நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்
வி. கிருஷ்ணமூர்த்தி
தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.
நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.
மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.
இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.
1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.
2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?
எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.
விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.
————————————————————————————–
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?
சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.
ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.
ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.
ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.
சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.
இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.
சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:
ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.
* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.
* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.
* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.
* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.
* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.