Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Olympics’ Category

Champion India in Asia Cup Hockey – Indian coaches & Sports Minister Mani Shankar Aiyar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 13, 2007

ஆசியக்கோப்பை: மணிசங்கர் அய்யர் மெüனம் காப்பது ஏன்?

வி. துரைப்பாண்டி

சர்வதேச அளவிலான போட்டியில் இதற்கு மேல் ஒரு வெற்றி வேண்டுமா என வியக்கும் அளவுக்கு எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஏழாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி, திறமையை வெளிப்படுத்தியது.

தொடர்ச்சியாக 7 நாடுகளை வீழ்த்தியது! இலங்கைக்கு எதிராக 20 கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த சாதனையை சமன் செய்தது உள்பட 57 கோல்கள் இந்திய அணியின் கணக்கில். இவ்வளவுக்கும் பெனால்டி கார்னரில் இந்தியா “ஹீரோ’ அல்ல, ஏறக்குறைய ஜீரோதான். தட களத்தில்தான் வினாடிக்கு வினாடி எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், குழு விளையாட்டுப் போட்டியில் அதுமாதிரியான தருணத்தை காண்பது அரிது. ஆனால் இளமையும் முதுமையும் கலந்த இந்திய அணியினர், ஹாக்கியை தட களமாக மாற்றி, ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விருந்தளித்தனர். அனுபவ வீரர் பிரப்ஜோத் சிங், வேகத்தில் தன்ராஜ் பிள்ளையாகவே காணப்பட்டார். அவரது “ரிவர்ஸ் பிளிக்’ கோல் முயற்சி, நிச்சயம் ரசிகர்களுக்கு கூடுதல் விருந்து.

நீண்ட போட்டிகளுக்குப் பிறகு ஓர் அணியாக விளையாடியது இந்தியா. உச்சக்கட்டமாக, ஆசியாவில் புலியாகத் திகழும் கொரியாவை 7-க்கு 2 என்ற கோல் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தில் தோற்கடித்து உலக ஹாக்கி வட்டாரத்தை தலைதூக்கிப் பார்க்கச் செய்துள்ளது பிரப்ஜோத் திர்கே தலைமையிலான இந்திய அணி. இல்லை, பயிற்சியாளர் ஜோஹிம் கார்வலோ பார்வையிலான இந்திய அணி என்று சொல்வதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

ஹாக்கியை “தேசிய விளையாட்டு’ எனக் கூறிவருகிறோம். ஆனால் அதற்கு சட்டபூர்வமாக எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால் 1960-80-களில் இந்தியா குவித்த வெற்றிகளால், அப்போதிருந்த 80 கோடி மக்கள் இவ் விளையாட்டை ஜனரஞ்சகமான ஆட்டமாக ஏற்று, போற்றத் தொடங்கினர். அதனால், மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் ஹாக்கி ஓங்கி ஒலித்தது, விளையாடப்பட்டது, மக்களும் ஏற்றுக்கொண்டனர், பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு காலப்போக்கில் அந்த அணி தீனி போடமுடியாதது வருத்தமான விஷயம்தான்.

கடைசியாக தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5-ம் இடம். அதற்கு முன்னர் வரை பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு பதக்கத்தைப் பெற்றுவந்த இந்திய அணியினர், நம்மிடம் பயின்ற சீனாவிடம் பெற்ற தோல்வி, அப் போட்டியில் அதளபாதாளத்துக்குத் தள்ளியது.

உதை மேல் உதை. ச்சீ… இதைப் போய் தேசிய விளையாட்டு என்று எப்படிச் சொன்னார்கள் என எள்ளிநகையாடாதவர்கள் குறைவு. 100 கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட இந்தியாவில், ஐரோப்பிய நாடுகளை, ஏன் ஆசிய நாடுகளைக்கூட தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான, வீரமான 11 வீரர்கள் கிடைக்கவில்லையா என்ற ஆதங்கம் கடைக்கோடி மக்களிடம்கூட இருந்தது.

அதற்காக, இந்திய ஹாக்கி அமைப்பு என்னென்னவோ முயற்சிகளை மேற்கொண்டன. 1976-வரை கட்டாந்தரையிலேயே விளையாடி பழக்கப்பட்ட இந்தியர்களுக்கு, அதன் பிறகு வந்த ஆஸ்ட்ரோ டர்ப்பில் (செயற்கை புள்தரை) விளையாடுவதுதான் இந்த பின்னடைவுக்குக் காரணம் என்றார்கள். ராஜீந்தர் (சீனியர்), ஜெரால்டு ராச், ராஜீந்தர் (ஜூனியர்), கடைசியாக வி. பாஸ்கரன் என எத்தனையோ பயிற்சியாளர்கள் இந்திய அணியை சீர்தூக்கிப் பார்க்க முயற்சித்தனர். ஆனால் ஏற்றத்துக்குப் பதிலாக ஏமாற்றம்தான்.

ஆனால், பாஸ்கரனுக்குப் பிறகு அணியை செம்மைப்படுத்திவரும் முன்னாள் ஒலிம்பியன் கார்வலோ, தான் பொறுப்பேற்றது முதலே ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். கோலாலம்பூர், பூம் ஆகிய நகர்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கம். தற்போது ஆசியக் கோப்பையில் தங்கப் பதக்கம். 9 மாத காலத்தில் நம்பிக்கையான பார்வை.

உலக மக்கள் தொகையில் இரண்டாவது மிகப் பெரிய நாடு என்ற பெயரைப் பெற்ற இந்தியா, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கத்தையும் பெறமுடியவில்லை. அதே சமயம் குழுப் போட்டியான ஹாக்கி, 8 முறை இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை தேடிக் கொடுத்துள்ளது.

ஆசியக் கோப்பையை மீண்டும் வென்றுள்ள இந்தியாவுக்கு அடுத்த இலக்கு பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதே. உலகத் தரவரிசையில் தற்போது 8-வது இடத்தில் இருந்தாலும் அதில் விளையாடுவதற்கு இன்னும் தகுதியைப் பெறவில்லை. ஆனால், சிரமம் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ள கார்வலோ, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஏற்கெனவே 8 நாடுகள் அதற்கான தகுதியைப் பிடித்துவிட்டன. மற்றைய நாடுகள் எவை என்பதைத் தீர்மானிக்க சிலி, நியூஸிலாந்து, ஜப்பான் ஆகிய இடங்களில் தகுதிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அவற்றில் ஒரு போட்டியில் இந்தியாவும் விளையாட உள்ளது.

இந்தியாவிலிருந்து அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரே ஒலிம்பிக் விளையாட்டாகத் திகழும் ஹாக்கியை, முதன்மைப் பிரிவிலிருந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் பொதுப் பிரிவுக்கு மாற்றியுள்ளது. ஆனால் ஹாக்கி வீரர்கள் அது குறித்து கவலைப் படவில்லை என்பதற்கு ஆசியக் கோப்பை வெற்றியே சாட்சி.

கோலாலம்பூரில் 2003-ல் முதன்முதலாகப் பெற்ற ஆசியக் கோப்பையை, இம்முறையும் இந்திய அணியினர் யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அதற்காக பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்திய அணியைப் பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய விளையாட்டு அமைச்சகத்தை கையில் வைத்துள்ள மணி சங்கர் அய்யர் மட்டும் மெüனம் காப்பது ஏன் என்பதுதான் ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வி.

Posted in Asia, Asiad, Chakde, Champion, Chennai, Coach, Cricket, Cup, Games, Goals, Hockey, Madras, Mani, ManiShankar, match, Minister, Olympics, Play, Players, Shahrukh, Sports | Leave a Comment »

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »

China Olympics evict 1.5 million

Posted by Snapjudge மேல் ஜூன் 5, 2007

சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்காக 15 இலட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்
பீஜிங் இல் கட்டப்படும் தேசிய ஒலிம்பிக் அரங்கம்

சீனாவின் தலைநகர் பீஜீங்கில் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்துவதற்காக, சுமார் 15 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்று சர்வதேச வீட்டு உரிமை அமைப்பு ஒன்று கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் முன்பு நடத்தப்பட்ட இடங்களிலும், இனி நடத்தப்படவுள்ள இடங்களிலும் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துள்ள வீட்டு உரிமை மற்றும் வெளியேற்றம் குறித்த மையம், 1988 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் சியோல் நகரில் இருந்து 7 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளுக்காக யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆறாயிரம் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Asset, Beijing, China, Evictions, Freedom, Games, Homeless, Homes, Houses, Korea, Land, Olympics, Peking, Property, Seoul, South Korea, venues | Leave a Comment »

