Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nepal’ Category

EU-India talks focus on Sri Lanka – One thousand Tamils arrested in Colombo

Posted by Snapjudge மேல் திசெம்பர் 2, 2007

இலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் முன்னூறு முதல் ஐநூறுபேர் வரை இப்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரின் உறவினர்களோடு இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இவர்கள் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கைதுகள் குறித்தும், அரசு தரப்பில் இது குறித்து கூறப்படும் விளக்கங்கள் குறித்தும், இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் – இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

இந்தியாவும் இலங்கையும்
இந்தியாவும் இலங்கையும்

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சி மாநாடு புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.. அதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருமான சோஸ் சாக்ரடீஸ் மற்றும் தலைவர்கள் பங்கேற்றார்கள்.

அந்த மாநாட்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், தீவிரவாதம் உள்பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தொடர்பாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியக் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.

இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இலக்கை அடைய, சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியப் பங்காற்றும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்பு உள்பட சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், இலங்கையில் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Posted in Arrests, Asia, Burma, Colombo, Culprits, dead, Detainees, Eelam, Eezham, EU, Jail, LTTE, Myanmar, Nepal, Prison, Sri lanka, Srilanka, Suspects, Terrorism, Terrorists, UN | Leave a Comment »

Maoists kill 18 in Jharkhand village: Giridih Massacre

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

தவறான பாதை; தவறான பார்வை

பிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.

மலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.

9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று? இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.

இளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக் கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.

அப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.

ஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்!

இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.

Posted in Andhra, AP, Babulal, Bandh, Bihar, carbines, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Chhattisgar, Chhattisgarh, Chikadia, Chikhadia, CRPF, Divide, Errabore, Extortion, Extremism, Extremist, Extremists, Gaya, Giridhi, Giridhih, Giridi, Giridih, Girithi, Girithih, Jamui, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jharkhand Vikas Morcha, JMM, JVM, Madhu Koda, MadhuKoda, Mahato, Maoists, Marandi, Metro, MP, Nation, National, National Games, Nationalisation, Nationalism, Nationalist, Nationalists, Nationality, Nationalization, Nations, Native, Native Folks, Natives, Naxal, Naxalbari, Naxalite, Naxals, Nepal, Nithish, Nitish, Nitish Kumar, Nitish Kumar Singh, NitishKumar, Nunulal, Nunulal Marandi, Poor, Rich, Rural, SC, SLR, SLRs, ST, Sunil Kumar Mahato, SunilKumar Mahato, Telengana, Telugu, Telugu (తెలుగు), Telugu Desam, Telungana, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists, Tribals, victims, Villages, Violence | Leave a Comment »

Use of minors in wars & extremist forces – Worldwide Analysis & Report

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2007

போர்முனைக் “கேடயங்கள்’!

எஸ். ராஜாராம்

இலங்கையில் சிறுவர்களைப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதாக விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு. ஆனால், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகபட்சமாக சுமார் 2 லட்சம் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெஃப் தெரிவிக்கிறது.

  • புரூண்டி,
  • காங்கோ,
  • ருவாண்டா,
  • லைபீரியா,
  • சோமாலியா,
  • சூடான்,
  • உகாண்டா

உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆயுதக் குழுக்கள் சிறுவர்களுக்கென தனிப்படைப் பிரிவையே உருவாக்கியுள்ளன. “18 வயது நிரம்பும்வரை போர்முனைக்கு சிறுவர்களை அனுப்புவதில்லை’ என இந்த ஆயுதக் குழுக்கள் தெரிவித்தாலும் அது நம்பும்படியாக இல்லை.
உகாண்டாவை சேர்ந்த மக்கள் பாதுகாப்புப் படை என்ற ஆயுதக் குழு, 13 வயது நிரம்பிய சிறுவர்களைக்கூட அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் படையில் சேர்த்துக் கொள்கிறது. லத்தீன் அமெரிக்காவில் சுமார் 11 ஆயிரம் சிறுவர்கள் இரண்டு கெரில்லா படைகளில் உள்ளனர்.

ஆசியாவை பொருத்தவரை

  • இலங்கை,
  • ஆப்கானிஸ்தான்,
  • மியான்மர்,
  • இந்தியா,
  • இந்தோனேஷியா,
  • லாவோஸ்,
  • பிலிப்பின்ஸ்,
  • நேபாளம்

உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்கள் ஆயுதக் குழுக்களின் படையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக அனுப்பப்பட்ட 15 வயது சிறுவனை அரசுப் படையினர் பிடித்தனர். அந்தச் சிறுவன் மனித வெடிகுண்டு எனத் தெரியவந்ததும் அதிபர் ஹமீத் கர்சாய் பேரதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், பொது மன்னிப்பு அளித்து அந்தச் சிறுவனை அவனது தந்தையிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தானின் வரிஜிஸ்தான் பகுதியில் மதரஸôவுக்கு படிக்கச் சென்ற அந்தச் சிறுவனை தலிபான்கள் மனித வெடிகுண்டாக அனுப்பியிருந்தது பின்னர் தெரியவந்தது.

“”சிறுவர்களைப் படையில் சேர்ப்பது ஒருபுறம் இருக்க, குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன” என்கிறார் குழந்தைகள் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசாமி.

கடந்த ஜூன் 15-ம் தேதி கூட்டுப் படைக்கு எதிரான தலிபான்களின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கட்டடங்களும், பள்ளிக் குழந்தைகளும் தீவிரவாதிகளின் இலக்காகிவருவது கவலை அளிக்கும் விஷயம். மனித கேடயமாக சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்களோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

18 வயதுக்கு குறைவான சிறுவர்களை படையில் சேர்ப்பதை தடுக்கும் வகையில் ஐ.நா. பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறுவர்களுக்கு கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவை முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் யுனிசெப் உறுதிபூண்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் கருணா படையினருக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த மே 11-ம் தேதி கடும் எச்சரிக்கை விடுத்தது. சிறுவர்களைப் படையில் சேர்க்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே படையில் சேர்த்த சிறுவர்களை அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

சூடான் நாட்டில் இயங்கும் சூடான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்புக்கும், யுனிசெஃப்புக்கும் இடையே ஜூன் 11-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தனது படையில் உள்ள சிறுவர்களை விடுவிக்க சூடான் விடுதலைப் படை அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை யுனிசெஃப் வரவேற்றுள்ளது. எத்தனைச் சிறுவர்கள் விடுவிக்கப்படுவர் என உறுதியாகத் தெரியாவிட்டாலும், சுமார் 7000 சிறுவர்களை சூடான் விடுதலைப் படை விடுவிக்கும் எனத் தெரிகிறது.

ஆயுதக் குழுக்கள் ஒருபுறம் சிறுவர்களைச் சேர்ப்பது இருக்க பல நாடுகளில் அரசுகளே 18 வயது நிரம்பாத சிறுவர்களைப் படைகளில் சேர்க்கின்றன. 2004-ம் ஆண்டில் மியான்மர் அரசுப் படைகள் 12-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வலுக்கட்டாயமாக படையில் சேர்த்தன. இங்கிலாந்தில் 16 வயது நிரம்பிய சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

இதுபோல அமெரிக்காவில் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், அவர்கள் 18 வயது நிரம்பும்வரை சண்டையில் ஈடுபடுத்தப்படுவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்தில் ராணுவச் சேவை கட்டாயம் என்பதால், மாணவப் பருவத்திலேயே சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுகின்றனர்.

மொத்தத்தில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெறும் நாடுகளில் எல்லாம் சிறுவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்படுவதும் வேதனை தரும் விஷயம். பள்ளி செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை ஆயுதம்தாங்கி சண்டையிட அனுப்பும் தீவிரவாதக் குழுக்களை ஐ.நா. இன்னும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தில் ஐ.நா.வுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சிறுவர்களைப் படைகளில் சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்: ஏற்கெனவே தீவிரவாதக் குழுக்களில் இருக்கும் சிறுவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Posted in 18, abuse, Afghan, Afghanistan, Afghanisthan, africa, Age, AK-47, AK47, Ammunitions, Analysis, Arms, Backgrounder, Burma, Burundi, Child, Children, clash, Clashes, Colombo, Congo, Cyanide, Darfur, Data, Delhi, Dinamani, Extremism, Fights, Force, Guerilla, Hamid, Hindu, India, Indonesia, IPKF, Islam, kalashnikov, Karzai, Kids, Laos, Latin America, Leninist, Liberia, LTTE, Marxists, Minors, Moslem, Muslim, Mynamar, Nepal, Op-Ed, Opinion, Pakistan, Phillipines, Prabakharan, Prabhakaran, Protect, Protection, Report, rights, Rwanda, Somalia, Sri lanka, Srilanka, Statistics, Stats, Statz, Sudan, Suicide, Teen, Teenage, Terrorism, Terrorists, Thinamani, Uganda, UN, Underage, UNICEF, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War, Warlords, Weapons, Worldwide, Zaire | 1 Comment »

State of SAARC – South Asian Association for Regional Cooperation

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

சார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு!

மு. இராமனாதன்


“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.

“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.

கடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.

இந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.

தெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.

ஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.

இம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.

தமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.

மேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.

உறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.

சார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.

ஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.

ஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.

வளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.

இதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.

வணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.

மற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.

காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.

அமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)

Posted in Actions, Asean, Asia, Bangaldesh, Bhutan, Burma, Chat, China, Colombo, Cooperation, Economy, Eelam, Eezham, EU, Exim, Exports, External, External Affairs, extradition, FERA, Finance, Foreign, Govt, IMF, Imports, LTTE, Maldives, Myanmar, NATO, Neighbor, Neighbours, Nepal, Op-Ed, Pakistan, Power, Process, Relations, SAARC, Sri lanka, Srilanka, Talks, Tariffs, Tax, Tibet, UN, WB, WTO | Leave a Comment »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »

Maoists in south Nepal gun battle

Posted by Snapjudge மேல் மார்ச் 21, 2007

நேபாள மோதலில் 5 பேர் பலி

மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்
மாதேசிக்களின் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுக்கும், பிராந்தியக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பொலிஸார் கூறுகிறார்கள்.

காவுர் நகரில் இடம்பெற்ற இந்த மோதல்களில் குறைந்தது 15 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

தனித்தனியான பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, முன்னாள் கிளர்ச்சிக்காரர்களும், மாதேசி ஜனதிகார் அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்குப் பகுதி நகரான லகானின், மாதேசி அமைப்பைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக்கொன்றதை அடுத்து, அண்மைய மாதங்களில் அங்கு பதற்றம் அதிகரித்தது.

 

=======================================================

நேபாளத்தில் வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவம் 2 நிர்வாகிகளை மாவோயிஸ்ட் சஸ்பெண்ட் செய்ததால் கடையடைப்பு, போராட்டங்கள் விலக்கப்பட்டன

காத்மாண்டு, மார்ச் 22: நேபாளத்தில் வர்த்தகர் ஒருவரை தாக்கியதில் தொடர்புடையதாக 2 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வணிகர்கள் நடத்தி வந்த பல்வேறு போராட்டங்கள் புதன்கிழமை முதல் விலக்கி கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்மாண்டுவில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஹரி ஷிரேதா. இவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மாவோயிஸ்டுகள் கொடூரமாக தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவத்தையடுத்து, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வணிகர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.

வருத்தம் தெரிவிப்பு: வர்த்தகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவோயிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் இருவர் தொடர்புடையதாக அறிந்தவுடன் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் பிரசண்டா அறிவித்தார்.

