Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Navy’ Category

Sixth Pay Panel recommends hefty pay hikes for government staff: Deficit may widen

Posted by Snapjudge மேல் மார்ச் 25, 2008

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வு: 6-வது ஊதியக் குழு பரிந்துரை

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 6 வது ஊதியக்குழுத் தலைவர் நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா.

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

புதிய ஊதிய விகிதத்தை 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

முன் தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி, இரு தவணைகளில் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.

இந்தப் பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்து அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். மத்திய அமைச்சரவை இப் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தும்.

இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.

புதிய ஊதிய உயர்வு விகிதப்படி மத்திய அமைச்சரவைச் செயலரின் ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செயலரின் ஊதியம் ரூ. 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளித்து அதன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 2.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.

திறமைக்குப் பரிசு: திறமையான ஊழியர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் “திறமை அடிப்படையிலான ஊதிய உயர்வு’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்.

வீட்டு வாடகைப்படி: வீட்டு வாடகைப்படி உள்பட பெரும்பாலான படிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குழந்தைகளின் கல்வி செலவு உதவித் தொகை ரூ. 50-லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் 40 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் உள்ள 35 கிரேடுகளை (பணி நிலை) 20 கிரேடுகளாக குறைக்கவும் ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது.

50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஊதியம் சற்று உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர்களுக்கு: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கவும் ஊதியக் குழு சிபாரிசு செய்துள்ளது.

ராணுவத்தில் பிரிகேடியர் மற்றும் அதற்கு இணையான பதவி வரை மாதப்படி ரூ. 6000- ஆக உயர்த்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியக் குழு பரிந்துரைகளால் அரசுக்கு 2008 – 09 நிதியாண்டில் ரூ. 12,561 கோடி கூடுதல் செலவாகும்.

முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி தொகைக்கு ஆகும் செலவு ரூ. 18,060 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

* அடிப்படை சம்பளத்தில் 40 சதவீதம் உயர்வு

* 2006-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி

யிலிருந்து அமல்படுத்த வேண்டும்.

* முன்தேதியிட்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பாக்கி இரு தவணை

களாக வழங்கப்பட வேண்டும்.

* அதிகபட்சமாக அமைச்சரவை செயலரின் ஊதியம் ரூ. 90,000

* கீழ்நிலை ஊழியரின் குறைந்தபட்ச

சம்பளம் ரூ. 6600

* ஓய்வு பெறும் வயது 60 என்பதில் மாற்றமில்லை

* பணி நிலை 35 கிரேடுகள் என்பது 20 கிரேடுகளாக குறைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ராணுவத்தினருக்கும் ஊதியம்

* பிரிகேடியர் பதவி வரை மாதப் படி

ரூ. 6000-ஆக உயர்வு

* வார வேலை நாள் 5 என்பதில் மாற்றமில்லை

* ஆண்டுதோறும் ஊதிய உயர்வு 2.5 சதவீதம்

* திறமை அடிப்படையில் கூடுதலாக ஒரு சதவீதம் ஊதிய உயர்வு

* மத்திய அரசு ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு

* வீட்டு வாடகைப் படி உள்பட பெரும்பாலான படிகள் இரு மடங்காக உயர்வு

* குழந்தைகளின் கல்விச் செலவுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு 50-திலிருந்து ரூ. 1000-ஆக உயர்வு

* விடுதி மானியம் ரூ. 3 ஆயிரமாக உயர்வு

* ஒரு பணி நிலையில், அதிகபட்ச ஊதியத்தை எட்டிய ஓராண்டுக்கு பிறகு, அவருக்குப் பதவி உயர்வு வழங்காவிட்டாலும் அடுத்த பணி நிலைக்கு உரிய ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————–
உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு

புதுதில்லி, மார்ச் 24: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்க 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள 6500 – 10,500 என்ற சம்பள விகிதத்தை 8700 – 34,800 என்று மாற்றி கிரேடு சம்பளம் ரூ. 4600-வுடன் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் பதிவாளர், இணைப் பதிவாளர் பணிகளை இணைத்து அப் பதவிகளுக்கான ஊதிய விகிதம் 18,400 – 22,400 தற்போது 39,200 – 67,000 என்று உயர்த்தி கிரேடு ஊதியம் 9 ஆயிரத்துடன் வழங்கப்படும்.

4 ஆண்டுகள் பணி முடிந்த சீனியர் ஜூடிசியல் உதவியாளர், சீனியர் தனி உதவியாளர், ரீடர், சீனியர் ஜூடிசியல் மொழி பெயர்ப்பாளர், நீதிமன்ற அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஊதியம் 6,500 – 10,500 என்பது தற்போது 8,000 – 13,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு பணிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
முப்படைத் தளபதிகளுக்கு ரூ. 90,000 ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: தரைப்படை, விமானப் படை, கடற்படை தளபதிகளுக்கு ஊதியம் ரூ. 90,000-ஆக உயர்த்த ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது முப்படைத் தளபதிகளுக்கும் மாத ஊதியமாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 60 ஆயிரம் உயர்த்தி மொத்தம் ரூ. 90 ஆயிரம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியில் மத்திய அமைச்சரவை செயலருக்குத்தான் ரூ. 90 ஆயிரம் வழங்க ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்த ராணுவ வீரர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

—————————————————————————————————————————————————–
ஆணையத் தலைவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை ஊதியம்

புதுதில்லி, மார்ச் 24: பங்கு பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் “செபி’ அமைப்பு, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களின் தலைமைப் பதவிகளுக்கு மாத ஊதியம் ரூ. 3 லட்சம் வரை உயர்த்தி 6-வது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

திறமையான நபர்களை வெளியிலிருந்து இப் பதவிக்கு ஈர்க்கும் நோக்கில் ஊதியம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஊதியக் குழு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ. 1.5 லட்சமும் ஆணையத்தின் தலைவருக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கார் மற்றும் வீடு அளிக்கப்படாவிட்டால் தலைமைப் பதவிக்கு ரூ. 3 லட்சமும் உறுப்பினர் பதவிக்கு ரூ. 2.5 லட்சமும் வழங்க குழு சிபாரிசு செய்துள்ளது.

—————————————————————————————————————————————————–
வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத், மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் வேலை வாய்ப்பின்மையை அதிகரிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கருத்துக் கூறியுள்ளது.

மத்திய அரசுப் பணி நிலைகள் 35 கிரேடுகளில் இருந்து 20 கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று அக் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார்.

மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களுக்கு வெகுவாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு கணிசமாக ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இந்தியா போன்ற ஏழை நாடுக்கு இது தேவையில்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரைகள்: மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றம்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் எம். துரைப்பாண்டியன் கூறினார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

எங்களுடைய அனுபவத்தில் பெரிய ஏமாற்றத்தைத் தந்திருக்கும் ஊதியக் குழு அறிக்கையாக இது இருக்கிறது. நான்காம் நிலை ஊழியருக்கும், உயர்நிலை அதிகாரிக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 12 விழுக்காடு அளவுதான் இருக்க வேண்டும் என்றபோதிலும், அந்தக் கோட்பாடு இப்போது மீறப்பட்டுள்ளது.

நான்காம் நிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு 18 முதல் 25 விழுக்காடு வரைதான் உள்ளது. அமைச்சரவைச் செயலர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு, ஊதியக் குழு பரிந்துரை அமலுக்கு வரும் காலத்திற்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ.17 லட்சம் வரை வரும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கியோர் அதிக அளவில் வேலைபார்க்கும் நான்காம் நிலை ஊழியர் பணிகள் இனிமேல் இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் காப்பீடு, வங்கித் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது. அவருடைய மேற்பார்வையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியத் திருத்தம் செய்யப்படுகிறது. அதிலும்கூட நான்காம் நிலை ஊழியர்களுக்கு 18 விழுக்காடுதான் உயர்வு கிடைத்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது மிகவும் ஏமாற்றமான விஷயம்தான்.

