Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pooja’ Category

Happy Navarathri: Dussehra Celebrations – Golu Special

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

Madhurai Meenakshi Golu Hinduism Navarathri Utsavar Decoration Raja Rajeswari
மங்கையர் போற்றும் நவராத்திரி விழா நாளை தொடங்குகிறது
சென்னை, அக்.11-

“ஆண்களுக்கு ஓர் இரவு சிவராத்திரி, மங்கையர்க்கு 9 இரவு நவராத்திரி;” என்று மங்கையர் போற்றும் நவராத்திரி விழா இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி விழாவின் முக்கியத்துவம் குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேத வாத்தியார் ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-

புண்ணியம் தரும் புரட்டாசி

தமிழ் மாதங்களில் புரட்டாசிக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த மாதம் மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்று போற்றப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமின்றி அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை புண்ணியமாக கருதுகிறார்கள்.

நவராத்திரி

புரட்டாசி மாதம் மற்றொரு வகையிலும் சிறப்பு பெற்றுள்ளது. புரட்டாசி மாதம் மங்கையர் போற்றும் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போல் பெண்களுக்கு நவராத்திரி ஒன்பது நாட்கள் போற்றுதலுக்குரிய நாட்களாக கருதப்படுகிறது. எனவே, நவராத்திரியை மங்கையர் போற்றும் நவராத்திரி என்று சொல்கிறார்கள்.

சக்தி வழிபாடு

இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஆகிய முப்பெரும் சக்திகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது நவராத்திரி விழாவில் தான். இந்த மூன்று சக்திகளும் சேர்ந்தே லலிதாம்பிகை, ராஜராஜேஸ்வரியாக தேவி புராணங்களில் சொல்லப்படுகிறது.

இதையே ஸ்ரீசக்ர பூஜா விதியில் ஸ்ரீகாமேஸ்வரி, ஸ்ரீபகமாலினி, ஸ்ரீநித்தியக்லின்னா, ஸ்ரீபேருண்டா, ஸ்ரீவன்னிவாசினி, ஸ்ரீவஜரேஸ்வரி, ஸ்ரீத்வரிதா, ஸ்ரீகுலசுந்தரி, ஸ்ரீநித்யா, ஸ்ரீவிஜயா, ஸ்ரீசர்வமங்களா, ஸ்ரீஸ்வாலாமாலினி, ஸ்ரீலலிதா, ஸ்ரீவாராகி, ஸ்ரீசியாமளா உள்பட 18 சக்திகளாக சொல்லப்பட்டு உள்ளது. அதையே 18 புராணங்களும் நடைமுறையில் உள்ளன. 18 சக்திகளும் ஒவ்வொரு பலா பலனை வழங்குகிறார்கள்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்று 3 சக்திகளாகவும் அழைக்கப்படுகிறார்கள்.

நவராத்திரி விழாவை, ஸ்ரீதுர்கா பூஜையாகவும் கொண்டாடுகிறார்கள். 9 நாட்களும் ஸ்ரீதுர்கா தேவியை, “ஸ்ரீவனதுர்கா, ஸ்ரீசூலினி துர்கா, ஸ்ரீஅக்னிதுர்கா, ஸ்ரீசாந்தி துர்கா, ஸ்ரீசபரிதுர்கா, ஸ்ரீலவனதுர்கா, ஸ்ரீதீபதுர்கா, ஸ்ரீஆசூரி துர்கா, ஸ்ரீஜெயதுர்கா”, என்று ஒவ்வொரு நாளும் நவ துர்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மைசூர் தசரா

வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் `ராமலீலா’ என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில், துர்கா பூஜை என்றும் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் தசரா பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. தசரா பண்டிகையை கண்டு ரசிப்பதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுவாசினி, கன்யா பூஜை

நவராத்திரியின்போது, வீடுகளில் கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். நவராத்திரி விழாவில் `சுவாசினி’ பூஜை, `கன்யா’ பூஜை செய்வது சிறப்பானது ஆகும். `சுவாசினி’ பூஜை என்பது, சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலத்துடன் தங்கள் வசதிக்கேற்ப வஸ்திர தானம், ஆபரண தானம் வழங்கி விருந்தளிப்பது சிறந்ததாகும். தாம்பூலம் வழங்கும்போது சுமங்கலிகளிடம் ஆசி வாங்க வேண்டும்.

