Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Narasimha Rao’ Category

Former Prime Minister Chandrasekhar – Biosketch, Anjali

Posted by Snapjudge மேல் ஜூலை 8, 2007

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவு

புதுதில்லி, ஜூலை 9: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் (80) ஞாயிற்றுக்கிழமை காலை, தில்லியில் காலமானார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர், 3 மாதங்களுக்கு முன் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மறைந்த சந்திரசேகருக்கு 2 மகன்கள் உள்ளனர். சந்திரசேகரின் தில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

1927-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவர், 1950-ல் ஆச்சார்யா நரேந்திர தேவால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக பிரஜா சோசலிஸ்ட் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்து கட்சியில் “இளம் துருக்கியராக’ இருந்தார். பின்னர், நெருக்கடி நிலையின்போது கைது செய்யப்பட்டார்.

ஜனதா கட்சி நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர். பின்னர், அக் கட்சியின் தலைவரானார். 1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கினார். 1990-ல் பிரதமரானார். சுமார் 6 மாதம் காலம் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்தவர்:

அவர் இதுவரை 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எந்தவொரு மத்திய அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக பணியாற்றாமலே பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சந்திரசேகரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தில்லியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஜெயில் சிங், சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரின் நினைவிடங்களுக்கு அருகில், சந்திரசேகரின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

7 நாள் அரசு துக்கம்:

7 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். தில்லியில் திங்கள்கிழமை மதியம் 1 மணி முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

——————————————————————————————————————-
“கிளார்க் பணிக்கு’ முயற்சித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

பாலியா, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் வயது குறைவால் கிளார்க் பணி வாய்ப்பை இழந்தார் என அவரது குடும்பத்தார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சந்திரசேகர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவரின் மாமாவின் நண்பர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்ஷியாக பணியாற்றினார். அவர் மூலம் நீதிமன்றத்தில் கிளார்க் பணியில் சேர சந்திரசேகர் முயற்சித்தார்.

கிளார்க் பணியில் சேர குறைந்தபட்சம் 18-வயது நிரம்பியிருக்க வேண்டும் என விதிமுறை இருந்தது.

ஆனால், சந்திரசேகருக்கு பிற தகுதிகள் அனைத்தும் இருந்தும் அப்போது 18-வயது நிரம்பாததால், கிளார்க் பணி கிடைக்கும் வாய்ப்பை இழந்தார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அரசியலைப் போல் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்திரசேகர், அவரது கிராமத்தில் ராமலீலா பண்டிகை கொண்டாட்டத்தின் போது குரங்காகவும், கரடியாகவும் வேடம் தாங்கி நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

——————————————————————————————————————-

சந்திரசேகர் ~ எனது பேட்டியிலிருந்து…

சென்னை, ஜூலை 9: மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கடந்த 30 ஆண்டுகளில் அளித்த பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்த கருத்துகளில் இருந்து சில பகுதிகள்:

பிரதமர் பதவி:

4 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றியமைத்துவிட்டதாக நான் கூறிக்கொள்ள முடியாது. ஆனால் அந்த 4 மாதங்களில், நாட்டில் எழுந்த சூடான பிரச்னைகளைத் தணிக்க முயற்சி செய்திருக்கிறேன். நான் பிரதமராக பதவி ஏற்றபோது கிட்டத்தட்ட 80 அல்லது 90 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இரண்டு நாட்களில் (அமைதி ஏற்படுத்தப்பட்டு) ஊரடங்கு உத்தரவுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

பெரும்பான்மையான மக்களிடம் பற்றிக் கொண்ட “மண்டல்’ மற்றும் “அயோத்தி’ பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. அப்போது இருந்த ஒரே கேள்வி பூனைக்கு மணி கட்டுவது யார்? என்பதே. அதற்கு முன் இருந்த அரசு தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே ஒரு மாற்று தேர்தல்தான்.

அத்தகைய சூழ்நிலையில் நான் ஆட்சி அமைத்தது சந்தர்ப்பவாதம் அல்ல; நாடு தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னர் மக்கள் மத்தியில் இருந்த கொதிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியிலிருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

பிரதமர் பதவி பேரங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரையில் பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பயன்? ஒரு பிரதமராக, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக ஒருமுறைகூட நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்துகொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஒரு அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகத்தான் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக அல்ல.

அயோத்திப் பிரச்னை:

பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை எனில் அதன் பிறகு தீர்வுக்கு வழியே இல்லாமல் போய்விடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொறுமைதான் கைகொடுக்கும். விட்டுக்கொடுக்கும் குணம் மற்றும் சரியான அணுகுமுறையைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என எனக்கு எல்லா வகையிலும் நம்பிக்கை உள்ளது.

பிரதமராக இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக ஒரு தீர்வு கண்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். அப்படி ஒரு தீர்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் பலருடைய எண்ணமாக இருந்தது.

இடஒதுக்கீடு:

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் எனத் தீர்மானிப்பதற்கு அறிவியல் ஆய்வுமுறை ஏதும் இல்லை என மண்டல் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இன்றைய சூழ்நிலையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பது சமூக, பொருளாதார அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

கருத்துக்கள்:

சிக்கலான சூழ்நிலைகளில் நான் கருத்துச் சொல்லத் தயங்கியதில்லை. அதே நேரம் மக்கள் மீது எனது கருத்துகளை திணிப்பதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆலோசனைகளைத்தான் கூற முடியும். அவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அதை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பிரச்னைகள் எல்லை கடந்து போகும்போது கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

போஃபர்ஸ்:

1989 பொதுத்தேர்தலில் போஃபர்ஸ் விவகாரத்துக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவிட்டது. நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு முக்கியப் பிரச்னைகள் உள்ளன; அரசியல் கட்சிகளுக்கு இது முக்கிய பிரச்னை அல்ல என நான் அப்போதே எடுத்துக் கூறினேன். சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளின் கையில் சிக்கிக்கொண்டுள்ள பிரச்னை போஃபர்ஸ். பிறகு எந்த அடிப்படையில் போஃபர்ஸ் பேரத்தின் மூலம் லாபம் பெற்றவர்களை அடையாளம் காட்டுவதாக மக்களுக்கு உறுதியளிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.

பன்னாட்டு நிறுவனங்கள்: இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் தனித்திருக்க முடியாது. சில முக்கியமான -முதுகெலும்பு போன்ற -துறைகளில் கூட்டுமுயற்சிகளை நாம் நாட வேண்டும். அதே சமயம் நமக்கான எல்லை எது என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கூட்டணி அரசுகள்:

மாநிலங்களில் கூட்டணி அரசுகள் செயல்படுவது போல், மத்தியில் கூட்டணி அரசுகள் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது. பிராந்தியக் கட்சிகள் கொடுக்கும் நெருக்கடிகள், கூட்டணி அரசு சந்திக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கும். குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இல்லாமல் ஒரு அரசு பொறுப்பேற்றுக்கொள்வது, நாட்டின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.

வகுப்புவாதம்:

மத அடிப்படைவாதம் நாட்டின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் என்றால், மத அடிப்படையிலான அரசியல் அதைவிட அபாயகரமானது. மக்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் அக்கறையில்லாமல், சாதி, மதம், மொழி போன்ற மக்களைக் கொந்தளிக்கச் செய்யும் விஷயங்களை அரசியல்வாதிகள் எழுப்புகிறார்கள்.

ஏழை பணக்காரர்:

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நல்ல உணவு, பாதுகாப்பான குடிநீர், தேவையான மருத்துவ வசதி, உடை, உறைவிடம், கல்வி அளிக்க வேண்டியது அவசியமாகும். ஏழைகளுக்கு இந்த வசதிகள் சென்று சேருவதற்கு, வசதி படைத்தோர் சில தியாகங்களைச் செய்துதான் ஆகவேண்டும்.