இதைக் கண்டித்து புதன்கிழமை (மார்ச் 26) மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக அகில இந்திய அளவில் ஆலோசனை செய்து, போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
6-வது ஊதியக் குழு பரிந்துரை: “தனியாருடன் ஒப்பிடக் கூடாது’

சென்னை, மார்ச் 24: நிதித்துறை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம்:

இந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடும் வகையில் ஏதும் இல்லை. தேர்தல்கால அறிவிப்புகள் போலத்தான் இதுவும் இருக்கிறது. உயரதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நன்றாக இருக்கிறது என்றாலும், கீழ்நிலை அலுவலர்களுக்கு அதைப் போன்ற நிலை இல்லை. அதனால் அவர்கள் போராடக் கூடிய நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை. நான்காம் நிலை பணியிடங்களை ஒழித்துவிட மறைமுகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இது சாத்தியமாகுமா என்று தெரியவில்லை.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பொருத்தவரை, தனியார் துறையில் தரப்படும் ஊதியத்துடன் ஒப்பிடக் கூடாது. அரசுப் பணியில் உள்ளவரை, வீட்டு வசதி, மருத்துவ வசதி, வாகன வசதி, கல்வி வசதி போன்றவை இருப்பதை மறந்துவிடக் கூடாது. பணிக் காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனியார் துறையில் இதைப் போன்ற எந்த வசதியும் கிடையாது.

எனவே, அரசுத் துறையில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தனியார் துறைக்குப் போய்விடுவார்கள் என்பதில் உண்மை ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.

—————————————————————————————————————————————————–
“ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குத் தரும் சம்பளம் மிகவும் குறைவுதான்’

நமது சிறப்பு நிருபர்

சென்னை, மார்ச் 24: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி பெரும்பாலான அதிகாரிகளுக்கு உயர்த்தப்படும் ஊதியத்தில் 33 சதவீதம் வருமான வரியாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும் என்பதால், அவர்களின் கைக்குக் கிடைக்கும் கூடுதல் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசில் வருவாய்த் துறைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற எம்.ஆர். சிவராமன் (படம்) இதுபற்றிக் கூறியதாவது:

இப்போது உயர்த்தப்படும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் போக அரசுச் செயலாளர்களுக்கு ஏறத்தாழ ரூ.13,000 மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். அதன்படி பார்த்தால், அறிக்கையில் உள்ளவாறு நிறைய ஊதிய உயர்வு தரப்படுவதைப் போலத் தோன்றினாலும், வருமான வரி மூலமாக கணிசமான தொகை அரசுக்கே திரும்பச் சென்றுவிடும். அதனால், அரசுக்கு நிகர செலவு என்பது குறைவாகத்தான் இருக்கும்.

இயக்குநர், செயலாளர், இணைச் செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஏறத்தாழ 14 மணி நேரம் உழைக்கிறார்கள். நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவைகளுக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் மீது நிறைய பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்திருக்க வேண்டும்.

தனியார் துறையில் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தைவிட இது மிகவும் குறைவானதாகும். செயலாளர் போன்ற பதவிகளில் இருப்பவர்களின் செயல்பாடுகளுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் அல்லது ரூ.3 லட்சம் என சம்பளம் தரலாம்.

இதுபோன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு முன்பாக, பொதுமக்கள் முன்பாக நிறுத்தி, அவரின் சொத்து விவரம், பணித் திறன் போன்றவற்றைக் கேட்டுப் பதிவு செய்யலாம். அதில் திருப்தி ஏற்பட்டால் அப் பதவிக்கு நியமிக்கலாம். தகுதி, பணித் திறன் அடிப்படையில் அதிகமான சம்பளத்தைத் தரலாம் என்பதுதான் சரியானதாக இருக்கும்.

வெளிநாடுகளில் உயரதிகாரிகளுக்கு வாகனங்கள் தரப்படுவதில்லை. இந்தியாவில் வாகனங்கள், அதற்கு ஓட்டுநர்கள் என தேவையற்ற செலவுகள் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரு சம்பளத்தை உயரதிகாரிக்குக் கொடுத்துவிட்டால், வாகன ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பு போன்ற செலவுகள் அரசுக்கு மிச்சமாகும்.

மேலும், சில துறைகளில் செயலர் அந்தஸ்துக்கு மேல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியில் இருப்பது தேவையற்றது என்று அவர் கூறினார்.

தற்போது தமிழக அரசுப் பணியில் இருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

15 முதல் 20 ஆண்டு வரை அனுபவம் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை சம்பளம் தருவதற்குத் தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந் நிலையில் இப்போது செயலர் அளவில் ரூ.80 ஆயிரம் என சம்பளம் நிர்ணயித்திருப்பது போதுமானதல்ல. இதில் வரிகள் பிடித்தம் போக ரூ.50 ஆயிரம் அளவுக்குதான் கைக்கு வரும். ஆக, ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருப்பதைவிட கூடுதலாக ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.

அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை, தக்க வைத்துக் கொள்வதற்கு இந்தச் சம்பள விகிதம் உதவாது. ஊதியக் குழு அறிக்கை அமலுக்கு வருவதற்காக பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது அமலுக்கு வந்து, நிலுவைத் தொகைகள் கைக்கு வந்ததும் சில மாதங்களில் அவர்கள் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்வார்கள்.

வெளியில் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். அதிலும் பெரும் பகுதி வருமான வரி பிடித்தத்தில் வராத வகையில் பிரித்துக் கொடுத்துவிடுவார்கள். அதனால், அதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்.

20 ஆண்டு அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வெளியேறினால், அதிக அனுபவம் இல்லாத, புதிய அதிகாரிகளை வைத்துக் கொண்டு அரசு நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

எனவே, அனுபவம் பெற்றவர்கள் வெளியேறாமல் தடுக்க வேண்டுமானால், தனியார் துறையில் உள்ள சம்பளத்துக்கு இணையான அளவுக்கு சம்பளம் தர அரசு முன் வர வேண்டும். ஏனெனில், 20 வருட அனுபவம் பெற்றவர்களை திடீரென உருவாக்கிட முடியாது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பார்ப்பதே சிரமமாகிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார்.

—————————————————————————————————————————————————–
ஊதியக் குழு பரிந்துரை: “பண வீக்கம் அதிகரிக்கும்’

சென்னை, மார்ச் 24 : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவருமான என். முருகன் கூறினார்.

ஊதியக் குழு பரிந்துரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகள்:-

“”மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விலைவாசி வெகுவாக உயர்ந்துவிட்டது. மேலும் பண வீக்கமும் 4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக அதிகரித்துவிட்டது. ஊதியக் குழு பரிந்துரை அமலாகும் நிலையில் பண வீக்கம் மேலும் அதிகரிக்கும். இது தன்னிச்சையாக ஏற்படும்.

சம்பள உயர்வு அவசியம்: இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சம்பளக் கமிஷன்கள், விலைவாசி உயர்வு, தகுந்த ஊதிய ஊக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊதிய உயர்வு விகிதத்தை பரிந்துரை செய்தன.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உலக தாராளமயமாக்கலுடன் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டு விட்டதாலும் தனியார் துறையில் மிக அதிக அளவு தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகள் பெருகியதாலும் அவற்றில் வேலை செய்வோருக்கு சம்பள விகிதங்கள் மிக அதிகமாக உள்ளன.

இதனால் பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுப் பணியை ராஜிநாமா செய்துவிட்டு தனியார் வேலைக்குப் போக துணிந்து விட்டனர். அரசு வேலையில் சம்பளம் எனும் விஷயம்போக, சம்பளம் அல்லாத பல சலுகைகள் (உதாரணம்: பங்களா வசதி, வாகன வசதி உள்ளிட்டவை) இருப்பதால் கவர்ச்சி இருந்தது. ஆனால், தனியாரும் இத்தகைய வசதிகளைக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

எனவே இந்த ஊதிய உயர்வு பரிந்துரை மிகவும் தேவையான ஒன்று. இந்த ஊதிய உயர்வாவது இல்லையெனில் அரசுப் பணிக்கு திறமையானவர்கள் வர மாட்டார்கள்.

ஊதியக் குழு பரிந்துரை காரணமாக அரசுக்கு ரூ.12,561 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் ரூ.60,000 கோடி அளவுக்குத் தள்ளுபடி, வருமான வரி வரம்பை அதிகரித்தது போன்ற சலுகைகளைக் கணக்கில் கொள்ளும்போது இது ஒன்றும் பெரிய செலவு அல்ல.

குறிப்பாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 3.2 கோடி சம்பளதாரர்களுக்கு அளிக்கப்பட்ட வருமான வரி வரம்பு உயர்வுச் சலுகையினால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய இழப்பு ரூ.30,000 கோடி.

ஆனால், இந்த சம்பள உயர்வு பரிந்துரையைப் பார்த்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஊழியர்களுக்கும் அதே விகிதத்தில் மாநில அரசுகள் கொடுத்து விடும். இதுதான் நமது பழைய அனுபவம்.

இவ்வாறு கொடுப்பது மாநில நிதி நிலைமையை வெகுவாகப் பாதிக்கும். ஏனெனில் மத்திய அரசின் பொருளாதார நிலை வேறு, மாநில அரசுகளின் பொருளாதார நிலை வேறு” என்றார் முருகன்.

—————————————————————————————————————————————————–

Posted in 6, Army, Bonus, Bribery, Bribes, Commission, Compensation, Corruption, defence, Defense, Deficit, Economy, employee, Employers, Employment, Females, Finance, Flexitime, Government, Govt, hikes, Hours, Income, Increases, Increments, Inflation, job, kickbacks, Ladies, Military, Navy, panel, Pay, pension, Raises, recommendations, Remuneration, retrospective, salaries, Salary, She, SriKrishna, Staff, Timings, Women | Leave a Comment »

Women in India: Serving in the Indian Army – Gender equality in Military, Navy, Air Force

Posted by Snapjudge மேல் மார்ச் 5, 2008

சேவை: இராணுவத்தில் பெண்கள்!

மு.வெ.

ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லி பல வருடங்களாக ஆகிவிட்டன. உண்மையில் அப்படி இருக்கிறதா? பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், ஆங்காங்கே சில நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் தென்படுகின்றன. அப்படிப்பட்ட நம்பிக்கை அளிக்கும் ஒன்றுதான், நமது இந்திய இராணுவத்தில் பெண்களின் பங்களிப்பும்.

இந்திய இராணுவத்தில் 1993-ஆம் ஆண்டில்தான் பெண்கள் சேர்க்கப்பட்டனர். ஜூனியர் லெவல் கிரேடில் அப்போது வேலை நிறைய காலியாக இருந்தது. அந்த சமயத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்.

பொதுவாக இருபத்தியொரு வயது முதல் இருபத்தி ஐந்து வரை வயதுள்ள பெண்கள் ஆறு மாதத்திற்கொருமுறை சுமார் 5000 பேர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால் அவர்களிலிருந்து தேர்வு செய்யப்படுகிறவர்களோ வெறும் பத்து பேர் மட்டும்தான்! தேர்வு செய்யப்படுகிறவர்கள் ஐந்து வருடம் ஆபீஸர் கிரேடில் பணிபுரிவார்கள். அவர்கள் மேலும் சிறப்பாகப் பணிபுரிந்தால் மேலும் ஐந்து வருடம் பணி நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு ஒன்பது மாதம் டிரெயினிங் கொடுக்கப்படுகிறது. இராணுவத்தில் வெவ்வேறு இடங்களில் பணியிலிருக்கும் ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொண்டால், அவர்கள் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியிலிருக்கும் காவாலி, “”பொதுவாக ஸ்போர்ட்ஸ், என்.சி.சி.யில் இருந்த பெண்கள்தான் அதிகமாக இராணுவத்தில் சேர்கிறார்கள். ஆண்கள் அளவுக்கு எங்களுக்கு வேலைப் பளு அதிகம் இல்லை என்றாலும், போதிய அளவு சம்பளமும், சமூகத்தில் மரியாதையும் கிடைக்கின்றது. ஆண்களுக்கு இணையாக எங்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சல்வார் கமீசில் இருக்கும் போதுதான் பெண்கள் என்று உணருகிறோம்” என்கிறார்.

இராணுவத்தில் பொறியியல், கல்வித் துறை, சிக்னல்ஸ், ஹாஸ்பிடல் போன்ற துறைகளில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. 2005-ன் கணக்குப்படி இராணுவத்தில் 40000 ஆண் அதிகாரிகளுக்கு 918 பெண் அதிகாரிகளும், கடற்படையில் 6000 ஆண் அதிகாரிகளுக்கு 100 பெண் அதிகாரிகளும், விமானப்படையில் 15000 ஆண் அதிகாரிகளுக்கு 454 பெண் அதிகாரிகளும் உள்ளனர்.

அதிகம் படிக்காதவர்கள் தான் பெரும்பாலும் இராணுவத்தில் சேருவார்கள் என்ற நிலை இருபது வருடங்களுக்கு முன்னால் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த நிலையையும் தற்போதைய பெண்கள் மாற்றி விட்டனர். எம்.பி.ஏ., படித்திருக்கும் ரேணுதத்தா, “”இராணுவப் பணியை பாதுகாப்பானதாகவும், சவாலானதாகவும் உணர்கிறேன்” என்கிறார்.

Posted in Airforce, doctors, Education, Employment, Engg, Engineering, Equality, Females, Gender, Generals, Hospital, inequality, Infantry, Jobs, Males, medical, Men, Military, Navy, NCC, Nurses, officers, Opportunities, Pilots, Signals, Sports, Uniform, Women | Leave a Comment »

Jeyaraj Fernandopulle to take the place of Sri Lankan Foreign Minister Rohitha Bogollagama as interim in-charge of External Affairs

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 1, 2008

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம்

இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் வெளிநாட்டமைச்சிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி, பாகிஸ்தானுக்கான தனது விஜயத்தினை முடித்துக்கொண்டு நாளைய தினமே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பவிருப்பதாகத் தெரியவருகிறது.

ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானிலிருந்து திரும்பும் வரையில் தன்னை தற்காலிகமாக வெளியுறவு அமைச்சராக இருக்கச்சொல்லி ஜனாதிபதி பணித்ததால் தான் இன்று இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக
வெளியுறவு அமைச்சரும் துணையமைச்சரும் நாட்டில் இல்லாத இந்த நேரத்தில் சில முக்கியப் பணிகளுக்கு உடனடியாக ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் தான் தற்காலிக அமைச்சராகப் பொறுப்பேற்றதாகவும் அதன் பின்னர் கனடாவுக்கான தூதரை இன்று தான் நியமித்ததாகவும் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டபோது ஜெயராஜ் ஃபெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

நாடு திரும்பிய பின்னர் போகல்லகம வெளியுறவு அமைச்சராகத் தொடருவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அதிபர் முஷாரஃபுடன் அமைச்சர் போகல்லகம

இதேவேளை, பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அங்கு ஜனாதிபதி ஜெனரல் பெர்வேஸ் முஷாரஃப், பிரதமர் மற்றும் அரச உயர்பிரதிநிதிகளையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடியிருக்கிறார்.

இலங்கையின் இறைமைக்கும், ஆட்புல ஒருமைபாட்டிற்கும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜெனரல் முஷாரஃப், இலங்கை அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் தொடந்தும் தனது ஆதரவினை வழங்கிவருமென்று உறுதியளித்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.


சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார்

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், “துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது” என்றார்.

எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.

இலங்கைத் தாக்குதலில் 18 பேர் பலி

இலங்கை மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ள எனுமிடத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற பாரிய பஸ் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் அதில் பயணம் செய்துகொண்டிருந்த 18 பொது மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் 50ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து அண்மையிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அனுராதபுரத்துக்குப் போய்க் கொண்டிருந்த இந்த பஸ் வண்டி தம்புள்ளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அதில் குண்டு வெடித்தது

கொல்லப்பட்டுள்ளவர்களில் 14 பேர் பெண்கள், நால்வர் ஆண்கள், மிகவும் மோசமான நிலையில் இருந்த இருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தம்புள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர். சுதர்ஷன் அரம்பேகெதர அவர்கள் காயப்பட்டவர்கள் மொத்தம் 93 பேர் கொண்டுவரப்பட்டதாகக் கூறுகிறார்.

பஸ்ஸினுள் வைக்கப்பட்ட இந்தக் குண்டு தூர இயக்கியால் வெடிக்க வைக்கப்பட்டது என்ற பொலிஸ் விசாரணையின் ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய மாகாணத்துக்கான உயர் போலீஸ் அதிகாரியான கிங்ஸ்லி எக்கநாயக்க அவர்கள் இந்தக் குண்டு மாத்தளையில் பஸ்சுக்குள் வைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தம்புள்ளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் மீது இலங்கை இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் தங்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 பிப்ரவரி, 2008

கொழும்பு இரயில் நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் பலி

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் தலைநகர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினுள் இடம்பெற்ற பெண் தற்கொலைக்குண்டு தாக்குதலில் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

கொழும்பு நகரின் இதயப்பகுதியில், மிகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் குண்டுத்தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ஞாயிறு பிற்பகல் மீரிகம பிரதேசத்திலிருந்து வந்த இரயில் வண்டியொன்று மூன்றாவது மேடையில் வந்து நின்றதும், அதிலிருந்து இறங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக்குண்டுதாரியொருவரே இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பினை நடத்தியிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவல் வெளியிட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்துப்பிரிவு வைத்திய அதிகாரியொருவர், இந்தக் குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சுமார் 100 பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இவர்களில் சுமார் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இரயில் நிலையத்தில் தற்போது மேலதிக துருப்பினர் குவிக்கப்பட்டு, விசேட தேடுதல் மற்றும் விசாரணைகள் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

திங்கட்கிழமையன்று, இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் கொழும்பு காலிமுகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி நாட்டின் சகல பாகங்களிலும் குறிப்பாகத் தலைநகர் கொழும்பையும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் ஞாயிறன்று இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


இலங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணிகள் போக்குவரத்திற்கு தடை

வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்
வெறிச்சோடி இருக்கும் வவுனியா இரயில் நிலையம்

இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்துக்கள் அனைத்தும் ஞாயிற்றுகிழமை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அறிவித்திருக்கின்றன.

வவுனியாவில் இருந்து மதவாச்சி மற்றும் அனுராதபுரம் ஊடாகத் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதியாகிய ஏ9 வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருப்பதாக, வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை அதிகாரிகளுக்குப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் போக்குவரத்துக்கள் அனுராதரபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று காலை தம்புள்ள நகர பஸ் நிலையத்தில் இடம்பெற்ற பஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்தே இத்தகைய இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலதிக விபரங்களைக் கேட்கலாம்.


இலங்கை சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள்: மக்கள் கருத்து

இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்
இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்

இலங்கை சுதந்திரமடைந்து 60 ஆண்டு காலமாகின்றது என்றாலும் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இதன் விளைவாக தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் சிங்கள மக்களும் பாதிப்பிற்கு இலக்காகி வருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு உடன் எட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த நாட்டில் நிரந்தர சமாதானமும் அமைதியும் உருவாக முடியும் என்று திருகோணமலைவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது உரிய கல்வித் தரத்தினை இன்னும் எட்டவில்லை என்றே கூறவேண்டும். தற்போதைய போர்ச் சூழலின் விளைவாக இந்த மாகாணத்தில் 32 பாடசாலைகள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. மேலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. கிழக்கு மாகாண கல்வித் தரத்தை முன்னேற்ற முயன்றுவருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளை இயன்றவரை முன்னெடுத்துச் வருவதாகவும், பின் தங்கிய கிராமங்களிலும் இத்தகைய சேவைகளை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர்.ஞானகுணாளன் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் இன்றளவும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மனிதர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதுடன் அவர்கள் விரும்பிய தொழிலையும் மேற்கொள்ளும் நிலைதான் உண்மையான சுதந்திரம். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மூதூர் பிரதேச சபை உறுப்பினர் மொஹமது ரஜீஸ் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 பிப்ரவரி, 2008

அனுராதபுரம் மாவட்டத்தில் பேருந்து மீது கிளேமோர் கண்ணிவெடித் தாக்குதல்; 13 பேர் பலி

காயமடைந்தவர்களுக்கு அனுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வெலிஓயா பகுதியில் எத்தாவெட்டுணுவௌ என்னுமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் அரசு பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் 5 இராணுவத்தினர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பராக்கிரமபுரவிலிருந்து ஜானகபுர என்னுமிடத்தை நோக்கிச் சென்ற பேருந்து வண்டி மீது கொப்பேகடுவ சந்திக்கு அருகில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

காயமடைந்தவர்கள் பதவியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற 3 ஆவது பெரிய குண்டுத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் என அரசு குற்றம்சுமத்தியுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுகுறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


புலிகளுக்கு எதிரான போரை வென்று வருகிறோம்: வைரவிழா சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரை

முப்படை தளபதிகளுடன் இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது அரசு வெற்றிபெற்று வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் கொழும்பில் நாட்டின் 60 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளின்போது இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினம் இன்று கொழும்பு காலிமுகத் திடலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிசாரின் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் எடுத்துக்கூறும் நோக்கில் கண்கவர் இராணுவ அணிவகுப்புகளும் இடம்பெற்றன.

இராணுவ அணிவகுப்பு
இராணுவ அணிவகுப்பு

இலங்கைக்கு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நாட்டுக்காகப் போராடி உயிர்நீர்த்த சகலரையும் நினைவு கூறும்வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியின் பின்னர், கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசியக்கொடியை ஜனாதிபதி ராஜபக்ஷ வைபரீதியாக ஏற்றிவைத்தார்.

பின்னர் இராணுவத்தினரின் பீரங்கி மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

நாட்டுமக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இலங்கை கொடிய பயங்கரவாதத்தை முறியடிப்பது மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற இருபெரும் சவால்களுக்கு முகம்கொடுத்து வருகிறது என்றும், இந்தச் சவால்களை துணிவாக எதிர்கொண்டு நாட்டினை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்ல தானும் தனது அரசும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதிகளில் சுதந்திர தினம்

வவுனியாவில் நடந்த சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அரச செயலகங்கள், பொலிஸ் மற்றம் இராணுவ தளங்களில் தேசிய கொடியேற்றலுடன் சுதந்திர தின வைபவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தினத்தையொட்டி, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் தீவிரமாக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

வவுனியா அரச செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின வைபவத்தில் மதத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள், செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அரச வைபவத்தில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது சமூக முக்கியஸ்தர்களோ பொதுமக்களோ கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் சி.சண்முகம் குறிப்பிட்டார்.


தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி

தமிழக முதல்வர்

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


அறுபது வருடகால சுதந்திரத்தின் பின் இலங்கை: பெட்டகம்

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம்பெற்று 60 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆனால் தெற்காசியாவிலேயே உயர்ந்த அளவு என்று சொல்லக்கூடிய சுமார் 90 வீதமான படித்த ஜனத்தொகையையும், பல்வேறு இயற்கைவளங்களையும் தன்னகத்தே கொண்ட இலங்கை இன்னமும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது.

இது குறித்துக் பல்வேறு தரப்பினரின் கருத்துகளுடன் எமது கொழும்பு செய்தியாளர் பி.கருணாகரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

Posted in Affairs, Bhaila, Bogollagama, defence, Defense, Deputy, Eelam, Eezham, External, External Affairs, Fernandopulle, Foreign, Hussein, Hussein Bhaila, interim, Jeyaraj, LTTE, Minister, Navy, Ram, Rama, Raman, Ramar, Rohitha, Sea, Sethu, Setu, Sri lanka, Srilanka | Leave a Comment »

Tamil Nadu’s fishing industry vs Sri Lankan naval personnel: Harassment of Indian fishermen

Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007

மீனவர் வாழ்வு விடியுமா?

உதயை மு. வீரையன்

அண்மைக்காலமாக, தமிழக மீனவர்கள் தொழில்செய்து பிழைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றன.

நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களின் 17 படகுகளைக் கடத்திச் சென்றனர். அந்தப் படகுகளில் 99 மீனவர்கள் இருந்தனர்.

மீனவர் கிராமப் பஞ்சாயத்தார் இதுபற்றி நாகை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டனர். தகவலறிந்த முதல்வர், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் தந்த உறுதியின்பேரில் 99 மீனவர்களும் விடுவிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

“இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவினைக் கவனத்திற்கொண்டு இம்மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய அரசாங்கம் இந்த மீனவர்கள் தனது நாட்டுக் குடிமக்கள் என்பதை மறந்துவிட்டதா? “யாருக்கோ நடக்கிறது, எப்படியோ போகட்டும்’ என்று பாராமுகமாக இருப்பதன் பொருள் என்ன? தன் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் அரசுக்கு இல்லையா? நமது குடிமக்கள் வேற்று நாட்டுப் படையினரால் கைது செய்யப்படுவது நம்நாட்டு இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால் இல்லையா?

