Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Praja Socialist’ Category

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »