Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Persons’ Category

Farmer suicides – Turning risk into an opportunity: Case study of a Agriculture Success Story

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

முகங்கள்: பத்து லட்சம் கடன்… முப்பது லட்சம் வட்டி!

ந.ஜீவா

“கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது கம்பராமாயண வரிகள். ஆனால் கடன் பெற்றவர்கள் கலங்கினால் அது தற்கொலையில்தான் முடியும். நாடெங்கும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், கடன்… வட்டி… விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமை அல்லது தண்ணீர்ப் பஞ்சம், பூச்சிகளினால் விவசாயம் பாதிக்கப்படல் இன்னும் பல.

ஆனால் கோவை ஏ.ஜி.புதூரைச் சேர்ந்த சுப்பையன் என்கிற விவசாயி கலங்கவில்லை. வட்டியும் கடனுமான நாற்பது லட்சம் ரூபாயைத் தனது கலங்காத மன உறுதியாலும் தெளிவாகத் திட்டமிடும் திறனாலும் கடுமையான உழைப்பாலும் திருப்பி அடைத்து வெற்றிகரமாக கடன் தொல்லையில் இருந்து மீண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்…

நாற்பது லட்சம் ரூபாய் கடன் எப்படி ஆனது?

நான் நான்கு வருடத்துக்கு முன் கோவையில் இருந்து மைசூர் அருகே உள்ள குண்டன்பேட்டைக்குப் போய் 35 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பண்ணினேன். அதற்காக எங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் நான்கு வட்டிக்கும் மூன்று வட்டிக்குமாகப் பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். நானும் இன்னும் நான்கு பேரும் சேர்ந்து மைசூர்-குண்டன்பேட்டைக்குப் போனோம். அங்கே போய் வெங்காயம், கனகாம்பரம், கரும்பு, மஞ்சள் எல்லாம் பயிர் செய்தோம். ஆனால் நாங்கள் விவசாயம் பண்ணின நேரம் உற்பத்தி பண்ணின பொருள்களெல்லாம் விலை குறைந்துபோனது. பத்துலட்சம் வாங்கின கடன் இரண்டு வருடத்துக்குள்ளே வட்டியெல்லாம் சேர்த்து நாற்பது லட்சம் ரூபாய் ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.

திரும்பி வந்து என்ன செய்தீர்கள்?

இங்கே எனக்குப் பத்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தது. நொய்யல் ஆற்று நீரில் கோயம்புத்தூர் நகர்க் கழிவு எல்லாம் கலந்ததால் அது ஓடுகிற எங்கள் பகுதியில் நிலத்தடி நீரும் உப்பாகப் போய்விட்டது. செடி வளர்க்க இந்தத் தண்ணீர் ஆரோக்கியம் இல்லை.

இந்தக் கெட்டுப் போன தண்ணீரை வைத்துக் கொண்டு எப்படி விவசாயம் பண்ணுவது? என்ன விவசாயம் பண்ணுவது? கடனையெல்லாம் எப்படி அடைப்பது? யோசனை பண்ணிப் பார்த்தேன்.

எங்கள் பகுதிக்குத் தோட்டக்கலைத்துறை, விரிவாக்கத்துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள். வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி அடிக்கடி வருவார். அவர்களிடம் கேட்டதில் எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று தெரிய வந்தது. வேறு எந்த வேளாண்மை பண்ண வேண்டும் என்று யோசித்து கீரை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இந்தத் தண்ணீருக்குக் கீரை நன்றாக வரும். குதிரை மசால் நன்றாக வரும். தென்னை நன்றாக வரும்.

அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, சிறுகீரை என விவசாயம் செய்தேன். இதில் 30 சதம் செலவு ஆகும். 70 சதம் லாபம் வரும்.

குதிரை மசால் என்பது கால்நடைகளுக்கானத் தீனி. இது தவிர கறிவேப்பிலை இரண்டரை ஏக்கரில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். எனது 10 ஏக்கர் நிலம் தவிர மேலும் 20 ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்தேன். 12.5 எச்பி மோட்டார் போட்டு கிணற்றில் தண்ணீர் எடுத்து விவசாயம் பண்ணினேன். கிணற்று தண்ணீர் நாளொன்றுக்கு 3 ஏக்கர் நிலத்திற்குப் பாயும்.

எங்கள் விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் போடுவதில்லை. மண்புழு உரம், மாட்டுச்சாணம் போடுவோம். கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் நிறைய மாடுகள் வளர்க்கிறார்கள். அதனால் மாட்டுச் சாணிக்கென்று நாங்கள் அலைய வேண்டியதில்லை.

விவசாயம் செய்து விளைவித்த பொருள்களை எங்கே விற்பனை செய்கிறீர்கள்?

கீரை ஒரு நாளைக்கு 5000 கட்டிலிருந்து 10000 கட்டு வரை விற்பனையாகும். ஒரு நாளைக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு கீரை விற்பனையாகும். கறிவேப்பிலை ரூ.1500 க்கு விற்பனையாகும். கடைகளுக்கு வாடிக்கையாக கறிவேப்பிலையைக் கொடுத்துவிடுவோம். கிலோ ரூ.10 இலிருந்து ரூ.15 வரை போகும். குதிரைமசால் 400 கிராம் கட்டு சுமார் 3000 கட்டுவரை விற்பனையாகும்.

காலையிலே எங்கள் காட்டுக்குள்ளிருந்து இந்தப் பொருள்களை ஏற்றிக் கொண்டு வண்டிகள் வெளியே போகும். எத்தனை வண்டி எவ்வளவு பொருள் என்பதையெல்லாம் கணக்கு வைத்துக் கொள்வார்கள்.

கால்நடைத் தீவனமாக நாங்கள் விவசாயம் செய்யும் குதிரை மசாலை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் பகுதியில் மாடு வளர்ப்பவர்களே வாங்கிக் கொள்வார்கள்.

காலையில் டெம்போவில் குதிரை மசாலை ஏற்றிக் கொண்டு கிளம்புவோம். சிட்டி பஸ் குறித்த நேரத்தில் எந்த ஸ்டாப்பில் எந்த நேரத்தில் நிற்குமோ அதைப் போல இந்த டெம்போ ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். அந்தப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்கள் அங்கு வந்து வாங்கிக் கொள்வார்கள்.

கோயம்புத்தூரில் உள்ள வாடிக்கையாளர்கள் தவிர கொடைக்கானலிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அங்கே உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் 67 மாடுகள் வைத்திருக்கிறார்கள். 10 ரேஸ் குதிரைகள் வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக எங்களிடம் ரெகுலராக குதிரை மசால் வாங்குகிறார்கள்.

இவ்வளவு வேலைகளையும் செய்ய வேண்டுமென்றால் ஆட்களை வேலைக்கு வைக்க வேண்டுமே?

எங்களிடம் முதலில் 40 பேர் வேலை பார்த்தார்கள். இப்போது 20 பேர் பார்க்கிறார்கள். வேலைக்கு ஆள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இத்தனைக்கும் பெண்களே ஒரு நாளைக்கு ரூ.140 வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களிடம் வேலை செய்பவர்களை நாங்கள் மரியாதையாக நடத்துகிறோம். வாடா, போடா என்றெல்லாம் பேசுவது கிடையாது. அவர்கள் எல்லாரும் ரொம்பவும் விசுவாசமான ஆட்கள்.

வழக்கமாகப் பயிர் செய்யும் நெல், கரும்பு, வாழை போன்றவற்றைப் பயிர்செய்யாமல் இப்படிக் கீரைகளை விவசாயம் பண்ண வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

நான் விவசாயத்துக்கு முதன்முதல் வந்த போது எங்கள் ஏரியாவில் பருத்திதான் அதிகம் போடுவார்கள். நான்தான் முதன் முதலில் கனகாம்பரம் துணிந்து பயிர் செய்தேன். எதையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்றவை விளைவிக்க நல்ல தண்ணீர் இல்லாததும் ஒரு காரணம்.

நமது அண்டை மாநிலமான ஆந்திரா, வடமாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?

இந்தியாவில் விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் படிக்கிறோம். எனக்கு மாதிரி அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருந்திருந்தால் ஒருவேளை என்னைப் போலவே அவர்களும் கடினமாக உழைத்துக் கடனை அடைத்திருப்பார்களோ, என்னவோ. எல்லாருக்கும் எனக்கு போலவே வாய்ப்புக் கிடைக்க வேண்டுமே.

இப்போது மார்க்கெட் வசதி அபாரமாக இருக்கிறது. அரசாங்கம் நிறையக் கடன் கொடுக்கலாம். கந்துவட்டியை ஒழிக்கச் சட்டம் போட்டிருந்தாலும் நாடு முழுக்க கந்துவட்டி இருக்கிறது. அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுத்தால் கந்துவட்டியை ஒழிக்கலாம். பத்துலட்சம் வாங்கின கடனுக்கு முப்பது லட்சம் வட்டி கட்டணும் என்றால் விவசாயி தற்கொலை பண்ணிக் கொள்ளாமல் என்ன செய்வான்?

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Case study, deaths, Economy, Faces, Farmers, Farming, Farmlands, Finance, Foodgrains, Forests, Fruits, Greens, harvest, horticulture, Incidents, Interview, Life, Loans, markets, Opportunity, Paddy, people, Persons, Prices, Real, rice, Risk, Saline, Salt, success, Suicides, Trees, Turnaround, Vegetables, Vidharaba, Vidharaba Jan Andolan Samithi, Vidharabha, Vidharba, Vidharba Jana Andolan, Vidharbha, Vidhrabha, Vitharabha, Vitharba, Vitharbha, Waste, Water, Wheat | 2 Comments »

Kumudham Balyu passes away – Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007

காலமானார் பால்யூ

balasubramanian_kumudham_balyu.jpg
சென்னை, நவ. 22: மூத்த தமிழ் பத்திரிகை யாளரான பால்யூ (எ) என். பாலசுப்பிரமணி யன் (83) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியா ழக்கிழமை இறந்தார்.

தபால் துறை ஊழி யராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், பின்னர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு 1950-ல் பத்திரிகை துறைக்கு மாறினார். குமுதம் வார இதழில் தலைமை நிருபராக இவர் பணியாற்றி னார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மனைவி, மூன்று மகன்கள், நான்கு மகள்கள் உள்ளனர்.

Posted in Anjali, Balyu, Biosketch, Faces, Journalists, Kumudam, Kumudham, Kumutham, magazine, Media, names, people, Persons, Reporters | 1 Comment »

Thi Vai Goplal Iyer passes away – Memoirs & Anjali

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 6, 2007

“ஓயாத தமிழ் அலை ஓய்ந்தது’

“தமிழ்க் கடல்’ என்றும், “நூற்கடல்’ என்றும் போற்றப்படும் பண்டித வித்வான் தி.வே. கோபாலையர் காலமான செய்தி தமிழன்பர்களுக்குத் தாங்க முடியாத அதிர்ச்சி.

ஒரு நடமாடிய தமிழாக வாழ்ந்தவர்; சங்க இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அவர் நினைவில்; மூலமும், உரையும் முழுமையாக மனத்தில் ஏந்திய மனிதக் கணினி; பணம், பதவிகளை விரும்பாத இல்லறத் துறவி.

1964ஆம் ஆண்டு. என்னைப் போன்ற ஆயிரமாயிரம் புலவர்களை உருவாக்கிய திருவையாறு அரசர் கல்லூரியின் முதல்வராக அவர் வந்தபோது தொடங்கிய அறிமுகம் இறுதிவரை தொடர்ந்தது.

நெற்றியில் திருநீறும், வாயில் வெற்றிலையுமாக தூய வெண்ணிறமான ஜிப்பா, வேட்டியுடன் அவர் நடந்து வரும் கம்பீரத்தை மாணவர்களாகிய நாங்கள் எதிர்நின்று பார்த்து ரசிப்போம். முதல்வர் என்ற செருக்கோ, பெரும்புலவர் என்ற ஆணவமோ அவரிடம் இருந்ததில்லை.

ஒருசமயம் அவரை எதிர்த்தே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனையும் அவர் ஒரு புன்முறுவலோடு எதிர்கொண்டார். அவரைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டறிக்கையை ஒரு மாணவர் அவரிடம் நீட்டியபோது, அமைதியாக வாங்கிப் படித்து அதில் உள்ள பிழைகளைத் திருத்தித் திரும்பக் கொடுத்த பெருந்தன்மையை என்னென்பது! திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்திலும், தஞ்சை தொல்காப்பியர் கழகத்திலும் அவர் தொல்காப்பியத்தைப் பற்றி ஆற்றிய உரைகள் தமிழறிஞர்களையே வியப்பில் ஆழ்த்தின. தொல்காப்பியத்தின் அனைத்து உரைகளையும் ஒப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றினார். அவர் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது. தொல்காப்பியம் பற்றி அறியாதவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போதுதான் பலருக்கு தொல்காப்பியமே அறிமுகம் ஆனது.

அவர் வகுப்பில் பாடம் நடத்துவதே ஓர் அறிவார்ந்த அழகு. வகுப்புக்கு வந்ததும் அன்றைக்கு என்ன பாடம் என்று கேட்டுவிட்டு, புத்தகத்தை மூடி வைத்து விடுவார். இலக்கணமாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் இனிய குரலில் வாய் விட்டுப் பாடுவார். நச்சினார்க்கினியரும், இளம்பூரணரும், அடியார்க்கு நல்லாரும், பரிமேலழகரும், சிவஞான முனிவரும் வகுப்பு முடியும்வரை வந்து வந்து போவார்கள். முந்தையோர் உரைகளை அவர் விளக்கும்போது ஒரு புதிய பரிமாணம் தோன்றும். அவரது உரைக்கு எதிராக வினாக்கள் தொடுத்தாலும் அந்தக் கடல் கலங்காது; கவலைப்படாது. உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரை எதிர்த்துக் கேட்டால் சிரித்துக் கொண்டே கூறுவார்: “”அவன் நச்சினார்க்கே இனியன்…”

அவர் ஏராளமான நூல்கள் எழுதியிருக்க முடியும்; என்றாலும் எழுதவில்லை. அதற்குக் காரணம் அவர் இந்த வெளியுலக விளம்பரத்துக்கு அப்பாற்பட்டவராகவே வாழ விரும்பினார். அவர் நினைத்திருந்தால் விருதுகளையும், பதவிகளையும் வென்றெடுக்க முடியும். ஆனால் அவர் எந்தவித புகழையும், பரிசுகளையும் மதித்ததில்லை. “பரிசும் பாராட்டும் தேடிவர வேண்டும். தேடி அலைவது தமிழுக்கு அவமானம்’ என்று கூறுவார். கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றதும் புதுச்சேரி பிரெஞ்சு கலை ஆய்வு நிறுவனம் அவரை அழைத்துக் கொண்டது.

எண்ணிறந்த ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அவை தனி நூல் வடிவம் பெறவில்லை. அண்மையில் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்ட தொல்காப்பியம் – செம்பதிப்பு 14 தொகுதிகளுக்கும் இவர் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். புதுச்சேரி இந்தியப் பள்ளியின் ஆய்வு மாணவர்களுக்காக இவரால் பிழைநீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை பதிப்பிக்கப்பட்டன. இதுதவிர இவர் அரும்பாடுபட்டுத் தயாரித்த தமிழ் இலக்கணப் பேரகராதி பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

மரபுவழிவந்த தமிழ்ப் புலவர் வரிசையில் இவர் கடைசித் தலைமுறை என்று கூறலாம். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திருலோக சீதாராமனும், தஞ்சை வழக்கறிஞர் டி .என். இராமச்சந்திரனும் இவரைப் பெரிதும் மதித்து வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்த துணை நின்றனர். எனினும் இந்தக் கடல் எந்த எல்லைக்குள்ளும் அடங்கவில்லை.

இப்போது இந்த ஓயாத தமிழ் அலை ஓய்ந்துவிட்டது; சாயாத தமிழ் மலை சாய்ந்துவிட்டது. ஆயினும் தமிழ் இருக்கும்வரை அவர் பெயர் இருக்கும்; நெஞ்சம் இருக்கும்வரை நினைவிருக்கும்.

Posted in Anjali, Author, Biosketch, Books, History, Memoirs, Notable, people, Persons, Professor, Research, Scholar, Teacher, Writer | 1 Comment »

Ralph Nader – Profile & Biosketch: Raman Raja

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

நெட்டில் சுட்டதடா…கலக்கப் புறப்பட்ட கன்ஸ்யூமர் புயல்!

ராமன் ராஜா

உள்ளூர் செய்திகளில் டிராஃபிக் ராமசாமி என்று ஒரு பெயர் அடிக்கடி அடிபடுகிறதே, யார் இவர் என்று கவனித்தேன்; மிகப் பெரிய தலைகளுடன் மோதுவதையே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்ட ஒரு கெட்டித் தலை என்று தெரிகிறது. பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி, பல பேருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். இதன் அமெரிக்கப் பதிப்புதான் ரால்ப் நாடர். (அமெரிக்காவில் ரால்ப் நோடர் என்றும் அழைப்பர்) கன்ஸ்யூமர் இயக்கத்தின் பிதாமகர். நாடருக்கு மெகா கம்பெனிகள் என்றாலே மகா அலர்ஜி. வால் மார்ட், மைக்ரோ சாஃப்டில் ஆரம்பித்து ஊரில் உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களுடனும் ஓயாத சண்டை!

1934-ல் பிறந்தவர் நாடர். லெபனானிலிருந்து அமெரிக்காவில் சென்று குடியேறிய குடும்பம். படித்தது வக்கீலுக்கு; ஆனால் உருப்படியாக ப்ராக்டீஸ் செய்வதை விட்டுவிட்டு, ஊர்ப் பிரச்சினைகளுக்காகப் பொது நல வழக்குத் தொடர்ந்து போராடுவதே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்டார். தன்னுடைய தாக்குதலுக்கு நாடர் முதலில் நாடியது கார் தயாரிக்கும் கம்பெனிகளை. அந்தக் காலத்து கார்களில் இருந்த சஸ்பென்ஷன் எனப்படும் முக்கியமான தொட்டில் அமைப்பு, எட்டணா கூடப் பெறாது. ஒரு மூலையில் வேகமாகத் திரும்பினால் கார் சட்டென்று பாலன்ஸ் இழந்து பல்டி அடித்து விடும். அதுதவிர ஒவ்வொரு காரிலும், ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு விதமான அமைப்புகளில் கியர் இருந்தது. சிலவற்றில் நியூட்ரல் கியர் முதலில் இருக்கும்; வேறு சில கார்களில் நடு மத்தியில் இருக்கும். பழக்கமில்லாத புதிய காரை ஓட்டுபவர்கள் திணறிப் போவார்கள். சிக்னலில் நின்றுவிட்டுக் கிளம்ப முற்படும்போது பழைய ஞாபகத்தில் முதல் கியரைப் போட்டால், ரிவர்ஸில் சீறிப் புறப்பட்டுப் பின்னால் வரும் வண்டியில் டமாலென்று இடிக்கும். கார் தயாரிப்பு கம்பெனிகள் லாபம் ஒன்றே குறியாக, மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று பொருமினார் நாடர். எல்லாத் தயாரிப்பாளர்களின் கார்களிலும் ஒரே மாதிரியான கியர் இருக்க வேண்டுமென்று வாதாடினார். கார் கம்பெனிகள் “பெப்பே’ என்றன.

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் சாதாரணமாகவே கார்கள் நூற்று நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் ஒரு விபத்து என்றால் ஸ்டியரிங் வீலில் மோதி ஓட்டுபவரின் நெஞ்சு எலும்பு உடைந்துவிடும். இதயம் நேரடியாக அடி வாங்குவதால், ஆஸ்பத்திரி போகும் வரை ஆத்மா தாங்காது! இதைத் தடுக்க இப்போது எல்லாக் காரிலும் சீட் பெல்ட், ஸ்டியரிங்கின் நடுவே காற்று அடைத்த குஷன் பை என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்துவிட்டன. சீட் பெல்ட் அணிவதால் மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினோராயிரம் பேர் உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தேவை என்று நாடர் முதலில் போராடியபோது, “”இந்த மாதிரி அநாவசிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்காக எங்கள் கார் தயாரிப்புச் செலவை ஏற்றிவிட முடியாது” என்று கார் கம்பெனிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு! நாடர் நேராக மக்களிடம் போய்விட்டார். அதிலும் குறிப்பாக அவருடைய அதிரடித் தாக்குதலுக்கு ஆளானது, புகழ் பெற்ற செவர்லே கார். கம்பெனிக்கு உள்ளிருந்தே ஒத்துழைத்த சிலரின் உதவியுடன் நிறைய டெக்னிக்கல் தகவல் திரட்டினார். அவற்றை வைத்து “எந்த வேகத்திலும் தொந்தரவு’ என்று ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படித்ததும் அதிர்ந்து போனார்கள் மக்கள். அரசாங்கம் என்ன செய்கிறது என்று அதட்ட ஆரம்பித்தார்கள். பொதுக் கருத்து பொங்கி எழுந்தவுடன் சர்க்கார் அவசர அவசரமாகச் சட்டம் போட்டு கார்களின் பாதுகாப்பை முறைப்படுத்தியது. கியர்கள், சஸ்பென்ஷன் என்று கார்களின் எல்லாப் பாகங்களும் திரும்ப வடிவமைக்கப்பட்டன. தனி மனிதரான நாடர் ஒருவரின் முயற்சியால்தான் இன்று அமெரிக்க சாலைகள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன.

