Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nobel’ Category

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Orhan Pamuk – Nobel Prize winner: Turkish novelist – Lecture

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் தீராநதி

ஓரான் பாமுக் – அப்பாவின் சூட்கேஸ்
தமிழில்: ஜி குப்புசாமி

அவர் காலமாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, என் அப்பா அவரது எழுத்துக்கள், கைப்பிரதிகள், குறிப்பேடுகள் அடங்கிய ஒரு சிறிய சூட்கேஸை என்னிடம் கொடுத்தார். அவரது வழக்கமான கேலியும் கிண்டலும் கலந்த தொனியில், அவர் போய்ச் சேர்ந்த பிறகு, அவற்றை நான் படிக்க வேண்டும் என்றார். அதாவது அவர் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்த பிறகு.

லேசான சங்கடத்தோடு, ‘‘சும்மா எடுத்துப்பார்’’ என்றார். ‘‘உள்ளே இருப்பதில் ஏதாவது பிரயோஜனப்படுமா என்று பார். நான் போன பிறகு வேண்டுமானால், அவற்றில் தேர்ந்தெடுத்து வெளியிட்டுக் கொள்.

நாங்களிருவரும் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் எனது வாசிப்பறையில் இருந்தோம். வலி மிகுந்த சுமையன்றை இறக்கி வைக்க விரும்பும் ஒரு மனிதனைப்போல அப்பா முன்னும் பின்னும் நடந்து, அந்த சூட்கேஸை வைப்பதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் அதைக் கண்ணுக்கு உறுத்தாத ஒரு மூளையில் மெதுவாக வைத்தார். நாங்கள் இருவரும் எப்போதும் மறந்திராத ஒரு பாசாங்குத் தருணம் அது. அது கடந்ததும், வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிற, கேலியும் கிண்டலுமான எங்கள் ஆளுமைகள் தலையெடுக்க, எங்களது வழக்கமான வேடங்களுக்குத் திரும்பினோம். தினசரி வாழ்க்கையின் அற்பமான விஷயங்களைப் பற்றி, துருக்கியின் முடியவே முடியாத அரசியல் சிக்கல்களைப் பற்றி, பெரும்பாலும் நஷ்டத்தில் முடிகிற என் அப்பாவின் வியாபார முயற்சிகளைப் பற்றி அதிகம் விசனப்படாமல் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தோம்.

அப்பா அங்கிருந்து சென்ற பின், அந்த சூட்கேஸைக் கடந்து அப்படியும் இப்படியுமாக பல நாட்கள் சென்று வந்தும், ஒருமுறை கூட அதைத் தொட்டுப் பார்க்கவில்லையென்பதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிறிய, கருப்புநிற, தோல் சூட்கேஸ§ம் அதன் பூட்டும், அதன் மழுங்கல் முனைகளும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான். குறைந்த தூரப் பயணங்களுக்கும், வேலைக்குச் செல்லும்போது பதிவேடுகளை எடுத்துச் செல்வதற்கும் அப்பா அதனை எடுத்துச் செல்வார். என் சிறு வயதில் அப்பா வெளியூர் சென்று திரும்பினால், இந்தச் சின்ன சூட்கேஸைத் திறந்து உள்ளேயிருப்பவற்றை நான் குடாய்ந்ததும், கொலோன் வாசனையில் வெளிநாட்டுச் சரக்குகளை நோண்டியதும் ஞாபகத்தில் வந்தன. இந்த சூட்கேஸ் ஒரு பரிச்சயமான சிநேகிதன். என் பிள்ளைப் பிராயத்தின், என் கடந்த காலத்தின் ஒரு வலுவான நினைவூட்டி. ஆனால், இப்போது என்னால் அதைத் தொடக் கூட முடியாது. ஏன்? அதனுள்ளே பொதிந்திருக்கும் மர்மங்களில்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கனத்தின் அர்த்தத்தை இப்போது நான் பேசப் போகிறேன். ஒருவன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தன் சுயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிருஷ்டி மூலையை அடைந்து தன்னைப் பதிந்து கொண்டானென்றால், அதுதான் அவன் படைப்பதும் _ இலக்கியத்தின் அர்த்தமும்.

என் அப்பாவின் சூட்கேஸை இறுதியில் நான் தீண்டியபோதுகூட, அதைத் திறந்து பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் கத்தை கத்தையான விஷயங்களைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறையுமல்ல. என் அப்பாவிற்கு ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது; அவரது இளமையில், 1940_களின் இறுதியில் அவர் ஒரு இஸ்தான்புல் கவிஞனாக ஆக விரும்பி வாலெரியை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், சொற்ப வாசகர்களேயிருக்கும் ஓர் ஏழை தேசத்தில் கவிதை எழுதி வாழ்க்கை நடத்துவதை அவர் விரும்பியிருக்கவில்லை. என் அப்பாவின் அப்பா, என் தாத்தா ஒரு செல்வந்தரான வணிகராக இருந்தவர். என் அப்பா ஒரு வசதியான சௌகரியமான வாழ்க்கையைச் சிறுவயதிலும், இளம் பருவத்திலும் அனுபவித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டும், எழுதுவதற்காகவும் சிரமஜீவனம் நடத்த அவருக்கு விருப்பமில்லை. வாழ்க்கையை அதன் எல்லா அழகுகளோடும் விரும்பியவர் அவர் _ இதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.

என் அப்பாவின் சூட்கேஸிற்குள் இருப்பவற்றிலிருந்து என்னை தூர விலக்கி வைத்திருக்கும் முதல் விஷயம், வாசிக்கக் கிடைப்பது எனக்கு விருப்பமில்லாமற் போகலாம் என்ற பயம் தான். ஏனென்றால், இது என் அப்பாவிற்குத் தெரியும் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக அவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்போல நடித்தார். இருபத்தைந்து வருடங்கள் எழுத்தாளனாகப் பணியாற்றியபின் இதைப் பார்ப்பதற்கு எனக்கு வலியெடுத்தது. ஆனால், என் அப்பா இலக்கியத்தைப் போதியளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது கோபித்துக் கொள்ளக் கூட நான் விரும்பவில்லை… என் நிஜமான பயம், நான் தெரிந்து கொள்ளவோ, கண்டறிந்து கொள்ளவோ விரும்பாத நெருக்கடியான விஷயம், ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக என் அப்பா இருக்கக் கூடிய சாத்தியம் தான். இந்த பயத்தினால்தான் என் அப்பாவின் சூட்கேஸை என்னால் திறக்க இயலவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், இதை என்னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதது. என் அப்பாவின் சூட்கேஸிலிருந்து உண்மையானதும், மகத்தானதுமான இலக்கியம் வெளிவருமானால், என் அப்பாவிற்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதர் வாழ்ந்திருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இது பீதியேற்படுத்தும் ஒரு சாத்திய கூறு. ஏனெனில் என் இந்த முதிர்ந்த வயதில் கூட என் அப்பாவை என் அப்பாவாக மட்டுமே நினைக்க விரும்பினேன். ஓர் எழுத்தாளனாக அல்ல.

ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும், அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன்: எழுதுவது என்பதைப் பற்றி நான் பேசும்போது என் மனதிற்கு முதலில் வருவது ஒரு நாவலோ, ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல, ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தனியாக, தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன்தான். இவன் அல்லது இவள் ஒரு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரின் சௌகரியத்தால் ஆதாயம் பெறலாம், அல்லது நான் முப்பது வருடங்களாகச் செய்து வருவதைப்போல தாளின் மீது பேனாவைப் பதித்து எழுதலாம். எழுதும்போது அவன் தேனீரோ, காபியோ அருந்தலாம், அல்லது சிகரெட் புகைக்கலாம். அவ்வப்போது மேஜையிலிருந்து எழுந்து சன்னலுக்கு வெளியே, தெருவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கலாம், அவனுக்கு அதிருஷ்டமிருந்தால் மரங்களும் காட்சிகளும் கூட தெரியலாம், அல்லது ஒரு கருப்புச் சுவரை அவன் வெறிக்கலாம். அவன் கவிதைகள், நாடகங்கள் அல்லது என்னைப் போல நாவல்கள் எழுதலாம். இந்த எல்லா வேறுபாடுகளும் அவன் மேஜையில் அமர்ந்து தனக்குள் பொறுமையாக திரும்பிக் கொள்வதற்குப் பிறகு வருபவை. எழுதுவது என்பது இந்த உள்நோக்கிய பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது, தனக்குள் அவன் அடங்கும் போது அவன் கடந்து வருகிற உலகைக் கவனித்து ஆய்வது, இதனைப் பொறுமையோடும், பிடிவாதத்தோடும், உவகையோடும் செய்வது.

என் மேஜையில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து வெற்றுத்தாளில் புதிய வார்த்தைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டு வரும்போது, ஒரு புதிய உலகை நான் படைப்பது போல, ஒரு பாலத்தை அல்லது ஒரு கோபுரத்தை ஒவ்வொரு கல்லாகக் கட்டுவதைப் போல எனக்குள்ளிருக்கும் அந்த மற்றொருவனைக் கட்டமைக்கிற மாதிரி உணர்கிறேன். எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள், வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழி வகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து, சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக் கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து, வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்.

எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெளிவாகத் தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ‘ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல’ என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பழங்கதைகளில் எனக்கு ஃபெர்ஹாத்தின் பொறுமை எனக்குப் பிடித்தமானது. காதலுக்காக அவன் மலைகளைக் குடைந்து செல்கிறான், அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். எனது My Name is Red நாவலில் பண்டைக்கால பாரசீக நுண்ணோவியர்கள் பற்பல வருடங்களாக அதே குதிரை ஓவியத்தை, அதே ஆர்வத்தோடு, ஒவ்வொரு தூரிகைக் கீற்றையும் மனப்பாடமாக வரைந்து கொண்டிருப்பதை, அவர்கள் கண்களைக் கட்டிவிட்டால் கூட அந்த அழகிய குதிரையை அதே நுணுக்கத்தோடு அவர்களால் வரைய முடியுமென்பதை நான் எழுதியபோது, நான் கூறிக்கொண்டிருப்பது எழுத்து வேலையை, என் சொந்த வாழ்க்கையைப் பற்றி என்று அறிந்தேன்.

ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் _ அதை மெதுவாக, நிதானமாகக் கூற வேண்டும், அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப்போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்தக் கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால், முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது, சிலரிடம் அரிதாகவே செல்கிறது) ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கிறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனிமையாக உணரும்போது, அவனது முயற்சிகள் அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது, அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது, அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும், பிம்பங்களையும், கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை, அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்ப்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும், வேறேதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.

