Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Power plant’ Category

CS Kuppuraj – Mullai Periyar Solutions : Kerala vs Tamil Nadu

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006

முல்லைப் பெரியாறு – இரண்டாம் சமரசத் திட்டம்

சி.எஸ். குப்புராஜ்

முல்லைப் பெரியாறு அணை பற்றிய இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

இந்தப் பிரச்சினையை சமரச முயற்சியின் மூலம் தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு செலுத்தக்கூடிய அதிகாரத்தின் மூலமும் தீர்வு காண முடியாது என்பது தெளிவாகி விட்டது. கேரள மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே மனக்கசப்பும் பகைமை உணர்ச்சியும்தான் வளருமே தவிர சுமுகத் தீர்வு ஏற்படாது.

இதற்காக சமரச முயற்சியாகச் சென்ற மாதம் எழுதிய கட்டுரையில் ஒரு தீர்வு சொல்லியிருந்தேன்.

அதன்படி தமிழ்நாடு தனது சொந்தச் செலவில் ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் அணையை ஒட்டினாற்போல் இப்போதைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தற்காலத் தொழில் நுட்ப அடிப்படையில் 152 அடி தண்ணீரைத் தாங்கக் கூடிய பலத்துடன் அது வடிவமைக்கப்படுதல் வேண்டும்.

அதற்காகும் செலவை ஈடுகட்டுவதற்காகப் புதிதாக ஒரு டன்னலும் புதிதாக ஒரு மின்நிலையமும் தமிழ்நாடு தனது செலவில் அமைத்துக் கொள்ள வேண்டும். வைகை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு போதாது என்பதற்காக அதற்கு மேற்புறத்திலேயே ஒரு புதிய அணையைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது சமரசத் திட்டம்: “”இப்போது இருக்கும் அணை 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடிய அளவுக்குப் பலம் பெற்றிருக்கவில்லை. அதனால் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது” என்று கேரள அரசு சொல்கிறது.

இது உண்மை அல்ல; என்றாலும் அவர்களுடைய காரணமில்லாத பயத்தைப் போக்க, நீர்த் தேக்க அளவு எப்போதும் 136 அடிக்குமேல் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படி 136 அடி மட்டும் நீர்த்தேக்கும் பட்சத்தில், தமிழகம் முழுமையான பலன்களைப் பெற வேண்டுமெனில் அதற்கு சில வசதிகள் செய்து கொள்ள வேண்டும்.

இப்போதிருக்கும் டன்னலுக்குச் சற்று தூரத்தில் மற்றொரு டன்னல் அமைக்கப்படுதல் வேண்டும். அதன் அடிமட்டம் +80 அடியாக இருத்தல் வேண்டும். அதன் தண்ணீர் செலுத்தும் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக இருத்தல் வேண்டும்.

மற்றும் இந்த இரண்டாவது டன்னல் மூலம் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு இரண்டாவது மின்நிலையம் அமைக்கப்படுதல் வேண்டும். இதில் 60 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஐந்து ஜெனரேட்டர்கள் (மொத்தம் 300 மெகாவாட்) இருத்தல் வேண்டும்.

இரண்டாவது மின்நிலையத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க வைகை அணைக்கு மேற்புறத்தில் 8.0 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படுதல் வேண்டும்.

இரண்டாவது டன்னலுக்கு 3000 கோடி ரூபாயும், இரண்டாவது மின்நிலையத்திற்கு 12,000 கோடி ரூபாயும், புதிய வைகை அணைக்கு 2000 கோடி ரூபாயும் செலவாகும். ஆக மொத்தம் இந்த மூன்று வேலைகளுக்கும் 17,000 கோடி ரூபாய் செலவாகும். இவ்வளவு செலவும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்காகவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க அளவை 136 அடிக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும்தான் தேவைப்படுகிறது.

எனவே இதற்கான செலவில் ஒரு பகுதியையாவது கேரளம் கொடுத்தால் நலமாக இருக்கும். அவர்கள் அச்சமின்றி இருக்கலாம். அவர்களது கற்பனை பயத்திலிருந்து விடுபடலாம். மேலே குறிப்பிட்ட மதிப்பீட்டுத் தொகைகள் மிகவும் தோராயமானவை. விவரமாக ஆராயும்போது கூடலாம் அல்லது குறையலாம். இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதல் மின்சாரமும், கூடுதல் பாசன வசதிகளும் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இந்த இரண்டு சமரசத் திட்டங்களில் எதையாவது கேரளம் ஏற்கலாம். முதல் திட்டத்தில் அவர்கள் விரும்புவதுபோல் புதிய அணை கட்டிக் கொண்டு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவதற்கு வசதி செய்தல்.

இரண்டாவது திட்டத்திலும் அவர்கள் விரும்புவதுபோல் அணையின் நீர்த் தேக்க அளவை 136 அடி வரை மட்டுமே நிறுத்திக் கொள்வது.

இவற்றிற்காகும் செலவுகளையும் செயல்பாடுகளையும் இப்போதிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செய்தல் வேண்டும். திட்டப் பணிக்கான வசதிகளை கேரளம் செய்து தருதல் வேண்டும். அதற்காகத் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம்.

இரண்டு சமரசத் திட்டங்களுமே கேரளத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே வகுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏராளமான பொருள்செலவு ஏற்படும்.

இரண்டு திட்டங்களையுமே கேரளம் ஏற்க மறுத்தால், அது வீண்பிடிவாதமே தவிர வேறல்ல. அப்போது நாம் வேறு வழிகளை நாட வேண்டி வரும்.

Posted in Agriculture, CS Kuppuraj, Dam, Developments, Dinamani, Electricity, Future, History, hydro-electric, India, Interlink, Irrigation, Kerala, Megawatt, Mullai Periyar, Periyaar River, Periyaaru, Periyar, Power Generation, Power plant, solutions, Tamil Nadu, Water | Leave a Comment »

Rs 16,000-crore thermal power plant at Cheyur by March next

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

செய்யூர் அருகே 2000 ஏக்கர் பரப்பில் ரூ.16000 கோடியில் அனல் மின் நிலையம்

காஞ்சிபுரம், நவ. 2: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 2000 ஏக்கர் பரப்பில், 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல் மின் நிலையத்துக்கு வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

செய்யூரில் அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது:

மறைந்த மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் காலத்தில் இத்திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் குறித்து மத்திய அரசுக்கு எடுத்துரைத்தோம். தற்போதைய மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே மீண்டும் இத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

செய்யூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய பகுதியில் இதற்காக ஏற்கெனவே 2000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.

தேசிய அனல் மின் கழகம்

தேசிய அனல் மின் கழகம் இத்திட்டத்தை ரூ.16 ஆயிரம் கோடியில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்துக்கு எந்த வரியும் விதிக்கப்படாது. நாட்டிலேயே முதன் முறையாக மெகா அனல் மின் நிலையம் இம்முறையில் அமைக்கப்படுகிறது.

வரும் 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் இத்திட்டத்துக்கு மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே அடிக்கல் நாட்டுகிறார். இரண்டரை ஆண்டுகளில் திட்டம் முடிவடையும்.

இதன் மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் அவர்களுக்கு தேவையான குடியிருப்புகள், அலுவலகங்கள் நெய்வேலியை போன்றே ஏற்படுத்தப்படும். இத்திட்டம் முடிந்தால் செய்யூர் பகுதி மிகுந்த வளர்ச்சி பெறும் என்றார்.

Posted in Arcot N Veerasamy, Cheiyoor, Cheyur, Electricity, Generation, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Mohan Kumaramangalam, National Thermal Power Corporation, Neyveli, NTPC, Power plant, Seiyoor, Shinde, thermal power plant, TNEB | Leave a Comment »