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைகளில் ஒன்றான தமிழகக் கடற்கரையின் நீளம் 1076 கிலோமீட்டர். இவற்றில் 600க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள்; இந்தக் கிராமங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம்.

ராமேசுவரம் முதல் நாகைவரை நீண்டிருக்கும் கடலில் மீனவர்கள் சுதந்திரமாக கட்டுமரம், படகு, தோணிகள், விசைப்படகுகளைச் செலுத்தித் தொழில்செய்துவந்த காலம் கடந்த காலமாகிவிட்டது. இப்போது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அஞ்சி வாழும் நிலை.

சாதாரணமாகவே கடற்பயணம் ஆபத்தானது. எந்த நேரத்தில் அலை எப்பக்கம் அடிக்குமோ என்ற கவலை; சூறாவளியும், புயலும் அலைக்கழிக்குமே என்ற அச்சம்; பாம்புத் தொல்லை – இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களைப் பிடுங்கிக் கொள்வதும் தாக்குவதும், சுடுவதும், சிறைபிடிப்பதும் தொடரும் பேரவலம். இதற்கு முடிவே கிடையாதா?

கரையில் நடப்பவை, உடனே “சுடச்சுட’ செய்திகளாகி வெளிவருகின்றன; கடலில் நடப்பவை, பல நேரங்களில் வெளியே தெரிவதில்லை. கணக்கில் வராமல் கடலிலேயே மாய்ந்து போனவர்கள் எத்தனையோ பேர்?

பலமுறை இலங்கைக் கடற்படை இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்தமுறை இந்திய எல்லைக்குள் வந்த இலங்கைக் கடற்படை, தென்தமிழக மீனவர்கள் ஐந்து பேர்மீது துப்பாக்கியால் சுட்டது. வழக்கம்போல சட்டப்பேரவையில் இதைக் கண்டித்துத் தீர்மானம், இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் அறிவிப்பு; அரசின் கடமை இத்துடன் முடிந்துவிட்டது.

இம்மாதிரி நேரங்களில் அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள், அனுதாபச் செய்திகளால் மட்டும் பயன் என்ன? அந்த மீனவர்களை நம்பியுள்ள அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியக் கடலோரக் காவல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியக் கடற்படை என்ன செய்கிறது? இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பணியை விட்டுவிட்டு இலங்கை அரசுக்கே சேவை செய்வதுபோல் தோன்றுகிறது. போராளிகளும், அகதிகளும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுவது மட்டும்தான் இதன் பணியா? ஆயுதக் கடத்தலைத் தடுக்கிறோம் என்று கூறுகின்றனர். தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது யார்?

தமிழகத்தின் பாரம்பரியக் குடிகள் மீனவர்கள். இவர்களது பாரம்பரியத் தொழில் மீன்பிடித்தல். இதனால் ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணி ஈட்டப்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மீனவர்களுக்குக் கடற்கரைத் தொகுதிகளை ஒதுக்கவேண்டுமென்ற கோரிக்கையின் நியாயம் புரிந்து கொள்ளப்படவில்லை. மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மண்டல் குழுவின் பரிந்துரையும் நடைமுறைப்படுத்த்பபடவில்லை.

தமிழக மீனவர்களின் பெரிய இழப்பு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான்தான். 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தீர்க்கமாக ஆலோசிக்காமல் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கச்சத்தீவைத் தாரைவார்த்துவிட்டார்.

கச்சத்தீவு 3.75 சதுர மைல் பரப்பளவு கொண்டது; ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை எல்லையிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ள சின்னஞ்சிறிய பகுதி.

இது மீனவர்களின் சொர்க்கபூமி; மீன்களின் உற்பத்திச் சுரங்கம். இங்கு பல்லாண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அன்னியமாக்கிவிட்டது கச்சத்தீவு ஒப்பந்தம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக குற்றம்சாட்டப்படுவதும் இப்பகுதிதான்.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்நோக்கில் “கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கப்படும்’ என்று ஆளுநர் உரைகளில் கூறப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், சுற்றுலாப் பயணிகள் சென்றுவரவும் அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் 5,6 ஆம் பிரிவுகளை இலங்கை அரசும், கப்பற்படையும் பொருள்படுத்துவதில்லை. 1977-க்குப் பிறகு இத்தீவுக்குச் செல்லத் தடை விதித்து விட்டதால், இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவே நடப்பதில்லை. இக்கோயிலை இலங்கை அரசு இப்போது மூடிவிட்டது.

இலங்கை அரசு எந்த ஒப்பந்தத்தையும் மதித்ததில்லை; நடைமுறைப்படுத்தியதும் இல்லை. தமிழ்நாட்டில் இதுபற்றி திடீரென கோரிக்கை எழும்; அடங்கிவிடும்; மக்களும் மறந்துவிடுவார்கள். இறுதிவரை கோரிக்கைகள் நிறைவேறாமல் அப்படியே இருக்கும்.

இந்திய – இலங்கை உடன்பாட்டின் விதிகள் தெளிவாக இருக்கின்றன. “”இந்திய மீனவரும், இறைவழிபாட்டுப் பயணிகளும் இதுவரை கச்சத்தீவுக்கு வந்துபோய் அனுபவித்ததைப் போலத் தொடர்ந்து வந்துபோய் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள். இப்பயணிகள் இவ்வாறு வந்துபோக, இலங்கை அரசிடமிருந்து எவ்விதப் பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியையோ பெற வேண்டியதில்லை”.

“”இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களின் படகுகள் மற்றும் கப்பல்கள் விஷயத்திலும் பரஸ்பர கடல் உரிமை தொடரும்’.

இவ்வாறு திட்டவட்டமான விதிகள் இருந்தும் இவற்றை அப்பட்டமாக மீறும் இலங்கை அரசிடம் கெஞ்சுவதும், அவர்கள் மிஞ்சுவதும் ஏன்? அத்துமீறி நடப்பது யார்? இலங்கைக் கடற்படையா, இந்திய மீனவர்களா? முடிவு செய்வது யார்?

Posted in Arms, Boats, Bombs, borders, Boundary, Capture, Catch, Cocaine, Contraband, dead, defence, Defense, Drugs, Exports, Extortion, Extremists, fiberglass, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Fishing, Harassment, Illegal, Imprison, India, Industry, International, island, Jail, Jury, Justice, Kachatheevu, Kachathivu, Kachativu, Katcha Theevu, Kodiakkarai, kodiyakkarai, Law, LTTE, Maginda, Magindha, Magintha, Mahinda, Mahindha, Mahintha, Marijuana, maritime, Misa, Narcotics, Nautical, Navy, Ocean, Oceanery, Order, Peace, POTA, Prison, Rajapaksa, Rajapakse, Refugees, release, SAARC, Sea, Sector, Shoot, Shot, Shrimp, Squids, Sri lanka, Srilanka, TADA, Talaimannar, Terrorism, Terrorists, Thalaimannar, Tourism, Tourist, Travel, Trawlers, Trespass, War, Waters, Weapons, World | Leave a Comment »

Karuna’s trial for “war crimes” urged – Sri Lanka unveils biggest war budget as fighting escalates

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007

வட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்கள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.

கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


இலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது

மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.

அடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொத்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.

கடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

போர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா? மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.


லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

கர்ணல் கருணா
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா

சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.

மனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.

இப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.

கருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.

பிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.

Posted in Abductions, Airforce, Budget, Conflict, Crime, crimes, Defense, enquiry, Extremism, Fight, Freedom, Govt, HR, Independence, Inquiry, Karuna, Law, LTTE, Mahinda, majority, Military, minority, murders, Navy, Order, Peace, Rajapakse, Rebels, Sinhala, Sinhalese, Soldiers, Sri lanka, Srilanka, Tamils, Terrorism, TMVP, Torture, troops, Vidudhalai, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, War | Leave a Comment »

Power plant relocated after LTTE threats in Triconmalee

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

திருகோணமலையில் அனல் மின் நிலம் அமைக்க மாற்று இடம் தேர்வு

தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையம்
தேசிய அனல் மின் நிறுவனத்தால் இயக்கப்படும் மின் உற்பத்தி நிலையம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கைசாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி திருகோணமலையில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காகன இரண்டு மாற்று இடங்களை தேர்வு செய்துள்ளதாக, இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ள இந்திய பொதுத் துறை நிறுவனமான, தேசிய அனல் மின் நிறுவனம் கூறியுள்ளது.