என் அப்பாவின் சூட்கேஸைத் திறந்து அவரது நோட்டுப்புத்தகங்களை நான் வாசிக்க பயந்ததற்குக் காரணம் நான் பொறுத்துக்கொண்ட சிரமங்களை அவரால் தாங்கமுடியாது என்று நான் அறிந்திருந்தேன். தனிமையையல்ல அவர் நேசித்தது, நண்பர்களோடு கூட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், வேடிக்கை, கம்பெனி என்று வாழும் வாழ்க்கையைத்தான். ஆனால் பிற்பாடு என் எண்ணங்கள் வேறு திக்கில் திரும்பின. இத்தகைய எண்ணங்கள், துறவறமும் பொறுமையுமான இத்தகைய கனவுகள் எல்லாமே என் சொந்த வாழ்க்கையிலிருந்தும், எழுத்தாளனாக என் சொந்த அனுபவத்திலிருந்தும் நான் பெற்றிருந்த முன் முடிவுகளே. கூட்டத்திற்கு மத்தியிலும், வீட்டில் குடும்பத்தினரின் சலசலப்பிற்கிடையிலும் எழுதுகிற அற்புதமான எழுத்தாளர்கள் பலர் உண்டு. அது மட்டுமின்றி, நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, என் அப்பா குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யத்தில் சலிப்புற்று, எங்களையெல்லாம் விட்டுவிட்டு பாரீசுக்குப் போய்விடுவார். பல எழுத்தாளர்களைப் போல அங்கே ஓட்டல் அறையில் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை நிரப்பித் தள்ளுவார். அந்த நோட்டுப் புத்தகங்களில் சில இந்த சூட்கேஸில் இருக்கின்றன என்று தெரியும். ஏனென்றால், அதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சில வருடங்கள் முந்தி என் அப்பாவே தன் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். அந்த வருடங்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவர் கூறியிருந்தாலும், தனது வடுப்பாடுகளை, எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற அவரது கனவுகளை அல்லது அவரது ஓட்டல் அறையில் அவரைப் பீடித்த தன்னடையாளம் குறித்த கேள்விகளை அவர் குறிப்பிட்டதில்லை. பதிலாக, பாரீஸ் நகர நடைபாதைகளில் சார்த்தரை அவர் எப்போதும் பார்ப்பதைப் பற்றி, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி, மிக முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்பவரைப்போல மனமார்ந்த பெருமிதத்தோடு விவரிப்பார்.

நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்கு என் அப்பா பாஷாக்களையும் மாபெரும் மதத்தலைவர்களையும் பற்றிப் பேசுவதைவிட, எழுத்தாளர்களின் உலகைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்ததும் ஓரளவுக்கு காரணம் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. எனவே, என் அப்பாவின் நோட்டுப் புத்தகங்களைப் படிக்கும் போது, இதை மனதில் வைத்துக் கொண்டு அவரது மிகப்பெரிய நூலகத்திற்கு நான் எந்தளவுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பா எங்களோடு வசிக்கும்போது, அவர் என்னைப் போலவே புத்தகங்களோடும் சிந்தனைகளோடும் தனியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும், அவரது எழுத்தின் இலக்கியத்தரத்தைப் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

ஆனால், அப்பா எனக்கு ஆஸ்தியாக விட்டுச் சென்ற சூட்கேஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது புத்தகங்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் திவானில் அப்பா சாய்ந்துகொண்டு கையிலிருக்கும் புத்தகமோ, பத்திரிகையோ நழுவியது தெரியாமல் கனவில் மூழ்கி, தன் எண்ணங்களில் நெடுநேரம் தொலைந்து போயிருப்பார். அவர் ஜோக் அடிக்கும்போதும், கிண்டல் செய்யும் போதும், வீட்டுச் சச்சரவுகளின் போதும் இருக்கும் முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாவத்தில் அவர் முகம் இருப்பதை நான் பார்த்தபோது உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை நான் முதன் முதலாகத் தரிசித்தது அப்போதுதான். குறிப்பாக, என் பிள்ளைப்பருவத்தில், என் முன் இளம்பருவத்தில், பயத்தோடு கூடிய புரிதலாக அவர் மனநிறைவின்றி இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. இப்போது பற்பல வருடங்கள் கழித்து, இந்த மனநிறைவின்மைதான் ஒரு மனிதனை எழுத்தாளனாக்கும் ஆதாரக்கூறு என்று புரிகிறது. எழுத்தாளனாவதற்குப் பொறுமையும், கடும் உழைப்பும் மட்டும் போதாது; கூட்டம், நண்பர்கள், சாதாரண விஷயங்கள், தினசரி வாழ்வு போன்றவற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவன் முதலில் உணர வேண்டும். பின் ஓர் அறைக்குள் புகுந்து தன்னை தாழிட்டுக் கொள்ளவேண்டும். நம் எழுத்துக்களில் ஓர் ஆழமான உலகத்தை உருவாக்குவதற்காக பொறுமையையும் நம்பிக்கையையும் வேண்டி நிற்கிறோம். ஆனால் தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொள்ளும் இச்சை மட்டுமே நம்மைச் செயலாற்ற செலுத்துகிறது. தன் இதயத்திற்குள் புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கிற, தன் சுயபிரக்ஞையின் குரலுக்கு மட்டும் செவிசாய்க்கிற, மற்றவர்களின் வார்த்தைகளோடு பூசலிடுகிற, தன் புத்தகங்களுடன் விவாதத்தில் இறங்குவதால் தன் சொந்தச் சிந்தனைகளையும் தன் சொந்த உலகத்தையும் வளர்த்தெடுக்கிற இத்தகைய சுதந்திரமான எழுத்தாளனுக்கு முன்னோடி மிக நிச்சயமாக நவீன இலக்கியத்தின்ஆரம்ப நாட்களில் மான்டெய்ன்தான். என் அப்பா அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருந்ததும், எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் மான்டெய்னைத்தான். கிழக்கிலோ அல்லது மேற்கிலோ உலகில் எங்கேயிருந்தாலும் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தமது அறையில் அவர்களது புத்தகங்களோடு அடைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்களின் மரபில் வருபவன்தான் நானும் என்று கூறிக்கொள்வேன். உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு, நாம் நினைத்தளவுக்கு நாம் தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டுகொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு, மற்றவர்களின் புத்தகங்களோடு, மற்றவர்களின் வார்த்தைகளோடு, பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே, அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்புமிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். சமுதாயங்களும், குலமரபினரும், மனிதர்களும் தம்முடைய கதாசிரியர்களின் மனசாட்சியை உறுத்தும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் கூடுதல் அறிவும், செல்வமும் பெற்றவர்களாக, மேலும் முன்னேறியவர்களாக வளர்கின்றனர். நூல்களை எரிப்பதும், எழுத்தாளர்களுக்கு கரிபூசி அவமானப்படுத்துவதும், இருண்ட, அக்கறையோ பொறுப்போ அற்ற காலகட்டம் நம்மீது கவிந்திருக்கிறதென்பதற்கு அறிகுறிகள். ஆனால் இலக்கியம் வெறும் தேசிய அக்கறையாக மட்டுமே எப்போதும் இருந்ததில்லை. அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச்செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டுகொள்வான்; அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.

அப்பாவிடம் ஒரு நல்ல நூலகம் இருந்தது. மொத்தம் 1500 புத்தகங்கள் இருந்தன. ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம். என் இருபத்திரண்டாவது வயதில் அவை அனைத்தையும் நான் படித்திருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு புத்தகத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எந்தெந்த புத்தகங்கள் முக்கியமானவை, எவையெல்லாம் மேலோட்டமாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பவை, எவையெல்லாம் கிளாஸிக்குகள், எந்த இலக்கியப் பாடத்திலும் இன்றியமையாத பகுதிகளாக விளங்குபவை எவை, மறந்துபோகக்கூடிய ஆனால் படிக்க சுவாரஸியமான உள்ளூர் சரித்திரங்கள், அப்பா உயர்வாக மதிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்கள் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் இந்த நூலகத்தை, இதைவிடச் சிறந்த நூலகத்தை, வேறொரு வீட்டில் எனக்கான ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். என் அப்பாவின் நூலகத்தைத் தூரத்திலிருந்து பார்க்கையில், அது நிஜ உலகத்தின் ஒரு சிறிய சித்திரமாகத் தோன்றும். ஆனால் இது இஸ்தான்புல் என்கிற எங்கள் சொந்த மூலையிலிருந்து பார்க்கப்பட்ட உலகம். நூலகம் இதற்குச் சாட்சியாக இருந்தது. இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அப்பா பெரும்பாலும் பாரீசுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றிருந்தபோது வாங்கியவை. அவை மட்டுமின்றி, இஸ்தான்புல்லில் 40_களிலும் 50_களிலும் வெளிநாட்டுப் புத்தகங்களை விற்றுவந்த, பின் எனக்கு பரிச்சயமாகிவிட்ட பழைய மற்றும் புதிய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கியவைகளும் இருந்தன.

என் உலகம் உள்ளூரும் தேசியமும் மேற்குலகும் கலந்த ஒரு கலவை, 70_களில் நானும் ஏதோ ஒருவித லட்சியத்துடன் என் சொந்த நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். எனது இஸ்தான்புல் நூலில் குறிப்பிட்டதைப் போல நான் எழுத்தாளனாக ஆகப்போவதாக அப்போது தீர்மானித்திருக்கவில்லை. நிச்சயமாக ஓர் ஓவியனாக ஆகப் போவதில்லை என்ற நிதர்சனம் வந்திருந்தது. ஆனால் என் வாழ்க்கை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற நிச்சயம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. வாசிக்கவும் கற்றறிந்து கொள்ளவும் ஒரு தணியாத ஆர்வம், நம்பிக்கை சேர்ந்த அவா எனக்குள் நிறைந்திருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டிருப்பதாக மற்றவர்களைப் போல என்னால் வாழ முடியாது என்பதாகத் தோன்றிக் கொண்டிருந்தது.

இந்த உணர்ச்சியின் ஒரு பகுதி, என் அப்பாவின் நூலகத்தை நான் வெறித்துக் கொண்டிருந்தபோது உணர்ந்ததோடு சம்மந்தப்பட்டிருந்தது. அது இஸ்தான்புல்லில் அந்நாட்களில் வசித்திருந்த எங்கள் எல்லோருக்குமே தோன்றிக்கொண்டிருந்த விஷயம்தான். மையப்பகுதியிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக, விலக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. நான் கவலையுணர்வும் ஏதோ பற்றாக்குறையாகவும் உணர்ந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கலைஞர்களிடம் அவர்கள் ஓவியர்களோ எழுத்தாளர்களோ_சிறிதளவும் ஆர்வம் காட்டாத, அவர்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையளிக்காத ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்று மிக நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது. 70_களில் அப்பா எனக்குத் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு மங்கலான, தூசுபடிந்த, அட்டை கிழிந்த புத்தகங்களை இஸ்தான்புல்லின் பழைய புத்தகக் கடைகளில் அடங்காத பேராசையோடு வாங்கும்போது, தெருவோரங்களிலும், மசூதி வெளி முற்றங்களிலும், சிதிலமுற்ற சுவர்களின் மீது கடைபரப்பி வைத்திருக்கும் அந்தப் பழைய புத்தக வியாபாரிகளின் பரிதாபத்திற்குரிய நிலையைக் கண்டு மனம் கலங்கும்.

