Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Patterns’ Category

Raman Raja – Caught in the Traffic (Dinamani Kathir)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!

ராமன் ராஜா


முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)

போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!

டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!

போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.

கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!

சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.

பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!

Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »

Raman Raja – Circadian rhythm: Sleeping Patterns

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

நெட்டில் சுட்டதடா…: கொக்கரக்கோவின் கொடுங்கோல் ஆட்சி

ராமன் ராஜா

எஸ்.வி.வி. வாத்தியாருக்கு எங்கள் பள்ளிக் கூடத்தில் “கொடுங்கோல் மன்னன்’ என்று பட்டப் பெயர் உண்டு. படிக்காத பையன்களுக்கு அவர் வழங்கும் பயங்கர அடி உதை, யாவரும் அறிந்ததே. படிக்கிற பையன்களுக்கோ, பள்ளிக் கூடத்துக்கு அப்பாலும் அவருடைய டார்ச்சர் தொடரும். காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து எங்கள் தெரு வழியாகத்தான் ஆற்றங்கரைக்குப் போவார். நான் வீட்டுத் திண்ணையில் பாரசீகப் பூனைக் குட்டி மாதிரி சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பேன். “”உம், உம். தூங்கினது போதும். எழுந்து படிடா” என்று வாக்கிங் ஸ்டிக்கினால் விலாவில் குத்தி, நான் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்து போகிறேனா கண்காணித்துவிட்டுத்தான் நகர்வார். அவர் குளித்துவிட்டு வரும்போது நான் எட்டு வீட்டுக்குக் கேட்கிற மாதிரி சத்தமாகப் படித்துக் கொண்டிருக்காவிட்டால், அன்றைய தினம் நான் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும்.

அதிகாலையில் கோழிகூவும் முன் எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள் உலகில் சுமார் பத்துப் பதினைந்து சதவிகிதம். லேட்டாக எழுந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக எழுந்திருப்பவர்கள் பதினைந்து முதல் இருபத்தைந்து சதவிகிதம். மற்றவர்களெல்லாம் இரண்டும் கெட்டான் ரகம். சீக்கிரம் எழுந்திருக்கும் சேவற்கோழி டைப் ஆசாமிகளுக்கு ஏ- சமுதாயம் என்று பெயர். நடுநிசி தாண்டின பிறகும் தூங்காமல் ராக்கூத்தடிக்கும் ஆந்தை மனிதர்களுக்கு பி- சமுதாயம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லாஸ் வெகாஸ், பாரீஸ் போன்ற நகரங்கள் இவர்களுக்காகவே ஏற்பட்டவை. அங்கெல்லாம் காபி கடைகள் முதல் முடிவெட்டும் சலூன் வரை நள்ளிரவு தாண்டியும் கூட்டம் இருக்கும். நான்கூட மாலைச் சூரியன் மேற்கே விழுந்தவுடன்தான் உற்சாகமாக உணர்கிறேன். ராத்திரி மனைவி மக்களையெல்லாம் தூங்க வைத்துவிட்டு வேலை செய்ய உட்காருகிறேன். மின் அஞ்சல்களுக்குப் பதில் “அஞ்சி’ விட்டு பாட்டு கேட்டபடியே புத்தகம் படித்துவிட்டு ராத்திரி ஒரு மணிக்கு நான் தன்னந்தனியே தட்டைச் சீடை சாப்பிடும் ஓசை, இரவின் நிசப்தத்தில் வீடெங்கும் எதிரொலிக்கும்.

பி- சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் கார்த்திக்குக்கு ஒரு பிரச்சினை: “”என்னுடைய தாத்தா ஒரு விவசாயி. ராத்திரி எட்டு மணியானால் தூங்கிவிடுவார். காலை நாலு மணிக்கு எழுந்து விடுவார். கதிர் அறுத்துப் பரம்படிக்கிற தொழிலுக்கு அதுதான் சரி; சூரியனுக்கு முன்னால் வெள்ளென எழுந்து வேலையைத் துவங்கினால்தான் வெய்யில் ஏறுவதற்கு முன் கரையேறலாம். ஆனால் நானோ, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நவீனப் பொருளாதாரத்தில் வேலை செய்பவன். குழல் விளக்கின் அடியில் கம்ப்யூட்டர் உத்தியோகம் பார்ப்பவனுக்கு ராத்திரியும் ஒன்றுதான், பகலும் ஒன்றுதான். இன்னும் எதற்காக நாம் காலைச் சேவல்களுடன் போட்டி போட வேண்டும்? இருந்தும் பண்டைய ஏ- சமுதாயம் எற்படுத்தி வைத்த பழக்கங்கள், விதிமுறைகள் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. நானும் வேறு வழியில்லாமல் அலாரம் கடிகாரத்தின் ஆணைக்குக் கட்டுப்பட்டு என் வாழ்க்கையை வாழ்கிறேன். கனக்கும் இமைகளும் கண்ணுக்குக் கீழே கரு வளையங்களுமாக, ஸ்டீரிங் வீல் பிடித்திருக்கும் பிரேதம் போல் கார் ஓட்டுகிறேன்” என்று பொருமுகிறார்.

“”சரி என்னதான் செய்ய வேண்டுமென்கிறீர்கள்?” என்று கேட்டால், காலையில் ஒன்பது மணிக்கு மெல்லக் கண் திறந்து, நுரை ரப்பர் மெத்தையின் கதகதப்பை அனுபவித்தவாறே நிதானமாகக் காபியை அனுபவித்து உறிஞ்சி, மனதுக்குள் புதுக்கவிதை புனைந்தபடியே மெல்ல ஸ்லோ மோஷனில் பல் தேய்த்து, அவசரமே இல்லாமல் பேப்பர் படித்து நம் காஷ்மீர் சகோதரர்களுக்காகக் கவலைப்பட்டு, தேங்காய் சட்டினியுடன் டிபனை ரசித்துச் சாப்பிட்டுவிட்டு, உடலும் மனமும் முழுவதும் தயாரானவுடன் ஆபிசுக்குக் கிளம்ப முடிந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்!”

ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வில்லிபுத்தூர் ஆண்டாள், “புள்ளும் சிலம்பின காண்’ என்று பறவைக் கூட்டங்கள் சிலம்பும் வேளையில் கண்ணனைத் தரிசிக்கத் தோழிகளை எழுப்பி ஓட்டிக் கொண்டு போயிருக்கிறார். கதவைத் திறக்காமல் வீட்டுக்கு உள்ளிருந்தே “”ஹா…வ்! எல்லாரும் வந்தாச்சா?” என்று சுருண்டு படுக்கும் சோம்பேறிப் பெண்ணும், “”நீயே வந்து எண்ணிப் பாத்துக்கோ” என்று அதட்டும் ஆண்டாளும், பி மற்றும் ஏ சொûஸட்டிகளுக்குக் கவிதையாகப் பதிவான உதாரணங்கள்.

சர்க்காடியன் தாளம் என்று நம் உடலுக்குள் சீராக ஒரு ஜாஸ்ரா ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தூங்க வேண்டிய நேரம் எது, படுக்கையைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரம் எது, சன் டி.வி.யில் சீரியல் பார்க்க வேண்டிய நேரம் எது என்பதை இந்தத் தாளம்தான் நமக்குச் சொல்கிறது. பிராணிகள், செடி கொடிகள், காளான், பாக்டீரியா எல்லாவற்றுக்குமே இந்த உயிரியல் கடிகாரம் உண்டு. பாட்டரி செலவில்லாமல் இருபத்து நாலுமணி நேரமும் இயங்கும் கடிகாரம். இந்த கடிகாரத்தைக் கட்டுப்படுத்துவது நமக்குள்ளிருக்கும் சில மரபீனிகள் (ஜீன்கள்) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏ- வகை மனிதர்களுக்கு உச்சிப் பகல் வரை உடல் வெப்பம் தணிவாகவே இருக்கும். அவர்களுடைய உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்தவரை, பொழுது இன்னும் விடியவில்லை.

அமெரிக்காவுக்குப் போய் வந்தவர்களுக்கு ஜெட் லாக் பற்றித் தெரிந்திருக்கும். அதிவேக விமானத்தில் ஏறி சட்டென்று உலகத்தின் வெளிச்சப் பாதியிலிருந்து இருட்டுப் பாதிக்குப் போய்விடுவதால், நம் சர்க்காடியன் சதிராட்டம் குழம்பிப் போய்விடும். ராவெல்லாம் தூக்கம் வராது; பகல் முழுவதும் கொட்டாவி. இரண்டு மூன்று நாள் இது இரவா, பகலா, நிலவா, கதிரா என்று புரியாமல் அவஸ்தையாக இருக்கும். பிறகு மெல்ல மெல்ல உடல் கடிகாரம் புதிய தாளத்துக்குப் பழகிக் கொள்ளும். (அப்போது லீவு முடிந்து மறுபடி அமெரிக்க நேரத்துக்குத் திரும்பும் நாள் வந்துவிடும்.)

டென்மார்க் நாட்டில் கமீலா க்ரிங் என்பவர் ஆந்தையர்களுக்காக பி- சொûஸட்டி என்று ஒரு இணைய தளம் ஆரம்பித்திருக்கிறார். ஆயிரக்கணக்கில் உறுப்பினர் சேர்ந்தார்கள். “”நாம் நம்முடைய சர்க்காடியன் ரிதத்தின்படி வாழ்க்கையை நடத்த முயன்றால், சோம்பேறி என்றும் தூங்கு மூஞ்சி என்றும் கிண்டல் செய்கிறார்கள். பள்ளிக் கூடங்கள், அலுவகங்கள், கடைகள் எல்லாவற்றையுமே ஏ- சமுதாய மக்கள் தங்களுடைய சுய நல வசதிப்படி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். இந்தச் சேவல் கோழிகளின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நமக்கு எப்போது விடுதலை? அவர்கள் வேலை செய்கிறபடி செய்யட்டும்; நாங்கள் மற்றொரு ஷிப்டில் 11 மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டு மணி வரை வேலை செய்ய விடுங்கள்” என்பதுதான் இவர்கள் கோரிக்கை. படைப்புத் திறனும் புத்திக் கூர்மையும் தேவைப்படும் இன்றைய தொழில்களுக்கு இதுதான் சரியான அணுகுமுறை. அவரவர் உயிரியல் கடிகாரத்தைப் பொறுத்து வெவ்வேறு பொழுதுகளில் வேலையில் கவனமும் உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் வேலை செய்ய அனுமதிப்பதுதான் அவர்களுக்கும் நல்லது. முதலாளிக்கும் நல்லது. காலையில் எழுந்து படித்தால்தான் படிப்பு ஏறும் என்பது பொதுவான மற்றொரு மூட நம்பிக்கை. அது ஏ- சமுதாயத்துக்கு மட்டும்தான் பொருந்தும். வேலை கொடுப்பவர்களும் இப்போது விழித்தெழுந்து பி- சமுதாயத்தினரை ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். டெக்னிகல் வேலைகளுக்குத் திறமையான ஆட்கள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில் “”எங்களுக்குத் திட்டவட்டமான ஆபிஸ் நேரம் கிடையாது- மெதுவாக எழுந்து மெதுவாக வரலாம்” என்றே விளம்பரம் செய்யப்படுகிறது.

சென்னையில்கூட பல சாஃப்ட்வேர் கம்பெனிகளில் ஃப்ளெக்ஸி டைம் என்று ஒரு முறை இருக்கிறது. ஒரு நாளின் இருபத்து நாலு மணியில் அவரவர் வசதிப்படி எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம். ஒவ்வொரு ஊழியரும் வரும், போகும் நேரத்தைக் கதவைத் திறக்கும் காந்த அட்டைகள் பதிவு செய்து கொள்ளும். சம்பள தினத்தன்றுதான் சித்ரகுப்தன் மாதிரி கணக்குப் பார்ப்பார்கள். பகுதி நேர வகுப்பில் மேற்படிப்பு படிப்பவர்கள் முதல், காலைக் காட்சியில் ஷகிலா படம் பார்த்துவிட்டு வருபவர்கள் வரை பலருக்கு இது உபயோகமாக இருக்கிறது.

அதிகாலை வேளைகளில் நம் உடலில் கார்டிஸôல் என்ற ஹாராமோன் அதிகமாகச் சுரக்கும். நாம் மன அழுத்தம், பயம், உளைச்சல் போன்ற அவல நிலைகளில் இருக்கும்போது சுரக்கும் வேதிப் பொருள் இது. உடம்புக்கு நல்லதே அல்ல! எனவே அதிகாலை வேளைகளை ரோக விஞ்ஞானிகள், ஜெர்மன் மருத்துவப் பேராசிரியர்கள் இருவர் “சோம்பேறித் தனத்தின் சந்தோஷம்’ என்ற புத்தகத்தில் தாமதமாகத் துயில் எழுந்து பதவிசாக நடந்து கொள்பவர்கள்தான் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆதாரத்துடன் விவரிக்கிறார்கள். கார்டிஸôல் அதிகரித்தால் விரைவாக முதுமை வந்துவிடுமாம். (நான் நாளை முதல் இன்னும் ஒரு மணி நேரம் அதிகம் தூங்குவதாக முடிவு செய்துவிட்டேன்.)

“”காலையில் சீக்கிரம் எழுந்து இரை தேடப் புறப்படும் பறவைக்குத்தான் சாப்பிடுவதற்குப் புழு கிடைக்கும்” என்ற ஆங்கிலப் பழமொழியை பப்லுவிடம் சொன்னேன். “”இதிலிருந்து என்ன தெரிகிறது?”

“”நாம் ஒரு புழுவாக இருந்தால், சீக்கிரம் எழுந்து வெளியே தலைகாட்டக் கூடாது; ஆபத்து!” என்றான் பப்லு.

Posted in Awake, circadian, circadian rhythm, Clock, Day, Insomina, Jetlag, Kathir, Night, Patterns, Productivity, Raman, Raman Raja, Ramanraja, Sleep, Work | Leave a Comment »