திருகோணமலை. சம்பூர் பகுதியில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படவிருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக இந்த இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அனல் மின் நிலையத்தை அமைக்க தற்போது இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்த இடத்தில் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது என்பது மூன்று வாரங்களில் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் தலைவர் சங்கரலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Posted in Army, Coal, defence, Defense, Economy, Electricity, Employment, Industry, Jobs, LTTE, Mega watt, Megawatt, Military, MW, Navy, NTPC, Power, Samboor, Sambur, Sampoor, Sampur, Security, Sri lanka, Srilanka, Thermal, Thirukonamalai, Triconamalee, triconmalee, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Puligal, Vituthalai Pulikal, workers | Leave a Comment »

RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007

நியாயமில்லை, நியாயமேயில்லை…!

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing).  இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.

இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.

அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.

மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.

இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.

Posted in Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing | 1 Comment »

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

Dawood Ibrahim: India CBI vs Pakistan ISI in US of America’s CIA

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு

இஸ்லாமாபாத், ஆக.8-

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.

தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.

இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப

இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.

தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.

இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.

இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.

என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது

மும்பை, ஆக. 7-

1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.

இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து

வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.

கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.

அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–

Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »

Joint management of airspace – Defence and the civil aviation ministry

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வானில் ஓர் எல்லைப் பிரச்னை!

வி. கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முழுப் பொறுப்பு வகிக்கும் பாதுகாப்புத் துறைக்கும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே தற்போது எல்லைப் பிரச்னை எழுந்துள்ளது.

இவை இரண்டும் தனித்தனித் துறைகள்தான் என்றாலும் இரண்டுக்கும் களம் (AIRSPACE) ஒன்றுதான். இமயம் முதல் இந்தியப் பெருங்கடல்வரையும், அரபிக்கடல் முதல் வங்காள விரிகுடாவரையும் பெரும்பாலான வான்பகுதி இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பறக்கும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்புத் துறையின் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. இதுதவிர நாட்டில் பல்வேறு பயிற்சித் தளங்கள் உள்பட சுமார் 60 இடங்களில் தரைத் தளங்கள் விமானப்படையின்கீழ் செயல்படுகின்றன.

இந்த விமானத் தளங்கள் உள்ள பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பல்வேறு பிரச்னைகள் எற்படுகின்றன. உதாரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானில் பெரும் பகுதி, தாம்பரம் விமானப் படைத்தளம் மற்றும் அரக்கோணத்தில் கடற்படையின் விமான தளம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் எல்லைகளுக்கு அப்பால் மீதம் உள்ள வான்பகுதியை நம்பியே சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய வான்பகுதி எல்லைப் பிரச்னை காரணமாக சென்னைக்கு கிழக்கே புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டமே கைவிடப்பட்டது.

நாட்டில் தற்போது 13 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 126 விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மொத்த வான்பகுதியில் 28 லட்சம் சதுர கடல்மைல் (நாட்டிக்கல் மைல்) மட்டுமே விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர விமான நிலையங்கள் இல்லாத இடங்கள் உள்பட 28 விமானப் படைத் தளங்களில் சிவில் விமானங்களுக்கென தனிப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறிய விமான நிலையங்கள், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு இல்லாததால் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டும் தற்போதைய தேவை மற்றும் எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டும் விமானப் போக்குவரத்துக்கான புதிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியது.

இதில், பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல வான்பகுதிகளை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வான் பகுதியில் விமானப் படையின் கட்டுப்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில அம்சங்கள் பாதுகாப்புத் துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் இடையே வெளிப்படையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இதுதவிர, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல், இந்தத் துறையின் செயலர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆகியோர் தொடர்ந்து வான் பகுதி தொடர்பான பிரச்னையில் பாதுகாப்புத் துறையை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் இத்தகைய வெளிப்படையான விமர்சனங்கள் பாதுகாப்புத் துறை தரப்பை ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வரைவு விமானப்போக்குவரத்துக் கொள்கை தொடர்பான ஆட்சேபனைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். விமானப்போக்குவரத்தில் பல்வேறு நிலைகளில் படிப்படியாகத் தனியார்மயத்தை ஊக்குவித்துவரும் விமானப்போக்குவரத்துத் துறையை நம்பி விதிகளை தளர்த்த முடியாது என்பதே அந்தோனியின் வாதம். பாதுகாப்புத் துறையின் எதிர்ப்பை அடுத்து விமானப் போக்குவரத்துக்கான வரைவுக் கொள்கை இறுதி வடிவம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இரு முக்கியத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு துறை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 1999-ல் ஏற்பட்ட கார்கில் சண்டைக்குப் பின்னர் வான்பகுதி மேலாண்மைக்கான ஓர் அதிகார அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டம் முறையாக நிறைவேறாததே தற்போதைய பிரச்னைக்குக் காரணம்.

1995-ல் ரஷிய விமானங்கள் புருலியாவில் ஆயுதங்களைக் கொட்டின, 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், ராணுவத் தலைமையகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த சிறிய ரக பயணி விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, அண்மையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்தாக்குதலைத் தொடங்கி இருப்பது, சில பயங்கரவாத இயக்கங்கள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது ஆகியவை நாட்டின் வான்பாதுகாப்பு தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால்தான் நாட்டின் வான்பகுதி எல்லைப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியும். நாட்டின் பாதுகாப்பா, விமானப் போக்குவரத்து வளர்ச்சியா? என்றால் பாதுகாப்பான விமானப்போக்குவரத்து என்பதே அனைவரின் கருத்தாகும்.

விமானப்படை, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் அடங்கிய வான்பகுதி மேலாண்மைக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை ஏற்படுத்துவதே தற்போதைய பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்பதே பல்வேறு தரப்பினரின் கருத்து.

Posted in AAI, Aeronautics, Air, Aircraft, Airforce, Airport, Airports, airspace, AK Antony, Analysis, Antony, ATC, Attacks, aviation, Backgrounder, Boeing, Cabinet, Civil, commercial, Courier, defence, Defense, Domestic, Eelam, Eezham, Fighter, Flights, Fly, Freight, Govt, HAL, IAF, International, Jets, Kargil, LTTE, Management, Marshal, Marshalls, Meenambakkam, MIG, Military, Navy, Op-Ed, Opinion, passenger, Patel, Pilots, Planes, Policy, Praful Patel, Protection, Share, Strategy, Terrorism, Thrisoolam, Trisoolam, World, Zone | Leave a Comment »

USS Nimitz loaded with hi-tech weapons to dock off Chennai coast – Issues, Details

Posted by Snapjudge மேல் ஜூலை 1, 2007

எண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்
—————————————————————————————————–

“யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’-சில சந்தேகங்கள்

டி.எம்.விஸ்வநாதன்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு? இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.

ஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.

அப்படி “நிமிட்ஸில்’ என்னதான் அபாயம் உள்ளது? இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

செஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.

அதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.

விமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன?

ஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.

சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.

அவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே கூரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.

சரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.

இத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

சரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.

நிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.

கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள்? தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால்? விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

அப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

இத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).

மேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.

எனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை? நாம் ஏன் அனுமதிக்கிறோம்? இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.

மொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.

———————————————————————————————————

யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்
சென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

————————————————————————————————-

அமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்

சென்னை, ஜுலை. 2-

அமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இன்செட் வரும் உல்லாசம்

அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

————————————————-
அணுவிசைக் கப்பல்கள்

என். ராமதுரை

அண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

விமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

பிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.

வடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.

அமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தாக்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.

இந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.

எல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.

சாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.

அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.

இவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.

ஒருவகையில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.

அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.

இந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர்.)

