Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Naval’ Category

Mooligai Corner: Herbs & Naturotherapy – How to avoid Diarrhoea & Dysentery with Naval

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2008

மூலிகை மூலை: ‘நாவல்’ இருக்க பயமேன்?

நாவல் மர இலைகள், பட்டைகள் எல்லாம் துவர்ப்புத்தன்மை கொண்டது. உண்ணக் கூடிய கருஞ்சிவப்புக் கனிகளை உடையது. இதுதானாகவே வளரும் பெரு மரவகையைச் சேர்ந்ததாகும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவக் குணம் உடையது. தமிழகம் எங்கும் பரவலாக எல்லா மண்

வகையிலும் தானாகவே வளர்கின்றது. இதன் பட்டை, சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும், பழம் சிறுநீர் பெருக்கும், பசியைத் தூண்டும் குணம் உடையது.

வேறுபெயர்கள் :
தூறவம், நம்புலி, நேராடம், ராசசம்பு, மகாபலா, சம்பூகம்.

ட்
Syzygium Jambolanum DC

இனி மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம்.

நாவல் இலைக் கொழுந்துச் சாறு 1 தேக்கரண்டி, ஏலரிசி 2, இலவங்கப்பட்டைத்தூள் மிளகு அளவு எடுத்துக் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர செரியாமை, பேதி, சூட்டு பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பிஞ்சு, மாதுளம்பழத்தின் பிஞ்சு இரண்டையும் ஒரே அளவாக எடுத்து அரைத்து சாறுபிழிந்து ஒரு சங்களவு எடுத்து 1 டம்ளர் பசுவின் மோரில் கலந்து 2 வேளை குடித்துவர சீதபேதி நிற்பதோடு நீரிழிவு நோய் இருந்தாலும் குணமடையும்.

நாவல் இலை, கொழுந்து, மாங்கொழுந்து ஆகியவற்றைச் சமஅளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிரில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர சீதபேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி உடனே நிற்கும்.

நாவல் மரத்தின் பட்டையோடு, மகாவில்வ மரத்தின் பட்டை இவற்றைச் சமஅளவாக எடுத்து நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி பொடியைப் பசுவின் பால் 1 டம்ளரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

நாவல் கொட்டையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 2 கிராம் எடுத்து நீருடன் 2 வேளை குடித்து வர மதுமேகம், அதி மூத்திரம் குணமாகும்.

வெண்மர நாவல் மரப் பட்டையின் உள்பாகம் எடுத்து கழுநீர் விட்டு இடித்த சாறு 100 மில்லியளவு எடுத்து, தென்னை மரப்பூவின் சாறு 50 மில்லி எடுத்து, உரசிய சந்தனம் 5 கிராம் எடுத்துக் கலந்து காலையில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். அத்துடன் ஆடாதொடைச் சாறை 50 மில்லியளவு சிறிது தேன் கலந்து குடிப்பது இன்னமும் நலமாக இருக்கும். இதனால் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் தீட்டு அதிகமாக இருக்கும். நாட்களும் அதிகமாகும். வயிற்றுவலி, இடுப்பு வலி, எரிச்சல், இரத்தப்போக்கு, உடல் பலவீனம், நெஞ்சு படபடப்பு, இருதயம் பலவீனம், பசியின்மை, ருசியின்மை, களைப்பு போன்றவை அனைத்தும் தீரூம்.

நாவல் வித்தைக் கைப்பிடியளவு எடுத்து பாலில் அரைத்து நெல்லிக்காயளவு 2 வேளை சாப்பிட்டு வர கிராணி, நீரிழிவு, மூலச்சூடு நீங்கும்.

நாவல் பட்டையைப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் எருமைத் தயிருடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கிராணி குணமாகும்.

Posted in Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Diarrhoea, doowet, Dysentery, faux pistachier, Health, Herbs, Indian blackberry, jambol, Jambolan, Jambolan Plum, Jamun, java plum, Medicines, Mooligai, Myrtaceae, Naaval, Natural, Naturotherapy, Naval, Noval, Syzygium cumini | Leave a Comment »

Katcha Theevu – Issue & History: Indian Naval Strategy

Posted by Snapjudge மேல் மே 10, 2007

கச்சத்தீவைக் கை கழுவியதால்…?

தி. இராசகோபாலன்

காஷ்மீர், பாரதத் தாயின் முகமென்றால், கச்சத்தீவு கால்விரல் மெட்டி எனலாம்.

கச்சத்தீவின் நீளம் ஒரு கல்; அகலம் அரை கல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ., ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ. கச்சத்தீவில் “டார்குயின்’ எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே பச்சைத் தீவு நாளடைவில் கச்சத்தீவு ஆயிற்று. 1882ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சத்தீவும் ஒன்று.

கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், குத்தகை நிலமாக கச்சத்தீவைப் பெற்றனர். இலங்கையின் அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரிஸ், “விக்டோரியா மகாராணியின் அரசறிக்கைப்படி கச்சத்தீவு இலங்கையைச் சேர்ந்ததன்று; அது ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தம்” என உறுதிப்படுத்தினார். என்றாலும், இலங்கை அரசு 1955, 56-ல் தன்னுடைய கடற்படைப் பயிற்சிக்குத் தகுந்த இடமாகக் கச்சத்தீவைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணியையும் அங்கு தொடங்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் அத்துமீறலை நாடாளுமன்றத்தில் எழுப்பியபோது, இந்த விவகாரம் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை… இந்தச் சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராடும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவின் தன்மானம் கலக்கவில்லை; அதுவும் நம் பக்கத்து நாடான இலங்கையுடன்” எனப் பிரதமராக இருந்த நேரு பதிலுரைத்தார். காஷ்மீர் என்ற முகத்தில் ஒரு சிறு கவலை ரேகை படர்ந்தாலும், அலறித் துடிக்கின்ற மைய அரசு, கச்சத்தீவு என்ற கால்விரல் மெட்டியை இலங்கை அரசு கழற்றியபொழுது கண்டுகொள்ளவே இல்லை. இது முதற் கோணல்.

பின்னர், ஜே.வி.பி. என்ற சிங்கள தீவிரவாத இயக்கம், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந்து இலங்கையில் பரப்பி வந்தது. அதைக் குறைப்பதற்காக கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்கக் கொள்கையளவில் இந்திய அரசு முடிவு செய்தது.

பின்னர் 1974ஆம் ஆண்டு இந்தியா அணுகுண்டை வெடித்தது. அதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன.

ஐ.நா. அவையில் இருந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட தாற்காலிகக் குழு மூலமாக, இந்தியாவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்ற பாகிஸ்தான் முயன்றது. அப்போது அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்த இலங்கையின் ஆதரவோடு, இந்தியா அந்த முயற்சியை முறியடித்தது. இச் சூழ்நிலையில் இலங்கை அரசு கேட்டவுடன், நன்றிக்கடனாக இந்தியா கச்சத்தீவைக் கை கழுவ இசைந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க முன் வந்த இந்திய அரசு, எட்டு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் ஐந்தாவது விதி: “”இந்திய மீனவர்களும் வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இதுநாள் வரை வந்துபோனதுபோல் வந்து போவதற்கும், கச்சத்தீவைப் பயன்படுத்தவும் முழு உரிமை உடையவர்கள். இதற்காகச் சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ இவர்கள் பெற வேண்டியதில்லை.”

ஆனால், இந்த ஒப்பந்தம் நிறைவேறிய நாளிலிருந்து ராமேசுவரம் மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படை வீரர்களுக்கும் தகராறு நடக்காத நாளே இல்லை. கச்சத்தீவை வழங்கியதால், ராமேசுவரத்து மீனவர்கள் வடிக்கும் கண்ணீரும் கடலைப்போல.

மைய அரசு, மேற்கு வங்கத்திற்குச் சொந்தமான “டின்பிகா’ எனும் தீவை, வங்கதேசத்திற்குக் குத்தகைக்குத் தரும்போது எடுத்துக்கொண்ட முன்னெச்சரிக்கையையும் அக்கறையையும் ஏன் கச்சத்தீவில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான், நமது வருத்தம். டின்பிகாவை வங்க தேசத்திற்குக் குத்தகைக்குத் தந்தாலும், அதன் இறையாண்மை அல்லது ஆட்சியுரிமை இந்தியாவிடம்தான் இருக்கும். மேலும், எந்தக் காரணத்தைக் கொண்டும், அத்தீவை ராணுவத் தளமாகப் பயன்படுத்தக் கூடாது. “டின்பிகா’ ஒப்பந்தத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையைக் கச்சத்தீவில் கையாளாதது ஏன்?

கச்சத்தீவினால் ஏற்படக்கூடிய நன்மைகளைச் சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்த வரலாற்றுப் பிழை தெரியும். கச்சத்தீவின் நடுவிலுள்ள கல்லுமலை அருகேயுள்ள ஆழ்கிணற்றின் குடிநீரால், ராமேசுவரத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கலாம். சித்தமருத்துவத்திற்குத் தேவையான “உமிரி’ போன்ற மூலிகைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. கச்சத்தீவுக் கடலில் கிடைக்கும் இறால் மீன்கள் உலகத்தரம் வாய்ந்தவை.

கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நூறாண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் வளம் இருப்பதாக சோவியத் கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சத்தீவு – குமரிமுனைக்கு இடைப்பட்ட கடலுக்கடியில் யுரேனியம், பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த கனிமக்கூறுகள் கிடைப்பதாக நிலத்தடி ஆய்வாளர்கள் அறிக்கை தந்துள்ளனர். தாற்காலிகமாக இவற்றையெல்லாம் இழந்து நிற்கும் நாம், நிரந்தரமாகவே இழக்க வேண்டுமா? நீர்மூழ்கிக் கப்பல்களையும் போர்ப்படகுகளையும் செப்பனிடும் தளம் அமைப்பதற்கும், நீர்மூழ்கிக் கப்பல் படையினருக்குப் பயிற்சிக்களம் அமைப்பதற்கும், தகுதி வாய்ந்த இடமாகக் கச்சத்தீவு விளங்குகின்றது.

அணுப்படைத்தளம் அமைப்பதற்கேற்ற சூழலைக் கொண்டதாகவும், போர் விமானங்கள் தாற்காலிகமாக இறங்குவதற்குரிய திட்டாகவும் கச்சத்தீவு இருக்கிறது. ஏவுகணைத் தளமாகவும் இத்தீவைப் பயன்படுத்தலாம்.

கடலின் எச்சரிப்புக் கருவிகளாகப் பயன்படும் மிதவைகளுக்கு இங்கொரு மையம் அமைக்கலாம். ராணுவத்திற்குத் தேவையான தகவல்-தொடர்பு மையங்களையும், “ராடார்’ போன்றவற்றையும் நிர்மாணிக்கலாம். பாக் சந்தி, மன்னார் வளைகுடா ஆகியவற்றில் கப்பற்படை அரண் அமையும்போது கச்சத்தீவும் அதன் மையங்களில் ஒன்றாக அமையலாம்.

பிலிப்பின்ஸ் நாட்டின் எல்லையிலுள்ள “பால்மஸ் மியான்ஜஸ்’ எனும் தீவு, நெதர்லாந்து மக்களுக்குச் சொந்தமானது. ஆனால், நெதர்லாந்து மக்கள் நீண்டகாலம் புழங்காமல் இருந்த காரணத்தால், அந்தத் தீவை ஸ்பெயின் கைப்பற்றியது. பின்னர், அதனைப் பிரெஞ்சுக்காரருக்குத் தாரை வார்த்தது. ஆனால், நெதர்லாந்து மக்கள் உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, இழந்த உரிமையை மீண்டும் பெற்றனர். அதுபோல, கச்சத்தீவில் உரிமையை ஏன் இந்தியா மீண்டும் பெறக் கூடாது?