இதே போல், பெண் குழந்தைகளுக்கும் பாவாடை, சட்டை வழங்கி வணங்க வேண்டும். குழந்தையை தெய்வமாக பாவித்து வணங்குவதே கன்யா பூஜை என்று அழைக்கப்படுகிறது. சுவாசினி, கன்யா பூஜையின்போது, நவராத்திரியின் முதல் நாள் ஒருவருக்கும், இரண்டாவது நாள் இருவருக்கும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிப்பது நல்லது. அவரவர் வசதிக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொடுக்கலாம்.

எத்தனை படிக்கட்டுகள்

நவராத்திரியில் கொலு வைப்பது முக்கியமானதாகும். துர்கா, லட்சுமி, சரஸ்வதியை குறிப்பிடும் வகையில் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற தத்துவத்தில் 3 படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைக்கலாம்.

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களை குறிப்பிடும் வகையில் 5 படிக்கட்டுகளாகவும், அறுசுவையைக் குறிப்பிடும் வகையில் 6 படிக்கட்டுகளாகவும், சப்த மாதாக்களை குறிப்பிடும் வகையில் 7 படிக்கட்டுகளாகவும், நவ துர்க்கையை குறிப்பிடும் வகையில் 9 படிக்கட்டுகளாகவும், ஸ்ரீவித்யாவை குறிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளாகவும், லாபஸ்தானத்தை குறிக்கும் வகையில் 11 படிக்கட்டுகளாகவும், 12 மாதங்களை குறிப்பிடும் வகையில் 12 படிக்கட்டுகளாகவும் கொலு வைக்கலாம். வசதி படைத்தவர்கள் 36 படிக்கட்டுகளில் கூட கொலு வைக்கிறார்கள்.

இன்று கொலு வைக்க சிறந்த நாள்

இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள் ஆகும்.

கொலு பொம்மைகளை படிக்கட்டுகளில் வைப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) உகந்த நாள் ஆகும். இன்று காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் சுக்ர ஹோரையில் கொலு வைக்க வேண்டும். வழிபாடுகளை நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து தொடங்க வேண்டும்.

என்னென்ன பிரசாதம்?

நவராத்திரியின்போது, ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு பிரசாதம் வைத்து வழிபடவேண்டும். முதல் நாள் சர்க்கரைப் பொங்கல், மொச்சை சுண்டல், முப்பருப்பு வடை பிரசாதமாக வைக்க வேண்டும். சனிக்கிழமை எள் கலந்த பாயசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள்ளு சாதமும், ஞாயிற்றுக்கிழமை கோதுமையில் தயார் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக இடம் பெறச் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை அவல் கேசரி, பால்பாயசம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல், 5-வது நாள் செவ்வாய்க்கிழமையன்று சர்க்கரை பொங்கல், துவரை வடை, கடலைப்பருப்பு (பூம்பருப்பு) சுண்டல், 6-வது நாள் தேங்காய் பால் பாயசம், பச்சைப்பயிறு சுண்டல், கதம்ப சாதம், 7-வது நாள் கொண்டக்கடலை சுண்டல், பாதாம், முந்திரி கலந்த பாயசம், தயிர் சாதம், புட்டு, 8-வது நாள் அனைத்து வகை இனிப்பு, பலவித பட்சணங்கள், மொச்சை சுண்டல், 9-வது நாள் எள் உருண்டை, எள் பாயசம், புளியோதரை, கேசரி, வேர்க்கடலை சுண்டல், 10-வது நாள் கோதுமையில் செய்த இனிப்பு வகைகள், காராமணி சுண்டல் பிரசாதமாக வைத்து பூஜை செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நவராத்திரியின்போது, சண்டி பாராயணம், சண்டி ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. நவராத்திரியில் தான் ஆதி பராசக்தி மிகப்பெரிய அசுரர்களை வதம் செய்ததாக தேவி புராணங்களில் கூறப்பட்டு உள்ளன.

ஆயுத பூஜை

நவராத்திரியில் 9-வது நாள்ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடு இன்றி சிறிய பெட்டிக்கடையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரையில் ஆயுத பூஜை அன்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும்.

தொழில் கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் கூடுதல் சிறப்புக்கொடுத்து பூஜைகள் நடத்தப்படுகின்றன.

விஜயதசமி

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமி வருகிறது. விஜயதசமியில் உள்ள விஜயம் என்றால் வெற்றி. தசம் என்றால் 10.`மி’ என்றால் தனக்கு என்று பொருள். தனக்கு 10 திசைகளில் இருந்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நோக்கில் அன்றைய தினம் மகா விஷ்ணு, தேவியர், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு கல்விக்கண் திறக்கும் தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.

விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் விஜயதசமி தினத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சில பள்ளிக்கூடங்களில் புதிய வகுப்புகளைக் கூட இந்த நாளில் தான் தொடங்குகிறார்கள்.

இவ்வாறு ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறினார்.

———————————————————————————————————————————

நவராத்திரி இரண்டாம் நாள்
வாராஹி :

விஷ்ணுசக்தி வகைகளுள் வாராஹியும் ஒருத்தி. வராஹ (பன்றி முகம்) வடிவம் கொண்டவள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தன் தெத்துப்பற்களால் பூமியைத் தாங்கி துõக்கியிருப்பவள். “மங்கள மய நாராயணி’ என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் அம்ச சக்திகளில் “தண்டினி’ என்ற பெயரும் உண்டு. இவள் தேவியின் சேனாதிபதி. வராஹநந்தநாதருக்கு வராஹ ரூபமாக காட்சி தந்ததால் வாராஹி என்று பெயர் பெற்றாள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். இவளை குறிக்கும் 32 செய்யுள்கள் அடங்கிய நுõல் “வாராஹி மாலை’ எனப்படும். நாம் பேசும்போது வாக்கை தடுத்து நிறுத்துபவள் வாராஹி. எனவே இவளுக்கு “வல்காமுஹி’ என்ற பெயரும் உண்டு. இது காலப்போக்கில்”பகளாமுஹி’ என ஆகிவிட்டது.

நைவேத்யம் : வெண்பொங்கல், இனிப்பு பலகாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: வளையல் விற்றல்

———————————————————————————————————————————

நவராத்திரி மூன்றாம் நாள்

இந்திராணி :

பராசக்தியை நாளை இந்திராணியாக கருதி வழிபட வேண்டும். இவளை மகேந்திரி என்றும் கூறுவர்.

இவள் இந்திரனின் சக்தி. கிரீடம் தரித்து வஜ்ராயுதம் தாங்கியிருப்பவள். ஆயிரம் கண் உடையவள். விருத்திராசுரனை அழித்தவள். யானை வாகனம் கொண்டவள். இதை ஐராவதம் என்பர். தேவலோகத்தின் ராஜ்ய இயக்கத்தை கவனித்துக் கொள்கிறாள். “சாம்ராஜ்ய தாயினீ’ என்பதும் இவளது இன்னொரு பெயர். பெரும் பதவியை விரும்புபவருக்கு இவளது அருள் தேவை. அரச பதவிகள், அரசுபதவிகள் அனைத்தும் இவளால் உருவாகின்றன.

