Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Procedure’ Category

Art therapy as a mental health profession – Treatment of Psychological Disorders

Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007

இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!

ந.ஜீவா

சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…

“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.

இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.

ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.

“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.

“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.

“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.

குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.

“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.

“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.

———————————————————————————————-

நனவாகுமா இவர்கள் கனவு?

வி. கிருஷ்ணமூர்த்தி

ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.

குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.

உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.

முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.

இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.

அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.

நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.

இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.

Posted in Active, Add, Affected, AIDS, Arts, Attention, Baby, Brain, Challenged, Child, Children, Colleges, Community, Crafts, cure, Deficiency, Disabled, Disorder, Donate, Education, Europe, Group, Handicrafts, Health, Help, Kid, medical, Mental, Needy, Neuro, NGO, Patient, Poor, Procedure, Project, Pshychic, Pshychology, Relax, Releiver, Reliever, Rich, Schizo, School, service, Shrink, Sick, SNEHA, Spastic, Stress, Suicide, Tax, Tension, Therapist, Therapy, Trauma, Treatment, univ, University, univs, US, USA, Volunteer, Wealthy, Work | Leave a Comment »

Cinema shooting in Trains – Railways updates the Procedure for Movie Locations

Posted by Snapjudge மேல் ஜூன் 10, 2007

ரயில் நிலையங்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை

புது தில்லி, ஜூன் 11: இனி ரயிலின் மீது ஏறி, வில்லன்களுடன் பாய்ந்து, பாய்ந்து சண்டை போடுவது, காதலியை சமாதானப்படுத்த ரயில் படிக்கட்டில் தொங்கியபடியே அடுத்த ரயில்நிலையம் வரும் வரை வசனம் பேசுவது, பல வண்ண உடைகளில் ஆர்ப்பாட்டமாக நடனக்குழுவினருடன் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சிகளை இனி காணமுடியாது.

ரயில்வே துறையினர் வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்தால் மட்டுமே இனி இதுபோன்ற காட்சிகளை படம்பிடிக்க அனுமதி கிடைக்கும்.

பயணிகளுக்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என உறுதிப்படுத்தவேண்டும், பகல்நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு வைக்கக்கூடாது உள்ளிட்ட பல வழிமுறைகளை ரயில்வேதுறை வலியுறுத்தி உள்ளது.

படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் என மூன்று பிரிவுகளில் வசூலிக்கப்படும். அதேபோல, உரிமக் கட்டணமாக ரூ. 30 ஆயிரமும் வசூலிக்கப்படும். மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த உரிமக் கட்டணம் ஜூன் 1 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பின்போது எவ்வித சேதமும் நிகழக்கூடாது. இதற்கு முன்கட்டணமாக உரிமக்கட்டணம் செலுத்தவேண்டும். அதோடு, ரயில்வே நிர்வாகத்துடன் ஓர் உத்தரவாத ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

தூர்தர்ஷன், புனே மற்றும் கோல்கத்தா திரைப்படக் கல்லூரிகள் தவிர அரசு அங்கீகாரம் பெற்ற திரைப்பட பயிற்சி நிறுவனங்களுக்கு உரிமக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிமுறைகள் அனைத்தும் ரயில் உற்பத்தி யூனிட்டுகள் மட்டுமில்லாது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் திரைக்கதையில் ரயில்வே துறையினருக்கு சொந்தமான பொருள்களுக்கு சேதாரம் ஏற்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமில்லாமல், ரயில்வே துறையின் முன் அனுமதி இல்லாமல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் பெயர்களை மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

ரயில்வே துறையினரிடம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள திரைக்கதையில் ஏதேனும் மாற்றம் செய்து படம் பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.

சினிமாக் குழுவினர் தவிர மற்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனைத்து ரயில்நிலையங்களில் உள்ள முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில்வேத் துறையிடம் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம். வியாபார மற்றும் வணிக ரீதியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள எவ்வித உரிமக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகை பத்திரிகைகளுக்கும் பொருந்தும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Posted in Bollywood, Camera, Cinema, Doordarshan, Duets, Fights, Film Institute, Films, Freight, Hindi, Kollywood, License, Locations, Love, Movie, Movies, Permission, Permissions, Picturization, Platform, Procedure, Process, Production, Props, Railways, Rly, Scenes, Screenplay, Sets, Spot, Telugu, Tollywood, Trains, Travel, Traveler | Leave a Comment »

Stem Cells Research – Current Developments in Medicine, Science

Posted by Snapjudge மேல் மே 4, 2007

ஸ்டெம் செல் புரட்சி!

கு. கணேசன்

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக அலோபதி மருத்துவம் அவ்வப்போது புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை, மூட்டுமாற்று அறுவைச் சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று தொடரும் இவ்வரிசையில் இப்போது “ஸ்டெம் செல் சிகிச்சை’ புதிதாகச் சேர்ந்துள்ளது.

“ஸ்டெம் செல்கள்’ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் “செல்கள்’ பற்றிய முன்னுரை தேவைப்படுகிறது. செங்கல் செங்கல்லாக அடுக்கிக் கட்டப்பட்ட கட்டடம்போல் கோடிக்கணக்கான செல்களால் அடுக்கப்பட்டது, நம் உடல்.

ஆனால் ஒவ்வொரு செல்லும் ஒவ்வொரு விதம். உதாரணமாக, மூளையின் செல்லுக்கும் முடியின் செல்லுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அவற்றின் அமைப்பு வேறு, அளவு வேறு, நிறம் வேறு, குணம் வேறு, செயல் வேறு. தாயின் கருவில் ஒற்றை செல்லில் உருவாகத் தொடங்கும் நம் உடலுக்கு எப்படி இது சாத்தியம்? காரணம், “ஸ்டெம் செல்’கள்.

“ஸ்டெம் செல்’கள் என்பவை நம் உடலின் ஆரம்ப செல்கள். ஆதார செல்கள். விதை செல்கள். தாயின் கருப்பையில் கரு உருவாகும் போது உண்டாகும் முதல் செல்கள். இந்தச் செல்களுக்குக் குறிப்பிட்ட “முகம்’ கிடையாது. உடலின் தேவைக்கேற்ப இவை தங்களுடைய அமைப்பை மாற்றிக் கொள்ளும்.

இவ்விதம் மாற்றமடைந்து முகம், முடி, மூளை, கை, கால், கண், காது, இதயம், நுரையீரல், கல்லீரல் என்று தனித்தனி உறுப்பாக மாறி நம் உடலுக்கு முழு உருவத்தைத் தருகின்றன.

இந்த ஸ்டெம் செல்கள் இரு வகைப்படும். குழந்தை கருவாக இருக்கும்போது அக்கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள், முதல் வகையைச் சேர்ந்தவை. இரண்டாம் வகை ஸ்டெம் செல்கள் ரத்தம், எலும்பு மஜ்ஜை, இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற பல உறுப்புகளில் உள்ளன. இவற்றில் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள்தான் நம் கவனத்திற்கு உரியவை. காரணம், இப்போது ஸ்டெம் செல் சிகிச்சைக்கு இவையே நன்கு பயன்படுகின்றன.

பொதுவாக, தொற்றுக்கிருமிகள் மூலமோ, விபத்தின் மூலமோ, ரத்தம் இழப்பதாலோ அல்லது பரம்பரையாகவோ நம் உடலில் எங்காவது பாதிப்பு ஏற்படுமானால் அந்த இடத்தில் உள்ள செல்கள் இறந்துவிடும். அப்போது அந்த உறுப்பின் திசுக்கள் செயலிழந்துவிடும். இறந்த செல்களை ஈடுகட்ட உடலின் பிற பகுதிகளிலிருந்து புதிய செல்கள் இடம் பெயர்ந்து, பாதிப்படைந்த இடத்துக்குச் சென்று, சமன் செய்யும்.

