Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Nawaz’ Category

Worldwide tentacles of the nexus between Politics, Bribery & Corruption

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

லஞ்சத்தில் சிக்கிய தலைவர்கள்

டி. புருஷோத்தமன்
“மக்கள் பணியே மகேசன் பணி’ என்கின்ற நிலைமாறி “பணம் குவிப்பதே குறிக்கோள்’ என்ற பேராசைக்கு அடிமையாகிவிட்டனர் பெரும்பாலான அரசியல்வாதிகள்.

கட்சியை வழிநடத்தவும் அபரிமிதமான தேர்தல் செலவை ஈடுகட்டவும் பதவிபோனாலும் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கவும் கோடிக்கணக்கில் பணம் தேவை என்பதில் அரசியல் தலைவர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த பேராசைதான் லஞ்சஊழலுக்கு அடித்தளமாக அமைகிறது.

சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து கட்சித் தலைவர்கள் வரை இருந்த லஞ்சஊழல் படிப்படியாக அமைச்சர்கள் அளவிலும் பின்னர் முதல்வர்கள் என்ற நிலைக்கும் முன்னேறியது.

இதன் உச்சகட்டமாக பிரதமர், அதிபர் போன்றோரும் லஞ்சலாவண்யத்தில் சிக்குவது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. லஞ்சமும் ஊழலும் செல்வந்த நாடுகளை விட ஏழை நாடுகளில்தான் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களை முன்னேற்ற வேண்டிய அந்நாடுகளின் பிரதமர்களும் அதிபர்களும் சொந்த நலனில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிடுகின்றனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்கதேசம்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலைபெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. நாடு சுபிட்சம் அடைந்து நாமும் வளம் பெறுவோம் என வங்கதேச மக்கள் கண்ட கனவு பொய்யாகிவிட்டது.

அந்நாட்டின் அதிபராக இருந்த எர்ஷாத் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஊழல் விவகாரங்களிலும் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலத்தில் இரு சரக்கு முனையங்களைக் கட்டுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் அளிக்க கோடிக்கணக்கில் அவர் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக அவருடைய இரு மகன்கள் அராபத் ரஹ்மானும் தாரிக் ரஹ்மானும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காலிதா ஜியாவின் குடும்பமே ஊழலில் சிக்கித் திளைத்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

வங்கதேசத்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் லஞ்ச விவகாத்தில் சளைத்தவர் அல்ல என்பதை அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அறிந்துகொள்ளலாம். இரு தொழில் அதிபர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதற்காக அவர் பெற்ற லஞ்சம் ரூ. 6 கோடி.

ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தனது பதவிக்காலத்தில் அரசியல் எதிரிகளை கொலைசெய்யவும் அவர் தயங்கவில்லை. நான்கு எதிரிகளை அவர் படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வங்கதேச உள்துறை அமைச்சராக இருந்த முகம்மது நசீம் என்பவர் தனது பதவிக்காலத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். எனவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வருமானத்துக்கு முரணான வகையில் அவர்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தையும் அந்நாட்டு அரசு பறிமுதல் செய்துவிட்டது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷிண் சினவத்ராவும் அவர் மனைவியும் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். நிலபேர விவகாரத்தில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு முறைகேடாக அவர்கள் வாங்கியிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள 14 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என அந்நாட்டு அரசுக்கு அட்டார்னி ஜெனரல் பரிந்துரை செய்துள்ளார்.

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் சென்னும் அவருடைய மனைவியும் ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை அவர்கள் சூறையாடியதாக தைவான் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நான்கு தொழிலதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் கடன் என்ற பெயரில் பணத்தை தனது கட்சிக்கு லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ மற்றும் அவருடைய கணவர் ஜர்தாரி ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள்தான். சுவிஸ் வங்களில் கோடிக்கணக்கான லஞ்சப் பணத்தை மறைத்து வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜர்தானி மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றொரு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு லஞ்ச வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடு கடத்தப்பட்டார். பலமுறை முயன்றும் அவர் பாகிஸ்தானுக்குத் திரும்ப முடியவில்லை. இறுதியாக தற்போதுதான் நாடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகார்தோ ஊழலில் திளைத்தவர். ஏழை நாடு என்ற சிந்தனை ஏதுமில்லாமல் மக்களைச் சுரண்டி, சுகபோக வாழ்க்கை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார். கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை சூறையாடினார்.

பிலிப்பின்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினண்ட் மார்க்கோஸ் ஊழல் புரிவதில் சாதனை படைத்தவர். 20 ஆண்டு பதவிக்காலத்தில் அவர் சுருட்டிய பணத்தின் மதிப்பு ரூ. 4,000 கோடியாகும். என்னே அவருடைய மக்கள் சேவை! அவர் மனைவி இமெல்டா விலைமதிப்புள்ள மூவாயிரம் ஜோடி செருப்புகளை வைத்திருந்தவர் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பெர்டினண்ட் மார்க்கோஸýக்கு பக்கபலமாக இருந்தது அமெரிக்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர்களும் பிரதமர்களும்தான் இப்படி என்றால் ராணுவ ஆட்சியாளர்களின் செயல்பாடு அதைவிட மோசம் என்றே கூறலாம். மியான்மர் நாட்டில் 1962 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. ஜனநாயகம் கோரி கிளர்ச்சி நடத்திய மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினர்.

இராக் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில் எண்ணெய்க்கு உணவு பேரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

மக்கள் நலனை மறந்து ஆடம்பர மாளிகையில் சுகபோக வாழ்க்கையில் திளைத்த சதாமை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றுவிட்டது.

எனவே, மன்னராட்சி, மக்களாட்சி, ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என எந்த ஆட்சியானாலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமும் ஊழலும் என்ற நிலை உருவாகி விட்டது.

மக்களைக் காக்க வேண்டிய மன்னர்களும், அதிபர்களும், பிரதமர்களும், சர்வாதிகாரிகளும் லஞ்ச ஊழலில் திளைத்து சுகபோக வாழ்க்கையில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது.

—————————————————————————————————————————–
லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

இரா. சோமசுந்தரம்

திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.48 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பாகவே, திருச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் பறிமுதல் என்ற செய்தி!

இந்த நடவடிக்கைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, இதற்கெல்லாம் மேலான ஓர் அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அதாவது: “”அட, எல்லாரும்தான் வாங்குறாங்க. இவங்க, வாங்கினத நியாயமா பங்குபோட்டு மேல கொடுக்காம அமுக்கப் பாத்திருப்பாங்க, ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க” என்பதுதான் அந்த விழிப்புணர்வு.

இந்த மனநிலைக்குக் காரணம் அரசு அலுவலகங்களில் இன்று நிலவும் சூழ்நிலைதான்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வருவாய்ச் சான்றிதழ் பெற வேண்டுமானால், உண்மைக்கு மாறாக வருமானத்தைக் காட்ட விரும்புபவர் மட்டுமே அரசு அலுவலர்களைக் “கவனிக்க’ வேண்டியிருக்கும். ஏழைகள் இரண்டு நாள்களுக்கு இழுத்தடிக்கப்படுவார்களே தவிர, சான்றிதழ் இலவசமாகக் கிடைத்துவிடும். ஆனால் இப்போது இலவசம்கூட இலவசமாகக் கிடைப்பதில்லை. தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதுதான் மக்களின் இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம்.

அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம் ஆகியவற்றில் காணப்படாத பிரமாண்டம், தமிழக அரசு விழாக்களில் மட்டும் இருக்கிறது. வரம்புக்கு மீறிய, சட்டம் அனுமதிக்காத செலவுகள் நிறைய!

பல அரசு உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகைகளில் தங்குவதில்லை. ஆனால் அவர்கள் பெயரில் “ரூம்’ மட்டும் போடப்படும். ஆனால் அவர்கள் தங்குவது நட்சத்திர ஓட்டலில். அத்துடன் வேறுசில சொல்லப்படாத செலவுகளும் உண்டு, அந்தச் செலவை உள்ளூர் அதிகாரிகள் ஏற்க வேண்டும்!

சட்டத்தை மீறிய செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொரு துறையிலும்- வருவாய்த் துறை என்றால் கிராம நிர்வாக அலுவலர் வரை-ஒரு வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது ஊர் அறிந்த ரகசியம்.

தேன் எடுத்தவன் புறங்கையை சுவைக்காமல் விடுவானா? ருசி பார்த்த பூனைகளுக்கு சூடு மறத்துப் போகிறது. மனிதம் மறைகிறது.

ஆதலால், வாகனம் நன்கு ஓட்டத் தெரிந்தாலும் “டிரைவிங் ஸ்கூல்’ மூலம்தான் உரிமம் பெற்றாக வேண்டும். அதே ஜாதி, அதே சம்பளத்துக்காக சான்றிதழ் கேட்டாலும் “கொடுத்து’தான் பெற முடியும்.

அரசு நிர்ணயிக்கும் நில மதிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் இடைப்பட்ட ஒரு மதிப்பை தீர்மானிக்கும் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும்போது, குறைக்கப்படும் பெருந்தொகைக்கு ஏற்ப ஒரு சிறுதொகையை இழக்க வேண்டும்.

விபத்துக்காக முதல் தகவல் அறிக்கை எழுதவேண்டுமானால், காவல்நிலையம் சொல்லும் வழக்கறிஞரை ஏற்று, காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம், 30 சதவீதம் தள்ளுபடி தர வேண்டும் என்பதெல்லாம் எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இலவச கலர் டிவி பெறுவதற்கான பட்டியலில் இடம் பெற ரூ.100 வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி பல நாளிதழ்களில் வந்தாகிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

அரசு அறிவிக்கும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு பொருளோ, வங்கி வரைவோலையோ தயாராக இருந்தாலும், “ரொக்கத்தை’ கொடுத்தால்தான் அவை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

பொதுமக்களிடம் பெறும் லஞ்சத்தைவிட அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் பல மடங்காக இருக்கிறது.

பல ஏழை விவசாயிகளின் நிலங்களில் மானியப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டதாகக் குறிப்பெழுதி, கணக்குக் காட்டி, பல கோடி ரூபாய் மானியம் ஆண்டுதோறும் “முளை’ காட்டாமல் மறைந்து விடுகிறது.

ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அவர்களது செலவுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால், தணிக்கைத் துறை அலுவலர்களையே ஏமாற்றுகிற அளவுக்கு பொய் ரசீதுகளும் சட்டத்தின் ஓட்டைகளும் சரிபார்ப்பவரை சரிகட்டுவதும் தாராளமாக இருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுத்தாலும் எத்தனை வழக்குகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள்?

இவை யாவும் மக்கள் ஏற்படுத்திய பழக்கம் என்றும், அரசியல்வாதிகளின் அடாவடித்தனம் என்றும் சொல்லப்படும் பொதுவான கருத்து ஏற்புடையதாக இல்லை.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல, அரசு அலுவலகங்களில் பரவியுள்ள ஊழலை அரசு அலுவலர்களால்தான் தடுக்க முடியும்.

எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்தத் துறை மற்றும் எந்தெந்த அலுவலர் மூலமாக எவ்வளவு தொகை போகிறது என்ற கணக்கெல்லாம்கூட பொதுவாகப் பேசும்போது ஊழியர் சங்கங்கள் வெளிப்படையாகப் பேசுகின்றன. ஆனால் அதை ஓர் அறிக்கையாகக்கூட இச் சங்கங்கள் வெளியிட்டதில்லை.

“”அரசு விழாக்களுக்கு செலவாகும் கூடுதல் தொகைக்காக எங்கள் ஊழியரை வசூல் வேட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று எந்த தொழிற்சங்கமும் போர்க்கொடி தூக்கியதில்லை. ஊழல் செய்யும் அமைச்சரின் முகமூடியைக் கிழிப்பதில்லை.

எந்தெந்த அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பது சக ஊழியருக்குத் தெரியும். ஊழியர் சங்கத்துக்கும் தெரியும். தெரிந்திருந்தும், லஞ்சம் வாங்கும் ஊழியரை இடைநீக்கம் செய்தாலோ, பதவியிறக்கம் செய்தாலோகூட சங்கம் கொதித்தெழுகிறது. அவரைப் பாதுகாக்கிறது. அதே சமயம், அரசு ஊழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதற்காக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதில்லை. சங்கத்தைவிட்டு அவரை வெளியேற்றியதும் இல்லை.

எத்தனை அறிவார்ந்த தத்துவம் பேசும் அரசியல் கட்சியைச் சார்ந்த சங்கமாக இருந்தாலும் சரி, ஊழல் அலுவலரை உறுப்பினராக வைத்துக்கொள்ள தயக்கம் காட்டுவதில்லை.

இப்போது சொல்லுங்கள்…

லஞ்சத்துக்கு மக்கள் மட்டுமே காரணமா?

Posted in abuse, Allegations, America, Assassinations, Bangladesh, Biz, Blair, Bribery, Bribes, British, Burma, Bush, Business, Cabinet, Campaign, China, Commonwealth, Contribution, Corruption, crimes, Democracy, Dictators, Dictatorship, Dubya, Elections, England, English, Ferdinand, Finance, Food, Freedom, GWB, Haseena, Hasina, Imelda, Independence, India, Indonesia, Iraq, Khaled, Kingdom, Kings, Laundering, Law, Leaders, Lokpal, London, Luxury, Marcos, Military, Minister, MLA, Money, MP, Murder, Mynamar, Nawaz, Needy, nexus, oil, Order, Pakistan, Party, Phillipines, PM, Politics, Polls, Poor, Power, President, Prince, Princes, Princess, Princesses, Queens, Rich, Saddam, Sharif, Sheikh, Shoes, Suhartho, Suharto, Taiwan, Tamil, Thailand, Tony, UK, US, USA, Wealth, Zia | Leave a Comment »

Pakistan’s political mess – Benazir Bhutto makes triumphant return

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 22, 2007

என்று தணியும் சுதந்திர தாகம்?

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய பேநசீர் புட்டோ, மனித குண்டுத் தாக்குதலுடன் பாகிஸ்தானில் வரவேற்கப்பட்டிருப்பது ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இப்படியொரு வெடிகுண்டு கலாசாரத்தை அரசும், பாகிஸ்தானிய ராணுவமும் ஆதரித்ததன் விளைவை இப்போது அந்த நாட்டு அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் வருத்தமான விஷயம்.

தீவிரவாத சக்திகள் தங்களுக்கு மத முலாம் பூசிக் கொள்வதன் மூலம் அரசின் ஆதரவும், ராணுவத்தின் உதவியும் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டதன் விளைவுதான், பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள்.

ஜெனரல் பர்வீஸ் முஷாரஃப் எந்தத் தீவிரவாத சக்திகளின் துணையோடு ஆட்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாரோ அந்த சக்திகளை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி அடக்கவும் ஒடுக்கவும் முயன்றால், அந்தத் தீவிரவாத சக்திகள் எப்படிப் பேசாமல் இருக்கும்?

பாகிஸ்தானைப் பொருத்தவரை ஆட்சியில் அமர்வதற்கு ஒன்று பஞ்சாபியராக இருக்க வேண்டும் அல்லது சிந்தியாக இருக்க வேண்டும். லாகூரைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் பஞ்சாப் என்றும், கராச்சியைத் தலைநகராகக் கொண்ட மாகாணம் சிந்து என்றும் அழைக்கப்படும். ஜெனரல் முஷாரஃபும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். சிந்துப் பகுதியைச் சார்ந்தவர் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ. அமெரிக்காவின் துணையோடு பிரதமர் முஷாரஃபும், பேநசீர் புட்டோவும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முஷாரஃப் அதிபராகத் தொடர்வது என்றும், பேநசீர் புட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதான் பிரச்னைக்கு அஸ்திவாரமே. அரசியல்வாதிகளான முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும், பேநசீர் புட்டோவும் கைகோர்த்து மீண்டும் மக்களாட்சி நிலவப் போராடுவதை விட்டுவிட்டு பேநசீர் புட்டோ, அதிபர் பர்வீஸ் முஷாரஃபுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இந்த ஒப்பந்தத்திற்காக பேநசீர் புட்டோவுக்கு, அதிபர் முஷாரஃப் தந்திருக்கும் விலை என்ன தெரியுமா? பேநசீர் மீது சாட்டப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படும் என்பதுதான்.

பேநசீர் புட்டோவுக்கு சிந்து மாகாண மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. அதேபோல, நவாஸ் ஷரீஃபும் சரி, பஞ்சாப் மாகாணத்தின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்தான். ஆனால் இருவருக்குமே இருக்கும் பொதுவான பலவீனம், அவர்களது சுயநலமும், ஊழல் குற்றச்சாட்டுகளும். ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, அதிபராகவும் முஷாரஃப் தொடரலாமா என்கிற கேள்விக்கு விரைவிலேயே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க இருக்கிறது.