ரால்ப் நாடர் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். “உங்கள் டாக்டருடன் போராடுவது எப்படி?’ “விமானத்தில் போகிறீர்களா? ஜாக்கிரதை!’, “உங்கள் குழந்தைகளை மெகா கம்பெனிகள் மூளைச் சலவை செய்கிறார்கள்!’, “ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?’, “உங்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டுங்கள்’ என்பவை அவருடைய பிரபலமான புத்தகங்களில் சில. இன்னும் அரசியல், தேர்தல் பற்றித் தெளிவாக நிறைய அலசியிருக்கிறார். அவருடைய வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், மனிதர் அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேரிடம் சண்டை போட்டு முடித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஓயாமல் தொல்லை கொடுக்கிறாரே என்று ஜெனரல் மோட்டார் போன்ற கார் தயாரிப்பு கம்பெனிகளுக்கெல்லாம் ஏகக் கடுப்பு. அதற்குள் நாடறிந்த மனிதராகிவிட்டிருந்த நாடரின் நல்ல பெயரை நாசம் செய்வது எப்படி என்று மில்லியன் டாலர் செலவில் தீவிரமாக யோசித்தார்கள். அவர் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க ரகசிய ஏஜெண்டுகள் ராப்பகலாகச் சுற்றி அலைந்தார்கள். ஏதாவது தப்புப் பண்ண மாட்டாரா, கப்பென்று பிடித்துக் கொள்ளலாமே என்று நப்பாசை அவர்களுக்கு. ஒன்றும் சிக்காமல் போகவே ஈனச் சதிகளில் இறங்கினார்கள். விலை மாதர்களை ஏற்பாடு பண்ணி விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை போல் அனுப்பி, ஆசாமி செக்ஸ் விவகாரங்களிலாவது சிக்குவாரா என்று பார்த்துவிட்டார்கள். (நாடர் கட்டைப் பிரம்மச்சாரி). வலிய வந்த பெண்ணைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார் நாடர். பிறகு தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளைப் புரிந்துகொண்ட அவர், நேராகக் கோர்ட்டுக்குப் போய், தன்னுடைய பிரைவஸியைக் கெடுத்து நிழல் போலத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடும் வாங்கிவிட்டார். ஜெனரல் மோட்டார், பப்ளிக்காக நாடரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ரிவர்ஸ் கியரைப் போட்டுக் கொண்டு ஓட நேர்ந்தது. நஷ்ட ஈடாக வந்த பணத்தில் இளைஞர்களைத் திரட்டி ஒரு பறக்கும் படை அமைத்தார். எங்கெல்லாம் நுகர்வோர் உரிமைகள் பறி போகிறதோ, அங்கெல்லாம் இவர்கள் புகுந்து புறப்பட்டு விலாவரியாகத் தகவல் சேகரித்துக் கொண்டு வருவார்கள். உடனே கோர்ட்தான், கேஸ்தான், புத்தகம்தான், போராட்டம்தான்! நாடர் ஆரம்பித்த நுகர்வோர் இயக்கத்தைப் பற்றியே எவ்வளவோ எழுதலாம். அதுபற்றி மற்றொரு சமயம்.