Posted in ADMK, Aircraft, Arms, Atom, Attack, Backgrounders, Ban, Boat, carrier, Coast, Communists, defence, Defense, Details, energy, Fighter, Foreign, Fuel, Govt, Gulf, Harbor, Harbour, International, Iran, Iraq, Issues, Jets, Madras, Navy, Nimitz, Nuclear, Ocean, Pakistan, Party, Politics, Protest, Sea, Ship, Spy, Submarines, Terrorism, US, USA, USS Nimitz, Vessel, warship, Weapons, World | 1 Comment »

Quadripartite dialogue not against China: PM

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

சீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்

புதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.

தில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.

நான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.

பேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.

கடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.

கடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.

இந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.

“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.

Posted in America, Army, Asean, Australia, Beijing, Brazil, Canberra, Cooperation, Coordination, defence, Defense, Disaster, Earthquake, EU, External, Flood, Foreign, G8, Germany, International, Japan, Manmohan, Military, NATO, Navy, Nuclear, Peking, PM, Relations, SA, SAARC, South Africa, Southafrica, Tokyo, Tsunami, US, USA, Washington | Leave a Comment »

How CBI let Quattrocchi slip away – Thamizhan Express

Posted by Snapjudge மேல் ஜூன் 15, 2007

தொடர்ந்து கோட்டை விடும் சி.பி.ஐ..!

“போஃபர்ஸ் ஊழலின் கதாநாயகன்’ என்று கூறப்படும் குவத்ரோச்சி, கடந்த 20 வருடங்களாக போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வருகிறார். “இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவருக்கும், காங்கிரஸ் தலைவியாக இருக்கும் சோனியா குடும்பத்திற்கும் இடையில் உள்ள நல்லுறவே இதற்குக் காரணம்’ என்று எதிர்க்கட்சிகள் தினமும் “திக் திக்’ அறிக்கைகளை வெளியிடுகின்றன.

1987ல் ஸ்வீடன் நாட்டு ரேடியோ, “போஃபர்ஸ் விவகாரத்தில் இந்திய ஏஜெண்ட்டுகளுக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று அறிவித்ததில் இருந்தே குவத்ரோச்சியும், போஃபர்ஸýம் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இருக்கின்றன. 1990ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் தேதி போஃபர்ஸ் ஊழல் வழக்கில் “முதல் தகவல் அறிக்கை தாக்கல்’ செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள 12 செக்ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கையில் குவத்ரோச்சியின் பெயர் இல்லை! பிறகு இந்த ஊழல் விவகாரம் குறித்த டாக்குமென்டுகளை வாங்குவதற்கு சி.பி.ஐ., ஸ்வீடன் நாட்டு நீதிமன்றங்களில் பெரும் போராட்டத்தை நடத்தியது.

கடைசியில் ஜோகிந்தர் சிங் சி.பி.ஐ.யின் டைரக்டராக இருந்தபோது அந்த டாக்குமென்டுகள் எல்லாம் கிடைத்தன. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, ஏழு வருடத்திற்குப் பிறகே (21.1.1997) இந்த டாக்குமென்டுகளை சி.பி.ஐ.யால் வாங்க முடிந்தது.

அப்படிக் கிடைத்த டாக்குமென்டுகளில் 1987ஆம் ஆண்டு, நவம்பர் 4ஆம் தேதி போஃபர்ஸ் கம்பெனியின் தலைவராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போவிடம் ஸ்வீடன் போலீஸ் கைப்பற்றிய டைரி முக்கியமானது.

அதில்தான் முதன்முதலில் குவத்ரோச்சியின் பெயர் ஆதாரபூர்வமாக, அதாவது “க்யூ’ (ண) என்ற எழுத்தின் வடிவத்தில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஏறக்குறைய 49 சாட்சிகளை விசாரித்திருந்த சி.பி.ஐ., “குவத்ரோச்சி ஊழல் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளார்’ என்ற முடிவுக்கு வந்தது.

இதன் அடிப் படையில்தான் குவத்ரோச்சியும், “போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றவாளி’ என்று 1999ல் சேர்க்கப்பட்டார். ஆக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து ஒன்பது வருடங்கள் கழித்தே குவத்ரோச்சி குற்றவாளி என்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அதுவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடைபெற்ற போதுதான் இந்த முடிவுக்கு வந்தது சி.பி.ஐ. ஆனால் எஃப்.ஐ.ஆர். போட்டதில் இருந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் இந்தியாவில்தான் குவத்ரோச்சியும், அவரது மனைவியும் இருந்தார்கள்.

ஸ்விஸ் நீதிமன்றத்தில் டாக்குமென்டுகள் கேட்டு சி.பி.ஐ. வழக்குத் தொடர அந்த நேரத்தில், “என் வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கக் கூடாது’ என்று திடீரென்று அப்பீல் செய்தார் குவத்ரோச்சி.

அதைச் செய்துவிட்டு இரவோடு இரவாக இந்தியாவை விட்டு எஸ்கேப் ஆன குவத்ரோச்சியை இதுவரை பிடிக்க முடியவில்லை. டெல்லி நீதிமன்றம் குவத்ரோச்சியை அரெஸ்ட் செய்ய வாரண்ட் பிறப்பித்துவிட்டது. மலேஷியாவில் ஒரு முறை குவத்ரோச்சி மாட்டிக் கொண்டார்.

ஆனால் இந்தியாவிற்கும், மலேஷியாவிற்கும் “எக்ஸ்டிரடிஷன் ட்ரீட்டி’ இல்லை என்பதை சுட்டிக்காட்டி, குவத்ரோச்சியைத் தர மறுத்தது அந்நாட்டு நீதிமன்றம். இதனால் மலேஷியாவிலும் கோட்டைவிட்டது சி.பி.ஐ. இந்நிலையில் தன் மீது போடப்பட்ட “அரெஸ்ட் வாரண்ட்டை’ எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார் குவத்ரோச்சி.

ஆனால், “நீங்கள் இங்கு வந்து ஸ்பெஷல் ஜட்ஜ் முன்பு ஆஜர் ஆகுங்கள்’ என்று ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணி உத்திரவிட்டது நீதிமன்றம். ஆனால் நம் நாட்டின் உச்சநீதிமன்றத்தையும் மதித்து இங்கு வரவில்லை இந்த போ ஃபர்ஸ் குற்றவாளி.

இதற்கிடையில் தற்போது அர்ஜெண்டினாவில் அரெஸ்ட் செய்யப்பட்ட குவத்ரோச்சியையும் இந்தியா கொண்டு வர முடியாமல் கோட்டை விட்டிருக்கும் சி.பி.ஐ., ஒரு கமிஷன் ப்ரோக்கர் என்ற ஸ்தானத்தில் இருக்கும் குவத்ரோச்சியை கடந்த 20 வருடங்களாகப் பிடித்து இந்திய நாட்டின் சட்டத்தின் முன்பு நிறுத்த முடியாமல் தவிக்கிறது.

இதைப் பார்க்கும்போது அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாமல் இது நடக்குமா என்ற கேள்வி எழுகிறது. “நாட்டின் ப்ரீமியர் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸி’ என்று சொல்லப் படும் சி.பி.ஐ. ஒரேயொரு குற்றவாளியைக் கைது செய்ய 20 வருடங்கள் அலைகிறது என்றால் “நம்மூர் ஜனநாயகத்திற்கு’ ஒரு சபாஷ் போட வேண்டியதுதான்!

வர்மா

—————————————————————————————

நிர்பந்தத்தினால் உருவான “பாரத’ விசுவாசம்!

எஸ். குருமூர்த்தி

“”இப்போது என்னுடைய விசுவாசம் பெரிய குடும்பத்துக்குச் சொந்தம்; ஆம், பாரதம் எனது நாடு; எனது மக்கள், என்னைத் தங்களில் ஒருத்தியாக பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்கள்”.

ஹாலந்து நாட்டின் டில்பர்க் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி உரை நிகழ்த்தியபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனம் நெகிழ்ந்து கூறியவை இவை.

