Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Pokhran’ Category

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »