Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘PIO’ Category

India to curb foreign funds deluge – Volatile stock market & Participatory note policy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007

பாடாய்ப்படுத்தும் பங்குச்சந்தை!

பங்குச் சந்தை என்பது நாட்டின் தொழில், வர்த்தகத் துறைகளின் ஆரோக்கியத்தையும், மக்களுடைய வருமானம், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றின் வளத்தையும் ஒருசேர உணர்த்தும் உரைகல். ஆனால் சமீப காலமாக -அன்னிய நேரடி முதலீடு காரணமாக -பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனை மதிப்பும், பங்குகளின் தனி மதிப்பும் மிக அதிகமாக உயர்ந்து வருகின்றன.

செவ்வாய்க்கிழமை 19,000 புள்ளிகளை எட்டிய குறியீட்டெண் புதன்கிழமை 20,000-ஐ எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 1,744 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது. பங்கேற்புப் பத்திரத்தை “செபி’ என்கிற பங்குச் சந்தை கண்காணிப்பு -கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்துவிடும் என்ற வதந்தி காரணமாக இப்படிக் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்துகொண்டு, தரகர்கள் மூலம் முதலீடு செய்கிறவர்கள் பயன்படுத்தும் புதுவகை அடையாள பங்குப் பத்திரமே, “பங்கேற்பு பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவற்றைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசுக்கு இல்லை என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உறுதி அளித்த பிறகே சந்தையில் விற்பனை மீண்டும் உயர்ந்தது.

கடந்த வாரம்தான் பங்குச் சந்தையில் குறியீட்டெண் வேகவேகமாக உயர்ந்து வருவது குறித்து நிதி அமைச்சர் சிதம்பரம் வியப்பும் கவலையும் ஒருங்கே தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. “சிறிய முதலீட்டாளர்கள் இந்த நேரத்தில் அசட்டுத் துணிச்சலில் அதிகப் பணத்தை முதலீடு செய்து, கையைச் சுட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று உரிய நேரத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரும், ஊக வணிகர்களும் தங்களிடம் உள்ள மிதமிஞ்சிய பணத்தை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதை வேண்டாம் என்று சொல்வது சரியான வணிக உத்தி இல்லை. இந்த முதலீடு இருவகைப்படும். வெளிநாடுகளில் உள்ள தனி முதலீட்டாளர்கள் நேரடியாக நமது பங்குகளை வாங்குவது ஒருவகை. வெளிநாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள் நம்முடைய பங்குகளை வாங்குவது மற்றொரு வகை. இவ்விருவகையிலான நேரடி முதலீடுமே நமக்கு அவசியம்தான்.

இந்த முதலீட்டாளர்கள், லாபம் வரும் என்றால் முதலீடு செய்வார்கள். நஷ்டம் வரும் என்றால் முதலீட்டை விலக்கிக் கொள்வார்கள். இது பங்குச் சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல. எனவே இவ்வகை முதலீட்டாளர்களின் முதலீட்டில் 10% தொகையை, ஓராண்டுக்குத் திரும்ப எடுக்க முடியாமல் கட்டாய டெபாசிட்டாகப் பெற வேண்டும் என்று அரசுக்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், பொருளாதார வல்லுநருமான எஸ்.எஸ். தாராபூர் ஆலோசனை கூறியிருக்கிறார். இதை அமல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.

போக்குவரத்து, சாலை வசதிகள், தகவல்தொடர்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சார உற்பத்தி போன்ற அடித்தளக் கட்டமைப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம் என்று அரசு பலமுறை கூறி ஓய்ந்துவிட்டது. ஆனால் அத்தகைய முதலீட்டை ஏற்கும் நிறுவனங்களோ, பங்கு வெளியீடுகளோ, கடன் பத்திரங்களோ சந்தையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

இப்படியொரு ஏற்பாட்டைத் தனியார் நிறுவனங்கள் செய்யாது; அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும். வங்கிகளில் தரப்படும் வட்டிவீதத்தைவிட கவர்ச்சிகரமான வருவாயை அளிப்பதாக அரசு உறுதி கூறினால் உள்நாட்டிலிருந்து மட்டும் அல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் முதலீட்டைக் கொண்டுவந்து கொட்டுவார்கள். இனியாவது அரசு அத்தகையதொரு முயற்சியைத் தொடங்குமா?

Posted in ADR, Assets, Biz, Bonds, Brokers, BSE, Commerce, crash, DJIA, Economy, FII, Finance, fiscal, Foreign, Funds, GE, GM, Goldman Sachs, Govt, Index, Indices, Infy, Interest, International, investors, Invsetors, IPO, Loss, markets, Merryll Lunch, MF, MNC, Morgan Stanley, NRI, NSE, PE, PIO, Planning, Portfolio, Profit, Rates, ratio, Shares, Stocks, Traders, Trading, Wipro, World | Leave a Comment »

External Affairs – Indians held in Foreign Prisons: N Sureshkumar

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

அந்நியச் சிறைகளில் வாடும் இந்தியர்கள்

என். சுரேஷ்குமார்

ஆஸ்திரேலியாவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்திய டாக்டர் ஹனீஃபை விடுதலை செய்ய இந்திய நீதிமன்றங்கள் முதல் உள்துறை, வெளியுறவுதுறை அமைச்சகங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் ஹனீஃப் ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, மீண்டும் ஹனீஃப்புக்கு ஆஸ்திரேலியா செல்ல விசா வழங்க வேண்டும் என்று, வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய தூதரகமும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹனீஃபை போல சந்தேகத்தின்பேரில் பல ஆண்டுகளாக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக அடைபட்டிருக்கும் இந்தியர்களை விடுதலை செய்ய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதே அனைவரின் கேள்வி.

சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அந்தப் புள்ளி விவரத்தில், வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியர்களுள் சுமார் 6,700 பேர் சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்

  • சவூதி அரேபியாவில் உள்ள இந்தியக் கைதிகளின் எண்ணிக்கை 1,116,
  • துபாயில் 825,
  • சிங்கப்பூரில் 791,
  • பாகிஸ்தானில் 655,
  • மலேசியாவில் 545 பேர் என்ற புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளது.

இதேபோல

  • லண்டனில் 239 பேர்,
  • அமெரிக்காவில் 218,
  • ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 64,
  • ஆப்பிரிக்காவில் 29 பேர்,
  • பெல்ஜியம்,
  • டென்மார்க்,
  • பிரான்ஸ்,
  • ஹாங்காங்,
  • லிபேரியா,
  • நெதர்லாந்து,
  • சுவிட்சர்லாந்து சிறைகளில் கிட்டத்தட்ட 419 பேர்,
  • இத்தாலி,
  • ஸ்பெயின்,
  • கிரீஸ்,
  • போர்ச்சுகலில் 103 பேர்,
  • செக் குடியரசு,
  • போலந்து,
  • பெலாரஸ்,
  • மால்டோவாவில் சுமார் 150 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை வெளிநாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர்களுள் 1379 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதே சமயத்தில் 1,343 பேர் புதிதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது என்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், இதுசம்பந்தமாக இந்தியத் தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இவ்வாறு வெளிநாட்டுச் சிறைகளில் அடைபட்டிருக்கும் இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் 90 சதவீத குற்றம் முறையான விசா சம்பந்தமான ஆவணங்கள் இல்லாததுதான்.

இக்குற்றத்திற்கு யார் காரணம்? முதலாவது, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக முதன்முதலாகச் செல்லும் இந்தியர்களுக்கு குடிபெயர்தல் குறித்த போதிய விவரமும், விழிப்புணர்வும் இல்லாதது.

இரண்டாவது நமது இந்திய அரசு.

புற்றீசலாய் முளைத்துள்ள வெளிநாட்டிற்கு ஆள்களை அனுப்பும் தனியார் ஏஜென்சிகள். இவற்றின் மூலமாகத்தான் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் இன்று வெளிநாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்கின்றனர்.

வங்கதேச சிறையில் தண்டனைக் காலம் முடிந்து கிட்டத்தட்ட 200 இந்தியக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டுத் தூதரகம் நம் இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, விடுதலையடைந்த கைதிகளை மீட்டுச் செல்லுமாறு அழைப்பு விடுத்தும் இந்தியத் தூதரகம் பாரா முகமாய் இருப்பதாக ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள தனியார் தொண்டுநிறுவனம் ஒன்று ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மலேசியாவில் வசிக்கிற இந்தியர்கள் மொத்தம் 16 லட்சம். இதுதவிர கடல்கடந்து வேலை நிமித்தமாகச் சென்ற இந்தியத் தொழிலாளர்கள் மொத்தம் 1,39,716 பேர். இதில் தற்போது 20,000 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 90 சதவீத இந்தியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் குடிபெயர்தல் (ஐம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) தொடர்பான சரியான ஆவணங்கள் இல்லாதது. மேலும் 10 சதவீதத்தினர் போதைப் பொருள், கொலை, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மட்டும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 3 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனராம். இவர்களின் உடல்கள் கூட முறையாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில்லை என்பது அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கசப்பான உண்மை.

இப்போதைய அவசரத்தேவை புற்றீசலாய் முளைத்துள்ள தனியார் ஏஜென்சிகளைக் கண்காணிப்பது, குடிபெயர்தல் குறித்த தகவல் மையங்களை பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற முக்கியமான இடங்களில் அமைத்தல் ஆகும்.

வெளிநாட்டுக்கு வேலைநிமித்தமாக முதன்முறையாகச் செல்லும் இந்தியர்களுக்குக் குடிபெயர்தல் குறித்த ஆயத்த பயிற்சி, அதாவது அந்நாட்டின் கலாசாரம், அந்நாட்டினுடைய அடிப்படையான சட்ட திட்டங்கள் குறித்த பயிற்சி அவசியமானது.

குடிபெயரும் தொழிலாளர்களுக்கு இலவச சட்ட உதவி, குடிபெயர் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலமே வருங்காலங்களில் இந்த கைது எண்ணிக்கையை குறைக்கலாம்.

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலைக்காக ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்த நமது அரசு இன்னும் வெளிநாட்டுச் சிறைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் நிராதரவாக வாடிக் கொண்டிருக்கும் நமது இந்திய தொழிலாளர்களுக்கு விடுதலை பெற்று தருவது எப்போது?

Posted in acquit, Affairs, africa, Ambassador, America, Analysis, Arms, Arrest, Australia, Bangladesh, Belarus, British, Civil, Cocaine, Consulate, Convict, Correction, Crime, Diaspora, Drugs, Dubai, Emigration, England, External, Extremism, Extremists, Force, Foreign, Greece, Gulf, guns, Haneef, Hanif, Holland, Immigration, Inmate, International, Issue, Italy, Jail, Judge, Justice, LA, Law, LAX, London, Malaysia, MNC, Netherlands, New Zealand, NRI, NYC, Op-Ed, Order, Pakistan, Passport, PIO, Poland, Police, Portugal, Prison, Prisoner, Saudi, Singapore, Spain, Swiss, Tamils, Terrorism, Terrorists, Tourist, Travel, UAE, UK, US, USA, Visa, Visit, Visitor, Weapons, World | Leave a Comment »

NRI Investments and Return to India plans – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

வெளிநாடு வாழ்வோருக்கு அழைப்பு

தில்லியில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டியுள்ளதுபோல வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இன்னும் நிறைய பங்காற்ற முடியும். இந்த மாநாட்டில் பிரதமர் மட்டுமன்றி மத்திய அமைச்சர்களும் உரையாற்றினர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் சுமார் இரண்டரைக் கோடி இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதிகளாக இப்போதைய மாநாட்டில் 1200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர். மாநாட்டில் அவர்களது கருத்துகளும் பெறப்பட்டன.

பிரதமரும் மற்ற அமைச்சர்களும் ஆற்றிய உரையின் முக்கிய அம்சம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இன்னும் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகும். இன்று சீனாவின் பெருத்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் வெளிநாடுகளில் வாழும் சுமார் 6 கோடி சீனர்கள், கணிசமான அளவில் சீனாவில் முதலீடு செய்துள்ளதே ஆகும். உதாரணமாக 2003-ம் ஆண்டில் சீனாவில் செய்யப்பட்ட மொத்த வெளி முதலீட்டில் 65 சதவீதம் இவ்விதம் வெளிநாடுவாழ் சீனர்களிடமிருந்து கிடைத்ததாகும். இத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு சதவீத அளவில் மிகக் குறைவே ஆகும்.

வெளிநாட்டுக்குச் சென்று அங்கு தங்களது உழைப்பின் மூலம் செல்வநிலைக்கு உயர்ந்த இந்தியர்களில் சிலர் தங்களது தாய்நாடான இந்தியா பயன் பெற அவ்வப்போது நன்கொடையாகவும் முதலீடாகவும் நிதி அளித்துள்ளனர் என்பது உண்மையே. ஆனால் இவை சிறு துளிகளாகத்தான் உள்ளன. வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீட்டைப் பெருத்த அளவில் கவர முடியாமல் போவதற்கு இந்தியாவில் தொழில் துவங்குவதில், முதலீடு செய்வதில் உள்ள எண்ணற்ற எரிச்சலூட்டும் விதிமுறைகளும் காலதாமதமும் முக்கியக் காரணங்களாகும். இவை எளிதாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக இந்தியாவில் உள்ள விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் இந்தியா உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கிய காலத்திலும் அன்னியச் செலாவணி பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்திலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வெட்கித் தலைகுனிந்தது உண்டு. ஆனால் இன்று தங்களை இந்தியன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிற அளவுக்கு இந்தியா முன்னேறி வருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் சரி தாங்கள் வாழ்கின்ற நாடுகளில் நன்கு முன்னேறி தொழிலதிபர்களாக, நிபுணர்களாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் திகழ்கின்றனர்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு சலுகைகளையும் சில வசதிகளையும் அளித்து வருகிறது. குறிப்பிட்ட 16 நாடுகளில் வாழும் இந்தியர்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெறலாம் என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென இந் நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவும் திட்டமும் உள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களில் இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுடன் இன்னமும் வலுவான கலாசாரப் பிணைப்புகளைப் பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து செல்லும் இசைக் கலைஞர்களுக்கு அங்கு கிடைக்கிற ஆதரவு, இந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைக்கிற வரவேற்பு முதலியவை இதைக் காட்டுகின்றன. அடுத்த தலைமுறையினர் இடையே இயல்பாக இந்த ஆர்வம் குறையலாம். அவர்களை மனத்தில்கொண்டு இந்தியா தகுந்த திட்டத்தை வகுக்க முடியும். சுற்றுலா ஏற்பாடு இந்த வகையில் உதவும்.

சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் கணிசமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் சீனர்களாக உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதேபோல வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்களைக் கவர்வதற்கென தனி சுற்றுலாத் திட்டத்தை உருவாக்குவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம்.

Posted in China, Dual citizenship, Economy, Finance, India, investments, Manmohan Singh, NRI, Person of Indian Origin, PIO, Plans, PM, Return to India, Strategy, Tamil | Leave a Comment »

Right to Information Act ‘in action’ – Officer reprimanded

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

புதுதில்லி, டிச. 11: தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரருக்கு தகவல் தராத தகவல் அதிகாரிக்கு, மத்திய தகவல் ஆணையம் ரூ. 1,750 அபராதம் விதித்தது. மேலும் ஒரு வாரத்துக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டது.

“”வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான குத்தகை உரிமையை மாற்றித்தரும் பணி எந்த நிலையில் உள்ளது” என்று பவன்குமார் ஜெயின் என்பவர் தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.

ஒரு வாரத்துக்குள் தகவல் தரவேண்டிய அதிகாரி, ஓரிரு மாதங்கள் ஆகியும் தரவில்லை. இதையடுத்து தகவல் கமிஷனரை அணுகிய பவன்குமார், பின்னர் தில்லியில் உள்ள மத்திய தகவல் ஆணையத்தில் புகார்மனு அளித்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தலைமையிலான பெஞ்ச், விண்ணப்பதாரர் கேட்ட தகவல் குறிப்பாகவும், எளிமையாகவும் உள்ளது என்றது.

வேலைப்பளுவே இதற்கு காரணம் என குறிப்பிட்ட தகவல் அதிகாரி மன்னிப்பு கோரியதை அடுத்து, அபராதம் (ரூ. 1,750) மட்டுமே விதிப்பதாக கூறி பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் அத்தொகையை அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டது.

Posted in chief information commissioner, Compensation, DDA, Fines, Information Commission, Law, Order, PIO, Public Information Officer, Right to Information Act, RTI, Salary | Leave a Comment »