Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007
நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி தகவல்
டோக்கியோ, மார்ச் 28: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் காரணமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாகக் குறையும் என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
2008-ல் அது 8.3 சதவீதமாக இருக்கும் எனவும் ஆண்டறிக்கையில் அவ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
2006-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தது. அதிக அளவு மூலதன வரத்துக்கும், பணவீக்கத்துக்கும் இட்டுச் சென்றது. உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வளர்ச்சி, (வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும்) கடனுக்கான தேவையையும் அதிகரித்தது. இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சிக்கலாக்கியது. அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு உணவுப் பொருள்களின் விலை உயர்வு முக்கிய காரணமாகும். இந்நிலையில் வேளாண்துறை வளர்ச்சியில் தேக்கம் அமைப்பு ரீதியான சவாலாக உருவெடுத்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள தேக்கம் காரணமாக நிலங்களை தொழில்துறைக்கு விற்கும் போக்கு அதிகரிக்கிறது. இது தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி மற்றும் சமூகக் கொந்தளிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் கட்டுமானத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறையில் ஏற்பட்டுள்ள கொழிப்பு, 2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு முதலீட்டை 33.8 சதவீதமாக உயர்த்தியது. இத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஈடாக வங்கிக் கடன் வழங்கும் வீதமும் வளர்ச்சியடைந்தது. இதனால் அதிகரித்த பணப்புழக்கம்தான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்கு சுங்கத் தீர்வைகளைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெரும் பலனைத் தரவில்லை. எனவே செலாவணியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யும்போது, உற்பத்தித் திறன்களை அதிகரிக்கத் தேவையான கடன் வசதி குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியம். உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இன்றியமையாதது என ஆசிய வளர்ச்சி வங்கி கூறியுள்ளது.
=================================================
ரஷியாவுக்கு 2010-ல் ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இலக்கு
மாஸ்கோ, ஏப். 2: ரஷிய நாட்டுக்கு ரூ.46,000 கோடி ஜவுளி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகப்படுத்தும் முயற்சியின் ஓர் அங்கமே 2010-ம் ஆண்டில் ஜவுளி ஏற்றுமதியில் ரூ.46,000 கோடி இலக்கை எட்டுவது.
ரஷிய ஜவுளித்துறை அதிகாரிகளுடன் பேச இந்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா இதற்காக மாஸ்கோ வந்திருக்கிறார்.
ரஷிய ஜவுளித்துறை நிபுணர்கள், இறக்குமதியாளர்கள், ஆடைத் தொழில் முன்னோடிகள், இந்திய வர்த்தக சமூகத்தவர் ஆகிய அனைத்து தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து இது தொடர்பாக விரிவான விவாதங்களை நடத்துவார்.
சோவியத் யூனியன் என்ற நாடு இருந்தபோது இந்தியாவிலிருந்துதான் அதிக ஜவுளி கொள்முதல் நடந்தது. அந்நாடு சிதறுண்டதாலும், உலகமயம் காரணமாகவும் இந்தியாவிலிருந்து ஜவுளி கொள்முதல் செய்வது குறைந்தது. இந்தியாவின் இடத்தை இப்போது சீனா பிடித்துக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தங்களுடைய சுய முயற்சியில் ரஷியாவுக்கு கணிசமான அளவுக்கு இப்போதும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்திய அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சலுகைகளை வழங்கினால் ரஷிய மக்களின் விருப்பத்துக்கேற்ற ஜவுளி வகைகளைத் தயாரித்துத் தருவது பெரிய காரியம் அல்ல என்று இந்திய வர்த்தக சமூகத்தவர் தெரிவிக்கின்றனர்.
அவர்களுடைய யோசனைகள் ஏற்கப்படுமா, இந்திய ஜவுளித்துறைக்குத் தேவைப்படும் மீட்சி, ரஷியா மூலம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
Posted in ADB, Agriculuture, Asian Development Bank, bank, Banking, Boom, Business, Bust, Clothes, Commerce, Commodities, Commodity, Deflation, Demand, Dress, Economy, Exports, Fabric, Finance, fiscal, Garments, GDP, Goal, Government, Growth, home buyers, Imports, Inflation, infrastructure, Interest, investors, Knits, Knitwear, Manufacturing, markets, Monetary, Offshoring, Outlook, Outsourcing, Prediction, Projection, Rates, RBI, Recession, Russia, service, Stagflation, Target, Textiles | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007
ஏறினால் இறங்குவதில்லை
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெட்ரோல் விலை ரூ.2-ம் டீசல் விலை ரூ.1-ம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இதே கோரிக்கையை கூட்டணி அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் முன்வைத்தனர். ஆனால் அப்போது சர்வதேசச் சந்தையில் ஒரு பேரலுக்கு 50 டாலர் விலை குறைந்தால்தான் விலைக் குறைப்பு சாத்தியம் என்று மத்திய அரசு கூறியது. தற்போது சர்வதேசச் சந்தையில் அந்த அளவுக்கு விலைச்சரிவு இல்லை என்றாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதற்கு முழுமுதல் காரணம் இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வுதான்.
உத்தரப்பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதும் இந்த விலைக்குறைப்புக்கு ஒரு காரணம் ஆகும். மேலும் விலைஉயர்வு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.
சாதாரண நடுத்தர மக்களின் அன்றாடத் தேவைகளான அரிசி, கோதுமை, பருப்பு, தானியம், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அரிசி, கோதுமை, சமையல் எண்ணெயின் விலை 10 சதவீதத்துக்கு மேலாகவும், பருப்பு விலைகள் 22 சதவீதத்துக்கு மேலாகவும் உயர்ந்துள்ளன. மாமிசம், முட்டை ஆகியவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப மக்களின் ஊதியம் அல்லது வாங்கும்திறன் உயரவில்லை.
வளரும் நாடுகளில் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப விலைகளும் உயரத்தான் செய்யும் என்று ஆளும்கட்சியினர் குறிப்பிட்டாலும், அதில் முழு உண்மை இல்லை என்று இடதுசாரிகள் மறுத்துள்ளனர். இந்தியாவைப் போன்றே வளரும் நாடான சீனாவில் பணவீக்கம் 2 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அந்நிலை இல்லை என்று குறைகூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விலைவாசி உயர்வு-3.98 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த விலை உயர்வு 6.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மத்திய அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
விலைஉயர்வைக் குறைக்கவும், அல்லது மேலும் உயராமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், சுங்கவரித் தளர்வுகள், சலுகைகள், வரிவிலக்குகள் எதுவும் பயனளிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் வேறுவழியில்லாமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக்கும் விலைவாசி உயர்வு மட்டுப்படுவதற்கும் தொடர்பு உள்ளது. ஏனெனில் அனைத்துப் பொருள்களும் ரயில்களைவிட அதிக அளவில் லாரிகள் மூலமே இந்தியாவின் பல இடங்களுக்கும் பரவலாகக் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை உயர்வு நேரடியாக லாரி வாடகையை உயர்த்துகிறது. லாரி வாடகை உயர்வை ஈடுகட்ட பொருள்களின் விலை கூட்டப்படுகிறது. டீசல் விலை குறைப்பு மூலம் பொருள்களின் விலையும் குறையும் என்பது பொதுவான நம்பிக்கை.
ஆனால், நடைமுறையில், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருள்களின் விலையைத் தவிர, மற்ற உணவுப் பொருள்களுக்கு உயர்த்தப்பட்ட விலை குறைவதே இல்லை என்பதுதான் வாழ்வின் அனுபவ உண்மை. விலை உயரும் முன்பாகவே அதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம்தான் விலைஉயர்வை உண்மையாகவே கட்டுப்படுத்த முடியும். இந்த விலைக்குறைப்பை முன்பே செய்திருக்கலாம்.
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
Posted in abuse, Cabinet, Communist, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamani, Economy, Elections, Forecast, Gas, Government, Inflation, Left, Lok Sabha, Marxist, Minister, Ministry, Op-Ed, Opinion, Petrol, Politics, Polls, Power, Prediction, revenue, Sops | 1 Comment »