இலக்கியத்தில் போலவே வாழ்க்கையிலும் எனது இடம் இவ்வுலகின் மத்தியில் இடம் பெற்றிருக்கவில்லை யென்பதே என் ஆதார உணர்வாக இருந்தது. பிரதானமாக விளங்கும் மத்திய உலகில் வாழ்க்கை எங்கள் சொந்த வாழ்க்கையைவிட ஒட்டுமொத்த இஸ்தான்புல், துருக்கியைவிட, செழிப்பானதாகவும், அதிக சுவாரஸியமிக்கதாகவும் இருக்க, நான் அதற்கு வெளியே இருந்தேன். உலகின் பெரும்பாலான மக்களோடு இந்த உணர்வை நான் பகிர்ந்து கொள்வதாக இன்று நினைக்கிறேன். இதே வகையில் உலக இலக்கியம் ஒன்றும் இருந்தது. அதன் மையம் கூட என்னிடமிருந்து வெகு தூரத்திலேயே அமைந்திருந்தது. உண்மையில் என் மனதில் இருந்தது உலக இலக்கியம் அல்ல, மேலை இலக்கியம். துருக்கியர்களாகிய நாங்கள் இதற்கு வெளியே இருந்தோம். இதற்கு என் அப்பாவின் நூலகம் ஆதாரமாக இருந்தது. இஸ்தான்புல்லின் நூல்கள் எங்கள் இலக்கியம், எங்கள் உள்ளூர் உலகம், அதன்நுட்பமான விவரங்களோடு ஒரு மூலையில் இருந்தன. மறுமுனையில் இந்த மற்ற உலகத்தின், மேற்குலகின் நூல்கள் இருந்தன. இவற்றோடு எங்களுக்குச் சொந்தமானவை எந்த விதத்திலும் ஒத்திருக்காமலிருந்தன. இந்த ஒத்திராமையே எங்களுக்கு வலியையும், நம்பிக்கையையும் ஒருசேர வழங்கின. ஒருவரது உலகை விட்டு நீங்கி, மற்ற உலகின் மற்றவைகளில், விநோதங்களில், வியப்புகளில் ஆறுதல் காண்பதுதான் எழுதுவதும் வாசிப்பதும். என் அப்பா தன் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவே நாவல்களை வாசித்தார், பிந்தைய காலங்களில் நான் செய்ததைப் போலவே மேலைநாடுகளுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

அக்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த நூல்களும் நாங்கள் பெரிதும் குறைபாடாகக் கருதும் எங்கள் கலாச்சாரத்திலிருந்து தப்பிக்கவே என்று எனக்குத் தோன்றியது. வாசிப்பால் மட்டும் எங்கள் இஸ்தான்புல்லை விட்டு மேலைநாடுகளுக்கு நாங்கள் செல்லவில்லை. எழுதுவதால் கூட. அந்த நோட்டுப்புத்தகங்களை நிரப்புவதற்காக என் அப்பா பாரீசுக்குச் சென்று, ஓர் அறைக்குள் அடைத்துக்கொண்டு எழுதிவிட்டு, பின் அவற்றை துருக்கிக்கு கடத்திவந்ததுதான். என் அப்பாவின் சூட்கேஸின் மீது என் பார்வை பதியும்போது என்னை அமைதியிழக்கச் செய்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓர் அறையில் அடைபட்டு உழைத்து, துருக்கியில் ஓர் எழுத்தாளனாக காலந்தள்ளிவிட்ட பிறகு, அவரது ஆழமான சிந்தனைகளை இப்படி ஒரு சூட்கேஸிற்குள் ஒளித்து வைத்திருப்பதையும், எழுதுவது என்பதை ஒரு ரகசியமான தொழிலாகச் செய்யவேண்டியதைப் போல, சமுதாயத்தின், அரசாங்கத்தின், மக்களின் கண்களிலிருந்து தப்பிச் சென்று செயல்பட்டதையும் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. என் அப்பா என்னளவுக்கு இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது நான் கோபப்பட்டதற்கு ஒரு வேளை இதுதான் பிரதான காரணமாக இருக்கக் கூடும்.

வாஸ்தவத்தில் என் அப்பா மீது நான் கோபம் கொண்டிருந்ததற்குக் காரணம் இருக்கிறது, அவர் என்னைப்போல ஒரு வாழ்க்கையை நடத்தவில்லை, அவருக்கு வாழ்க்கையோடு எப்போதுமே சச்சரவு இருந்ததில்லை. வாழ்நாள் முழுக்க நண்பர்களோடும் அவருக்குப் பிரியமானவர்களோடும் சந்தோஷமாகச் சிரித்து காலம் கழித்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. ஆனாலும் என்னில் ஒரு பகுதிக்கு நான் ‘பொறாமை’ கொண்டிருந்த அளவுக்கு ‘கோபம்’ கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. பொறாமை என்பது அதிகமும் துல்லியமுமான வார்த்தை. இதுவும் என்னை அமைதியிழக்கச் செய்தது. அது எனது வழக்கமான ஏளனமும் கோபமுமான குரலில் என்னையே நான் கேட்டுக்கொள்ளும்போது இருக்கும் விஷயம்: ‘சந்தோஷம் என்பது என்ன? அந்தத் தனியான அறையில் ஒரு பொந்திற்குள் வாழ்வதைப்போல ஒரு வாழ்க்கையை நான் நடத்தியதா சந்தோஷம்? அல்லது சமூகத்தில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு, எல்லோரும் நம்பும் விஷயங்களை நாமும் நம்பிக்கொண்டு, செய்து கொண்டிருப்பதா சந்தோஷம்? வெளியுலகத்தோடு முழு இசைவுடன் இருப்பதாக வெளிக்காட்டிக்கொண்டு, ஆனால் ரகசியமாக ஒளிந்து கொண்டு எழுதுகிற வாழ்க்கையை வாழ்வது சந்தோஷகரமானதா, துக்ககரமானதா?’ ஆனால் இவையனைத்துமே மிகையான கோபத்தில் எழும் கேள்விகள். ஒரு நல்ல வாழ்க்கைக்கு அளவீடு என்பது சந்தோஷம்தான் என்ற எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன்? மக்களும், செய்தித்தாள்களும், அனைவரும் வாழ்க்கையின் மிக முக்கியமான அளவீடு சந்தோஷம்தான் என்று நடந்து கொள்கின்றனர். இது மட்டுமே இதற்கு நேரெதிரானவொன்றுதான் உண்மையாவென கண்டுகொள்ள முயல்வதை நியாயப்படுத்தாதா? எங்கள் வீட்டைவிட்டு என் அப்பா பலமுறை ஓடியிருக்கிறார். அவரை எந்தளவிற்கு நான் அறிந்திருக்கிறேன், அவரது அமைதியின்மையை எந்தளவிற்கு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்?

எனவே இதுதான் என் அப்பாவின் சூட்கேஸை நான் முதலில் திறப்பதற்கு என்னைச் செலுத்தியது. நான் சற்றும் அறியாத, எழுத்தில் கொட்டி மட்டுமே ஆற்றிக்கொண்ட ஒரு ரகசியம், வாழ்க்கையின் மீதிருக்கும் ஒரு துக்கம் என் அப்பாவுக்கு இருந்ததா? சூட்கேஸைத் திறந்ததுமே அதன் பிரயாண வாசனையையும், பரிச்சயமாகியிருந்த பல நோட்டுப் புத்தகங்களையும் நினைவு கூர்ந்தேன். அந்த நோட்டுப் புத்தகங்களைப் பல வருடங்களுக்கு முன்பே, அவற்றைப் பற்றி அதிகம் விளக்காமல் காட்டியிருக்கிறார். இப்போது நான் கையில் எடுத்த நோட்டுப் புத்தகங்களில் பெரும்பாலானவை அவரது இளம் வயதில் எங்களைவிட்டு பாரீசுக்கு ஓடிப்போன காலங்களில் எழுதியவை. என் அபிமான எழுத்தாளர்கள் பலரைப் போல, அவர்களது சுயசரிதைகளில் படித்திருக்கிறேன். இப்போது நான், நான் இருக்கும் வயதில் என் அப்பா என்ன எழுதியிருப்பார், என்ன சிந்தித்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதைப்போல எதையும் இங்கே காணப்போவதில்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. என்னை அதிகமும் அமைதியிழக்கச்செய்தது எதுவென்றால், அவரது நோட்டுப்புத்தகங்களில் அங்குமிங்கும் எனக்குக் காணக் கிடைத்த எழுத்தாளத்தன்மை மிக்க ஒரு குரல். இது என் அப்பாவின் குரல் கிடையாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்; இது நம்பத்தக்கதாக இல்லை, அல்லது குறைந்த பட்சம் என் அப்பா என்று நான் அறிந்திருந்த மனிதருக்குச் சொந்தமானதில்லை இது. இவற்றை என் அப்பா எழுதியபோது என் அப்பாவாக இல்லாதிருந்திருக்கலாம் என்ற என் பயத்திற்கு அடியில் வேறொரு ஆழமான பயம் இருந்தது; என் அப்பாவின் எழுத்தில் நல்லதாக எதையும் காண எனக்குக் கிடைக்காதபடிக்கு, அடியாழத்தில் நானே நம்பத்தகுந்தவனல்ல என்ற பயம், பிற எழுத்தாளர்களால் என் அப்பா பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிடும் அபாயத்தையும் இது அதிகரித்து, நான் இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையையும், என் இருப்பையும், எழுதும் என் ஆர்வத்தையும், என் பணியையும் கேள்விக்குள்ளாக்கிய எனக்குப் பழகிப்போன அந்தப் பழைய விரக்தியில் என்னை மூழ்கடித்தது. எழுத்தாளனாக எனது முதல் பத்தாண்டுகளில் இத்தகைய சஞ்சலங்களை மிக ஆழமாக உணர்ந்து, எதிர்த்துப் போராடியிருக்கிறேன். ஒருநாள் நான் துறந்ததைப் போலவே, அமைதியின்மையால் துவண்டு, நாவல் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்ற பயம்.

என் அப்பாவின் சூட்கேஸை மூடி, நான் தூரவைத்தபோது எனக்குள் எழுந்த இரண்டு ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்: நாட்டுப்புறப் பகுதியில் தனித்துவிடப்பட்ட உணர்வும், நம்பகத்தன்மை என்னிடம் குறைந்திருக்கிறது என்ற பயமும். இவை உணரப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. பல வருடங்களாக என் வாசிப்பிலும் எழுத்திலும் இந்த உணர்வுகளை அவற்றின் எல்லா வகை மாதிரிகளையும், திட்டமிடப்படாத விளைவுகளையும், அவற்றின் நரம்பு முனைகளையும், அவற்றின் விசைகளையும், அவற்றின் பற்பல வண்ணங்களையும் ஆய்ந்து கண்டறிந்து, ஆழப்படுத்தி வந்திருக்கிறேன். வாழ்க்கையும் புத்தகங்களும் பெரும்பாலும் நான் இளைஞனாக இருந்த காலத்தில் என் மீது கொடுத்த குழப்பங்களாலும் கூருணர்வுகளாலும் மின்னலாக வெட்டும் வலிகளாலும் என் ஊக்கம் அதிர்வுற்றிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் எழுதுவதால் மட்டுமே நம்பகத்தன்மையின் பிரச்சனைகளையும் (My name is Red. The Black Book ஆகிய நூல்களில் போல) விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றியும் (Snow, lstanbul ஆகிய நூல்களில் போல) புரிந்து கொள்வதில் ஒரு முழுச் சுற்றுக்கு வந்தேன் எனலாம். நமக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை, நாமே சரிவர அறிந்திராத படிக்கான ரகசிய ரணங்களை, பொறுமையாக ஆராய்ந்து, அறிந்து, அவற்றின் மேல் ஒளியைப் பாய்ச்சி, இந்த வலிகளையும் காயங்களையும் வரித்து, நம் ஊக்கத்திற்கும் நம் எழுத்திற்கும் ஒரு பிரக்ஞை கொண்ட பகுதியாக அவற்றை ஆக்குவதும் அங்கீகரிப்பதும் தான் எழுத்தாளனாக இருப்பதன் கடமை என்று கருதுகிறேன்.

(2006 ஆம் வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்கிற்கு வழங்கப்பட்டபோது, ஸ்வீடிஷ் அகாதெமியில் டிசம்பர் 10,2006 அன்று பாமுக் நிகழ்த்திய உரை)

எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான். இந்த அறிவை ஆராய்வதும், அது வளர்வதைக் கவனிப்பதும் பரவசமூட்டும் ஒரு செயல்; ஒரே நேரத்தில் பரிச்சயமாகவும் மர்மமாகவும் இருக்கும் ஓர் உலகிற்குள் வாசகன் நுழைகிறான். எழுத்தாளன் ஓர் அறைக்குள் தன்னை வருடக்கணக்காக அடைத்துக் கொண்டு தன் பணியை_உலகம் ஒன்றை உருவாக்க_செப்பனிட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது ரகசிய ரணங்களை, அவனது துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்தினால், அவன் அறிந்தோ அல்லது அறியாமலோ, மனிதத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை வைக்கிறான். எல்லா மனிதர்களும் ஒருவரையருவர் ஒத்திருக்கின்றனர் என்ற இந்த குழந்தைத்தனமான, நம்பிக்கையூட்டும் நிச்சயத்தன்மையிலிருந்தே எல்லா உண்மை இலக்கியங்களும் எழுகின்றன. முடிவேயின்றி வருடக்கணக்காக ஓர் எழுத்தாளன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் அவன் ஒரே மனிதத்துவத்தை, மையமற்ற ஓர் உலகத்தை முன் வைக்கத் தொடங்குகிறான்.

ஆனால், என் அப்பாவின் சூட்கேஸையும் எங்கள் இஸ்தான்புல் வாழ்வின் வெளிறிய நிறங்களையும் பார்க்கையில் இந்த உலகத்திற்கு ஒரு மையம் இருக்கிறது, அது எங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த அடிப்படை உண்மை எவ்வாறு ஒரு செகாவ்தனமான சிற்றூர்தனத்தைத் தூண்டிவிடுகிறது என்பதையும், வேறொரு மார்க்கத்தில் இது என் நம்பகத்தன்மையை கேள்விகேட்பதற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகவே என் நூல்களில் விவரித்திருக்கிறேன். இவ்வுலகில் பெரும்பான்மையினர் இதே உணர்வுகளோடு வாழ்கின்றனர் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். அதேயளவு மனிதர்கள் என்னைவிட அதிகமான போதாமை உணர்வுகளாலும், பத்திரக் குறைவாலும், அவமான உணர்வாலும் அவஸ்தையுற்றிருக்கின்றனர் என்பதையும் அறிவேன். ஆம், மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மகத்தான பிரச்சனைகளாக நிலமின்மையும், வாழ்விடமின்மையும், பசியும்தான் இன்றளவும் இருக்கின்றன…. ஆனால் இத்தகைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி இன்று நமது தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் இலக்கியத்தைவிட மிக வேகமாக, எளிமையாக நமக்குக் கூறி விடுகின்றன. இன்று இலக்கியம் சொல்லவும், ஆராயவும் வேண்டிய மனிதகுலத்தின் அடிப்படை பயங்கள்; வெளியே தனித்து விடப்படும் பயம், ஒன்றுமில்லாததற்காக தண்டிக்கப்படும் பயம். இத்தகைய பயங்களோடு சேர்ந்துவரும் மதிப்பிழக்கப்பட்ட உணர்வுகள்; கூட்டு அவமானங்கள், வடுப்பாடுகள், புறக்கணிப்புகள், மனத்துயர்கள், உணர்வினைகள், கற்பனை அவமானங்கள், தேசியவாத எக்களிப்புகள், தற்பெருமைகள்… இத்தகைய மிகு உணர்ச்சிகளும், இவை வழக்கமாக வெளிப்படுத்தும் பகுத்தறிவற்ற மிகைக்கூற்றுகளும் என்னைத் தாக்கும் போதெல்லாம் எனக்குள்ளிருக்கும் ஓர் இருண்மையை அவை தீண்டுவதாக அறிகிறேன். மேலை உலகிற்கு வெளியேயிருக்கும் மக்கள், சமுதாயங்கள், தேகங்கள் தமது அவமதிப்பு பயங்களாலும், மிகையுணர்வுகளாலும், தீவிரமாக பாதிப்புற்று, மதிகேடான காரியங்களைப் புரிவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அவர்களை எளிதாக என்னுடன் சேர்த்து அடையாளம் கண்டுகொள்கிறேன். அதே விதமான எளிமையுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளும் மேற்குலகிலும் தேசங்களும் மக்களும் தமது செல்வம், மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த பெருமை, அறிவு விளக்கம், நவீனத்துவம் போன்றவை எழுப்பும் பெருமிதத்தால் சுயதிருப்திக்கு ஆளாவதும் அதே விதமான மதிகேடுதான்.

இதற்குப் பொருள், என் அப்பா மட்டுமல்ல நாமெல்லோருமே ஒரு மையம் உடைய உலகத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறோம் என்பது. அறைக்குள் நம்மைப் பூட்டிக் கொண்டு வருடக் கணக்காக முடிவின்றி எழுதுவதற்கு நம்மை வற்புறுத்துவது இதற்கெதிரான ஒரு நம்பிக்கை; உலகெங்குமுள்ள மனிதர்கள் ஒருவரையருவர் ஒத்திருப்பதால் நம் எழுத்துக்கள் ஒரு நாள் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை. ஆனால், என் சொந்த எழுத்திலிருந்தும் என் அப்பாவின் எழுத்திலிருந்தும் நான் அறிந்து கொண்டது என்னவென்றால், விளிம்புகளில் முடக்கப்பட்டதாலும், வெளியே தனித்து விடப்பட்டதாலும் கோபக்கறை படிந்து சிதைக்கப்பட்டிருக்கும் ஒரு நன்னம்பிக்கை இதுவென்பதே. தன் வாழ்க்கை முழுக்க தாஸ்தயேவ்ஸ்க்கிக்கு மேற்கின் மீதிருந்த அன்பும் வெறுப்பும் ஒன்று கலந்த உணர்வை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆதாரமான உண்மை ஒன்றை நான் பற்றியிருந்தால், நன்னம்பிக்கைக்கு எனக்கு காரணமிருந்தால், அதற்கு காரணம் இந்த மாபெரும் எழுத்தாளரோடு மேற்கின் மீதிருந்த அவரது அன்பு வெறுப்பு உறவின் வழியாகப் பயணித்து, மறுபக்கத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த மற்ற உலகத்தை நான் கைக்கொண்டதேயாகும்.

இப்பணியில் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்: நமது அசலான நோக்கம் எதுவாயிருப்பினும் வருடக் கணக்காக நம்பிக்கையோடு எழுதி, நாம் படைக்கும் உலகம் இறுதியில் பெரிதும் வேறுபட்ட மற்ற இடங்களுக்குத்தான் போகப்போகிறது. துக்கமும் கோபமுமாக நாம் பணியாற்றிய மேசையிலிருந்து நம்மை வெகு தொலைவிற்கு, வேறோர் உலகத்தின் துக்கமும் கோபமும் கொண்ட மறுபக்கத்திற்கு அது கொண்டு செல்கிறது. அத்தகைய ஓர் உலகத்தை என் அப்பாவால் தனியாகவே அடைந்திருக்க முடியாதா? ஒரு நிலப்பரப்பு மெதுவாக உருக்கொள்வதைப் போல, நீண்டதொரு கடற்பிரயாணத்திற்குப் பின் மூடுபனியிலிருந்து அதன் எல்லா வண்ணங்களோடும் மெதுவாக எழும்புகிற ஒரு தீவைப்போல இந்த மற்ற உலகம் நம்மை மயக்கி வயப்படுத்துகிறது; தெற்கிலிருந்து பயணம் செய்து இஸ்தான்புல்லிற்கு வந்த மேலைநாட்டு யாத்ரீகர்கள் அது மூடுபனியிலிருந்து எழும்பிப் புலப்பட்டதைப் பார்த்துத் திகைப்புற்றதைப் போல. நம்பிக்கையும் ஆர்வமுமாகத் தொடங்கிய ஒரு பயணத்தின் இறுதியில், இதோ அவர்களுக்கு முன்னால் மசூதிகளும், பள்ளிவாசல் ஸ்தூபிகளுமாக விதவிதமான வீடுகளும், தெருக்களும், குன்றுகளும், பாலங்களும், சரிவுகளுமாக ஒரு முழு உலகமே அவர்கள் முன் விரிகின்றது. அதைக் கண்ட பின்பு இந்த உலகிற்குள் நுழைந்து அதற்குள் நம்மைத் தொலைத்துக் கொள்வதைப் போல ஒரு புத்தகத்தையும் அணுகுகிறோம். விலக்கப்பட்டவர்களாக, விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக நம்மை உணர்ந்து கோபத்துடனும், ஆழ்ந்த மனக்கசப்புடனும் ஒரு மேசையில் அமர்ந்தபின்பு இந்த மிகையுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முழு உலகத்தை நாம் கண்டடைகிறோம்.

இப்போது நான் உணர்வது, சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த போது உணர்ந்ததற்கு நேரெதிரானது: என்னைப் பொறுத்தவரை உலகத்தின் மையம், இஸ்தான்புல். இது நான் பிறந்ததிலிருந்து அங்கேயே வாழ்ந்து வருவதால் சொல்வதல்ல. கடந்த 33 வருடங்களாக அதன் தெருக்கள், அதன் பாலங்கள், அதன் மனிதர்கள், அதன் நாய்கள், அதன் வீடுகள், அதன் மசூதிகள், அதன் நீரூற்றுகள், அதன் விநோதமான நாயகர்கள், அதன் சரிவுகள், அதன் பிரபலமான பாத்திரங்கள், அதன் இருட்டுப் பகுதிகள், அதன் பகல்கள், அதன் இரவுகளை வர்ணித்து அவற்றை என் பகுதியில் ஒன்றாக்கி, அனைத்தையும் அரவணைத்து வந்திருக்கிறேன். என் கைகளால் உருவாக்கிய இந்த உலகம், என் தலையில் மட்டும் வாழ்ந்து வந்த இந்த உலகம், நான் உண்மையில் வாழ்கின்ற நகரத்தை விட நிஜமானதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஒரு கட்டமும் வந்தது. என் கற்பனையிலோ, அல்லது புத்தகங்களிலோ மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல் தமக்காகவே வாழ்வதுபோல இதன் மனிதர்களும், தெருக்களும், பொருட்களும், கட்டிடங்களும் தமக்குள் பேசிக்கொள்ளவும், நான் எதிர்பாரா வகையில் அவை ஊடாடவும் செய்தபோது நடந்தது இது. ஊசியை வைத்துக் கொண்டு ஒரு கிணற்றைத் தோண்டுவது போல நான் உருவாக்கிய உலகம் மற்றனைத்தையும் விட நிஜமாகத் தோன்றியது அப்போதுதான்.

இந்த வகையான மகிழ்ச்சியை அவர் எழுதிக் கொண்டிருந்த வருடங்களிலும் என் அப்பா கண்டிருக்க வேண்டுமென்று அவர் சூட்கேஸைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. நான் அவரை முன் தீர்ப்பிடக் கூடாது. என்ன இருந்தாலும் நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அதிகார தோரணையில், தடையுத்தரவளித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தண்டித்துக் கொண்டிருந்த சாதாரண அப்பாவாக இருந்ததில்லை. எப்போதுமே என்னை சுதந்திரமாக அனுமதித்து எப்போதுமே அதிகபட்ச மதிப்பையும் காட்டுபவராக இருந்தவர். என் கற்பனையிலிருந்து சுதந்திரமாகவோ அல்லது குழந்தைத்தனமாகவோ அவ்வப்போது எதையாவது தீட்டிக்கொண்டிருந்தேனென்றால், அதற்குக் காரணம் சிறு பிராயத்திலும் இளமைப்பருவத்திலும் எனக்கிருந்த பெரும்பாலான நண்பர்களைப் போலில்லாமல், எனக்கு என் அப்பாவைப் பற்றி எந்த அச்சமும் இருந்ததில்லை என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளனாக ஆனதற்கே, என் அப்பா அவரது இளமையில் எழுத்தாளனாக விரும்பியதுதான் காரணம் என்றும் சில நேரங்களில் நம்புகிறேன். அவரைப் பொறுமையுடன் நான் படித்தாக வேண்டும் _ அந்த ஓட்டல் அறைகளில் அவர் எழுதியவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

இந்த நம்பிக்கையூட்டும் நினைவுகளோடு என் அப்பா வைத்த இடத்திலேயே இன்னமும் இருக்கிற அந்த சூட்கேஸை நெருங்கினேன். என் மன உறுதி அனைத்தையும் உபயோகித்து சில கைப்பிரதிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். எதைப்பற்றி என் அப்பா எழுதியிருக்கிறார்? பாரீஸ் நகர ஓட்டல்களின் சில ஜன்னல்கள் வழி காட்சிகள், சில கவிதைகள், முரணுரைகள், அலசல்கள்… இவற்றை எழுதும்போது சாலை விபத்தில் சிக்கிய ஒருவனைப்போல, எப்படி நிகழ்ந்தது என்று ஞாபகம் வராமல் தவித்துக் கொண்டு, அதே நேரத்தில் அளவிற்கதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்கிற அபாயத்திலும் காலெடுத்து வைப்பதுபோல உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சச்சரவு துவங்கப்போவதாக இருந்தால்_அவர்கள் அப்போது அந்தப் பயங்கரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுவர்_என் அப்பா சட்டென்று ரேடியோவைப் போட்டுவிடுவார். சங்கீதம், சூழலை மாற்றி அதை வேகமாக மறந்துபோக எங்களுக்கு உதவிசெய்யும்.