பாகிஸ்தானிய அரசியலும் சரி, அரசியல் தலைவர்களும் சரி அமெரிக்காவின் கைப்பாவைகளாகத்தான் செயல்பட முடியும் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அந்த அளவுக்கு ராணுவத்திலும் அரசியலிலும் அமெரிக்க ஆதிக்கம் ஊடுருவி இருக்கிறது. இதன் விளைவுதான் அதிகரித்து வரும் தீவிரவாதம். இதுவரை அண்டை நாடான இந்தியாவை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த இந்தத் தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தானிலேயே தங்களது கைவரிசையைக் காட்ட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மத முகமூடியை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை உயிர்ப்பலி கொள்ளும் இந்தத் தீவிரவாத இயக்கங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால், முதலில் அமெரிக்கா மற்றும் சீனாவின் தலையீடு பாகிஸ்தானில் இருக்கக் கூடாது; இரண்டாவது, ஆட்சியில் ராணுவம் தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்; மூன்றாவது, பாகிஸ்தானில் முறையான தேர்தல் நடைபெற்று மக்களாட்சி மலர வேண்டும். இல்லையானால், எல்லாம் வல்ல இறைவன்தான் பாகிஸ்தானைக் காப்பாற்ற வேண்டும்!

———————————————————————————————————————————————-

நம்பிக்கை நட்சத்திரமல்ல, பேநசீர்!

எம். மணிகண்டன்

அரசியல்வாதிகள் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளைச் சந்திப்பார்கள் என்பதால் அரசியலை, பரமபத விளையாட்டுடன் ஒப்பிடுவதுண்டு. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவுக்கு இந்த ஒப்பீடு மிக நன்றாகவே பொருந்தும்.

புட்டோ தூக்கிலிடப்பட்ட பிறகு, வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தான் திரும்பியபோது, ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற வந்த நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பேநசீர். ஆனால் 1988-ல் அவர் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் அவர்மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டபோது, மக்களின் மதிப்பை இழந்தார்.

1993-ல் மீண்டும் பிரதமரானபோது, அவர் மீது முன்பைவிட அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளே எழுந்தன. அதனால் 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து, போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பேநசீரும் அவரது கணவர் ஸர்தாரியும் முறைகேடாகப் பணம் சம்பாதித்ததற்கான ஆதாரங்களைக் காட்டின.

இதனால் சிறைக்குச்செல்ல வேண்டும் என்று அஞ்சியே நாட்டைவிட்டு வெளியேறினார் பேநசீர். அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, நாட்டைவிட்டே வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்தபோதும் சரி, அவரும் அவரது கட்சியினரும் மக்களைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த 18-ம் தேதி பேநசீர் பாகிஸ்தான் திரும்பியபோது, அவர் நடத்திய பேரணியில் குண்டுவெடித்து 139 பேர் இறந்த சம்பவம் உலகையே உலுக்கியது. ஆனால் சம்பவம் நடந்த சில வினாடிகளுக்குள் பேநசீர் கட்சியைச் சேர்ந்த பெரிய தலைவர்கள்முதல் குட்டித் தலைவர்கள்வரை அனைவரும் தங்களது சொகுசு கார்களில் ஏறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர் என்பதுதான் இறந்தோர் குடும்பங்களுக்கு வேதனை அளித்த சேதி.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைக் கொண்டுசெல்வதற்குக்கூட போதுமான வாகனங்கள் இல்லை. இறந்தவர்கள் அனாதைப் பிணங்களாகத் தெருவிலே கிடந்தார்கள். இந்தச் சம்பவத்துக்கு பேநசீரைத் தவிர வேறு யாரைக் குறை கூறினாலும் அது ஒருதலைப்பட்சமாகவே இருக்கும். ஏனென்றால் தனது வருகை ரத்தகளறியாக மாறப் போகிறது என்பது பேநசீருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் முன்பே தெரியும்.

முஷாரப் ஆட்சியில் மக்களைத் தவிக்கவிட்டு இவ்வளவுகாலம் பேநசீர் எங்கே போயிருந்தார் என அவரது கட்சியினரே கேள்வி எழுப்புகின்றனர். முஷாரபுடன் முறையின்றி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே அவர் பாகிஸ்தான் திரும்பியிருக்கிறார் என்பதில் மக்களுக்கும் கோபமிருக்கிறது.

முஷாரப் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் முன்பைவிடச் சுதந்திரமாக இருக்கின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவி செய்தவர் என்பதால் முஷாரபுக்கு மேலைநாடுகளின் ஆதரவு இருக்கிறது.

லால் மசூதி, பழங்குடி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மத அடிப்படைவாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். அப்படியிருந்தும் முஷாரபை மக்களுக்குப் பிடிக்காமல் போனதற்கு காரணம், அவர் பதவிக்கு வந்தவிதமும், பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்யும் தந்திரங்களும்தான்.

ஆனால், இந்தத் தந்திரங்கள் அனைத்தையும் இதற்கு முன்பே செய்தவர்தான் பேநசீர். அவரும் தனது வசதிக்கேற்ப அரசியல் சட்டத்தைத் திருத்தியவர்தான். தனது குடும்பத்தினருக்கு வானாளாவிய அதிகாரம் வழங்கி சட்டம் ஒழுங்கைக் கேலிக்கூத்தாக்கியவர்தான்.

பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமரானாலும், இப்போது அவருக்கும் முஷாரபுக்கும் இடையே இருக்கும் சுமுக உறவு தொடர்ந்து இருக்கப்போவதில்லை. அதற்குக் காரணம் முஷாரப் கையில் இருக்கும் ஆட்சிக் கலைப்பு அதிகாரம்தான். இதற்கான அரசியல்சட்டத் திருத்தத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு வேண்டும்.

ஆட்சியைப் பிடிப்பதே சிரமம் என்பதால், இரண்டில் மூன்று பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்று அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது முடியாத விஷயம். இச் சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே ஒருமுறை பதவியை இழந்த பேநசீர், பதவியில் நீடிக்க வேண்டுமானால் முஷாரபுக்கு அடிபணிந்தே சென்றாக வேண்டும். அதனால், தத்தமது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக முஷாரபும் பேநசீரும் புதிய தந்திரங்களை பிரயோகிப்பார்கள்.

அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற காரணத்துக்காக முஷாரபை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், பேநசீருக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாகச் செயல்படுவார்கள். ஏனென்றால் முஷாரபைக் காட்டிலும் அமெரிக்காவின் பேச்சை அப்படியே கேட்டு நடப்பவர் பேநசீர். முஷாரபுக்கு ஒருபடி மேலேபோய், பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கக்கூட பேநசீர் தயங்கமாட்டார்.

பேநசீரும், முஷாரபும் திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால், பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று பேநசீர் பிரதமராவார். ஆனால் முன்புபோல் பேநசீரிடம் பாகிஸ்தான் மக்கள் எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள். பாகிஸ்தானை ஆட்சி செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? புட்டோவின் மகள் என்பதைத் தவிர.

Posted in Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Benazir, Bhutto, Bribery, Bribes, Corruption, kickbacks, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Navaaz, Navas, Navaz, Nawaz, Pakistan, Pervez, Pervez Musharraf, political, Punjab, Sharif, Sind, terror, terror networks, Terrorism, terrorist, Terrorists | Leave a Comment »

Corruption & Powerful world Leaders – Lobbying, Kickbacks in the International Politics

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2007

உறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை!

க. ரகுநாதன்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.

இவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கலீதா ஜியா தமது இளைய மகன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

எல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.

பிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.

அவருக்கும் வந்தது அரசியல் ஆசை!. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.

அடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.

பதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.

நாட்டில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.

இதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.

2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.

மொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்!.

நல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.

முன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.

Posted in Abe, Army, Bangladesh, Bhutto, Biz, Business, Cinema, Corruption, Courts, Democracy, Films, Freedom, Govt, Hasina, HC, Independence, International, Japan, Justice, Khaleda Zia, Khaledha, kickbacks, Law, Leaders, Lobbying, Military, Movies, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Nawaz, Order, Peru, Pervez, Phillipines, Politics, Rule, SC, Sharif, Sheriff, World, Zia | Leave a Comment »