இதற்கிடையில், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸôருக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதில் சந்மந்தப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான தீபக் ராய் மற்றும் முகுந்த நிபான் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவோயிஸ்ட் இணைப்பு தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

=======================================================

நேபாளம்: பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் வெடிகுண்டு

காத்மாண்டு, மார்ச் 28: நேபாளத்தில் பத்திரிகை அலுவலகம் உள்பட 2 இடத்தில் குண்டு வைக்கப்பட்டன. இவை வெடிக்கும் முன் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.

கிழக்கு நேபாளப் பகுதியான பைரத்நகரில் உள்ளது கந்திப்பூர் என்ற பத்திரிகையின் அலுவலகம். இங்கு திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டது. ஆனால் இது வெடிப்பதற்கு முன் கண்டறியப்பட்டது.

தக்ஷினிவாரி என்ற இடத்தில் அமைந்துள்ள மெக்டவல் என்ற நிறுவனத்துக்குள்ளும் திங்கள்கிழமை குண்டு வைக்கப்பட்டிருந்தது. இதுவும் வெடிப்பதற்குள் கண்டறியப்பட்டு பத்திரமாக அகற்றப்பட்டது.

இந்த இரு இடத்திலும் குண்டுகள் வெடிப்பதற்குள் அகற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குண்டுகளை வைத்தவர்கள் நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்கக் கோரி போராடும் நேபாள பாதுகாப்பு ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இது அவர்கள் விட்டுச் சென்ற துண்டு சீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

Posted in battle, Blast, Bomb, Business, Businessman, Clashes, Commerce, Constitution, Curfew, dead, Elections, ethnic, Fighters, Gaur, Government, Hari Shiroda, Hari Shirodha, Hindu, Hinduism, Hotel, Insurgency, Kathmandu, King, Madheshi, Madheshi Janadhikar Forum, Madhesis, magazine, Maoist, Media, MJF, MSM, Nepal, Protest, Rebels, Restaurant, rights, Scare, Strike | 1 Comment »

BJP raises Nepali MP’s nationality issue in Lok Sabha

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

இந்தியர் அல்லாதவர் எம்.பி. ஆனது எப்படி? மக்களவையில் பாஜக கேள்வி

புதுதில்லி, மார்ச் 8: இந்தியர் அல்லாத ஒருவர் எம்.பி. ஆக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் பாஜக புதன்கிழமை குரல் எழுப்பியது.

அவை கூடியதும் பாஜக வைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான மல்ஹோத்ரா, இந்த பிரச்சினையைக் கிளப்பினார்.

அவர் பேசும் போது, அசாம் தேஜ்பூர் தொகுதியில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான சுப்பா, இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று பத்திரிகையில் படித்தேன் என்று குறிப்பிட்டார்.

ஆனால், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, “இந்த விவகாரம் தொடர்பாக பேச முன் அனுமதி கோரி நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. அதனால் பேச அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.

Posted in Asom, Assam, BJP, Citizen, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Lok Sabha, LokSabha, LS, Moni Kumar Subba, MP, Nationality, Nepal, Nepali, Subba, Tejpur, Tezpur | Leave a Comment »

Nepal: ICRC seeks to clarify the fate of more than 800 missing persons

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் பட்டியல் வெளியீடு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

நேபாளத்தில் கடந்த வருடம் முடிவுக்கு வந்த 10 வருட கால மோதல்கள் காரணமாக காணாமல் போன 800 க்கும் அதிகமானோரின் பட்டியலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.

இவர்களில் பலர் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேபாள பாதுகாப்புப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஏனையவர்கள் மாவோயிஸ்ட்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் சிலர் சிறர்கள் என்றும் அது கூறுகிறது.

மேலும் பல நேபாள நாட்டவர் காணாமல் போயுள்ளதாகக் கூறும் செஞ்சிலுவைச் சங்கம், காணாமல் போன தமது உறவினர்களின் பெயர் இந்தப் பட்டியலில் இல்லாது இருந்தால் அவர்களது, உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Posted in armed conflict, Clan, Communism, Communist, Democracy, Dictatorship, Government, ICRC, Insurgency, King Gyanendra, Lockup deaths, Maoists, missing persons, Monarchy, Nepal, political disappearances, Rebels, Red Cross, RTI, security forces | Leave a Comment »

KV Ramaraj – Requirement for Association of Asian Nations

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 6, 2007

தேவை ஆசிய ஒன்றியம்

கே.வீ. ராமராஜ்

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.

இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.

இருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.

பாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.

சர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.

“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.

1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.

பிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.

ஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.

இந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.

1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.

பயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.

உலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.

ஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.

1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.

சர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.

உலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).

Dinamani Editorial (Feb 12, 2006)

“சார்க்’ கூட்டமைப்பு

“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.

தில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.

இந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.

இந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.

ஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.

பாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.

“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.

காஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.

இதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்

மும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.

சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.

இது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

==============================================================
பேசிப் பயனில்லை

தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.

அந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.

“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.

கடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.

இந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

மாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.

ஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.

“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.

“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.

வர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.

உறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.
==============================================================

Posted in Afghanistan, Afghanisthan, Asean, Asia, Asian Union, Association, AU, Bangaladesh, Bargaining, Bhutan, Burma, China, Cooperation, Country, Defense, Economy, EU, Expenditure, External Affairs, Finance, Govt, India, Indonesia, Kashmir, Madives, Malaysia, Myanmar, Nations, NATO, Nepal, Pakistan, Phillipines, Power, Region, Rhetoric, SAARC, Singapore, South Asia, Sri lanka, Super power, Superpower, Talks, Terrorism, Thailand, Tibet, UN, Waste | 2 Comments »

Tamil Nadu Local Body Elections date set for October 13 & 15

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 19, 2006

தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் அக்டோபர் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும்

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க நிற்கும் பொதுமக்கள்(ஆவணப் படம்)
தமிழகத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தபடும்

தமிழ்நாட்டின் உள்ளாட்சித்தேர்தல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை துவங்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் இந்த தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் ஆளும் தி.மு.க.வின் வேட்பாளராக கவுஸ் பாட்சா நிறுத்தப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். கவுஸ் பாட்சா தற்போது மதுரை மாநகராட்சி துணை மேயராக இருக்கிறார்.

இது இவ்வாறிருக்க, நேபாள நாட்டின் மாவோயிச இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தர பிரகாஷ் கஜுரெல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மேற்கு வங்க மாநில காவல்துறையினர் கைது செய்து தங்கள் மாநிலத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கஜுரெல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னை பெருநகர மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted in ADMK, Bye Election, Council, DMK, Elections, Local Body, Madurai Central, Mayor, Nepal, October, Polls, Tamil, Tamil Nadu, West Bengal | 1 Comment »

Ration Goods and Kerosene sumggled away from Bihar

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 21, 2006

பிகாருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெயில் 80% வெளிநாட்டுக்கு கடத்தல்

கிஷன்கஞ்ச், ஆக. 21: மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் கீழ் பிகார் மாநிலத்துக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெய், உப்பு ஆகியவற்றில் 80 சதவீதம் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குக் கடத்தப்படுவதாக மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் முகமது தஸ்லிமுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் சார்பில் கிசான்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது தஸ்லிமுதீன்.

அவர் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் அன்னபூர்ணா, அந்தியோதயா திட்டங்களின் கீழ், பிகாரைச் சேர்ந்த கிஷன்கஞ்ச், அராரியா, பூர்னியா, கைதார் மாவட்டங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஒதுக்கீடு செய்து அனுப்பப்படுகின்றன. ஆனால் அவற்றில் 80 சதவீதம், திட்டமிட்டு உணவு தானியங்களைக் கடத்தும் கும்பலால் நேபாளத்துக்கும், வங்கதேசத்துக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன.

இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றுள்ளேன்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து நடந்து வந்தபோதிலும், பிகார் மாநில அரசு நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்றார் தஸ்லிமுதீன்.

Posted in Bihar, Corruption, Kerosene, Laloo, Nepal, Nitish Kumar, Ration, Sharad Pawar, Smuggling, Tamil | Leave a Comment »