செல்களின் பாதிப்பு சிறிய அளவில் இருந்தால் இவ்வாறு உடல் தானே சரிசெய்து கொள்ளும். வெளிச்சிகிச்சை எதுவுமின்றி அந்த உறுப்பு மீண்டும் செயல்படத் தொடங்கும். மாறாக, செல்களின் பாதிப்பு அதிக அளவில் இருக்குமானால் அந்த உறுப்பின் செயல்பாடு நின்றுவிடும். இம்மாதிரி நேரங்களில் மருந்து, மாத்திரை, ஊசி, அறுவைச் சிகிச்சை போன்றவற்றால் சரி செய்வது மருத்துவர்களின் வழக்கம்.

ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. நோயாளியின் உடலில் பாதிப்படைந்த உறுப்புக்கு “ஸ்டெம் செல்’களைச் செலுத்துவதன் மூலம் அவ்வுறுப்பு செயலிழப்பதைத் தவிர்க்கலாம் என்பதும் அந்த நோயாளிக்கு வந்திருந்த நோயைக் குணமாக்கலாம் என்பதும் உறுதியாகியுள்ளது. நம் உடலில் பழுதான பாகத்தில் ஸ்டெம் செல்களை விட்டால் அப்பாகம் தன்னைத்தானே சரிசெய்து கொண்டு செயல்படத் தொடங்குகிறது. இதுதான் “ஸ்டெம் செல் சிகிச்சை’யின் அடிப்படை சூத்திரம்.

“ஸ்டெம் செல் சிகிச்சை’ சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். வைரஸ் தொற்றுகளால் கணையம் பாதிக்கப்படும்போது, இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் இவர்களுக்கு இன்சுலின் சுரப்பது குறைந்து சர்க்கரை நோய் வருகிறது. இந்த மாதிரி நேரங்களில் சர்க்கரை நோயாளியின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அல்லது நோயாளிக்குப் பொருந்தக்கூடிய மற்றொருவரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று நோயாளியின் கணையத்தில் செலுத்தினோமானால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்கள் மீண்டும் செயல்பட்டு இன்சுலினைச் சுரக்கத் தொடங்கும். இதனால் சர்க்கரைநோய் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்குக் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் பாதிப்பு ஏற்படும்போது காலில் புண் வந்து நீண்ட நாள்களுக்கு ஆறாமல் தொல்லை கொடுக்கும். அப்போது அறுவைச் சிகிச்சை செய்து காலையே எடுத்துவிடுவது இதுவரை இருந்த வழக்கம். இதற்குப் பதிலாக இப்போது நோயாளியின் இடுப்பு எலும்பிலிருந்து ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை மட்டும் பிரித்தெடுத்து, சர்க்கரை நோயாளியின் காலுக்குச் செல்லும் ரத்தநாளத்தில் ஊசி மூலம் செலுத்த, இரண்டு மாதங்களில் கால் புண் நன்றாக ஆறிவிடுகிறது.

அடுத்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயநோயாளிகளுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை ஓர் உயிர்காக்கும் சிகிச்சையாக விளங்குகிறது. பைபாஸ் அறுவைச்சிகிச்சை செய்யாமல், நோயாளியின் ரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரித்தெடுத்து, ஊசி மூலம் இதயத்தமனி நாளங்களுக்குச் செலுத்தினால் சில வாரங்களில் அங்கு புதிய ரத்தநாளங்கள் உருவாகி இதயத்திற்குத் தேவையான ரத்தத்தை விநியோகித்து விடுகின்றன. இதனால் அந்த நோயாளிக்கு மாரடைப்பு மீண்டும் வருவது தடுக்கப்படுகிறது.

மலேரியா, சிக்குன்குனியா, மஞ்சள்காமாலை போன்ற தொற்றுநோய்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும்போது நோயாளியின் பெற்றோரின் உடலிலிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து, நோயாளிக்குச் செலுத்தி, சிறுநீரகப் பாதிப்பைச் சரி செய்யும் சிகிச்சை முறை அண்மைக்காலமாக சென்னையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

கண்ணில் “பூ’ விழுதல் கோளாறினால் “கார்னியா’ பாதிக்கப்படும்போது பார்வை இழப்பு ஏற்படுவது உண்டு. இதற்கு “கார்னியா மாற்று அறுவைச் சிகிச்சை’ செய்யப்படுகிறது. இதற்குப் பதிலாக, கண்ணின் ஓரத்தில் “லிம்பஸ்’ என்னுமிடத்தில் உள்ள ஸ்டெம் செல்களை எடுத்து பாதிக்கப்பட்ட கார்னியாவில் பொருத்தினால், அந்த நோயாளிக்குக் கார்னியா செல்கள் வளர்ச்சி பெற்று பார்வை கிடைத்து விடுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது.

பக்கவாதம், பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சிமர் எனும் மறதிநோய் போன்றவற்றுக்கு “நியூரல் ஸ்டெம் செல்களை’ச் செலுத்திக் குணமாக்கலாம். ரத்தப்புற்றுநோய், தலசீமியா, ரத்தம் உறைதல் கோளாறு போன்றவற்றுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

மேலும், விபத்தின் மூலம் முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படும்போது அந்த இடங்களில் ஸ்டெம் செல்களைச் செலுத்தினால், நாளடைவில் புதிய செல்கள் தோன்றி, அந்த உறுப்பு வளர்ச்சியடைந்து, செயலூட்டம் பெற்றுவிடுவதால் படுத்த படுக்கையாக இருப்பவர்கள்கூட இச்சிகிச்சைக்குப் பிறகு எழுந்து நடமாட முடிகிறது என்றால் இதன் மகிமையைப் புரிந்து கொள்ளுங்கள்.

பிறக்கும் குழந்தையின் தொப்புள்கொடியில் உள்ள ரத்தத்தைச் சேமித்து வைத்தால், அதில் உள்ள “ஸ்டெம் செல்கள்’ பிற்காலத்தில் அக்குழந்தைக்கு ஏற்படும் ரத்தசோகை, ரத்தப்புற்றுநோய், சர்க்கரைநோய் மற்றும் பரம்பரை நோய்களுக்குச் சிகிச்சை செய்யப் பயன்படும் என்று அண்மையில் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆகவே இதுவரை பிரசவத்தின்போது “தேவையில்லை’ என்று கழித்துப் போடப்படும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்துப் பாதுகாக்க இப்போது இந்தியாவில் பல நகரங்களில் “தொப்புள்கொடி ரத்த வங்கிகள்’ உதயமாகியுள்ளன.

மேல்நாடுகளில் ஆண், பெண் இணையாமல், “குளோனிங்’ முறையில், பெண்ணின் கருப்பையிலிருந்து ஸ்டெம் செல்லை எடுத்து, அதை அந்தப் பெண்ணின் கருப்பையிலேயே பதியம் செய்து, கருவை வளர்த்து ஒரு முழுமனிதனையே உருவாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி பலர் தங்கள் முக அமைப்பையே மாற்றிக் கொண்டுள்ளனர். வரும் காலங்களில் மருத்துவத் துறையில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி என்னவெல்லாம் புரட்சிகள் நடக்க இருக்கிறதோ, அவை அந்த ஆராய்ச்சியாளர்களுக்கே வெளிச்சம்!

(கட்டுரையாளர்: ராஜபாளையம் கணேஷ் மருத்துவமனையின் பொது மருத்துவர்.)

Posted in alzheimer, alzheimer's, Analysis, Backgrounder, Biotech, Blood, Cells, Clone, Cloning, cure, Developments, Disease, Doctor, Medicine, Neural, parkinson, parkinson's, Prescription, Procedure, Research, Science, Stem, Stem Cell, Stem Cells, surgery | 1 Comment »