உலகிலேயே அரசிடம் வெறும் அடிப்படை வசதிகளை மட்டும் எதிர்பார்க்கும் மக்கள் இருப்பார்களேயானால் அது நமது இந்திய மக்கள் மட்டும்தான். இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, குடிக்க நீர், அடிப்படை சுகாதார வசதி, ஆரம்பக் கல்வி, தெருவிளக்கு, சாலைகள் இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இதைக்கூட நம்மால் இதுவரை முழுமையாகத் தர இயலவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஐனதா அரசு:

மக்களாட்சியை மலரச் செய்யும் நோக்கில்தான் ஜனதா கட்சி உருவானது. ஆனால் அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மக்களின் அதீத எதிர்பார்ப்புகளை ஜனதா அரசால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. என்னைப் பொறுத்தவரையில் ஜனதா கட்சியின் சோதனை முயற்சி தோற்றுப்போகவில்லை.

அன்னிய முதலீடு:

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின் உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் நுகர்வோர் சந்தை உள்ளிட்டவற்றில் அன்னிய முதலீடு தேவையில்லாதது. இது இப்படியே தொடர்ந்தால், வர்த்தகர்களாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர், நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்குப் போனார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.

கார்கில்:

கார்கில் வெற்றியைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ஏதோ பெரிய சாதனை படைத்ததுபோலக் கூறுகிறார்கள். ஆனால், நமது எல்லைக்குள் இத்தனை தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்றோ, முக்கியமான இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள் என்றோ யாரும் கேட்பதில்லை. அரசுக்கும் அரசின் உளவுத் துறைக்கும் ராணுவத்துக்கும் கொஞ்சம்கூட சந்தேகம் ஏற்படவில்லை என்றால் அது அரசின் கையாலாகத்தனத்தின் வெளிப்பாடே தவிர வெற்றியல்ல. எல்லையில் ஏற்பட்ட ஊடுருவலைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும் ஓர் அரசின் செயல் மன்னிக்கக் கூடியதல்ல.

தங்கத்தை அடமானம் வைத்தது ஏன்?

எனது அரசு நாட்டின் தங்கத்தை எல்லாம் அடமானம் வைத்துவிட்டது, விற்றுவிட்டது என்றெல்லாம் தவறான செய்தியை வேண்டுமென்றே பரப்பினார்கள். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நாங்கள் அடமானம் வைத்தது நம்மிடமிருந்த கையிருப்புத் தங்கத்தை அல்ல. வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட தங்கத்தை நமது சுங்க இலாகா பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கம்தான் அடமானம் வைக்கப்பட்டது.

எதற்காக அடமானம் வைக்கப்பட்டது? என்று கேட்பீர்கள். அந்த நேரத்தில் எனது அரசு காபந்து அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். நமது அரசு வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது. முந்தைய அரசு அதற்கு எந்தவித ஏற்பாடும் செய்யாமல் விட்டுவிட்டது. காபந்து அரசு என்றால் எந்தவிதக் கொள்கை முடிவுகளும் எடுக்க முடியாது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க பட்ஜெட் தாக்கல் செய்யவும் முடியாது. ஏதாவது முடிவு எடுத்து குறித்த நேரத்தில் வட்டியைக் கட்டாமல் விட்டால், உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறி விடும்.

அப்படி ஓர் இக்கட்டான நிலையில், கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றிய தங்கத்தை அடமானம் வைத்து நிலைமையைச் சமாளிப்பது என்று முடிவெடுத்தோம். அந்த முடிவினால் இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் காப்பாற்றினோம் என்பதை மறந்து, எனது அரசு தங்கத்தை விற்றுவிட்டது என்று அவதூறு சொல்கிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற முடிந்தது என்று பெருமைப்படுகிறேன்.

ஊழல்:

ஊழல் பெருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம். இந்தக் கூக்குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியா ஒரு லஞ்ச ஊழல் மலிந்த நாடு என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள்தான் இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுகிறார்களே தவிர, சாதாரண விசவாயியோ, ஏழைத் தொழிலாளியோ, மாதச் சம்பளம் வாங்கும் பணியாளியோ லஞ்சம் பெறுவதுமில்லை, கொடுப்பதுமில்லை. அவர்களது எண்ணிக்கைதான் இந்தியாவில் அதிகம். ஒரு சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதற்காக இந்தியாவே லஞ்ச ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது என்பது பொறுப்பற்ற பேச்சு.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே லஞ்ச ஊழலை அகற்றிட போராட்டம் நடத்த வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. லஞ்ச ஊழல் இல்லாமல் நிர்வாகம் நடத்துவது அவர்களது பொறுப்பு. இதை எதிர்த்துப் போராடுவது என்றால், அவர்களை எதிர்த்து அவர்களே போராடுவது என்றுதானே அர்த்தம்?

இந்தியாவின் எதிர்காலம்:

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சுதந்திரம் பெற்று ஜனநாயம் சீராக சிறப்பாக செயல்படும் ஒரே நாடு இந்தியாதான். இந்தப் புகழ் இந்திய மக்களின் மேதமையையே சாரும். அரசியல்வாதிகள் தோற்றிருக்கலாம். நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அரசியல்வாதிகளின் தோல்வி இந்த நாட்டின் தோல்வி அல்ல.

நமது மக்களின் திறனில் வைத்துள்ள உறுதி மற்றும் நம்பிக்கையின் மூலம் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்க்க முடியும். 1947-ல் நாம் ஒரு ஆணியைக்கூட உற்பத்தி செய்யவில்லை. ஆனால் 1994-ல், உலகின் 13 முக்கிய தொழில்துறை நாடுகளில் நமது நாடும் ஒன்று. கிட்டத்தட்ட நாம் எல்லாவற்றையுமே உற்பத்தி செய்கிறோம். விவசாயத் துறையில் தன்னிறைவு பெற்றுள்ளோம்.

இந்தியாவின் மிகப்பெரிய பலம் இந்தியக் குடிமகன்தான். அவன் படிக்காதவனாக இருக்கலாம். ஆனால் புத்திசாலி. நமது அரசியல்வாதிகள் அவனை ஏமாற்றுவதாக நினைத்தால் முதலில் ஏமாறப்போவது அவர்கள்தான். இந்தியாவால் மட்டும்தான் உலகுக்கு வழிகாட்ட முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி படையெடுத்தது ஏன்? அது உலகமே பார்த்து பிரமித்த பொருளாதாரமாக இருந்ததால்தான். அதே நிலைமை விரைவிலேயே திரும்பும். நாளைய தலைமுறை இளைஞர்களிடம் இருக்கும் தேசப்பற்று இந்தியாவுக்கு அதன் இழந்த அருமை பெருமைகளை மீட்டெடுத்துத் தரும். இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

—————————————————————————————————————
சந்திரசேகரின் வாழ்க்கைக் குறிப்பு…

1927-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள இப்ராஹிம்பாடியாவில் பிறந்தார். இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அலாகாபாத் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோதே, பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்டார்.

1950-ம் ஆண்டுகளில் ஆச்சார்யா நரேந்திர தேவின் கருத்துகளால் கவரப்பட்ட சந்திரசேகர், பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பில் 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1965-ல் காங்கிரஸில் இணைந்தார். சில ஆண்டுகளில் அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலாளித்துவத்தை எதிர்த்து மக்களவையில் குரல் கொடுத்தார் சந்திரசேகர். காங்கிரஸில் “இளம் துருக்கியர்’ என்றழைக்கப்பட்ட அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இவருடன் மோகன் தாரியா, ராம் தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இணைந்து காங்கிரஸின் தலைமையை எதிர்த்து வந்தனர். இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி கூட, இந்த இளம் துருக்கியர் அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1975-ல் நெருக்கடி நிலை பிரகடனத்தின்போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான இயக்கத்தில் இணைந்து நெருக்கடி நிலையை எதிர்த்தார். இதையடுத்து ஜனதா கட்சி உருவானது. இக் கட்சிக்கு ஏர் உழவன் சின்னம் கிடைத்தது.

1977-ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அதே ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவராக சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1977-ல் இருந்து அனைத்து மக்களவைத் தேர்தலிலும் (1984-ல் இந்திரா காந்தி மறைவின்போது நடந்த தேர்தலைத் தவிர) வெற்றிப் பெற்றார்.

1980-க்கு முன் ஜனதா கட்சி உடைந்ததும், அக் கட்சியின் தலைவராகவே 1989-வரை நீடித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1983-ல் காஷ்மீரில் தொடங்கி தில்லி வரை பல ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார்.

1989-ல் வி.பி.சிங்குடன் இணைந்து ஜனதா தளத்தை உருவாக்கி காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்தார். பிரதமராக வேண்டிய வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமைச்சர் பதவியையும் மறுத்தார்.

1990-ல் மண்டல் கமிஷன் விவகாரத்தால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங்.

இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் 1990-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

6 மாத காலம் பிரதமராக இருந்த சந்திரசேகர் ஆட்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தில்லி வீட்டை சில் போலீஸôர் வேவு பார்த்ததாக எழுந்த விவகாரத்தால் அவரது ஆட்சிக்கு ஆதரவை விலக்கி கொண்டது காங்கிரஸ்.

1991-ம் ஆண்டு மார்ச் 6-ல், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார் சந்திரசேகர். அன்று அவர் நாடாளுமன்றக் கட்டத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தனியாக நடந்து சென்று ராஜிநாமா கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர், அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், 2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

கடந்த 1-ம் தேதி (1-7-2007) தனது 80-வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார்.

தேசியத் தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர்: குடியரசுத் துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எனக்கு நல்ல நண்பராக இருந்தவர். சோசலிஷ கொள்கையிலும், ஜனநாயகத்துக்கு குரல் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. ஏழைகளின் வாழ்வு உயர இறுதி வரை உழைத்தவர் சந்திரசேகர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன்: காந்தியக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர். கிராமப் புற மக்கள், கிராமத் தொழில்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறைக் கொண்டவர்.

பிரதமர் மன்மோகன் சிங்: மதசார்பற்ற தேசியவாதி. மக்களின் தலைவராக மதிக்கப்பட்டவர். சிறந்த அரசியல்வாதியை நாடு இழந்து விட்டது. அரசியலிலும், ஆட்சியிலும் பல புதுமைகளை கொண்டு வந்தவர்.

முன்னாள் பிரதமர் வாஜபேயி: நீண்ட நாள் அரசியல் நண்பர். அச்சற்ற முறையில் எதற்கும் துணிந்து போராடக் கூடியவர். நீதிக்காக குரல் கொடுத்தவர்.

முன்னாள் பிரதமர் குஜ்ரால்: நாடு நல்ல தலைவரை இழந்து விட்டது. அவருடைய அரசியல் வாழ்க்கை துணிச்சல் மிக்கது.

சோம்நாத் சாட்டர்ஜி: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில் மிகச் சிறந்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: அரசியலில் துணிச்சலுடன் போராடியவர். இளம் வயதில் அரசியலில் பங்கேற்று நாட்டின் பிரதமராக உயர்ந்தவர். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்: தனது கொள்கைகளை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. பல்வேறு தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

லாலு பிரசாத்: விடுதலைக்காக போராடிய வீரர். நெருக்கடி நிலைக் காலத்தில் அவரது பங்கு மகத்தானது.

சீதாராம் யெச்சூரி: பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்தவர் சந்திரசேகர். கூட்டணி ஆட்சிக்கு வழிவகை கொடுத்தவர்.

சரத் யாதவ்: இந்திய ஜனநாயகத்தின் தூணாக விளங்கியவர் சந்திரசேகர்.

————————————————————————————————

Dinamani op-ed

தேசிய இழப்பு!

உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே!

சுதந்திர இந்திய வரலாறு பல பிரதமர்களைச் சந்தித்துவிட்டது. சந்திக்கவும் இருக்கிறது. அந்தப் பதவியை அலங்கரித்த ஒவ்வொரு பிரதமருக்கும் ஒரு தனித்தன்மை இருந்தது என்பது மட்டுமல்ல; அந்தப் பதவியில் அமர்ந்தவர்கள், அவரவர் வகையில் சிறப்புகள் சேர்த்தனர். இந்த விஷயத்தில் சதானந்த்சிங் சந்திரசேகர் விதிவிலக்கல்ல.

மிகக் குறைந்த நாள்களே பிரதமராக இருந்தபோதிலும், அவரது பதவிக்காலம் இரண்டு மிகப்பெரிய பிரச்னைகளின் வேகத்தைத் தணித்து, இந்தியாவில் இனக்கலவரம் ஏற்படாமல் பாதுகாத்தது என்று வரலாறு நிச்சயமாக சந்திரசேகருக்குப் புகழாரம் சூட்டும். ஒருபுறம் மண்டல் கமிஷன் அறிவிப்பின் எதிரொலியாக வடமாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்த வன்முறைகள்; மறுபுறம், அயோத்திப் பிரச்னையால் ஏற்பட்ட மதக்கலவரங்களும், அதனால் ஏற்பட்ட இனவாத விரோதங்களும்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்த வேளையில், இனியும் ஒரு பிரிவினைக்கால மதக்கலவரச் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகப்பட்ட சூழ்நிலையில் சந்திரசேகரின் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றது. அப்படியொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், ஜாதிக் கலவரங்கள் ஒருபுறமும், மதக்கலவரங்கள் மறுபுறமும் என்று உள்நாட்டுக் கலகமே வெடித்திருக்கும் சாத்தியம் நிலவியது. சந்திரசேகர் பதவியில் தொடர்ந்திருந்தால் அயோத்திப் பிரச்னைக்கு சுமுகமான முடிவு ஏற்பட்டிருக்கும் என்பதுதான் நமது கருத்து.

தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிலருக்கு சந்திரசேகர் மீது மனவருத்தம் இருக்கலாம். ஆனால், பிரதமர் என்ற முறையில் சந்திரசேகர் எடுத்த எந்தவொரு முடிவுமே பாரபட்சமற்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு என்று சொல்ல முடியாதது.

பதவியில் இருந்தபோதும் சரி, பதவியை இழந்த பிறகும் சரி, சந்திரசேகர் என்கிற பெயர் தனி அந்தஸ்துடனும், மரியாதையுடனும்தான் வலம் வந்தது. என்னதான் கூச்சலும் குழப்பமும் இருந்தாலும் சந்திரசேகர் பேச எழுந்தார் என்றால் நாடாளுமன்றம் கப்சிப்பென்று நிசப்தமாகிவிடும். பிரதமர் தொடங்கி அத்தனை உறுப்பினர்களும் அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். கட்சி பேதமின்றி எந்த ஓர் உறுப்பினரும் இடைமறித்துப் பேசாத ஒரே ஒரு பேச்சாளர் நாடாளுமன்றத்தில் இருந்தார் என்றால் அது சந்திரசேகர் மட்டும்தான்.

வீம்புக்காரர், முன்கோபி, பிடிவாதக்காரர் – என்ற கோணங்களில் அவரைப் பார்ப்பவர்கள் உண்டு. அத்தனையும் உண்மையும்கூட. அதேசமயம், எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க விரும்புபவர் என்பது மட்டுமல்ல, எதிர்தரப்பு வாதத்தில் நியாயமிருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவருக்கு இருந்தது. எந்தவொரு காரணத்துக்காகவும் தனது தன்மானத்தையும் தனக்குச் சரியென்றுபட்ட கொள்கையையும் விட்டுக்கொடுக்காத அவரது பிடிவாதம், சந்திரசேகரை மற்ற தலைவர்களிடமிருந்து வேறுபட வைத்தது. அவருக்குப் பல எதிரிகளையும் ஏற்படுத்தியது.

“”நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பதைவிட பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் முக்கியம்”~சந்திரசேகர் தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறும் விஷயம் இது. “”எந்தவொரு காரணத்துக்காகவும் பிரதமர் பதவியின் மரியாதையும் கௌரவமும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்குக் களங்கம் வரும் விதத்தில் நான் செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு எனது ஒரே பதில் – எனது ராஜிநாமா கடிதம்தான்” – தனக்கு ஆதரவளித்த ராஜீவ் காந்தியிடம் சந்திரசேகர் சொன்ன விஷயம் இது.

அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றின் ஏடுகளை யார் புரட்டிப் பார்த்தாலும், சிறிது காலமே பிரதமராக இருந்த சந்திரசேகரின் கருத்துகளும், பிரச்னைகளுக்கு அவர் எடுத்த தீர்வுகளும் ஒவ்வொரு பக்கத்திலும் நிழலாடும். இந்திய ஜனநாயகம் அழிந்துவிடாமல் பாதுகாத்த பெருமைக்குரிய தலைவர்களில் அவரது பங்கு கொஞ்சநஞ்சமல்ல.

இளம் துருக்கியராக, ஜனதா கட்சியின் தலைவராக, பிரதமராக, மூத்த அரசியல்வாதியாக எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தலைவராக, அன்புடனும் பாசத்துடனும் பழகும் மனிதனாக வாழ்ந்து மறைந்துவிட்டார் சதானந்த்சிங் சந்திரசேகர்.

எந்தவொரு விஷயத்திலும் தீர்க்கமான சிந்தனையும், தெளிவான தீர்வும் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மறைவு, ஈடுகட்ட முடியாத தேசிய இழப்பு!

Posted in Agriculture, Allahabad, Alliance, Anjali, Ayodhya, Biography, Biosketch, BJP, Bofors, Bribery, Bribes, Cabinet, Capitalism, Cargil, Caste, Chandrasekar, Chandrasekhar, CharanSingh, Chat, Coalition, Communism, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corrupt, Corruption, Democracy, Economy, Emergency, Faces, Farming, FDI, Feroze, Finance, Freedom, Fundamentalism, Gandhi, Govt, Incidents, Income, Independence, Indhira, Indira, Indra, infrastructure, Inquiry, Interview, investments, Jan Morcha, Janata, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, JanSakthi, JanSakti, JanShakthi, JanShakti, JP narayan, Kargil, kickbacks, Liberation, Life, LokSaba, LokSabha, Mandal, Manmohan, Marxism, MNC, Morarji, MP, Musharaf, Musharaff, Narain, Narasimha Rao, Narasimharao, Narayan, Nehru, NRI, Opinions, Pakistan, people, PM, Poor, Praja Socialist, PVNR, Rajeev, Rajiv, Rajya Sabha, Rajyasabha, Religion, Republic, Reservations, Rich, Socialism, Sonia, Tax, UP, Uttar Pradesh, UttarPradesh, VP Singh, Wealth | Leave a Comment »

Pranabh or Sushil Kumar Shinde or Karan Singh – First Among Equals?

Posted by Snapjudge மேல் மே 14, 2007

மாயாவதியின் மகத்தான வெற்றியால் குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்கும் இடதுசாரிகள்: பிரணப் முகர்ஜிக்கு வாய்ப்பு கிடைக்கும்?

புதுதில்லி, மே 14: உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய வியூகம் அமைக்க இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில் எந்த ஒரு கட்சியும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை திட்டவட்டமாக அறிவிக்க முடியாத நிலையில் உள்ளது.

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தேர்தல் கமிஷன் எந்த நேரத்திலும் அறிவிக்கை வெளியிடக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

உ.பி. தேர்தல் முடிவுக்காக காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இப்போது பொது வேட்பாளரை நிறுத்த முயன்றுவருகின்றன.

இடதுசாரிகளைப் பொருத்தவரையில் இரண்டாவது முறையாக கலாமை பதவியில் நீடிக்கச் செய்வதிலும், துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தச் செய்வதற்கும் விருப்பமில்லை.

இந்நிலையில், அரசியலிலும் ஆட்சியிலும் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பரிந்துரைக்கும்பட்சத்தில், அதை ஏற்றுக்கொள்ள இடதுசாரிகளுக்கு நெருடல் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

இடதுசாரிகளுடனான பேச்சின்போது மத்திய அமைச்சர்கள்

  • பிரணப் முகர்ஜி,
  • சுஷில் குமார் ஷிண்டே,
  • முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரின் பெயர்களை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

மாயாவதி தற்போது மேல்சாதியினர் ஆதரவையும் பெறுவதில் குறியாக இருப்பதால், குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் வேட்பாளரை மட்டும் தான் ஆதரிப்பார் என்று கூற முடியாது.

உ.பி. முதல்வர் மாயாவதியின் ஆதரவில்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தலை சுமுகமாக நடத்த முடியாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தலாம் என்று கடந்த ஆண்டு வெளிப்படையாக கூறி வந்தது. ஆனால் இடதுசாரிகள் எதிர்ப்பு காரணமாக மவுனமாக இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýடன் பேரம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது எனவும், பதிலுக்கு குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜிக்கு ஆதரவைப் பெறுவது எனவும் இடதுசாரிகள் திட்டமிடக்கூடும்.

—————————————————————————————————–

குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார்?

நீரஜா சௌத்ரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிட ஒரு மாதத்துக்கும் குறைவான அவகாசமே இருக்கும் இந்த நிலையில்கூட, அந்தப் பதவியை அலங்கரிக்கப் போகிறவர் யார் என்பதைத் தேர்வு செய்ய முடியாத அரசியல் குழப்ப நிலைமை காணப்படுவது நமது துரதிருஷ்டம்தான்!

“”கூட்டணி அரசுகள்தான் இனி” என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டதால், நமது அரசியல் முறைமையிலேயே ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுவிட்டது. எந்த முக்கிய முடிவென்றாலும் அதை முதலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் ஏற்க முதல் கட்டத்திலும், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆதரிப்பதற்கு அடுத்த கட்டத்திலும் காய்களை நகர்த்த வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -அப்பதவி முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவும், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணி -6 மாதங்களுக்கு முன்னதாகவும் தொடங்கிவிடும் என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர்.

1987 ஜூலையில் குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனுக்கு அவர்தான் அடுத்து அந்தப் பதவிக்கான வேட்பாளர் என்பதை 1986 அக்டோபர் 4-ம் தேதியே தெரிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. பிரதமர் முதலில் எதிர்க்கட்சியினரையும் பிறகு தன் கட்சியினரையும் ஆலோசனை கலந்துவிட்டு கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் தெரிவித்து ஒப்புதல் வாங்கியது அந்தக் காலம்.

ஆந்திர முதலமைச்சராகப் பதவி வகித்தபோது தன்னுடைய அரசைக் கலைத்தவர்தான் சங்கர் தயாள் சர்மா என்ற வருத்தம் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அவர்தான் என்பதை குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த சர்மாவிடம் முன்கூட்டியே தெரிவித்தார் நரசிம்ம ராவ்.

கே.ஆர். நாராயணன்தான் குடியரசு துணைத் தலைவராகப் போகிறார் என்பதும் அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்தான், “”பதவி கிடைக்கட்டும் அதுவரை எதுவும் நிச்சயம் இல்லை” என்று உள்ளூர அவநம்பிக்கையுடன் இருந்தார்; அதற்குக் காரணமும் உண்டு. 1991-ல் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு கே.ஆர். நாராயணனைத்தான் நரசிம்ம ராவ் தேர்வு செய்திருந்தார். ஆனால் கே. கருணாகரன் அதை விடாப்பிடியாக தடுத்து நிறுத்தினார். கருணாகரன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சமயம் பார்த்து, குடியரசு துணைத் தலைவராக கே.ஆர். நாராயணனைத் தேர்வு செய்துவிட்டார் நரசிம்ம ராவ்.

அப்போதெல்லாம் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது; தனது அரசியல் உதவியாளர்கள் தயாரித்த 4 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வது பிரதமருக்கு எளிதாக இருந்தது. இப்போது அப்படி செய்ய முடியாதே?

இப்போதைய கூட்டணி அரசில் பிரதமரால் மட்டும் எதையும் தீர்மானிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிகூட தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்தக் கூட்டணி அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்; அடுத்து மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்கும் மன நிலையிலேயே மாயாவதி இருக்கிறார் என்பது நிம்மதி தரும் விஷயமாகும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பைரோன் சிங் ஷெகாவத் போட்டியிட்டால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள்கூட அணி மாறி வாக்களித்துவிடுவார்களே என்ற கவலை காங்கிரஸ் தலைவர்களுக்கு இருக்கிறது. அவர் எல்லா கட்சியினராலும் விரும்பப்படுகிறவர் என்பது மட்டும் காரணம் அல்ல, அவர் நிறுத்தப்பட்டால் எல்லா கட்சிகளிலும் உள்ள தாக்குர்கள் அவருக்கே வாக்களித்துவிடுவார்கள்.

இதனால்தான்

  • அர்ஜுன் சிங்,
  • பிரணாப் முகர்ஜி,
  • சுசீல்குமார் ஷிண்டே,
  • நாராயண் தத் திவாரி,
  • சிவராஜ் பாட்டீல் என்று பல பேர்கள் அடிபடுகின்றன. இதில் இடம்பெறாத யாராவதுகூட கடைசி நேரத்தில் வேட்பாளராகிவிடலாம் என்றும் பேசப்படுகிறது.

ஷெகாவத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கு படைத்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் அவர் குடியரசுத் தலைவர் ஆன பிறகு ஆளும் கூட்டணித்தலைமை விரும்புகிறபடிதான் எப்போதும் நடப்பார் என்று சொல்ல முடியாது. அதுமட்டும் இல்லாமல் ஆளும் கூட்டணியில் 40-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களில் இடம் பெறும் அளவுக்கு அவர் முக்கியமான நிர்வாகி. அவருடைய அனுபவமும் வழிகாட்டலும் ஆளும் கூட்டணிக்குத் தொடர்ந்து தேவைப்படுகிறது.

ஷிண்டேவையோ சிவராஜ் பாட்டீலையோ நிறுத்த சோனியா காந்திக்கு விருப்பம் அதிகம். ஆனால் இவ்விருவருக்கும் மாற்றுக் கட்சிகள், அணிகளிலிருந்து வாக்குகள் கிடைப்பது அரிது.

தலித்துகளின் தேசியத் தலைவராக உருவாகிவரும் மாயாவதி, இன்னொரு தலித்தை (ஷிண்டே) தேசத்தலைமைப் பதவியில் அமர்த்துவதை எப்படி வரவேற்பார் என்ற சந்தேகம் இருந்தது. அவரோ காங்கிரஸ் தேர்வு செய்கிறவருக்கு என் ஆதரவு உண்டு என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை ஆலோசனை கலந்துவிட்டு முடிவைத் தெரிவிக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் யாரை ஆதரிப்பார்கள் என்பது அடுத்து முக்கியமானது. எனவேதான் தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் திமுக விரும்பிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து தந்தனர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்.

கட்சிகளுக்குள் உள்ள போட்டிகள், கூட்டணிக்குள் காணப்படும் இழு-பறிகள், இருவேறு கூட்டணிகளின் பலம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுவிட்டதால் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் உள்பட எந்த முக்கிய முடிவையும் எடுப்பது எளிதாக இல்லை. எனவே இந்த முயற்சிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கிவிட வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சமீபத்திய அனுபவத்திலிருந்துகூட பாடம் கற்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது!

தமிழில்: சாரி.

Posted in BJP, BSP, Byron Singh Shekawat, Chatterjee, Communist, Congress, CPI, CPI(M), Dalit, Elections, Kalam, Karan, Karan Singh, KR Naraian, KR Narayan, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, Naraiyan, Narasimha Rao, Narasimma Rao, Narasmha Rao, Narayan, NDA, Polls, Pranab, Pranab Mukarjee, Pranab Mukerjee, Pranab Mukerji, Pranab Mukharjee, Pranab Mukherjee, Pranabh, President, PV Narasmha Rao, PVNR, Rajasthan, Rao, Sarma, SD Sharma, Shankar Dayal Sharma, Sharma, Shekavat, Shekavath, Shekawat, Shekawath, Shinde, Somnath, Somnath Chatterjee, SP, Speaker, Sushil, Sushilkumar, Sushilkumar Shinde, Thakur, UP, UPA, vice-president, VP | 1 Comment »

Is it the treatment meted out to a 84 Year octogenarian – Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் மே 1, 2007

84 வயதில் எனக்கு இது தேவையா? கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா ஆகியோருடன் பழகி அரசியல் நடத்தி விட்டு, ஜெயலலிதாவைப் போன்றவர்களுடன் அரசியல் நடத்தும் அளவுக்கு வந்து விட்டதே, 84 வயதில் எனக்கு இது தேவையா என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கண் கலங்கிக் கூறியதால் சபையில் சில நிமிடம் பரபரப்பு நிலவியது.

சட்டசபையில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆளுநர் பர்னாலா, மத்திய அரசு, காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோரை கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை விட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சி்களின் உறுப்பினர்களின் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினர். பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார்.

கருணாநிதி பேசுகையில், தோழை கட்சிகளின் கருத்தோடு என் கருத்தையும் இணைத்து கூறுகிறேன். காவல்துறையில் எல்லோரும் நல்லவர்களும் அல்ல, தீயவர்களும் அல்ல. இதில் கருங்காலிகளும் உள்ளனர்.

அதற்காக காவல்துறையே வேண்டாம் என முடிவு செய்ய கூடாது. ஒரு ஆட்சி செம்மையாக இருந்தால்தான் எல்லா துறையும் சீராக செயல்படும். இதை பொறுத்து கொள்ள முடியாமல் எரிச்சலடையும் புகைச்சலாகத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது.

இதற்காகத்தான் நீங்கள் சட்டசபையில் எனக்கு பொன்விழா நடத்த வேண்டும் என்ற போது நான் வேண்டாம் என மறுத்தேன். பிடிவாதமாக சம்மதிக்க வைத்தீர்கள்.

என்றைக்காவது 50 ஆண்டு காலத்தில் எந்த விழாவாவது இந்த அவையில் நடந்ததுண்டா. நான் தம்பி என்று கருதிக் கொண்டிருந்தவரும் கூட அறிக்கை விட்டிருக்கிறார். ஏனென்றால் அவர்களால் எல்லாம் இவற்றைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, இந்த அவையில் எம்ஜிஆர் படம் திறக்கப்பட்ட போது என்னை அழைக்கவில்லை. அப்போது, சபாநாயகர் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார், நாங்கள் அமர்ந்த இடத்தில் சசிகலா அமர்ந்திருந்தார். இந்த அவை ஒரு தர்பார் போல காட்சியளித்தது.

நீங்கள் எல்லாம் பார்த்து ஏதோ, ஐம்பதாண்டு காலம் இருந்தானே, எங்கேயோ பிறந்தவன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானே என்று என்னையும் சிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் கருதியதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் இன்றைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்.

இதில் டிஜிபியும், கவர்னரும் என்ன செய்வார்கள், அவர்களை பற்றி அறிக்கை வெளியிடுகிறார்கள். உலக மகா பொய்யர் கருணாநிதி என்று கூறியுள்ளார். என்னெல்லாம் பேசியிருக்கிறார்.

நடமாடும் பொம்மையாக டிஜிபி இருக்கிறார் என்கிறார். காவல்துறையைப் பற்றி உருக்குலைந்து போன, செயல் திறன் இழந்து விட்ட, சர்வ நாசமாகி விட்ட அமைப்பு என்று கூறியுள்ளார். துர்வாச முனிவரால் கூட இப்படி திட்ட முடியாது.

ஆளுநரைப் பார்த்து நபர் என்கிறார். நாம் பதிலுக்குப் பதில் பெண்களைப் பற்றிப் பேசக் கூடாது. நாம் பெண்களை பற்றி பேசக்கூடாது, பெண்களும் இப்படி பேசக்கூடாது.

நாம் புராணங்களை நம்புவதில்லை, கட்டுகதைகளையும் நம்புவதில்லை. ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது அல்லி ராணிகள் இருக்கத்தான் செய்தார்கள் என எண்ண வேண்டியுள்ளது.

முதலில் நரசிம்மராவ், வாஜ்பாய், அத்வானி, ராஜீவ் காந்தி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சந்திரபாபு நாயுடு எல்லோரையும் குறை கூறிவிட்டு, இப்போது உ.பி சென்று அவர் கையை பிடித்துள்ளார்.

வாஜ்பாயைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா. தமிழ் நாட்டு மக்களுக்கு இவரை யார் என்றே தெரியாது. நான்தான் பட்டி தொட்டிகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன் என்றார். அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றார்.

இரவு 10 மணிக்கு ராஜீவ் காந்திக்குப் போன் செய்தேன். அவர் தூங்கப் போய் விட்டார் என்றார்கள். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு சீக்கிரம் தூங்கினால் நாடு உருப்படுமா என்றும் கூறினார்.

ஆளுநர் சென்னாரெட்டியை சந்திக்கச் சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றார். சந்திரபாபு நாயுடுவை மோசடிப் பேர்வழி என்றார்.

எம்.ஜி.ஆர். என்னை விட்டு, திமுகவை விட்டுப் பிரிந்து சென்றார். அப்படி இருந்தும் என் மீது மரியாதையாக இருந்தார். நட்பு பட்டுப் போய் விடவில்லை. அவருடைய காரிலே ஒரு நண்பர், இப்போதும் அவர் சென்னையிலே பெரிய புள்ளியாக உள்ளார்.

டிரைவர் என்று கூறக் கூடிய அளவுக்கு எம்.ஜி.ஆரிடத்திலே நெருக்கமாக இருந்தவர் அவர். ஒருமுறை காரில் எம்.ஜி.ஆருடன் சென்றபோது தவறிப் போய் எனது பெயரைக் குறிப்பிட்டு, கருணாநிதி என்று கூறி விட்டார்.

உடனே காரை நிறுத்தச் சொன்ன எம்.ஜி.ஆர்.அவரை நடந்தே வீட்டுக்கு வருமாறு உத்தரவிட்டார். ஏன் என்று அவர் கேட்டபோது, நானே கருணாநிதி என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை. நீ எப்படிக் கூப்பிடலாம் என்றாராம். இதை அந்த நண்பர் பின்னர் ஒருமுறை என்னிடம் சொல்லி கண் கலங்கியிருக்கிறார்.

அப்படி, ஒரு கட்சி பிரிந்த பிறகும் கூட அந்த உணர்வுகள் அப்படியேதான் இருந்தன. நான் காமராஜரைப் பற்றிப் பேசாத பேச்சா. காமராஜர் என்னைப் பற்றியோ, கழகத்தைப் பற்றியோ பேசாத பேச்சா. பக்தவச்சலம் என்னைப் பற்றி பேசாத பேச்சா, நான் அவரைப் பற்றிப் பேசாத பேச்சா. அப்படி இருந்தாலும், என்னுடைய தாயின் பெயரில் திருக்குவளையில் தாய் சேய் நல விடுதியைத் திறக்க வேண்டும் என கேட்டபோது பக்தவச்சலம் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

அதேபோல நான் அவருக்கு மணிமண்டபம் கட்டியபோது அவர் இந்தியைக் கொண்டு வந்தார், உங்களை பாளையங்கோட்டை சிறையில் போட்டார். அவருக்கு மணி மண்டபா என்று சிலர் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அது வேறு, இது வேறு. மனித நாகரீகம் இது, தடுக்காதீர்கள் என்றேன்.

பெருந்தலைவர் காமராஜரை நான் எவ்வளவு தூரம் விமர்சித்திருப்பேன். எனது தாயார் இறந்தபோது நான் சவத்துக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தேன். எனது வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார். எனது தாயாருக்கு முதல் மரியாதை செலுத்தி விட்டு வீட்டு வாசலில் காமராஜர் நின்று கொண்டிருந்தார்.

அரசியலில் மற்றவர்களை தாக்கி பேசும்போது அவர்களை மீண்டும் சந்திக்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது. ஜெயலலிதா அந்த நாகரீகத்தை கற்றவர் அல்ல, காப்பாற்றுபவரும் அல்ல. மனித இதயத்தோடு தொடர்பு இல்லாமல் அரசியல் நடத்துகிறார்.

இதையெல்லாம் தாங்கிகொண்டுதான் ஆக வேண்டும். இந்த அளவிற்கு நாகரீகமற்ற, பண்பாடற்ற அரசியல் வந்துவிட்டதே என வருத்தப்பட வேண்டியுள்ளது.

84 வயது, 84 வயது என்று சொல்கிறீர்களே, இவ்வளவு நாள் இருந்ததால் அல்லவா, தமிழ்நாட்டிலே காமராஜரைப் போன்ற, பெரியாரைப் போன்ற, பகத்வச்சலத்தைப் போன்ற, அண்ணாவைப் போன்ற பெரிய மனிதர்களுன் பழகி விட்டு, இன்றைக்கு யார் யாரோடெல்லாம் அரசியல் நடத்திய வேண்டிய நிலை வந்து விட்டது.

இப்படியெல்லாம் 84 வயது வரை வாழ வேண்டுமா என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன் என்று கூறியபோது முதல்வரின் கண்கள் பணித்தன, குரல் தழுதழுத்தது. அவையே பெரும் அமைதியில் உறைந்து போனது.

முதல்வர் கண் கலங்குவதைப் பார்த்த அமைச்சர்கள் கீதா ஜீவன், பூங்கோதை, தமிழரசி, பாமக தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கண்கலங்கினர்.

————————————————————————————————

சாதனைகள் :
– ப்ரியன்
* தமிழகம் இதுவரை 13 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களைச்
சந்தித்துள்ளது. இவற்றில் தாம் போட்டியிட்ட 11 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பவர் இந்தியாவில் கலைஞர் மட்டுமே!

* அன்றிலிருந்து இன்று வரை, சட்டமன்றத்தில் எரிமலையாகப்
பேசினாலும், எந்தக் கட்டத்திலும், சபைக் குறிப்புகளிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு, கலைஞருடைய பேச்சு அமையவில்லை.

* சென்னை மாநகராட்சியை தி.மு.க. முதன் முறையாகப் பிடித்ததற்கு முக்கியமான காரணம் அவரது திட்டமிடுதலும் உழைப்பும்.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றது.

* கை ரிக்ஷாக்களை ஒழித்தது. பேருந்துகளை தேசிய மயமாக்கியது போன்ற திட்டங்கள்.

* நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

* தமிழ்நாடு அரசின் கீழ் பல பொதுத்துறை நிறுவனங்கள் வரக் காரணமாக இருந்தவர். சிப்காட் தொழிற் பேட்டைகள் தமிழகத்தில் உருவாகக் காரணமாக இருந்தவர்.

* சேலம் உருக்காலை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை வரக்காரணமாக இருந்தவர்.

* மாநிலங்கள் அதிக அதிகாரங்கள் பெற, நீதிபதி ராஜ மன்னார் கமிஷனை அமைத்தது.

* தமிழ்மொழி, ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் முனைந்து பணியாற்றி வருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவரது முயற்சியால் வந்ததுதான். தமிழுக்குச் செம்மொழி பெற முனைந்தது.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உண்டாக்கியவர்.

* பெண்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்கிற புரட்சிகரமான சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர். பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம், பேறுகால உதவி போன்றவையும் அமுல்படுத்தியவர்.

* காவிரி நடுவர் மன்றம் நியமிக்க முழு மூச்சாகச் செயலாற்றினார்.

* பெரியார் சமத்துவபுரம், உழவர் சந்தை ஆகியவை இவரது
திட்டங்களே.

* சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

* கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குப் விநியோகித்தது.

* சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் மறைந்த தலைவர்களுக்கு
நினைவில்லங்கள், மணி மண்டபங்கள் கட்டியது.

பின்னடைவுகள்:

* 1983-ல் இலங்கைத்தமிழர்கள் பிரச்னையில் ராஜினாமா செய்த
பின்னரும் மற்றும் 1986-ல் எம்.ஜி.ஆர். மேலவையைக் கலைத்துவிட்ட பின்னரும் கிட்டத்தட்ட நான்கு வருட காலம், சட்டமன்றத்திலோ மேலவையிலோ உறுப்பினராக இல்லாமல் இருந்திருக்கிறார் கலைஞர்.

* 1991-ல் துறைமுகம் தொகுதியில் வென்றபோதும், தி.மு.க.வின் தோல்வியை ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்து விட்டார்.

* 2001-ல் சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றாலும், அவைக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.

* எமர்ஜென்சியைத் தொடர்ந்து, இவர் மீது போடப்பட்ட

  • வீராணம்,
  • பூச்சி மருந்து,
  • கோதுமை பேரம் ஆகிய ஊழல் வழக்குகளை பின்னர் மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டாலும், இவை கரும்புள்ளிகளாக அமைந்துவிட்டன.

* எம்.ஜி.ஆர்.கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, சட்டசபையை இரு சபாநாயகர்கள் நடத்தும் சூழல் உருவானது இந்தக் காலகட்டத்தில்தான்.

* சட்டசபையில் இவரது கையில் இருந்த பட்ஜெட் புத்தகத்தை
ஜெயலலிதா பறிக்க முயன்றபோது துரைமுருகன் ஜெயலலிதாவை மிக அநாகரிகமான முறையில் தாக்கியது களங்கமாய் அமைந்துவிட்டது.

* 1996-ல் இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தென்
மாவட்டங்களில் ஜாதிமோதல்கள் நடந்தன.

* மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் வீட்டுக்குச் சென்று கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல் ஒரு தலைமுறைக்கு
அறிமுகமில்லாத கள், சாராயத்தை தமிழகத்தில் கொண்டு வந்து அந்த அவலம் இன்று வரை தொடர்வதற்குக் காரணமானவர்.

* அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது, மாணவர்கள் மீது போலீஸ் தாக்கியதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்து விட்டார். பின்னர் விடப்பட்ட மிரட்டல்கள் காரணமாக, உதயகுமாரின் தந்தையே பெற்ற மகனை “தன் மகன் இல்லை” என்று சொல்ல நேர்ந்த கொடுமை.

* திருச்சி மற்றும் பாளையங்கோட்டையில் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்.

* காவிரி பிரச்னை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது இன்று வரை தொடர்
பிரச்னைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது.

* தி.மு.க. ஆட்சியில் சென்னையில் ஈழப் போராளி பத்மநாபா மற்றும் அவர் தோழர்களைக் கொன்ற புலிகள், கோடியக்கரை வழியாக
தப்பிச் சென்றது.

* மின்சாரக் கட்டண உயர்வுக்காகப் போராடிய விவசாயிகள் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்.

* 1972-ல் கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது.

* மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியதில் மூன்று ஊழியர்கள் இறந்தது.

– ப்ரியன்

Posted in 50, 84, ADMK, Advani, AIADMK, Allegations, Anna, Annadurai, Assembly, Backgrounder, Barnala, Biography, Biosketch, Chandrababu, Chandrababu Naidu, Communist, Congress, DMK, EVR, Faces, Gandhi, History, Jayalalitha, Jayalalithaa, Jeyalalitha, Kamaraj, kamarajar, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Lament, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, MGR, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Naidu, Narasimha Rao, Narasimharao, Nayudu, Party, people, Periyaar, Periyar, PMK, Politics, Rajeev, Rajiv, Speech, Statistics, Vajpayee, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics

Posted by Snapjudge மேல் மார்ச் 26, 2007

சர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்!

நீரஜா செüத்ரி

“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.

அவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

மத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.

அதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.

ராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.

தமிழில்: சாரி.

=========================================================
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி

லக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.

அதன்படி

  1. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
  2. பாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,
  3. சமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,
  4. காங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,
  5. ராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல

  1. சமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  2. இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
  3. பாஜக,
  4. காங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.

=========================================================

Dinamani – May 8

மாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு!

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.

ராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.

அலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.

மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.

தங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான்! இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.

உத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.

மாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.

தமிழில்: சாரி.

Posted in Anlaysis, Assets, BJP, BSP, Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Disclosure, EC, election commission, Elections, Evasion, Income, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Islam, IT, Muslim, Narasimha, Narasimha Rao, Narasimma Rao, Narasmiha Rao, Neeraja, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Pan, Politics, Polls, PVN, Rahul, Rahul Gandhi, Sonia, Tax, UP, Uttar Pradesh | 7 Comments »

Can Sharad Pawar become Prime Minister of India?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?

நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ

கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.

மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.

நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.

அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.

பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.

Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »

Sibu Soren & Sasinath Jha Murder – History, Background & Information

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2006

சிபு சோரன் தனிச்செயலர் கொலை செய்யப்பட்டது ஏன்?

புதுதில்லி, டிச. 11: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் ஊழல் விவகாரங்கள் உள்ளிட்ட ரகசியங்களை சதிநாத் ஜா தெரிந்துவைத்திருந்ததால் அவரை திட்டமிட்டு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

மேலும் ரகசியங்களை அம்பலப்படுத்துவேன் என சசிநாத் ஜா அடிக்கடி சிபுசோரனை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சசிநாத் ஜா கொலை வழக்கில் சிபு சோரன் மற்றும் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்புக் கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனின் தனிச் செயலராக இருந்த சசிநாத் ஜா, 1993-ம் ஆண்டு சிறுபான்மை அரசாக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் அரசைக் காப்பாற்ற சிபு சோரன் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ரகசியங்களைத் தெரிந்துவைத்திருந்தார்.

1993-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நரசிம்மராவ் அரசை காப்பாற்ற சிபுசோரன் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றார். இதில் ரூ.30 லட்சத்தை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நௌரோஜி நகர் கிளையில் டெபாசிட் செய்திருந்தார். இந்த தொகையில் ரூ.15 லட்சத்தை சசிநாத் ஜா கேட்டார். ஆனால் இதற்கு உடன்பட சோரன் மறுத்துவிட்டார்.

சசிநாத் ஜாவின் இரு மகள்களான கவிதா, ப்ரீத்தி ஆகிய இருவரையும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவை ஏற்றுக்கொள்ள சிபுசோரன் முன்வந்துள்ளார்.

தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற கொலையுண்ட சசி நாத் ஜாவின் சகோதரர் விஜயநாத் ஜாவுக்கு ரூ.4 லட்சம் தர சிபுசோரன் முன்வந்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

சிபுசோரன், தில்லியில் எமஸ்ஸர்ஸ் சிமெக்ஸ் இன்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்தை முதல் போட்டு தொடங்கினார். இதில் சசிநாத் ஜா, அவரது மனைவி, சுசில் குமார் என்பவர், மகன் ஹேமந்த் ஆகியோர் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஆனால் 1994-ல் இந்நிறுவனத்திலிருந்து ஜா நீக்கப்பட்டார்.

இதையடுத்து ரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாக சிபு சோரனை மிரட்டி சசிநாத் ஜா பணம் பறித்து வந்தார். ஒரு கட்டத்தில் பணம் தர மறுத்த சோரன், அவரை கடத்திச் சென்று தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார் என்று தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.கெடியா தனது 191 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Ajay Kumar Mehta, Ashish Thakur, Bihar, CBI, Congress (I), Corruption, Dhaula Kuan, Dumka, Durga Soren, Howrah-Rajdhani Express, Jharkhand, JMM, Nand Kishore Mehta, Narasimha Rao, no-confidence motion, Pashupati Nath Mehta, PV Narasimma Rao, Ranchi, Sasinath Jha, Shailendra Bhattacharya, Shashi Nath Jha, Shibu Soren, Simex International, Sunil Khaware | Leave a Comment »

Tribal Leader Shibu Soren – Biography

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2006

மகன் கொலைக்காக போராடிய தாய்: சிபுசோரன் சிக்கியது எப்படி?

புதுடெல்லி,நவ. 29- கொலை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் மத்திய மந்திரி சிபு சோரன் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

63 வயதாகும் சிபுசோரனை கம்பி எண்ண வைத்திருக் கும் கொலை வழக்கு தீர்ப்பு 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இதில் அவர் எப்படி சிக்கினார் என்ற விபரம் இப்போது தெரிய வந் துள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

1993-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் நரசிம்மராவ் பெரும்பான்மை பலம் இல்லாமல் தவிக்க நேரிட்டது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபுசோரனுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது.

லஞ்சப்பணத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று சிபுசோரனின் உதவியாளர் சசிநாத் ஜா கேட்டார் .அவருக்கு ரூ.15லட்சம் சிபுசோரன் கொடுத்தார். அதன்பிறகு மீண்டும் பணம் வேண்டும் என்று சசிநாத் ஜா கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிபுசோரன் 1994-ம் ஆண்டு மே மாதம் சசிநாத் ஜாவை விருந்துக்கு அழைத்தார். பிறகு அவரை தெற்கு டெல்லியில்இருந்து ராஞ்சிக்கு கடத்திச் சென்றனர். அங்கு சசிநாத்ஜா கொலை செய்யப்பட்டார். இதுபற்றி சசிநாத்ஜா சகோதரர் அமர்நாத் ஜா பாராளுமன்ற போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது. ஆனால் அதில் வேகம் இல்லாமல் இருந்தது.

இதையடுத்து சசிநாத்ஜா தாய் பிரியம்வதாதேவி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் அவர் தன் மகன் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது.

சி.பி.ஐ. தீவிரவிசாரணை நடத்தி சசிநாத்ஜா கொலை சதி திட்டங்களை வெளிச்சத் துக்கு கொண்டு வந்தது. சிபுசோரனின் தூண்டுதல் பேரில் திட்டமிட்டு கொலை நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தது. அதோடு சசிநாத்ஜா பிணத்தை தோண்டி எடுத்து சிபிஐ விசாரித்தது.

சசிநாத்ஜா எலும்புக்கூடு பல்வேறு நிலைகளில் டிஎன்ஏ சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மண்டைஓடு “சூப்பர் இம்போசிங்” முறைப்படி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த மண்டை ஓடு சசிநாத் ஜா உடையது என்பது உறுதியானது.

சசிநாத்ஜாவின் எலும்புக்கூடுகளில் நடந்த அதிநுட்ப தடயவியல் சோதனைகள் மூலம் அவர் படுகொலை ஆனதும் உறுதியானது. மண்டை ஓடு, எலும்புக்கூடு ஆகிய இரு சோதனைகளும் சிபுசோரன் சிக்க முக்கிய கார ணமாக அமைந்தது.

இந்த விபரங்களை சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டு கோர்ட்டில் ஒப்படைத்தது. கொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சிபுசோரனால் தப்ப இயல வில்லை.

மொத்தம் 47 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் அளித்த சாட்சியங்களும் சி.பி.ஐ. விசாரணை முடிவுகளும் முழு அளவில் ஒத்துப்போனது. இதனால் சிபுசோரன் மீது விழுந்த பிடி இறுகியது.

இந்த வழக்கில்

  • சிபு சோரன்,
  • நந்தகிஷோர்,
  • அஜய்குமார்மேத்தா,
  • சைலேந்திரபட்டாச்சார்யா,
  • பசுபதிநாத், மேத்தா ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியது. இவர்கள் 5 பேரும் நேற்றே கோர்ட்டு உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டனர்.

சிபுசோரனுக்கும் மற்றும் 4பேருக்கும் என்ன தண்டனை வழங்கப்படும் என்பது நாளை தெரிய வரும். அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“குருஜி” சிபுசோரனின் எழுச்சியும்-வீழ்ச்சியும் 12 ஆண்டுகள் காட்டில் வசித்தவர்

“கொலையாளி” என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியையும், தலை குனிவையும் ஏற்படுத்தி விட் டார் சிபுசோரன்.

வட மாநில அரசியலில் ரவுடியிசம் என்பது அதிகம்… கொலை, ஆள் கடத்தல் என்பதெல்லாம் அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு “சும்மா” பொரி கடலை சாப் பிடுவது மாதிரி சாதாரண சமாச்சாரம்.

ஆனால் ஒரு கட்சிக்கு தலை வராக இருப்பவர் கொலை, ஆள் கடத்தல், சொத்துக் குவிப்பு என பலதரப்பட்ட வழக்குகளில் சிக்கியது இது வரை கேள்விப்படாத ஒன்று. அந்த சிறுமையை ஏற்படுத்தி இருப்பவர் சிபுசோரன்.

1942ம் ஆண்டு இவர் பீகார் மாநிலம் கஜிரிபாத் அருகே உள்ள சந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆசிரியர்கள் மலைவாழ் இனத்தை சேர்ந்த வர்கள்.

சிபுசோரனுக்கு 10 வயது இருக்கும் போது அவர் தந்தை இறந்தார். இது அவரது வாழ்க்கைப் பாதையை புரட் டிப் போட்டு விட்டது.பணக்காரர்கள், ஜமீன் தாரர்களுக்கு எதிராக இவர் ஆயுதம் ஏந்தி போராட தொடங்கினார். 1952-ம் ஆண்டு அவரது இந்த போராட் டம் தொடங்கியது.

ஜார்க்கண்ட் இன மலை வாழ் மக்களின் முன்னேற்றத் துக்காக போராடுவதாக இவர் அறிவித்தார். ஜமீன்தாரர்களை தாக்கி விட்டு காட்டுக்குள் ஓடி விடுவார். 1970-ம் ஆண்டு வரை அவர் வாழ்க்கை இப் படித் தான் கழிந்தது.

அதன் பிறகு ஜார்க்கண்ட் இன மக்களுக்காக ஒரு அமைப்பை தோற்றுவிக்க வேண்டும் என்று சிபுசோர னுக்கு தோன்றியது. 1973-ம் ஆண்டு அவர் வக்கீல் வினோத் பிகாரி மகோதா என்பவருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) எனும் அமைப்பை தொடங்கினார். பிறகு இது அரசியல் கட்சியாக மாறியது.

இந்த நிலையில் ஜே.எம்.எம்.மின் முக்கிய தலைவராக திகழ்ந்த மகோதா படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகே சிபுசோரனின் நடவடிக்கைகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ஜார்க்கண்ட் மக்களுக்காக அவர் பேரணி போன்றவை நடத்தி மக்கள் கவனத்தை கவர்ந்தார். இதனால் பீகா ரில் அவர் வளர்ச்சி தடுக்க முடியாதபடி இருந்தது. மலை வாழ் இன மக்கள் இவரை “குருஜி” என்று அழைத் தனர்.

பெரும்பாலான மலைவாழ் இன மக்கள் வீடுகளில் இவரது படத்தை கடவுள் படங்களுக்கு இÛணையாக வைத்து பூஜித்தனர். இதனால் ஜார்க்கண்டில் இவர் அசைக்க முடி யாத சக்தியாக மாறினார். இவரை எதிர்த்தவர்கள் கடத் தப்பட்டனர். கொல்லப்பட் டனர்.

சரியோ, தவறோ இவரது பெயர் பரபரப்பாக நாடெங் கும் பேசப்பட்டது. 1980ம் ஆண்டு இவரும் இவரது ஆதரவாளர்களும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. அதன் பிறகு சிபுசோரனின் அரசியல் ஆவேசமும் ஆதிக்கமும் அதி கரித்து விட்டது. அவரது தகாத செயல் களுக்கு சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாததால் அவர் இதுவரை தப்பித்து வந்தார். ஆனாலும் அவர் மீது தற்போதும் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதில் 2 கொலை வழக்கு கள் சிபுசோரனின் மறுபக்க வாழ்க்கையை தோலுரித்து உலகிற்கு காட்டி விட்டது. 1975-ம் ஆண்டு சிருடி என்ப வரை கொலை செய்த வழக் கில் இவர் சிக்கினார். மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் தண்ட னையில் இருந்து தப்பி விட் டார்.என்றாலும் 1994-ல் தன் உதவியாளர் சசிநாத் ஜாவை கொலை செய்த வழக் கில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். சி.பி.ஐ. அதிகா ரிகள் மண்டை ஓட்டை வைத்து நடத்திய திறமையான ஆய்வு சிபுசோரனுக்கு “ஆப்பு” அடித்து விட்டது.

சிபுசோரன் பற்றிய நிஜமுகம் தெரிய வந்ததும் ஜார்க்கண்ட் மக்களும் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
குருஜி என்று மரியாதையாக அழைத்து வந்த மக்கள் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரை குப்புற தள்ளி விட்டனர். தன் மகனை எப்படி யாவது ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரி ஆக்கி விட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் ஜார்க்கண்ட் மக்கள் அவர் மகனை வெற்றி பெற கூட செய்யவில்லை.

இந்த வீழ்ச்சிக்கிடையே தற்போது சிபுசோரன் சிறைக் குள் தள்ளப்பட்டுள்ளார். அரசியலில் இனி அவர் கதை முடிந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

கொலைகாரன் என்ற தீர்ப்பு காரணமாக பதவி விலகிய முதல் மத்திய மந்திரி என்ற கறை முத்திரையை அவர் பதித்துள்ளார். துடைக்க முடியாத களங்க முத்தி ரையால் சிபுசோரன் மீண்டு எழ முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

நாளை (வியாழக்கிழமை) டெல்லி கோர்ட்டு வழங்கும் தண்டனை தான் சிபுசோரனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே அந்த தீர்ப்பை ஜார்க்கண்ட் மாநில மக்கள் படபடப்புடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Posted in Bihar, Biography, Biosketch, CBI, Corruption, Jha, JMM, Lifesketch, Memoirs, Murder, Narasimha Rao, Ranchi, Secretary, Shibu Soren, Sibu Soren | Leave a Comment »