Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007
ஊருக்கு இளைத்தவன்…
உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.
தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.
உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.
உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.
10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.
வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.
யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.
கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.
கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.
இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.
உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.
கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.
மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.
Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007
ரூபாய் மதிப்பின் ஏற்றமும் விளைவுகளும்
எஸ். கோபாலகிருஷ்ணன்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 9 ஆண்டுகளில், முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஜனவரி மாதம் ஒரு டாலர் ரூ. 44.12 ஆக இருந்த மதிப்பு, தற்போது ரூ. 40.50 என்ற அளவை எட்டியுள்ளது. கடந்த 6 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு உயருவதால் நன்மை, தீமை இரண்டும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். ரூபாயின் மதிப்பு உயர்ந்து டாலரின் மதிப்பு சரிவதால், இறக்குமதி செய்பவர்கள் செலுத்த வேண்டிய பணம் குறைகிறது. இது நன்மை.
அதேநேரம், நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலரின் மதிப்பு சரிந்திருப்பதால் நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது நமக்குப் பாதகமானது.
கடந்த காலங்களில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்தபோது, ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதாவது, சந்தையில் பெரிய அளவில் டாலரை வாங்குவதன் மூலம் வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பை ரிசர்வ் வங்கி சரி செய்துவிடும். ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்விதம் செய்யவில்லை. ஏன் என்ற கேள்வி எழுகிறது.
அண்மைக் காலமாக, ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய அரசும் சரி, கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ரூபாய் மதிப்பின் உயர்வை, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டன.
டாலர் சரிந்திருப்பதால் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை குறைந்துள்ளது. இது விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கு உதவியது.
இதனாலும் ரிசர்வ் வங்கியின் இதர நடவடிக்கைகளாலும் பணவீக்கம் தற்போது 4.03 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பணவீக்கம் மற்றும் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், ரூபாய் மதிப்பின் உயர்வால் விளைந்துள்ள பாதகங்களை இனியும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கலாகாது. ஏற்றுமதி கடுமையாக சரிந்து வருகிறது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி 26.3 சதவிகித அளவு வளர்ச்சி கண்டது. 2006-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 19.3 சதவிகிதமாகச் சரிந்தது. ரூபாய் மதிப்பு அபரிமிதமாக உயர்ந்திருக்கும் நடப்பாண்டின் முன்பாதியில் எந்த அளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது என்னும் விவரங்கள் அடுத்த ஓரிரு மாதங்களில்தான் தெரியவரும்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்திருப்பதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, ஜவுளி, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதியாளர்கள் பொறியியல் தொடர்பான தொழில்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 35 சதவிகிதம் அமெரிக்காவுக்குத்தான் அனுப்பப்படுகிறது. ஜவுளி ஏற்றுமதியில் கோட்டா முறை ரத்து செய்யப்பட்டது இந்தியாவுக்கு நல்லவாய்ப்பாக அமைந்தது. உற்சாகமாக, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில், ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்று, உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்திய ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதி ஆர்டர்களைப் பெறும்போது டாலரின் மதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், சரக்கை அனுப்ப வேண்டிய நேரத்தில் டாலரின் மதிப்பு சரிந்துவிட்டது. இதனால் பலகோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் தினசரி ரூ. 3.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஜவுளித்துறையில் 3.50 கோடி பேர் பணியாற்றுகின்றனர். எனவே தற்போதைய நிலை கவலை அளிக்கக்கூடியாதக உள்ளது.
சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்றுமதியாளர்கள் நாணயப் பரிமாற்றத்தால் பாதிக்கப்படவில்லை. அந்த நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பை கடந்த பல ஆண்டுகளாக ஒரேநிலையில் வைத்திருக்கின்றன. இதனால் அமெரிக்கச் சந்தையில் சீனாவின் ஜவுளி விலை உயராது. ஆனால் இந்தியாவின் ஜவுளி விலை அதிகரிக்கும்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரை, அவர்களது ஏற்றுமதிக்கான லாபம் கணிசமாகச் குறைந்துள்ளது. இதனால், பன்னாட்டுச் சந்தையில் போட்டியிடும் சக்தி அவர்களுக்கும் குறையும்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஈடுபடும் தொழில்கள் கடும் பாதிப்பிலிருந்து தப்பியுள்ளன. அந்த வகையில், ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணங்களை ஏற்றுமதி செய்வோர் நிலை சற்று ஆறுதல் அளிக்கக் கூடியது. இவர்கள் உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வெளிநாடுளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். கற்களை பட்டைதீட்டியும் புதிய ஆபரணங்களாகத் தயாரித்தும் ஏற்றுமதி செய்கிறார்கள். இவர்களுக்கு இறக்குமதிச் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த உபரி லாபம் ஏற்றுமதி இழப்பை ஈடு செய்ய உதவுகிறது.
பொறியியல் ஏற்றுமதியைப் பொருத்தவரை, 2006-07-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 30 சதவிகிதம் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில் இந்த வளர்ச்சி 23.92 சதவிகிதம் சரிந்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஒருபுறமிருக்க, புதிய வேலைவாய்ப்புகள் பறிபோனதுதான் பெரும் சோகம். ஜவுளி ஏற்றுமதி குறைந்ததால், 2007-08ம் ஆண்டில் 5,79,000 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்று இந்திய ஜவுளி சம்மேளனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் 2.72 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மற்றும் தொடர்புடைய தொழில்களில் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகளும் அடங்கும்.
விசைத்தறி நெசவாளர்களும் புதிய சூழ்நிலையில் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரும். ரூபாய் மதிப்பின் ஏற்றம் மற்றும் டாலரின் சரிவு, இந்திய ஏற்றுமதியை, தொழில் வளர்ச்சியை குறிப்பாக, வேலைவாய்ப்புகளை மோசமாகப் பாதித்துள்ளது என்பது கண்கூடு. எனவே இதற்குரிய பரிகாரம் தேடியாக வேண்டும். பணவீக்கம் ரூபாய் மதிப்பு ஆகிய இரு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது கம்பிமேல் நடப்பது போல்தான். எனினும் பாரத ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் இதில் தீவிரகவனம் செலுத்தும் நேரம் வந்துவிட்டது.
இது ஒருபுறமிருக்க, நீண்டகால அடிப்படையில் மின்சாரம், போக்குவரத்து, துறைமுகங்களில் நேரும் காலதாமத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாடுதான் ஏற்றுமதிக்கு உதவும். ஏற்றுமதியாளர்களும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொண்டு, உற்பத்திச் செலவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். தங்கள் லாபத்துக்கு எல்லா நேரங்களிலும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்க முடியாது.
எனினும், தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு உடனடி தீர்வாக ஏற்றுமதியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்குவது பொருத்தமாக இருக்கும். உதாரணமாக, Duty Drawback எனப்படும் ஏற்றுமதிக்கான சலுகைத் தொகையை அதிகரிக்கலாம். ஏற்றுமதிக்கான பொருள்களை உற்பத்தி செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடன் வழங்குதல் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் 80 ஏ.ஏ.இ. பிரிவின் கீழ் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரிச்சலுகை, சேவை வரித் தள்ளுபடி ஆகிய நடவடிக்கைகளின் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர்.)
Posted in Agriculture, Appreciation, APR, Balancesheet, Banks, Biz, Call-Centers, Call-Centre, Capital, Commerce, Commodity, Currency, Deals, Deflation, Deposits, Diesel, Dollar, Duty, Economy, Employment, Euro, Exchange, Expenses, Exports, FDI, Finance, Fluctuations, forecasts, Garment, Gas, GDP, Growth, IMF, Imports, Industry, Inflation, Inflows, InfoTech, Interest, International, investments, Jobs, Loans, markets, MNC, Money, oil, Outflows, Outsourcing, Petrol, Portfolio, pound, Pricing, Productivity, Profit, Profits, Rates, RBI, Recession, Rupee, Sales Tax, service tax, slowdown, Software, Statement, Strength, Tax, Telecom, Textiles, Trading, Transfer, US, USA, Valuation, volatility, WB, World, Yen | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007
உயரும் ரூபாய் மதிப்பு; குமுறும் ஏற்றுமதியாளர்கள்
ஆர். அறிவானந்தம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருகிறது.