Tamil Nadu kid wins in Muay Thai, Kickboxing, Martial Arts of Thailand

Posted by Snapjudge மேல் மே 9, 2007

முகங்கள்: “மொய்தாய்’

கே. இளந்தீபன்

“மொய்தாய்’ விளையாட்டில் பட்டையைக் கிளப்புகிறார் கனகராஜ். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஸ்டார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாவது படிக்கும் இம்மாணவர், சமீபத்தில் பாங்காக்கில் நடந்த உலகளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசைத் தட்டி வந்துள்ளார்.

“மொய்’ தெரியும். “தாய்’ தெரியும். அது என்ன “மொய்தாய்’ கலை? கனகராஜே சொல்கிறார்:

“”தாய்லாந்து நாட்டிலிருந்து வந்ததுதான் “மொய்தாய்’ என்று அழைக்கப்படும் தற்காப்பு கலை. ஒருவர் தன்னுடைய முஷ்டி, பாதம், முழங்கால், முழங்கை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தற்காத்துக் கொள்ளும் பயிற்சியாகும்.

இந்தத் தற்காப்பு கலைக்கு “மொய்தாய்’ என்ற பெயரைச் சூட்டியவர் “அபித்கரு மொய்’ என்பவர்.

இந்தத் தற்காப்பு கலையில் “சங்க்மொய்’ என்பது முஷ்டி பாதம் முழங்கை, முழங்கால் ஆகிய உறுப்புகளை விளையாட்டின்போது பயன்படுத்தும் முறையை விளக்குவதாகும்.

“லுக்மாய்’ என்பது எல்லா வீரர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை முறையாகும். மொய்தாய் தற்காப்பு கலையைத் துவங்கும் முன் “க்ராபி-க்ராங்’ என்ற பயிற்சிக் கருவியின் மூலம் குருவணக்க நடனம் ஆடப்படுகிறது.

பழைய முறைகளைத் தவிர்த்து இந்த “மொய்தாய்’ இப்போது சீருடை, கையுறை, தடுப்பு உறை போன்ற பாதுகாப்பான வசதிகளுடன் விளையாடப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் தாய்லாந்து ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் முக்கிய பயிற்சியாகவும் இருக்கிறது.

மொய்தாய் தற்காப்பு கலை இந்தியாவில் முதன்முதலாக பெங்களூர் நகரில் 1996-ல் வந்தது. ஆந்திரா சென்று தற்போது தமிழ்நாட்டில் 2005-ல் அறிமுகமாகி கல்லூரி மாணவர்களுக்கும் பிடித்த பயிற்சியாக மாறி வருகிறது.

உலகளவில் உள்ள வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, கொரியா, கனடா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்தப் போட்டியில்தான் நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.

இந்த விளையாட்டோடு ஜிம்னாஸ்டிக், கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவில் தேசிய அளவில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். மொய்தாய் விளையாட்டில் நான் இவ்வளவு தூரம் சாதிப்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய பயிற்சியாளர் செந்தில் மாஸ்டர்தான். மொய்தாய் தற்காப்பு கலையில் கின்னஸ் சாதனை செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை” என்கிறார் கனகராஜ்.

கின்னஸ் கனவு வெல்லட்டும்!

Posted in Arts, Asiad, Australia, Bangkok, China, England, Japan, Judo, Kanagaraj, Kanakaraj, karate, Kathir, Kickboxing, Korea, Kumbagonam, Kumbakonam, Martial, Moitai, Moithai, Muay Thai, Muaytai, MuayThai, Olympics, Taekwondo | 1 Comment »

Amputee athlete aims for Olympics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

உடல் ஊனமுற்றவர் உலக சாதனை படைத்துள்ளார்

பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த தென்ஆப்பிரிக்காவின்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ்
ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

ஆஸ்கர் பிஸ்டோரியஸ், உடல் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

உடல் ஊனமுற்றோர் பிரிவில் 3 உலக சாதனை புரிந்துள்ள இவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வழக்கமான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறார். ஆனால் செயற்கைகால் பொறுத்திய ஒருவருக்கு பிற போட்டியாளர்களை விட அனுகூலங்கள் அதிகம் கிடைக்கிறது ஆகவே அவரை ஒலிம்பிக்சில் பங்கேற்க அனுமதிக்க கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

பிறந்த போதே முழங்காலுக்கு கீழ் இவருக்கு எலும்புகள் இல்லை. ஒரு வயதில் இவரது கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. ஆனால் இவர் தளரவில்லை கம்பிகள் பொறுத்தப்பட்ட நவீன செயற்கைக் கால்களைப் பொறுத்திக் கொண்டு களம் இறங்கினார்.

உடல் ஊனமுற்றோருக்கான பிரிவில் தற்போது மூன்று உலக சாதனைகளை இவர் படைத்துள்ளார். இது மட்டுமல்லாது, கடந்த மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா தேசிய போட்டிகளில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

செயற்கை கால் பொறுத்தப்பட்டதன் காரணமாக, வீரரின் உயரம் அதிகமாகும், எனவே ஒடும் போதும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும் சராசரியை விட அதிக நீளமாக இருகக்க் கூடும் என்று கூறப்படுவதை ஆஸ்கர் மறுக்கிறார். இவரது பயிற்சியாளரோ, ஆஸ்கர் பிறப்பிலேயே திறமைகள் அமையப் பெற்ற சேம்பியன் என்றார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக்சில் தங்கம் வென்ற இவர் அடுத்த ஆண்டு ஒலிம்பிக்சில் பதக்கம் பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளார்.

ஆனால் இவர் ஓடும் விதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள சர்வதேச தடகள போட்டியாளர் சங்கம் இவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடை செய்யவதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது.

Posted in athlete, athletics, Gold, Olympics, Oscar, Paralympic, Pistorius, prosthetics, South Africa, World Cup | Leave a Comment »

Pillay wants longer term for Carvalho

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 11, 2007

“கார்வலோவுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க வேண்டும்’: தன்ராஜ் பிள்ளை

கோல்கத்தா, ஏப். 11: இந்திய ஹாக்கி சம்மேளனம் அடிக்கடி பயிற்சியாளரை மாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, ஜோகிம் கார்வலோவை புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வி. பாஸ்கரனுக்குப் பதிலாக, மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஜோகிம் கார்வலோவை சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளராக நியமித்தது இந்திய ஹாக்கி சம்மேளனம்.

கோல்கத்தாவில் நடைபெற்றுவரும் பெய்டன் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியன் ஏர்ûஸன்ஸýக்காக விளையாட வந்திருந்த தன்ராஜ் பிள்ளை கூறியது:

பயிற்சியாளரை அடிக்கடி இந்திய சம்மேளனம் மாற்றுவது சரியல்ல. எந்த ஒரு பயிற்சியாளரும் வீரர்களை செம்மைப்படுத்த அவகாசம் தேவை. அந்தவகையில் தற்போதைய பயிற்சியாளர் கார்வலோவுக்கு 2 முதல் 3 ஆண்டு வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

அணியை செம்மைப்படுத்துதில் கார்வலோவுக்கு வலுவான அனுபவம் உண்டு. ஹரீந்தர் சிங், பேட்டர்சன் போன்றோரை உருவாக்கியவர் அவர். ஏன், நான்கூட அவரால்தான் புகழ் பெற்றேன்.

பிஎச்எல்: இந்தியாவில் நடத்தப்பட்டுவரும் பிரீமியர் ஹாக்கி லீக் (பிஎச்எல்) போட்டி மிகச் சிறந்த போட்டி. அதை மேலும் சிறப்பாக நடத்த வேண்டும். அதையே தேசிய அணியைத் தேர்வு செய்வதற்கு அளவுகோலாகவும் இந்திய சம்மேளனம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

Posted in Asiad, Asian Games, Azlan, Azlan Shah, Baskaran, Bhaskaran, Captain, Carvalho, Coach, Cup, Dhanraj, foreign coach, Game, Hockey, IHF, Indian Hockey Federation, Joaquim Carvalho, K Jothilkumaran, K P S Gill, Loss, maharashtra, Olympics, PHL, Pillai, Pillay, Politics, Premier Hockey League, President, Rajinder Singh, Secretary, selection, Sports, Sultan Azlan Shah, Tamil Nadu, TamilNadu, Taminadu, Team, Term, TN, trial, Vasudevan Baskaran, Victory, Win, World Cup | Leave a Comment »

Indian campaign ends in Olympic qualifiers

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

கொரியாவிடம் இந்தியா மீண்டும் தோல்வி

சென்னை, பிப். 26: ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுவதற்கான தகுதி கால்பந்துப் போட்டியில் இந்திய மகளர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது கொரிய அணி.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இப் போட்டி நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடும் போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் கொரிய மகளிர் முந்தினர். 25-வது நிமிஷத்தில் லீ கீ அபாரமாக கோல் அடித்து கொரியாவை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின் இந்திய மகளிர் அணி கோல் அடிக்க கடும் முயற்சி மேற்கொண்டனர், அந்த முயற்சியை கொரிய மகளிர் தகர்த்தெறிந்தனர்.

38-வது நிமிஷத்தில் பார்க் ஹீ யங்கும், 39-வது நிமிஷத்தில் மூன் சுலே ஆகியோரும் அடுத்தடுத்து கோல் அடித்து, கொரியாவை வலுப்படுத்தினர்.

பிற்பாதியில் இந்திய அணியினர் நிறைய தவறுகள் செய்தனர். இதனால் கிடைத்த வாய்ப்புகள் பறிபோயின.

முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியவை வென்றது கொரியா.

தென் கொரியாவின் மாசானில் கடந்த மாதம் 17-ம் தேதி நடந்த போட்டியில் இந்தியாவை 5-0 என கொரியா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in 2008, Asia, Beijing, Busan, Chennai, Football, Games, Jawaraharlal Nehru Stadium, League, Madras, Masan, match, Medal, Nehru Stadium, Olympics, Qualification Rounds, qualifiers, Republic of Korea, Soccer, South Korea, Sports, Stadium, teams, Victory, Win, Women | Leave a Comment »

33rd National Games in Guwahati – No Place for TN athlete Santhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

தேசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை சாந்திக்கு இடம் இல்லை

சென்னை, பிப்.1-

33-வது தேசிய விளையாட்டுப் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் வருகிற 9-ந் தேதி முதல் 18ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் 40 பேர் இடம்பெற்று உள்ளனர். 20 வீரர்களும், 20 வீராங்கனைகளும் தேர்வாகி உள்ளனர்.

தோகாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்த சாந்தி தமிழக அணியில் இடம் பெறவில்லை.

பெண் தன்மை சோத னையில் தோல்வி அடைந்த அவரது பதக்கம் பறிக்கப் பட்டதா இல்லையா என்ற மர்மம் இன்னும் நீடித்து இருக்கிறது. சாந்தியின் பெயர் ஏன் இடம் பெறவில்லை என்று தமிழ்நாடு அமைச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் சி.நீலசிவலிங்கசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதலில் அறிவிக்கப்பட்ட பட்டியலில் சாந்தியின் பெயரை சேர்த்து இருந்தோம். திடீரென இந்திய தடகள சம்மேளனத்தில் இருந்து அவரது பெயரை நீக்கி விட்டு பட்டியல் அனுப்பவும் என்று கடிதம் வந்தது. ஆனால் விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. இந்த அடிப்படையில் சாந்தியை நீக்கி உள்ளோம்.

இவ்வாறு நீலசிவலிங்கசாமி கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம் பெற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

ஆண்கள்:

அரவிந்த், மாணிக்க வாசகம், விஜய குமார், சத்யா, சரவணகுமார், ரகுநாத், முத்துசாமி, கருப்பசாமி, விக்டர், ஜெபசிங், புயல் பாலச்சந்தர், பெனடிக்ட் ஸ்டார்லி, நிகில், சித்தரசு, வெய்ன் பெபின், வினோத்ராஜ், சந்திரசேகர், ரஞ்சித்குமார், வடிவேலு, பார்த்தீபன், பிரேமானந்த், பிரசாந்த்,

பயிற்சியாளர் அண்ணாவி,

மானேஜர் செந்தில்.