நைவேத்யம் : வெண்பொங்கல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளைய கொலு அலங்காரம்: பட்டாபிஷேகம்
———————————————————————————————————————————
———————————————————————————————————————————

Posted in Celebrations, Ceremony, Culture, Dolls, Durga, Dussehra, Dussera, Festival, Functions, Golu, greetings, Guide, Hindu, Hinduism, India, Lakshmi, Laxmi, Legends, Mahalakshmi, Mahalaxmi, Myth, Naragasura, Naragasuran, Narakasura, Narakasuran, Navarathri, Navaratri, Navrathri, Navratri, Pig, Pooja, Puja, Ram, Rama, Ramlila, Ravana, Ravanan, Religion, Sarasvathi, Sarasvathy, Saraswathi, Saraswathy, Sita, Sitha, Steps, Story, Tamil Nadu, TamilNadu, Tips, TN, Varaahi, Varahi, Vijayadasami, Vijayadashami, Vijayadhasami, Vijayadhashami, Vijayathasami, Vijayathashami, Winter | Leave a Comment »

Madurai Vaidyanatha Iyer – Temple entry anniversary of dalits

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

வரலாறு படைத்த ஆலயப் பிரவேசம்!

வி.கே. ஸ்தாணுநாதன்

நம் நாட்டின் வரலாற்றில் – குறிப்பாக, தமிழக வரலாற்று ஏடுகளில் ஜூலை மாதம் 8-ஆம் நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். பழம்பெருமை வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரபல காந்தியவாதியான அமரர் எ. வைத்தியநாத அய்யர் துணிவுடன் ஹரிஜன சகோதரர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த ஆலயப் பிரவேசம் காலம்காலமாக ஹரிஜன சகோதரர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்க வழிவகுத்தது.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.

பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாள்களில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. 1937ம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார். 1939-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அய்யரின் துணிச்சலான இச் செயலைப் பாராட்டிய அண்ணல் காந்தியடிகள் 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.’

ஆலயப் பிரவேசத்திற்குப் பின் சிலர் ஏற்படுத்திய தடங்கல்கள் காரணமாக அன்றாட ஆலய வழிபாடு நடைபெறுவதில் சில சிக்கல்கள் தோன்றின. இவற்றைத் தீர்த்து அன்றாட வழிபாடு சுமுகமாக நடைபெற அய்யர் அயராது பாடுபட வேண்டி இருந்தது. ஆலயப் பிரவேசம் செல்லாது என அறிவிக்கக் கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் அன்றைய முதல்வராக விளங்கிய ராஜாஜி விரைந்து செயல்பட்டு ஆலயப் பிரவேசத்தை முறைப்படுத்தும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தை ஆளுநர் மூலம் பிறப்பிக்க வழிவகுத்தார். இதன் காரணமாக வழக்கு தள்ளுபடி ஆனது. பின்னர் இந்த அவசரச் சட்டம் முறையான சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.

வைத்தியநாத அய்யர் துணிவுடன் செய்த ஆலயப் பிரவேசமே பின்னர் சட்டமாக உருவெடுத்து ஹரிஜனங்கள் ஆண்டவனின் சன்னதிக்குத் தங்கு தடையின்றி செல்ல வழிவகுத்தது.

1939-ம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியாவின் விருப்பத்திற்கு எதிராகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கு காங்கிரஸ் அமைச்சரவைகள் ஒட்டுமொத்தமாக அக்டோபர் மாதத்தில் ராஜிநாமா செய்தன. அய்யர் அன்று மட்டும் ஆலயப் பிரவேசத்தைத் துணிவுடன் செய்திராவிடில் ஹரிஜனங்கள், அனைவருடனும் சரிசமமாக ஆலயத்திற்குள் நுழைந்து ஆண்டவனை வழிபடுவது என்பது பல ஆண்டுகள் தள்ளியே நடந்திருக்கும். ஏனெனில் 1939க்கு பின்னர் பொதுமக்கள் கருத்தின் மூலம் உருவான அரசு மீண்டும் 1946-ம் ஆண்டுதான் பதவியேற்றது.

ஹரிஜன ஆலயப் பிரவேசம் நிகழ்ந்தால்தான் ஆலயங்களுக்குள் வழிபாடு செய்யச் செல்வது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். தாமும் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை வழிபட எண்ணிணார். எனினும் இரண்டாம் உலகப் போர், “வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போன்றவைகளால் அந்த எண்ணம் தள்ளிப்போயிற்று. 1946-ஆம் ஆண்டு சென்னையில் தக்கர் பாபா வித்யாலயா புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட வந்தபோது, இதற்காகவே மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 8-ஆம் நாள் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியின் முக்கியமான நாளாகும். இந்நாளில் அமரர் வைத்தியநாத அய்யருக்கும் அவருக்கு உறுதுணையாக விளங்கி இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து அஞ்சலி செய்வோம்!

(கட்டுரையாளர்: கௌரவ செயலர், தக்கர் பாபா வித்யாலயா, சென்னை.)

———————————————————————————————————

மீனாட்சி அம்மன் கோயிலில்- 68 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமையை அகற்றிய அரிஜன ஆலயப் பிரவேசம்


மதுரை, ஜூலை 8: ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைக்குப் போராடும் நேரத்தில் நமது நாட்டில் இருந்த சமூக அவலமான தீண்டாமையை எதிர்த்துப் போரிடும் உன்னதப் பணியில் முத்தாய்ப்பாக நடத்தப்பட்டதுதான் அரிஜன ஆலயப் பிரவேசம்.

காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று செயல்படுத்துவதில் மதுரையில் அவரின் மறுபதிப்பாகத் திகழ்ந்தவர் வைத்தியநாத ஐயர். இளம் வயது முதல் சாதிப் பாகுபாடுகளை வெறுத்தவர்.

கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்ற சமூகக் கொடுமையைப் போக்க அவரது தலைமையில் 8.7.1939-ம் தேதி காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம் நடக்கும் என அவர் அறிவித்தார்.

இதற்கு ஒருசாரார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம் என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து திட்டமிட்டபடி பூஜை பொருள்களுடன் அரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் சிலர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ஆர்.எஸ்.நாயுடு அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, பின்னர் மீனாட்சி அம்மன் சன்னதி சென்று வழிபட்டனர். இதையடுத்து கோயிலிலிருந்து வெளியே வந்து அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தது என அறிவித்தனர்.

இந்த நிலையில், சட்டத்தை மீறி ஆலயப் பிரவேசம் செய்ததாக சிலர் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி, ஆளுநர் மூலம் ஓர் அவசரச் சட்டத்தை முன்தேதியிட்டு பிறப்பிக்கச் செய்து ஆலயப் பிரவேசத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கினார். இதனால் ஆலயப் பிரவேசம் தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. ஆலயப் பிரவேசம் நடந்து ஞாயிற்றுக்கிழமையோடு (ஜூலை 8) 68 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், வரலாறும் மறக்கவில்லை. மக்களும் மறக்கவில்லை.

Posted in Aiyangaar, Aiyankaar, Aiyer, Anniversary, Archakar, backward, Brahmin, Caste, Civil, Community, Dalit, Deity, Evils, Forward, Freedom, Gandhi, Gita, Harijan, Hinduism, Hindutva, HR, Independence, isolation, Iyangaar, Iyangar, Iyankaar, Iyer, Keeripatti, Madurai, Mahatma, Manu, Meenakshi, Oppression, Papparappatti, Pooja, Rajaji, Religion, Reservation, rights, SC, Society, ST, Temple, Tolerance, Untouchability, vaidhiyanatha aiyer, vaidhiyanatha iyer, vaidhyanatha aiyer, vaidhyanatha iyer, vaidiyanatha aiyer, vaidyanatha aiyer, vaidyanatha iyer, Vaithyanatha Aiyar, Veda, Vedas, Vedha, Worship | 2 Comments »