அந்த சங்கீதத்தைப் போலவே சூழலை மாற்றுவதற்கு சில இனிய வார்த்தைகளைக் கூறலாம் என்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல எழுத்தாளர்களான எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி: ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்? எழுதுவதற்கு உள்ளார்ந்த தேவை ஒன்று என்னிடம் இருப்பதால் நான் எழுதுகிறேன்! மற்றவர்களைப்போல என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன். நான் எழுதுவதைப் போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும், எல்லோரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன். ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டு நாளெல்லாம் எழுதுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன். நிஜவாழ்க்கையை மாற்றுவதன் மூலமே என்னால் அதில் பங்குகொள்ள இயலும் என்பதால் எழுதுகிறேன். இஸ்தான்புல்லில், துருக்கியில், எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்பதை மற்றவர்கள், நம்மெல்லோரும், மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன். பேப்பர், பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன். வேறு எதனையும் விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் எழுதுகிறேன். அது ஒரு பழக்கம், ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன். நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன். எழுத்து அழைத்து வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன். தனியாக இருப்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன், எல்லோர் மீதும் ஏன் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம். நான் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால், அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன். நூலகங்களின் சாஸ்வதத்தைப் பற்றியும், அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன். வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன். ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன். நான் போகவேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால்_ ஒரு கனவில் வருவதைப்போலவே _ அங்கே என்னால் அடையவே முடியாதிருக்கிறது என்ற துர்சகுணத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன். என்னால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன். சந்தோஷமாக இருப்பதற்காக எழுதுகிறேன்.

அவர் என் அலுவலகத்திற்கு வந்து சூட்கேஸை வைத்துவிட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்து என் அப்பா மீண்டும் என்னைப் பார்க்க, எப்போதும் போல் ஒரு சாக்லேட் பொட்டலத்தோடு வந்தார். (எனக்கு 48 வயதாகிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்). எப்போதும் போல நாங்கள் வாழ்க்கை, அரசியல், குடும்ப சமாச்சாரங்கள் என்று அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவின் கண்கள் அவரது சூட்கேஸை வைத்திருந்த மூலைக்குச் சென்ற தருணமும் வந்தது. அதை நகர்த்தி வைத்திருக்கிறேன் என்பதைக் கவனித்து விட்டார். எங்கள் பார்வைகள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. ஒரு நிசப்தம் அங்கே அழுத்தமாகப் பின் தொடர்ந்தது. சூட்கேஸைத் திறந்து, அதில் உள்ளவற்றைப் படிக்க முயற்சி செய்தேன் என்பதை அவரிடம் கூறவில்லை; பதிலாக பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டதைப் போல. அவர் புரிந்து கொண்டு விட்டார், என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல. ஆனால், இந்தப் புரிந்து கொள்ளல் எல்லாமே பதினைந்து விநாடிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வரை தான் சென்றது. என் அப்பா ஒரு குதூகலமான, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை மிக்க மனிதர். எப்போதும் போலவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் எப்போதுமே என்னிடம் கூறுகிற இனிமையான, ஊக்கமளிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கூறினார், ஒரு அன்பான அப்பாவைப் போலவே.

எப்போதும் போலவே அவர் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும் போது அவரது அக்கறையற்ற, எதற்கும் கலங்காத மனோபாவத்தை எண்ணி பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் அன்றைய தினம் என்னை வெட்கமுறச்செய்த ஒரு சந்தோஷக் கீற்றும் எனக்குள் இருந்தது. ஞாபகமிருக்கிறது. அவருக்கு வாய்த்த அளவுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை, அவருக்கிருந்தளவுக்கு சந்தோஷமான அல்லது சுகவாசியாக ஒரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கவில்லை, என் வாழ்க்கை மொத்தத்தையும் எழுதுவதற்கு மட்டுமே நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்ற நினைப்பு_நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்துவிட்டது இல்லையா… என் அப்பாவை முன் வைத்து இப்படியான விஷயங்களை யோசிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. என் வலிகள் எதற்கும் என் அப்பா காரணமாக இருந்ததில்லை. என்னை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். இவையெல்லாமே எழுதுவதும் இலக்கியமும் நம் வாழ்க்கையின் மையத்தில் உள்ள பற்றாக்குறை ஒன்றோடும், சந்தோஷமும் குற்றவுணர்வுமான நம் உணர்வுகளோடும் ஆழமாகப் பிணைந்திருக்கிறது என்று நமக்குக் காட்டுகின்றன.

ஆனால் என் கதையிலிருந்த ஒரு சரிச்சீரமைவு அன்றைய தினம் வேறொன்றை நினைவுபடுத்தி அது இன்னமும் அதிகமான குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்தது. அவரது சூட்கேஸைத் தந்துவிட்டுச் சென்றதற்கு இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு, என இருபத்திரெண்டாவது வயதில் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு ஒரு நாவலாசிரியனாக முடிவெடுத்து ஓர் அறைக்குள் என்னை அடைத்துக் கொண்டு எனது முதல் நாவலான Cevdet Bey and sons  ஐ முடித்ததற்கு நான்கு வருடங்கள் கழித்து, அப்போது இன்னமும் வெளி வந்திராத நாவலின் தட்டச்சுப் பிரதியை கைகள் நடுங்க என் அப்பாவிடம் கொடுத்து படித்துப் பார்த்து அவர் அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டிருக்கிறேன். அது, அவர் ரசனையின் மீதும், அறிவுக் கூர்மையின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமல்ல, அவரது அபிப்பிராயம் எனக்குப் பெரிதும் முக்கியமானது. என் அம்மாவைப்போல நான் எழுத்தாளனாக விரும்பியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் என் அப்பா எங்களோடு இல்லை, வெகுதூரத்தில் இருந்தார். அவர் திரும்பி வருவதற்காக பொறுமையிழந்து நான் காத்திருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வந்ததும் கதவைத் திறக்க ஓடினேன். என் அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் உடனே கைகளை விரித்து என்னை ஆரத் தழுவிக் கொண்டது அவர் அதை வெகுவாக ரசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. மகத்தான உணர்ச்சித் தருணங்களில் உடன் வருவது போன்ற ஒரு சங்கடமான மௌனம் கொஞ்ச நேரத்திற்கு எங்களை மூழ்கடித்தது. பின் அமைதியடைந்து பேசத் தொடங்கினோம். என் அப்பா பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட, மிகையான பாஷையில், அவர் என் மீதோ அல்லது எனது முதல் நாவல்மீதோ வைத்திருந்த நம்பிக்கையைக் கூறத் தொடங்கினார். இங்கே மகத்தான பெருமிதத்துடன் நான் பெறுவதற்கு வந்திருக்கும் பரிசை ஒருநாள் நான் வென்றெடுப்பேன் என்று அவர் கூறினார்.

அவரது நல்லபிப்பிராயத்தைச் சொல்லி என்னைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இந்தப் பரிசை ஒரு லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ அவர் இதைக் கூறவில்லை; அவர் ஒரு துருக்கிய அப்பாவைப்போல, தன் மகனுக்கு ஆதரவளித்து, ‘ஒருநாள் நீ ஒரு பாஷா ஆகப்போகிறாய்!’ என்று விளக்கமளித்து கூறினார். பின் பல வருடங்கள், எப்போது என்னைப் பார்த்தாலும் இதே வார்த்தைகளைத்தான் கூறி எனக்கு விளக்கமளிப்பார்.

என் அப்பா டிசம்பர் 2002_ல் காலமானார்.

இன்று ஸ்வீடிஷ் அகாதெமிக்கும், இந்த மாபெரும் பரிசை_ இம் மகத்தான மேன்மையை _ எனக்களித்திருக்கும் பெருமைமிக்க உறுப்பினர்களுக்கும் அவர்களின் புகழ்மிக்க விருந்தினர்களுக்கும் முன்னால் நான் நிற்கும் போது, இங்கே நம்மிடையே அவர் இருக்கக் கூடும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.

Posted in Award, Essay, Fiction, Kumudam, Kumudham, Kumutham, Lecture, Literature, Nobel, Novel, novelist, Orhan, Orhan Pamuk, Pamuk, Prize, Talk, Tamil, Theeranadhi, Theeranadhy, Theeranathi, Theeranathy, Thiranathi, Thiranathy, Translation, Turkey, Turkish, Winner | 2 Comments »

NYU professor Srinivasa SR Varadhan awarded 2007 Abel Prize in mathematics

Posted by Snapjudge மேல் மார்ச் 29, 2007

ஆபல் பரிசு

“கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்று மதிப்புடன் குறிப்பிடப்படும் ஆபல் பரிசு, கணிதத்தில் தனிப்பெரும் சாதனை புரியும் மேதைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். நோபல் பரிசு போலவே மிக உயர்ந்த பரிசுத் தொகை (ரூ.4.5 கோடி) கொண்டது.

நார்வே நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் நினைவாக, ஆண்டுதோறும் ஆபல் பரிசு வழங்கப்படும் என 2001-ல் நார்வே அரசு அறிவித்தது. 2003-ம் ஆண்டு முதன் முதலில் ஆபல் பரிசு வழங்கப்பட்டது.

நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (1802-1829), நமது நாட்டு மேதை ராமானுஜத்தைப் போலவே, மிக இளம் வயதிலேயே கணிதத்தில் பல சாதனைகள் புரிந்தவர். ராமானுஜத்தைப் போலவே மிக இளம் வயதிலேயே காச நோயால் தாக்கப்பட்டு உயிரைப் பறிகொடுத்தவர். அபிலியன் சார்பு, அபிலியன் குலம், அபிலியன் தேற்றம் போன்றவை கணிதத்துக்கு ஆபலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

கணிதத்துக்கு நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே “ஆபல் பரிசு’ உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இரண்டாம் ஆஸ்கர் என்ற மன்னர் அதற்கான நிதியுதவி செய்ய முன்வந்தார். ஆனால் நார்வே மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து 1905-ல் ஆபல் பரிசுத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நார்வே “ஆபல் பரிசை’ அறிவித்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற 5 கணித மேதைகள் கொண்ட குழு, நார்வே அறிவியல் கழகத்தின் சார்பில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான ஆபல் பரிசைப் பெற்றவர் சென்னையில் பிறந்த, அமெரிக்க வாழ் கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசா எஸ் வரதன்.