பெண்கள்:

அஞ்சு ஜார்ஜ், சாரதா நாராயணா, அன்பு விமலா, பிரதீபா, மோகனாள், இளவரசி, சூர்யா, மகேஸ்வரி, சங்கரி, காயத்ரி, லீலாவதி, லட்சுமி, சுரேகா, சரஸ்வதி, அணிச்சம், கற்புரா மாலா, ஜெயந்தி, மோகன பிரியா, மலர் விழி, சரண்யா பிரகாஷ்,

பயிற்சியாளர்:- சுகந்தி,

மானேஜர்:- பார்வதி.

Posted in 33, Asiad, Asian Games, athlete, athletics, Contestants, Controversy, Games, India, Medals, National Games, Olympics, Santhi, Santhi Soundarajan, Santhi Sounthararajan, Santhy, Sports, Track and field | Leave a Comment »

State of Indian Sports Teams – Hockey

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006

கனவாய் பழங்கதையாய்…

நமது நாட்டில் கிரிக்கெட் போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு அளிக்கப்படுகின்ற முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை. எனவே இயல்பாகவே மற்ற விளையாட்டுகளில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருப்பதில்லை. மொத்தத்தில் விளையாட்டுத் துறைக்கு நாம் கொடுத்து வரும் முக்கியத்துவம் போதாது என்பதை பல சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளே காட்டி வருகின்றன. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் குட்டி நாடுகள் கூட, தங்கப் பதக்கங்களைப் பெறும்போது, நமது மானத்தைக் காப்பாற்ற ஏதாவது ஒரு பதக்கமாவது கிடைக்காதா என்று சாதாரண இந்தியக் குடிமகன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து ஏங்கும் நிலையைப் பார்த்திருக்கிறோம். ஆம், நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க, கௌரவமான வெற்றியைப் பெற முடியவில்லை.

நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு காலத்தில் உலக அளவில் கொடி கட்டிப் பறந்தோம். தயான்சந்த் போன்ற இந்திய வீரர்கள் தங்களின் அபாரத் திறமைகளால் வெற்றிகளை ஈட்டி இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் உயர்த்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழ்! 1980-ம் ஆண்டில் மாஸ்கோ போட்டிக்குப் பிறகு, ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் கடந்த 25 ஆண்டுகளாக நம்மால் தங்கப் பதக்கத்தைப் பெற முடியவில்லை.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஹாக்கிப் போட்டிகளில், இந்தியா பங்கேற்ற 7 ஆட்டங்களில் 5-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடிந்துள்ளது. இதனால் 12 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா 11-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. போட்டியின் “கடைசி நிமிடங்களில் இந்திய வீரர்களின் திறமையற்ற ஆட்டமே இந்தியாவின் படுதோல்விக்குக் காரணம்’ என்று குறை கூறியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன், “தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் வெற்றி என்பதே கனவாகி விடும்’ என எச்சரித்துள்ளார். “ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் அடைந்த தோல்விகளை மறந்து விட்டு, தோஹாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்று இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் கூறியுள்ளார். இதுபோன்ற வெற்று சமாதானங்கள் நமது எதிர்கால வெற்றிக்கு உதவுமா என்பது ஐயமே.

சமீபகாலமாக விளையாட்டில் புகுந்து வரும் அரசியல் நமது விளையாட்டின் நோக்கத்தையே சிதறடித்து விடுகிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம்தான் நல்ல வீரர்களுக்குத் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். காலத்துக்கேற்ற வகையில் தகுதியும் திறமையும் பெறுவதற்கு இந்தியப் பயிற்சியாளர்கள் மட்டும் போதுமா, வெளிநாட்டுக் “கோச்’சுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியில் கைகூடி வந்து விடுவதில்லை. இப்போதே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து, தகுதி படைத்தவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கும்போதுதான் தரமான இந்திய அணியை உருவாக்க முடியும். வெற்றிகளுக்குக் குறுக்கு வழிகள் இல்லை. தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டி அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலமே வெற்றியைப் பெற முடியும். இல்லாவிட்டால் ஹாக்கி விளையாட்டில் தயான்சந்த் காலத்து வெற்றிகள் கனவாய் பழங்கதையாய் மட்டுமே இருக்கும்.

Posted in Bhaskaran, Coach, Cricket, Dinamani, Editorial, Germany, Gill, Hockey, India, Olympics, Sports, Tamil, World Cup | Leave a Comment »