Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ph.d’ Category

Interview with Writer Meena Kandhasamy – Translator, English Author from Tamil Nadu

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

முகங்கள்: இரண்டு மடங்கு பணி! நான்கு மடங்கு வேகம்!

அவர் ஐந்து புத்தகங்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதற்குப் புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸ் முன்னுரை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நிறையக் கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதியிருக்கிறார்.

அவர் 24 வயதேயான மீனா கந்தசாமி. இவ்வளவு சிறிய வயதில் இத்தனை புத்தகங்களை, அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ஒரே தமிழ்ப்பெண்ணாக இவர்தான் இருக்கக்கூடும்.

பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஓய்ந்துவிடுவது அல்லது வெற்றுப் பேச்சுகளில் மூழ்குவது என்றிருக்கும் நமது இளம்வயதினரிடையே மீனா கந்ததாமி ஒரு வித்தியாசமான பெண்ணாய்த் திகழ்கிறார்.

ஆங்கிலத்தில் முதுகலை பயின்றிருக்கும் அவர் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி.

மீனா கந்தசாமியை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நேரில் பார்க்கும்போது நமது ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

உங்களுடைய புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

நான் தமிழில் இருந்து 5 புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். அதில் இரண்டு புத்தகங்கள் தொல்.திருமாவளவனுடையது. அவர் இந்தியா டுடே இதழில் எழுதிய 34 கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். அது நூலாக வெளியாகியுள்ளது. அப்போது எனக்கு வயது 19. அதுபோல அவருடைய சொற்பொழிவுகளை மொழிபெயர்த்தேன். அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டிக்காக ஒரு புத்தகமும், நக்கீரன் கோபாலின் புலனாய்வு இதழியல் குறித்த புத்ககம் ஒன்றையும் மொழிபெயர்த்தேன். கவிஞர் காசி ஆனந்தனின் “நறுக்குகள்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.

நான் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் “டச்’ என்கிற பெயரில் 2006 இல் வெளிவந்தது. அதற்கு பிரபல எழுத்தாளர் கமலாதாஸ் ஓர் அருமையான முன்னுரை கொடுத்துள்ளார். அவர் கைப்பட எழுதிய அந்த முன்னுரையை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

இதுதவிர ஆங்கிலத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதிவருகிறேன். அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இவ்வளவு சிறிய வயதில் இப்படிக் கடுமையாக உழைக்கிறீர்களே, என்ன காரணம்?

சமூகத்தில் பலருக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மற்றவர்களுடைய பாதிப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.

நமது நாட்டில் வாய்ப்புகள் ஓர் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. வாய்ப்புகளை யார் போய் அள்ளிக் கொள்கிறார்களோ அவர்களே முன்னேற முடியும். வாய்ப்புகளை அள்ளிக் கொள்ள பிறரைவிட 2 மடங்கு வேலை செய்ய வேண்டும். 4 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும். ஏனென்றால் சமூக ஏற்றத் தாழ்வு காரணமாக நமது சமூகத்தில் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. எல்லாருக்கும் வாய்ப்புக் கிடைக்கும் நிலை வந்தால் இப்படிக் கஷ்டப்படத் தேவையிருக்காதோ, என்னவோ?

உங்களுக்குத் தாய்மொழி தமிழாக இருக்கும்போது ஆங்கிலத்திலேயே எழுதுகிறீர்களே?

தமிழில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். அவர்கள் செய்யும்போது நான் எதற்கு? ஆங்கிலத்தில் நான் எழுதக் கூடிய விஷயங்களை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. எனவே ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

மேலும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலோர் உண்மையான இந்திய வாழ்க்கையைக் காட்டுவதில்லை. அவர்களுக்குத் தெரிந்த உலகத்தை அவர்களுடைய கோணத்தில் காட்டுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இடத்தை அவர்கள் கொடுப்பதில்லை. இந்தியா என்றால் தாஜ்மஹால் உள்ள நாடு என்பது போல சர்வதேச அளவில் இந்தியாவின் முகத்தைக் காட்டுகிறார்கள். இது, இருக்கிற நிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே இந்தியாவின் உண்மையான நிலை இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் தெரிய வேண்டும். அதன்மூலம் பின்தங்கியுள்ள மக்கள் வளர்ச்சி நோக்கி மேல் எழுந்து வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் இளம்வயதினருக்கு உண்மையான நாட்டுநிலை கண்ணில் தெரிய வேண்டும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.

கவிதையில் நாட்டம் ஏன்?

ஒரு விஷயத்தைக் கூர்மையாகவும், அந்த விஷயத்தின் சாரத்தையும் சொல்ல கவிதை ஒரு நல்ல வடிவம்.

எனது கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள். சமூகம் சார்ந்த கவிதைகள். காதல் கவிதைகள் சில எழுதியிருக்கிறேன். ஆனால் அதிலும் ஒரு சமூகம் சார்ந்த பார்வையிருக்கும்.

கவிதை மொழியைக் கொண்டு செயல்படுவது. மொழியை மறுஉருவாக்கம் செய்யக்கூடியது.

மொழி என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரு கருவி என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்த முடியும். மொழியைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆணாதிக்கத்தன்மை இப்போது உள்ளது. எனவே பெண்ணியம் சார்ந்த கவிதைகள் அதற்கான புதிய மொழியை உருவாக்கி மொழியை மறுஉருவாக்கம் செய்கின்றன என்று சொல்லலாம்.

சிறுகதை நூல் வெளியிடப் போவதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி?

டெல்லியில் உள்ள ஸýபான் பதிப்பகம் 40 வயதுக்குக் கீழ் இருக்கும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 21 பேரின் சிறந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் நான் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஒரு பத்துக் கதைகள் சேர்ந்துவிட்டால் ஒரு தொகுப்புக் கொண்டுவரலாம் என்றிருக்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் இடம் தருவதற்காகப் புத்தகம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். அதை அவர்களுடைய தாய்மொழியில் எழுதுவதுதானே சிறந்தது?

பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய நேரடியான களப்பணியில் ஈடுபடுவதே சரி. புத்தகம் எழுதுவது சரியாகாது. நான் அவர்களுடைய வாழ்க்கையை, பிரச்சினைகளை எனது புத்தகங்களில் பதிவு செய்கிறேன்.

என்னை மாதிரி வாழ்நிலை உள்ளவர்களுக்கு } ஆங்கிலம் படித்தவர்களுக்கு } என்னுடைய கருத்துகள் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் புத்தகங்களை எழுதுகிறேன். கட்டுரைகளை எழுதுகிறேன்.

இதற்கு ஆங்கிலத்தை ஒரு கருவியாக நான் பயன்படுத்துகிறேன்.

படங்கள் : ஏ.எஸ். கணேஷ்

Posted in Anna, Authors, English, Essays, Fiction, Interview, Kamaladas, Kamaladoss, Kandasamy, Kandhasami, Kandhasamy, Kanthasami, Kanthasamy, Kasi Anandhan, Kasi Ananthan, Literature, Meena, Nakkeeran, Nakkiran, Ph.d, Poems, Researchers, Reviews, Story, Tamil Nadu, TamilNadu, Translations, Translators, Writer | Leave a Comment »

Visually impaired Madurai student researches on Life sentenced inmates

Posted by Snapjudge மேல் மே 21, 2007

முகங்கள்: தந்தை காட்டிய வழியம்மா!

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை மத்தியச் சிறை. சிறையின் பெரிய கதவுகள் திறந்து அவர்களுக்கு வழி விடுகின்றன. அந்த இளம் பெண்ணும் அவருக்குத் துணையாக இன்னொரு பெண்ணும் உள்ளே நுழைகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளிடம் தாங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வினா நிரலைக் கொடுக்கிறார்கள். போய்விடுகிறார்கள். பின்னர் மீண்டும் வருகிறார்கள். கைதிகளோடு அன்போடு பேசு கிறார்கள்.

கேள்விகள்…பதில்கள்…கேள்விகள்…

அந்த இளம் பெண் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் எம்.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஆர்.பிரியா. ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்தது, தனது படிப்பிற்கான திட்ட ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக. பிரியா எல்லாரையும் போல இருந்தால் தனியாகவே வந்து கூட ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்திருக்கலாம். சிறுவயதில் பார்வையை இழந்த அவருக்குத் துணையாக ஒருவர் வரவேண்டியிருக்கிறது. பிரியாவைச் சந்தித்துப் பேசினோம். சரளமாக எந்தவிதத் தடங்கலுமின்றி அவர் பேசுகிறார்.

”சிறுவயதில் நரம்பு பாதிப்பு காரணமாக கண் தெரியாமல் போச்சு. என் அப்பா எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் என்னால் எம்.ஏ. அளவுக்குப் படிக்க முடிந்தது. எங்க அப்பா 3 வது வரை படித்தவர்தான். டீக்கடை வச்சிருக்கார். ஆனால் என்னைப் படிக்க வச்சு கல்லூரிப் பேராசிரியராக்கிப் பாக்கணும்ங்கிறதுதான் அவுங்க லட்சியம். திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பிளஸ் டூ வரை படிச்சேன். அதற்குப் பின்பு பாத்திமா கல்லூரியில் பி.ஏ. இப்போது லேடி டோக் காலேஜில் எம்.ஏ. ஸ்கூல் படிக்கிறப்பவே ரொம்ப ஆக்டிவ்வா இருப்பேன். நிறையப் போட்டிகளில் கலந்துப்பேன். திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை லீவில் வீட்டுக்கு வரும்போது ஸ்கூலில் கொடுத்த நான்கைந்து பிரைஸ்களோடுதான் வீட்டுக்கு வருவேன்.

எங்க அப்பா எனக்குத் துணையாக இருக்கிறார் என்கிற தைரியம்தான் எம்.ஏ. திட்ட அறிக்கைக்காக ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசும் துணிச்சலைத் தந்தது. சாதாரணமாக நாலு புஸ்தகத்தைப் படிச்சிட்டுக் கூட ஆய்வறிக்கை தயார் பண்றவங்க இருக்காங்க. ஆனால் நான் ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு நெனைச்சேன். அதுவும் ஆயுள் தண்டனைக் கைதிங்க பாதிக்கப்பட்டவங்க. நான் பார்வையில்லாம பாதிக்கப்பட்டிருக்கேன். அவங்க லைஃப்ல நடந்த ஒரு இன்ஸிடென்ட்ல ஜெயிலுக்கு வந்திருக்காங்க. இந்த ஆயுள் தண்டனை வாழ்க்கையிலே அவுங்க நிறைய இழந்து பாதிக்கப்பட்டிருக்காங்க. எனவே அவுங்களைச் சந்தித்துப் பேசுறதுன்னு முடிவெடுத்தேன்.

மத்தியச் சிறைச்சாலைக்குள் சென்று ஆயுள் தண்டனைக் கைதிகளைச் சந்தித்துப் பேசுறது ரொம்ப ஈஸின்னு நினைச்சேன். ஆனா அது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லேன்னு போகப் போகத்தான் தெரிஞ்சது. டிஐஜி வரை பார்த்துப் பேசினேன். ஆனால் சென்னையில் ஐஜி அனுமதி தரணும்னு சொன்னாங்க. பெர்மிஸன் வாங்கவே 5 மாதம் ஆயிடுச்சி. பெர்மிஸன் தர்றதுக்கு நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. எங்க வீட்டுக்கு என்கொயரிக்கு வந்தாங்க. என் மேல் ஏதாவது போலீஸ் கேஸ் ஃபைலாகி இருக்கான்னு பார்த்தாங்க. கடைசில பெர்மிஸன் கொடுத்தாங்க.

பெர்மிஸன் கொடுத்தும் ஆயுள் தண்டனைக் கைதிகளைப் போய்ப் பார்க்க பயமா இருந்துச்சு. நான் ஒரு பெண். அதிலும் பார்வை இல்லாதவ. ஆயுள் தண்டனைக் கைதிங்க எப்படி இருப்பாங்களோ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில இருப்பாங்க. கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. இருந்தும் தைரி

யத்தை வரவழைச்சிக்கிட்டு அமுதசாரதி என்கிற தோழியின் துணையோட நான் போனேன். ஆயுள்தண்டனைக் கைதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளையெல்லாம் தொகுத்து வினாநிரல் வடிவில் எடுத்துக்கிட்டுப் போனேன்.

அவுங்களோட பேசினவுடன்தான் நான் பயந்தது தப்புன்னு தெரிஞ்சது. அவுங்க கிட்ட பேசுறப்ப சொந்தக்காரங்க கிட்டப் பேசுறது மாதிரி உணர்ந்தேன். அவுங்க ப்ராப்ளம்ஸ் எல்லாம் சொன்னாங்க.

நான் சந்தித்த கைதிங்க மொத்தம் 80 பேர். 22 வயதிலேருந்து 72 வயது வரை உள்ளவங்க. பலர் கிராமப்புறத்தில் இருந்து வந்தவங்க. சிலர் படிச்சவங்க. நான் அவுங்களுக்குத் தகுந்த மாதிரி பேசினேன்.

அதிலே பல பேருக்கு இதுதான் முதல் குற்றம். ஏதோ ஒரு கோபத்துல உணர்ச்சி வசப்பட்டுத் தவறு செய்துவிட்டுச் செயிலுக்கு வந்தவங்க. இப்ப மனசளவில் பாதிக்கப்பட்டிருக்காங்க. அவுங்களிடம் ஆறுதலா ரெண்டு வார்த்தை பேச ஆளில்லை. 14 வருஷம் ஆயுள் தண்டனைன்னாலும் நல்லபடியா நடந்துக்கிட்டா சீக்கிரம் வெளியே விட்டுடுவாங்க.

ஜெயிலுக்குள்ளே அவுங்களுக்கு வேலை தர்றாங்க. ஆனால் வருஷம் பூரா இல்லை. வருசத்திலே 3 மாதம் வேலையிருந்தா அதிகம். அதில் வர்ற வருமானத்தில் பாதியை அவுங்க சாப்பாட்டுக்கு எடுத்துக்குவாங்க. 20 சதவீதம் வருமானம் அவுங்க செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்குப் போய்விடும். மீதி முப்பது சதவீதம்தான் அவுங்க குடும்பத்துக்கு. இதனால் அவுங்க பிள்ளைங்களுக்கு படிப்புச் செலவுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கொடுக்க முடியலை. இதெல்லாம் அவுங்க சொன்னது.

சந்தர்ப்ப சூழ்நிலையினால தவறு செஞ்சிட்டு இப்ப அவுங்க படுற பாடு கஷ்டமாத்தான் இருக்கு. அவுங்களுக்கு வருஷம் பூரா வேலை கொடுத்தா நல்லது.

அரசாங்கம் ஸ்கூல் புக் பிரிண்ட் அடிக்கிறது, யூனிஃபார்ம் தைக்கிறது போன்ற வேலைகளை இவுங்களுக்குக் கொடுக்கலாம். இவுங்க தயாரிக்கிற பொருள்களை காதி கிராப்ட் மூலம் விற்க ஏற்பாடு பண்ணலாம். இப்படியெல்லாம் செஞ்சா ஓரளவுக்கு வருமானம் வரும். இவுங்க வாழ்க்கைதான் இப்படிப் போயிடுச்சி. இவுங்க பிள்ளைங்களாவது நல்லா படிச்சு முன்னுக்கு வர வேண்டாமா?”

பிரியா சரளமாகப் பேசுகிறார். பார்வைக் குறைபாடின்மை அவரது அறிவையும் திறமையையும் கடுகளவும் பாதித்ததாகத் தெரியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று அவரிடமே கேட்டோம்.

” எனக்காக எங்க அப்பா படுற கஷ்டம்தாங்க முதல் காரணம். அவுங்க என்னைப் பெரிய ஆளா ஆக்கணும்னு நெனைக்கிறாங்க. அதுக்காக என்னைப் படிக்க வைக்கிறாங்க. நான் போற இடங்களுக்கெல்லாம் துணைக்கு வர்றாங்க. பிளஸ் டூ வரைக்கும்தான் பார்வையற்றோர் பள்ளியில் படிச்சேன். அதுக்குப் பின்னால காலேஜில் நார்மலான ஸ்டூடன்ட்ஸ் கூடத்தான் படிக்கிறேன். கூடப் படிக்கிறவங்க எனக்கு உதவி செய்றாங்க. பாடங்களையெல்லாம் நோட்ஸ் எடுத்துக் கொடுக்குறாங்க.

பார்வைக் குறைபாடு உள்ளவங்க பொது அறிவை வளர்த்துக்கிறதுக்காக மதுரை ரோட்டரி கிளப், விஸ்வநாதபுரத்தில் ஹெலன் ஹெல்லர் டாக்கிங் லைப்ரரின்னு ஒண்ணை நாலு வருஷத்துக்கு முன்ன திறந்தாங்க. எங்க அப்பா என்னை அங்க கூட்டிட்டுப் போயி மெம்பரா ஆக்கிட்டாங்க. அங்க எல்லா சப்ஜெக்ட்டுக்கும் ஆடியோ கேஸட் இருக்கு. அதை வாங்கிட்டுப் போயி டேப் ரெக்கார்டர்ல போட்டுக் கேக்க வேண்டியதுதான்.”

எம்.ஏ. முடித்ததும் எம்ஃபில் சேர்ந்து படித்து கல்லூரி ஆசிரியையாவதுதான் பிரியாவின் லட்சியம். அவருடைய அப்பாவின் விருப்பமும் கூட. ஆயுள்தண்டனைக் கைதிகளைச் சந்தித்து ஆய்வு செய்வதை சாதாரணமாக இளம் பெண்கள் விரும்பமாட்டார்கள். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பிரியாவிற்கு கல்லூரி ஆசிரியை ஆவதா பெரிய விஷயம்?

Posted in Blind, Correctional, Faces, Female, inmates, Jail, Lady, Life sentence, Paper, people, Ph.d, Prison, Prisoner, Research, Rotary, sightless, Talent, Visibility Impaired, visually impaired, Women | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »

Na Muthukumar pens the opening song for Rajinikanth in Sivaji (The Boss)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

கவிஞருக்கு வசன “கிரீடம்’!

அஜீத் நடிக்கும் “கிரீடம்’ படத்தின் மூலம் வசனகர்த்தா ஆகியுள்ளார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இயக்குநர் ஆகும் ஆசையில் பாலுமகேந்திராவிடம் நான்கு வருடங்கள் உதவியாளராகப் பணியாற்றியவர். இவருடைய பாடல்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே பாடலாசிரியராக நிலைத்துவிட்டார். சமீபத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற முத்துக்குமார், கடந்த வருடம் அதிக பாடல்கள் எழுதிய சினிமா பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் பணியாற்றிய 34 படங்களில் 96 பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் 14 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். தற்போது

  • “சிவாஜி’,
  • “போக்கிரி’,
  • “பீமா’,
  • “தீபாவளி’,
  • “தமிழ் எம்.ஏ.’ உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார். இவற்றுள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்த வருடம் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்போகும் ஒரு முக்கியப் பாடலும் அடக்கம். அது “சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல்!

Posted in Ajeeth, Ajith, Ajith Kumar, AR Rehman, Assistant Director, Author, Balu Mahendira, Balu mahendra, Beema, Doctorate, Na Muthukumar, Naa Muthukumar, Ph.d, Poet, Pokkiri, Rajini, Rajni, Singer, Sivaji, Sivaji the Boss, Song writer, Ultimate Star, Vijay, Writer, YSR, Yuvan, Yuvan Shankar Raja | 2 Comments »