நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்?
தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு பழ. நெடுமாறன் அளித்த பேட்டியின் சென்ற வாரத் தொடர்ச்சி…
எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைந்து விட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?
இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வதுதான் இந்திய தேசியமா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை, இந்திய அரசாவது தலையிட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி வைப்பதுதானே நியாயம்? இந்திய தேசியம் பேசும் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிட்டார்களா, இல்லை நான் குறுகிப் போய்விட்டேனா என்று நீங்களே சொல்லுங்கள். காவிரியில் தண்ணீரே வர வேண்டாம். ஆனால், கர்நாடக அரசு செய்வது தவறு, நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும் என்று இந்திய தேசியம் பேசும் அகில இந்தியத் தலைவர் யாராவது ஒருவர் கண்டித்திருந்தாலோ, குரல் கொடுத்திருந்தாலோ, சற்று ஆறுதலாகவாவது இருந்திருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்போது, இந்திய தேசியம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.
மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறும் இன்றைய நிலையில், உங்கள் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா?
மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும்தான் மாநிலக் கட்சிகள் தோன்றின. ஆனால், இந்த மாநிலக் கட்சிகள் ஏதாவது ஓர் அகில இந்தியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த நோக்கத்துக்காகக் கட்சி தொடங்கினார்களோ அந்தக் கோரிக்கைகள் எதையும் வலியுறுத்துவதும் இல்லை. மாநில சுயாட்சிக்கு சட்டப் பேரவையிலேயே கோரிக்கை போட்ட அதே கட்சி, மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கியபின், அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏதாவது நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் கிடையாது.
ஆட்சியிலேயே அங்கம் வகிக்கும்போது, மாநில சுயாட்சி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்?
அப்படிச் சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி இருக்கக்கூடாது என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அறிவித்தார்கள். இப்போது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மத்திய அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். அத்தனை நெடுஞ்சாலை மைல் கற்களிலும் இந்தி வந்திருக்கிறதே, அது அவருக்குத் தெரியாமலா நடந்தது? பதவிக்குப் போனபிறகு இந்த மாநிலக் கட்சியினர் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். நீர்த்துப்போய் விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த மாநிலக் கட்சிகள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இவர்களது ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளைக் கேட்டு வாங்குகிறார்களே தவிர மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். தேசியக் கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பைத் தேசியக் கட்சிகள் ஆதரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் வரவில்லை? இவர்களுக்கு மாநிலங்களில் ஆட்சி வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்ள தில்லியில் செல்வாக்கு வேண்டும், அவ்வளவுதான்.
வீரப்பன் விஷயத்தில் நீங்கள் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததா?
நடிகர் ராஜ்குமார் பணயக் கைதியாகி மூன்று மாதத்துக்கு மேலான பிறகு ஒருநாள் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டனுப்பி, என்னைத் தூதுவராக அனுப்பும்படி வீரப்பனிடமிருந்து செய்தி வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் போவது என்று மறுத்தேன். கர்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் வற்புறுத்தலும், அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் தொடர்ந்த வேண்டுகோளும்தான் எனது முடிவை மாற்றிக் கொள்ள செய்தன. ஒரு மனிதநேய முயற்சியாக, ராஜ்குமாரைக் காப்பாற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையில் இனமோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாகத்தான் எனது பயணம் அமைந்தது.
ராஜ்குமார் விடுதலையில் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை நடந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?
பண பேரம் நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் அந்த விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டேன்.
உங்களது கணிப்பில் வீரப்பன் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தான்?
எனக்கு அவன் ஒரு கொடியவனாகத் தெரியவில்லை. அவன் நாகரிகமற்றவனாக இருந்தாலும்கூட, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான் என்பதுதான் நான் பார்த்த உண்மை. நாங்கள் காட்டுக்குள்ளே போனோமே, எங்களையும் பிடித்து வைத்திருந்தால் யார் என்ன செய்துவிட முடியும்? இந்த அரசாங்கம் எங்களைக் காப்பாற்றி இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். எங்களது பேச்சுவார்த்தையின்போது அவன் சில நிபந்தனைகளை முன்வைத்தான். அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களில் வீரப்பனின் குடும்பத்தினர் எவருடைய பெயரும் இல்லை. “அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டால் நான் சொன்னது அனைத்தும் எனது குடும்பத்தினருக்காகத்தான் என்கிற கெட்ட பெயர் வந்துவிடும். அதனால்தான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை’ என்று வீரப்பன் விளக்கியபோதுதான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
நீங்கள் அவனைச் சரணடையச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையா?
எங்களது பேச்சுவார்த்தைகள் முடிந்து ராஜ்குமாரை விடுதலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு, வீரப்பனைத் தனியாக அழைத்துப் பேசினேன். சரணடைந்து விடுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஒரு மாதம் கழித்து வீரப்பனிடமிருந்து சரணடைய விரும்புவதாகத் தகவல் வந்தது. அதை இரண்டு முதல்வர்களுக்கும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. அதற்குக் காரணம், வீரப்பனை உயிரோடு பிடிப்பதில் நமது அதிகாரிகளுக்குச் சம்மதம் கிடையாது என்று கேள்விப்பட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று தமிழக முதல்வரிடமிருந்து, வீரப்பனைச் சரணடையச் சொல்லலாம் என்று தகவல் வந்தது. அப்போது தேர்தல் வர இருந்த நேரம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வீரப்பனின் கதி என்னவாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் செய்தது. வீரப்பனைச் சரணடையச் செய்து, தேர்தலில் அதைப் பிரச்சாரமாக்க நினைத்தார் கலைஞர் கருணாநிதி. அதற்கு நான் உடன்பட்டிருந்தால், வீரப்பன் என் மீது வைத்திருந்த மரியாதையை நான் இழந்திருப்பேன். அதனால்தான் அதற்கு நான் உடன்படவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்துகொண்டிருந்தார். இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?
1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு, அங்கு நடக்கும் சிறிய பிரச்னைதானே என்று கருதாமல் இரண்டு சீனியர்களை அனுப்பி வைத்து, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார். அதாவது, “இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை’ என்பதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்த்தனா தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது ராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்னை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.
தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரித்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.
ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?
ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்னைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி. பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்னையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்னையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்னைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?
இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்று பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.
இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?
நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனே அமெரிக்காவுடன் ராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை ராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் ஓட்டுகிறார்கள். நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, தில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.
இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?
நேரடி ஆதரவு தர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நார்வே இந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்னை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.
அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்னையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?
தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? “நமது வீரர்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஜெயவர்த்தனே சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்குக் காரணம் “ரா’ உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விரும்பினார். அது நடந்தது.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் ராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்னையோ, ஈழத் தமிழர் பிரச்னையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் நிலையில், நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.
இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப “மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு’ என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்?
தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?
அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒருகாலத்தில் ஒன்றாகத்தான் வங்காளம் இருந்தது. இரண்டு பகுதிகளுமே
வங்காள மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடும், யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.
நிறைவாக, ஒரு கேள்வி. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைமை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியும் அதிகாரமும் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சரியான மாற்றுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
படம் : ஏ.எஸ்.கணேஷ்
Law and Order – State of Justice system in India (Opinions & Judgments)
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007
எண்ணங்கள்: நீதித்துறையின் அதிக�
உயரத்தை உணர்ந்து செயல்படுவதே உசிதம்!
உ .ரா. வரதராசன்
ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமராக இருந்த தேவ கௌடா பதவி விலக நேரிட்டபோது, அடுத்த பிரதமர் யாரென்ற கேள்வி எழுந்தது; திமுக தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள், “நீங்கள் ஏன் பிரதமராக முயற்சி செய்யக்கூடாது’ என்று கேட்டனர். கருணாநிதியோ “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று அர்த்தமுள்ள பதிலைச் சொன்னார்.
உயர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியில் அமர்பவர்களும், தங்களின் – தங்கள் பதவியின் உயரத்தை உணர்ந்து செயல்படுவது என்பது மிகமிக அவசியம். உச்ச நீதிமன்றத்தின் அண்மைக்காலச் செயல்பாடுகள் இதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.
பொதுப் பதவி எதுவாக இருப்பினும் அது மக்களின் நம்பிக்கைக்குரியதாக அமைய வேண்டும்; நீதித்துறைப் பதவிகளும் இந்தப் பொறுப்பாண்மைக்கு உட்பட்டவையே. இந்திய அரசியல் சட்டத்தின்படி, அரசு நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை இவை மூன்றுமே அவற்றுக்கான பொறுப்புகளைச் சுதந்திரமாக வகிக்க உரிமையுள்ளவை. ஆனால் இவை எல்லாமே அரசியல் சட்டத்துக்கு உட்பட்டவை. அந்த வகையில் நீதித்துறையும் அரசியல் சட்டத்துக்கு மேலான – அல்லது உயர்வான – ஒன்றல்ல.
ஆனால், வழக்கு விசாரணையின்போது, அண்மைக்காலங்களில் சில நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் இந்த வரம்பை மீறியதாகவே உணரப்படுவது கவலைக்குரிய ஒன்று.
தலைநகர் தில்லியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள் முதலானோர் குடியிருப்பதற்காக ஒதுக்கப்படும் வீடுகள் பலவற்றில், அவற்றைப் பெற்று அனுபவித்த நபர்கள் பதவிக்காலம் முடிந்த பின்னரும், காலவரையறையற்ற முறையில் தொடர்ந்து வசித்து வருவது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஒருவர் “அவருக்கு தில்லியில் என்ன வேலை? அவரைத் தூக்கி எறியுங்கள்’ என்று கோபத்தைக் கக்கினார். அந்த “அவர்’ ஒரு முன்னாள் மத்திய அமைச்சர்; அந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆளுநர்! நீதிபதி ஒருவர், அவரைப் போன்ற உயர் பதவியில் இருந்த ஒருவரை, தூக்கியெறிய உத்தரவிடும் அளவிற்கு அலட்சியமாகக் கருதியது வரம்புக்கு உட்பட்டதுதானா?
இன்னொரு வழக்கு: மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவக் கழகம் மூன்றாண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடத்தவில்லை. பட்டம் பெற முடியாமல் அவதியுற்ற மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க ஒரு காலக்கெடு விதித்திருந்தால் போதுமானது. “24 மணி நேரத்துக்குள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களில் கையெழுத்திடுக’ என்று மத்திய அமைச்சருக்கு உத்தரவிடும் அளவுக்கு நீதிபதி சென்றது சரியான நடைமுறையா?’
நிர்வாகத்தின் தவறுகளை, சட்டமன்ற – நாடாளுமன்றங்களின் அத்துமீறல்களை தயவுதாட்சயண்மின்றிக் கடுமையாகச் சாடும் நீதிமன்றங்கள், நீதித்துறையின் உயர் பதவி வகிப்பவர்களைப் பற்றிய பிரச்னைகள் எழும்போது அதே அளவுகோலைக் கடைப்பிடிப்பதில்லையே!
குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய – மாநில அமைச்சர்கள் போன்ற உயர் பதவிகளில் இருப்போருக்கு எதிராக “பிடி வாரண்ட்’ பிறப்பித்த நகைப்புக்கிடமான செயல்பாட்டில் நீதித்துறையின் ஒரு பிரிவு இறங்கியது, சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்புச் செய்தியானது. அதைவிட அந்தப் “பிடி வாரண்டுகள்’ விலை கொடுத்து வாங்கப்பட்டவை என்றும் தகவல் வெளியானதுதான் அதிர்ச்சியானது!
நீதித்துறையின் ஒரு பிரிவு இதுபோன்ற பேரத்தில் ஈடுபட்டதைப் படம்பிடித்து ஊடகம் ஒன்று வெளியிட்ட நிகழ்வில், தவறு பேரம் பேசியதில் அல்ல; ஊடகம் படம் பிடித்ததுதான் என்று நீதிமன்றம் சினங்கொண்டதையும் நாம் பார்த்தோம்!
நீதிபதி ஒருவர் நேர்மையற்ற முறையில் செயல்பட்டதாக, மும்பை நாளேடு ஒன்று குற்றஞ்சாட்டியதோடு, அதையொட்டிய பின்னணித் தகவல்களையும் சித்திரித்து வெளியிட்டது. அதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டப்பட்டு அந்த நாளேட்டின் பொறுப்பாளர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது மற்றொரு நிகழ்வு.