“”நேரு-இந்திரா” குடும்பம் என்றாலே இந்திய மக்களுக்கு தனி பாசம். அதிலும் “”வெளிநாட்டவர்” என்றால் தனி மரியாதை வேறு. எனவேதான், இத்தாலியில் பிறந்த அந்தோனியா மைனோ என்ற இளம் பெண்ணை, “”சோனியா” என்ற நாமகரணத்துக்குப் பிறகு இந் நாட்டின் “”முதல் குடும்பத்து” மருமகளாக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

வேறு எந்த நாட்டைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் -அது சோனியா பிறந்த இத்தாலியாகவே இருந்தாலும் -நாட்டை ஆளும் குடும்பத்தில் “”வெளிநாட்டவர்” எப்படி நுழையலாம் என்று கேள்வி கேட்டு ஆட்சேபித்திருப்பார்கள்.

ஆம், சோனியா சொன்னது உண்மைதான்; சோனியா யார் என்ற பூர்வோத்திரமே தெரியாமல் -அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்ற எண்ணமே இல்லாமல் -அவரை மனதார வரவேற்றார்கள் நம் மக்கள். அப்படி தாராள மனம் படைத்த இந்தியர்களுக்கு அவர் காட்டிய விசுவாசம் எப்படிப்பட்டது?

1968-லிருந்தே இந்தப் புராணம் தொடங்குகிறது. இன்றைக்கு இச் செய்தித்தாளைப் படிக்கும் உங்களில் பெரும்பாலானவர்கள் அப்போது தாயின் மடியில் பச்சைக் குழந்தைகளாக இருந்திருப்பீர்கள்!

இந்திய மக்களின் அன்புக்கும், விசுவாசத்துக்கும் ஏகபோக குத்தகைதாரர்களான “”முதல் குடும்பத்தில்” மூத்த மருமகளாக அடியெடுத்து வைத்திருந்தாலும், இந்த நாட்டின் “”குடிமகளாக” தன்னைப் பதிவு செய்துகொள்ளக்கூடாது என்பதில் 16 ஆண்டுகள் உறுதியாக இருந்தவர்தான் சோனியா.

ராஜீவ் காந்தியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் எத்தனை உறுதியாக இருந்தாரோ, அத்தனை உறுதியாக இருந்தார் இந்தியாவின் குடிமகளாக ஆகிவிடக்கூடாது என்பதிலும்! இத்தாலியக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமை பெறுவதைத் தாழ்வாக நினைத்ததால்தானே இந்த உத்தி!

“”நேரு-இந்திரா” குடும்பத்தின் மருமகளாகிவிட்ட மகிழ்ச்சியிலோ, இந்தியர்கள் காட்டிய மிதமிஞ்சிய பாசத்தில் திக்குமுக்காடியோ, இந்தியக் குடிமகளாகப் பதிவு செய்துகொள்ளும் “”சாதாரணமான” விஷயத்தை அவர் மறந்துவிடவில்லை!

திருமணம் ஆன நாள் முதலே அவர் தன்னை இந்தியராகப் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, 16 ஆண்டுகள் அவர் விரும்பவில்லை.

இது ஏதோ ஒருமுறை முடிவு எடுத்து மறந்துவிட்ட விஷயமல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்பத்திரும்ப இதே முடிவை – இந்தியக் குடியுரிமை பெறக்கூடாது என்கிற முடிவை – எடுத்திருக்கிறார் சோனியா!

இந்தியர் அல்லாத ஒருவர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணப்பித்து, தன்னை வெளிநாட்டவர் என்பதைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே தொடர்ந்து வசிப்பது, பிரதமரின் குடும்பத்தில் மருமகளாகவே இருப்பது என்பதையெல்லாம் தீர்மானித்த சோனியா காந்தி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி கோரி விண்ணப்பித்து வந்தார்.

முதலில் 1968-லும் பிறகு 1973-லும், பிறகு 1978-லும் கடைசியாக 1983-லும் இத்தாலியக் குடியுரிமையுடன் நம் நாட்டில் “”விருந்தாளி”யாக இருப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்று வந்தார் சோனியா. சுலபமாக பாரத நாட்டுக் குடியுரிமைப் பெற்றிருக்கலாமே. எனக்கு அது வேண்டாம் என்கிற எண்ணம்தானே அவரை விருந்தாளியாக்கியது! ஆனால் 1983-ல் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, 1984 ஏப்ரல் 30-ல் அதைப் பெற்றார்.

இந்தியர்களின் பெருந்தன்மையை ஏற்று இந்தியக் குடிமகளாக வேண்டும் என்ற முடிவை, 16 ஆண்டு காலத்துக்குப் பிறகு சோனியா காந்தி ஏன் திடீரென எடுத்தார்? இந்திய அரசியலைப் பின்பற்றுகிறவர்களுக்கு இது எளிதில் புரிந்திருக்கும்.

1980-ல் நடந்த விமான விபத்தில் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜீவ் காந்தி நியமனம் பெற்றார். 1985 பொதுத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் பிரதமருக்கு அடுத்த இடம் ராஜீவ் காந்திக்குத்தான் என்ற நிலைமை உருவானது.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவரின் கணவர் இந்திய அரசில் அமைச்சராவதா என்ற சர்ச்சை மூண்டுவிட்டால் என்னாவது என்ற கவலையில், இந்தியக் குடியுரிமையை ஏற்றார் சோனியா காந்தி.

இந்தியாவின் மீது சோனியாவுக்கு இருந்த அன்போ, வந்தாரை வரவேற்கும் இந்திய நாட்டவரின் பரந்தமனத்தின் மீது ஏற்பட்ட பாசமோ அவரை இந்த முடிவை எடுக்கவைக்கவில்லை. “”ஆட்சி அதிகார” கட்டிலில் தனது கணவர் ஏறப்போகிறார், அவர் மூலம் தனக்கும் அந்த “”அதிகாரம்” கிட்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தியக் குடியுரிமையைப் பெற அவர் முன்வந்தார்.

இருந்தாலும் ஆம்ஸ்டர்டாம் நகர மக்களிடையே பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார், அதிகாரத்தின் மீது தனக்கு எப்போதும் ஆர்வம் இல்லை என்று!

இந்தியராகக் குடியுரிமை பெறுவதையே விரும்பாமல் 16 ஆண்டுகள் தள்ளிப்போட்டேன் என்று அவர் அந்தக் கூட்டத்தில் பேசவில்லை.

இந்தியக் குடிமகளாக மனுச் செய்தபோதுகூட எனது பெயரை “”அந்தோனியா மைனோ காந்தி” என்றும் “”சோனியா” என்பது புனைபெயர் என்றும் எழுதினேன்; இன்றுவரை அந்தோனியா மைனோ என்கிற பெயரைக்கூட நான் மாற்றிக் கொள்ளவில்லை என்று அவர் இனி எங்கும் சொல்லப் போவதும் இல்லை!

இத்தாலிய தேசிய சட்டப்படி ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் (இத்தாலிய தாய்க்குப் பிறந்ததால்) இத்தாலிய குடிமக்கள்தான் என்பதையும், அது அழிக்க முடியாமல் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் எப்போதும் எவரிடத்திலும் சொல்லமாட்டார்.

இந்த உண்மைகளைப் பேசுபவராக இருந்தால், டில்பர்க் பல்கலைக்கழகத்தில் அப்படி தனது விசுவாசம் குறித்து அவர் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்ன பேசினாரோ அதுதான் “”பதிவு செய்யப்பட்ட உண்மை”; ஆனால் அவர் எதைப் பேசாமல் மறைத்தாரோ அதுதான் “”அப்பட்டமான உண்மை”!

இதிலிருந்து அறியப்படுவது, சோனியா காந்திக்கு இந்தியா மீது விசுவாசம் -16 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகே வந்தது! அதுவும் கட்டாயத்தினால் – விருப்பப்பட்டு அல்ல!

Posted in abuse, Affiliations, Airforce, Antonia, Antonia Maino, Argentina, Arms, Army, Banks, BJP, Bofors, Bombs, Bribery, Bribes, CBI, Central Bureau of Investigation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, Deals, defence, Defense, Express, extradition, Fairfax, Gurumoorthi, Gurumoorthy, Gurumurthi, Gurumurthy, Holland, Indira, Indra, Italy, Judge, Justice, kickbacks, Law, Maino, Maintenance, Meino, Military, Money, Nationality, Navy, Nehru, nexus, Order, Politics, Power, prosecutor, Quatrocchi, Quatrochi, Quattrocchi, Quattrochi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rao, Rich, SC, Sonia, Sweden, Tanks, Weapons | 1 Comment »

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »