்ற படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்தார் மனோரமா. ஒவ்வொரு காரெக்டரிலும் ஒவ்வொரு விதமாக நடித்து மெருகூட்டினார்.

காமெடி வேடங்களில் கலக்கிய மனோரமா, பிற்காலத்தில் தாய்வேடங்கள் ஏற்று தனிமுத்திரை பதித்தார்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை மனோரமாவுக்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியுடன் நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்.டி.ராமாராவ் ஆகியோருடன் சினிமாவிலும் மனோரமா நடித்துள்ளார்.

இரண்டு வயது மழலையிலேயே பாட ஆரம்பித்து விட்ட மனோரமா, இதுவரை நூறு பாடல்களை தனது சொந்தக் குரலிலேயே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோரமா, இதுவரை 1300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உலக சினிமா சரித்திரத்தில் யாரும் தொடாத எண்ணிக்கை இது. இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவரது இந்தச் சாதனையை ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். அந்த ஒருவர் வேறு யார்? மனோரமாவேதான். ஆம்… அவர் வெல்ல முடியாத அதிசய மனுஷி! றீ

ஆச்சி

எல்லோரும் மனோரமாவை அன்புடன் அழைப்பது ‘ஆச்சி’ என்று. இதற்குப் பின்னணி உண்டு. இவர் வளர்ந்தது செட்டி நாட்டில். 1962ல் சுகி. சுப்பிரமணியத்தின் ‘காப்பு கட்டி சத்திரம்’ என்ற ரேடியோ நாடகம் 66 வாரம் ஒலிபரப்பப்பட்டது. இதில் மனோரமா நடித்தார். நாடகத்தில் இவர் செட்டிநாட்டுப் பாணியில் பேசுவார். இதனால் ஏவிஎம் ஸ்டூடியோவின் மேக்அப் மேன் இவரை விளையாட்டாக ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதன் பிறகு எல்லோரும் இவரை ‘ஆச்சி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

_பெ.கருணாகரன்

Posted in Biography, Biosketch, Kumudham, manorama, Pe Karunakaran, people, profile, Tamil, Women | Leave a Comment »

Maanpumigu Manithargal – Chinnapullai

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

பெ. கருணாகரன்,  ப. திருமலை.
டெல்லி… ஸ்ரீசக்தி டிரஸ்கார் விருது வழங்கும் விழா. அந்தப் பெண்ணின் பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் மேடையேறி அங்கிருந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாயைக் கும்பிட்டார். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத சம்பவம். வாஜ்பாய் அந்தப் பெண்மணியின் காலில் விழுந்து வணங்கினார்.

பிரதமர் காலில் விழுந்து வணங்கிய அந்தப் பெண் _ சின்னப்பிள்ளை. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். சுய உதவிக் குழுக்கள் மூலம் ஏராளமான பெண்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவிளக்கு ஏற்றியவர்.

மதுரை மாவட்டம் சுள்ளந்திரி கிராமம்தான் சின்னப்பிள்ளை பிறந்த ஊர். அப்பா, பெரியாம்பாளை. அம்மா, பெருமி. தாழ்த்தப்பட்ட சமுதாய விவசாயக்கூலிகள். இவர்களுக்கு நான்கு வாரிசுகள். கடைசி வாரிசுதான் சின்னப்பிள்ளை. இவருக்கு மூன்று வயதிலிருக்கும்போது, அம்மா இறந்துவிட, மறுமணம் செய்துகொள்ளாமலே நான்கு பேரையும் பெரியாம்பாளை வளர்த்திருக்கிறார்.

வசதியில்லாததால் யாரையும் படிக்க வைக்க முடியவில்லை. நான்கு வாரிசுகளுக்கும் விவசாயக் கூலி வேலைதான். ஏழு வயதிலேயே சின்னப்பிள்ளைக்கு மாடு மேய்க்கும் வேலை.

திருமணம்!

பத்து வயதில் பெரிய மனுஷி; பன்னிரண்டு வயதில் திருமணம். கணவர் பெருமாள் _ தாய்வழி உறவு. இவருக்கும் விவசாயத் தொழில்தான்.

இரண்டு குழந்தைகள் பிறந்தநிலையில் கணவருக்குத் தீராத வயிற்றுவலி. வேலைக்குச் செல்ல முடியாத நிலை. இந்தச் சூழலில் சின்னப்பிள்ளையின் தந்தையும் காலமாகிவிட, குடும்பச்சுமை சின்னப்பிள்ளையின் மீது.

அசரவில்லை. விவசாயக் கூலி வேலைக்குச் சென்றார். கடுமையாய் உழைத்தார். ஆனால், வருகிற கூலியெல்லாம் கணவரின் வைத்திய செலவுக்கே போனது.

வர்க்கப் பார்வை!

வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபிறகு, இவருக்குள் வர்க்கப் பார்வை தலைதூக்கியது. விவசாயக் கூலிகளின் சிக்கல்களை உணர்ந்தார். செய்த வேலைக்கு சரியான கூலி கிடைக்காதது ஒரு பக்கமென்றால், இன்னொரு பக்கம் ஏராளமானோருக்கு வேலையில்லாத நிலை. இதைச் சரி செய்யவேண்டும் என்ற கோபமும், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆதங்கமும் அவரை தினமும் துன்புறுத்தின. விளைவு… அவருக்குள் அதற்கான திட்டங்கள் தோன்றின.

நில உடைமையாளர்களைச் சந்தித்தார். ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் நிலத்துக்குத் தேவையான ஆட்களை காண்ட்ராக்ட் முறையில் மொத்தமாகப் பேசி, பலருக்கும் வேலையைப் பகிர்ந்தளித்தார். நிலவுடைமையாளர்களிடம் கண்டிப்பாகப் பேசி, கூலியை நியாயமாய் வாங்கிக் கொடுத்தார். வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் ஆகியோருக்கும் இவர் வேலை வழங்கத் தவறவில்லை. இதனால் மக்களுக்கு சின்னப்பிள்ளை மீது நம்பிக்கை வந்தது.

இந்த நேரத்தில்தான் மாதர் சங்கத்தினர் சிலர், மான்யத்துடன் வீடு வாங்கித் தருவதாகக் கூறி வந்தனர். சின்னப்பிள்ளை தலைமையிலான விவசாயக் கூலிகளிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கறந்தார்கள். ஆனால், கிடைத்தது வீடு அல்ல, ஏமாற்றம்தான்! பணம் கொடுத்தவர்களெல்லாம் சின்னப்பிள்ளை சொல்கிறாரே என்ற நம்பிக்கையில் கொடுத்தவர்கள். இது சின்னப்பிள்ளைக்குப் பெரிய உறுத்தலாயிற்று.

சுய உதவி!

இந்த நிலையில்தான் தானம் அறக்கட்டளையின் தலைவர் வாசிமலை தனது குழுக்களுடன் சின்னப்பிள்ளையை அணுகி, கடன், சுயஉதவிக் குழுக்கள் என பேசினார். ஏற்கெனவே ஏற்பட்ட ஏமாற்றத்தால் சின்னப்பிள்ளைக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. தொடர்ந்து அவர்கள் விடாமல் பேசிக்கொண்டேயிருக்கவே, சிறிது சிறிதாக அவர்கள் மீது நம்பிக்கை வந்தது. ஆனால், மக்களிடம் சின்னப்பிள்ளையால் நம்பிக்கை ஏற்படுத்தமுடியவில்லை. இதனால், பில்லுச்சேரி கிராமத்தில் முதலில் துவங்கப்பட்ட சுயஉதவிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் பதினான்கு பேர் மட்டுமே.

இந்தக் குழுவினர் போட்ட பணம் இவர்களுக்குள்ளேயே சுழன்றது. தானம் அறக்கட்டளையின் நிதிஉதவியும் ஆலோசனையும் குழுவை மேலும் வலுவாக்கியது. சின்னப்பிள்ளைக்கு இந்தத் திட்டம் பிடித்துவிட, அக்கம் பக்கத்துக் கிராமத்து விவசாய பெண்களையும் திட்டத்துக்குள் இழுத்துப்போட ஆரம்பித்தார். சுயஉதவிக் குழுக்கள் கிராமத்துக்குக் கிராமம் வேர்விடத் தொடங்கின.