ராமேசுவரத்தைச் சுற்றி வாழ்கின்ற மீனவர்களுக்கு அது மண் மட்டுமன்று; கண்ணும்கூட. கச்சத்தீவை நாம் கழற்றிவிட்டது முதற்கோணல்; முற்றிலும் கோணல் ஆகாமல் காக்க வேண்டியது, மானுடம் பேசுகின்றவர்களுடைய மகத்தான கடமை.

(கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர்).

————————————————————————————————————
கடலுக்குள் செயற்கைப் பவளப் பாறை

பா. ஜெகதீசன்

சென்னை, ஆக. 8: தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக “செயற்கைப் பவளப் பாறைகள்’ உருவாக்கப்பட்டு, கடலுக்கு அடியில் நிறுவப்படுகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள பழவேற்காடு கடல் பகுதியில் மீனவர்களின் பங்கேற்புடன் முதல்முறையாக இந்த செயற்கைப் பவளப் பாறைகளை நிறுவும் பணி அடுத்த சில நாள்களில் தொடங்குகிறது.

பருவமழை தவறிப் பெய்வது, 2004-ல் சுனாமி தாக்கியது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், தமிழகக் கடல் பகுதிகளில் மீன் வளம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மிகச் சிறிய மீன்களைக் கூட பிடித்து விடும் திறன் படைத்த வலைகளை மீனவர்களில் ஒரு தரப்பினர் பயன்படுத்துகின்றனர். வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் உள்ள சிறிய மீன்கள், மீன் குஞ்சுகள், சிறிய இறால்கள் போன்றவை அத்தகைய வலைகளில் சிக்கி விடுகின்றன. இதனால் படிப்படியாக மீன் வளம் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சுரண்டப்பட்டு, அடியோடு குன்றி விடுகிறது. இந்த நிலையை மாற்ற கடலுக்கு அடியில் செயற்கைப் பவளப் பாறைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.

வழி காட்டிய முல்லம்: பவளப் பாறைகள் அதிகம் இல்லாத பகுதிகளில் பழங்காலத்தில் மீன்களைத் தாற்காலிகமாகக் கவர்ந்து இழுக்க “முல்லம்’ என்கிற அமைப்பை மீனவர்கள் பயன்படுத்தினர்.

பனை ஓலையால் சுற்றப்பட்ட பனை வெல்லம், புன்னை மரம், வாகை மரத் துண்டுகள், தென்னங்கீற்றுகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த “முல்லம்’ அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு, பழைய முல்லம் அமைப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதற்குப் பிறகு, புதிய முல்லம் அமைப்புகளைத் தயாரித்து பயன்படுத்த வேண்டும்.

பழங்கால முல்லம் அமைப்பை முன் மாதிரியாகக் கொண்டு, தற்போது செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட்டால் ஆன இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மூன்று வெவ்வேறு வகையான தோற்றங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன.

தலா ஒரு டன் எடை: மூன்று அல்லது நான்கு பெரிய வளையங்கள் ஒன்றோடொன்று இணைந்ததைப் போன்ற வடிவத்திலும், முக்கோண வடிவிலான கூண்டில் 6 பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட தோற்றத்திலும், ஏராளமான துளைகள் போடப்பட்ட பெரிய செவ்வகக் கூண்டு வடிவமைப்பிலுமாக 3 வகைகளில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் உருவாக்கப்படுகின்றன.

இப்படி உருவாக்கப்படும் செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் தலா ஒரு டன் எடை கொண்டவையாக இருக்கும். அந்த அளவுக்கு எடை இருந்தால் தான் கடல் நீரோட்டச் சக்தியைத் தாங்கும் திறன் இருக்கும். இந்த அமைப்புகள் சுற்றுச் சூழலைப் பாதிக்காதவையாகவும் இருக்கும்.

இவற்றைக் கடற்கரையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஆங்காங்கே போட்டு விடுவார்கள். முதலில் கடல் வாழ் நுண்ணுயிரிகளும், பாசிகளும் இந்த அமைப்புகளின் மீது படர்ந்து வளரும்.

இந்தப் பாசியை உண்ண இந்த அமைப்புகளை மீன்கள் நாடி வரும். இந்த மீன்கள் இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகளில் கூட்டம், கூட்டமாகத் தங்கி, இளைப்பாறி, முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்யும்.

மீன்களின் உறைவிடங்கள்: சிறிதுகாலத்தில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், மீன்களின் உறைவிடங்களாகவும் மாறி விடும்.

இவை அமைந்துள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகரிக்கும். “முல்லம்’ போன்று தாற்காலிக அமைப்பாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் நீடித்து உழைக்கும்.

இந்த செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் இடம் பெற்றுள்ள கடல் பகுதிகளில் மற்ற இடங்களில் மீன் பிடிப்பதைப் போல, வலைகளை வீசக் கூடாது. மாறாக, தூண்டில் முறையைப் பயன்படுத்தி தான் மீன்களைப் பிடிக்க வேண்டும்.

தொண்டு நிறுவனத்தின் முயற்சி: சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு கடல் பகுதியில் இத்தகைய செயற்கைப் பவளப் பாறை அமைப்புகள் அடுத்த சில நாள்களில் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் உள்ள “பிளான்ட்’ தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மீனவர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு உதவும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பெரிய படகுகளின் மூலம் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குக் எடுத்துச் சென்று நிறுவப்படும். எந்தெந்தப் பகுதிகளில் இவற்றைக் கடலில் நிறுவ வேண்டும் என்பது தொடர்பாக மீனவர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டவர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் நாளில் பழவேற்காடு பகுதியில் 30 இடங்களில் இந்த செயற்கைப் பவளப் பாறைகள் கடலுக்குள் நிறுவப்படும். பிறகு, படிப்படியாக மேலும் 70 அல்லது 80 செயற்கைப் பவளப் பாறைகள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் கடலுக்குள் நிறுவப்படும். இதற்கு கிடைக்கும் பலனைப் பொருத்து, பிற மாவட்டங்களின் கடல் பகுதிகளிலும் இத்தகைய அமைப்புகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு plant@plantindia.org என்கிற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

Posted in Army, Artificial, Batticaloa, Border, Boundary, Ceylon, defence, Defense, DK, DMK, Eelam, Eezham, Environment, ethnic, Extremism, Extremists, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishery, Gandhi, global, History, Indira, Indra, Industry, Jade, Jaffna, Jayalalitha, JVP, KACCHA THEEVU, Katcha Theevu, Liberation Tamil Tigers of Eelam, maritime, MDMK, Nature, Naval, Navy, Nehru, Ocean, Palk Straits, Plant, plantindia, Premadasa, Rain, Ramanad, Ramanadhapuram, Ramanathapuram, Rameswaram, Ramnad, Ramnadhapuram, Refugees, Sea, Sirimavo, Sri lanka, Srilanka, Strategy, Terrorism, Terrorists, TN, Tsunami, UN, VaiGo, VaiKo, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Violence, Vituthalai Puli, Vituthalai Pulikal, Waters | 8 Comments »

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


Posted in abuse, ADMK, ammunition, Arms, Attack, Contraband, dead, DMK, Eelam, Eezham, Fish, fishermen, Freight, Government, Jordan, LTTE, Military, Naval, Navy, Pirate, Robbery, Sea, Ship, Sri lanka, Theft, TN, Transport, Transportation, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 4 Comments »

Usage of Technology for Surveillance in Indian Sea borders – Sri Lanka, LTTE, Tamil Nadu & Eezham

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

தொழில்நுட்பம் உயிர் காக்கும்

சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ரோந்து நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ள தமிழக முதல்வர், இந்திய அரசையும் இதற்கு இணங்கச் செய்து கூட்டு ரோந்துப் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவத்தினர் இந்தியக் கடல் எல்லையோரம் தங்களது ரோந்து மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆயுதம், மருந்துப் பொருள்கள் தமிழக கடற்பகுதியிலிருந்து செல்கின்றன என்பதுதான். அண்மைக் கால சம்பவங்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைச் சுடும் சம்பவங்களும், அதில் உயிர்ப்பலி அதிகரித்திருப்பதும் அண்மைக் காலமாகத்தான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட மற்றும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களில், இலங்கை ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து சுட்டது என்பதான குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக மீனவர்கள் இரண்டு காரணங்களுக்காக இலங்கைக் கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதாகக் கூறப்படுகிறது. முதலாவதாக, மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லையைக் கடந்துவிடுகிறார்கள். ஒரு சில மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுப்பதற்காக எல்லை தாண்டுகிறார்கள் என்பது இரண்டாவதாக சொல்லப்படும் காரணம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கூறியதாவது: “இது பற்றி இலங்கைக் கடற்படை அதிகாரிகள் எங்களுக்குச் சொல்லும்போது, “”மீன் பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடக்கும் மீனவர்கள் எங்களைக் கண்டதும் படகை வேகமாகச் செலுத்தாமல், இருந்த இடத்தில் இருந்தால் நாங்கள் சுடுவதில்லை. படகில் பொருள்கள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்தபின் எச்சரித்து அனுப்பி விடுகிறோம். அந்தப் படகில் இருக்கும் மீன்கள் மற்றும் பிற தடயங்களை வைத்தே, மீன் பிடித்துள்ளார்களா? கடத்தல் பொருள் கைமாறிவிட்டதா என கண்டறிய முடியும். சந்தேகம் இருந்தால் மட்டுமே கைது செய்கிறோம்” என்பதுதான். கைது செய்யப்பட்டவர் அப்பாவிகள் என்றால், இந்தியத் தூதரகம் தலையிட்டு அவர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கிறது. பெரும்பாலும், அப்பாவி மீனவர்கள்கூட, இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயலும்போதுதான் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது”.

கூட்டு ரோந்து நடத்தப்படுமானால் இந்த அதிகாரியின் கூற்று உண்மையா, வெறும் சமாளிப்பா என்பதை நேரடியாகக் காணலாம். இந்திய ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை ராணுவம் முயலாது.

சாதாரண, அப்பாவி மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைக் கடந்து செல்லாமல் இருக்கச் செய்தாலே, 99 சதவீதம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். கடல் எல்லையைத் தாண்டும்போது நுண்அலைவரிசை தொடர்பு துண்டிக்கப்பட்டு “பீப்’ ஒலி எழுப்பும் கருவிகளை மீனவர்களுக்கு வழங்கலாம். இதன் விலையும் மிகக் குறைவே.

இதைவிட மேலானது ஹாம் ரேடியோ. கரையில் உள்ள மீனவர் அமைப்பு அல்லது மீனளத் துறை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும், தொடர்பு எல்லைக்கு வெளியேபோய், கடல் எல்லையை மீறும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் செய்யவும் முடியும். கடலில் நடக்கும் இடர்ப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளைக் கரையில் உள்ள அலுவலகத்திற்குத் தெரிவிக்க உதவியாக அமையும். இதற்கான கருவிகளை தமிழக அரசு மீனவர்களுக்கு இலவசமாக வழங்கவும் அல்லது கடலுக்குச் செல்லும்முன்பாக கரையில் உள்ள அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, கருவியைப் பெற்றுச் செல்லும்படியும் கரை திரும்பியதும் திருப்பிக் கொடுத்துவிடச் செய்யவும் வகை செய்யலாம்.

Posted in Arms, borders, Defense, Dispatch, Dispute, Eelam, Eezham, Fish, Fisheries, Fisherman, fishermen, Fishers, Fishery, Fishing, HAM, LTTE, Military, Narcotics, Naval, Navy, Police, Pulikal, Radio, Ramesvaram, Rameswaram, Sea, Sea tigers, Sri lanka, Srilanka, Surveillance, TN, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 1 Comment »