“ஃபீல்ட்ஸ் மெடல்’ எனும் பரிசும் கூட, கணிதத்துக்கான நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வழங்கப்படுவதாகும். இதேபோல், சுவீடன் அரச கழகம் 1982 முதல் வழங்கி வரும் “கிராஃபூர்டு பரிசு’, 2004 முதல் வழங்கப்பட்டு வரும் “ஷா பரிசு’ போன்றவையும் கணிதத்துக்கான நோபல் பரிசு என்றே வர்ணிக்கப்படுகின்றன.

Posted in Abel, Award, Chennai, mathematics, Maths, Nobel, Prize, probability | Leave a Comment »

Kalki & Nellai Su Muthu – Women’s Day Special

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

பெண் தெய்வங்கள் இருக்கும் திக்கு நோக்கி, பயபக்தியுடன் தண்டம் சமர்ப்பிக்கும் அடியார்களில் அடியேனும் ஒருவனாகிச் சிறிது
காலமாயிற்று.

என்னைப் பொருத்த அளவில், உலகில் சாதாரண ஸ்திரீகள் யாருமே
கிடையாது. எல்லாரும் மாதரசிகள், பெண்மணிகள், ஸ்திரீ ரத்தினங்கள், பெண் தெய்வங்கள், இன்ப விளக்குகள், இளங்குயில்கள், பொன்
மயில்கள்தான். உலகம் இத்தகைய ஆனந்தக் காட்சியாக அடியேனுக்குத் தோற்றம் அளிப்பதற்கு முக்கியக் காரண புருஷர்கள் கவி சுப்பிரமணிய பாரதியும், திரு.வி.கலியாண சுந்தர முதலியாருமேயாவர். படிக்கப் படிக்க, மிகவும் சாதாரண ஸ்தீரிகளெல்லாம் என் கண்முன்னே தெய்வ மகளிராகக் காட்சி தரலாயினர்.

ஆரம்பத்தில், மேற்கூறிய பெரியார்களுடனே நான் முற்றும் மாறுபட்ட குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

‘‘நல்ல
காதல் புரியும் அரம்பையர்
போலிளம்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு’’

எனும் பாரதியார் பாட்டின் அடிகளை முதன்முதலில் நான் கேட்டபோது, இதைப் போன்ற வெள்ளைப் புளுகு அல்லது பச்சைப் பொய் – உலகில் வேறொன்றும் கிடையாது என்று எண்ணினேன். தற்கால தமிழ்நாட்டின் இளங்கன்னியர் அரம்பைகளல்லர் என்பது சர்வ நிச்சயம். அவர்கள் காதல் புரிவதில்லையென்று கோயிலில்
விளக்கு வைத்து அணைப்பேன்.
தமிழ்நாடு மற்ற எத்தனையோ
துறைகளில் மேன்மை பெற்றிருக்கலாம். ஆனால், பெண்களின் அழகுக்கு நமது நாடு பெயர் போனதல்ல. இச் சிறப்பை கேரளம், சிந்து, காஷ்மீரம் போன்ற நாடுகளுக்குக் கொடுத்து விடத் தான் வேண்டும். மேலும், இந் நாளில் நமது பெண்களுக்குக் கன்னிப் பருவத்தில் காதல் புரியும் சந்தர்ப்பம்தான் ஏது? ‘பாரதியார் ஏன் இவ்வளவு பச்சைப் பொய் சொல்கின்றார்?’ என்று இவ்வாறு சிந்திக்கலானேன்.

ஸ்திரீகளைப் ‘‘பெண்மணிகள்’’ என்றும், ‘‘பெண் தெய்வங்கள்’’ என்றும் ‘‘மாதரசிகள்’’ என்றும் திரு.வி.க. முதலியோர் புதுத் தமிழில்
சொல்கின்றார்கள் என்னும் சந்தேகமும் முதலில் எனக்கிருந்தது.
ஆண்களைப் பற்றிச் சொல்லுங்கால், ‘‘ஆடவ தெய்வங்கள்’’ என்றாவது, ‘‘ஆண்மணிகள்’’ என்றாவது, ‘‘ஆணரசர்கள்’’ என்றாவது சாதாரணமாகச் சொல்கிறோமா? கிடையாது. பழைய நூல்களிலே ‘‘புருஷ வியாக்ரம்’’, ‘‘ஆண் சிங்கம்’’, ‘‘இளங்காளை’’ போன்ற சொற்றொடர்கள் வருவது உண்மை. ஆனால் ஆண்மகனுக்கு இவையெல்லாம் சிறப்பா, இழிவா என்பதே ஐயத்துக்கிடமானது. அறிவுக்கே சிறப்பு மிகுந்த இந்நாளில் யாரையாவது பார்த்து ‘‘அடே ஆண் புலியே! ஏ இளம் மாடே!’’ என்று அழைப்போமாயின் அவன் உண்மையிலேயே புலியின் குணமும், மாட்டின் குணமும் பெற்று அறையவோ, முட்டவோ வந்தால்
ஆச்சரியப்படுவதற்கில்லை. நல்ல வேளையாக, இவ்வழியில்
ஆண்களைச் சிறப்பிப்போர் இந் நாளில் யாரும் கிடையாது.

பாரத நாட்டில் நான் அறிந்த வரையில் புருஷர்களுக்குள்ளே
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒருவர்தான் ‘‘தேவர்’’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுள்ளார். ஆனால் ஸ்திரீகளிலென்றால், எல்லாரும் கமலாதேவி, விமலாதேவி, லக்ஷ்மிதேவி, பார்வதி தேவி, ருக்மணி தேவி, சகுந்தலா தேவிதான். ஏன்?

பெண் தெய்வங்காள்! மன்னியுங்கள். இந்தச் சந்தேகங்களெல்லாம்
பின்னால் எனக்குப் பூரணமாய் நிவர்த்தியாகிவிட்டனவென்று
தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியிருந்தாலும் தமிழ்நாடு நமது நாடு. தமிழ்நாட்டுப் பெண்கள் நமது சகோதரிகள். எனவே, பாரதியார்
பாடியதில் தவறு என்ன? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா? ‘‘மணி’’ என்றால் பொன் மணியாய்த்தான் இருக்க வேண்டுமா? கருமணி அல்லது நீலமணியாகவும் இருக்கலாமன்றோ? பார்க்கப் போனால், ரூப சௌந்தரியத்தில் என்ன இருக்கிறது? குண சௌந்தரியமன்றோ உண்மை சௌந்தரியமாகும்! கல்வியழகே யழகு! கற்பின் புகழே புகழ்! நமது இளங்கன்னியர் புரியும் காதலைப் பாடியபோது, பாரதியார் கேவலம் கீழ்த்தர நாவல்களில் காணப்பெறும் இழிவான காதலையா குறிப்பிட்டார்? இல்லை; இல்லை. தமிழ்ப் பெண்களின் காதல், இல்வாழ்க்கையோடியைந்த உயர் காதலாகும் _ என் உள்ளத்திலே பெரியதொரு புரட்சி உண்டாயிற்று. எவ்வளவு பெரிய புரட்சியெனில் வங்கத்தின் பிரபல நாடகாசிரியரான துவிஜேந்திரலால் ராய் என்பவர் ஓரிடத்திலே,

‘‘பகவானே! பெண் தெய்வங்களைப் படைத்து இவ்வுலகை இன்பமயமாக்கிய நீ, அவ்வின்பத்தைக் கெடுப்பதற்கு இந்த ஆண்
மிருகங்களை ஏன் படைத்தாய்?’’

என்று எழுதியிருந்ததைப் படித்தபோது, ‘‘உண்மை! உண்மை!’’ என்று கதறினேன்.

ஏ! ஆண் மிருகங்காள்! பெண் தெய்வங்களைப் போற்றுங்கள்.

– ‘பெண் தெய்வங்கள்’
வானதி வெளியீடு

======================================================

அறியாப் பெண்களின் அறிவியல் முகங்கள்

நெல்லை சு. முத்து

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நோபல் பரிசு பெற்ற உலகின் முதலாவது பெண் விஞ்ஞானி மேரி ஸ்கலோதோவ்ஸ்கா கியுரி (1867 – 1934). ரேடியம், பொலோனியம் ஆகிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்.

முதன்முறையாக இரண்டு தடவை பரிசு வென்ற முதல் பெண்ணும் இவர்தான். இயற்பியலுக்கும் (1903) வேதியியலுக்கும் (1911) பரிசுகள். இத்தனைக்கும் நான்கு வயதிலேயே தாயை இழந்தவர்.

ஆனால், உலக வரலாற்றில், அறிவியல் துறையில், முதல் “முனைவர்’ பட்டம் பெற்றவரும் இவரே. பாரீஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியர். இவரது கணவர் பியரி கியுரியும் நோபல் விருது பெற்றவர். மகள் ஐரின் கூட 1935 ஆம் ஆண்டு வேதியியலில் நோபல் வென்றவர். உன்னத நோபல் குடும்பம்.

பிரெஞ்சு அறிவியல் அகாதமிக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவரது போட்டியாளர் எட்வார்டு பிரான்லி என்கிற கத்தோலிக்க வேட்பாளரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். காரணம் அவர் ஒரு யூதப் பெண்மணியாம். நிறுவன அதிபர் எம். அமாபாத், “பெண்கள் பிரெஞ்சு நிறுவனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது’ என்றே அறிவித்தார். ஆயினும் மேரி கியுரி தன் அறிவியல் ஆய்வுகளைத் தொடர்ந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுப் பொருள்களுடன் ஆய்வு நடத்தியதால் கண்புரை, விரல் சிதைவு, ரத்தசோகை போன்ற நோய்கள் பாதித்து மரணம் அடைந்தார்.

இன்னொரு வகையில் ஆராய்ந்தால் நோபல் பரிசைப் பொருத்தமட்டில் ஆணாதிக்கம் சொல்ல வேண்டியது இல்லை. 671 முறை ஆண் விஞ்ஞானிகள். வெறும் 29 முறை மட்டுமே பெண் விஞ்ஞானிகள். இவர்களில் கூட சமாதானத்திற்காகவும், இலக்கியத்திற்காகவும் முறையே 10, 9 பெண்மணிகள் புகழ் பெற்றனர். ஏனையோரில் 5 பேர் மருத்துவம், இருவர் வேதியியல், ஒருவர் இயற்பியல், ஏற்கெனவே குறிப்பிட்ட கியுரி அம்மையார் மட்டும் இரண்டு முறை.

ஏனோ தெரியவில்லை. இன்றுவரை பொருளாதாரத் துறைக்கு நோபல் பரிசு பெறவில்லை என்பது ஒரு வினோதக் குறிப்பு.

உலக அளவிலும் பெண் விஞ்ஞானிகள் ஓரங்கட்டப்படுவது ஓர் அதிர்ச்சித் தகவல். நோபல் தகுதி கொண்டு இருந்த ராச்சேல் கார்சன் என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர் பெண்ணை யாருக்கும் தெரியாது. அணுகுண்டு சோதனைக்குத் தடை விதிக்கப் பாடுபட்டு 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லினஸ் பாலிங் தெரியும். அவருடன் ஊர்ஊராகப் பிரசாரம் செய்த துணைவியார் அவாஹெலன் தனியே சிறப்புப் பெறவில்லை.

பிரான்சிஸ் எச்.க்ரிக், ஜேம்ஸ் டி வாட்சன், மௌரிஸ் எச். வில்கின்ஸ் ஆகியோர் கண்டு துலக்கிய டி.என்.ஏ. மரபணுவின் ஏணித் தோற்றம் மரபியலில் பிரபலம். மூவருக்கும் 1962 ஆம் ஆண்டு உடலியங்கியல் அல்லது மருத்துவம் என்கிற பிரிவின்கீழ் நோபல் பரிசு வழங்கப் பெற்றது.

