Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Palm’ Category

Raman Raja: Science & Technology – New Inventions and Innovations: Research and Developments for Practical use

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007

நெட்டில் சுட்டதடா…: ஆசையைத் தூண்டும் மேசை!

ராமன் ராஜா – தினமணிக் கதிர்

2007 – ம் ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவை என்று பாப்புலர் சயன்ஸ் இதழ் பட்டியல் இட்டிருக்கிறது. அதிலிருந்து சில மாதிரிகள்:

* சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றும் விஞ்ஞானம், ஐன்ஸ்டைன் காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், இன்னும் பரவலான உபயோகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. இந்த சோலார் செல்லுக்குச் செலவு அதிகம்; கண்ணாடித் தகடுகளில் சிலிக்கன் சில்லுகளைப் பொருத்த வேண்டியிருப்பதால், அதைத் தயாரிப்பதும் கையாள்வதும் கடினமாக இருக்கிறது. எனவே இந்தியா போன்ற நாடுகளில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தி அனைத்தும் ஜவ்வரிசி வடகம் , வத்தல்கள் காய்வதற்கு மட்டுமே உபயோகமாகிறது. இப்போது நானோ டெக்னாலஜியின் உதவியால் மெல்லிய அலுமினியக் காகிதத்தில் செய்தித்தாள் மாதிரி சோலார் செல்களை அச்சிடும் முறையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இந்த ஒரு கண்டுபிடிப்பினால் சோலார் தொழில்நுட்பமே கொள்ளை மலிவாக ஆகிவிட்டது. இனி கட்டடங்களின் கூரை, சுவர் எல்லாவற்றையும் சோலார் காகிதத்தால் போர்த்தி மூடிவிடலாம். கலிபோர்னியாவில் பத்து லட்சம் வீடுகளில் சூரிய ஒளி சேகரிப்புத் திட்டம் கொண்டு வரப் போகிறார்கள். இந்தக் கட்டடங்களில் வசிப்பவர்கள் எல்லாருக்குமே இந்திய விவசாயிகள் மாதிரி இலவச மின்சாரம் கிடைக்கும்!

* எப்போதோ, எங்கேயோ கேட்ட ஒரு பழைய பாட்டின் டியூன் லேசாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் பாடலின் முதல் வரியோ, பாடியவர் பெயரோ சுத்தமாக நினைவில்லை. அந்தப் பாட்டை இப்போது மறுபடி கேட்க ஆசைப்பட்டால் எப்படித் தேடுவது? இதற்காக நான்கு கல்லூரி மாணவர்கள், படிப்பை விட்டு விட்டுப் பல காலம் ஆராய்ச்சி செய்து ஒரு மென்பொருள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் கம்ப்யூட்டரின் மைக்கை இவர்களின் இணைய தளத்தில் இணைத்துக் கொண்டு பாத்ரூமில் பாடும் பாணியில் பாட்டை முனகியோ, விசிலடித்தோ காட்டினால் போதும். முழுப்பாட்டையும் தேடிக் கொண்டு வந்துவிடும்! கேட்பதற்கு சுலபமாகத் தோன்றினாலும் இதற்குக் கம்ப்யூட்டர் இயலின் உத்தமமான டி.எஸ்.பி. தொழில் நுட்பங்கள் தேவை. பெரிய பெரிய இன்னிசைக் கம்பெனிகளாலேயே செய்ய முடியாமல் இருந்து வந்த விஷயம் இது.

ஹில்லாரி டாஃப், ஜான் லென்னன் போன்றவர்களின் இரண்டு லட்சம் பாடல்கள் இருக்கின்றன. எனக்குப் பிடித்த ஏசுதாஸ் பாட்டு ஏதாவது இருக்கிறதா என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடிப் பார்த்தேன். அகப்படவில்லை. (அந்தக் காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொந்தமாகத்தான் இசையமைத்திருக்கிறார் என்று தெரிகிறது)

* பிரம்மன் மாதிரி முப்பரிமாணப் பொருள்களைப் படைக்கும் பிரின்டர் ஒன்று வந்திருக்கிறது. ஒரு மைக்ரோவேவ் அடுப்பு போலத்தான் சின்னதாக இருக்கிறது. நமக்கு வேண்டிய பொருளின் பிம்பத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்துவிட்டு ஒரு பொத்தானைத் தட்டினால், அந்தப் பொருளை அப்படியே ப்ளாஸ்டிக்கில் வனைந்து கொடுத்துவிடும். இந்தப் பிரிண்டரை உபயோகித்து இயந்திர பாகங்களின் மாடல்கள், பொம்மைகள், சின்ன சிற்பங்கள் எதை வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். இந்தப் பிரிண்டரில் அரிசி உளுந்தைப் போட்டால் இட்லி செய்துதரும் மாடல் வரும்போது , உடனே வாங்கலாம் என்றிருக்கிறேன்.