முதலில் பதினான்கு பேருக்குத் தலைவியாக இருந்த சின்னப்பிள்ளை, மூன்றே ஆண்டுகளில் முந்நூறு பேருக்குத் தலைவியானார். அடுத்த மூன்றாண்டுகளில் அது ஐந்தாயிரம் ஆனது. இவரது கடின உழைப்பு இவரை ஏழு மாநில களஞ்சிய சுயஉதவிக் குழுக்கள் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக்கியது. இந்தப் பொறுப்பு ஏழாண்டுகளுக்கு. இப்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒரிசா மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுநாற்பது கூட்டமைப்புகளுக்கு இவர்தான் தலைவி. இந்தக் கூட்டமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கை மூன்று லட்சம்.

இவ்வளவு பெரிய பொறுப்பு வகித்தாலும் கூட, இவருக்கு இன்னும் எழுதப்படிக்கத் தெரியாது என்பதுதான் ஆச்சரியம். எப்படிச் சமாளிக்கிறாராம்? ‘‘வாசிக்கச் சொல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிடறேன். கணக்கு வழக்கு பார்க்க படிச்ச புள்ளைகளை வேலைக்கு வைச்சிருக்கேன். செக்கில் மட்டும்தான் நான் கையெழுத்துப் போடுவேன்…’’ என்கிறார். இவருக்கு இந்தியா முழுக்க பயணம் செய்த அனுபவமுண்டு.

தனக்குக் கிடைக்கும் விருதுகள், பணம் எதையும் தனக்காக இவர் வைத்துக்கொள்வதில்லை. தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தில் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைக் கொண்டு ஓர் அறக்கட்டளையை அமைத்திருக்கிறார். இதிலிருந்து கிடைக்கும் வட்டி, சிறுசிறுமகளிர் சுயஉதவிக் குழுக்களின் தலைவிகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுகிறது.

சாதனை!

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் சாதித்ததென்ன? இவரிடமிருந்து பணிவாக பதில் வருகிறது. ‘‘கந்துவட்டியை அடியோடு ஒழிச்சுட்டோம்ல. நூறு ரூபாய் கடன் வாங்கிட்டு அதுக்கு வட்டியாக ஒரு மூட்டை நெல் அளந்து கொடுத்த அந்தக் காலம் மலையேறிடுச்சி. இப்ப எங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக்கிறதாலே அநியாய வட்டி என்கிற பேச்சுக்கே இடமில்லே… இது தவிர, மூணு வேளையும் வயிறார பட்டினியில்லாம எங்க பெண்கள் சாப்பிடறாங்க….

தவிர, எங்க குழுக்களில் சுயதொழிலை அறிமுகப்படுத்தி விரிவுபடுத்திக்கிட்டு வர்றோம்…’’

பெரிய தலைவியாகியும் வசதியாக வாழ வாய்ப்பிருந்தும் கூட, சின்னப்பிள்ளை இன்னும் கிராமத்திலேயேதான் இருக்கிறார். தலித்துகளுக்கு வழங்கப்படும் ஒரே அறை கொண்ட சிறிய வீடுதான் இவர் குடியிருப்பது. அதைப் பெறவே இவர் போராட வேண்டியிருந்ததாம். இந்த வீட்டிலிருந்துதான் இவரது மக்கள் பணி தொடர்ந்து நடக்கிறது. ‘ரோடு இல்லை… ரேஷன் கார்டு இல்லை… விளக்கு எரியவில்லை…’ என்று மக்கள் குறைகளுக்காக தொடர்ந்து அதிகாரிகளைச் சந்திக்கிறார்.

‘எங்க சனங்க பாவம்ங்க…. அவங்களுக்கு ஏதாவது செஞ்சுக் கொடுங்க…’ என்ற இவரது வெள்ளந்தியான பேச்சை அதிகாரிகளால் தட்ட முடிவதில்லை.

‘வாழ்க்கையிலே நம்மால அடுத்தவர்களுக்குப் பயன் இருக்கணும். நல்லது செஞ்சோம்கிற திருப்தி இருக்கணும். இதுதான் மனுஷ ஜென்மத்தின் முழுமையா இருக்கமுடியும்.’’ என்கிறார் அந்தக் கறுப்பு வைரம்.

_ பெ. கருணாகரன், ப. திருமலை.

Posted in Achievers, Biography, Biosketch, Chinnapullai, Kumudham, people, profile, sinna pulla, Tamil | Leave a Comment »