இப்போது அமெரிக்க ஜனநாயகத்தில் சர்வ சாதாரணமாகப் போய்விட்ட பல உரிமைகள், நாடர் ஆரம்பித்து வைத்தவைதான். சுற்றுச் சூழல் பாதுகாப்பு எஜென்ஸி என்ற அரசாங்க அமைப்பு தோன்றக் காரணமே நாடரின் போராட்டங்கள்தான். இப்போது நம்ம ஊரில் கூடப் பிரபலமாக இருக்கும் தகவல் அறியும் உரிமையை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, அதற்கென்று சட்டம் போட வைத்தவர் -நாடர். அமெரிக்கர்களும் ரொம்பக் காலம் வரை நம்மைப் போல முனிசிபாலிட்டி குழாயில் கால்ரா தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாடரின் முயற்சியால் 1974-ல் பாதுகாப்பான குடிநீர் சட்டம் வந்தது. குடிக்கிற தண்ணீரில் எத்தனை அளவுக்கு மேல் உப்பு, உலோகங்கள், பாக்டீரியா இருந்தால் ஆபத்து என்று விஞ்ஞானிகளை வைத்துக் கொண்டு விளக்கி, குழம்பின குட்டையைத் தெளியவைத்தவர்- நாடர். அதேபோல் அப்போது கசாப்புக் கடைகளிலெல்லாம் ஒரே ஊழல் மயம். சீக்கு மாடு, சொறி ஆடு எல்லாவற்றையும் வெட்டிக் கலந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை உள்ளே எட்டிப் பார்த்தவர்கள் சைவத்துக்கு மாறிவிடுவார்கள். மாநில சுகாதார இன்ஸ்பெக்டர் வந்து மாமிசக் கூடங்களைச் சோதனை போட்டு சர்டிபிகேட் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வைத்தது- நாடர்.

அரசியலிலும் இறங்கி, எலெக்ஷனிலும் நின்று தன்னந்தனியாக விஜயகாந்த் மாதிரி கலக்கினார் நாடர். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தவற மாட்டார். 2000-வது வருடத் தேர்தலில் எதிரே ஜார்ஜ் புஷ், அல் கோர் என்று இரண்டு மாபெரும் அரசியல் மலைகள். நாடர் தயங்கவில்லை. “”விற்பனைக்கு அல்ல” (ய்ர்ற் ச்ர்ழ் ள்ஹப்ங்) என்று பொருள் பொதிந்த போர்டு போட்டுக் கொண்டு அரசியல் கடையைத் திறந்தார். ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பேருமே நாடருக்கு ஓட்டுப் போட்டார்கள். “”இவனும் திருடன், அவனும் திருடன்தானே; ஆகவே நான் ஓட்டெல்லாம் போடும் வழக்கமே இல்லை” என்று வீட்டில் சப்பையாகக் குந்திக் கொண்டு பேப்பர் படித்து விமரிசன மழை பொழிந்து கொண்டிருந்த அறிவு ஜீவிக் கும்பலைக் கூட வெளியே இழுத்துத் தனக்கு ஓட்டுப் போட வைத்தவர் நாடர். இதுவே பெரிய சாதனைதான். மொத்தம் விழுந்த ஓட்டுக்களில் சுமார் மூன்று சதவிகிதம் வாங்கிவிட்டார். அவர் மட்டும் ஓட்டைப் பிளக்கவில்லையென்றால் நிச்சயம் புஷ் வெற்றியடைந்திருக்க முடியாது. பல இடங்களில் புஷ் ஜெயித்த ஓட்டு வித்தியாசத்தை விட நாடருக்கு அதிகம் விழுந்திருந்தது.

டைம் பத்திரிகை செல்வாக்கு மிகுந்த நூறு அமெரிக்கர்களைப் பட்டியலிட்டு அதில் நாடருக்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தது. அவரை மையமாக வைத்து நிறைய கார்டூன்கள், டி.வி. காமெடி ஷோக்கள் எல்லாம் உண்டு. ஒரு முறை நாடருக்கு எதிர்க் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியுடன் டி.வி.யில் நேருக்கு நேராக விவாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு எப்படி இருந்தது என்று கெர்ரியிடம் கேட்டார்களாம். “”சே…! தப்பிச்சுட்டான். கடைசி நேரத்தில் என்னுடைய துப்பாக்கி வெடிக்காமல் மக்கர் செய்துவிட்டது!” என்று புகைந்தாராம் கெர்ரி.

Posted in activism, America, Analysis, Attorney, Biography, Biosketch, Bush, Capitalism, Consumer Activism, Elections, General Motors, GM, Green Party, John Kerry, Law, Lawsuits, Lawyer, Lebanon, Massachusetts, Order, people, Persons, profile, Ralph Nader | Leave a Comment »