* உலகத்தில் அழிவே இல்லாதவை இரண்டு: ஒன்று, அரசாங்கத்தில் ஊழல், மற்றது பிளாஸ்டிக். வருடா வருடம் சேரும் 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது என்பது உலகத்தின் 21 ம் நூற்றாண்டுக் கவலைகளில் முக்கியமானது. இதற்குத் தீர்வாக மிரெல் என்று உயிரியல் பிளாஸ்டிக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மக்கா சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பிளாஸ்டிக்கை மண்ணில் புதைத்தால் மக்கிப் போய் உரமாகிவிடும். சோளத்தில் இருக்கும் சர்க்கரைப் பொருள்களை பிளாஸ்டிக்காக மாற்றித் தருவது, மரபீனிகள் மாற்றப்பட்ட ஒரு பாக்டீரியா. நம் வயிற்றில் சாதாரணமாகக் காணப்படும் சீதபேதி பாக்டீரியாதான்!

* இந்தக் கண்டுபிடிப்பை இந்தியாவில் சிறு தொழில் பேட்டை சர்தார்ஜி யாராவது முயன்று பார்க்கலாம்: ஒரு ஏர் கண்டிஷனர். அதனுடன் கங்காருக் குட்டி மாதிரி ஒட்டிக் கொண்டு ஒரு ஃப்ரிட்ஜ். அதற்குள் ஒரு முன்னூறு காலன் தண்ணீர்த் தொட்டி. இரவு நேரத்தில் சில்லென்று அப்படியே ஐஸ் பாறையாக மாறும். பகல் நேரம் முழுவதும் பனிக் கட்டி மெல்ல உருகிக் கொண்டே வரும். ஏஸியின் குளிர்க் குழாய்களைச் சுற்றி இந்த ஐஸ் போர்வை இருப்பதால் அறை நன்றாகக் குளிர்வதுடன் மின்சாரமும் 20 சதவிகிதம் மிச்சமாகிறது.

* உலகத்திலேயே உயரமான குடியிருப்புக் கட்டடம், சிகாகோவில் அவர்கள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஸ்பயர் என்ற ஊசிமுனைக் கோபுரம். இரண்டாயிரம் அடி உயரம் . ஆயிரக்கணக்கான ஃப்ளாட்கள். முதல் ஆறு மாடியும் கார் பார்க்கிங். மேல் மாடியில் இருந்து பார்த்தால், தொடு வானத்தில் பூமியின் வளைவு தெரியும்!

ஸ்பயரின் சிறப்பு, வழக்கமான சதுர டப்பா அபார்ட்மென்ட்கள் போல இல்லாமல், கட்டடமே ஒரு ஸ்க்ரூ ஆணி போன்ற முறுக்கின டிசைனில் இருக்கிறது. புயல் காற்றே அடித்தாலும் கட்டடத்திற்குப் பாதிப்பு இருக்காது. காற்றின் வேகம் முழுவதும் திருகாணியில் சுழன்று மேல் பக்கமாகப் போய்விடும். கட்ட ஆரம்பிக்கும் முன் பூமி பூஜை, ரிப்பன் வெட்டல், பொன்னாடை போர்த்தல் ஏதுமில்லை. திடீரென்று ஒரு நாள் ஆட்களுடன் மேஸ்திரி வந்தார். தோண்ட ஆரம்பித்தார். அவ்வளவுதான். பிளேன், கிளேன் எதுவும் வந்து மோதிவிடக் கூடாதே என்று வேண்டிக் கொண்டு ஒரு தேங்காயாவது உடைத்திருக்கக் கூடாதோ?

* இன்னும் பல விந்தைகள் இருக்கின்றன. விபத்தில் கையை இழந்தவர்களுக்காக, மனித விரல்கள் போலவே தத்ரூபமாக மடக்கிப் பிரிந்து, பரத நாட்டியம் முத்திரை பிடிக்கும் செயற்கைக் கை. ஒரு தண்ணீர் டம்ளர் சைúஸ இருக்கும் செயற்கை நுரையீரல். பழைய ஓட்டை உடைசல் கார் டயர், ப்ளாஸ்டிக்கையெல்லாம் மைக்ரோ வேவ் அடுப்பில் காய்ச்சி, அதிலிருந்து சமையல் எரி வாயு தயாரிக்கும் இயந்திரம். விமானப்படை வீரர்களுக்காக, தலையைத் திருப்பாமலே பின்பக்கமும் பார்க்க உதவும் ஹெல்மெட். நாறாத பெயின்ட்…என்று துறை வாரியாக நிறையக் கண்டுபிடிப்புகள்.

*இந்தப் பட்டியலிலேயே என்னுடைய தனிப்பட்ட செல்லப் பிராணி, மைக்ரோசாப்ட் தயாரித்திருக்கும் சர்ஃபேஸ் கம்ப்யூட்டர் என்ற மேசை மேற்பரப்புக் கணினி. ஒரு கண்ணாடி மேஜை. அடியில் கம்ப்யூட்டர். மேஜையின் மேற்பரப்புதான் கம்ப்யூட்டர் திரை. மேஜையின் விரலால் தொட்டால் கம்ப்யூட்டருக்குப் புரியும். ஓவியர்கள் மேஜைத் திரையில் வெறும் பிரஷ்ஷால் தீற்றிப் படம் வரைய முடியும். வண்ணக் கலவையெல்லாம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்தான்! நாலு நண்பர்கள் சேர்ந்தால் மாயச் சீட்டுக் கட்டுகளை மேஜை மீது பரத்திக் கொண்டு சீட்டாடலாம். ஆட்டத்திற்கு ஒரு கை குறைந்தால் கம்ப்யூட்டரே விளையாடும்.

இந்த மேஜையின் புதுமை என்னவென்றால், தன் மீது வைக்கப்படும் பொருட்களை அதனால் உணர முடியும். உதாரணமாக டேபிள் மீது ஒரு டிஜிட்டல் காமிராவை சும்மா வைத்தாலே போதும். நாம் எடுத்த படங்களையெல்லாம் டவுன்லோடு செய்து மேஜை பூராவும் இறைத்து விடும். போட்டோக்களை விரலால் தொட்டுத் திருப்பலாம். இழுத்துப் பெரிதாக சிறிதாக ஆக்கலாம். போட்டோவில் நம் முகத்தில் ஏதாவது செய்து சீர்திருத்தவும் முடியும். அதேபோல் ஒரு செல்போனை இந்த மேஜை மீது வைத்தால், ப்ரீ பெய்ட் கார்டில் பணம் குறைந்துவிட்டதைப் புரிந்து கொண்டு தானாகவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்து கொடுத்துவிடும்.

ஹோட்டல்களில் சாப்பாட்டு மேஜைதான் மெனுகார்ட். எதிரில் ஆள் உட்கார்ந்ததுமே, பன்னீர் பட்டர் மசாலாவின் ஜொள்ளு சொட்டும். வண்ணப்படங்களைக் காட்டிச் சபலப்படுத்தும். நாம் ஒரு மெது வடையின் படத்தை மெதுவாக விரலால் தொட்டால் போதும், ஆர்டரைப் பதிவு செய்து கொண்டு விடும். சாப்பிட்ட பிறகு கிரெடிட் கார்டை எடுத்து மேஜை மீது வைத்தால், பில்லுக்குப் பணம் பிடுங்கிக் கொண்டு நன்றி தெரிவிக்கும்.

இப்போது என் கவலையெல்லாம், ஹெடெக் மேஜை மேல் சாம்பார் சிந்திவிடாமல் சாப்பிட வேண்டுமே என்பதுதான்.

Posted in Audio, Buildings, Chicago, Civil, computers, Computing, Conservation, Construction, Design, designers, Development, DSP, Electricity, energy, Environment, Find, Fuels, Hardware, Hitech, Innovations, Invent, Invention, M$, Microsoft, MP3, MS, music, Nano, Nanotech, Nanotechnology, Natural, Palm, Plastics, Pollution, Power, R&D, Recycle, Research, RnD, Science, Solar, Songs, structures, Surface, Tall, Tech, Technology, Touch, Touchscreen | Leave a Comment »

The dangers lurking behing ethanol & other alternate fuels – Environment & Deforestation Impact

Posted by Snapjudge மேல் நவம்பர் 24, 2007

தாவர எண்ணெயின் விபரீதம்

ந. ராமசுப்ரமணியன்

உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு வருகிறது.

தாவர எண்ணெயால் ஏற்படும் விபரீதங்களை அறியாததே இதற்குக் காரணம்.

வான்வெளியில் கரிமல வாயு உள்ளது. அதை உள்வாங்கி வளரும் தாவரங்கள் மூலம் “எத்தனால்’ மற்றும் “பயோ டீசல்’ போன்ற எரிபொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எரிபொருள்கள் மூலம் கார்பன் அளவு அதிகரிக்காது. மாறாக, நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உபயோகத்தால் கார்பன் வெளியீடு பல மடங்கு உயர்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகரித்து வரும் எரிபொருள் எண்ணெய் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெயே என உலக அளவில் பேசப்பட்டு, அதன் உபயோகமும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடியில் பல கோடி ஆண்டுகளாகப் புதைந்து கிடந்த தாவர வகைகளே கச்சா எண்ணெயாக மாறுகிறது.

ஆனால் தாவர எண்ணெய், தற்போது விளையும் தாவரங்கள், சூரியகாந்தி, பனை, சோயாபீன்ஸ், கரும்பு, தென்னை, சோளம், கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடனடியாகத் தயாரிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி பெற்ற பிரேசில் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முதுகெலும்பு கரும்பு பயிரிடுவதும், சர்க்கரை உற்பத்தியுமாகும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் 65 சதவீதம் இணைத்து, அந்நாட்டு வாகனங்கள் ஓட்டப்பட்டு வந்தன.

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் ஆண்டு உற்பத்தி 1790 கோடி லிட்டர் அளவு உள்ளது. பிரேசில் நாட்டில் 83 சதவீதத்திற்கும் மேற்பட்ட கார்கள் எத்தனாலுடன் சேர்க்கப்பட்ட பெட்ரோல் மூலமாக இயங்குகின்றன. மேலும் நாட்டின் மொத்த எரிஎண்ணெய் உபயோகத்தில் எத்தனால் பங்கு 55 சதவீதம் என உள்ளது.

1925-ம் ஆண்டு ஹென்ரி போர்ட் தனது “போர்ட்’ காரை அறிமுகப்படுத்தும்போதே எதில் ஆல்கஹால் எனும் தாவர எண்ணெயை உபயோகித்தார்.

தாவர எண்ணெயே எதிர்கால எரிபொருளாகப் போகிறது எனவும் கணித்தார்.

அதிக அளவில் அமெரிக்காவும் எதனால் தயாரிக்கும் நாடு. ஆனால் பிரேசிலைப்போல அல்லாமல் கோதுமை, அரிசி, ஓட்ஸ், சோளம், சோயா போன்ற பல தானியங்களிலிருந்து அமெரிக்கா தாவர எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க அயோவா மாநிலத்தில் எத்தனால் தயாரிப்பிற்காக 28 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்குகின்றன.

டெக்ஸôஸ் மற்றும் இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆலைகள் அதிக அளவு இயங்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது தயாராகும் எத்தனால் காற்றிலுள்ள நீரை உட்கொள்வதால் கார் எந்திரங்கள் விரைவில் துருப்பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது.

தாவர எண்ணெய் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பு தரும் “பசுமை எண்ணெய்’ என ஒருபுறம் புகழப்படுகிறது.

கார்பன்டை ஆக்ûஸடை இழுத்து, வளரும் தாவரம், அதிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது, கார்பன்டை ஆக்ûஸடை வெளியிட்டு விடுகிறது. இது எப்படிப் பசுமை எண்ணெய் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

டச்சு ஆலோசக நிறுவனமான டெல்ப்ட் ஹைட்ராலிக்ஸ், “ஒரு டன் பனைத் தாவர எண்ணெய் தயாரிக்கும்போது 33 டன் கார்பன் வெளியீடு ஏற்படுகிறது. இது பெட்ரோலியப் பொருள்கள் வெளியீட்டை விட பத்து மடங்கு அதிகம்.

இது எப்படி பசுமை எண்ணெய் ஆகும்?’ என்று வினா எழுப்பியுள்ளது.

ஐ.நா. ஆய்வு அறிக்கை ஒன்றில் தாவர எண்ணெய், பெட்ரோலியத்தை விட உலகிற்குக் கேடு அதிகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் “எத்தனால்’ தொழிலால் பல்வேறு பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. பசுமைப் புல்வெளிகள் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டு கரும்புத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன.

காடுகள் வெட்டப்படுவதால் கார்பன் வெளியீடு அதிகமாகிவிட்டது. இதனால் பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் அழிதல், மண் சக்தியிழத்தல் ஆகிய கேடுகள் நடைபெறுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும் தாவர எண்ணெயை வாங்குதல் தகாது என பல ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.

பிரேசிலில் கரும்பு பயிரிடுவதற்காக மிக அரிய மரங்களையும், சோயா பயிரிடுவதற்காக அமேசான் மழைக் காடுகளையும் அழிக்கத் தொடங்கியுள்ளது பாதகமான செயலாகும்.

மெக்சிக்கோவில் சோளம் போன்ற தானியங்களை தாவர எண்ணெய்க்குப் பெரிதும் பயன்படுத்துவதால், மற்ற உணவுப் பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.

இதனால் உணவுக்காகப் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

உலகத் தாவர எண்ணெய் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தாவர எண்ணெய் திட்டத்தைக் கைவிடும்படி சீனா, இந்தியா போன்ற நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளன.

சொகுசு கார்களில் செல்வந்தர்கள் பவனி வருவதற்காக உலக மக்களின் சோற்றில் மண்ணைப்போடும் பயங்கரத்திட்டம் தாவர எண்ணெய்த்திட்டம் என்ற எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

ஆக கச்சா எண்ணெய்க்கு மாற்று தாவர எண்ணெய் இல்லை என்பது தெளிவாகிறது.

—————————————————————————————————————————————–

பருவநிலை மாற்றம்: தேவை அவசரத் தீர்வு

என். ரமேஷ்

மனித சமுதாயத்தின் நடவடிக்கைகளால் ஏற்பட்டு வரும் புவி வெப்ப அதிகரிப்பால், இதுவரை காணாத அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

இதை அறிவியல் உலகம் ஏற்கெனவே உறுதி செய்து விட்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட, பருவநிலை மாறுபாடுகள் குறித்த பன்னாட்டு அரசுகள் கூட்டமைப்பின் (ஐபிசிசி) நான்காவது மதிப்பீட்டின் தொகுப்பு அறிக்கை இதை உறுதி செய்துள்ளது.

நடப்பாண்டில், வங்கதேசத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் பேரை பலி கொண்ட சூறாவளி, பிகாரில் 1.4 கோடி மக்களை வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றிய வெள்ளப் பெருக்கு, இத்தாலியில் எப்போதுமில்லாத வகையில் 300 பேருக்கு சிக்குன் குன்யா நோய்த் தொற்று எனப் பல்வேறு அறிகுறிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

மின் உற்பத்தி, போக்குவரத்து போன்றவற்றுக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற படிவ எரிபொருள்களை எரிப்பதே வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமைக் குடில் வாயுக்களின் அளவு அதிகரிக்கக் காரணம்.

2005 ஆம் ஆண்டு இந்த வாயுவின் அளவு 10 லட்சத்தில் 379 என்ற அளவில் இருந்தது. இது கடந்த 6.5 லட்சம் ஆண்டுகளில் நிலவியதில் உயர்ந்தபட்ச அளவாகும். (தொழில் புரட்சி ஏற்பட்ட 18ஆம் நூற்றாண்டில் – 280).

புவியின் தற்போதைய சராசரி வெப்பநிலை 14.5 டிகிரி சென்டிகிரேட். உலகம் தற்போதைய வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்தால் புவியின் சராசரி வெப்பநிலை 6.4 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு அதிகரிக்கும். கடல் மட்டம் 3.7 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும்.

புவி வெப்பம் 2 டிகிரி அளவு அதிகரித்தாலே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள் முற்றிலும் மூழ்கிவிடும்; கடற்பகுதியால் சூழ்ந்துள்ள வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இந்நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்.

இத்தகைய புவி வெப்ப அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 400 கோடி) ஆசியக் கண்டம்தான்.

கடல் நீரால் சூழ்தல், நன்னீர்ப் பற்றாக்குறை, மகசூல் குறைவால் உணவுப் பஞ்சம், நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தச் சூழ்நிலையில்தான் பசுமைக் குடில் வாயுக்களைக் குறைத்தல், ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருக்கும் – நிகழ உள்ள பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு தகவமைத்தல் போன்ற அம்சங்களை விவாதிக்க இந்தோனேசியாவின் பாலி நகரில் டிசம்பர் 3 முதல் 14 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத்துக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகளின் 13-வது மாநாடு நடைபெற உள்ளது.

36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயு அளவில் சராசரி 5.2 சதவீதத்தை, 2008-12 ஆம் ஆண்டுகளுக்குள் குறைக்க வகைசெய்யும் கியோட்டோ ஒப்பந்தம் 1997-ல் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்த காலத்துக்குப் பிந்தைய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க பூர்வாங்கப் பணிகளை இந்த மாநாடு மேற்கொள்ள உள்ளது.

தொழில்புரட்சிக்கு முன்பு நிலவியதைவிட 2 டிகிரி சென்டிகிரேட் வரை மட்டுமே புவி வெப்பம் அதிகரிக்கும் நிலையை உருவாக்க, உலகம் முழுவதும் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்பன்டை ஆக்சைடு அளவில் 50 சதவீதத்தை மட்டுமே 2050 ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும்.

இதற்கு, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களது வெளியீட்டில் 80 சதவீதத்தைக் குறைக்க வேண்டும்; இந்தியா போன்ற வளரும் நாடுகள் 20 சதவீதத்தைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன.

(20 சதவீதம் குறைக்க முடியாது; தனிநபர் சராசரி கணக்கில் கொள்ள வேண்டும் என திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்).

இந்த அளவுக்கு குறைத்தால் “வளர்ச்சி’ தடைபடும் என்ற வாதங்களுக்குப் பதில், இப்போது குறைக்காவிடில் வரும் காலங்களில் பருவநிலை மாறுபாட்டால் விளையும் பேரழிவுகளால் “வளர்ச்சியே’ கேள்விக்குறியாகும் என்பதுதான்.

இந்த இலக்குகளை எட்ட உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 1.6 சதவீதத்தைக் குறைத்தால் மட்டும் போதுமானது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை.

அதுமட்டுமன்றி, மாற்று எரிசக்தி, போக்குவரத்து தொழில்நுட்ப உருவாக்கத்தால் வேலைவாய்ப்பு நிலையைச் சரிக்கட்டிவிட வாய்ப்புள்ளது.

மேலும், வளரும் நாடுகளுக்கு கரியமில வாயுவை வெளியிடாத “தூய்மையான’ தொழில்நுட்பங்களை வளரும் நாடுகள் வழங்குவதற்கு அமைப்பை உருவாக்குவது; ஏற்கெனவே, அளவுக்கதிகமாக வெளியிடப்பட்ட வாயுக்களால் ஏற்பட உள்ள தாக்கங்களைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி டாலர் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்வது; வெளியிடப்படும் 20 சதவீத கரியமில வாயுவுக்கு வனங்களின் அழிவு ஒரு காரணம் என்பதால் காடுகளை அழிப்பதைத் தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குவது ஆகியவை தொடர்பான அம்சங்களையும் பாலி மாநாடு விவாதிக்க உள்ளது.

கியோட்டோ ஒப்பந்த நடைமுறைகள் 2012 – ல் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலையில், இடைவெளியின்றி புது ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.

இத்தகைய ஒப்பந்தம் 2009 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டால்தான், அதற்கு உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்கள் 2012 – க்குள் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த முடியும்.

கியோட்டா ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத அமெரிக்கா, கட்டாய இலக்குகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் இந்தியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.

மாநாட்டின் இறுதிப் நிகழ்ச்சியில் 130 – க்கும் மேற்பட்ட நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமான பாதக விளைவுகள் தொடங்கிவிட்ட நிலையில், பேரழிவுகளிலிருந்து பூவுலகைக் காக்க உள்ள கால அவகாசம் மிகக் குறைவே.

எனவே, பாலி மாநாட்டின் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைய வேண்டும்.

—————————————————————————————————————————————–

பசுமை இந்தியா சாத்தியமா?

அன்ஷு பரத்வாஜ்

பிலிப்பின்ஸ் நாட்டின் பாலித் தீவில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புவி வெப்ப மாற்றங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, நச்சு இல்லாத புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் இந்தியா எதிர்பார்க்கும் பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டின் மின் சக்தி தேவை 4,000 பில்லியன் கிலோவாட் என்று திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டில் 20,000 பில்லியன் கிலோவாட் மின் சக்தி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்துள்ளது,

இந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யப்போகிறோம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும்.

இந்த மின் உற்பத்தியின் தேவையில் ஒரு பகுதி கரியமில வாயு இல்லாத தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும்.

நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருள்களின் மூலம் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 97 சதவிகிதம் கிடைக்கிறது.

கரியமில வாயு இல்லாத பல மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் இதுவரை பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை. மரபு எரிசக்தித் துறையில் இருந்து மரபுசாரா எரிசக்தித் துறையில் உற்பத்தியை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

எதிர்காலத் தேவையில், 15 சதவிகித உற்பத்தியை கரியமிலம் இல்லாத தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்குவதை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம். இதற்கு என்னென்ன வாய்ப்புகள்தான் உள்ளன?

காற்றாலை மின் உற்பத்தி நல்லதொரு நம்பகமான தொழில்நுட்பம். இந்தியாவில் தற்போது காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் காற்றின் வேகம் குறைவுதான். இதன் காரணமாக காற்றாலை விசிறிகள் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை.

காற்றாலைகள் மூலம் 45,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்தாலும், இது தேவையில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பூர்த்தி செய்யும். இதனால், காற்றாலை மின் உற்பத்தி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.

அடுத்துள்ளது தாவரங்களைக் கொண்டு மின் உற்பத்தி. எண்ணெய் சத்து உள்ள தாவரங்கள் மூலம் பயோடீசலை உற்பத்தி செய்ய முடியும்.

சர்க்கரை ஆலைகளில் மொலாசிஸில் இருந்து எத்தனால் தயாரிக்க முடியும். கரும்புச்சக்கை, உமி போன்றவற்றில் இருந்து மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.

மின் உற்பத்திக்கு தாவரங்களையும் பயன்படுத்தலாம். இந்தியாவில் விளைச்சலுக்கு தகுதியான 30 மில்லியன் ஹெக்டேர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. இதில் 20 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் சத்துள்ள தாவரங்களை சாகுபடி செய்ய பயன்படுத்தினால் 25 மில்லியன் டன் தாவர எண்ணெய் உற்பத்தியாகும். இதன் மூலம் 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும்.

எத்தனால் மூலம் 100 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், இந்தியாவின் மின் உற்பத்தித் தேவையில் 2 சதவிகிதத்தையே பூர்த்தி செய்ய முடியும்.

இந்தியாவில் புனல் மின் நிலையங்கள் மூலம் 84,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனால், தற்போது 34,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. புனல் மின் உற்பத்தி மூலம் குறிப்பிட்ட இலக்கை எட்டினாலும், அதுவும் மொத்த தேவையில் 2 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைப்பது நிலக்கரி. அனல் மின் நிலையங்கள் மூலம் 51 சதவிகித மின் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில், இந்தியாவின் மின் உற்பத்தியில் நிலக்கரியே முக்கிய பங்கு வகிக்கப் போகிறது.

இருந்தாலும், நிலக்கரி மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்போது. ஒரு கிலோ கரியமில வாயுவும் வெளியேற்றப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொண்டேயாக வேண்டும். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கான தொழில்நுட்பம் பல மடங்கு செலவை இழுத்துவிடும்.

அணு மின் நிலையங்கள் மூலம் தற்போது 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கும் குறைவுதான்.

உள்நாட்டில் மிகக் குறைந்த அளவே யுரேனியம் கிடைக்கிறது. இதனால் புளுடோனியம், தோரியம் தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிடலாம்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இலகுரக நீர் மின் உற்பத்தி சாதனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது. இதைப் பயன்படுத்தி 24,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும்.

இந்தியாவின் பெரும்பகுதியில் சூரிய சக்தி நன்றாக கிடைக்கிறது. 20 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் சூரிய சக்தி மூலம் 24,000 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி கிடைக்கும். இது நச்சுத்தன்மை கொண்ட கரியமில வாயுவை வெளியிடாது.

சூரிய சக்தி அனல் மின் நிலையங்கள் மற்றொரு வாய்ப்பாகவே அமைகிறது. காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் 20 கி.மீ. சுற்றளவு கொண்ட நிலத்தில் சூரிய சக்தி மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உறபத்தி செய்யமுடியும். இது எட்டு அனல் மின் நிலையங்களின் உற்பத்திக்குச் சமமாகும்.

கரியமில வாயுவை வெளிப்படுத்தாத மின் உற்பத்திக்கு முயற்சிக்க வேண்டும் என்றால், நம்மிடம் உள்ள எல்லா மூலப் பொருள்களையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழில்: டி.எஸ். ஸ்ரீநிவாசன்

Posted in Agriculture, Alternate, Amazon, America, Analysis, Auto, Automotive, Brazil, Cane, Carbon, Cars, CO, CO2, Commerce, Consumption, Corn, Deforestation, Dhals, Diesel, Earth, Eco, Economy, emissions, energy, Environment, ethanol, Farming, Food, Foodgrains, Ford, Forests, Fuel, Gas, Grains, Green, Impact, Industry, Iowa, Land, LNG, Natural, Nature, Oats, oil, Palm, Petrol, Plants, Pollution, Prices, Pulses, Rainforest, Research, rice, Sector, Solar, Sources, Soya, Sugar, Sugarcane, Sunflower, Trees, US, USA, Vegetables, Vehicles, Wheat, Wind | Leave a Comment »

‘Annual income generation from Palm trees is Rs. 5000 Crores’ – Kumari Ananthan

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

தமிழகத்தில் பனை மரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வருமானம்: குமரி அனந்தன் தகவல்

கன்னியாகுமரி, மார்ச் 8: தமிழகத்தில் பனை மரங்கள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 5,000 கோடி வருமானம் ஈட்டும் வாய்ப்புள்ளதாக மாநில பனை வாரிய நலத் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தற்போது 4.25 கோடி பனை மரங்கள் உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3.50 கோடி பனை மரங்கள் பயன் தராமல் உள்ளன.

இப் பனை மரங்களில் 1.25 கோடி பனை மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உள்ளன. இருப்பினும், 2.50 கோடி பனை மரங்களை உடனே பயன்படுத்தலாம்.

தற்போது தமிழகத்தில் சுமார் 70 லட்சம் பனை மரங்களில் மட்டுமே பதநீர் இறக்கப்படுகிறது.

இந்நிலையில், 4 லட்சம் பனை ஏறும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தி ரூ.80 கோடியில் அவர்களுக்கு கருவிகள் வழங்கி பயிற்சி கொடுக்கும்பட்சத்தில், ஆண்டுக்கு ஒவ்வொரு பனை மரமும் ரூ. 2,500 வீதம் பலன் தரும். இதன்படி பார்த்தால் ஆண்டுக்குகு ரூ. 5,000 கோடி வருவாய் கிடைக்கும்.

இத் திட்டத்தை விரிவாக ஆராய்ந்து, தமிழக முதல்வரிடம் பனை வாரியம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகளும் இதுபற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

நானும் அந்த அதிகாரிகளிடம் எனது கருத்துகளைத் தெரிவித்தேன். இத் திட்டம் செயல் வடிவம் பெற்றதும், தொழிலாளர்கள் தினமும் இறக்கும் பதநீரை அரசே தினமும் கொள்முதல் செய்ய வேண்டும்.

————————————————————————————–

அழிந்துகொண்டிருக்கும் ஆதித் தொழில்

ச.ம. ஸ்டாலின்

இந்தத் தலைமுறை கொஞ்சம் விசித்திரமானது. தனது பாரம்பரிய சொத்துகள் அனைத்தையும் தன் கண் முன்னாலேயே இழந்துகொண்டிருக்கும் ஒரு தலைமுறை இது. இழந்துகொண்டிருக்கும் பட்டியலில் நமது ஆதித் தொழில்களில் ஒன்றான பனைத் தொழிலையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம்.

விவசாயத்துடன் இணைந்த தொழில், பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்கச் சூழல், ஏற்றுமதி எனப் பல்வேறு வாய்ப்புகளுடையது பனைத் தொழில். நம்முடைய பாரம்பரியத் தொழில்களுல் ஒன்றான இத்தொழிலை மேற்கொள்ள நமக்குள்ள ஆதாரங்கள் உலகில் வேறெங்கும் இல்லை.

உலகளவில் பனை மரங்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. அதிலும் நம் நாட்டிலுள்ள 40% பனை மரங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. தவிர, பருவநிலை சார்ந்து ஆண்டு முழுவதும் பனைத் தொழில் மேற்கொள்வதற்கான சாதக நிலை இங்கு மட்டுமே உள்ளது. முறையாகப் பயன்படுத்தப்பட்டால் தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 5 சதவிகிதத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். ஆண்டுக்கு ரூ. 5,000 கோடி ஈட்டும் தொழிலாக இது மாறும். ஆனாலும், கவனிப்பாரற்று அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இத்தொழில்.

பனைத் தொழிலுக்கென 1968-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம். கதர் வாரியத்தின் கீழ் செயல்பட்ட இந்த அமைப்புக்கு மும்பை கதர் ஆணைக் குழு மூலதனக் கடன் வழங்கி வந்தது.

இதுதவிர, மாவட்ட அளவில் 8 சம்மேளனங்கள், 1,511 கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3.5 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பனைப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்ட இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் பெற்றனர்.

நல்ல லாபத்தில் இயங்கி வந்ததால் இணையத்துக்கென பல்வேறு இடங்களில் பனந்தோப்புகள், கட்டடங்கள் என சொத்துகள் வாங்கப்பட்டன. போதிய அக்கறை காட்டியிருந்தால் மாநிலத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருள்களுக்கென ஒரு நிரந்தரச் சந்தையாக இந்த இணையத்தை மாற்றியிருக்க முடியும்.

ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து “கண்டுகொள்ளப்படாமல்’ போனதாலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கே உரிய சீர்கேடுகளாலும் இணையம் சீரழிந்தது.

இந்நிலையில், 1996-ல் மூலதனக் கடன் வழங்குவதை நிறுத்தியது மும்பை கதர் ஆணைக் குழு. பல இடங்களில் விற்பனையகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. இணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் ஊதிய நிலுவை. அந்தத் தொகையே ரூ. 5 கோடியைத் தாண்டுகிறது. இன்று பெயரளவிலான அமைப்பாக மாறிவிட்டது இணையம்.

பனை என்றாலே கள்ளுடன் மட்டுமே தொடர்புபடுத்துவதும் கள் விற்பனை சரியா? தவறா? என்ற விவாதத்தின் பெயரில் இத்தொழிலைப் புறக்கணிப்பதுமே இங்கு அரசியல் வாடிக்கையாகிவிட்டது. கள் அல்ல; பதநீரை வைத்தே இத்தொழிலில் பல வாய்ப்புகளையும் சந்தையில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். தவிர, மதிப்புக் கூட்டப்பட்ட பனைப் பொருள்களுக்கென உலகச் சந்தையில் நல்ல இடம் இருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பனைப் பொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகச் சந்தைப்படுத்தினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலையளிக்க முடியும். அதற்கு பனைத் தொழில் தொழில்வழிமயமாக்கப்பட வேண்டும்.

இணையத்தை சுய அதிகாரமிக்க பொது நிறுவனமாக மாற்ற வேண்டும். பால் கொள்முதல் – விநியோக முறை போன்று பனைப் பொருள்களை அந்த நிறுவனம் மூலம் நேரடியாகக் கொள்முதல் – விநியோகம் செய்ய வேண்டும். பாளைச் சீவுதலில் புதிய உத்தி, பதநீர் சளிப்படைதல், பனை வெல்லம் கசிவடைதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது என நிறைய மாற்று முறைகளைக் கண்டறிய வேண்டும். பனைத் தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

ஒருபுறம் பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்கிறது; மறுபுறம் பனை பயிரிடுவது அருகி வருகிறது. அபாயமிக்க தொழில்களில் ஒன்று பனையேறுதல். இளைய தலைமுறையினர் எவரும் பனையேறுவதில் ஆர்வம் காட்டவில்லை; அதில் அர்த்தமுமில்லை. வாழ்ந்து கொண்டிருப்பது பனையேறிகளின் கடைசித் தலைமுறை. அவர்கள் காலமும் போய்விட்டால் அடுத்த தலைமுறைக்கு எந்தப் பல்கலைக்கழகம் மூலமாக அரசு பனையேறக் கற்றுக் கொடுக்கப் போகிறது?

இதுவரை பனைத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்த பிரச்னையாகவும் அரசியல் பார்வையுடனும் மட்டுமே அரசு அணுகி வந்திருக்கிறது. கண்துடைப்பு நடவடிக்கைகள் மாற்றங்களுக்கு வழிவகுப்பதில்லை. எத்தனையோ திட்டங்களின் பெயரால் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கிறது அரசு. அரசு நினைத்தால் பனைத்தொழில் மூலமாக சில கோடிகளில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும்; மாற்றங்களை உருவாக்க முடியும். மாற்றம் நிகழுமா?

Posted in Agriculture, Annual, Budget, chunnam, Commerce, Congress, coryphaumbraculifera, Crores, Economy, Farming, fermentation, Finance, Growth, Incentives, Industry, Kumari, Kumari Anandhan, Kumari Ananthan, Palm, Panai, Pathaneer, phoenix farinifera, Sector, Statistics, talipot, Toddy | 1 Comment »