கடந்த 3 முதல் 4 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 8 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.44 முதல் ரூ.45 அளவில் இருந்தது தற்போது 40 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.
செல்வந்த நாடுகளே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் தொழிற்படிப்பு படித்த இளைஞர்களும் இளைஞிகளும் ஆண்டுதோறும் அதிக அளவில் உருவாவதே முக்கியக் காரணம்.
ரூபாய் மதிப்பு உயர்வால்
- ஆட்டோமொபைல்,
- உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல்,
- டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்பொருள்கள்,
- ஜவுளி, வைரம் மற்றும் தங்க நகைகள்,
- கைவினைப் பொருள்
உள்பட 304 நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதை அடுத்து, யூரோ டாலர் மூலம் கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்களைத் தேடி அலைய வேண்டிய நிலைக்கு இந்திய நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன என்று இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை ஒரு டாலருக்கு ரூ.5 வரை கூடுதல் லாபம் சம்பாதித்து வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது அதை இழக்கத் தயாராக இல்லை.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால்
- சாப்ட்வேர் நிறுவனங்கள்,
- பிபிஓ நிறுவனங்கள்,
- ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள்,
- கிரானைட்,
- கடல் உணவு,
- தேயிலை,
- என்ஜினீயரிங்,
- முந்திரி,
- மாம்பழம் மற்றும்
- நார் பொருள்களை
தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது லாபம் குறையும் என்று குமுறுகின்றன.
இப்பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் கமல் நாத்தை சந்தித்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்படும் இழப்பைச் சரிகட்ட பல்வேறு வரிச்சலுகைகளை அளிக்குமாறும் கோரியுள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 4 மாதங்களில் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சாப்ட்வேர் ஏற்றுமதியில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் இன்போஸிஸ், டிசிஎஸ், சத்யம், எச்சிஎல் டெக்னாலஜீஸ் உள்பட பல்வேறு நிறுவனங்களின் லாபம் வெகுவாகக் குறையும்.
அன்னிய நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரித்து ஏற்றுமதி செய்து வரும் இந்த நிறுவனங்கள் ஒரு பொறியாளருக்கு ஒரு மாதத்துக்கு, ஒரு நாளைக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எனக் கணக்கிட்டு டாலரில் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சாப்ட்வேர், பிபிஓ நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே, ரூபாயின் மதிப்பு மேலும் உயராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீஸஸ் (நாஸ்காம்) தலைவர் கிரண் கார்னிக் கூறியுள்ளார்.
கடல் உணவுத் தொழிலில் 50 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ரூபாய் மதிப்பு உயர்வால் தற்போது இருப்பில் உள்ள கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதால் ரூ. 500 கோடி இழப்பு ஏற்படும் என்று இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.ஜே. தராகன் கூறியுள்ளார்.
மீன் வளர்க்கும் சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதால், புதிதாக ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.பி. ரெட்டி கூறியுள்ளார்.
நார் பொருள்கள் ஏற்றுமதி 19.2 சதவீதம் குறைந்துள்ளது. ருபாய் மதிப்பு உயர்வால் ஏற்றுமதித் தொழில் ஸ்தம்பித்துள்ளது என்று மத்திய அரசின் நார் பொருள் வாரியம் தெரிவித்துள்ளது.
முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரலில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 500 டன் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி வருவாய் இழப்பைச் சரிக்கட்ட அன்னியச் செலாவணிச் சந்தையில் மத்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
5 சதவீத வட்டியில் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதிக்கடனை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. சக்திவேல் கோரியுள்ளார்.
ஏற்றுமதியாளர்களின் கண்ணீரைத் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Posted in Appreciation, Balancesheet, BPO, BRIC, Cash, China, Company, Disparity, Dollar, Economy, Exchange, Exim, Exports, Finance, fiscal, Fishery, Fixing, GDP, Imbalance, Imports, Industry, Inflation, InfoTech, Interest, Issues, markets, Monetary, Money, Outsourcing, Policy, PPP, Pressures, Pricing, Rates, ratio, RBI, Recession, Reserve, Rupees, Rupya, service, Trade, World | 1 Comment »