Posted by Snapjudge மேல் மே 9, 2007
புகை நடுவிலே…
புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பது என்பதில் மாறுபட்ட கருத்தே இல்லை.
புகைபிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறக்கின்றனர். மேலும், புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்க்குச் சிகிச்சை மற்றும் நோயுற்ற காலத்தில் உற்பத்தி இழப்பு என மொத்தப் பொருள் இழப்பு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது.
புகைத்தல் தீங்கானது என்றாலும், பீடி, சிகரெட் தயாரிப்பது அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு தொழிலாக இருக்கிறது. இந்தத் தொழிலில் இந்தியாவில் 1 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். 60 லட்சம் பேர் நேரடியாக இத்தொழிலில் பீடி சுற்றுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். மீதமுள்ளவர்கள் இதற்கான இலை மற்றும் புகையிலை உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள்.
பீடியை சிகரெட் தொழிலோடு சேர்க்கக்கூடாது என்பதும் “சிகரெட்டைவிட பீடி நல்லது. நிகோடின் குறைவு’ என்ற வாதங்களும் ஏற்கக்கூடியவை அல்ல. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரமும் அவசியம்தான்.
ஆனால் அந்தப் பிரசாரத்தை மண்டையோடு எச்சரிக்கை மூலம் நடத்த அரசு விரும்புவதும், மண்டையோடு படத்தைப் போட்டால் பீடி விற்பனை சரிந்துவிடும் என்று பீடித் தொழிலாளர்கள் நம்புவதும் – இரு தரப்பினருமே நடைமுறையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.
சிகரெட் பாக்கெட்டுகளில் புகை பழக்கம் உடல்நலத்துக்குக் கேடானது என்று அச்சிட்டுத்தான் விற்கிறார்கள். விற்பனை குறைந்துவிடவில்லை. பீடி பிடிப்போர் அனைவரும் எழுத்தறிவில்லாத சாதாரண ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அதனால் பீடி பாக்கெட்டுகளின் மீது எழுத்தால் எழுதுவதைக் காட்டிலும் குறியீடுகளால் மிரட்ட நினைக்கிறது அரசு.
அச்சுறுத்தும் வாசகங்கள், பயங்கர அடையாளங்களால் இத்தகைய பழக்கங்களைத் தடுத்துவிட முடியும் என்பது சரியல்ல. ஏனென்றால் இந்தத் “தப்பு என்பது தெரிந்து செய்வது’.
தகாத உறவினால் எய்ட்ஸ் வரும் என்றால், அரசு பாதுகாப்பான உறவை மட்டுமே பரிந்துரைக்க முடிகிறது. மதுவினால் உடல்நலம் கெடும் என்பது அனைவருக்கும் தெரியும். “மதுப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று எழுதப்பட்டுள்ளதால் விற்பனை சரிந்துவிடவில்லை. மண்டையோடு போட்டால் மட்டும் பீடி விற்பனை சரிந்துவிடும் என்பது சரியான வாதமாக இல்லை.
பீடித் தொழிலாளர்களின் மிகப்பெரும் பிரச்சினை பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள்தான். பீடியின் விலைக்கும் சாதாரண சிகரெட்டின் விலைக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து பீடித் தொழிலை அடியோடு ஒழிப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம்.
நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு சிகரெட் தொழிலில் அனுமதித்துள்ளது. குறிப்பாக அசாம், திரிபுரா மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மலிவான, நீளம் குறைவான சிகரெட்டுகளை உற்பத்தி செய்து பீடிச் சந்தையை சிதைக்கப் போகின்றன.
இன்றைய முக்கியமான பீடித் தொழிற்சங்கங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவை. மத்திய அரசு இக் கட்சிகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. இச்சூழலில் சிகரெட் தொழிலில் அந்நிய நேரடி முதலீட்டை தடுத்து நிறுத்துதல், பீடி சுற்றுவதற்கான கூலியை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயித்தல் என சாதித்துக் கொள்ள வேண்டுமே தவிர, மண்டையோட்டுப் பிரச்சினையில் முக்கியமானவற்றை மறந்துவிடக்கூடாது.
பீடிக் கட்டில் மண்டையோட்டை எவ்வளவு பெரியதாக அச்சிட்டாலும், சிகரெட் விலையைவிட பீடி மலிவாக இருக்கும்வரை பீடி விற்பனை குறையாது.
According to the medical journal Lancet, 13 per cent of all deaths in India by 2020 will be because of tobacco.
Posted in AIDS, Anbumani, Ban, Beedi, betelnut, Chew, Cigar, Cigarette, Commerce, Consumer, Cost, Customer, deaths, Economy, Employment, Filter, Finance, Govt, Habits, Health, Healthcare, Income, ITC, Jobs, manufacturers, Manufacturing, MNC, Nicotine, Pan Parag, Passive, Protest, Ramadas, Ramadoss, sales, skull, Smoke, smoking, Symbols, Tax, Tirunelveli, Tobacco, warning, workers, wrappers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007
புகைக்கப் புகைக்க…
உலகில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களுக்குப் பலியாகின்றனர். புகை பிடிப்பதால் உடலில் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இந்த நிலையில் “நாட்டில் 40 சதவீத சுகாதாரப் பிரச்சினைகள் புகையிலை மூலமே ஏற்படுகின்றன. அதனால் புகையிலை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று சுகாதார அமைச்சர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனி ஆணையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பஸ் நிறுத்தங்கள், உணவுக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் புகை பிடிப்பது சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இவ்வாறு புகை பிடிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், மூச்சுத் திணறல் ஆகியன புகையிலை காரணமாக ஏற்படும் முக்கிய நோய்கள். இதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று, வடகிழக்கு மாநிலங்களில் புகையிலைப் பொருள்கள் பெருமளவு பயன்படுத்தப்படுவதால் புற்று நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களைப்பைப் போக்கி உற்சாகம் ஏற்படுத்துவதால் புகை பிடிப்பதாகப் பலரும் கூறுகின்றனர். ஆனால் அறிவியல் ரீதியில் இது நிரூபிக்கப்படவில்லை.
புகைப் பழக்கத்துக்கு உலகில் சுமார் 130 கோடி பேர் அடிமையாகி உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் மாணவரிடையே இது பரவலாக வளர்ந்து வருவது மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. கல்வி நிலையங்களின் வாயில்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் இவை தாராளமாகக் கிடைப்பதால், கிடைக்கும் நேரத்தில் புகைப்பது அவர்களுக்கு எளிதாகி விட்டது.
இது போதாதென்று தொலைக்காட்சிகளில் புகை பிடிப்பது தொடர்பான விளம்பரங்கள் மறைமுகமாக இடம்பெறுகின்றன. அதுவும் பிரபலங்கள் மூலம் அவை விளம்பரப்படுத்தப்படுவதால் இளைஞர்களை அது எளிதில் தொற்றிக் கொள்கிறது. இத்தகைய விளம்பரங்களைத் தடுக்குமாறு செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்குப் பல முறை கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளது மக்கள் ஆரோக்கியத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. புகையிலை தொழில் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதால் இவ்வாறு கண்டும் காணாததுபோல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்குச் சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இத்துடன் குட்கா போன்ற புகையிலைப் பொருள்களும் பெருமளவு புழக்கத்தில் உள்ளன. இவற்றின் உறைகள் மீது மண்டை ஓடு, எலும்புக்கூடு எச்சரிக்கையுடன் படங்களை வெளியிட்டு நுகர்வோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால், “குடி குடியைக் கெடுக்கும், குழந்தைகளைப் பட்டினி போடும்’ என்ற வாசகங்கள் மதுக்கடைகளின் முன்னே உள்ளன. இருந்தும் மது விற்பனை மாதத்துக்கு மாதம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. சிகரெட் பிடிப்பது உடலுக்குத் தீங்கானது என்ற வாசகம் பாக்கெட்டுகளில் கண்ணுக்குத் தெரியாத அளவில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் காரணமாக விற்பனை குறைந்ததாகத் தெரியவில்லை. எனவே, உற்பத்தி, விற்பனை நிலையிலேயே அவற்றைக் கட்டுப்படுத்தினாலன்றி எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது.
Posted in Anbumani, cancer, Cigar, Cigarette, Enforcement, Freedom, Govt, Healthcare, Law, Passive, pipe, Public, Rajini, Rajni, smoking | Leave a Comment »