நீதிமன்றத்துக்கு வரும் வழியில் ஊர்வலம் ஒன்று குறுக்கிட்டதால் சில மணிநேரம் வழியில் தாமதிக்க நேரிட்ட நீதிபதி ஒருவர், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் எவருமில்லாமலேயே தானாகவே வழக்கு ஒன்றை சிருஷ்டித்து, “வார (வேலை) நாள்கள் எதிலும் இனி ஊர்வலம் என்பதையே அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவு போட்ட வானளாவிய அதிரடி அதிகாரத்தையும் நாடு கண்டது.
அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த இரண்டு வழக்குகளில் ஒன்று, 40 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டது; இன்னொன்று 50 ஆண்டுகள் நீடித்தது. இவற்றில் தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள், “இத்தகைய காலதாமதங்கள் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருக்க வேண்டிய நம்பிக்கையையே தகர்த்துவிடும்’ என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டனர்.
வேறொரு நிகழ்வில் ஒரு நீதியரசர் வேதனையோடு சுட்டிக்காட்டிய விஷயம் – “நீதிமன்றங்கள் வழங்குகிற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதில்லை; அதிலும் மீண்டும் அவமதிப்பு புகார் மனுவின் மீதோ அல்லது வேறுவகையிலோ நீதிமன்றம் சாட்டையை எடுக்க வேண்டியுள்ளது” என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாலும் தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என்ற கசப்பான உண்மையைச் சுட்டுவனவே. இந்த முயற்சிகள் ஜனநாயகப்பூர்வமாக அமைய வேண்டும்; வன்முறை கலவாததாக இருக்க வேண்டும் என்பதில் நீதித்துறைக்கு மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவருக்குமே அக்கறை உண்டு. அந்த ஜனநாயக உரிமைகளுக்கு நீதிமன்றங்களின் சொல்லும் செயலுமே குறுக்கே நிற்பதாக மக்கள் கருத நேரிட்டால், அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் நாளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த “பந்த்’, உயர் நீதிமன்றம் அதைச் சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தடை விதிக்க மறுத்த பின்னணி, ஞாயிற்றுக்கிழமை அவசர அவசரமாக விசேஷ அமர்வு நடத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடைஉத்தரவு, அதை, “பந்த்’துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சிகள் உண்ணாவிரதமாக மாற்றி அறிவித்தது, நடைமுறையில் கிட்டத்தட்ட முழு அடைப்பாக மாறிக் காட்சியளித்த தமிழ்நாடு, அதையொட்டி எதிரும் புதிருமாக எழுந்த பலமான குற்றச்சாட்டுகள் – இவை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளால் மிகுந்த பொறுமையோடும் நிதானத்தோடும் கருத்தூன்றிப் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஆனால் வழக்கில் ஒருதரப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர் ஒருவர் கூறியதையே வேதவாக்காக ஏற்று, “அரசியல் சட்டம் நிலை குலைவு’, “மாநில அரசைக் கலைக்க உத்தரவிடுவோம்’, “நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் மனு கொடுக்கவும்’, “முதலமைச்சரையும், தலைமைச்செயலாளரையும் கொண்டு வந்து நிறுத்துவோம்’ – என்றெல்லாம் நீதிபதி ஒருவர் மனம்போன போக்கில் பொறிந்து தள்ளியது எந்த வகையில் நியாயம்?
நீதித்துறையின் சின்னமே, துலாக்கோலைச் சமன்செய்து தூக்கிப்பிடித்து, கண்கள் மறைக்கப்பட்டு நிற்கும் நீதிதேவதைதான். ஒருபால் கோடாமைக்கும் சார்புநிலைக்கு அப்பால் நின்று செயல்படுவதற்குமான அடையாளங்கள் அவை! நீதித்துறை அந்த அடையாளங்களை இழந்துவிடக் கூடாது.
உச்சத்தில் அமர்ந்தாலும் தன் உயரத்தை உணர்ந்து செயல்படுவதே நீதித்துறைக்கும் உசிதமாகும்.
(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ.)
——————————————————————————————————-
மாலை நீதிமன்றங்கள் தீர்வாகுமா?
வெ. ஜீவகுமார்
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்கள், தொலைக்காட்சியிலும் நாளேடுகளிலும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 30 லட்சம். கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இரண்டரை கோடிக்கும் அதிகம். உச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிலுவையில் இருந்த வழக்குகளின் எண்ணிக்கை 39,780. கடந்த மார்ச் 31 நிலவரப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தவை 4,06,958. சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகளும் 26,800 சிவில் வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
வழக்குகளை விரைந்து முடிக்க ஒரு தீர்வாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலைநேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்றநாடுகளில் உள்ள மக்கள்தொகை- நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாசாரத்திற்கும் நமது நாட்டில் உள்ள விகிதாசாரத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. கனடா நாட்டில் 10 லட்சம் மக்களுக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு நீதிபதிகளின் எண்ணிக்கை 104. ஆனால் 105 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 10 லட்சம் மக்களுக்கு 12 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் உள்ளது.
அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கில், 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்று எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விகிதாசாரம் போதுமானதா என்பது ஒருபுறமிருக்க இதுவும்கூட இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை.
நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டிலும் குறை உள்ளது. கொரியா நீதித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. சிங்கப்பூரில் நிதி ஒதுக்கீடு 1.2 சதவிகிதம். பிரிட்டனில் நிதி ஒதுக்கீடு 4.3 சதவிகிதம். இந்தியாவிலோ நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு 0.2 சதவிகிதம் மட்டுமே. உலக அரங்கில் ஆயுதங்கள் வாங்க மிகுதியாக ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மருத்துவத்திற்கோ கல்விக்கோ, நல்ல குடிநீருக்கோ, மக்களின் ரத்தச்சோகையைப் போக்கவோ, சாலைகளுக்கோ, விவசாயத்திற்கோ இந்திய அரசு எப்போதும் போதிய நிதிஒதுக்கீடு செய்ததில்லை. புறக்கணிக்கப்படும் இந்த பட்டியலில்தான் நீதித்துறையும் இடம்பெறுகிறது.
20 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்களை வாங்கி அவை காலாவதியான நிலையில் தார் பாலைவனத்தில் போட்டுபுதைக்கும் இந்தியா, தனது மக்களுக்கு காலாகாலத்தில் நீதி வழங்குவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குட்டி நாடுகள் தமது பராக்கிரமம், படை பலம் பற்றிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் தராமல், நீதித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உலகிலுள்ள 207 நாடுகளில் சுமார் 60 நாடுகளில் எந்தப் படையும் இல்லை என்று கூறுகின்றனர். எனினும் அங்கெல்லாம் நீதித்துறைக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு உள்ளது.
இச் சூழ்நிலையில், கடந்த ஜூலை முதல் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்கும் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டன. அக்டோபரில் மேலும் பல மாவட்டங்களில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன.
உரியகாலத்தில் முறையாக நீதி வழங்கவேண்டுமென்றால், 105 கோடி மக்களுக்கு 12 ஆயிரம் நீதிபதிகள் என்ற இன்றைய எண்ணிக்கை போதவேபோதாது. தீர்வுகளில் ஒன்றாக இப்போது கிராம நீதிமன்றங்கள் என்ற கோட்பாடும் முன் வைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்ததாகத் தொல்லியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேல்முறையீட்டு வசதிகளும் செய்யப்பட்டிருந்தனவாம்.
14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு அன்னியர் ஆதிக்கத்தின் காரணமாக, கிராம நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பாதிப்படைந்தன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றால் அறிவியல் பூர்வமான தீர்வுகளைத்தான் உருவாக்க வேண்டும். நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறை ஊழியர்களுக்கும் மேலும் சுமையையும் காலவிரயத்தையும் ஏற்படுத்தக்கூடிய மாலைநேர நீதிமன்றங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது.
மக்கள்தொகை விகிதாசாரத்திற்கேற்ப நீதிமன்றங்கள் கூடுதலாக உருவாக்கப்பட வேண்டும். நீதித்துறையில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் பூர்த்தி செய்யப்படவேண்டும். தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும். கட்டமைப்பு வசதிகள் உள்பட நீதித்துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். நிதி ஒதுக்கீடும் போதிய அளவில் இருக்க வேண்டும். வழக்குகள் தேக்கம் நீங்கும்; நீதியும் துரிதமாகக் கிட்டும்!
Posted in Bandh, Bias, Bipartisan, Cabinet, comments, Constituition, Courts, Feedbacks, Govt, HC, Judge, Judgement, Judgements, Judgments, Judiciary, Jury, Justice, Law, Legislative, Media, Minister, MLA, MP, Opinion, Order, Party, Politics, President, SC | Leave a Comment »