ஆனால் டி.என்.ஏ. கட்டமைப்பு குறித்த எக்ஸ்கதிர் படிகவியல் நிரூபணம் வழங்கியவரை உலகம் அறியாது. உண்மையில் 1962 ஆம் ஆண்டின் நோபல் பரிசு ரோசலிண்ட் எல்சி ஃப்ராங்ளின் என்னும் பெண் விஞ்ஞானிக்கும் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால் அவரும் அதற்குள் 37ஆம் வயதிலேயே புற்றுநோயால் இறந்து போனார்.

விண்வெளியில் அண்டக் கதிர்வீச்சு மற்றும் துடிப்பு விண்மீன்களைக் கண்டறிவதற்காக அந்தோனி ஹூவிஷ், மார்ட்டின் ரைல் ஆகியோருக்கு 1974 ஆம் ஆண்டு நோபல் பரிசு. அவர்களின் முன்னோடியாக முதலில் இவற்றைக் கண்டுபிடித்த மாணவி ஜோசிலைன் பெல் நிலை கேள்விக்குறிதான்.

அது மட்டுமா; 1944 ஆம் ஆண்டு அணுக்கருப் பிளவு குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கு நோபல் பரிசு வென்றவர் ஓட்டோ ஹான். அமெரிக்காவின் மன்ஹாட்டன் திட்டத்தில் அவருடன் பணியாற்றிய லீஸ் மெய்த்னர் அங்கீகாரம் பெறவே இல்லை.

நம் நாட்டிலோ நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமக்கள் நால்வர். சர் சி.வி. ராமன் (இயற்பியல், 1930), ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம், 1913), அமார்த்திய சென் (பொருளாதாரம், 1998), அன்னை தெரசா (சமாதானம், 1979) ஆகியோர். அதிலும் இந்தியாவின் ஒரே ஒரு நோபல் பரிசுப் பெண் என்ற பெருமைக்கு உரியவர் துருக்கியில் பிறந்தவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர். இவர்கள் நால்வருக்குமே பெரும்பாலும் வங்காளம் அல்லது கோல்கத்தாதான் பணிக் களம்.

எப்படியோ, சர்வதேச அளவில் இன்னோர் உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் சார்ந்த பருவங்கள், நோய் சார்ந்த மருந்துகள், மூளை சார்ந்த எண்ணங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உண்டு.

இதனாலேயே 1991 ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் “மகளிர் உடல்நல முன்நடவடிக்கை’ என்கிற தொலைநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் ஐம்பதுக்கும் எண்பதுக்கும் உள்பட்ட 1.61 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டு விட்டனர். நம் நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்களும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளலாம்.

ஐரோப்பாவின் வாலென்டைன் நினைவுதாம் முக்கியமா? இந்த வாலென்டைன் யார் என்றுதானே. ரோம் நாட்டில் இரண்டாம் கிளாடியஸ் அரசருக்குத் தெரியாமல் உள்ளூர் வாலிபர்களுக்குத் திருட்டு விவாகம் நடத்தி வைத்த புண்ணியவான். ராஜத் துவேஷச் செயலில் ஈடுபட்டவர்தான் இந்த வாலென்டைன்.

அவர் நினைவு 1700 ஆண்டு நீள் உறக்கத்தில் இருந்த இந்தியக் காதலர்களுக்கு இப்போதுதான் பொத்துக் கொண்டு வந்தது. இன்று நாய்க்குட்டியிடம் அன்பு செலுத்தவும் வாலென்டைன் ஆசீர்வாதம் வேண்டிக் காத்து இருக்கிறோம். உயிர்களிடத்து அன்பு வேணும் என்கிற பாரதி தெரியாது. வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடிய வள்ளலார் அன்பு தினம் அறியோம். மக்கள்தொகைப் பெருக்கும் காதலர் தினம் மட்டும் கடற்கரையில் கற்போம். வேறு வழியே இல்லை பாருங்கள்.

இளைஞர்களே, இரவில் கண்விழித்துப் பாடம் படித்தால் உழைப்பு. படம் பார்த்தால் கொழுப்பு. நடுமூளையில் பீனியல் சுரப்பி ஒன்று ஒவ்வொருவர் மண்டைக்கு உள்ளும் இருக்கிறது. அதில் இருந்து சுரக்கும் மெலாட்டோனின் ஹார்மோன் நீர் பெருகினால் உறக்கம் கண்ணைச் சொக்கும். விடலைப் பருவத்தினருக்கு அது நடுராத்திரியில் தாமதமாகச் சுரக்கிறதாம். அதனாலேயே இரவு எல்லாம் கண் துஞ்சாமல் காலையில் உறங்குகிறார்கள் என்றோர் ஆய்வு.

ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம் வருகிறது. ஆனால் “ராமன் விளைவு’ பற்றி ஊடகங்கள் எதுவும் கண்டு கொண்டதாக இல்லை. “வாலென்டைன் விளைவு’ காதலர் தினம் கொண்டாடினால் தான் அன்பு மலர்கிறதாம். சின்னக் கடைகளுக்கு வாழ்த்து அட்டைகள் வியாபாரம்.

சொந்தச் செலவில் வெளிநாட்டுப் “பெரிய சகோதரர்கள்’ வீட்டில் தங்கி அவமானப்படுவதே நம் பாரத வீராங்கனைகளின் சாதனை. மானம் கெட்டுப்போய் பரிசு வாங்குவதுதான் இனவெறித் தாக்குதலுக்கு எதிரான வெற்றியாமே.

பொதுவாக, ஆண்கள் தங்களை ஒரு பெரும் சமூக அமைப்பின் அங்கமாகக் கருதுவர். சராசரி விகிதாசார அளவில் ஆண்களே மதம், கட்சி, மொழி என்று ஒரு சமூக ஆதாரம் சார்ந்து தான் கூடுதல் ஆவேசப்படுகிறார்களாம். பெண்கள் குடும்பச்சூழல் அடிப்படையிலேயே இயங்குகின்றனர். அமெரிக்காவில் சார்லோத்தெஸ்வில்லி நகரில் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் மனநோய் மருத்துவர் ஆண்டர்சன் தாம்சன் கருத்து இது.

ஜே.அண்டர்சன் தாம்சன் ஜூனியர் அறிவித்த ஆய்வு முடிவு பெண்கள் மனத்தில் பொறி கிளப்புகிறது. உலகின் பல்வேறு தீவிரவாதத் தற்கொலைப் படைகளில் பெரும்பான்மை பெண்களாம். மிக்சிகன் மாகாணத்தில் டெட்ராயிட் நகரில் நடைபெற்ற பன்னாட்டு மனித இனவியல் கழக மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து இது.

அறியா விடலைப் பருவத்தில் கற்பு இழப்பு, கனவு கண்ட திருமண வாழ்க்கை அமையாத ஏமாற்றத்தால் விவாகரத்து, எதிரிகளால் கணவர் அல்லது சகோதரர்கள் கொலையுண்ட பரிதவிப்பு என ஏதேனும் ஒரு காரணம் போதும். பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுதல் எளிதாம்.

(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).

Posted in Analysis, Awards, Backgrounder, Chauvinism, Discoverer, Doctor, Equal Opportunity, Facts, Famous, Females, History, Information, Inventor, Kalki, Lady, male, Men, Nobel, Ph.d, Prizes, Professor, Research, Science, scientist, Scientists, Woman, Women | Leave a Comment »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

Cuba’s Fidel Castro nowhere to be seen on 50th anniversary of rebel landing

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல்நலன் குறித்து சந்தேகம்

கியூபாவின் தலைநகர் ஹவானாவில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ அணிவகுப்பு ஒன்று, அந்நாட்டின் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ இல்லாமல் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து ஃபிடல் காஸ்ட்ரோ அவர்களின் உடல்நலன் குறித்து மேலும் பல ஊகங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஜுலை மாதத்தில் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு பாரிய அறுவை சிகிச்சை நடந்த பின்னர், தற்காலிகமாக அதிகாரத்தினை ஏற்று இருக்கும் அதிபரின் சகோதரர் ராவூல் காஸ்ட்ரோ, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

தன்னுடைய உரையில் பல தசாப்த காலங்களாக மோதலில் இருக்கும் அமெரிக்கர்களுடன் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக ராவூல் காஸ்ட்ரோ கூறினார்.

எண்பது வயதான ஃபிடல் காஸ்ட்ரோ அறுவை சிகிச்சைக்கு பின்னர் வெளி உலகத்தின் பார்வையில் தென்படவில்லை. எனினும் அவர் நன்றாக குணமடைந்து வருவதாக கியூபாவின் அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

நாட்டை விட்டு வெளியேறி இருந்த ஃபிடல் காஸ்ட்ரோ, மீண்டும் நாட்டிற்குள் திரும்பி புரட்சியினை முன்னின்று நடத்திய ஐம்பதாவது வருடத்தினை குறிக்கும் வகையில் இன்றைய அணிவகுப்பு நடைபெற்றது. இந்த புரட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தில் அமர்ந்தார்.

Posted in America, Bolivia, Communism, Cuba, Daniel Ortega, Democracy, Dictator, Evo Morales, Fidel Castro, Gabriel Garcia Marquez, Haiti, Havana, Hereditary, Military, Nicaragua, Nobel, Raul Castro, Rene Preval, Revolutionary Armed Forces | 1 Comment »

Nobel prize for Yunus hailed as anti-poverty boost

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

சுய உதவிக் குழுக்களின் தந்தை

இரா.நாறும்பூநாதன்

கடைசியில், சகலவிதத்திலும் தகுதி பெற்ற இந்த மனிதருக்கு உலகின் உயரிய விருது அளிக்கப்பட்டிருப்பதை எண்ணி இந்தியர்களாகிய நாமும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். “சுய உதவிக் குழுக்களின் தந்தை’யாகக் கருதப்படக்கூடிய முகம்மது யூனுஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை இந்தியாவின் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்கள் பரவசத்துடன் வரவேற்பதைப் பார்க்கும்போது இப்படிக் கூறுவதே சரியாக இருக்க முடியும்.

1976-ல் பங்களாதேஷில் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, மிகக் குறுகிய காலத்தில் 1986-களுக்குப் பின்பாக இந்தியாவில் படிப்படியாகத் துவங்கி உலகிலேயே அதிக சுய உதவிக் குழுக்களைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது, அந்தப் பொருளாதார நிபுணரின் தொலைநோக்குப் பார்வை நுட்பமாகவும், சரியானதாகவும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சிட்டகாங் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த முகம்மது யூனுஸுக்கு 1974-ல் ஏற்பட்ட வங்கப்பஞ்சம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமப்புறங்களில் வாழும் மக்கள், குறிப்பாக பெண்களின் அவல நிலை, கந்துவட்டிக் கொடுமைகளில் சிக்கித்தவிக்கும் நிலையை நேரில் பார்த்தார். மருந்தின்றி நோயில் அவஸ்தைப்படும் ஒரு வயதான மூதாட்டியைக் காப்பாற்றக்கூட அருகில் உள்ளவர்கள் முயலாத இயலா நிலையைப் பார்க்க நேரிட்டது.

அந்தத் தெருவில் வசித்த பெண்களிடம் மிகச் சொற்பமான தொகையை வசூல் செய்து, அந்த மூதாட்டியை உயிர் பிழைக்க வைத்து அந்தப் பெண்கள் சுயமாகத் தொழில் துவங்க சிறிய தொகையைக் கடனாகக் கொடுத்தார் யூனுஸ். தங்களின் சிறிய பங்களிப்பில் ஓர் உயிரைக் காப்பாற்ற முடிந்ததையும், தங்களுக்கு அளிக்கப்பட்ட சிறிய பொருளாதார உதவியைப் பற்றிக் கொண்டு அந்தக் கடனை சிறிது சிறிதாக அடைக்க இயலும் என்ற நம்பிக்கையையும் இந்தச் சிறிய நிகழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில், ரொம்ப நேர்மையாக அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்திய விதம் யூனுஸுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்களுக்கு கடனுதவி அளிக்க அரசு வங்கிகள் மறுத்த நிலையில், 1976-ல் கிராமிய வங்கியை பெண்களுக்காகவே துவக்கினார். பெண்களின் சுய உதவிக் குழுக்களை நிறுவி, அவர்களது வாராந்திர சேமிப்பை வங்கியில் செலுத்தச் செய்து, அதன் அடிப்படையில் கடன் வழங்க ஏற்பாடு செய்தார். பங்களாதேஷ் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உருவாக்கப்பட்ட பின்னணியில், யுனெஸ்கோ மூலம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய மதிப்பீடு உலக அளவில் எடுத்துச் செல்லப்பட்டு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இவை செயல்படும் என்பதைக் கண்டறிந்து ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த சிந்தனை பரவியது.

1986களுக்குப் பின்பு இந்தியாவில் சுய உதவிக் குழுக்கள் உருவாகத் தொடங்கின. ஆரம்பத்தில் எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இதன் அபரிதமான வளர்ச்சி, பெண்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், ஒரே மாதிரியாக சீருடையில் 20 பேர், 30 பேர் உள்ளூர் பிரச்சினைகளை, நகராட்சிகளில், மாநகராட்சிகளில் மொத்தமாக முறையிட்டபோது, அவசர அவசரமாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். கடைசியாக, சுய உதவிக் குழுக்களை யார் ஆரம்பித்தார்கள் என்ற போட்டி தமிழகத்தில் முக்கிய இரு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டதில் போய் முடிந்தது. எது எப்படி என்றாலும் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள், சுய உதவிக் குழுக்களை ஆதரித்தன. இந்தியாவில் இன்றைக்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் என்றால் அவற்றில் உத்தேசமாக 5 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் வங்கிகளில் கடனை வாங்கி மிகவும் நேர்மையாகத் திருப்பிச் செலுத்துவதை அறிந்து, பெரும்பாலான வங்கிகள் இவர்களுக்கு கடன் தருவதையே விரும்புகின்றன. “வாராக் கடன்கள்’ பட்டியலில் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் இல்லையென்றே கூறலாம்.

மனித சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண எத்தனையோ தத்துவங்களும், மதங்களும் அவ்வப்போது தோன்றத்தான் செய்கின்றன. ஆனாலும் மனித வாழ்வு நைந்து போய்த்தான் கிடக்கிறது. ஆயினும் ஓரளவு சாத்தியப்பாடுடன் கூடிய ஓர் அமைதியான இயக்கத்தை – பெண்களின் விழிப்புணர்வை, நம்பிக்கையைப் பெறுவதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார் முகம்மது யூனுஸ் என்றே கூறலாம்.

சுயதொழில் மூலம் சம்பாத்தியம் செய்யும் இந்தக் குழுக்களின் உறுப்பினர்கள், சமூகத்தில் ஒரு கௌரவமான அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பெண்கள் தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். “நம்ம ஆளுக்குத்தான் நோபல் பிரைஸ் கொடுத்திருக்காகளாம்…’ என்று மகிழ்ச்சியுடன் சில பெண்கள், பத்திரிகை படித்துச் சொல்லும்போது, ஓரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரைப் பற்றி ஒரு நாட்டின் லட்சக்கணக்கான பெண்கள் நினைவு கூர்வதுகூட இதுவே முதல் முறையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Posted in Bangladesh, Banks, Commerce, Economics, Grameen, India, Innovation, Loans, Micro-credit, Mohammad Younus, Nobel, Peace, Poverty, Prize, South Asia, Yunus | Leave a Comment »

Turkey’s Orhan Pamuk wins Nobel literature prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 12, 2006

துருக்கிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர்
நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர்

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த ஓர்ஹான் பகுக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆர்மேனிய மக்களின் படுகொலைகளை எழுப்பியதற்காக கடந்த ஆண்டு இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

அவரது சொந்த நகரமான இஸ்தான்புல்லில் உள்ள பல்வேறு கலாச்சரங்களிடையேயான மோதல்களையும் அவை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் மிகத் சிறப்பாக வெளிக்கொண்டுவந்த அவரது திறமையை சுவீடிஷ் அகாடமி பாராட்டியுள்ளது.

இந்த பரிசளிப்பிற்கு ஒரு திடமான அரசியல் எதிரொலி இருப்பதாக பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குர்து இன மக்களுக்கு ஆதரவாகவும், ஆர்மேனிய மக்களின் படுகொலைகள் குறித்த இவரது கருத்துக்களை வெளியிட்டதற்காகவும் இவர் பல சர்ச்சைகளுக்கு ஆளானாது மட்டுமல்லாமல், வழக்குகளையும் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.

துருக்கியில் கருத்துச் சுதந்திரம் குறித்து நடைபெறும் வாதங்களின் பகுதியாக இந்த வழக்குகள் விளங்குகின்றன என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய துருக்கிக்கு உள்ள தகுதியின் ஒரு பகுதியாகவும் இந்த வழக்குகள் திகழ்கின்றன.

Posted in Armenia, Armenians, Kurd, Kurdish, Literature, Nobel, Orhan Pamuk, Pamuk, Prize, Turkey | Leave a Comment »

Krishnan’s effect in CV Raman Research & Gandhi’s Nobel Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006

காந்திஜியும் நோபல் பரிசும்

எஸ். கண்ணன்

நோபல் பரிசு பெற்ற “ராமன் விளைவு’ பற்றி நாம் எல்லோரும் அறிவோம். உலகமே வியந்து பாராட்டிய அந்த “ஒளி விலகல்’ கண்டுபிடிப்பினை “ராமன் – கிருஷ்ணன்’ விளைவு என்றுதான் அழைத்திருக்க வேண்டும். மேலை நாட்டினர் இன்றும் “”ராமன் – கிருஷ்ணன் விளைவு” என்றுதான் அந்தக் கண்டுபிடிப்பை அழைக்கிறார்கள். யார் இந்த கிருஷ்ணன்?

1898-ல் இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வத்திராயிருப்பில் பிறந்தவர். 1961-ல் காலமானார். டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அகம்பாவமும், கர்வமும் கொள்ளாதவராய், பெரிய மனது படைத்தவராய், கூட்டாளி தர்மத்தில் (ராமன் – கிருஷ்ணன்) பொது நன்மையை உத்தேசித்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவராய், மிகப்பெரிய உதாரண புருஷராய், மகாத்மாவின் மானசீக சீடராய் வாழ்ந்து காட்டியவர். 1947 செப்டம்பர் முதல் 1961 வரை தில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராய்ப் பணி ஆற்றியவர். அவருடைய மறைவுக்குப் பின்னர் அவருடைய குடும்பத்தார் அன்புடன் வழங்கிய மதிப்புறு ஆவணங்கள் புதுதில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனில் அமைந்துள்ள நேரு நினைவு நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதில் கிடைத்த அரிய செய்தி இதோ!

1947ஆம் ஆண்டின் தொடக்கம். நம் நாடு விடுதலையாகாத காலகட்டம். அப்பொழுது டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மகாத்மா காந்திக்கு, சமாதானத்திற்கான உலகின் மிகப்பெரிய விருதான “”நோபல் பரிசினை” அளிப்பதற்கு வேண்டிய முயற்சிகளை, டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் அமைதியாக, யாருக்கும் தெரியாமல் மேற்கொண்டார்.

இந்த முயற்சி காந்தியடிகளின் காதுக்குக்கூட எட்டவில்லை. நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் இருந்த தம் நண்பருக்கு டாக்டர் கிருஷ்ணன் இதுகுறித்து எழுதினார். 1947ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான நோபல் பரிசினை மகாத்மா பெற வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம்.

காந்திஜி குறித்த சிறப்புச் செய்திகளை இந்தியாவின் மீது பற்றுக்கொண்ட வெளிநாட்டவரான ஹொராஸ் அலெக்ஸôண்டர் தயாரித்து ராஜாஜியின் பார்வைக்கும், ஒப்புதலுக்கும் அனுப்பினார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவில் டாக்டர் கிருஷ்ணனின் நண்பர் ஒருவர் இருப்பதை ராஜாஜி அறிந்து வைத்திருந்தார். ஆகவே தனக்கு வந்த “”காந்திஜி” பற்றிய குறிப்புகளை 21-02-1947 அன்று டாக்டர் கிருஷ்ணனுக்கு அனுப்பினார்.

டாக்டர் கிருஷ்ணனின் கையெழுத்துடன் தேர்வுக் குழுவிற்கு அவை அனுப்பப்படுதல் சாலச் சிறந்தது என்று ராஜாஜி நினைத்தார். டாக்டர் கிருஷ்ணனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தக்க பரிந்துரைகளுடன் தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஏனோ, அவ்வாண்டிற்கான நோபல் பரிசு காந்திஜிக்கு கிட்டவில்லை. “”அஹிம்ஸை” வழியை, சமாதானக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ள மேலை நாட்டினர் மனம் அப்பொழுது (1947 பிப்ரவரி) இடங் கொடுக்கவில்லைபோலும்! அத்துடன் தன் முயற்சியை டாக்டர் கிருஷ்ணன் விட்டுவிடவில்லை.

1948 ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசுக்கு மகாத்மாவின் பெயரை, பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள டாக்டர் கிருஷ்ணன் ஆவன செய்தார்.

அது வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுவிட்ட நேரம்; இந்திய விடுதலை குறித்து உலகமே வியந்து மகாத்மாவைப் பாராட்டிய நேரம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து வாங்கிய விடுதலை அல்லவா? அவருடைய “அஹிம்ஸா’ வழியை உலகச் சமுதாயம் அங்கீகரித்த காலகட்டம் அது. நோபல் பரிசுக் குழுவினரும் அவ்வாண்டிற்கான சமாதானப் பரிசினை மகாத்மாவிற்குக் கொடுக்க முடிவு எடுத்திருக்கலாம். அந்தோ பரிதாபம்! 1948 ஜனவரி 30ஆம் நாள் கொடியவன் கோட்ஸேயின் குண்டுக்கு மகாத்மா இரையானார்.

அவ்வாண்டிற்கான (1948) “”சமாதான நோபல் விருது’‘ யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. நோபல் பரிசுக் குழுவினர் தம்முடைய அறிக்கையில், “”சமாதானத்திற்கென நோபல் பரிசினை பெறும் நபர் யாரும் உயிருடன் இல்லை” என்று கூறியதிலிருந்தே மகாத்மாவைத் தவிர வேறு யாரையும் அக் குழு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. உயிருடன் இருப்பவருக்கே நோபல் பரிசு அளிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.

மகாத்மா உயிருடன் இருந்திருந்தால் 1948ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருப்பார். தேசிய உணர்வு மிகுந்த தமிழரான டாக்டர் கிருஷ்ணனும் மகிழ்ந்திருப்பார். நம் நாடும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

Posted in Gandhi, Krishnan, Mahathma, MK Gandhi, Mohandas karamchand Gandi, Nobel, Prize, Rajaji, Raman Effect, Research, Sir CV Raman, Tamil | Leave a Comment »